
அத்தியாயம் 29
சரண் தந்த திருமண புடவையைத் தொட்டுப் பார்த்தாள் மௌனிகா.
மெரூன் நிறத்தில் அளவான வேலைப்பாடுடன் எடையும் அதிகமின்றி இருந்தது.
“ஓகேவா உனக்கு? பிடிச்சிருக்கா?”
“ம்ம்.. நல்லா இருக்கு. யாரு சேரி செலக்ட் பண்ணது?”
“நானும் ரோகியும்.”
“சேரி வாங்க கூட போனீங்களா?”
‘ஆம்’ என்பதாய்த் தலை அசைத்தவன், “மேரேஜ் நம்ம ரெண்டு பேருக்கும் தான். எதுலயும் கலந்துக்காம ஒதுங்கி இருந்தா எப்படி? உன்னால ஊருக்கு வந்து போக முடியல. சோ, நான் போனேன்.”
“தேங்க்ஸ் சரண்.”
மெலிதாய்ப் புன்னகைத்தவன், “அப்படியே சட்டையையும் போட்டுப் பார்த்திடு. ஓகேனா, அப்படியே வச்சுக்கலாம். சைஸ் எதுவும் ப்ராப்ளம் இருந்தா சொல்லு, நான் ரோகிக்கிட்ட கொடுத்துச் சரி பண்ண சொல்லுறேன்.”
“ம்ம்..” என்று அவனை இரு நொடிகளிற்கும் அதிகமாய் நோக்கியவள், “திடீர்னு சென்னைக்கு ஏன் வந்தீங்க சரண்?”
“எதுக்குக் கேட்கிற?”
“ஏன் கேட்கக் கூடாதா? அதை தெரிஞ்சிக்கிற உரிமை இல்லையா எனக்கு?”
“யாரு அப்படிச் சொன்னா? தாராளமா கேட்கலாம், உனக்கு அதுக்கான முழு உரிமையும் உண்டு. நான் எதுக்குனு காரணம் தான் கேட்டேன்.”
“காரணம்னு எல்லாம் எதுவும் இல்ல. தோணிச்சு, அதான் கேட்டேன்.”
“நீ ஊருக்குக் கிளம்பி வந்த மறுநாள் பேசும் போதே, உன்னோட வாய்ஸ் சரியில்ல. உன் பேரண்ட்ஸ் இருந்திருந்தா, ஒன்னும் தெரிஞ்சிருக்காது. தனியா வேற இருக்க. பொதுவாவே மேரேஜ் ஃபிக்ஸ் ஆனா, பொண்ணு மாப்பிள்ளை ரெண்டு பேரையுமே காரணம் தெரியாத ஒருவிதமான ஃப்ரஷர் அழுத்த ஆரம்பிச்சிடும். நீ ஹேண்டில் பண்ணிக்குவ தான்.
இன்விடேஷனுக்காக விசாரிக்கும் போது, ஒன் டிஜிட்ல நம்பர் சொன்னியா? என்னமோ, நீ யாரும் இல்லாம தனியா இருக்கிற மாதிரி ஃபீல் ஆச்சு. அங்க நான் அம்மா, தங்கச்சி, தம்பினு இருக்கும் போது, உன்னை அப்படியே விட மனசில்ல. அதான் இன்விடேஷனை கொரியர் பண்ணுறதுக்குப் பதிலா, நேர்லயே வந்து கொடுத்திடலாம்னு கிளம்பிட்டேன்.
நான் வர்றது தெரிஞ்சதும் அம்மாதான், உன்கிட்ட சேரியையும் காட்டிட்டு வாங்கிட்டு வரச் சொன்னாங்க.”
“ம்ம்..” என்றவள், “சரி, நான் போயி ப்ளவுஸைப் போட்டுப் பார்க்கிறேன்!” என அறைக்குள் செல்ல, நான்கு நிமிடங்களின் இடைவெளியில் அழைப்பு மணி ஒலித்தது.
வாயிலிற்கு விரைந்தான் ஆடவன்.
கதவைத் திறந்திட.. உணவோடு நின்று இருந்தான், விநியோக மனிதன். பணத்தைச் செலுத்திவிட்டு வாங்கிக் கொண்டான்.
இருவருக்குமான உணவை, வெளியில் வாங்குவதற்குக் கட்டளை இட்டிருந்தாள் பாவை.
சந்துருவின் இல்லத்தில் இருந்து ரஞ்சனி நேராய் பணிக்குச் சென்றுவிட, இவர்கள் இருவர் மட்டும் இல்லம் வந்து சேர்ந்தனர்.
இரவில் பயணம் செய்து வந்ததால் ஆடவன் ஓய்வெடுக்கச் சென்றுவிட, மௌனியும் அலுவலகப் பணியில் மூழ்கிப் போனாள்.
