மாறா 2
பழைய வீட்டிலிருந்த எல்லாப் பொருட்களையும், டெம்போவில் ஏற்றிக்கொண்டு வந்து விட்டான் வெற்றிமாறன். அவன் பொருட்களையெல்லாம் தனியாளாக உள்ளே வைப்பதை கண்டு அவனுக்கு உதவி செய்ய வைத்தியநாதனும் அங்கு வந்தார்.
வீட்டில் வேலையெல்லாம் முடித்து விட்டு காற்றாட வெளியே அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது தான் வண்டி வந்து நின்றதை கவனித்தார்.
டிரைவரும், வெற்றி மட்டுமே பொருட்களை உள்ளே வைத்துக் கொண்டிருப்பதை கண்டு அவர்களுக்கு உதவிடச் சென்றார்.
” கொடுப்பா! நானும் கொஞ்சத்த எடுத்துட்டு போய் உள்ளே வைக்கிறேன்.”
“வேணாம் பாட்னர் உங்களுக்கு எதுக்கு சிரமம்?” என்றான் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி.
“சும்மா வெட்டியா தான்பா படிச்ச பேப்பரை படிச்சிட்டு இருக்கேன். அதுனால எனக்கு சிரமம் இல்ல கொடு..” என அவன் கையிலிருந்த பொருட்களை வாங்கிக்கொண்டார்.
அவனும் அதிக எடையில்லாத பொருட்களை எல்லாம் அவரிடம் கொடுக்க, வாங்கி வாங்கி உள்ளே வைத்தார். கனமான பொருட்களையெல்லாம் டிரைவரும் அவனுமாக தூக்கிக்கொண்டு தாயிடம் கேட்டு அதனதன் இடத்தில் வைத்தனர்.
ஒருவழியாக ஜாமான்களை உள்ளே வைத்து விட்டு டிரைவர் கிளம்ப, அவரிடம் பேசிய பணத்தை கொடுத்துவிட்டு அனுப்பி வைத்தவன் வைத்தியை உள்ளே அழைத்து சென்றான்.
“அம்மா! பாட்னருக்கு ஒரு ஜூஸ் வித்தவுட் சுகர்..” என்று கூடத்திலிருந்து கத்திச் சொல்ல, “ஏம்பா.. நீயும்?” என பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார்.
“என்ன பண்ண பாட்னர்?உங்களுக்கு இனிப்பு கொடுத்தாலே உங்க பொண்ணு தான் ஊசியோட கண் முன்னாடி வந்து நிக்கிறாங்க! வாட் டூ டூ?” என்றான் கேலியாக..
அவரோ சலிப்பாகத் தலையட்டியவர், “தம்பி இங்க வாயேன்..” என தன் பக்கம் அழைத்தார்.
“என்ன பாட்னர்?” என அவனும் ரகசியம் கேட்பது போல அருகே சென்றான்.
“காலையில கொண்டு வந்த சக்கரை பொங்கல் இருக்கா?” எனக் ஹஸ்கி குரலில் கேட்டவரை செல்லமாக முறைத்து, “ஆனாலும் பாட்னர் உங்க பொண்ணு அவ்வளவு மிரட்டியும் உங்க வாயடங்கலையே!” என்றான் அளந்தப்பார்வையோடு.
“என்னப்பா பண்ண! இனிப்பு சாப்பிட்டு பழகின நாக்கு சட்டுனு மாத்திக்க முடியல! கண்ட்ரோல் பண்ண தான் நினைக்கிறேன் முடியலையே..” என்று உதட்டை பிதுக்க, புன்னகையுடன் இருப்பக்கமும் தலையசைத்தான்.
“கண்ட்ரோல் வேணும் பாட்னர்.. உங்க பொண்ணுக்கு நீங்க மட்டும் தான் இருக்கீங்கனு நினைச்சாலே ஆட்டோமேட்டிக்கா கண்ட்ரோல் ஆகிடும் பாட்னர்..” என அறிவுரை கூறினான்.
அவரோ, “நீங்க வேற தம்பி என் பொண்ணை நினைச்சாலே போதும் இனிப்ப பார்த்து ஊறின எச்சில் கூட வத்திப்போய்டும்..” என்றார் சிரித்தபடி, அவனும் கலகலவென சிரித்தான்.
“இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருந்துமே நீங்க பொண்ணுக்கிட்ட டிமிக்கி கொடுக்கிறீங்க!”
