
திமிர் 20
“போடா”
“ஹா ஹா…”
“இத்தோட ஒரு மாசத்துக்கு உனக்கு ஒன்னும் கிடையாது.”
“ஆஹான்!” என்றவன் கைகள் அவள் இடையில் நடைபழகிக் கொண்டிருந்தது.
பாத்டப்பில், அவன் கைக்குள் சிறைப்பட்டு அமர்ந்திருந்தவள் நடை பழகும் விரலில் அடி போட, “இதெல்லாம் உசுப்பி விட்டு ரொமான்ஸ் பண்றதுக்கு முன்னாடி சொல்லி இருக்கணும்.” என இடையைக் கிள்ளினான்.
“வலிக்குது.”
வலியில் சிணுங்கியவள் அவனை விட்டு நகராமல் அவனுக்குள் ஒன்றிப் போக, முடிந்த மோகம் முழித்துக் கொண்டது. விளையாட்டைத் தொடங்க அவள் உடலை வெகுவாக வருட, தண்டுவடம் விரைத்தது மதுணிக்கு. தன்னவளின் வளைவு நெளிவை வைத்து அவள் சம்மதத்தை அறிந்தவன், “ஒரு மாசம் தாங்குவியாடி” கேட்டு மோகத்திலிருந்து வெளிவர வைத்தான்.
வெட்கமில்லாமல் அவனோடு இணைந்து சென்ற மனத்தை மானசீகமாகக் கடிந்து கொண்டவள், “பிராடு! எதையாவது பண்ணி மயக்கிடுற.” எனக் குளியல் தொட்டியில் இருந்து வெளியேறினாள்.
“டிரஸ்ஸப் போட்டுட்டுப் போடி”
“அந்த ஈரமான டிரஸ் போடுறதுக்கு இப்படியே இருக்கலாம்.”
“நாசூக்கா உசுப்பி விடுறா பாரு.” என்றதும் வெட்கத்துடன் புன்னகைத்தவள்,
“ரொம்ப ஆசைப்படாதீங்க சார். நான் வெளிய போய் வேற டிரஸ் போட்டுப்பேன். நீங்க இந்த ஈரத்துலயே உட்கார்ந்து இருங்க.” எனக் குளியலறையை விட்டு வெளிவந்தவள் பின்னே வந்தவன் ஓயாது சேட்டை செய்தான்.
அவள் வாயும் கையும், அதட்டியும் திட்டியும் ஓய்ந்தது. எதற்கும் அசைந்து கொடுக்காமல் அவன் இஷ்டத்திற்குக் காதல் லீலைகள் செய்து கொண்டிருந்தான். எத்தனை முறை தடுத்தாலும், தனக்கான முத்தத்தை வாங்கிக் கொண்டு அவளை விடுவிக்கிறான். பரந்த காட்டில் காதல் செய்த காதல் பறவைகள், இந்தக் குறுகிய அறையில் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க, வெளியில் கொதித்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி.
“நீ எதை நினைச்சும் கவலைப்படாத அனு. அவளை எப்படியாவது இந்த வீட்டை விட்டு அனுப்பிடலாம்.”
“சும்மா சொல்லாதீங்க ஆன்ட்டி. அகம்பனை மீறி இங்க எதுவும் நடக்காதுன்னு எனக்கும் தெரியும்.”
“அது உண்மைதான். அதுக்காக என் தம்பி வாழ்க்கையை எவளோ ஒருத்தி அழிக்கறதைப் பார்த்துட்டுச் சும்மா இருக்க முடியாது. இந்த விஷயத்துல நாங்க எல்லாரும் உனக்கு தான் சப்போர்ட்.”
“நீங்க இருக்கற தைரியத்துல தான் வேண்டாம்னு சொன்ன எங்க அப்பா அம்மா பேச்சையும் மீறி இங்க வந்திருக்கேன். எப்படியாவது உங்க தம்பிய என்கூடச் சேர்த்து வச்சுடுங்க. உங்க தம்பிய நான் ரொம்ப லவ் பண்றேன். அவர் இல்லாம என்னால வாழ முடியாது.”
“இந்த மாதிரி ஒரு பொண்ண விட்டுட்டு, எவளோடவோ கூத்தடிச்சிட்டு இருக்கான் பாரு.”
“விடுங்கப்பா, அவன் எதோ புரியாம பண்றான். உண்மை தெரிஞ்சா அவன் கையாலதான் அவளுக்குச் சாவு.”
