
விடியல் பொழுதில் தான் மோகனா மகிழபுரியின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தாள். அரண்மனை வாயிலில் அரசர், மகாராணியார் மற்றும் இளவரசருடன் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தார்.
மித்ரன் தன் தோளில் கிளியாக அமர்ந்திருந்த ரஞ்சனியிடம், தனது சந்தேகத்தை கேட்க தொடங்கினான்.
“ரஞ்சனி, நிஜமாக இவள் சூலாயுதத்தை அந்த தெருவில் நட்டு வைத்திருப்பாளா? அல்லது அதை கண்டு பயந்து இங்கு ஓடி வந்திருக்கின்றாளா? எனக்கு என்னவோ இவள் ஏதோ திட்டத்துடன் தான் இதை செயல்படுத்திக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது.”
“எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது இளவரசே, அவளோடு பழகியதால் அவளைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பதால் கூறுகிறேன், மோகனா எந்தவித ஆதாயமும் இன்றி ஒரு செயலில் ஈடுபட மாட்டாள்.”
“சரி ரஞ்சனி ஊர்வலம் அரண்மனையை நெருங்கி விட்டது, மோகனாவின் கண்களில் நீ படுவதற்கு முன்பு, எங்காவது சென்று ஒளிந்து கொள்.”
பச்சைக்கிளி அவன் தோளிலிருந்து பறந்து சென்று, அரண்மனை கோட்டை சுவரின் மீது அமர்ந்து கொண்டது.
ஊர்வலம் அரண்மனைக்கு அருகே நெருங்கும்போது தான் மித்ரனின் காதுகளில், மக்கள் முழங்கிக் கொண்டிருக்கும் கோஷம் தெளிவாக கேட்டது. ஏனோ அவனால் அதன் பிறகு அங்கு நிற்க முடியவில்லை, உடனே அங்கிருந்து அரண்மனையின் உள்ளே திரும்பி சென்று விட்டான்.
மக்கள் வெள்ளம் சூழ அரண்மனையை அடைந்த மோகனா பல்லக்கிலிருந்து இறங்கி, அரசரை நோக்கி வந்தாள். அரசர் மற்றும் மகாராணியாரின் கால்களில் விழுந்து வணங்கியவள், அரசரிடம் தன் கையில் இருக்கும் தீர்த்தத்தை, பூஜை அறையில் வைத்துவிட்டு வருவதாக கூறி, ராணியாருடன் பூஜை அறைக்கு சென்றாள் ரஞ்சனியின் உருவத்தில் இருக்கும் மோகனா.
அரச குடும்பத்தார் அரண்மனைக்குள் செல்ல, மக்கள் கூட்டம் கலைந்து சென்றது. ஆலோசனை மண்டபத்தில் அமைச்சர்கள் சூழ அமர்ந்திருந்த அரசரிடம், ஜோதிடரின் வேஷத்தில் இருந்த ராட்சசன் பேசத் தொடங்கினான்.
“அரசே பௌர்ணமி பூஜை நல்லபடியாக முடிந்தது, இந்த நாட்டுக்காகவும், இந்த நாட்டு மக்களுக்காகவும் ரஞ்சனி தன் உயிரையே பணயம் வைத்து, இந்த பூஜையை செய்துள்ளார்.”
மோகனாவுடன் வந்த வீரர்களும், அங்கு லந்தங்காட்டில் நடந்தவற்றை அரசருக்கு எடுத்துக் கூறினார்.
“இப்படிப்பட்ட பரந்த உள்ளம் கொண்ட ஒருவர், நமது நாட்டின் அரியணையை அலங்கரிப்பது தான் நல்லது என்று எமக்குத் தோன்றுகின்றது.”
“என்ன கூறுகிறீர்கள் ஜோதிடரே? ரஞ்சனியை ரகுநந்தனுக்கு திருமணம் முடிக்க, அவர்களின் பெற்றோர்கள் உங்களிடம் தானே தேதி குறித்துச் சென்றார்கள்? மறந்து விட்டீர்களா?”
“நான் மறக்கவில்லை அரசே, ஆனால் ரகுநந்தன் தான் இப்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லையே? இப்போது இருக்கும் சூழ்நிலையில் இளவரசரின் திருமணத்தால் நமது நாட்டிற்கு நன்மை கிடைக்கும் எனில், நாம் ஏன் அதை மறுக்க வேண்டும்?”
வீரர்களை அவர்களின் இல்லத்திற்கு கிளம்புமாறு கூறிய அரசர், அமைச்சர்களை வெளியே காத்திருக்குமாறு கூறிவிட்டு, அவர்கள் சென்றவுடன் அங்கு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு,
“ஆனால் ஜோதிடரே இளவரசருக்கு தான் திருமணம் முடிந்து விட்டதே.”
