Loading

12 – காற்றிலாடும் காதல்கள் 

“ஒரு நிமிஷம் கயல் வந்துடறேன்.“ என அழைப்பை ஏற்றபடி வேறுபக்கம் நடந்தாள். 

“எதுக்கு மறுபடியும் கூப்பிட்ட?” இறுகிய குரலில் கேட்டாள். 

“நான் ரெண்டு நாள்ல அங்க வரேன். அந்த ஊரப்பத்தி ஏற்கனவே விசாரிக்க ஆரம்பிச்சி தகவல் வந்துட்டு தான் இருக்கு. உன்கூட நேத்து ரெண்டு பேர் இருந்தானுங்களே. அவனுங்க உனக்கு என்ன வேணும்?”

“அது உனக்கு தேவையில்லாத விஷயம்.”

“அதெப்படி தேவையில்லாம போகும்? அவனுங்க தானே என் ஆளப்பிடிச்சி வச்சிருக்கானுங்க. தவிர அந்த ஊர்ல முக்கியபுள்ளி, அதுல ஒருத்தனோட அப்பா ஏற்கனவே அந்த குகைய திறக்க முயற்சி பண்ணதுல ஒரு குடும்பமே காலியாமே. அவனுங்க ஒண்ணா சுத்தறது ஆச்சரியம் தான்.“

“வழவழன்னு பேசாம நேரா விஷயத்துக்கு வா” என அதிகாரமாகக் கேட்டாள். 

“என்ன மேடம் அதிகாரம் பலமா இருக்கு? நீ அடக்கி வாசிக்கணும் இப்பவும் எப்பவும். புரியுதா? இப்ப நான் சொல்றத மட்டும் கேளு.” அந்தப் பக்கம் ஆதர்ஷும் அதிகாரமாகப் பேசினான். 

மிருணாளினி கண்களைச் சுழற்றி, இமைமூடித் திறந்து உள்ளுக்குள் கனன்றுக் கொண்டிருக்கும் கோபத்தைக் கட்டுப்படுத்தியபடி அமைதியாகயிருந்தாள். 

“உனக்கு இந்த திமிரு மட்டும் கொறையறதே இல்ல. அதுக்கு ஒரு முடிவு கட்டறேன் இந்த தடவ. நாளைக்கு உமேஷ் அங்க வரான் அவன இந்திரன் வீட்ல தங்க வை. புரியுதா?” எனச் சொன்னதும் அவள் திடுக்கிட்டு, “அங்க எதுக்கு தங்கவைக்கணும்?” எனக் கேட்டாள். 

“அவன் வீட்டுக்கு பக்கம் தான் கோவில் இருக்கு. அதுக்கு தான். இன்னொரு டீம் ஒரு வாரத்துல வரும். அவங்கள நீ இருக்க வீட்ல தங்கவச்சிக்கணும்.” என ஆதர்ஷ் கூறியதும் மிருணாளினி வெடிக்கத் தொடங்கினாள். 

“உன் மனசுல என்ன நெனச்சிட்டு இருக்க நீ? இதென்ன சிட்டியா? இது கிராமம். சொந்தக்காரன் வந்து இருந்தாலே ஆயிரம் கேள்வி வரும் இதுல யாருன்னு தெரியாதவங்கள எல்லாம் இங்க தங்கவைக்க முடியாது. எவனும் இங்க வரக்கூடாது. எவனாவது வந்தான் அவ்ளோ தான் சொல்லிட்டேன்.”

“என்ன குரல் ஒசருது? நீ இருக்கற நிலமை மறந்து போச்சா?”

“மிஞ்சி மிஞ்சி போனா கொல்லுவ அதான..  கொன்னுக்க உன் மெரட்டலுக்கு எல்லாம் நான் ஆடமுடியாது. என் குடும்பத்து ஆளுங்க எல்லாரையும் கொன்னுக்க. யார் யார் எங்க இருக்காங்கன்னு லொகேஷன் அனுப்பவா? கொல்ல உனக்கு ஈசியா இருக்கும்.” கோபமாக மொழிந்தாள். 

