
அத்தியாயம் -35
மீனா சிரித்துக் கொண்டிருக்க, அதே பரிதாபப் பார்வையுடன் அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான் சபரி.
“ஓகே மிஸ்டர் சபரி! என்னுடைய அடுத்த தாக்குதல ஃபேஸ் பண்றதுக்கு ரெடியா இருங்க. ஆல் தி பெஸ்ட்! வரட்டா?” மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்கும் படி கூறிவிட்டுத் திரும்பினாள்.
இடுப்பை இலேசாக அசைத்துக் கொண்டே நடந்தாள். உணவு மேஜையருகே சென்றதும், சட்டென்று பவ்யமாக மாறினாள்.
சாப்பிட அமர்ந்தாள் மீனா. சபரிக்குத் தவிர மற்ற அனைவருக்கும் இட்லியும் சட்னியும் செய்திருந்தாள். அங்கு வந்தான் சபரி.
பெரியவர்கள் பார்க்காத நேரத்தில், கணவனைப் பார்த்து, நாக்கைத் துருத்திக் கொண்டு,கை விரலை மடித்துக் காட்டினாள் “நை..நை..” என்று.
சபரியோ, அவளுடைய தட்டில் இருந்த இட்லியையும் அவனுக்குப் பிடித்த இஞ்சி சட்னியையும் ஏக்கமாகப் பார்த்தான்.
அப்போது மாலதியும் சீனிவாசனும் வந்தனர் அங்கு சாப்பிடுவதற்கு என்று.
“ஏண்டா, உப்புமாவை நான் செஞ்சா ஒரு நாளாவது சாப்பிட்டு இருக்கியாடா நீ? அதுவே பொண்டாட்டி கிட்ட கேட்டு வாங்கி சாப்பிட்றே? அதென்னமோ போ.. அம்மா செஞ்சா கசக்குது. அதுவே பொண்டாட்டி செஞ்சா தேவாமிர்தமா இருக்கு! இல்லையாடா? என்ன பசங்களோ போ!”
பதில் கூறத் தெரியாது விழித்துக் கொண்டு ஒரு அசட்டுச் சிரிப்பைச் சிரித்து வைத்தான் சபரி.
“சரிம்மா, நான் ஆஃபிஸ் கிளம்புறேன்” என்று கிளம்ப எத்தனித்தவனைத் தடுத்து நிறுத்தியது மீனாவின் அவசரக் குரல்.
“அத்தான், இருங்க இருங்க. நானும் உங்களோட வர்றேன் அத்தான். நீங்க போற வழியில தானே என் ஆஃபிஸ் இருக்கு. கொஞ்சம் இறக்கி விட்ருங்க அத்தான் ப்ளீஸ்!”
கெஞ்சலும் கொஞ்சலும் நிறைந்த ஒரு குரலில் கூறியவளைக் காதல் நிரம்பிய ஒரு பார்வையில் பார்த்தான் சபரி.
அதற்குள், விவரம் ஏதும் தெரியாது மாலதி வந்தார் நடுவில்.
“அதுக்கு ஏம்மா இப்படிக் கெஞ்சுறே அவன் கிட்ட? அவன் உன் புருஷன் தானேம்மா? இறக்கி விடுன்னு உரிமையா சொல்லும்மா. அவனும் உரிமையா உன்னை வண்டியில பின்னால உக்கார வச்சுக் கூட்டிட்டுப் போகப் போறான். இதெல்லாம் அவனா செஞ்சிருக்கணும். அவனா உன்னைக் கூப்பிட்டு இருக்கணும். இவனுக்கு எங்கே இதெல்லாம் தெரியப்போகுது? மரமண்டை!”
“நல்லா சொல்லு மாலதி!” சீனிவாசனும் சேர்ந்து கொண்டார்.
‘என்னது, மரமண்டையா?’ மனதிலேயே புழுங்கிக் கொண்டான் சபரி.
“பாவம் அத்த அவரு! எதுக்கு இப்படி அவரப் போட்டு இப்படி திட்றீங்க அத்தே? அவருக்கே எதுவும் தெரியல பாஆஆவம்! என்ன செய்வாரு?” நக்கலுடன் கூறினாள் மீனா.
“என்ன பாவம்மா? இது கூடவா தெரியாது? இதுக்கெல்லாமா பாடம் நடத்துவாங்க யாராச்சும்?”