ராட்சசனின் விழி வழியாக அங்கு ஆலோசனை மண்டபத்தில், அரசர் பேசிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டிருந்த மோகனா, அப்படியே வழியில் அதிர்ந்து நின்று விட்டாள்.
“என்ன ஆயிற்று ரஞ்சனி? எதற்காக நின்று விட்டாய்? பூஜை அறையில் தீர்த்தத்தை வைக்க வேண்டாமா?”
“அத்தை தாங்கள் இதை பூஜை அறையில் வைத்து விடுங்கள், நான் இப்போது வந்துவிடுகிறேன்.”
மகாராணி கூறுவதை கேட்க அவள் அங்கு இல்லை, திரும்பி தனது அறையை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
ராட்சசனின் வாய் வழியாக அரசருடன் அவளே பேசத் தொடங்கினாள்.
“என்ன கூறுகிறீர்கள் அரசே, இளவரசருக்கு திருமணம் முடிந்து விட்டதா?”
“ஆம் ஜோதிடரே எங்களுக்கு கூட தெரியாமல் அவன் சிறு வயதிலேயே, காட்டில் வாழும் ஏந்திழை அம்மையாரின் மகளை கந்தர்வ மனம் புரிந்து கொண்டான். அது மோகனா இறந்த தினத்தன்று தான் எங்களுக்கு தெரிய வந்தது. அதை உங்களின் குருநாதர் தான் அவர்களுக்கு ஆசீ வழங்கி நடந்தவற்றை எங்களுக்கு விளக்கினார்.”
“எதற்காக இளவரசருக்கு திருமணம் நடந்ததை, ஒருவருக்கும் சொல்லாமல் வைத்திருக்கிறீர்கள்? அந்த காட்டில் வாழும் பெண்ணை மருமகளாக ஏற்றுக் கொள்ள தங்களுக்கு விருப்பம் இல்லையா?”
“என்ன ஜோதிடரே இப்படி கேட்டு விட்டீர்கள், மதுரவாணி கொற்றவை அன்னையை மந்திர கட்டில் இருந்து விடுவிக்க, அந்த அன்னைக்கு 48 நாள் பூஜை செய்து கொண்டிருக்கிறாள், அது ஒருவேளை மோகனாவின் ஆன்மாவிற்கு தெரிய வந்தால் அவளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும். அதனால் தான் இப்போதைக்கு யாரிடமும் சொல்லாமல் இளவரசருக்கு திருமணம் நடந்ததை மறைத்து வைத்திருக்கிறோம். 48 நாட்கள் முடிந்த பிறகு கொற்றவை தேவி கோயிலில் திருவிழாவை நடத்தி விட்டு, இவர்களின் திருமண விஷயத்தை மக்களுக்கு தெரிவித்து விடுவோம்.”
“அரசே இப்போது யார் யாருக்கெல்லாம், இளவரசருக்கு திருமணம் முடிந்து விட்டது என்று தெரியும்.”
“மகாராணி, பிரதீபன், ரகுநந்தன் மற்றும் ஏந்திழை அம்மையாருக்கு மட்டுமே இது தெரியும்.”
தீவிரமாக யோசித்த ரஞ்சனி ராட்சசனுக்கு கட்டளைகளிட தொடங்கினாள்.
“ரத்தமாறா உடனே உனது உருவத்தை மாற்றிக்கொண்டு அரசரின் உடலினுள் புகுந்து விடு.”
ரஞ்சனி கட்டளை இட்ட அடுத்த நொடியே, அந்த ராட்சசன் தனது நிஜ உருவத்திற்கு மாறி, அரசர் சுதாரிக்கும் முன்பே அவரின் உடலுக்குள் நுழைந்து விட்டான்.
பிறகு ஒரு மர்ம புன்னகையோடு ரத்தமாறனுக்கு தமது கட்டளைகளை அங்கிருந்தே தெரிவித்தாள்.
அமைச்சர்களை ஆலோசனை மண்டபத்திற்குள் வரச் சொன்ன அரசர், ஜோசியர் கூறிய விஷயத்தில், அவர்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு கூறினார். அவர்கள் ஜோசியர் எங்கே என்று கேட்டதற்கு, அவருக்கு ஒரு முக்கியமான வேலை கொடுத்து வெளியே அனுப்பி இருப்பதாக கூறினார்.