“அது அப்பப்ப..” என வழிந்தபடி சொல்ல, இருவரும் சிரித்தனர்.
உள்ளிருநது வந்த மதி, இருவருக்கும் ஜுஸ் எடுத்து வந்து கொடுத்தார். அவருக்கு ‘நன்றி’ உரைத்து விட்டுப் பருக ஆரம்பித்தார்.
“வீட்ல எல்லாம் நீங்க தான் தம்பி சொன்னான். உங்களுக்கு கஷ்டமா இல்லையா அண்ணா?”
” பழகிடுச்சி மா! என் மனைவி இறக்கும் போது என் பொண்ணு சின்ன வயசு. அப்ப எடுத்துக்கிட்ட வீட்டு பொறுப்பு இப்ப வரைக்கும் தொடருது. என்ன முதல்ல வேலைக்குப் போயிட்டு வீட்டு வேலையும் பார்க்கும் போது சிரமமா இருந்தது.
ஆனா, இப்ப இல்ல.. பாப்பாவ அனுப்பி வச்சிட்டாலே எனக்கு வேலை இல்ல. ரொம்பவே ப்ரீ தான். அவ வந்ததும் கொஞ்ச வேலை இருக்கும் சேர்ந்து கதை பேசியே வேலைய முடிச்சிடுவோம். அப்படியே நாட்கள் போயிடுச்சி மா..
இனி பொண்ணு கல்யாணம் பண்ணிட்டு போனதுக்கு அப்புறம் இருக்க வாழ்க்கைய நினைச்சா தான்..” என்று குரல் கமற பேசினார்.
அவரது தோளை அழுத்தியவன், “வீட்டோட மாப்பிள்ளையா பாருங்க! பொண்ணு உங்களோடவே இருப்பாங்க” என்றான் ஆறுதலாய்.
“ஏம்பா என் பொண்ணை வச்சே சமாளிக்க முடியல இதுல மாப்பிள்ளை வேறயா? என் பொண்ண ஒரு அப்பாவி கையில புடிச்சி கொடுத்துட்டு, மலேசியா, தாய்லாந்து பேங்காங்னு ஊர் சுத்தலாம் நினைக்கிறேன் பா..”
“பொதுவா வயசான காசி, ராமேஸ்வரம் தானே போவாங்க?”
“அதெல்லாம் வயசானவங்க ஆன்மீக வழியில போறவங்க பா! எனக்கு என்ன வயசாக்கிடுச்சி? சுகர் இருக்கனாலே கொஞ்சம் ஓல்டு மேன் போல தெரியிறேன். மத்தப்படி நானும் யங்பா..”
அவரை ஏற இறங்க பார்த்தவன், “சரி தான் யங் மேன்! நல்ல பிளான் தான். ஆனா, நீங்க மட்டும் போறதா பிளானா? இல்ல…” என அவரை வம்பிழுக்க..
“தம்பி” என அவனை மதி அடக்கினார்.
வைத்தியோ, “போங்க தம்பி” என வெட்கப்பட்டார்.
“இருந்தாலும் நீங்க உங்க பொண்ணுக்கு எல்லா வேலையும் சொல்லி தர்றனும் அண்ணா! போற வீட்ல பார்க்கணும் இல்லையா? பையனா எல்லாம் செய்வான், பொண்ணு தானே பொறுப்பா பார்க்கணும்..”
“பார்க்கணும் தான் மா! ஆனா டாக்டருக்கு படிக்கிறாளேனு எந்த வேலையும் செய்ய விடல, இப்போ வேலைக்கு போறானு செய்ய விடல, வரும் போதே என் பொண்ணு டயர்டா வர்றா! அவளை வேலை செய்ய சொல்ல எனக்கு மனசு இல்ல!
அப்படியே நாட்கள் ஓட்டிட்டோம். தம்பி போல வீட்டை பொறுப்பா பார்த்துக்கிற மாப்பிள்ளை என் பொண்ணுக்கு கிடைச்சா எனக்கு சந்தோசம் தான் மா” என அவர் விளையாட்டுக்கு சொல்ல, மதிக்கு சுர்ரென்று கோபம் வந்து விட்டது.
