11 – காற்றிலாடும் காதல்கள்
“திருட்டு பயலயா உன் அக்கா காதலிச்சா?” இந்திரன் அதிர்வோடுக் கேட்டான்.
“அவன் அங்க வேலை செஞ்சிட்டு இருந்தான். சுவடிகள எல்லாம் பாதுகாக்க சில மூலிகை திரவம் மேல பூசி காயவச்சி மறுபடியும் லாக்கர் ரூம்ல வச்சிடுவாங்க. அந்த நேரத்துல அவன் அந்த 2 ஏடு மட்டும் கொண்டு வந்தான். நான் அத அப்படியே காப்பி பண்ணிட்டு குடுத்துடடேன். ஒரு சுவடிய படிச்சி புரிஞ்சி ஒரு இடத்த கண்டுபிடிக்கணும்ன்னு எனக்கு தீராத தேடல் அப்ப இருந்தது. அதுக்காக பல வருஷ தமிழ் மொழிய தேடித் தேடி கத்துகிட்டேன். நெறைய பழைய தமிழ் அகராதி, குறிப்பு சொற்கள் தொகுப்புகள் எல்லாம் வாங்கி வச்சிருக்கேன். அத வச்சு ஒரு சுவடிய முழுசா இன்னிக்கி தமிழுக்கு பொருள் விளங்க வைக்கமுடியும். நானும் அதான் பண்ணேன். என் அதீத ஆர்வம் 20 நாள்ல அந்த சுவடில சொல்லியிருந்த குறிப்பு மொழிய புரிஞ்சி டீகோட் பண்ணி சொன்னேன்.”
அந்த சமயம் மாலாவிடமிருந்து கீதனுக்கு அழைப்பு வந்தது.
“எங்க இருக்கீங்க கீதன்?”
“இங்க தென்னந்தோப்புல தான் இருக்கோம் ம்மா.”
“ஆசாரிகிட்ட நகை செய்ய சொல்லணும். அவள அழைச்சிட்டு வாங்க.. அவளுக்கு பிடிச்ச டிசைன் சொல்லட்டும்.”
“நீங்க போட்டோ வாங்கி வச்சிக்கோங்க அவ இன்னும் அழுதுட்டு இருக்கா. அப்பறம் பாக்கட்டும்.” என கீதன் அவளைப் பார்த்தபடிக் கூறினான்.
“அப்படியா சரி.. கவனமா பாத்துக்கோங்க.. நானும் மாமாவும் அங்க வரோம்.. இந்திரன் அங்கயா இருக்கான்?”
“ஆமாம்மா.. அவன அனுப்பவா?”
“ஆமா டா.. அனுப்பிவிடு ஆசாரிய கொண்டு போய் விடணும். கயல் அங்க வரா. அந்த பொண்ணோட கொஞ்ச நேரம்இருக்கட்டும். நாங்க கொஞ்ச நேரம் கழிச்சி வரோம். உனக்கு வேற வேலை இருக்காப்பா?”
“இல்லைம்மா.. சாயிந்தரம் தான் பந்தல் போடற ஆளுங்கள பாக்க போகணும்.”
“சரிப்பா.. கவனமா இருங்க.” எனக் கூறி வைத்துவிட்டார்.
“இந்திரா, ஆசாரிய கொண்டு போய் விடணுமாம். நீ கெளம்பு. கயல் வந்துட்டு இருக்காலாம்.“
“மிச்ச கதை?”
“நீ வந்த அப்பறம் ஒண்ணாவே கேக்கலாம். அம்மாவும், வெள்ளச்சாமி தாத்தாவும் இங்க வராங்கலாம். அவங்க வர்றவரை இங்க இருக்கேன். அவனுக்கு போதை எப்ப தெளியும்?” குடோனில் கட்டிவைத்திருப்பவனைக் பற்றிக் கேட்டான்.
“ராத்திரி வரைக்கும் தெளியாது. நடுசாமத்துல தான் முழிப்பு வரும். அப்ப நான் பாத்துக்கறேன்.” என இந்திரன் கூறிவிட்டு மிருணாளினி அருகே வந்தான்.