ஆதர்ஷ் அருகில் ஒருவன், “அவ செத்தா யாருக்கு என்ன லாபம் ? அவ இருந்தா தான் நமக்கு காசு வரும். தணிஞ்சி போ.” என யாரோ கூறுவதுக் கேட்டது. 

அதைக் கேட்டதும் மிருணாளினி விழிகளில் ஏளனப் புன்னகை வந்தமர்ந்தது. 

“இங்க பாரு மிருணா.. நீ இப்படி பேசினா நஷ்டம் ரெண்டு பக்கமும் தான். சரி நான் யாரையும் அனுப்பல. ஆனா உமேஷ் அங்க வந்துட்டு இருக்கான். அவன மட்டும் தங்க வச்சிக்க.”  ஆதர்ஷ் குரல் பணிவாக ஒலித்தது. 

“யாருமே இங்க வரக்கூடாது. உன் ஆளு ஃபோன் என்கிட்ட தான் இருக்கு. என்னை வாட்ச் பண்ண போட்ட இன்னொரு ஆளும் இன்னும் என் வீட்ட தான் சுத்திட்டு இருக்கான். இதுக்கு மேல எவனும் புதுசா இங்க வரக்கூடாது. உமேஷ் வந்தா ஊருக்கு வெளிய தங்கிக்கட்டும். நான் நேரடியா யாரையும் பாக்கவும் மாட்டேன், பேசவும் மாட்டேன்.“

“சரி யாரும் நேரடியா உன்கிட்ட வரமாட்டாங்க. ஆனா உன்னை தனியாவும் விடமுடியாது. அதுக்கு நான் ஏற்பாடு பண்ணிக்கறேன். நீ இந்த ப்ராஜெக்ட் மட்டும் செஞ்சி குடு. உன் அக்காவோட முக்கியமான பொருள் என்கிட்ட இருக்கு அத உனக்கு குடுக்கறேன்.“

“என்ன இருக்கு?”அசிரத்தையாகக் கேட்டாள். 

“உங்களோட தொப்புள் கொடி… ரெண்டு பேரும் ஒண்ணாவே இருந்தீங்க இப்ப அவ இல்லாம நீ மட்டும் தனியா இருக்கல்ல. உனக்கு துணையா உங்களோட தொப்புள் கொடிய நான் தரேன்.  இப்ப சொல்லு நீ இந்த ப்ராஜக்ட் பண்றியா?” ஆதர்ஷ் கேட்டுவிட்டுச் சிரித்தான். 

இப்படியொரு விஷயத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை என்பது அதிர்ந்திருந்த அவளது முகத்தில் நன்றாகத் தெரிந்தது. அவள் முகத்தைக் கண்ட கயல்விழி, “என்னாச்சி அண்ணி? யாரு ஃபோன்ல? ஏன் உங்க முகம் இப்படி வாடிப்போச்சி?”அவளின் அருகே வந்துக் கேட்டாள். 

“ஃப்ரெண்ட்.. கிருபா பத்தி கேட்டா அதான்.. நான் பேசிட்டு வரேன் நீ உள்ள போ கயல்.” என அவளை உள்ளே அனுப்பிவிட்டு ஆதர்ஷிடம் பேசினாள். 

“அது உன் கைக்கு எப்படி வந்துச்சு?”

“எப்படியோ வந்துச்சு இப்ப அது தேவயில்ல. ஆனா உனக்கு இது ரொம்பவும் தேவையான பொருள்ன்னு எனக்கு நல்லா தெரியும். இப்ப சொல்லு ஒத்துக்கறியா?” எனக் கேலியுடன் கேட்டான். 

“நீ என்கிட்ட குடுப்பன்னு எப்படி நம்புறது?”

“கண்டிப்பா குடுத்துருவேன். என் தம்பி மேல சத்தியம்.“

“அவன் தான் ஏற்கனவே செத்துட்டானே ஆதர்ஷ். செத்தவன் மேல நீ சத்யம் பண்றத எப்புடி நம்புவேன்?” இப்போது அவள் கேலியாகக் கேட்டாள். 