சீனிவாசன் கூறினார் சிறிது கோபத்துடன்.
“சரி விடுங்க மாமா, அது தான் இப்ப சேந்து போறோம்ல விடுங்க”
சபரிக்கு, தன் தாயின் தந்தையின் பேச்சுகளைக் கேட்டு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
‘இவ தான் நல்லா நடிக்கிறான்னா, இவங்களும் அதை நம்பிட்டு இருக்காங்களே! சரியான ஞானசூன்யம் ரெண்டு பேரும்!’ இருவரையும் மனதிற்குள் திட்டினான்.
கோபத்துடன் மனைவியைப் பார்த்தான். அவளும் அவனையே தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
‘என்ன, சாருக்கு கோவம் பொத்துகிட்டு வருதோ? நீங்க அப்ப பொய் சொல்லி என் மேலே பழியப் போட்டு நடிச்சீங்களே! அப்ப எப்படி இருந்திருக்கும் எனக்கு.. ம்ம்? உங்களுக்கு வந்தா ரத்தம்.. அதே எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியோ?’
பார்வையாலேயே கேட்டாள் கணவனிடம். அவனோ, முகத்தை எங்கு போய் வைத்துக் கொள்வது என்று தெரியாமல் முழித்து நின்றான்.
இருவரும் சேர்ந்து புறப்பட்டனர். வீட்டை விட்டு வெளியே வந்தவுடன், எப்போதும் காரை எடுப்பவன், அன்று தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டான்.
‘ஓ! சாருக்கு வண்டியில ஜோடியா போகணுமோ? இருங்க சார், என்ன பண்றேன்னு! வெயிட் அண்ட் சீ மேன்!’ சிரித்துக் கொண்டாள்.
வண்டியைக் கிளப்பி வந்தவனிடம், பின் இருக்கையில் ஏறி அமர்வதற்கு முன்பு, அவனின் முகத்தைப் பார்த்துச் சிரித்தாள் ஒய்யாரமாக.
“என்ன சாருக்கு இன்னைக்கு அடி பலமோ எல்லா பக்கமும்?”
கிண்டல் தொனிக்கக் கேட்டாள்.
தன் கேள்விக்குப் பதிலாக, தன்னைக் கோபமாக முறைப்பான் என்று நினைத்தவளுக்கு அவனுடைய செயல் சிறிது அதிர்ச்சியைத் தான் தந்தது மீனாவுக்கு.
சபரி, அவளின் முகத்தையே பார்த்தவாறு இருந்தவன், திடீரென சிரிப்புக்குத் தாவினான்.
“அடி என்னவோ கொஞ்சம் பலம் தான் டியர். பட், ஐ லைக் இட் பேபி! லைக் இட் வெரி மச்!”
அவனுடைய அந்தப் பேச்சில் அதிர்ந்து நின்றவளிடம்..
“அண்ட் ஐ லவ் யூ சோ மச் டார்லிங்!” என்று கண்ணடித்துக் கூறியவனை, கண்களை அகல விரித்து, அவற்றைப் படபடவெனச் சிமிட்டியபடி அவனையே பார்த்தபடி நின்றாள் பெண்ணவள்.
சபரியிடம் இருந்து இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை மீனா.
‘இது என்ன.. நம்ம பிளான் ஆப்போசிட்டா வேலை பாக்குதா?’
“என்ன பேபி, ஷாக்காயிட்டியா? அத்தான் கிட்ட இருந்து இதைக் கொஞ்சமும் எதிர்பாக்கல்லேல்ல நீ?” கிண்டலுடன் கேட்டான் சபரி.
அவளோ இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அப்படியே இருந்தாள்.
“அச்ச்ச்சச்சோ! வாட் பேபி? நீ இப்படியே கண்ணை விரிச்சு நிக்குறதப் பாத்தா உன்னை அப்படியே கடிச்சுத் திங்கலாம் போல இருக்கே! கையெல்லாம் பரபரக்குது கண்ணம்மா”
கூறியவாறுத் தன் கையை அவளுடைய கன்னத்திற்குக் கொண்டு சென்றான்.
சட்டென்று அவனுடைய கைகளைத் தட்டி விட்டு முகம் சுழித்தபடி வண்டியில் ஏறிக் கொண்டாள்.
