Loading

தேடல் – 4

 

தனது சிந்தனையில் மூழ்கியபடியே மெதுவாக வாகனத்தை உருட்டிக் கொண்டு மிளிர் கடையை வந்தடைந்த போது மணி பத்தைத் தாண்டி வெகு நேரமாகி இருந்தது. அவள் வரும் முன்னரே வந்து அவளுக்காக வாசலில் காத்திருந்தான் இனியன்.

“ஏய்… குள்ளக் கத்திரிக்கா… எங்கடி போய் தொலைஞ்ச‌‌..? உனக்குப் பின்னாடிக் கிளம்பின நானே வந்துட்டேன்…” என்றான் கேள்வியும் கடுப்புமாய்.

அவன் கேட்டது காதில் விழாதது போல, “எத்தன தடவ சொல்லி இருக்கேன்… வெளிய இருக்கும் போது இப்படிக் கூப்பிடாதனு… ஒழுங்கு மரியாதையா அக்கானு கூப்பிடு… இல்ல நடக்கறதே வேற…” என்றாள் விரல் நீட்டி மிரட்டலாய்.

“இல்லனா என்னடி பண்ணுவ குள்ளக் கத்திரிக்கா…” வீம்புக்கென்றே அவனும் மல்லுக்கு நிற்க,

“சார் ஒரு தண்ணி வண்டினு கடைக்கு வர அத்தனை கஸ்டமர்கிட்டையும் சொல்ல வேண்டி இருக்கும்… குறிப்பா யார் அது… நேத்துக்கூட ஒரு மணி நேரம் சட்டி கருகக் கருக கடல வறுத்தீயே… ஹான் தீப்ஸ்… அவகிட்டையும் சொல்ல வேண்டி இருக்கும்… எப்படி வசதி?” என்றாள் அலட்சியமும் எள்ளலுமாய் மிளிர்,

“அடியே குள்ளப் பிசாசு… நான் குடிக்கறது வெறும் பச்சத் தண்ணீடி…” என்றான் இவன் பல்லைக் கடித்துக் கொண்டு.

“நானும் அதத் தானே சொன்னேன்… ஏன் நீ என்ன நினைச்ச..?” என்றாள் நக்கலாய் அவள்.

“ஆனா நீ சொல்லுற மாடியூலேஷன்ல வேற மாதிரி இல்ல மீன் ஆகுது…”

“இப்போ மாடியூலேஷன் முக்கியமில்ல தம்பி… மரியாத தான் முக்கியம்… எங்க ஒருக்கா மரியாதையா அக்கானு கூப்பிடு பாப்போம்…”

“இப்போ என்ன உனக்கு… அக்கானு கூப்பிடணும்… அவ்வளவு தானே… யக்கா… யக்கா… யக்கா… இந்த மரியாதை போதுமா..?” என்றான் அவன் கடுப்பாய்.

“இப்போதைக்குப் போதும்…” என மிடுக்காய்ச் சொன்னவள் உள்ளே செல்ல முயல,

“யக்காங்க… இன்னும் நீங்க ஏன் லேட்டா வந்தீங்கனு காரணத்தை சொல்லவே இல்லீங்களே…” என்றான் அவன் பவ்வியமாய்.

“பொடிப் பய நீ எல்லாம் கேள்வி கேக்கலாமா..? போ… போ… போயி வண்டியில வாட்டர் பாட்டில் வச்சு இருக்கேன்… அத எடுத்துட்டு வா…” என்றாள் அவனின் தோளில் தட்டி.

“உள்ள தான் தண்ணிக் கேன் இருக்குல… அப்புறம் எதுக்கு பாட்டில்..?” அவன் சந்தேகமாய் அவளைப் பார்க்க,

“பாட்டில் என் தண்ணி வண்டி தம்பிக்கு… எவ்வளவு குடிச்சாலும் அளந்து குடிக்கணும் பாரு… அதுக்குத் தான்…” எனக் கண் சிமிட்டிக் கேலியாகச் சொன்னவள், வேகமாக உள்ளே சென்று மறைய, “அடியே சொர்ணாக்கா… இருக்குடி இன்னைக்கு உனக்கு…” என்று அவளை முறைத்தபடி நின்றான் இனியன்.