“மிருணா” என கத்தியவன் தன்னை நிதானித்துக் கொண்டு, “அவன் எனக்கு எந்தளவுக்கு முக்கியமுன்னு உனக்கு நல்லா தெரியும்.  தெரிஞ்சும் இப்படி கேக்கற நீ?” எனக் கோபத்தோடுக் கேட்டான். 

“எனக்கும் கிருபா எவ்ளோ முக்கியம் அவ சம்பந்தப்பட்ட எல்லாம் எவ்ளோ முக்கியமின்னு உனக்கு தெரியும். தெரிஞ்சும் அதுல பந்தயம் வைக்கற நீ.” வார்த்தைகளைக் கத்தியாக்கிப் பேசினாள். 

“பாண்ட் போட்டுக்கலாம். என் சீஃப் முன்னாடி. இந்த ப்ராஜக்ட் நீ செஞ்சிக் குடுத்ததும் உன் கைல இந்த செயின் இருக்கும்.” எனக் கூறினான். 

கொள்ளைக்கூட்டத்தார்கள் எப்போதும் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் கடமையை முதன்மையாகக் கொண்டவர்கள். இல்லையென்றால் அவர்கள் உயிர் பறந்துவிடும் என்ற பயம் அவர்கள் சொல்லைக் காப்பாற்றவைத்தது.  

அவனுக்கு மேல் இருப்பவன் முன்னால் கையெழுத்து போட்டுத் தருகிறான் என்றால் நிச்சயம் செய்தே ஆகவேண்டும். அதனால் மிருணாளினி சரியென்றுக் கூறினாள். 

ஆனால் இது மீண்டும் மீண்டும் தொடராமல் இருக்கவும் வழி காணவேண்டும் எனத் தீர்மானித்தாள். அதற்கான வேலையிலும் இன்றே இறங்கவேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள். 

மனதிற்கு அவள் செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் வரிசையாகக் குறித்துக் கொண்டு, எது? எப்போது? யாரை வைத்து? என்ற விஷயங்களும் மனதில் வரைந்துக் கொண்டாள். கீதன் தன்னைக் கண்டுக்கொண்டது அவளைத் திடுக்கிட செய்தாலும் அவனையும் அவளின் திட்டத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டுமென்ற ஆர்வம் எழுந்தது. 

“ஸ்மார்ட் மேன். உஷாரா இருக்கணும்.” எனத் தனக்குத் தானே பேசிக்கொண்டு அந்தத் தொலைபேசியை அணைத்துவிட்டு உள்ளே சென்றாள். 

கயல்விழி கூடத்தில் இருந்தப் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தாள். 

“இவளும் அவ அண்ணன் மாறி ஷார்ப் அஹ் இருப்பாளா? பேசி பாப்போம்.” என முணுமுணுத்தபடி கயல்விழி அருகே வந்தமர்ந்தாள். 

“பேசிட்டீங்களா. மறுபடியும் அழுதீங்களா?” சிவந்திருந்த அவளது விழிகளைப் பார்த்துக் கேட்டாள்.

“லேசா கண் கலங்கிச்சி. என் கூடவே இருந்தவ இப்ப இல்ல. அத என்னால ஏத்துக்கவும் முடியல ஆனா நிஜம் அதானே.” எனத் தலையைப் பிடித்தபடிக் குனிந்துத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள். 

“அது ரொம்ப கஷ்டம் தான். அப்பா இறந்து பல வருஷம் ஆச்சி ஆனாலும் அம்மா தினம் அவர நெனைச்சி கண்கலங்குவாங்க. நீங்க தமிழ் பி.எச்.டின்னு சொன்னதும் அவங்க கண்ணு கலங்குச்சி. அப்பாவும் பி.எச்.டி படிச்சிட்டு இருந்தாராம். அவர் புக்ஸ் எல்லாமே பத்திரமா இன்னும் அலமாரி போட்டு வச்சிருக்காங்க. கீதன் தான் அந்த மலைக்குகை பத்தி தெரிஞ்சிக்க அந்த புக் எல்லாம் எடுத்து பாப்பான். வேண்டாத வேலை தான் பாத்துட்டு சுத்தறான். அவனால பிரச்சனை வராம இருக்கணும்ன்னு சாமிய கும்பிட்டுட்டு இருக்கேன்.” கயல்விழி பேசிக்கொண்டே போக, மிருணாளினி வேண்டிய விஷயங்களை நன்றாக உள்வாங்கிக் கொண்டாள். 