“அதெப்படி அண்ணா? பொண்ணுக்கு ஒரு வேலையும் சொல்லிக் கொடுக்காம பொறுப்பான பையன் கிடைக்கணும் சொல்றீங்க! உங்களை போலவே உங்க பொண்ணுக்கு சேவகம் பண்ண இன்னொரு பையனை தேடுறீங்களா? இது என்ன நியாயம்?
பையன் வீட்டு பொறுப்பை பார்த்துக்கணுமா? உங்க பொண்ணு ஆம்பிள பிள்ளை போல வேலைக்கு போவாளா? வீட்டை பார்த்துக்க மாட்டாளா?” எனக் கொதிக்க, வைத்தி திகைத்து போனார்.
“அம்மா! பாட்னர் விளையாட்டுக்கு தான் சொன்னார். நீ ஏன் மா சீரியஸ் எடுத்துக்கிற?” என கேட்டு பல்லைக் கடித்தான்.
“அப்படி இல்ல தம்பி. பொண்ணுன்னா
பொறுப்பா இருக்கணும் வீட்ல எல்லா வேலையும் பார்க்க தெரிஞ்சு இருக்கணும். அப்ப தான் போற வீட்ல அவ நல்லா வாழ்வா, இல்லைன்னா கஷ்டப்படுவா!
அண்ணா நீங்க உங்க பொண்ணுக்கு ஒவ்வொரு வேலையா கத்துக்கொடுங்க. அப்போ தான் அவ நீங்க நினைக்கிறது போல கஷ்டப்படாம வாழ்வா. இல்ல ஒவ்வொரு நாளும் அவ மாமியார் வாயில விழுவா..”
பையன வச்சிருக்க நானே சொல்றேன். என் புள்ள ரொம்ப நல்லவன். சொக்கத்தங்கம், பொறுப்பானாவன் தான், வீட்டு வேலை எல்லாம் பார்ப்பான். அதுக்காக உங்க பொண்ணு போல எதுவும் தெரியாத பொண்ணை எடுக்க முடியுமா? என்னால முடியாதனால தான் என் பையன பார்க்க விடறேன்.
இல்ல அவனை ஒரு வேலையும் செய்ய விட மாட்டேன் . கல்யாணத்துக்கு முன்னே பொறுப்பா பார்த்துக்கிறவன், கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்ச நிம்மதியா இருக்கணும்.
வரப்போற பொண்ணு பொறுப்பா வீட்டைப் பார்த்துக்கணும். அப்படி ஒரு பொண்ணை தான் நான் பார்ப்பேன்..” என்று அவர் நகைச்சுவையாக சொன்னதுக்கு இவர் நேரடியாக பதிலடி கொடுக்க, வைத்தியின் முகம் வாடிவிட்டது.
“ம்ம்மா.. அமைதியா இரு..” என கண்ணைக்காட்ட, அதெல்லாம் பற்றிக் கவலை இல்லை என்பது போல, “சொல்றது சொல்லிட்டேன் அப்புறம் உங்க விருப்பம் அண்ணா..” என்றார் அசட்டையாக.
வேகமாக அங்கிருந்து கிளம்ப எழுந்தவர், “பரவாயில்லப்பா.. தங்கச்சி சொல்றதும் சரி தானே..” என சங்கட்டமாக சொல்ல, மாறனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
” நான் வர்றேன் மா.. வர்றேன் தம்பி வீட்ல போட்டது போட்ட படி இருக்கு..” என்று கஷ்டப்பட்டு சிரிப்பை வரவழைத்து விட்டு சொன்னவர் வெளியே செல்ல, அவரை தொடர்ந்து வந்தவன், “சாரி பாட்னர் எங்க அம்மா அப்படி தான். பொண்ணு, பையன் பிரிச்சி பார்க்குற ஆள்! அதான் அப்படி பேசிட்டாங்க தப்பா எடுத்துக்காதீங்க..” என்று கெஞ்சுதலாக கேட்டான்.
“ஐயோ எதுக்கு தம்பி சாரிலாம்.. உங்க அம்மா உண்மைய தானே சொன்னாங்க! வீட்டுக்கு மருமகளா போற பொண்ணு பொறுப்பா இருக்கணும் இல்லையா? அதை தான் அவங்க சொன்னாங்க! என்ன என் ஒரே பொண்ணு தாயில்லாத பொண்ணுன்னு செல்லமா வேலை சொல்லாம வளர்த்துட்டேன். என்ன பண்ண போறேன் தெரியல?