“எனக்கு இந்தப் பொண்ணு விஷயத்தை விட, அவனுங்களைச் சும்மா விட்டான் பாரு அதைத் தான்டா ஏத்துக்க முடியல. அப்படியே உடம்பெல்லாம் எரியுது. அத்தனைப் பேர் முன்னாடி அசிங்கப் படுத்தினவனுங்களை ஒண்ணுமே பண்ணாமல் விட்டுட்டோம்.”
“அந்த அளவுக்கு அவனை பிரைன் வாஷ் பண்ணிட்டாப்பா. ஒரு நல்ல குடும்பப் பொண்ணா இருந்தா, நம்ம இருக்கும் போதே அவன் கூட ஒரே ரூம்ல இருப்பாளா? இதுல இருந்தே தெரியல அவள் எப்படின்னு.”
“ஆமா. அவள் அகம்பன நல்லா லாக் பண்ணி வச்சிருக்கா. நான்தான் இதுல இருந்து அவரைக் காப்பாத்தணும்.”
அனுசியாவின் விஷப் பேச்சை நம்பிய கற்பகம், “உன்னை நம்பித் தான்மா இருக்கேன். அவன் இப்படி எல்லாம் பண்றான்னு வேண்டாம்னு சொல்லிடாத. உன்ன மாதிரி ஒரு பொண்ணு தான் என் மகனுக்குப் பொருத்தமா இருப்பா.” எனக் கசிந்துருகிட, அவர் கைப்பற்றினாள்.
“யார் என்ன சொன்னாலும் உங்க பையனை விட்டுட மாட்டேன் ஆன்ட்டி. தப்புப் பண்றது யாரு, என்னோட அகம்பன் தான. எவ்ளோ தப்புப் பண்ணாலும் மனசார ஏத்துப்பேன். அவளை இந்த வீட்டை விட்டு அனுப்பிட்டு உங்க மருமகளா உங்க பையன் கூட வாழ்வேன்.”
“இது போதும்டா எனக்கு. எங்க இருந்தோ வந்து என் பையனை ராஜ்ஜியம் பண்ணிக்கிட்டு இருக்கா. யாருகிட்ட என்ன பேசுனாலும் என்கிட்டக் கோபமா ஒரு வார்த்தை பேசமாட்டான். இன்னைக்கு என்னை, அவள் முன்னாடி கண்டபடி பேசுறான். இதெல்லாம் பார்க்கும்போது ரொம்ப வலிக்குது.”
“ரிலாக்ஸ் ஆன்ட்டி. நீங்க உங்க உடம்பைக் கெடுத்துக்காதீங்க. நான் எதுக்காக இருக்கேன்? அவளோட உண்மையான முகத்தை அகம்பனுக்குக் காட்டி இங்க இருந்து ஓட ஓட விரட்டுறேன். அதுக்கு நீங்க எல்லாரும் எனக்குத் துணையா இருந்தால் போதும்.” என்றதும் அவளுக்கு ஆதரவுக் கொடியைத் தூக்கினார்கள் மூவரும்.
“இப்போதைக்கு அவசரப்படக் கூடாது. தனியா நம்ம கைல சிக்கட்டும், அப்புறம் பார்த்துக்கலாம்.”
உண்மைக்கும், போலிக்கும் வித்தியாசம் அறியாது மூவரும் இவள் கூட்டணிக்கு ஒத்துழைக்க, என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இப்போதே வகுத்துக் கொண்டாள். மதுணிகாவிற்குப் பின்னால் அசுரன் இருப்பதை அறிந்தும், முட்டாள்தனமாகத் திட்டம் தீட்டியவள் மூக்குடைந்த சூர்ப்பனையாக நிற்கப் போகிறாள்.
***
இரவு உணவிற்காக அவளோடு வந்தவன் அனுவைக் கண்டு முறைக்க, “சாப்பிட வாங்க.” முகம் கனிந்து அவனை அழைத்தாள்.
“என் வீட்ல உட்கார்ந்துட்டு என்னைச் சாப்பிடக் கூப்பிடுறியா?”
“யார் யாரோ உட்காரும்போது இவளுக்கு என்னடா? சின்ன வயசுல இருந்தே இந்த வீட்டுக்கு வந்துட்டுப் போயிட்டு இருக்காள். செய்யக் கூடாத தப்பு செஞ்சிட்டு இருக்கற உனக்காகக் காத்திருக்காள்.”