அவன் விழிக்கும் பொழுது, மதியம் மணி இரண்டரை ஆகி இருந்தது. உணவு வந்து சேரும் வரை, திருமண ஏற்பாடுகளைப் பற்றி வருங்கால துணைவியிடம் பகிர்ந்தான்.
பத்து நிமிடங்கள் கடந்த பின்னரும் வெளியே வராதவளைக் கண்டு, அறைக் கதவைச் சென்று தட்டினான் சரண்.
“என்னப்பா.?” என உள்ளிருந்து பாவையின் குரல் கேட்டது.
“ஏன் இவ்வளவு நேரம்? எதுவும் பிராப்ளமா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. இதோ வந்திடுறேன்.”
“சாப்பாடு வந்திடுச்சு மோனி.”
“ஓகே ஓகே.. டூ மினிட்ஸ்..” என்றவள் உரைத்ததை விட, ஒரு நிமிடம் அதிகப்படியாய் எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள்.
“என்னாச்சு?” என அவன் புரியாமல் வினவ, “ப்ளவுஸ் கொஞ்சம் டைட்டா இருந்துச்சு. கழட்ட முடியல. அதான் உடனே ரோகிக்கு வீடியோ கால் போட்டு, எங்கெங்க சரி பண்ணணும்னு சொல்லிட்டு வந்தேன்.”
“ஹப்பா.. ஒருவேலை மிச்சம்!” என்று ஆசுவாச மூச்சை வெளிவிட்டவன், “எங்கேஜ்மெண்ட் டிரஸ்ஸை ஆல்ட்டர் பண்ண டெய்லர்கிட்ட கொடுத்தா, கரெக்டான சைஸ்ல தச்சிடுவான்னு பார்த்தா, இப்படி குளறுபடி செஞ்சு வச்சிருக்கான்?
நைட் ஊருக்குப் போறேன் சட்டையைக் கொஞ்சம் முடிச்சுக் கொடுனு கேட்டதுக்கு, எக்ஸ்ட்ரா ஐநூறு ரூபா வேற கேட்டு வாங்குனான். ஆனா பாரு என்ன வேலை செஞ்சிருக்கான்னு.”
மெலிதாய்ச் சிரித்தவள், “நீங்க எதுக்கு எக்ஸ்ட்ரா பணம் கொடுத்தீங்க சரண்? செய்யிற வேலைக்கான சேலரியைக் கொடுத்தா மட்டும் போதும் தான?”
“போதும் தான்! ஆனா, நமக்கு இல்ல அவசரமா வேலையாக வேண்டியது இருக்கு. அதுக்காக கொடுத்தேன். பணம் பெருசு இல்ல. வேலையைத் திருந்தச் செய்யாதப்பா, அதுக்கு அவசியம் இல்ல தான? நேர்ல போய் பேசிக்கிறேன் அவனை!”
மௌனி ஆடவனை இமைக்காது பார்த்திருக்க.. அதைக் கவனித்தவன், “என்ன.?”
“இல்ல.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சந்துருவை ஹேண்டில் பண்ணதுக்கும், இப்ப டெய்லரை பத்தி பேசுறதுக்கு தான் எவ்வளவு வித்தியாசம்?”
“ரெண்டு விஷயமும் ஒன்னு இல்லையே மோனி. லவ்ன்ற பேர்ல ஃபோர்ஸ் பண்ணுறது ஏத்துக்கவே முடியாத விஷயம். செய்யிற வேலையில தப்பு நடக்குறது இயல்பு. அதை ஒருத்தர் சொல்லும் போது முயற்சி செஞ்சு திருத்திக்கணும். இல்லேனா, தொழில் கை சேராது. ரெண்டாவதுல.. திருந்தலேனா, நஷ்டப்பட போறது தொழில்ல மட்டும் தான். ஆனா சந்துரு மாதிரி ஆட்களால, அவனோடு சேர்த்து சம்பந்தப்பட்ட பொண்ணோட வாழ்க்கையும் நஷ்டம் ஆகிடும்.”
அவள் ‘ஆம்’ என்பது போல் தலை அசைக்க, “சாப்பிடுவோமா?”
“வெயிட் பிளேட் எடுத்துட்டு வந்திடுறேன்!” என்றவள் நீரையும் சேர்த்துக் கொண்டு வந்தாள். இருவரும் பேசியபடியே உண்டு முடித்தனர்.
மாலை வரை மௌனியுடன் இருந்து, சென்னையில் தனக்குத் தெரிந்த ஒரு சிலரிடம் அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு, இரவு ரயிலிற்கே கிளம்பி விட்டான் சரண்.