அமைச்சர்களும் நாட்டு மக்களின் கருத்துக்களையே அரசரின் முன்பு எடுத்துக் கூறினார். பிறகு தங்களுக்கும் அதுவே சரி என்று படுவதாக கூற,
“அமைச்சர் பெருமக்களே நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், அங்கு தோன்றியுள்ள சூலாயுதம், ரஞ்சனியுடைய பூஜையின் மகிமையால் அன்னை கொடுத்த வரமாக எண்ணத் தோன்றுகிறது. ரஞ்சனி நமது நாட்டினுள் பிரவேசித்த பிறகு தான், ஊருக்குள் இருந்த கெட்ட சக்திகள் விலகி, மக்கள் நிம்மதியாக இருக்க முடிந்திருக்கிறது என்கிறீர்கள் இல்லையா?”
“ஆம் மன்னா.”
“அப்படி என்றால் இளவரசனுக்கும் ரஞ்சனிக்கும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து விடலாமா?”
அமைச்சர் பெருமக்களில் மூத்த அமைச்சர் முன்வந்து,
“மன்னா கொற்றவை தேவி திருவிழாவை, தாங்கள் வரும் அமாவாசை முடிந்து வைத்துக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறீர்கள். தேவியின் திருவிழாவிற்கு முன்பு நாம் எந்த நல்ல காரியமும் செய்வதில்லையே?”
மனதுக்குள்ளே அவரை திட்டினாலும் வெளியே சிரித்துக்கொண்டே,
“நீங்கள் கூறுவதும் சரிதான், அப்படி என்றால் அமாவாசை முடிந்து வரும் வளர்பிறை நாளில், சுப முகூர்த்தத்தில் இவர்கள் இருவரின் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்.”
“சரி அப்படி என்றால் ரஞ்சினியை மகிழபுரியின், வருங்கால மகாராணியாக அறிவித்து விடலாமா?”
அவர்களில் இருந்த மூத்த அமைச்சர் மீண்டும் முன் வந்தார்,
“அரசே எதற்கும் இளவரசர் மற்றும் ரஞ்சனியிடம் இதைப் பற்றி ஒரு வார்த்தை கேட்டு விட்டு, பிறகு நாம் மக்களுக்கு அறிவிக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இதைப் பற்றி முடிவு எடுக்க வேண்டியவர்கள் அவர்கள் தான்.”
“சரியாக கூறினீர்கள் அமைச்சரே, இப்போதே இளவரசனிடமும், ரஞ்சனியிடமும் இதை பற்றி பேசுகிறேன்.”
அகத்தியர் மலைக்கு வீரபத்திரரின் வாளைத் தேடி சென்றவர்களின் பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை, பல காடு மேடுகளை கடந்து பல போராட்டங்களுக்குப் பிறகு தான், அவர்களால் அகத்தியர் மலையையே அடைய முடிந்தது. அவர்கள் அகத்தியர் மலையின் உள்ளே செல்ல வேண்டுமென்றால், அந்த ஈசனின் அருளோடு சித்தரின் அனுமதியும் தேவை.
அகத்தியர் மலைக்கு கீழே இருந்த சித்தரின் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு, அவரின் அருளாசியோடு மூவரும் அகத்தியர் மலையினுள் நுழைந்தனர்.
பிரதீபனையும் ரகுநந்தனையும் தேடி அலைந்து கொண்டிருந்த யட்சினிகள், அவர்கள் செல்லும் வழி எங்கும் அவர்களை பின்தொடர்ந்து கொண்டே வந்து கொண்டிருந்தன. அவைகள் அவர்களை நெருங்க நினைக்கையில், ருத்ராட்சத்தின் மகிமையால் தூக்கி வீசப்பட்டன.
அவர்கள் மூவரும் அகத்தியர் மலையினுள் நுழைவதை கண்டு, உடனே மோகனாவிற்கு தகவல் தெரிவிக்க, அங்கிருந்து மகிழபுரியை நோக்கி பறந்து சென்றன.
ஆலோசனை மண்டபத்தில் நடந்த பேச்சுவார்த்தையை கேள்விப்பட்டு, அதிர்ந்து போய் அரசரிடம் ஓடி வந்தார் மகாராணி தாரகை தேவி.
“சுவாமி நான் கேள்விப்படுவது அனைத்தும் உண்மையா? ரஞ்சனிக்கும் மித்ரனுக்கும் திருமணம் செய்து வைப்பதாக தாங்கள் முடிவெடுத்து உள்ளீர்களாமே?”
“ஆமாம் அதில் உனக்கு என்ன சந்தேகம், ரஞ்சனி மித்ரனின் அத்தை மகள் தானே?”