“இன்ட்ரஸ்டிங் ம்மா”
“இப்ப உனக்கு நக்கலாய் தான்டா தெரியும்.”
“அஃப்கோர்ஸ் ஆதி.”
“இவன் அவளோட கூத்தடிக்கிறதா இருந்தா, எப்படி வேணா கூத்தடிச்சுக்கச் சொல்லு. என் முன்னாடி மட்டும் வர வேண்டாம்.”
“அப்பா…”
“சுத்தமா பிடிக்கல அகம்பா.”
“நீ உட்கார்ந்து சாப்பிடு அகா…” என்றதும் அவளை முறைக்க, “எனக்குப் பசிக்கல, நீ கூப்பிட்டன்னு தான் வந்தேன்.” முகம் குன்றிக் கூறினாள்.
“எனக்கும் பசிக்கல, வா போகலாம்.”
“இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல அகம்பா.”
“நீங்க பண்றது மட்டும் நல்லா இருக்காம்மா. இப்படித்தான் மூஞ்சிக்கு நேராய் பேசுவாங்களா? அதுவும் சாப்பிட வரும்போது…”
“இவ விஷயத்துல நாங்க இப்படித்தான் நடந்துப்போம். பேசக் கூடாதுன்னா கூட்டிட்டு வராத.”
“ஆதி… திஸ் இஸ் யுவர் லிமிட்!”
“கோபப்படாத…” அவன் கைப்பிடித்துக் கட்டுப்படுத்தியவள், “அவங்களுக்குப் பிடிக்கலைன்னா விலகி இருக்கறதுதான் நல்லது. இப்ப நீ போர்ஸ் பண்ணி என்ன பண்ணாலும் அந்தக் கோபம் என் மேல தான் திரும்பும். கொஞ்சம் அவங்களுக்கும் டைம் கொடு அகா. பர்ஸ்ட் நீ உட்காரு.” என இருக்கையில் அமர வைத்தாள்.
முதல்முறையாக, நம் நாயகன் பொறுமை எனும் கடலில் மூழ்கி இருக்கிறான். இந்த மாற்றம் அவளுக்காக என்பதை உணராது ஜெயித்த மிதப்பில் சிரித்தாள் அனு. சிறு நம்பிக்கை பிறந்தது அவன் குடும்பத்தார்களுக்கு. முகம் கடுகடுக்கச் சாப்பிடத் தொடங்கினான். அமைதியாக வெளியேறி இருக்கையில் அமர்ந்து கொண்டாள் மதுணிகா.
தன்னவளின் வார்த்தைக்காகக் கடமைக்கென்று உண்டவன் எழ, “என்னடா, அதுக்குள்ள எந்திரிச்சிட்ட. இன்னும் ரெண்டு தோசை சாப்பிடு.” என்றார் கற்பகம்.
“உங்க அன்புல வயிறும், மனசும் நிறைஞ்சுருச்சு.” எனக் கைகளைக் கழுவிக் கொண்டு வந்த அகம்பன் உணவுத் தட்டோடு அவளை நோக்கி நகர, அனைவரின் பார்வையும் அவனைப் பின்தொடர்ந்தது.
தன்னவனைக் கண்டதும் எழ முயன்றவளைக் கைகாட்டி அமரச் சொன்னவன், “உனக்குப் பசிக்குதா, இல்லையான்னு கூடப் புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு இங்க இருக்கறவங்க மாதிரி நானும் மிருகம் இல்ல. உன் வயிறு நிறையாம என் வயிறு நிறையாது.” என்ற வார்த்தை யாவும் அடங்காத கொதிப்பைக் கொடுத்தது நால்வருக்கு.
அவர்கள் காதுபடப் பேசியவன் அவர்கள் பக்கம் திரும்பி, “இனி ஒரு தடவை இந்த மாதிரி நடந்துச்சுன்னா, நான் நானா இருக்க மாட்டேன். எனக்கு இருக்கற உரிமை இவளுக்கும் இருக்கு. இவளுக்கு மட்டும் தான் இருக்கு. உங்களுக்கு நான் வேணுமா, வேணாமான்னு நீங்க தான் முடிவு பண்ணனும்.” என்றவன் தொடையில் கை வைத்த மதுணிகா அழுத்தம் கொடுக்க, கடுமையான தன் முகத்தை உடனே மாற்றிக் கொண்டான்.
