
சில மணி நேரங்கள் பரத்தின் அருகேயே அமர்ந்திருந்த சகுந்தலாவிற்கு பசி வயிற்றைக் கிள்ளவும் பரத்தின் அருகே தாதி ஒருவரை காவலுக்கு வைத்து விட்டு கேன்டினுக்கு செல்ல வேண்டி வெளியே வந்தாள்.
அதே சமயம் அவளை விட்டு சற்றுத் தள்ளி ஒரு தாதியிடம் துஷ்யந்த் ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தான்.
சகுந்தலாவைக் கவனிக்காத துஷ்யந்த் தாதியிடம் ஏதோ கட்டளைகள் இட்டுக் கொண்டிருக்க, சகுந்தலாவின் பார்வை துஷ்யந்த்தின் மீது நிலைத்திருந்தது.
‘ஃபேர்வெல் அன்னைக்கு மட்டும் நான் கூப்பிட்டப்போ நீங்க வந்திருந்தீங்கன்னா இன்னைக்கு நம்ம கதையே வேற மாதிரி இருந்து இருக்கும்ல துஷ்யந்த்.’ என்றாள் சகுந்தலா மனதுக்குள்.
சகுந்தலாவையும் மீறி அவளின் கண்கள் லேசாகக் கலங்கின.
_______________________________________________
வகுப்புத் தோழர்கள் அனைவரும் துஷ்யந்த்தையும் சகுந்தலாவையும் சேர்த்து வைத்து கேலி செய்ய, அதனை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் படிப்பே கண்ணாக இருந்த துஷ்யந்தின் குணம் சகுந்தலாவை வெகுவாகக் கவர்ந்தது.
பெண்களிடம் அவன் காட்டும் கண்ணியம் முதற்கொண்டு ஆசிரியர்களை மதிக்கும் விதம், சந்தேகம் கேட்டு வருபவர்களை நடத்தும் விதம் என துஷ்யந்த்தின் ஒவ்வொரு அசைவும் சகுந்தலாவை அவன் பக்கம் சாய்த்தது.
யாருக்கும் தெரியாமல் கள்ளத்தனமாக அவனை ரசிக்க ஆரம்பித்தாள் சகுந்தலா.
துஷ்யந்த்தின் ஒவ்வொரு அசைவும் அவளின் மனதில் கல் மேல் எழுதிய எழுத்துப் போல் பதிந்தது.
சில சமயங்களில் தன்னையே மறந்து அவனைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.
துஷ்யந்த் பார்க்கும் சமயம் சட்டென தலையைக் குனித்துக் கொள்வாள்.
வேறு ஆண்களாக இருப்பின் சகுந்தலாவின் பார்வையையும் அவளின் கள்ளத்தனத்தையும் வைத்து அவள் தன்னை விரும்புவதை இலகுவாகவே உணர்ந்திருப்பர்.
ஆனால் பெண்களுடன் அவ்வளவு பழகாத, பெற்றோரின் கட்டுப்பாட்டில் வளர்ந்து, படிப்பில் மட்டுமே கண்ணாக இருந்த துஷ்யந்த்திற்கு சகுந்தலாவின் பார்வை எதையும் உணர்த்தவில்லை.
சகுந்தலாவின் மனதைப் பற்றி அவளைச் சுற்றி இருந்த யாருமே அறியாமல் போனது தான் விந்தை.
அவ்வளவு கமுக்கமாக தன் மனதை மறைத்தாள் சகுந்தலா.
_______________________________________________
“இங்க தனியா என்ன பண்ணிட்டு இருக்குற சகுந்தலா?” என்ற துஷ்யந்த்தின் குரலில் தன் கடந்த காலத்தை விட்டு வெளியே வந்த சகுந்தலாவுக்கு அவனின் கேள்வி புரியவே சில கணங்கள் எடுத்தது.
“அ…அது… அது… சாப்பிடலாம்னு…” எனத் தடுமாறினாள் சகுந்தலா.
தன் கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்த துஷ்யந்த், “ஓக்கே… எனக்கும் ஃப்ரீ தான் இப்போ. ரெண்டு பேரும் கேன்டினுக்கு போலாம்.” என்று விட்டு முன்னே நடக்கவும் தலையாட்டி பொம்மையாய் அவனைப் பின் தொடர்ந்தாள் சகுந்தலா.
துஷ்யந்த்தே இருவருக்குமான உணவை எடுத்து வரச் செல்ல, சகுந்தலா சுற்றியும் வேடிக்கை பார்த்தாள்.
