
சிரிப்பும் வராது… அழுகையும் வராத நிலையில் நின்று கொண்டு இருந்தாள் இசையரசி.
அவள் உள்ளம் சத்தமில்லாத கல்லறை ஆனது.
அவள் இதய தந்தியின் ஓசையை, இல்லாமல் ஆக்கிவிட்டான் அந்த வம்சி.
அவன் இந்த இசைக்கூடத்திற்கு வந்து சென்று சுமார் ஒரு வாரம் கடந்து சென்றுவிட்டது.
ஆனால் அவன் ஏற்படுத்திவிட்டு போன விளைவுகள் இன்னும் மறையவில்லை.
அவன் மிரட்டி சென்ற பிறகு அவளுடைய வகுப்பிற்கு ஒருவர் கூட வரவில்லை.
அவள் வாழ்வின் ஆதாரமே இசை தான்… அதை குலைத்து கொடூர சிரிப்பு சிரித்தவனை கொல்லும் ஆத்திரத்தில் இருந்தாள் அவள்.
“என்ன மேடம் என்னை கொல்ல ப்ளான் பண்றீங்க போல” என்ற குரலில் சட்டென்று திரும்பினாள்…
யாரை இவ்வளவு நேரம் மனதிற்குள் கருவி கொண்டு இருந்தாளோ அவன் தான் இப்போது முன்னே வந்து நிற்கின்றான்.
“அடையாறு பக்கமா ஒரு சின்ன பஞ்சாயத்து இருந்துச்சு.. அதை முடிச்சுட்டு கிளம்பும் போது உன் நியாபகம் வந்துச்சு…. அதான் இங்கே வந்தேன்” என்று சொன்னவனை வெட்டும் பார்வை பார்த்தாள்.
“பரவாயில்லையே ஒரே மிரட்டல்லேயே உன் சிஷ்யர்களாம் பறந்து போயிட்டாங்க… ஆமாம் இப்போ பூவாக்கு என்ன பண்ணுவ?” என்றவன் கேட்க
“என்னமோ பண்ணுறேன்… உனக்கு என்ன?” என்றவளின் வார்த்தையில் அலட்சியம் நிறைந்து இருந்தது.
“நான் வேணா உனக்கு ஒரு ஆஃபர் தரேன்…. என் தங்கச்சிக்கு மியூசிக்னா பிடிக்கும். அவளுக்கு பர்சனல் டீச்சரா ஆகிடு. நான் ஃபீஸ் நீ எதிர்பார்க்கிறதை விட அதிகமாவே கொடுக்கிறேன்” என்றவனின் கோரிக்கைக்கு அவள் செவி மடுக்கவில்லை.
“நீ பணக்காரனா இரு… ரவுடியா இரு… எதுவா இருந்தாலும் பரவாயில்லை வம்சி. நீ என்னோட பயத்தை கொன்னுட்ட. நான் இப்போ வெறுமையிலே இருக்கேன்…
வெறுமையோட இருக்கிற ஒரு பெண்ணை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.”
வம்சி ஒரு அடி அவளை நெருங்கினான். அவள் கால்கள் தன்னால் பின்னோக்கி சென்றது.
“என்னாலே முடியுமே” என்றவனின் குரலில் அத்தனை அழுத்தம் இருந்தது.
“எப்படி” என கேட்க
“அதிரன்!” என்றான் வேகமாக.
அந்த பெயரை கேட்ட அடுத்த நொடியே இசையின் இதயம் இரண்டாக பிளந்தது.
“உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டவளின் குரலில் ஆயிரம் வாட்ஸ் மின்சார பாய்ச்சல்.
“அதிரனை என்னடா பண்ண?” என்றவளின் குரலில் ஒரே நேரத்தில் பயமும், கோபமும் கலந்து இருந்தது.
“இதுவரை எதுவும் பண்ணலை… ஆனால் நீ முரண்டு பிடிச்சா அவனோட கை கால்னு ஒன்னு ஒன்னா வரிசையா எடுக்க வேண்டியதா இருக்கும்” என்றவனின் மிரட்டலில் அவளின் குரல் சிதறிய கண்ணாடி துண்டுகள் போல உடைந்தது.
“இப்போ சொல்லு… என் தங்கச்சிக்கு மியூசிக் சொல்லி கொடுப்பலே” என்றவனின் கேள்விக்கு இம்முறை முடியாது என மறுக்க முடியவில்லை அவளால்.
இம்முறையும் வம்சியிடம் தோற்று நின்றதை எண்ணி அவளுக்குள் பழி உணர்வு துளிர்க்க துவங்கியது.
இம்முறை நான் டயலாக் எல்லாம் பேச போறது இல்லை.. சைலண்டா இருந்து உன்னை சாய்க்க போறேன் என்று உள்ளுக்குள் நினைத்தவள்
சரி என்று தலையசைத்தாள்.
அந்த முரடனை வஞ்சிக்க பிறந்த அரசி இவள்.