“இங்க பாரு புள்ள.. நீ நெறைய படிச்சிருக்க ஆனாலும் சில சந்தர்பத்துல நம்ம மூளை வேலை செய்யாம போகும். அப்படி ஒரு சந்தர்பத்துல தான் நீ உன்கூட ஒட்டி பொறந்தவள இழந்திருக்க.. அதே தப்ப மறுபடியும் பண்ணாத. மனசுல வஞ்சத்துக்கு எடம் குடுக்கக்கூடாது, ஆதீதமான ஆர்வத்துக்கும் எடம் குடுக்கக்கூடாது. ரெண்டும் நம்மள தான் நட்டாத்துல விட்டுப்புடும். சூதானமா இருந்துக்க. மறுபடியும் பிரச்சனைல சிக்காம இருக்கறது எப்படின்னு மட்டும் யோசி. பழி தீக்கறேன்னு போனா எதுவுமே நமக்கு மிஞ்சாது. நீ என்னைய அண்ணேன்னு கூப்பிடறது எங்கூட பொறந்தவ கூப்பிடறாப்புல இருக்கு. அந்த பாசத்துல சொல்றேன். தப்பான முடிவு எடுத்துராத. எதுன்னாலும் நாம ஒண்ணா இருந்து பாத்துக்கலாம். புரியுதா?”எனக் கேட்டான்.
அவள் எதுவும் பேசாமல் அவன் தோளில் சாய்ந்துக் கொண்டு இரு துளி கண்ணீர் சிந்தினாள்.
“நாம தோள் குடுத்தா தள்ளிவிடரா அவன் தோளுல மட்டும் சட்டு சட்டுனு சாஞ்சிக்கறா..” வேண்டுமென்றே சத்தமாகக் கூறினான்.
மற்ற இருவரும் அதைக் கண்டு கொள்ளாமல் இருக்கவும் அவன் கடுப்பாகி, “நீ மொத கெளம்பு. உன் பாசமலர் படத்த அப்பறம் வந்து ஓட்டுவியாம்.“ என இந்திரனை விரட்டினான்.
“நீ ஏண்டா என்னைய வெரட்டுற? கயல் வரட்டும் அப்பறம் கெளம்பறேன். நீ எந்தங்கச்சிய பாக்கற பார்வையும் சரியில்ல, பேசற பேச்சும் சரியில்ல.”
“ஆமா கடிச்சி தின்னுடுவேன் பாரு இவள.. அசால்ட்டா ஒரு கவர்ன்மெண்ட் லாக்கர்ல இருந்த பொருளை திருடி, அத படிச்சி அந்த எடத்த கண்டுப்பிடிச்சி, அங்க போய் பொதையல எடுத்திருக்கா உன் பாசமலர். ஒரு கொள்ளக்கார கூட்டமே இவள தேடி வந்திருக்கு. அப்ப எவ்ளோ பெரிய தில்லாலங்கடி இவ-ன்னு யோசி மச்சான். நம்ம வெள்ளைச்சாமி தாத்தாவுக்கு இப்படி ஒரு கொள்ளைக்கார பேத்தி! இதுல நீ சிவாஜி கணக்கா அறிவுரை வேற சொல்லிட்டு இருக்க.. இவ மனசுல ஏற்கனவே திட்டம் போட்டுட்டு தான் இப்ப நம்மகிட்ட இதெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கா.. கதை சொல்லி நம்மகிட்ட அனுதாபம் வாங்கி அவ காரியத்த சாதிக்க பாக்கறா மச்சான்.” என கீதன் அவள் திட்டத்தைப் போட்டுடைத்தான்.
அதைக் கேட்டதும் மிருணாளினி ஒரு நொடி திகைத்தாலும் மறுநொடியே முகத்தை சீராக்கி அவனைப் பார்த்தாள்.
“நான் இப்ப நாடகம் போடறதாவே இருக்கட்டும் கீதன். நீ எதுக்கு நாடகம் ஆடிட்டு இருக்க உன் ஊருக்குள்ள இத்தன மாசமா? மலைக்குகைய பத்தி அத்தன ஆராய்ச்சி செஞ்சி வச்சிருக்க. வர்ற அமாவாசைல குகைய உடைச்சிட்டாவது உள்ள போகணும்னு வெறியோட இருக்க போலயே போன தடவ உங்கப்பா இந்திரண்ணா குடும்பத்த கொன்னாரு, இந்த தடவ நீ யார கொல்லப்போற?” என அவன் முகத்தைக் கூர்ந்துப் பார்த்தபடிக் கேட்டாள்.