ஆடவனை வழியனுப்ப அவனோடு தொடர்வண்டி நிலையத்திற்கு வந்திருந்தாள் மௌனிகா.
“நான் போயிக்க மாட்டேனா? நீ எதுக்கு வர்ற.?”
“நீங்க என்னை ஊருல செண்ட் ஆஃப் பண்ணலயா? சோ..”
“என்ன பதிலுக்குப் பதிலா.?”
“இல்ல, பாலிசி ஆஃப் கிவ்விங்! எனக்கு கிடைக்கிறதை, நான் திருப்பிக் கொடுக்கிறேன்!”
அவன் புன்னகைத்து, “என்னை ஒருத்தர் வழி அனுப்புறது இதுதான் ஃபர்ஸ்ட் டைம்.”
“எல்லாத்துக்குமே முதல் தடவைனு ஒன்னு இருக்கும் தான? இனி ஃபியூச்சர்ல பலதடவைகள் வரலாம்! பழகிக்கோங்க!”
“ம்ம்.. நீயும் பழகிக்கோ, ஏதாவது முக்கியமான விஷயம் நடந்தா என்கிட்ட ஷேர் பண்ணுறதுக்கு!”
ஸுயர்! என்றவள் புன்னகைத்திட, பாவையிடம் இருந்து கண்களைத் திருப்பி சுற்றத்தை நோக்கினான்.
மௌனியும் அவனைப் போலவே திரும்பி அருகே நின்று கொள்ள, அனிச்சையாய் இருவரின் கரங்களும் கோர்த்துக் கொண்டன.
இவ்வளவு தூரம் வந்துட்டு, உனக்கு ஹெல்ப் பண்ண ரஞ்சனியோட அத்தைப் பையனைத் தான் பார்க்க முடியாம போச்சு!
நீங்க கிளம்புறதுக்கு முன்னாடி, அவன் வந்துடுவான்னு நினைச்சேன். பட், இன்னும் வேலை முடியலயாம். கிளம்ப டைம் ஆகும்னு சொல்லிட்டான்.
ம்ம்.. முறையா தேங்க்ஸ் சொல்ல முடியலனு தான் லைட்டா வருத்தம்!
மேரேஜுக்கு வருவான், அப்ப சொல்லிக்கோங்க! என மௌனி புன்னகைத்திட, வண்டி கிளம்வதற்கான அறிவிப்பு ஒலி கேட்டது. மெல்ல நகரத் தொடங்கியது தொடர்வண்டி.
அதுநேரம் வரை நடைமேடையில் நின்று பாவையுடன் உரையாடிக் கொண்டிருந்தவன், நொடி இடைவெளியில் தாவி இரயிலில் ஏறினான்.
அவனது கரத்தைப் பற்றி இருந்தவள் இரண்டு எட்டு வண்டியுடன் இணைந்து நடந்து விரல்களைப் பிரித்துக் கொள்ள, புன்னகையுடன் கை அசைத்தான் சரண்.
பதிலிற்குக் கை அசைத்த மௌனி நகராது அங்கேயே நின்று பார்க்க, ஒரு நிமிடத்தின் முடிவில் தொடர்வண்டி நீண்டு சென்று பார்வையில் இருந்து மறைந்தது.
அடுத்த நொடி அவளின் கைப்பேசி ஒலிக்க, தன்னிலையில் இருந்து மீண்டு எடுத்துப் பார்த்தாள்.
திரையில் ஆடவனின் பெயர்.
செவியோடு இணைத்தவள், “சரண்.?”
“வீட்டுக்குப் போயிட்டு எனக்குக் கால் பண்ணு.”
“ம்ம்.. நீங்களும் காலையில ஊருக்கு போனதும் மெசேஜ் பண்ணுங்க.”
“ஓகே மோனி. பாய்.. என அவன் பேச்சை முடித்திட, மெலிதான பெருமூச்சை வெளிவிட்டுக் கிளம்பினாள்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கி மெல்ல ஊர்ந்து இல்லம் வந்து சேர, ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் ஆனது.
தோழிக்காக இல்லத்தில் காத்திருந்தாள் ரஞ்சனி.
வீட்டிற்குள் நுழைந்ததுமே, “என்ன படி, உன்னோட ஆளுக்கு பாய் சொல்லி அனுப்பியாச்சா?” எனக் கேலியாய் வினவிட, “ம்ம்!” என்றபடி கூடத்தில் இருந்து இருக்கையில் உடலை சாயத்தாள் மௌனிகா.
“என்னாச்சு?”
“செம டயர்ட் ரஞ்சு!”
கேலியாய்ப் புன்னகைத்த மற்றவள், “டயர்ட் ஆகுற அளவுக்கு என்ன செஞ்ச படி? நீயும் அண்ணனும் எதுவும்? ரெண்டு பேரும் வீட்டுல தனியா வேற இருந்திருக்கீங்க.?”