உள்ளே நுழைய சந்தன மணமும்  ஜவ்வாது மணமும் போட்டி போட்டுக் கொண்டு அவள் நாசியை நிறைத்தது. அதற்கும் முன்னே அக்னிக் குண்டத்தின் புகை அவள் கண்களை நிறைத்து எரிச்சலை அமோகமாய் ஆரம்பித்து வைத்திருந்து. அருகில் இருப்பவர் கூடத் தெரியாத அளவிற்குப் புகை மண்டிக்கிடக்க, யாரும் அறியாத வண்ணம் தனது தாயின் அருகே சென்று அமர்ந்து கொண்டாள் அவள்.

நான்கு புறமும் செங்கற்கள் அடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட அக்னிக்குண்டத்தின் நடுவே அரையடி உயரத்திற்கு நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அதன் ஒருபுறம் ஐயரும் மறுபுறம் நாதரும் வசுவும் அமர்ந்திருக்க, சூர்யா உட்பட கடையில் வேலை செய்பவர்கள் அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அனைவருமே வியர்வையில் குளித்திருக்க, அன்றலர்ந்த மலராக வந்தமர்ந்த மிளிரைத் தான் முறைத்துக் கொண்டிருந்தாள் சூர்யா. என்னவென்று அவளிடம் கண்களாலேயே வினவ, அவள் பதிலுக்கு முறைத்தாளே அன்றி வாய் திறந்து எதுவும் கூறவில்லை.

அதற்குள் இனியன் தாய்க்கும் தமக்கைக்கும் இடையே இருந்த சிறு இடைவெளியில் இருவரையும் இடித்துக் கொண்டு அமர, “அதான் இவ்வளவு இடம் இருக்குல… அங்க உக்கார வேண்டியது தான தடிமாடு… வந்துட்டான் தாயையும் புள்ளையையும் பிரிக்க…” என்றாள் மிளிர் இனியனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

“மிளிர்ம்மா… என்னடா இது கணபதி ஹோமம் முடிஞ்சு குபேர பூஜையே ஆரம்பிச்சாச்சு… இப்பதான் வரதா… உன்ன அழைச்சுட்டு வர சொல்லி தான இனியன வீட்டுலையே விட்டுட்டு வந்தேன்… அப்பறம் ஏன்டா தங்கம் தனியாக் கிளம்பி வந்த… அவன் வந்த பிறகும் உன்ன காணுமேனு பதறிடிச்சு எங்களுக்கு… உன்ன பாக்கவும் தான் நிம்மதியாச்சு…” எங்கே சற்றே அதட்டிப் பேசினாலும் வார்த்தைகளுக்கும் மகளுக்கும் வலித்து விடுமோ என்னும் விதமாக அத்தனை மென்மையாய் இருந்தது வசுவின் விசாரிக்கும் தோரணை. அருகிலிருக்கும்  இனியனையும் மிளிரையும் தவிர வேறு எவருக்கும் அது கேட்டுக்கூட இருக்காது.

“அதுங்கம்மா… நானு கிளம்பி வர வரைக்குமே தம்பி ரெடியாகலைங்க ம்மா… அதான் பூஜைக்கு லேட்டாகுதேனு நானா வந்தேன்… வர வழியில பாத தெரியாம வழி மாறிட்டேனுங்க ம்மா…” என எந்தவித பதற்றமும் இன்றி திருவிழாக் கூட்டத்தில் தொலைந்த சிறு குழந்தைபோல் அலுங்காமல் குலுங்காமல் பொய்யை உண்மை போலவே  உரைத்தவளை, ‘எது நீ வழி தவறிட்ட… இத நான் நம்பணும்…’ என்ற ரீதியில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு பார்த்து வைத்தான் இனியன்.

“ஏன்டா… உனக்கு கொஞ்சமாச்சு அறிவு இருக்கா… உன்ன எழுப்பி அத்தன தரம் படிச்சு படிச்சு சொல்லிட்டு தானே வந்தேன்… அக்கா எழுந்ததும் கிளப்பி கூட்டிட்டு வானு… திரும்பப் போய்த் தூங்கிட்டீயா நீனு…” என்றார் அதட்டலாய் வசு. அவரின் அதட்டலில் ஐயரே ஒரு நொடி மந்திரம் சொல்வதை நிறுத்தி என்னவென்று பார்த்தார்.