“ப்ளீஸ்”
“ஒன்னும் இல்லடி!”
“பிரச்சினை வேண்டாம்.”
“எனக்கு நீ வேணுமே!”
“சரி விடு.”
“ப்ச்! கண்டதையும் பேசிட்டு இருக்காம சாப்பிடு.”
அடிக்கவும், அதிகாரம் செய்யவும் மட்டுமே பழகிய அவன் விரல்கள், அன்போடு உணவை எடுத்து அவள் வாயில் திணிக்க, மனம் நிறைந்தது வாங்கியவளுக்கு. சட்டென்று கண்கள் கலங்கிவிட்டது. யார் இருக்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் அவள் நெற்றியில் முத்தமிட்டவன், “நான் பார்த்துக்கிறேன்டி. நீ நிம்மதியா சாப்பிடு.” கனிந்து கூறியவனை வாழ்க்கைத் துணையாக அடைந்ததில் பெருமிதம் கொண்டது மதுணியின் மனது.
அவளைச் சாப்பிட விடாமல் சதி செய்த நால்வருக்கும், சாப்பாடு இறங்காமல் சதியானது. நால்வரின் கண்ணிற்கும் வேறு வேறு விதமாகத் தெரிந்தான் அகம்பன். குடும்பத்தார்களுக்கு வந்த சிறு நம்பிக்கையும் உடைந்தது. பெரும் போராட்டம் நடத்த வேண்டும் என்று ஆயாசமாகப் பெருமூச்சு விட்டார்கள்.
“அகா…”
“ம்ம்!”
“நீ இங்க எப்படி இருப்பியோ அப்படியே இரு. கமல் நிறையச் சொல்லி உசுப்பி விட்டுட்டான். உன்ன அந்த மாதிரிப் பார்க்கணும்னு ஆசையா இருக்கு.”
“அவ்ளோ தானடி, காட்டிட்டால் போச்சு.”
முழு உணவையும் ஊட்டி முடித்துவிட்டு, “அப்பா…” மிடுக்காக அழைக்க, ஏதேதோ சிந்தனையில் அமர்ந்து கொண்டிருந்தவர் போதை தெளிந்து, “சொ…சொல்லுப்பா” என்றார்.
“அடுத்த வாரம் உங்களுக்குப் பிறந்தநாள் வருதுல்ல.”
“ஆ…ஆமா”
“ம்ம், எப்பவும் போல இல்லாம இந்தப் பிறந்தநாள் இன்னும் கிராண்டா நடக்கணும். அதுக்கான எல்லா ஏற்பாட்டையும் ஆதி பண்ணுவான். கட்சி ஆளுங்க எல்லாருக்கும் தகவல் சொல்லிடுங்க.” என்றதும் அரைகுறையாகத் தலையாட்ட,
“பிசினஸ் ரிலேட்டடா இருக்கற எல்லாரையும் இன்வைட் பண்ணுடா. அதோட பங்க்ஷன் நடக்குறதுக்கான எல்லா ஏற்பாட்டையும் பாரு.” என்றான்.
“பண்ணிடலாம் அகம்பா”
“உள்ளூர் நியூஸ் பேப்பர்ல இருந்து, வெளியூர் நியூஸ் பேப்பர் வரைக்கும் நம்ம நியூஸ் வரணும். கட்சி சார்பா பொதுமக்களுக்கு அன்னதானம் பண்ண ஏற்பாடு பண்ணுங்க. அது போக, ரத்த தானம் அது இதுன்னு இந்த மக்கள் எதைச் செஞ்சா ஓடி வருவாங்களோ, அதை விளம்பரத்துக்குப் பண்ணுங்க.”
‘அடப்பாவி! விளம்பரத்துக்கா? எல்லா அரசியல்வாதியும் இதுக்குத்தான் பண்றிங்களோ… உங்களையும் நம்பி ஒரு கூட்டம் சேருது பாரு.’ என்ற ரியாக்ஷனில் வாய் பிளந்தாள் அகம்பனின் ஆருயிர் காதலி மதுணிகா.
***
இரண்டு மாதமாகப் பார்க்காத வேலைகளை எல்லாம் ஒரே இரவில் பார்க்க முடிவெடுத்து விட்டான் அகம்பன் திவஜ். தன்னறைக்கு வந்து மடிக்கணினி எடுத்தவன் தான், அவள் பக்கம் திரும்பவே இல்லை. பலத்த யோசனையில் அமர்ந்திருந்தவள் ஒரு முடிவெடுத்து அவன் முன்பு நின்றாள்.