உணவு வரவும் இருவரும் அமைதியாக சாப்பிட, அம் மௌனத்தைக் கலைத்தான் துஷ்யந்த்.
“சகுந்தலா… கேட்குறேன்னு தப்பா நினைக்காதே. பரத் ரெகவர் ஆகணும்னா அவன் மென்டலியும் ஹெல்த்தியா ஸ்ட்ரெஸ் இல்லாம இருக்கணும். அது… அவன் மனசுல ஒரு அப்பாவுக்கான ஏக்கம் இருக்குறத நேத்து வந்தவன் என்னாலயே புரிஞ்சிக்க முடியுது. உனக்கு புரியுதா?” எனக் கேட்டான் துஷ்யந்த் தயக்கமாக.
அவனை வெட்டும் பார்வை பார்த்த சகுந்தலா, “பரத்துக்கு அப்பா, அம்மா, குடும்பம் எல்லாம் நான் மட்டும் தான். வேற எந்தக் கொம்பனும் என் பையனுக்கு அவசியம் இல்ல.” என்றாள் ஆவேசத்துடன்.
“பெரியவங்களுக்கு இடைல இருக்குற பிரச்சினையால அந்தச் சின்னப் பையன் எதுக்கு அவஸ்தைப்படணும்? அட்லீஸ்ட் அவனோட அப்பா நல்லவனோ, கெட்டவனோ அதைப் பத்தி தெரிஞ்சிக்கிற முழு உரிமை பரத்துக்கு இருக்கு.” என அழுத்தமாகக் கூறியவனுக்கு பரத்தின் ஏக்கத்தை போக்க முடிந்தால் என்ற எண்ணம் மட்டுமே அச் சமயம் இருந்தது.
அதனால் சகுந்தலாவின் பக்கம் யோசிக்கத் தவறினான்.
ஒரு கசந்த புன்னகையை உதிர்த்த சகுந்தலா, “புருஷனோட வர சின்ன சண்டைக்கு புருஷனே வேணாம்னு கையில குழந்தையோட வாழாவெட்டியா வரவன்னு என்னை நினைக்கிறீங்களா? எதுக்கு அந்தக் கேடு கெட்டவன பத்தி என் பையன் தெரிஞ்சிக்கணும்? அப்படியே நான் அந்த ஆள பத்தி சொன்னா பரத் எ..என்னை விட்டுட்டு அவன் கூட போயிட்டா?” எனக் கேட்டவளுக்கு குரல் நடுங்கியது.
“அப்படி இல்ல சகுந்தலா. சரி இதை சொல்லு. இப்போ நீ பரத் கிட்ட உண்மைய மறைக்கலாம். ஆனா அவன் பெரியவனானதுக்கு அப்புறம் சுயமா அவன் அப்பாவ பத்தி தெரிஞ்சிக்கிட்டு இத்தனை வருஷமா நீ அவன் அப்பா கிட்ட இருந்து அவன பிரிச்சி வெச்சிட்டதா நினைச்சி அப்போ உன்ன விட்டு போய்ட்டா என்ன பண்ணுவ?” எனக் கேட்டான் துஷ்யந்த்.
துஷ்யந்த்தின் கேள்வியில் அப்பட்டமாக முகத்தில் அதிர்ச்சியை வெளிப்படுத்திய சகுந்தலாவின் கண்கள் கண்ணீரை சிந்தத் தயாராக இருந்தன.
தன் மனம் கவர்ந்தவளின் கண்ணீர் துஷ்யந்த்தின் மனதை வாட்டினாலும் பரத்தின் நலம் தான் அப்போது அவனுக்கு முக்கியமாகப் பட்டது.
“சகுந்தலா… உன் எக்ஸ் ஹஸ்பன்ட் மோசமானவனா இருந்தா பரத்துக்கு புரியும் படி அவனுக்கு உண்மைய எடுத்து சொல்லு. அதை விட்டுட்டு அவன திட்டியும் கண்டிச்சும் உண்மைய மறைக்க பார்த்தா பரத்துக்கு அவன் அப்பாவ பத்தி எப்படியாவது தெரிஞ்சிக்க வேணும்ங்குற வைராக்கியம் வரும். அது உங்க ரெண்டு பேரோட ரிலேஷன்ஷிப்புக்கும் நல்லதில்ல. உண்மை தெரிஞ்சா கண்டிப்பா அவன் உன்ன புரிஞ்சிப்பான். பரத் சின்ன வயசுல இருந்து நீ தான் தனியாளா அவன வளர்க்குற. இவ்வளவு மோசமான அப்பனுக்காக நிச்சயம் அவன் உன்ன விட்டு கொடுக்க மாட்டான்.” என ஆறுதல் அளித்தான் துஷ்யந்த்.