“அம்மா… அவ தான் சொல்லறானா… நீயும் நம்பற பாரேன்…” என்றான் கடுப்பும் சலிப்புமாய் இனியன்.

“அவ… இவன வாயிலேயே போடுவேன் பாத்துக்க… நாளை பின்ன கல்யாணமாகி இன்னொரு வீட்டுக்குப் போற புள்ள… மரியாதையாப் பேசிப் பழகு…” என மகனைக் கண்டிக்கும் குரலில் சொன்னவர், “நீ சாப்பிட்டியா கண்ணு..?” என்றார் வஞ்சையாக மகளிடம்.

“சாப்பாடு செஞ்சு வச்சுருந்தீங்களா ம்மா… நான் பாக்கவே இல்லையே…” என மிளிர் சொல்லிய அடுத்த நொடி வசு திரும்பி மகனைத் தீயாய் முறைக்க, அவனோ இதற்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் விழி பிதுங்கி நின்றான்.

“உன்ன புள்ளய சாப்பிட வச்சு கூட்டிட்டு வானு தானே சொன்னேன்..?” என வசு அவனைத் திட்ட ஆரம்பிக்க,

“பூஜை முடியற வரைக்கும் அம்மாவும் புள்ளையும் சும்மா இருக்க மாட்டீங்களா..?” என்ற நாதரின் அதட்டல் குரலில் மூவருமே வாயை மூடிக் கொண்டனர்.

அடுத்த கொஞ்ச நேரத்தில் அந்தப் பூஜையும் முடிய, ஐயருக்குக் கொடுக்க வேண்டிய தட்சணையைக் கொடுத்து அனுப்பிவிட்டு வந்தார் தில்லைநாதன். அதற்குள்ளாகவே வசு இனியனுக்கு காதில் புகை வரும் அளவிற்கு, ‘ஏன் மிளிரை சாப்பிட வைக்காமல் தனியே அனுப்பினாய்..?’ எனத் திட்டித் தீர்க்க, அவளோ அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு பாவமாய் தன் தாயையே பார்த்திருந்தாள். மறந்தும் தம்பியின் பக்கம் பார்வையைத் திருப்பவில்லையே அவள்.

நாதர் அங்கே வரவும் தான் அமைதியானர் வசு. நாதருக்குச் சொந்தமாய் ஒரு பல்பொருள் அங்காடி (Super Market) இருக்கிறது. ஆரம்பத்தில் பெட்டிக் கடை அளவில் ஆரம்பித்தது தான். நாதரின் கடின உழைப்பால் இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது. கஷ்டப்பட்டு வளர்த்த தொழிலை வேறு ஒருவருக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் எண்ணம் அவருக்கில்லை. இனியனே அதனை எடுத்து நடத்த வேண்டும் என்பது அவரின் பெரும் அவா. ஆனால், அவனோ வேலை செய்வதே மாபாதகம் என்ற ரீதியில் பொறியியல் படித்துவிட்டு அதற்கேற்ற வேலை தேடி சுற்றிக் கொண்டிருக்கிறான் இரண்டு அரியர்ஸோடு. மிளிருக்கு விபத்து ஏற்படும் சமயம் தான் அவன் பொறியியல் இறுதி ஆண்டு இறுதித் தேர்வுகள் எழுத வேண்டிய சமயம். அதில் அவன் கவனம் சிதறிப்போக, இந்த ஒன்றரை ஆண்டுகளாக அவனும் இரண்டு அரியர்ஸ்களை க்ளியர் செய்ய தலைகீழாகத் தான் நின்று பார்க்கிறான். ம்கூம், அது நடப்பதாக தான் தெரியவில்லை.

“சரி வசு… நாம கிளம்புவோம்… கடையப் பாக்கணும்…” என மனைவியிடம் கூறியவர், “இனியா… இருந்து அக்காவுக்கு ஏதாவது உதவி வேணுமுனா செஞ்சு குடுத்துட்டு மதியம் போல கடைக்கு வந்துடு… எனக்கு மதியத்துக்கு மேல ஒரு வேலை இருக்கு…” என்றார் மகனிடம்.

