
- இசை
அது காற்றின் சிருங்கார சிணுங்கல்…
அந்த சிணுங்கலை கற்று கொள்ள தான் அங்கே கூடி இருந்தனர் பலர்.
அவர்களுக்கு நடுவே நடுநாயகமாக கையில் வீணையுடன் அமர்ந்து இருந்தாள் இசையரசி.
இந்த இசைக்கூடம் அவள் ஒருத்தியாய் கட்டி எழுப்பியது.
அவளுக்கு என பெற்றவர்கள் யாரும் இல்லை. இவள் சிறுவயதிலேயே அவர்கள் ஒரு விபத்தில் இறைவனடி சேர்ந்துவிட சொந்தத்தின் நிழலில் வளர்ந்தாள்.
கல்லூரி படிப்பை முடித்ததும்
தனியாய் அவள் வேர்கள் தரையில் ஊன்றி பரவ சென்னைக்கு வந்துவிட்டாள்.
அப்போதில் இருந்து அவள் வாழ்க்கை ஒரே நேர்க்கோட்டில் சீராக சென்று கொண்டு இருந்தது.
ஆனால் இன்றோ அவள் மனதில் அமைதி இல்லை.
அந்த அமைதியின்மை அவள் தாளத்தை தப்ப வைத்தது. பாட்டின் ஸ்ருதியிலும் தடுமாற்றம்.
“டீச்சர்… தாளம் தவறிடுச்சு…” என்று ஒரு மாணவன் பயந்து சொன்னான்.
இசையரசி தன்னை கட்டுப்படுத்தி சிரித்தாள்..
“பரவாயில்லை… மறுபடியும் தொடங்கலாம்…”என்றவளோ மீண்டும் பாட்டை பாட துவங்கினாள்.
எங்கிருந்து வந்தாயடா
என்னை பாடு படுத்த -நீ
என்னை பாடு படுத்த
எங்கு கொண்டு சென்றாயட
என்னை தேடி எடுக்க நான்
என்னை தேடி எடுக்க
இன்பம் துன்பம் துன்பம் இன்பம்
இன்பம் என்று நீ சுகம் ரெண்டும் கொடுக்க
சுகம் ரெண்டும் குடுக்க
நீ …
எங்கிருந்து வந்தாயடா
என்னை பாடு படுத்த
அவள் குரலில் இருந்து கசிந்து வந்த அந்த கானம் அங்கு இருப்பவர்களை மயக்கியது.
அந்த நேரம்…
வெளியே காரின் இரைச்சல்.
அந்த ஒலி அவளின் நெஞ்சிலே புயலை கிளப்பியது.
“அவன் தானா…?” என்ற பயத்தோடு மாடியில் இருந்து எட்டி பார்த்தாள்.
காரின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் அவன்.
வம்சி…
கருப்பு நிறத்தில் ஃபார்மல் சட்டையும் க்ரீம் கலரில் பேண்டும் அணிந்து கண்களில் கூலர்ஸ் போட்டு இருந்தான்.
பார்ப்பதற்கு ஹீரோ மெட்டிரியலாக இருந்தான்.
ஆனால் அரசியின் பார்வையில் மட்டும் அவன் அக்மார்க் வில்லனாக தெரிந்தான்.
மாடிப்படிகளில் தடதடவென ஏறி வந்தவன் “சாரி டீச்சர் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்று சொன்னபடி உள்ளே நுழைந்தவனை அங்கே இருந்த மாணக்கர் கூட்டம் பயத்துடன் பார்த்தது.
அந்த ஏரியாவின் மிக பிரபலமான ரவுடியான இவனை கண்டு கொண்டவர்களோ டீச்சர் என்று குழப்பத்துடன் கூப்பிட்டனர்.
“இன்னைக்கு க்ளாஸ் முடிஞ்சுடுச்சு எல்லாரும் கிளம்பலாம் என இசை சொல்ல வம்சியிடமிருந்து” கோபம் வெளிப்பட்டது.
“என்ன டீச்சர் இப்போ தானே கிளாஸ்க்கு வந்தேன்… அதுக்குள்ளே முடிஞ்சுடுச்சுனு சொல்றீங்க…
யாரும் எழுந்து போகக்கூடாது… உட்காருங்க” என்றவன் கட்டளையில் எழுந்து செல்ல முனைந்தவர்கள் அனைவரும் பட்டென்று அமர்ந்தனர்.
“டீச்சர் இப்போ சொல்லி கொடுங்க உங்க பாட்டை” என்றவன் அவளுக்கு முன்னே வந்து அமர வீணையின் மேல் ஒரு இறந்த இலை விழுந்தது.
அதன் சத்தமே அந்த அறையில் எதிரொலித்தது.
“டிரெயினிங்க ஆரம்பிங்க டீச்சர்” என்றவன் சொல்ல விருப்பமே இல்லை என்றாலும் அவனுக்கு சொல்லி தர வேண்டிய தன் நிலையை எண்ணி மனம் கசந்தாள்.