சில நொடிகள் மௌனம் காத்த சகுந்தலா தன்னை சமன் செய்து கொண்டு, “அ…அவன் என்…னை ரொம்பவே டார்ச்சர் பண்ணான். பிஸிக்கலி, மென்டலி அபியூஸ் பண்ணான்.” என்றவளுக்கு அச் சம்பவங்களை நினைக்கும் போதே உடல் நடுங்கியது.
“ஹே சகுந்தலா… கூல் கூல்… பயப்படாதே… நான் இருக்கேன் உன் கூட. உனக்கு சொல்லப் பிடிக்கலன்னா விடு. இட்ஸ் ஓக்கே.” என்ற சகுந்தலா அவசரமாக தண்ணீரை எடுத்து அவளுக்கு குடிக்கக் கொடுத்தான்.
இவ்வளவு நேரமும் பரத்திடம் உண்மையைக் கூறச் சொல்லி கட்டாயப்படுத்தியவனுக்கு சகுந்தலாவின் நடவடிக்கையைப் பார்த்ததும் எங்கு தான் அவளைப் புரிந்து கொள்ளாமல் பேசி விட்டோமோ என வருத்தப்பட்டான்.
துஷ்யந்த் தந்த தண்ணீரைக் குடித்து தன்னை சமன் செய்து கொண்ட சகுந்தலா, “அவன் பெயர் ரிஷிகேஷ். கல்யாணம் ஆன நாள்ல இருந்து ஒவ்வொரு நொடியும் எனக்கு நரக வேதனைய மட்டும் தான் காட்டினான். பிஸிக்கலா, மென்ட்டலா என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணான். பல முறை என் சம்மதமே இல்லாம எ…என்னை ரே….ப் பண்ணான்.” என சகுந்தலா குரல் நடுங்கக் கூற, துஷ்யந்த்தின் நரம்புகள் ஆத்திரத்தில் முறுக்கேறின.
தன் கரத்தை இறுக்கிய துஷ்யந்த்துக்கு அந் நொடியே சென்று ரிஷிகேஷை கொன்று போடும் வெறி வந்தது.
சகுந்தலா யாரைப் பற்றி இவ்வளவு அச்சத்துடன் பேசிக் கொண்டிருக்கிறாளோ அவனே சகுந்தலாவைத் தேடி லண்டனில் இருந்து விமானத்தில் வந்து கொண்டிருந்தான்.
_______________________________________________
ப்ளஸ் டூ முடிந்ததும் சிறந்த மதிப்பெண்களை எடுத்து துஷ்யந்த் மருத்துவ கல்லூரியில் சேர, ஓரளவு நல்ல மதிப்பெண்களை எடுத்த சகுந்தலா ஒரு கலைக் கல்லூரியில் சேர்ந்தாள்.
துஷ்யந்த்தை விட்டுப் பிரிந்தாலும் மனம் முழுவதும் நிறைந்திருந்த அவன் மீதான காதல் மட்டும் அப்படியே இருந்தது.
ஆனால் தன் நிறைவேறாத காதலுக்காக பெற்றோரைக் கஷ்டப்படுத்த விரும்பாது படிப்பு முடிந்ததும் பெற்றோர் அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பிக்க, அவர்களை மறுத்துப் பேசவில்லை அவள்.
இருந்தும் ஏதாவது அதிசயம் நடந்து பெற்றோர் பார்க்கும் மணாளன் துஷ்யந்த்தாக இருக்க மாட்டானா என்ற ஏக்கமும் வந்து சென்றது.
ஒருநாள் தன்னைப் பெண் பார்க்க வருவதாக அவளின் பெற்றோர் கூறவும் மனதைக் கல்லாக்கிக்கொண்டு தயாரானாள் சகுந்தலா.
சொன்னபடியே தன் பெற்றோருடன் பெண் பார்க்க வந்த ரிஷிகேஷிற்கு சகுந்தலாவின் அழகு ஆளை மயக்க, உடனே தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.
சகுந்தலாவின் பெற்றோருக்கும் கை நிறைய லட்சங்களில் சம்பாதிக்கும் வரன் கிடைக்கவும் மறுப்பதற்கு மனமில்லை.
சகுந்தலாவின் விருப்பத்தைக் கேட்க, பெற்றோருக்கு ஏற்கனவே சம்மதம் என்பதால் அவர்கள் ஆசைப்பட்டதாவது நடக்கட்டும் என்று தன் காதலை மனதுக்குள் பூட்டி வைத்து விட்டு திருமணத்துக்கு சம்மதித்தாள்.