மாமியார் இடத்துல இருக்க யாரும் எதிர்பார்க்க தானே செய்வாங்க. அதெல்லாம் தப்பு சொல்ல முடியாது. ம்ம்.. என் பொண்ணோட வாழ்க்கை எப்படி அமைய போவுதோ பயம் எனக்குள்ள இருக்குப்பா. நான் இன்னும் என்னலாம் அனுபவிக்க இருக்கேனோ..”
“சில் அங்கிள்! நீங்க எதிர்பார்க்கிற மாதிரி தான் மாப்பிள்ளை வருவார். உங்கப் பொண்ணை நல்லா பார்த்துப்பார். கல்யாணத்துக்கு அப்புறம் பீல் பண்ணுவீங்க! இப்படிபட்ட மாப்பிள்ளை அமைவார் தெரியாம புலம்பிட்டு இருந்தோமே!” என்று சிரிக்க, அவரும் புன்னகையுடன் விடைபெற்றார்.
உள்ளே வந்தவன் தாயை கடிந்து கொள்ள, அவரோ அசட்டை செய்து விட்டு உள்ளே சென்றார்.
இரவில் மருத்துவமனையிலிருந்து அலுப்படன் வந்த மகள் சம்ருதியை தான் பார்த்தார் வைத்தி.
முப்பது வயதாகிறது அவளுக்கு. மஞ்சள்காமாலை வந்து மனைவி இறந்து விட , இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு தனியாளாக நின்று வளர்த்தார் வைத்தியநாதன்.
மூத்தவன் சாத்விக், இளையவள் சம்ருதி. சாத்விக் இயந்திர பொறியியல் படித்து வேலைக்கு சென்றவன் வைத்தியை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டு ஒட்டும் உறவும் இல்லாமல் போய்விட்டான்.
அதன்பின் இடிந்து போய் விட்டார்..
பின், சம்ருதி தந்தையுடன் அண்ணனை சேர்த்து வைக்க எவ்வளவு போராடியும் அவர்களை இணைக்க முடியவில்லை. கோபத்தில் இருந்தவரை மனமிறங்க வைத்து ஒன்று சேர்க்க இருந்த வேளையில் அவன் விபத்தில் சிக்கி இறந்து போனான்.
மகன் இறந்த சோகத்தில் இருந்தவரை மீட்டுக் கொண்டு வந்தாள் சம்ருதி. அண்ணன் செய்த தவறை ஒரு போதும் செய்யக் கூடாது, தந்தை பார்க்கும் மாப்பிள்ளையை தான் கட்டிக்கொள்ளும் முடிவில் இருக்கும் மகளை எப்போதும் மெச்சிக்கொள்வார் வைத்தி.
அவளது பதினைந்து வருட உழைப்பு இன்று, மதுரையில் மிகப் பெரிய மருத்துவமனையில் பொதுநல மற்றும் இருதய நிபுணராக பணியாற்றி வருகிறாள். கை நிறைய சம்பாதிக்கவும் செய்கிறாள்.
மருத்துவம் படிக்கும் காலத்திலே ஒரு வேலையும் செய்ய விடாதவர் வேலைக்கு சென்று சோர்வாக வரும் மகளிடம் வேலை சொல்ல மனம் வரவில்லை அவருக்கும்.
இருக்கும் வரைக்கும் பார்ப்போம் அதன்பின் அவள் தான் வாழ வேண்டும் என்று அவளை அப்படியே வேலை சொல்லாமல் வளர்த்து விட்டார். இன்று மதி பேசியதை வைத்து இப்போது உள்ளுக்குள் பயந்து புலம்பி தவிக்கிறார்.
குளித்து முடித்து இரவு உணவை உண்ண வந்த மகளுடன் சேர்ந்து அமர்ந்தவர் தனக்கும் சேர்ந்து பரிமாறிக் கொண்டு சாப்பிட்டார்.
“அப்புறம் வைத்தி எப்படி இருந்தது உன்னுடைய டே?”
“வழக்கம் போல..” என்று சலிப்பாக சொன்னவர், இன்று நடந்ததை சொல்ல, அவளுக்கோ கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“அதென்ன வைத்தி வீட்டு வேலை செய்ய தெரியாத ஒரு பையனுக்கு நல்ல பொறுப்பான பொண்ணா கட்டி வைக்கிறாங்க? ஆனா, ஒரு வேலையும் செய்ய தெரியாத பொண்ணுக்கு பொறுப்பான பையனை கட்டித்தர மாட்டாங்களா?