“நான் இங்க என்னப்பா பண்ணப் போறேன்… அதுவும் லேடீஸ் பார்லர்ல…” என அவன் இழுத்து நிறுத்த,

“ஏன் துரைக்கு கலெக்டர் ஆஃபீஸ்ல சைன் பண்ண வேண்டிய ஃபைல்ஸ் நிறைய பென்டிங் இருக்கோ..?” எனக் கேட்டு அவனை முறைத்தவர், “மதியமா வீட்டுக்கு வந்து அக்காவுக்கு சாப்பாட எடுத்துட்டு வந்து குடுத்துட்டு சூப்பர் மார்கேட்ட வந்து பாத்துக்க… எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு… என்ன சொல்றது புரியுதா..?” எனக் கட்டளை போல சொல்லியவரிடம் மறுக்க முடியாமல் தலையாட்டி வைத்தான் இனியன்.

இவர்கள் இருவரும் கிளம்ப, ‘ஹப்பாடா…’ என ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான் அவன். இத்தனை நேரம் அவர்கள் செல்லவே காத்திருந்தவள் போல, “ஒன்னு இங்க உங்க தம்பி இருக்கணும்… இல்ல நான் இருக்கணும்…” என அவனை முறைத்தபடி பல்லைக் கடித்துக்கொண்டு சொன்ன சூர்யாவைக் காணச் சிரிப்புத்தான் வந்தது மிளிருக்கு.

ஏற்கனவே அவளுக்குச் சின்னக் கண்கள். அதை இன்னும் சுருக்கி, மூக்கு நுனி சிவக்க, பல்லைக் கடித்துக் கொண்டு, புசு புசுவென மூச்சு விட்டபடி, மூக்கு விடைக்க, சொல்லியவளைக் கண்டால் நிச்சயம் யாராய் இருந்தாலும் சிரிப்புத் தானாய் வரும்.

மிளிர் முயன்று அதை அடக்கிக் கொள்ள, இனியனோ வயிற்றைப் பிடித்தபடி சிரித்துக் கொண்டிருந்தான். “இனியா…” என மிளிர் அதட்டவும் தான் அடங்கினான். ஆனால், இன்னும் சிரிப்பில் அவன் உடல் குலுங்குவது நின்றபாடில்லை.

“என்ன..? என்ன பிரச்சனை உங்க இரண்டு பேருக்கும்..?” என மிளிர் கேட்க, “அத உங்க தம்பிட்ட கேளுங்க…” என்றபடி அவள் முறுக்கிக் கொண்டு நிற்க, “அதெல்லாம் ஒன்னுமில்ல… நீ போக்கா… நான் பாத்துக்கறேன்…” என்றான் இனியன்.

“நீ அக்கா… அக்கானு காக்கா புடிக்கறதப் பாத்தாலே தெரியுது… ஏதோ பெருசாப் பண்ணி வச்சுருக்கனு… என்ன பண்ண? சொல்லு…” என்றாள் மிளிர் அவனை அளவிடும் பார்வையோடு.

“நான் ஒன்னுமில்லனு சொல்லிட்டேன்… அப்படி என்மேல உனக்கு நம்பிக்கை இல்லைனாத் தாராளமா நீ உன் அசிஸ்டன்ட்கிட்டையே கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்… சரிதானே சூரி..” என்றவனை, முறைத்தபடி “சூர்யா…” எனத் தனது பெயரைத் திருத்தினாள் அவள்.

“நீ தான் என்னனு சொல்லேன் சூரி…” என மிளிர் சொல்ல, மீண்டும் பல்லைக் கடித்துக் கொண்டு “சூர்யா…” என்றாள் இப்போது மிளிரை முறைத்துக் கொண்டே.

“இப்ப அதான் முக்கியம்…” என்றவளை, வெளியே வாடிக்கையாளர் ஒருவர் அழைக்க “இருங்க… வந்து உங்க பஞ்சாயத்த வச்சுக்கலாம்…” என அங்கிருந்து சென்றுவிட்டாள் மிளிர்.