ரஞ்சனியின் பேச்சில் சட்டென்று இமைகளைப் பிரித்த மௌனி, “ச்சீ.. பேச்சைப் பாரு!” என தனது தோளில் இருந்து கழட்டி வைத்திருந்த துப்பட்டாவை எடுத்து சுருட்டி, அவள் மீது வீசினாள்.
“என்ன ச்சீ.? மேரேஜ் ஆனதுக்கு அப்புறம் நடக்கும் தான? முன்னாடியே ட்ரயல் எதுவும் பார்த்தீங்களானு கேட்டேன்?”
“நான் அந்த அளவுக்கு எல்லாம் யோசிக்கலாம் படி. ஓகேவா தான் இருக்கு, சரண் கூட இருந்தா. என்னால ஃப்ரீயா பேச முடியிது. எதையும் ஷேர் பண்ணிக்க முடியிது.”
“ஏது ஓகேவா? காலையில எங்க அண்ணா, ஹீரோ பர்ஃபார்மென்ஸ் கொடுத்திருக்காரு. நீ அதுக்குப் பதிலா எதுவும் கிஃப்ட் கொடுத்து இருக்க வேணாம்? என்னவோ, போனா போகுதுன்ற மாதிரி ஓகேனு சொல்லுற.?”
“இதுக்கு எல்லாம் கிஃப்ட் கொடுக்கணுமா என்ன?”
“அடிப்பாவி! இதுக்கு மேல, ஒரு ஆம்பளை கட்டிக்கப் போற பொண்ணுக்காக வேற என்ன செய்யணும்னு எதிர் பார்க்கிற?”
“நான் ஒன்னும் சரணை ஹெல்ப் பண்ண சொல்லிக் கேட்கலயே? அது, அவரோட ஓன் இன்டென்ஷன்ல செஞ்சது!”
“சுத்தம்! நீ எல்லாம் பொண்ணே இல்ல தெரியுமா? பாவம், உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டு, என்ன பாடுபட போறாரோ அந்த மனுஷன்?” எனப் புலம்பியபடி ரஞ்சனி அவளின் அறைக்குள் செல்ல, மௌனியும் எழுந்து உள்ளே சென்றாள்.
கிளம்பும் போது சரண் நீராடி உபயோகித்த துவாலை, அறையின் ஒரு பக்கத்தில் உலர வைக்கப்பட்டு இருந்தது.
தொட்டுப் பார்த்தாள். லேசான ஈரம் விரலில் படர்ந்தது, அவனின் வாசத்தோடு.
கைப்பேசி ஒலி பாவையின் கவனத்தைக் கலைத்திட, எடுத்துப் பேசினாள்.
மறுபுறம் சரண்.
“வீட்டுக்குப் போயிட்டியா?
“டுவன்டி மினிட்ஸ் ஆச்சு, வந்து.”
“போனதும் கால் பண்ணுனு சொன்னேன். மறந்துட்டியா?”
“உங்க டவலை மறந்துட்டுப் போயிட்டீங்க சரண்.”
“ஈரமா இருந்துச்சு, அதான் காயட்டும்னு அப்படியே விட்டுட்டு வந்தேன்.”
“ம்ம்..”
“நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல?”
“மறக்கல. இப்பவும் ஞாபகம் இருக்கு. நாம ரெண்டு பேரும் வீட்டுல என்ன செஞ்சோம்னு ரஞ்சு விசாரிச்சா. அவக்கிட்டப் பேசிட்டு வந்து, உங்களுக்கு கால் பண்ணலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள நீங்களே கூப்டுட்டீங்க!”
“ஓகே.. ரெஸ்ட் எடு.”
“சரண், வீட்டுக்கு வர வழியில போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து கால் பண்ணி இருந்தாங்க.”
“எதுவும் பிரச்சனையா.?” என வினவியவனின் குரலில் லேசான பதற்றம் எட்டிப் பார்க்க, “சந்துரு கம்பிளைண்டை வாபஸ் வாங்கிட்டானாம்.”
“ஓ.. சரி! டைம் ஆச்சுப் பாரு, போயி ரெஸ்ட் எடு!”
“தேங்க்ஸ் சரண்!”
“இது, நான் செய்ய வேண்டியது தான். அதுக்கு எதுக்கு தேங்க்ஸ்?”
“நான் சொல்லீட்டேன். சோ நீங்க வச்சுக்கோங்க!”
“சரி!” என அவன் சிரித்திட, “குட்நைட்!” என்று பேச்சை முடித்தாள் மௌனி.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அழகான புரிதல் இருவருக்கும்..❤️❤️