இதென்ன கொடுமையா இருக்கு? பொண்ணுங்க வேலை பார்க்கவே பெத்துப் போட்டு இருக்காங்களா என்ன?” எனக் கேட்க, வைத்திக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“என்ன அமைதியா இருக்க வைத்தி பதில் சொல்லு?”
“எண்ணத்தை சொல்ல சொல்ற? அந்த காலத்துல சொல்லி வச்சிட்டாங்க பொண்ணுங்க வீட்டு வேலை பார்க்கணும் பசங்க வெளி வேலை பார்க்கணும். அதை நாம பாலோவ் பண்றோம்.
இப்போ காலம் மாறிடுச்சி அதுக்கேத்தபடி மாறினவங்களும் இருக்காங்க. சிலர் பழைய காலப்படியும் இருக்காங்க.அந்த அம்மாவை போல..” என பெருமூச்சை விட்டார்.
“நீ எந்த காலப்படி இருக்க?”
“எனக்கு தெரியல சம்மு பாப்பா.. ஆனா, நம்மல பார்த்துக்கிறதுக்காவாது சில பேசிக் திங்க்ஸ் தெரிஞ்சு வச்சக்கணும் இல்லையா? யாரையும் சார்ந்து இருக்காம நமக்கு தேவையானதை நாமலே செஞ்சிக்க சில வேலைகளை தெரிஞ்சிக்கிறது நல்லது தானே பாப்பா?” என்றார்.
“அப்போ.. பேசிக் திங்க்ஸ் தெரிஞ்சவனையே என்னை சார்ந்து இருக்காம அவனை அவனே பார்த்துக்க கூடிய ஒரு மாப்பிள்ளையா பார்த்து எனக்கு கட்டி வை! நான் என் வேலை பார்க்கிறேன் அவன், அவனோட வேலைய பார்த்துக்கட்டும் என்ன ஓகேவா?”
“அதுக்கு பருத்தி மூட்டை குடோன்லே இருக்கலாமே?” என அவளுக்கு கேட்கவே முணுமுணுத்தார்.
“யோவ் வைத்தி யாரை நீ பருத்தி மூட்டைனு சொல்ற?” என எகிறய மகளை கண்டு பயந்தபடி, “ஐயோ! பாப்பா.. உன்னை இல்ல.. பொதுவா காமெடி சொல்லுவாங்கள அதை சொன்னேன். ரெண்டு பேரும் அவங்கவங்க வேலையை பார்த்துக்கிறதுக்கு கல்யாணம் எதுக்கு பாப்பா?”
“சரிஇஇஇ ! இப்ப நீ என்ன தான் சொல்ல வர?”
“இல்ல பாப்பா! நான் என்ன சொல்ல வர்றேனா?” என்று இழுத்தவருக்கு பயப்பருந்து உள்ளே உருல, எச்சில் கூட்டி விழுங்கினார்.
“நீ கொஞ்சம் கொஞ்சமா இப்போ இருந்தே வேலைப் பார்க்க கத்துக்கணும்னு சொல்ல வர்றேன் பாப்பா! கல்யாணத்துக்கு அப்புறம் நீ கஷ்டப்பட்டாம இருப்பேல..” என்று சொல்லி முடிக்கலையிலே வியர்த்து விட்டது அவருக்கு.
அவளோ யோசனையோடு தந்தையைப் பார்த்தவள், “ஏன் திமிங்கிலம்? வேலை எல்லாம் தெரிஞ்சு வச்சிட்டு போனா மட்டும் நான் கஷ்டப்பட மாட்டேனா?” என நக்கலோடு கேட்க, அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“என்ன வைத்தி பதிலை காணோம்?”
“கல்யாணத்துக்கு அப்புறம் நீ கஷ்டப்பட மாட்ட பாப்பா..”
“அப்படியா? எப்படி சொல்ற?”
“இத்தனை வருஷம் அனுபவம் பாப்பா..” என்றவர் சாப்பிட்டத் தட்டை எடுத்துக்கொண்டு நழுவிட அவளுக்கு அவரது கூற்று மட்டுப்படவில்லை.
வெளியே வந்தவரைப் பிடித்துக்கொண்ட சம்ருதி, “வைத்தி! எனக்கு புரியல நீ என்ன சொல்ல வர்ற?” என்றாள் கேள்வியாய்.