“ஆனால் சுவாமி, தாங்கள் மறந்து விட்டீர்களா? நம் மகனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதே?”
“அது யாருக்கும் தெரியாமல் நடந்த கந்தர்வ மனம் தானே, அத்தோடு ஒரு மலைவாசி பெண்ணை எவ்வாறு நாட்டின் மகாராணியாக, அரியணையில் அமர வைப்பது?”
“சுவாமி தாங்களா இவ்வாறு பேசுகிறீர்கள்?”
“இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறாய் தாரகை? இந்நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பௌர்ணமி பூஜை புரிந்து வந்திருக்கும் ரஞ்சனியை விட்டுவிட்டு, அந்த காட்டில் வாழும் காட்டுவாசி பெண்ணை அரியணையில் அமர வைக்க வேண்டும் என்று கூறுகிறாயா? ஏன் உனக்கு தெரியாதா? ரஞ்சனிக்கு தாய் தந்தையர் மட்டுமல்ல அவளின் உறவு என்று சொல்லிக் கொள்ள, நாம் மட்டும் தானே இருக்கிறோம். அவளுக்கு ஒரு நல்ல வாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பது நமது கடமையாகும். ஏன் என் தங்கை மகள் என்ற காரணத்தால், அவளை மருமகளாக ஏற்றுக் கொள்ள உனக்கு விருப்பம் இல்லையா?”
“என்ன கூறுகிறீர்கள் அரசே? உங்கள் தங்கைகளை நான் என் மகள்களாகத் தானே பாவித்தேன். உங்களது விருப்பமே எனது விருப்பம், அதை மீறி நான் செயல்பட போகின்றேனா? வருகிறேன் அரசே.”
மோகனா தனது கருத்துக்களை, அரசரின் வாய்மொழியாக தெரிவித்து, எப்படியோ மகாராணியாரை அடக்கி விட்டாள்.
அரசியின் மூலம் தன் தந்தையின் கருத்துக்களை கேட்டறிந்த மித்ரன், அவர் முன்பு செல்வதையே தவிர்த்து வந்தான். ஒருவேளை தன் தந்தை ரஞ்சனியை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுவிட்டால்? தன்னால் அதை தட்ட முடியாதே… ஏற்கனவே ரஞ்சனியின் உருவத்தில் இருக்கும் மோகனாவுடன் சிரித்து பேசுவதே மிகப்பெரிய வேதனையாக இருக்கின்றது, இதில் அரசர் வேறு அவளை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டு விட்டாள் என்ன செய்வது, என்று அஞ்சியே அவன் அரண்மனைக்கு வருவதை தவிர்த்து வந்தான்.
ஒருவேளை மித்ரன் அரசரைச் சென்று பார்த்திருந்தால், ருத்ராட்சத்தின் மகிமையால் அவரின் உடலில் இருக்கும் ராட்சசனை கண்டுபிடித்திருக்கலாம், ஆனால் விதி யாரை விட்டது.
அப்போதுதான் ரங்கராஜ பூபதிக்கு ரத்னபுரியில் பிரதீபன் இல்லை என்ற செய்தி கேள்விப்பட்டு, தனது நட்பு நாடுகளின் உதவியுடன் திரட்டிய படையுடன், ரத்தினபுரியை தாக்கினான். அங்கிருந்த படைவீரர்களுடன் போரிட்டு தனது ராஜ்யத்தை மீட்டுக் கொண்டான்.
அமாவாசை அன்று மகிழபுரியை தாக்குவதற்காக, பக்கத்து ராஜ்யங்களின் உதவியினை நாடி, பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தான்.
ரத்னபுரியை ரங்கராஜ பூபதி கைப்பற்றி விட்டதை அறிந்த மித்ரன், படைவீரர்களுடன் சென்று அவனுடன் போரிட முடிவு செய்தான்.