ஜாலியாக பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி வண்டியைக் கிளப்பினான் சபரி.
மீனாவோ குழப்பத்துடன் யோசனை செய்து கொண்டு அமர்ந்து இருந்தாள்.
‘இதென்ன, நான் செஞ்சதில இவருக்குக் கோவம் வரும், அதை என் கிட்ட காட்டவும் முடியாம காட்டாம இருக்கவும் முடியாம திணறுவார்னு பாத்தா, ரொம்ப கூலா இல்ல இருக்காரு? என்னய்யா நடக்குது இங்கே ம்ம்?’
அதற்குள் வண்டி, வீடு இருக்கும் தெருவைக் கடந்து பிரதான சாலையைச் சென்று அடைந்து இருந்தது.
“ஸ்டாப்.. ஸ்டாப்.. ஸ்டாப்.. வண்டிய நிப்பாட்டுங்க கொஞ்சம்” அவசரமான குரலில் கூறினாள் மீனா.
சபரியும் எதிர்பார்த்தது போல் வண்டியை சடக்கென்று நிறுத்தி விட்டுத் திரும்பிப் பார்த்தான் அவளை.
“ஏன் டார்லிங், ஏதாவது வேணுமா? வேணும்னா சொல்லு. அத்தான் வாங்கித் தர்றேன்”
“எதுவும் தேவையில்ல” உஷ்ணத்துடன் கூறியவாறு வண்டியை விட்டு இறங்கினாள்.
“நான் இங்கே இருந்து பஸ்ல போயிக்கிறேன். நீங்க போகலாம்”
“ஏன் செல்லம்? ட்ராப் பண்ணச் சொல்லி ஆசையா கேட்டே?”
“ஆமாமா.. ஆசையாஆஆ கேட்டாங்க! நான் கேட்டது அத்தைக்காகவும் மாமாவுக்காகவும் மட்டும் தான். புரிஞ்சுதா? இது வரைக்கும் நீங்க கூட்டி வந்ததே போதும். ரொம்ப தேங்க்ஸ்!”
கிளம்பி இரண்டு அடி எடுத்து வைத்தவள், வண்டியைக் கிளப்பாமல் அமர்ந்து இவளையே பார்த்துக் கொண்டிருந்த சபரியிடம் மீண்டும் வந்தாள்.
“சார் இதைக் கொஞ்சமும் எதிர்பாக்கலேல்ல? ஜோடியா வண்டியில பறக்கலாம்னு ரொம்ப ஆசையா இருந்தீங்க இல்லையா? பாவம் ரொம்ப ஏமாற்றமா போயிருக்கும். இல்லையா மிஸ்டர் சபரி? ப்ச்ச்ச்ச்.. பாவம்!”
ஏளனச் சிரிப்புடன் கேட்டவளை, ஒரு கிண்டல் சிரிப்புடன் பார்த்தான் சபரி.
“இல்லையே! நான் எதிர்பார்த்தேனே. கிளம்பினவுடனேயே.. இது சரியில்லையே.. ஏதாவது செய்யணுமே நீ.. என்ன செய்யப்போறே? ஏதாவது செஞ்சே ஆகணுமேன்னு வெயிட் பண்ணிட்டே இருந்தேன் செல்லம். ஏன்னா.. அப்ப தானே என்னால அத ரசிச்சுட்டே இருக்க முடியும். அது தான். இப்ப பாரு, உன் முகம் எப்படி எல்லாம் மாறுதுன்னு. இத.. இத..இதத்தான் பேபி நான் எதிர்பாத்தேன்”
இப்படிக் கூறியவனை மீண்டும் அதிர்ந்து போய் பார்த்தாள் மீனா.
“பட், யூ நோ ஒன் திங் டியர்? அத்தானுக்கு இப்ப தான் உன்னை ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. நீ செய்ற இந்தக் குறும்பு, சேட்டை எல்லாம்.. சும்மா சொல்லக்கூடாது, சூப்பர்ப் உன் பெர்ஃபார்மன்ஸ்! ஐ லைக் இட் பேபி! இப்ப தான் உன் மேலே எனக்கு காதல் அப்படியே பொங்கிப் பொங்கி வருது. கீப் இட் அப் செல்லம்! வரட்டா?”