இனிமேல் தன் காதல் நிச்சயம் கை கூடப் போவதில்லை என்று முடிவான பின் மனதில் ஒருவனை எண்ணி இன்னொருவருடன் வாழும் கேடு கெட்ட வாழ்வை விரும்பாது தன் எதிர்க்காலக் கணவனுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று துஷ்யந்த் மீதான காதலுக்கு மனதுக்குள்ளேயே சமாதி கட்டினாள்.
சரியாக ஒரு மாதத்தில் திருமணத்திற்கான நாள் குறிக்கப்பட்டது.
சகுந்தலாவின் பெற்றோருக்கே எதற்காக இவ்வளவு அவசரம் என்ற கேள்வி எழ, மணமகனின் ஜாதகத்தில் ஒரு மாதத்திற்குள் திருமணத்தை நடத்த வேண்டும் என்றுள்ளதாக ரிஷிகேஷின் பெற்றோர் கூறினர்.
அதன் பின்னர் திருமண வேலைகள் துரிதமாக நடைபெற, சகுந்தலாவின் தோழி ஒருத்தி அவளை சந்திக்க வந்தாள்.
__________________________________________________
சகுந்தலா துஷ்யந்த்திடம் தன் கடந்த காலத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்த நேரம் துஷ்யந்த்தின் கைப்பேசி ஒலி எழுப்பியது.
பரத்துக்கு காவலாக இருந்த தாதி தான் அழைத்திருந்தார்.
துஷ்யந்த் அழைப்பை ஏற்றதும் கேட்டதும் மறு முனையில் பரத்தின் அழுகை தான்.
கைப்பேசியையும் தாண்டி பரத்தின் குரல் சகுந்தலாவின் காதுகளை எட்ட, சட்டென எழுந்து பரத் இருந்த அறைக்கு ஓடினாள்.
தாதியுடன் பேசி விட்டு துஷ்யந்த்தும் அவளைப் பின் தொடர்ந்தான்.
இருவரும் பரத் இருந்த அறையை நெருங்கும் போதே பரத்தின் அழுகைச் சத்தம் காதைக் கிழித்தது.
சகுந்தா உள்ளே சென்ற மறு நொடியே அவளைக் கண்டு கொண்ட பரத்தின் அழுகை அதிகமாகியது.
அழுது கொண்டிருந்த பிள்ளையை அவசரமாகத் தூக்கி சகுந்தலா சமாதானம் செய்ய முயல, அவளின் கழுத்தைக் கட்டிக் கொண்டு தோளில் முகம் புதைத்து அழுதான் பரத்.
“ஷ்ஷ்ஷ்… ஷ்ஷ்… என் பரத் குட்டி குட் பாய் தானே. அழக் கூடாது. அதான் அம்மா வந்துட்டேன்ல.” என சகுந்தலா சமாதானப்படுத்த, “வீட்டுக்கு போகணும்…” எனக் கதறினான் சிறுவன்.
சகுந்தலா துஷ்யந்த்தைக் கவலையாக நோக்க, கண்களை மூடித் திறந்து தான் பார்த்துக் கொள்வதாக சைகை செய்த துஷ்யந்த், “சேம்ப்… ஃபர்ஸ்ட் நீங்க அழாம இருந்தா தான் வீட்டுக்கு போகலாம். நீங்க அழுதா டாக்டர்ஸ் பயந்து உங்கள வீட்டுக்கு போக விட மாட்டாங்க.” என்கவுமே சகுந்தலாவின் தோளில் முகம் புதைத்திருந்த பரத்தின் அழுகை முழுதாக நிற்காவிடிலும் ஓரளவு குறைந்தது.
சற்று நேரத்தில் பரத்தின் அழுகை குறைந்து கேவலாக மாறியது.
சகுந்தலாவிடம் இருந்து பரத்தை வாங்கிக் கொண்ட துஷ்யந்த், “சகுந்தலா… அனஸ்டீசியா போட்டதால இன்னைக்கு ஃபுல் டே பரத் இப்படி தான் அழுதுட்டே இருப்பான். நான் பரத்த கூட்டிட்டு வெளியே போறேன். நீ பரத்தோட திங்க்ஸ எடுத்துக்கிட்டு வா. நான் உங்க ரெண்டு பேரையும் வீட்டுல ட்ராப் பண்ணுறேன். இன்னைக்கு ஈவ்னிங் வரை நான் ஃப்ரீ தான்.” என்கவும் சரி எனத் தலையசைத்தாள் சகுந்தலா.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


பரத் அப்பா வர போறானா??