அந்தக் கடை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதிலும் முன் பகுதி மேலும் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒன்று வரவேற்பறையாகவும் இன்னொன்று வாடிக்கையாளர்கள் காத்திருப்பு அறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, இரண்டாம் பகுதி நான்கு சுழல்நாற்காலிகள் போடப்பட்டு அவர்கள் வேலை செய்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மிளிரையும் சூர்யாவையும் தவிர்த்து இன்னும் இருவர் அந்தக் கடையில் வேலைக்கு எனச் சேர்ந்திருந்தனர். சமீபத்தில் தான் அவர்கள் இருவரையும் வேலைக்குச் சேர்த்திருந்தாள் மிளிர்.

காலை நடந்த பூஜை, கடையின் வரவேற்பறையில் நடக்க, அனைவருமே அங்கே தான் நின்றிருந்தனர். சூர்யாவுக்கு மட்டும் புகை ஆகாது என்ற காரணத்தால், தனியே உள்ளே அமர்ந்து தனது கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அதிலேயே ஒன்றிவிட, அந்த சமயம் தான் மிளிரைத் தேடி அங்கே வந்தான் இனியன். மிளிர் வந்துவிட்டதாகத் தான் எண்ணினான் அவன். வந்த அவசரத்தில் வாயிலில் அவளின் வாகனம் நிற்கிறதா என்றும் கூட கவனிக்கத் தவறி இருந்தான். போதாக்குறைக்கு இன்று கடையின் முதல் நாள் என்பதால் சூர்யாவோடு சேர்த்து மற்ற இருவருக்குமே ஒன்று போல அவள் அணிந்திருந்த அதே வண்ண சுடிதாரை எடுத்துத் தந்திருந்தாள் மிளிர். அதை இன்று அணிந்து வரவும் பணித்திருந்தாள்.

தலைகுனிந்து அமர்ந்திருந்தவளைப் பின்புறமாகப் பார்த்தவன் தனது தமக்கை என்றே எண்ணிவிட்டான். காலையில் மிளிர் செய்ததற்குப் பழி வாங்குவதாக எண்ணிக் கொண்டு, கழிப்பறையில் இருந்த சிறு வாளி நிறைய நீரைப் பிடித்துக் கொண்டு வந்தவன், அதை அப்படியே சூர்யாவின் மேல் கொட்டிக் கவிழ்க்க, எதிர்பாராமல் நடந்த நிகழ்வால் என்ன நடந்ததென்று புரியவே சில நொடிகள் பிடித்தது அவளுக்கு.

அவள் அதிர்ந்து, பயந்து, பின் தெளிந்து அவனைத் தீப்பார்வை பார்த்துக் கொண்டே படபடவெனப் பொரிய, அவளை விட அதிகம் அதிர்ந்து போனது அவன் தான். வெளியே இருக்கும் பெற்றோரை எண்ணிப் பயம் கொண்டவன், “ஸ்ஸ்ஸ்… ஸ்ஸ்ஸ்…” என அமைதிப் படுத்த முயல, அவள் வாயை மூடினால் தானே?

எங்கே தனது பெற்றோர்கள் கேட்கப் போகிறார்கள் என்ற பதற்றத்தில் வேகமாக அவள் கை பற்றி இழுத்தவன், தம் கரம் கொண்டு அவள் வாயடைக்க, அத்தனை நெருக்கத்தில் அவனைக் கண்டவள் தடுமாறித் தான் போனாள். அதிர்ச்சியில் அவள் சிறு விழிகள் கொஞ்சம் பெரிதாய் விரிய, முகம் முழுவதும் நீர் வழிய நின்றவளின் முக பாவத்தைக் கண்ட அவனும் சில நொடிகள் தடுமாறித்தான் போனான். அவை எல்லாம் சில நொடிகளே.

“பூரி… உன்னைத்தான் சத்தம் போடாதனு சொல்லறேன் இல்ல…” என அவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் கரத்தை அவள் வலுவாய்க் கடித்திருந்தாள்.

அவன் கத்தியபடியே கையை வேகமாக உதற, அந்தச் சிறு இடைவெளியில் வேகமாக வெளியே வந்து மற்றவர்களுடன் நின்று கொண்டாள். அவள் பின்னே அவனும் வேகமாக வாசலுக்கு வர, அப்போது தான் மிளிர் அங்கே வந்தது.