கிளியாக உள்ள ரஞ்சனியின் கழுத்தில் ருத்ராட்சத்தை ஒரு கயிறு மூலம் கட்டி விட்டவன்,
“ரஞ்சனி அமாவாசை வேறு நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அதற்குள் பிரதீபனும் ரகுநந்தனும் வாளை எடுத்துக் கொண்டு வர வேண்டுமே? அதுவரை என்னால், இங்கு அரண்மனையிலும் இருக்க முடியாது. ரத்னபுரியை வேறு ரங்கராஜ பூபதி கைப்பற்றி விட்டான், கூடிய சீக்கிரம் நம் மகிழபுரியை தாக்க போவதாக உளவு செய்தி வந்துள்ளது. அதற்குள் நான் சென்று, அவனை நம் படைகளுடன் தாக்கி, அவனது படைபலத்தை குறைக்க வேண்டும். அதனால் தான் இந்த ருத்ராட்சத்தை இப்போது உனது கழுத்தில் கட்டுகிறேன். அன்னை சொன்னது நினைவிருக்கிறதல்லவா? சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திரு ரஞ்சனி. உனது உடலில் இருந்து எப்போது மோகனா பிரிந்து செல்கின்றாளோ, உடனே அந்த உடலுக்குள் நீ உட்புகுந்து விடு. அந்த அன்னையின் துணை என்றுமே நமக்கு இருக்கும், சென்று வருகிறேன் ரஞ்சனி.”
அமைச்சர்களிடம் தான் படையுடன் ரத்தினபுரியை நோக்கி செல்வதை அரசருக்கு அறிவிக்கும்படி கூறிவிட்டு, ரஞ்சனியின் உருவத்தில் இருக்கும் மோகனாவிடமும் விடை பெற்று விட்டு மித்ரன் ரத்தினபுரியை நோக்கி படைகளுடன் கிளம்பி விட்டான்.
காரியம் கைக்கூடி வரும் நேரத்தில் தனது சித்தப்பாவால் அனைத்தும் நாசமாகி போவது மோகனாவிற்கு அதிக கோபத்தை உண்டாக்கியது. தனது பேச்சை மீறி அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது தான், பிரதீபனையும் ரகுநந்தனையும் தேடிச் சென்ற யட்சினிகள், அவர்கள் ஜோசியருடன் அகத்தியர் மலையில் இருப்பதாக செய்தி கொண்டு வந்து சேர்த்தது.
ரஞ்சனிக்கு புரிந்து விட்டது அவர்கள் அங்கு இருக்கும் வீரபத்திரரின் வாளை தேடித்தான் சென்றிருக்கிறார்கள் என்று,
“ஓ என்னை அடக்க, இங்கு ஒரு சதி நடந்து கொண்டிருக்கின்றதா? ஏற்கனவே அந்த காட்டுவாசிப் பெண் கொற்றவை தேவியை மந்திர கட்டிலிருந்து விடுவிக்க பூஜை செய்து கொண்டிருக்கின்றாளாம், இப்போது இவர்கள் வீரபத்திரனின் வாளை தேடி சென்றிருக்கிறார்களா? எனக்கு எதிராக செயல்படும் ஒருவரை கூட உயிருடன் விடமாட்டேன், இப்போதே அகத்தியர் மலைக்குச் செல்லுங்கள், அகத்தியர் மலையில் இருந்து அவர்கள் வெளிவந்ததும் ரகுநந்தனையும் ஜோசியரையும் கொன்றுவிட்டு, பிரதீபனை சிறை பிடித்து இங்கு அழைத்து வாருங்கள்.”
“தேவி நாங்கள் எத்தனையோ முறை அவர்களை நெருங்க முயற்சித்து அருகில் சென்றோம், ஆனால் ஏதோ ஒரு சக்தி அவர்களை காத்து கொண்டிருக்கின்றது. எங்களால் அவர்களை நெருங்கவே முடியவில்லை. அதனால் தான் இத்தனை நாட்கள் அவர்களை பின்தொடர்ந்து சென்று, அவர்கள் செல்லும் இடத்தை கண்டு கொண்டு, இப்போது உங்களிடம் அதை தெரிவிக்க வந்துள்ளோம்.”
மோகனா காற்றில் தனது கைகளை சுழற்றி ஒரு மந்திர பொடியை கைகளில் கொண்டு வந்தாள். அதை அந்த யட்சினிகளிடம் கொடுத்து,
“அவர்கள் மலையில் இருந்து வெளி வந்த அடுத்த நிமிடம், இந்த பொடியை அவர்களின் மீது தூவி விட்டு எனக்கு செய்தி அனுப்புங்கள். பிறகு நடக்க வேண்டியதை நான் பார்த்துக் கொள்கிறேன்.”
அந்த யட்சினிகள் அவளிடம் இருந்து விடை பெற்றுச் சென்றதும், முதலில் இந்த ஏந்திழையை ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தவள், அரசர் உடலில் இருக்கும் ரத்தமாறனை அழைத்தாள்.
உடனடியாக தான் கூறுமாறு ஒரு ஓலையை குருந்தங்காட்டில் உள்ள ஏந்திழைக்கு அனுப்பி வைக்குமாறு, அமைச்சர்களுக்கு உத்தரவிடச் சொன்னாள்.