இசையரசி விரல்கள் வீணையைத் தொட்ட அந்த நொடியில்
அவள் இதய தாளம் தவறியது.
வம்சி இன்னும் அருகே நெருங்கினான்.
அவன் குரல் மெதுவாக இருந்தது,
ஆனால் அதில் கட்டுப்பாடு
“அட பாவம்…
கை நடுங்குதா டீச்சர்?” அவன் ஒரு சிரிப்பு சிரித்தான்.
ஆனால் அது சிரிப்பு இல்லை.
சிதைந்த நிழல்.
மாணவர்கள் யாரும் சுவாசிக்க கூட தயங்கினர்.
அவள் தாளம் பிடிக்க முயன்றாள்…
ஸ்ருதி விலகியது.
அவளின் கலங்கிய நிலை கண்டு வம்சி கை தட்டினான்.
அந்த சத்தம் அந்த அறையின் காற்றையே கிழித்தது.
“இது தான் உன்னோட இசையா?
இல்ல பயமா?” என்றவன் கேட்டது அரசியை கீறியது.
தன்னை கட்டுப்படுத்தி கொண்டு நிமிர்ந்தவள் கண்களில் அந்த நொடி ஒரு தீப்பொறி பிறந்தது.
“பயம் இல்ல… இசை மேலே இருக்கிற மரியாதை…”
அவள் மெதுவாக சொன்னாள்.
அந்த வார்த்தை வம்சியின் புருவத்தை உயர்த்த வைத்தது.
“உனக்கு இப்போ என்ன தான் வேணும் அப்பட்டமான கோபம்” இசையிடம்.
“இதுவரை உன்னோட வாழ்க்கை
நேர்க்கோட்டா போயிட்டு இருந்துச்சு டீச்சர்… அதுல ஒரு ‘பிரேக்’ வேணாமா…அதுக்குத்தான் நான் வந்து இருக்கேன்” என்றவன் என்ன நினைத்தானோ அதுவரை குரலில் இருந்த கடுமையை விலக்கி மெதுவாக சொன்னான்.
“நீ மட்டும் என் தம்பி மேலே கேஸ் கொடுத்ததுக்கு சாரி சொல்லு.. நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்” என்றான்.
“அது கனவுலே கூட நடக்காது. உன் தம்பி தப்பு பண்ணான், நான் கேஸ் கொடுத்தேன்… என்னாலே சாரிலாம் சொல்ல முடியாது” என்று இசை நிமிர்வாக சொல்ல வம்சியின் முகத்தில் வேட்டையின் ரத்த நிழல்.
கோபமாக அருகில் இருந்த நாற்காலியை தட்டி புரட்டினான். அதன் சத்தம் அந்த அறையை கிழித்து விட்டது.
குழந்தைகள் நடுங்கினர்.
இசையரசியின் உள்ளே ஏதோ உடைந்தது.
ஆனால் அவள் முகத்தில் பயம் இல்லை.
அது ஒரு கோபம். ஒரு எதிர்ப்பு.
அவள் மெதுவாக வீணையை விட்டு எழுந்தாள்.
“இது என் இடம், வம்சி…
என் இசை…
என் மாணவர்கள்
இங்க உன் அச்சுறுத்தலுக்கு இடமில்லை.” அவள் குரல் கோபத்தில் எரிந்தது.
வம்சியின் முகம் கோபத்தில் இருள.
அவன் மெதுவாக முன் வந்து
அவளின் கையை பிடித்தான்.
அந்த பிடியில் வலி.
“பயம் இல்லன்னு சொல்றவங்க கிட்டே தான் எனக்கு விளையாடி பார்க்கணும்னு தோணும்… உன் கிட்டே இன்னும் அதிகமா நெருங்கணும் போல இருக்கே…” என்றவனின் அப்பட்டமான மிரட்டல் இசையரசியை நிமிர வைத்தது.
“நான் நெருப்பு… நெருங்கணும்னு நினைச்ச எரிஞ்சு சாம்பல் ஆகிடுவ” என்றாள் கோபமாக.
“ஹா ஹா டீச்சர் நல்லா டயலாக் பேசுறியே நீ…” என்றவன் திரும்பி அந்த மாணவர்களை பார்த்தான்.
“இது நான் மட்டும் பாட்டு கத்துக்க வரப் போற இடம்… நாளையிலே இருந்து யாரும் பாட்டு கிளாஸ்க்கு வரக்கூடாது” என்று அவன் சொல்ல அங்கே இருந்த மாணவர்கள் பயத்தில் வேகமாய் சரி என்று தலையாட்டினர்.
இசையோ மீட்டப்பட்ட வீணை தந்தியின் கம்பியாய் அதிர்ந்துப் போனாள்.
அவளின் வாழ்வாதாரமே இசை தான். அதிலேயே அவன் கை வைத்துவிட தவித்துப் போய் வம்சியை பார்த்தாள்.
ஆனால் அவன் விழிகளில் கொஞ்சம் கூட இரக்கம் இல்லை… மாறாக வேட்டையாட துடிக்கும் புலியின் ரத்த நிழல் அவன் கண்களில்.