கீதன் ஒரு நொடி திடுக்கிட்டு பின் இயல்பாகச் சிரித்தபடி,“என் அப்பா சாவுக்கு காரணம் என்னன்னு கண்டுப்பிடிக்க போறேன். அந்த எல்லைக்கோவிலுக்கும், குகைக்கும் நடுவுல இருக்க மர்மத்த உடைச்சி இது தேவர்கள் சக்தி இல்ல. மனுஷனோட யுக்தி தான்னு நிரூபிக்க போறேன்.” எனக் கூறிவிட்டு ஒரு மரத்தில் சாய்ந்து நின்றான்.
“டேய் கீதா.. என்னடா இது? என்னென்னவோ பேசற? அந்த குகைப்பத்தியும், எல்லைக்கோவில் பத்தியும் எதுவும் ஆராய்ச்சி பண்ணக் கூடாதுன்னு ஊர் கட்டுப்பாடு விதிச்சிருக்கு டா. அத மீறி நீ இப்படி செஞ்சா என்னடா அர்த்தம்?” இந்திரன் அதிர்வோடுக் கேட்டான்.
“என்னால முடியல மச்சான். யாருமே காரணத்த சொல்லமாட்டேங்கறாங்க. அப்பா டைரிய படிச்சத்துல இருந்து அவரோட தோல்வியா அந்த குகை தான் இருந்திருக்கு. அதுவே தான் எமனாவும் மாறிடிச்சி. அதுல இருக்கற யுக்திய உடைச்சா தான் எனக்கு மனசு அமைதியாகும். அதுக்கு மிருணாளினி உதவி எனக்கு வேணும்.” என கீதன் அவளைத் தீவிரமாகப் பார்த்தான்.
“டேய் என்னடா? ஆளாளுக்கு செத்தவங்களுக்கு பரிகாரம் செய்யணும்ன்னு போறீங்க. உசுரோடா இருக்கறவங்களுக்கு மொத நிம்மதிய குடுங்கடா. எங்கள கொல்லாம கொல்ல தான் இப்படி திரியறீங்களா நீங்க?” என இந்திரன் திட்டினான்.
“இங்க பாரு இந்து.. இது என் பல வருஷ லட்சியம். இத செய்யாம நான் விடமாட்டேன். இதுல எனக்கு ஒரு மனநிம்மதி கெடைக்கற மாதிரி அவளுக்கும் ஒரு மனநிம்மதி கெடைக்கும். அவ அக்காவ கொன்னவன பழி வாங்கவும் இது நல்ல சந்தர்ப்பம். நீ ஆசாரிய விட்டுட்டு வா பொறுமையா பேசலாம். இப்ப கயல் வந்துட்டா. எனத் தோப்பின் முகப்பில் தங்கை வருவதைப் பார்த்தபடிக் கூறினான்.
“வா கயல்.. நடந்தா வந்த?” அக்கறையாகக் கேட்டான் கீதன்.
“ஆமா என்ன இன்னிக்கி அக்கறை எல்லாம் பலமா இருக்கு? என்ன விஷயம் டா?” சந்தேகமாகப் பார்த்தபடிக் கேட்டாள்.
“இன்னும் பத்து நாள்ல கல்யாணமாகி போகபோறியே அதான் அக்கறையா கேட்டேன். சரி வேணாம்னா விடு. மிருவுக்கு நீ மசாலா டீ போட கத்துக்குடு, நான் பக்கத்துல அன்வர் கடை வரைக்கும் போயிட்டு வரேன்.”
“அன்வர் அண்ணே கடைதிறப்பு எப்ப?”
“நாளைக்கு தான். பொருள் எல்லாம் எடுத்து வச்சிட்டு இருந்தான். பாத்துட்டு வரேன்.” எனக் கூறிவிட்டு இந்திரனைக் கையோடு அழைத்துக் கொண்டுச் சென்றான்.