“அகா…”
“கொஞ்சம் வேலையா இருக்கேன்டி. தூக்கம் வந்தா தூங்கு.”
“உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.”
“சொல்லு!” என்றான் அவளைப் பார்க்காமல்.
“கோபப்படக் கூடாது.”
“அது நீ சொல்றதைப் பொறுத்தது!”
“ப்ச்! சொல்றதுக்கு முன்னாடியே இப்படிச் சொன்னா எப்படி?”
“சீக்கிரம் சொல்லு. எனக்கு நிறைய வேலை இருக்கு. நாளைக்குக் காலைல முக்கியமான மீட்டிங் ஒன்னு இருக்கு. அப்பா கூட நானும் போகணும்.”
“நான் தனியா இருக்கணுமா?”
“நம்ம வீட்ல இருக்க என்ன பயம்?”
“நீ இல்லாம எப்படி…” என்றதும் மடிக்கணினியில் இருந்த பார்வையை அவள் மீது மாற்றியவன், “எப்பவும் நான் உன் கூட இருக்க முடியாது. நீ ஒன்னும் குழந்தை கிடையாது. எல்லா சிட்டுவேஷனையும் நீதான் ஹேண்டில் பண்ணனும். அவ்ளோ பெரிய ஹாஸ்பிடலை ரன் பண்ணிட்டு இருந்த உனக்கு இங்க இருக்கறவங்களைச் சமாளிக்கிறதா கஷ்டம்.” என்று விட்டு மீண்டும் தன் கவனத்தைக் கணினி மீது திருப்பிக் கொண்டான்.
“சரி. நான் சொல்ல வந்ததைச் சொல்லவா?”
“அடியே! கொல்லப் போறேன் இப்ப உன்ன.”
அவன் பக்கத்தில் அமர்ந்தவள், அவன் கைக்குள் கை நுழைத்துத் தோள் மீது சாய்ந்து கொண்டாள். விஷயம் பெரிதென்பதைக் கண்டு கொண்டவன் தீவிரமாக வேலையைக் கவனித்துக் கொண்டிருக்க, “என்னதான் நம்ம லவ் பண்ணாலும், கல்யாணம் ஆகாம ஒண்ணா இருக்கிறது தப்பு தான. நமக்குள்ள திட்டம் போட்டு எதுவும் நடக்கலைனாலும் இப்போ உங்க வீட்ல இருக்கோம். பெரியவங்க இருக்காங்க. ஒரே ரூம்ல இருக்கிறது அவங்களுக்கும் சங்கடமா இருக்கும். எல்லாம் சரியாகிற வரைக்கும் நான்…” பேசிக் கொண்டிருந்தவள் அவனது அனல் பார்வையில் வாயை மூடினாள்.
“நமக்கு எப்பவோ கல்யாணம் ஆயிடுச்சு. நம்ப முடியலன்னா கழுத்துல இருக்கற செயினைப் பாரு.”
“அது நமக்குள்ள. ஊருக்கு முன்னாடி முறைப்படி ஆகணும்ல.”
“மீதியைச் சொல்லிடு!”
“தனி ரூம்ல இருந்துக்கட்டுமா?”
திக்கித் திணறித் தன் எண்ணத்தைச் சொல்லியவளின் உள்ளங்கை வேர்த்தது. பயத்தின் உச்சத்தில் இருந்தவள், அவன் கோபம் உச்சத்தைத் தொட்டு விடக்கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டாள்.
“அவ்ளோ தானடி, இருந்துக்க…”
“நிஜமாவா!” அதிர்ச்சியில் வாய் பிளந்தாள்.
“ஆமாடி!”
“ஐயோ! என்னால நம்பவே முடியல. கோபப்பட்டுத் திட்டுவன்னு நினைச்சேன்.”
“இதுல என்னடி இருக்கு? உனக்கு ஓகேன்னா தனியா இருந்துக்க.”
அவன் கன்னத்தில் முத்தமிட்டவள் இன்பம் பொங்கக் கழுத்தில் கைகோர்த்து, “சோ ஸ்வீட் அகா…” என்றதும், “யூ ஆல்சோ” என்றான்.