அந்த நிகழ்வின் நினைவில் லேசாக கையை உதறிக் கொண்டவன், “ஸ்… அப்பா… என்ன கடி…” என சொல்ல, அவனை முறைத்துப் பார்த்தவள் பதிலேதும் சொல்லாமல் உள்ளே செல்ல, மீண்டும் அவள் கைபற்றித் தடுத்திருந்தான் அவன்.

“பதில் சொல்லிட்டுப் போ பூரி… ஏன் என்னைக் கடிச்ச..?”

“பூரி… கீரினா பல்லத் தட்டிக் கையில குடுத்துடுவேன்… கைய விடுடா முதல்ல…”

“ஏன் கடிச்ச சொல்லு… விடறேன்…”

“நீ என்னை…” என வேகமாக சொல்ல வந்தவளின் பேச்சை வெட்டும் விதமாக… “நான்… உன்னை…” என்றான் மயக்கும் குரலில் குறும்புப் புன்னகையுடன்.

குரலில் இருந்த வேறுபாட்டில் அவள் அவனை ஆச்சரியமாகப் பார்க்க, அவளை இன்னுமாய் நெருங்கி நின்றிருந்தான் அவன். அவன் நெருக்கம் கூட உறைக்காத அளவுக்கு கண்களில் மின்னிய குறும்பையும் இதழ்கள் சிந்திய குறுநகையையும் தான் வெறித்துக் கொண்டிருந்தாள் அவள்.

“ம்ம்ம்ம்… சொல்லு… நான் உன்னை…” என்றான் அவள் கண்களை இன்னும் ஆழமாகப் பார்த்தபடி. அவள் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திருதிருத்து விழிக்க, “நான் உன்னைக் கட்டிப் புடிச்சுட்டேனு தானே கடிச்ச..? இப்பவும் அவ்வளவு நெருக்கமாத் தான் இருக்கேன்… ஆனா ஏன் நீ ஒன்னுமே பண்ணல பூரி… அப்போ இது அதுதானே…” என்றவனின் கூற்றில் தான் உணர்ந்தாள் அவனின் நெருக்கத்தை. சட்டென்று அவனை விலக்கித் தள்ளிவிட்டு, விடுவிடுவென எங்காவது செல்லலாம் என நினைக்க அவனோ வழியை மறைத்தபடி நின்றிருந்தான்.

“பச்… இப்போ நகரப் போறீயா… இல்லை…” என்றாள் எரிச்சல் மண்டிய குரலில்.

“பதில் சொல்லு விடறேன்…”

“தெரியாதவங்களுக்கு பதில் சொல்லலாம்… ஆனா…” என்றவள் அங்கிருந்து செல்வதிலேயே முனைப்பாக இருக்க,

“அப்போ ஏன் கடிச்சனு தெரியும்… ஆனா இப்போ ஏன் கடிக்கலைனு தான் தெரியல… அதான்…” என்றான் இழுவையாய் அவன் அவளை ஆராயும் பார்வையோடு.

‘இம்சைடா உன்கூட… கடிச்சாலும் குத்தம்… கடிக்காட்டியும் குத்தம்…’ என்று எண்ணியவள், “அப்போ தோணுச்சு… இப்போ தோணல…” என்றுவிட்டு, அவனைத் தாண்டிக் கொண்டு, காத்திருப்பவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் வேகமாய் நுழைந்து மறைந்து விட்டாள்.

அவள் படபடப்பும் அந்த அதிர்ந்த  பார்வையும் அந்தக் கோப முகமும் இன்னுமாய் அவளைச் சீண்டச் சொல்லி அவனைத் தூண்டியது. அதில் தோன்றிய மந்தகாசப்  புன்னகையோடு அவன் திரும்ப, அவனின் பின்புறம் கைகளை கட்டிக் கொண்டு அவனை முறைத்தபடி நின்றிருந்தாள் மிளிர், “உன் போக்கே சரியில்லை தம்பி…” என்ற வசனத்தோடு.

 

     – தேடல் தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்