“அது பாப்பா.. உன்னை வச்சிட்டு நான் எவ்வளவு கஷ்டப்படுறேன் எனக்கு தெரியும். அது போல உன்னை கட்டிக்க போறவன் தான் கஷ்டப்பட போறான் நீ இல்ல.. சொ… ல்…ல வா… ர்..றேன்” என்று அவள் எதையோ தேடுவதை கண்டு ஒருவொரு எழுத்தாக உச்சரித்தவர், அவள் கட்டையை தூக்கியதும் ‘விடு ஜூட்’ என ஓட ஆரம்பித்தார்.
“யோவ் கிழவா.. ஒழுங்கா நில்லு! என்னை வளர்க்கிறது கஷ்டமா இருக்குன்னு சொன்னதும் இல்லாம வர்ற போறவனுக்காக பீல் பண்றியா? இதுல உனக்கு அனுபவமா? ஓடாம நில்லு யா..” என்று இவள் துரத்திக்கொண்டு பின் சென்றாள்.
“உண்மை தான் சொல்லுறேன் பாப்பா உன்னை கட்டிக்கிட்டு அந்த ஜீவன் தான் கஷ்டப்படுனும் நீ இல்ல!” என நக்கல் செய்தவாறு வாசலுக்கு ஓட அவளோ கட்டையோடு துரத்திக்கொண்டு வந்தாள்.
“யோவ் வைத்தி.. என்ன தைரியம் உனக்கு? ஓடாம நில்லு யா..” என அவள் துரத்து வருவதற்குள் ‘ஓடிட்டேன்ல’ என்று வீட்டை தாண்டி ஓடி விட்டார்.
“நீ வீட்டுக்கு தான் வரனும் அப்ப இருக்குயா உனக்கு..” என சாலையில் ஓடியவரிடம் கத்திச் சொன்னவள் கட்டையை கீழே போட்டபடி உள்ளுக்குள் சென்று விட்டாள்.
தந்தை மகள் நடத்தும் கூத்தை கண்டு வாயில் கை வைத்து திகைத்தார் கோமதி! பக்கத்தில் அமர்ந்திருந்த வளர்மதிக்கு இது பழக்கப்பட்டது போல அசட்டையாக இருந்தார்.
“என்ன வளரு அப்பாவ அடிக்க கட்டைய தூக்கிட்டு துரத்திட்டு வர்றா என்ன பொண்ணு இவ?” சாதாரண விஷயத்தைக்கூட ‘ இது போல நடக்குமா?’ என்று பெரிதாக பார்த்தார் கோமதி.
” அட அவ அப்படி தான் கா! இந்த கூத்தை தினமும் பார்த்திட்டு தான இருக்கோம்..” என்றார் சலிப்பாக.
“வாயா போயானு மரியாதை இல்லாம பேசிட்டு இருக்கு..”
“அவ அப்பாக்கு மட்டுமில்ல யாருக்கும் மரியாதை கொடுக்க மாட்டா. இங்க இருக்க வயசானவங்க எல்லார் கிட்டயும் வாயா போயான்னு தான் பேசுவா. பெரியவங்களும் இவ சின்ன பிள்ளைனு சகச்சிட்டு போறாங்க..
குழந்தைங்க கூட சேர்ந்து பண்ற கூத்து இருக்கே.. இதெல்லாம் பொண்ணு தானா தோணும்..” என்று அவள் மீதுள்ள பொறாமையில் கோமதியிடம் அவளை பற்றி தவறாக சொன்னார்.
இயல்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நட்பாக பேசுவதை கூட அவர் தவறாக தான் பார்த்தார். அவரது மகனும் மருத்தவர் தான். ஆனாலும், அங்கிருக்கும் மக்கள் அவளையே தேடிப் போக, இவருக்கு அவள் மீது பொறாமை வந்தது.
சம்ருதி, தன் வீட்டை சுற்றியிருக்கும் தெருக்களில் உள்ள மக்களுக்கு முடிந்தளவுக்கு இலவசமாக தான் மருத்துவம் பார்ப்பாள். பணம் கொடுத்தாலும் வாங்க மாட்டாள்.
ஆனால் ஒரு நாள் அவள் இல்லாத நேரத்தில் வளர்மதியின் மகன் மருத்துவர் என்று தெரிந்தும் அவசரமாக ஒருத்தர் அவனிடம் செல்ல, அவனும் அவரை பரிசோதித்து சென்று மாத்திரைகளை எழுதிக்கொடுத்தான்.