சம்மதம் சொன்னவனைச் சமாதானம் செய்வதாக எண்ணி, “தனியா இருக்கப் போறனே தவிர, நமக்குள்ள டிஸ்டன்ஸ் வராது. நான் அடிக்கடி இங்க வந்துட்டுப் போறேன்.” கொஞ்சிக் கூறினாள்.
“ம்ம்” பலமாகத் தலையாட்டினான்.
“அச்சச்சோ! என்னால நம்பவே முடியல. உன்னை யோசிக்காமல் முடிவெடுத்துட்டன்னு தப்பா நினைக்கக் கூடாது.”
“ச்சீ ச்சீ…”
“கல்யாணம் ஆகாம ஒண்ணா இருக்கக் கூடாது தான?”
“ஆமா ஆமா, இருக்கக் கூடாது.”
“ம்ம். உன்னை எல்லாரும் தப்பாப் பேசுவாங்கல்ல.”
“தப்புத் தப்பாப் பேசுவாங்க!”
“சமத்தா தனித் தனி ரூம்ல இருந்துட்டு லவ் பண்ணலாமா?”
“பண்ணலாம் டி!”
“உனக்கு ஒன்னும் கோபம் இல்லையே…”
“இதுக்குப் போய் யாராவது கோவப்படுவாங்களா?”
நான்கைந்து முத்தங்களை, “நச்! நச்!” சத்தம் வரக் கொடுத்து விட்டு, “நீ வேலையப் பாரு. குட் நைட் ஆர்மி.” என நகர,
“பக்கத்து ரூம்ல தங்கிக்க.” என்றான்.
“அப்போதான் அடிக்கடி நம்ம பார்த்துக்க வசதியா இருக்கும்ல.” பல்லை இளித்து அறையை விட்டு வெளியேறினாள்.
அவன் சொன்ன அறைக்கு வந்தவளுக்கு அவனை விட்டுப் பிரிந்தது வலித்தாலும், இதுதான் சரி என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டாள். தன் எண்ணத்தைச் சொன்னதுமே சரி என்று தலையாட்டியவனை எண்ணி மகிழ்ந்தவளின் உள் மனது,
‘அவன் சட்டுன்னு சரின்னு சொல்ற ஆள் இல்லயே…’ உசுப்பிவிட்டது.
அதன்பின் தான் அவன் சம்மதத்திற்குப் பின் இருக்கும் அர்த்தத்தை ஆராயத் தொடங்கினாள். எத்தனைத் தூரம் மண்டையைப் போட்டுக் குடைந்தாலும் சரியான பதில் கிடைக்கவில்லை. அவனிடமே கேட்டு விடலாம் என்று அறையைத் திறந்தவள்,
“உடனே ஓகே சொன்னதுக்குப் பின்னாடி வேற எந்த ரீசனும் இல்லையே.” சந்தேகத்துடன் கேட்டாள்.
வந்த சிரிப்பைத் தனக்குள் அடக்கிக்கொண்டு, “நிறைய வேலை இருக்குடி. தொல்லை பண்ணாமல் போய் தூங்கு.” விரட்டி விட்டான்.
சந்தேகப்பட்ட மனத்தைக் கடிந்து விரட்டி விட்டவள் நிம்மதியாக உறங்கினாள். ஆழ்ந்த நித்திரையில் இருந்தவள், தன் உடல் மீது கனம் ஏறுவதை உணர்ந்து கண்களைச் சுருக்கினாள். சுகமான நித்திரை, உடனே கண் திறக்க விடவில்லை. உடலை இறுக்கியது அவளுக்கு அனுபவப்பட்ட கை. அதுவரை என்னவோ என்று தூக்கத்தோடு போராடிக் கொண்டிருந்தவள் திடுக்கென்று விழி திறக்க, அவள் உடல் உரசக் கட்டியணைத்துப் படுத்திருந்தான் அகம்பன் திவஜ்.
கண்கள் விரிந்து மிச்சமிருந்த தூக்கத்தை விரட்டி விட்டவள் ஒன்றும் புரியாமல் விழிக்க, “ஒரே ரூம்ல ஒண்ணா இருந்தால் தான்டி தப்பு. உன் ரூம்ல ஒரு நாள், என் ரூம்ல ஒரு நாள்னு மாத்தி மாத்தி இருக்கலாம்.” குறும்போடு காதில் கிசுகிசுக்க, தலையில் அடித்துக் கொள்ளாத குறை அவளுக்கு.