அவளுடைய முகம் போன போக்கைக் கண்டு இரசித்தபடியே வண்டியைக் கிளப்பியவன், மீண்டும் நின்றான்.
“போதும் டார்லிங், முகத்தில ஷாக்கிங்க கொஞ்சம் குறைக்கிறியா? ஏன்னா, இதிலே நீ ரொம்ப கியூட்டா இருக்கே. பாத்துட்டே இருக்கணும் போல இருக்கு. ஐ லவ் யூ டார்லிங்!”
கூறியதோடு நிற்காமல் உதட்டைக் குவித்து, முத்தம் தருவது போல் செய்து விட்டு, வேகமாகப் புறப்பட்டுச் சென்றான்.
அவனுடைய அந்தச் செய்கையில் முகமெல்லாம் குப்பென்று சிவந்து விட்டது மீனாவுக்கு. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள். ஜனங்கள் பரபரவென அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது தான் உணர்ந்தாள், தான் வெட்கப்பட்டு முகம் சிவந்ததை.
‘அச்சச்சோ! இதென்ன நான் எதுக்கு வெக்கப்படணும்? அவர் சும்மா முத்தம் குடுக்குற மாதிரி செஞ்சிட்டுப் போனதுக்கே எனக்கு வெக்கமா? அ.. அப்படின்னா நா.. நான் இவரக் காதலிக்கிறேனா?’
இந்த ஒரு நினைப்பு வந்தவுடன், ஆயிரம் வோல்ட்ஸ் மின்சாரம் உடலில் பாய்ந்தது போன்று இருந்தது அவளுக்கு.
‘சேச்சே.. அப்படி எல்லாம் இல்ல. இப்படி நடுத் தெருவில நின்னு இவர் இப்படி செஞ்சவுடனே எனக்கு அப்படி இருந்திருக்கும். மத்தபடி நான் எதுக்கு அவரைக் காதலிக்கப் போறேன்? ஹும்ம்..’
முகத்தில் கோபத்தை வலிய வரவழைத்துக் கொண்டு அங்கிருந்து நடந்தாள். அவள் செல்லும் போதே அவள் ஏற வேண்டிய பேருந்து வரவும் அதில் ஏறிக் கொண்டாள்.
மனம் என்னவோ காலையில் இருந்து நடந்ததையே யோசித்துக் கொண்டிருந்தது.
‘ஐ லைக் இட் பேபி! ஐ லவ் யூ சோ மச் டார்லிங்!’ காதருகே சபரியின் குரல் கேட்பது போலவே இருந்தது அவளுக்கு.
காதலுடன் கூடிய ஒரு பார்வையில் அவளைப் பார்த்து அவன் கூறியது மனதில் வந்து இம்சை தர, திடுக்கிட்டுப் போனாள் மீனா.
‘இது என்ன.. போற போக்கைப் பாத்தா ஒருவேளை நானுமே இவரைக் காதலிக்க ஆரம்பிச்சிடுவேனோ? ஆனா அப்படியே காதலிச்சா தான் என்ன? அவர் என் புருஷன் தானே!’ அவளே கேள்வியையும் கேட்டு பதிலையும் கூறிக் கொண்டாள்.
மறுகணம் தனக்குத் தானே திட்டியும் கொண்டாள்.
‘அதுசரி, இவ்வளவு நாள் அவன் செஞ்சது எல்லாம் மறந்து போச்சா உனக்கு? நடக்க இருந்த உன் கல்யாணத்தை நிறுத்தி, நயவஞ்சகமா உன் கழுத்தில தாலி கட்டினவன் அவன். அவன் உனக்குப் புருஷனா?”
தன்னையே கேட்டுக் கொண்டாள் மீனா.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அவன் செய்தவற்றை அவனுக்கே திருப்பி செய்து பழி வாங்கியாயிற்று.
தான் செய்த தவறை புரிந்துகொண்டு மன்னிப்பையும் காதலையும் வேண்டி நிற்கின்றான் சபரி.
அவனே காதல் மயக்கத்தில் இருக்கின்றான். அவனுக்கு வாகா வண்டியில் போகும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கறியே மீனா.
அவன் காதல் புரிகின்றது. தனது மனதும் தழும்புகிறது. இருந்தும் வலி சுமந்த நொடிகளை விட்டு விலக இயலாமல் தவிக்கின்றாள்.
மிக்க நன்றி 😊