வந்தவர் பணம் எதுவும் எடுத்து வரவில்லை சம்ருதி போல எண்ணி. ஆனால், வளர்மதியோ அந்த நேரத்திலும் பணம் வசூலிப்பதில் குறியாக இருக்க, அன்றிலிருந்து யாரும் அவள் வீட்டிற்கு மருத்துவம் பார்க்க செல்வதே இல்லை.
எல்லாரும் சம்ருதியை தேடிச் செல்ல, இவருக்கு பொறாமையும் வன்மம் கூடிப் போனது.
அன்றிலிருந்து அவளை பற்றி யாரிடமாவது தவறாக சொல்லிக்கொண்டே இருப்பார். அவள் எது செய்தாலும் குத்தமாக தெரிந்தது. அவள் சேவை செய்தால் எரிந்தது.
அவருக்கு அவளை ஏதாவது சொன்னாதான் வாய் முணுமுணுப்பு அடங்கும் போல..
அதற்காகவே ஆள் கிடைத்தது போல கோமதியிடம் இல்லாததும் பொல்லாததுமாக அவளை பற்றிச் சொல்லி, கோமதியையும் அவரது கண்ணோட்டத்தில் பார்க்க வைத்ததும் இல்லாமல் சம்ருதியை பற்றி தவறாக சித்திரித்து விட்டார்.
இருவரும் அவளைப் பற்றி புரணி பேசிக் கொண்டிருக்க வெளியே சென்ற மாறன் அப்போது தான் வீட்டிற்கு வந்தான். வண்டியை நிறுத்தியவனுக்கு அவர்களது புரணி பேச்சு காதில் விழுந்தது.
சலிப்பாக அவர்களை பார்த்தவனுக்கு ஏகப்பட்ட கடுப்பு.
நன்றாக இருக்கும் தாயை கெடுப்பது இந்தச் சித்தி! முன்பு இருந்த வீட்டில் எல்லாருமே நன்றாக பழகக்கூடியவர்கள். ஆனால், அவர்களையே நொட்டம் சொல்லுவார் வளர்மதி. அதை அப்படியே நம்பும் கோமதி.
அது தான் அவனுக்கு பிடிக்காத ஒன்று..
அதற்காக இத்தனை வருடமாக சித்தி வீட்டிற்கு அருகே வீடு பார்க்காமல் கொஞ்சம் தூரமாக தனியாக இருந்தார்கள். ஆனால், சித்தியும் அம்மாவும் ஒரே முடிவாக நின்று சித்தி வீட்டிற்கு பக்கத்து வீட்டில் குடியேற வைத்து விட்டனர்.
அவர்கள் இருவரும் ஒன்று சேருவது இவனுக்கு பெரிய தலைவலி. வேறு வழியில்லாமல் தாயின் உடல் நிலை கருதி அவர்கள் முடிவுக்கு ஒத்துக்கொண்டு வீடு மாற்றி வந்து விட்டான்.
விபத்தில் தந்தை இழந்து உடல் நிலை மோசமாக இருந்த தாயை தேற்றி, உடல்நலத்தை முன்னேற்றிக்கொண்டு வர மிகுந்த சிரமம் கொண்டான் மாறன்.
வீட்டில் சமையல் வேலையிலிருந்து அனைத்தும் பார்க்க ஆரம்பித்து விட்டான். இப்போது உடல் தேறி நன்றாக இருந்தாலும் கோமதியை வேலை செய்ய விட மாட்டான்.
அவனே அத்தனையும் பார்த்து விடுவான். அதற்காக கல்யாணத்திற்கு பின் மகனையும் தன்னையும் வீட்டையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பான மருமகளை தான் மகனுக்கு கல்யாணம் செய்து வைக்க நினைக்கிறார் கோமதி.
ஆனால், அவரது எண்ணத்தை நினைத்து விதி கேலிக் கொட்டிச் சிரித்தது.
விசையுந்தில் செல்லும் போது தான் விபத்து நடந்த காரணத்தினாலே அன்று அவருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தினாலே மகன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாலே இவருக்கு பயம் சூழ்ந்து கொள்ளும்.