“உன்னப் போய் நம்புனேன் பாரு”
“என் செல்லம் ஆசைப்பட்டதைத் தான செஞ்சிருக்கேன்.”
“போடா தள்ளி…”
“அப்படியெல்லாம் சொல்லக் கூடாது.” கொஞ்சிக் கொண்டு அவள் மீது படுத்தவன், “உன்னப் பக்கத்துல வச்சுக்கிட்டுத் தள்ளி இருக்க முடியாது. வேணும்னா சொல்லு, விடிஞ்சதும் தாலி கட்டிடுறேன். அது கூட உன்னோட மனத்திருப்திக்கு. என்னைப் பொறுத்த வரைக்கும், இந்தச் செயின் உன் கழுத்துல இருக்குற வரைக்கும் இதுதான் தாலி. ஊருக்காக, உறவுக்காக கண்டபடி செலவு பண்ணி உன் கழுத்துல இதைப் போடல. மனசார, உச்சபட்ச உணர்வுக்குக் கட்டுப்பட்டு என் தீண்டல் உன்னை நோகடிச்சிடக் கூடாதுன்னு போட்டேன். தாலியை விட ரொம்ப உயர்ந்தது இதுதான்…” என அவன் அணிவித்த செயினில் முத்தமிட்டான்.
அவன் எண்ணத்தை அவளும் ஏற்றுக்கொண்டு தானே, ஒவ்வொரு முறையும் அவன் தொடுகைக்குச் சம்மதித்துத் திகட்டாத இன்பத்தைக் கொடுக்கிறாள். தனி அறைக்கு வந்ததெல்லாம் அவன் மரியாதை கெட்டுவிடக் கூடாது என்பதற்காக. அவன் பெற்றோர்களுக்கு மதிப்புக் கொடுக்க.
அவன் வார்த்தையை ஏற்றுக் கொள்வது போல், முதுகோடு கை நுழைத்துப் பின்னந்தலை முடியை இறுக்கமாகப் பிடிக்க, “லவ் பண்ணலாமா?” மூச்சுக்காற்றை அவள் காதுக்குள் அனுப்பிக் கிசுகிசுத்தான்.
“நான் லவ் பண்ணப் போறேன், நீ வேடிக்கை பார்க்கப் போற.”
“ஹே!”
“ப்ச்! தள்ளுடா”
தள்ளிவிட்டுத் தன் கூந்தல் மொத்தத்தையும் இடது புறமாகச் சரித்தவள், ஒய்யாரமாக அவன் மீது ஏறி அமர்ந்தாள். இன்பத்தை வாரி வழங்கத் தயாரான தன்னவளைக் கம்பீர விழியால் பார்த்தான், இரு கைகளையும் பின்னந்தலைக்குத் தாங்கி. திடமான தேகத்தை விரல் கொண்டு தீண்டி, சிறு முடிகளை எழ வைத்தவள் முத்தத்தைப் பதித்தாள் தனக்குச் சொந்தமான தேகத்தில்.
முதல் முத்தம் தண்டுவடத்தைச் சிலிர்க்க வைக்க, அடுத்தடுத்து வந்த முத்தம் கண்மூடி ரசிக்க வைத்தது. அவள் இடையைத் தொட்டான். தன் பேச்சை மீறி நெருங்க நினைக்கும் தன்னவன் கைகளை எடுக்க, திடமான தேகத்திற்குச் சொந்தக்காரன், அவள் இழுத்த இழுப்பிற்குக் கட்டுப்பட்டுக் கைகளை மேல் உயர்த்தினான்.
“சொல் பேச்சைக் கேட்கலனா கடிச்சிருவேன்.”
எச்சரித்தவள் அதைச் செய்தும் காட்டினாள் கழுத்துச் சதைகளைக் கடித்து. சிறுவலியில் பெரும் சுகத்தை அனுபவித்தான் அகம்பன் திவஜ். கடித்த இடத்தை நாக்கால் தடவிச் சமாதானம் செய்தவள், அவன் மீது படுத்துத் தன் ஆசையெல்லாம் தீர்த்துக்கொண்டு அவனைத் துடிக்க விட்டாள்.