“உங்கப்பா என்ன தீஸிஸ் எடுத்திருந்தாரு?”

“அதுலாம் எனக்கு தெரியாது. அம்மா தான் பூட்டி வச்சிருக்காங்க. அவங்கள தான் கேக்கணும்.“

“சரி அவங்கள கேக்கறேன். உங்கப்பா நெறைய இடத்த கண்டுப்பிடிச்சி இருக்காராம் தாத்தா சொன்னாரு. பழைய கல்வெட்டு தமிழ் எல்லாம் அந்த அளவுக்கு அவருக்கு தெரியும்ன்னு பெருமையா சொல்வாரு.”

“ஆமா. அப்பாவுக்கு தமிழ் ஆர்வம் அதிகம் தான். ஆனா அது அவரோட உயிரையும் எடுத்ததில்லாம, இந்திரன் மாமா குடும்பத்தையும் எடுத்துட்டு போயிரிச்சி. அவர் தனியாளா நிக்க எங்கப்பா தானே காரணம். இத சொல்லி சொல்லி அண்ணே சின்ன வயசுல பொலம்பும். அன்னிக்கி ராத்திரி என்ன நடந்ததுன்னு அம்மாவ பல நூறு தடவ கேட்டும், அவங்க வாயவே அதப்பத்தி மட்டும் தொறக்கவே இல்ல. அதுல அண்ணனுக்கும், அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை கூட வரும்.” என கயல்விழி கூறியதும் மிருணாளினிக்கும் மனதில் சுருக்கென்று தைத்தது. 

“சில விஷயங்கள் நம்மள மீறி போயிடுது கயல். நாம தீவிரம் காட்டற விஷயத்துல நமக்கு கண்ட்ரோல் இருக்காது.” எனக்கூறி வேறுபக்கமாகத் திரும்பிக் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“மனுஷங்கன்னா கண்ட்ரோல் இருக்கணும் அண்ணி. அது இல்லாம போறதால அவங்களுக்கு மட்டுமில்ல அவங்கல சுத்தி இருக்கறவங்களுக்கும் கஷ்டம் தான். அதுவும் அவங்க போயிருவாங்க, இங்க இருக்கறவங்க தானே அல்லல்படறோம். ஒரு விஷயத்த சமாளிக்கற அளவுக்கு நமக்கு திறமை இருக்கான்னு மொத சுயபரிசோதனை பண்ணிக்கணும். ரிஸ்க் எடுக்கறேன்னு எல்லாரையும் நரகத்துல தள்ளக்கூடாது. சரி தானே அண்ணி?”

“ரொம்ப சரி கயல். சமாளிக்கற திறமை வேணும். இல்லையா வளத்துக்கணும் அப்பறம் அந்த வேலைய கைல எடுக்கணும்.  நான் கடைசியா சொன்ன விஷயம் தான் எப்பவும் எல்லாருக்கும் சாதகமா நடக்கறதில்ல.  சரி ஐஸ்கிரீம் சாப்பிடரியா? நேத்து வாங்கிட்டு வந்தேன்.” என எழுந்தாள். 

“சளி பிடிச்சிட்டா கஷ்டம் அண்ணி.” யோசனையாகக் கூறினாள். 

“சுடுதண்ணி குடிச்சா ஒண்ணும் ஆகாது. இரு எடுத்துட்டு வரேன்.” என உள்ளே சென்று ஃப்ரீஸரில் இருந்து இரண்டு கோன் ஐஸ்கிரீம் எடுத்து வந்தாள். 

இருவரும் மற்ற விஷயங்களைப் பேசியபடி இருக்க, சிறிது நேரத்தில் மாலாவும், வெள்ளைச்சாமி தாத்தாவும் அங்கே வந்தனர். மாலாவின் கையில் இருந்த பையில்… 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்