“நீ போய் விட்டுட்டு வா டா. நான் அம்மா வர்ற வரைக்கும் இங்க இருக்கேன்.” சாதாரணமாகக் கூறினான்.
“டேய் கீதா, வேணாம் டா இந்த வெஷப்பரீட்ச. ஃபோன்ல பேசினவன் பேச்சே சரியில்ல. அந்த புள்ளைக்கு புத்தி சொல்லாம நீயும் கூட சேர்ந்துட்டு என்ன என்னமோ சொல்ற. மறுபடியும் ஊருக்குள்ள அந்த குகையால உசுரு போகக்கூடாது டா. நீயோ அந்த புள்ளையோ யாருக்கு எது ஆனாலும் உங்க குடும்பம் தாங்காது டா. அந்த புள்ள வீட்ல இன்னும் ஒரு புள்ளைய பறிக்கொடுத்த துக்கம் கூட ஆறியிருக்காது, அதுக்குள்ள இன்னொன்ன தாங்கமாட்டாங்க டா. உனக்கு ஒன்னுனா அம்மா ஆச்சி தாத்தா எல்லாம் என்ன ஆவங்களோ? என்னாலயே தாங்க முடியாது டா. சொன்னா கேளுடா. போனவங்க போயிட்டாங்க. இப்ப நம்ம கூட இருக்கறவங்கள பாக்கலாம்டா கீதா.” இந்திரன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
கீதன் அவன் கண்களில் தெரியும் அன்பின் தவிப்பைக் கவனித்துவிட்டு, “உனக்கு தெரியாம நாங்க எதுவும் பண்ணமாட்டோம்டா இந்து.. ஆனா இது பண்ணா தான் என்னால ஓரளவு நிம்மதியா வாழ முடியும்டா. புரிஞ்சிக்க. என் அப்பாவால தான் உனக்கு குடும்பமே இல்லாம போச்சின்னு எல்லாரும் பேசறப்ப எனக்கு நெஞ்சு அறுக்குது டா. நிஜம் தெரியாம நான் என்ன பேசறது? மறுக்கவா? இல்ல ஆமான்னு சொல்லவா.? என் நிலமைய யோசிச்சி பாரு மச்சான்.” இப்படி கீதன் கூறவும் இந்திரன் அமைதியாக இருந்தான்.
“இங்க பாரு மச்சான், பல தடவ நீ தகப்பன் சூட்ட எனக்கு குடுத்திருக்க. இந்த பௌர்ணமில கூட சாப்பாடு போட்டு எனை தட்டி தூங்கவச்சியே. இப்டிலாம் நீ பண்றப்பா உனக்கு அநியாயம் எங்கப்பானால நடந்திருக்குன்னு சொல்றத என்னால ஜீரணிக்க முடியல. அம்மாவும் வாய தொறக்கமாட்டாங்க. இன்னும் சொல்லப்போனா எல்லாம் முடிஞ்ச அப்பறம் தான் அவங்க அந்த எடத்துக்கு போய் இருக்கணும். அதான் எதுவுமே சொல்லமுடியாம அவங்களும் தவிக்கறாங்க. அன்னிக்கி என்ன நடந்துச்சின்னு தெரிஞ்சிக்கணும்டா மச்சான்.” தவிப்போடு கீதன் சொன்னதைக் கேட்டுக் கொண்டவன், கீதனை அணைத்துக் கொண்டான்.
“நான் அந்த பெருச விட்டுட்டு வர்ற வரைக்கும் எனக்கு தெரியாம எதுவும் நீங்க பேசக்கூடாது பண்ணக்கூடாது. அன்வர் கடைல இரு. நான் வந்துடறேன்.” எனக் கூறிச்சென்றான்.
இங்கே மிருணாளினி கீதன் வசமிருக்கும் தகவல்களை அவனாக காட்டும் முன் முழுதாக அறிந்துக் கொள்ள வேண்டுமென்ற தவிப்பில் இருந்தாள். கயல்விழி ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாலும் அவளிடம் ஏதேனும் தகவல் பெற முடியுமா என்று சிந்தித்த வேலையில் மீண்டும் ஆதர்ஷ் அடியாளின் மொபைல் அழைத்தது.