ஆயிரம் முறை பத்திரம் சொல்லி வழியனுப்பி வைப்பவர் அவன் கடைக்கு சென்று அலைபேசி வழியே, ‘வந்துவிட்டேன்’ என்று சொன்ன பிறகு தான் இவருக்கு உயிரே வரும் அது வரைக்கு உள்ளுக்குள் பல கற்பனைகள் பண்ணி துடித்து கிடப்பார்.
அப்படி பட்டவரிடம் ‘பைக் ரேசில ‘ கலந்து கொள்ளும் தனது பேராசையை சொல்லாமல் அவருக்கு தெரியாமல் நிறைவேத்த வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறான்.
அவர் மருந்து வீரியத்தில் நன்றாக உறங்கி போன பிறகு விஷாலை வரவழைத்து, சம்பவ இடத்தில் நின்று சாகசம் செய்வான்.
அவனுக்கு என்று தனியாக கே.டி.எம் விசையுந்து வைத்திருப்பது கூட கோமதிக்கு தெரியாது. அவன் இரவில் இவ்வாறு சென்று சாகசம் செய்வது தெரிந்தால் அவர் உயிரை விட்டு விடுவார். அவருக்கு தெரியாமல் நடக்கிறது இந்தக் கூத்து.
காலையில் கோமதி பேச்சை கேட்கும் நல்ல பையனாக இருக்கும் வெற்றி, இரவில் அவனுக்கு பிடித்தது போல மாறனாக இருக்கிறான்.
மகனை விட்டுக் கொடுக்காத கோமதி தெரிந்தவர், தெரியாதவர் என அனைவரிடமும் தன் மகனை புகழ்ந்து தள்ளி விடுவார். மகன் நெஞ்சில் இடியை இறக்கப் போகிறான் என்று அறியாமலே எப்போது அவனது புகழாரத்தை தான் பாடிக்கொண்டிருப்பார்.
மகன் வரும் வரை வளர்மதியின் பேச்சை தீவிரமாக கேட்டுக் கொண்டிருந்தவர், மகனை கண்டதும் அவரது கவனம் அவன் மீது சென்றது. இது வழக்கம் தான் என்று சலிப்பாக அக்காவை பார்த்தார் வளர்மதி.
“வளரு நாளைக்கு பேசுவோம் என் புள்ள வந்துட்டான்..”
“அது வழக்கம் தானே!”
கோமதி சிரிக்க வளர்மதி கண்டு கொள்ளாது சென்று விட்டார்.
“மதி, உனக்கு நல்லா பொழுது போகுமே!” என்றவனை கண்டு அவருக்கு வாயெல்லாம் பல்லாக இருக்க, சலிப்புடன் உள்ளே சென்றான்.
காலையில் வைத்த சாம்பார் மீதம் இருக்க, இருவருக்கும் தோசை ஊற்றினான் மாறன்.
இரவு உணவை முடித்து விட்டு கோமதி போட வேண்டிய மாத்திரைகளை கையில் கொடுக்க, வாங்கி போட்டவர் கொஞ்ச நேரத்திலே கண்ணயர்ந்தார்.
அவர் நன்றாக உறங்கிய பின் வெளியே வந்து அந்த தெருவை நோட்டம் விட்டான். முக்கியமாக அங்கிருக்கும் நாய்களுக்கு ரொட்டி வாங்கி போட சாப்பிட ஆரம்பித்தது.
கைகள் ரொட்டியை தூக்கி தூக்கி போட்டாலும் பார்வை என்னவோ தெருக்களில் தான் இருந்தது.
தோழியிடம் அலைபேசியில் பேசிக்கொண்டே வெளியே வந்த சம்ருதி, மாறனின் செய்யலை நோட்டம் விட்டாள்.
அவனது பார்வை போகும் திசையை அவளும் பார்த்தாள்.
சிலர் வீட்டில் கேமிரா இருப்பதும் சிலர் வீட்டிலும் இல்லாமல் இருப்பதை நோட்டம் செய்தான். ஒவ்வொரு தெருக்குள்ளையும் நுழைந்து மீண்டும் அதே இடம் வந்தான். நாய்களுக்கு ரொட்டி போட்டான்.
அவனது செய்கை எல்லாம் சந்தேகப் படும் படியாக இருந்தது!
‘என்ன பண்றான் இவன்? இவன் பார்வை, இவன் பண்றது எதுவும் புரியல? ஒருவேல திருடனா இருப்பானோ? என்னானு தெரியலையே..’ என சந்தேகத்துடன் வீட்டு