முத்தம் மட்டுமே அவள் வசம் இருக்க, அதற்குத்தான் திண்டாடியது அகம்பனின் நாடி. ஆண்மை கைக்குள் அடங்கிப் போனால், பெண்மையின் உணர்வுகள் வெடிக்கும். பெண்மைக்குக் கட்டுப்பட்ட ஆணின் உணர்வுகள் பேரலையில் சிக்கி அவன் கர்வத்தைத் தூண்டிவிடும். அவன் ஆண்டே பழக்கப்பட்டு, ஆளப்படுவதைக் கண்டு உச்சி குளிர்ந்து போனவன் அதற்கு மேல் பொறுக்க முடியாது அவளைக் கீழே சரித்தான்.
வீம்பு பிடித்து, மேல் ஏறி அமர முயன்றவளைக் கோழிக்குஞ்சு போல் தனக்குள் அடக்கியவன், மோகம் பொங்கிப் புருவத்தை உயர்த்தினான். அவனுக்கு மட்டும் புரியும்படி கொஞ்சினாள். காதலியின் காதல் புரிந்து கேலி பொங்கக் கீழ் உதட்டைக் கடிக்க, எப்போதும் போல் அவன் தேவைக்கு அவளானாள்.
இத்தனை நேரம் தன்னைச் சோதித்தவளைத் துடிக்க விட்டான் காதல் அஸ்திரத்தைக் கையாண்டு. அவன் தண்டுவடம் சிலிர்த்தது போல், அவன் தீண்டலில் மொத்த உடலும் சிலிர்த்தது. குளிர்ந்த அறையிலும் வேர்த்தது இருவருக்கும். மல்லிகைப் பூ தர வேண்டிய போதையை அவளது வேர்வை கொடுக்க, நனைந்த முதுகைத் தடவிக் குளித்தாள் மதுணிகா.
முகம் சிவக்க முத்தத்தைத் தாங்கி, அவனையும் தாங்கியவளைப் பூவாகத் தீண்டினான். அவள் சத்தங்கள் அவனுக்குள் நுழைய, அவன் அழுத்தங்கள் அவளைச் சென்றடைந்தது. சுகமாகக் காதலித்துச் சோர்வாக உறங்கினார்கள்.
அவன் முதலில் உறங்க, அவனை ரசித்துக் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு உறங்கினாள். விடியற்காலை எழுந்த அகம்பன், தன்னவளின் தூக்கம் கலையாமல் முத்தம் வைத்து வெளியேறினான். தன்னைத் தயார் செய்து விட்டு அவள் அறை வந்தான். வாய் பிளந்தாள் அவன் தோற்றத்தில். இதமாகச் சிரித்துக் கட்டியணைத்து விலகியவன்,
“மீட்டிங் முடிச்சிட்டு வர மதியம் ஆகும். சாப்பாடு இங்கயே வரும். சாப்பிட்டுட்டு வெயிட் பண்ணு, லஞ்சுக்கு ஜாயின் பண்ணிக்கிறேன்.” எனக் கிளம்பிட,
“ரொம்ப அழகா இருக்க அகா… உன்ன பர்ஸ்ட் டைம் கோட் சூட்ல பார்க்கிறேன். என் கண்ணே பட்டுடுச்சு.” திருஷ்டி கழித்து வழி அனுப்பி வைத்தாள்.
ஜோடியாக இறங்கி வருபவர்களைக் கண்டு அனு கருக, கற்பகத்தின் முகம் கடுகடுத்தது. அவனுக்காகக் காத்திருந்த கமல் காலை வணக்கத்தை வைத்துவிட்டு,
“ஷார்ப்பா டென் ஓ கிளாக் மீட்டிங் ஸ்டார்ட் ஆகிடும் சார். ஃபைல் எல்லாமே இதுல இருக்கு. லாஸ்ட் டைம் சைன் பண்ண பேப்பர்ஸ்.” அனைத்தையும் கொடுத்துவிட்டு விரைப்பாக நிற்க,
‘கொடுத்த காசுக்கு மேல கூவுறான்’ தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
‘சிரிடி, நல்லா சிரி… இன்னும் கொஞ்ச நேரத்துல நீ என்ன ஆகுறன்னு பாரு. இவன் திரும்பி வரும்போது நீ இங்க இருக்க மாட்டடி.’ மனத்தோடு கருகினாள் அனுசியா.
யாரும் அறியவில்லை என்ற திமிரோடு நின்றவள் அறியவில்லை, அசுரனின் கண் பார்வையில் தான் அவள் இருப்பதை.

