Loading

சமுத்திரா – 31:

“விலோவின் குறிப்பிற்கு என்ன வர போகுதோ?” என்ற பயம் ஒரு புறம் இருந்தாலும், ஒரு வித நம்பிக்கையும் அவர்களுக்கு இருந்தது. ‘இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைந்தன!’ என செய்தியாளர் வாசிப்பதை போல் ப்ரதீப் மூன்று போட்டால் அவர்களின் விளையாட்டும் நிறைவு பெறும் என அனைவருமே நம்பினர்.

அதனாலே ப்ரதீப்பை முதலில் பகடையை உருட்ட சொல்லி ரங்கா அவனுக்கு அழுத்தம் கொடுத்தான். ரங்காவிடமிருந்து பகடையை வாங்க கையை நீட்டினான் ப்ரதீப்.

அதனை ரங்கவிடமிருந்து ப்ரதீப் வாங்கிய மறுநொடி அவனின் பின்னிருந்து ஊர்ந்து வந்த பெரியவகை புழுவை போன்ற ஒன்று ப்ரதீப்பின் இடுப்பை வளைத்து அப்படியே அவனை கப்பலின் உயரத்தை தாண்டியும் தூக்கியது.

அது என்ன வென்று ப்ரதீப்பினால் பின்னே பார்க்க முடியவில்லை. எனவே, “டேய் அந்த கொடிங்க என்னோட இடுப்பை சுத்தி தூக்கிடுச்சீங்க டா. எப்படியாவது காப்பாத்துங்க டா.” என அந்தரத்தில் தொங்கிய படியே ப்ரதீப் கத்தினான்.

ஆனால் கீழ கப்பலில் இருந்த அனைவரும் சற்று பீதியுடன் ப்ரதீப்பை வளைத்து பிடித்திருந்த பெரிய ஆக்டாப்ஸை தான் பார்த்தனர். கப்பலை விட இருமடங்கு பெரிதாக இருந்த ஆக்டொப்ஸை பார்த்தவர்களுக்கு சற்று பயமும் அதிர்ச்சியும் உண்டாக்கியது.

அதனையே பார்த்த ரங்கா, “இது தான் விலோவோட க்ளூக்கு வந்தது போல. இந்த ப்ரதீப் கொஞ்சம் சீக்கிரமா டைசை போட்டிருக்கலாம்.” என குறைப்பட்டுக் கொண்டான்.

“விடு ரங்கா. அதே க்ளூல அகப்பட்டால் அழிந்து விடுவாய்னு கூட இருந்துச்சே.. இப்ப ப்ரதீப்பை நாம எப்படியாவது காப்பாத்தனுமே..” என்றான் சக்தி அண்ணாந்து ப்ரதீப்பை பார்த்தபடியே.

“டேய் காப்பாத்துங்கன்னா என்ன டா வேடிக்கை பார்க்குறீங்க? கொடி கிட்ட தான மாட்டியிருக்கேன்.” என்ற ப்ரதீப் அப்பொழுது தான் உடம்பை முறுக்கி வளைத்து திரும்பினான். அவனின் முகத்திற்கு நேராக ஆக்டொப்ஸின் பளபளக்கும் விழிகள் இருந்தன.

ஒருநொடி ப்ரதீப்பின் இதயமே நின்று துடித்தது. முகத்திற்கு நேராக அத்தனை பெரிய விலங்கை பார்த்த ப்ரதீப்பினால் மூச்சை கூட விட முடியவில்லை. அதிர்ச்சியில் அவனின் வாயும் இறுக மூடிக் கொண்டது.

“இந்த வாளை யூஸ் பண்ணி அந்த ஆக்டொபஸோட கையை கட் பண்ண முடியுமா?” என சக்தி கேட்டான். இந்த சிறிய வாளால் அவ்வளவு பெரிய மிருகத்தின் ஒரு பகுதியை வெட்டுவது அவ்வளவு சுலபம் இல்லையென அவனுக்கும் புரிந்து தான் இருந்தது.

“அது கஷ்டம்னு சொல்லுறத விட முடியாத விஷயம் சக்தி. அந்த ஆக்டொபஸோட கை ஒவ்வொன்னும் மலை பாம்பு சைஸ்ல இருக்கு, சோ அதை கட் பண்ண வாய்ப்பே இல்லை. அதோட கவனத்தை வேற எதாவது வெச்சி தான் திசை திருப்பனும்.” என்றான் அமரன். அனைவரும் என்ன செய்வது என புரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.

ஆக்டொப்ஸை பார்த்த அதிர்ச்சி மெல்ல விலகி ப்ரதீப்பின் உடல் பயத்தில் நடுங்க தொடங்கியது. “டேய் காப்பாத்துங்க டா. ஐயோ இது வாயில இருந்து ரொம்ப கேவலமா ஸ்மெல் வேற வருது. என்னத்தை தின்னு தொலைச்சிதோ தெரியலையே!” என்ற ப்ரதீப் அவனின் மூச்சினை இழுத்துவிட்டான்.

சக்தி, “ப்ரதீப்!” என கத்தி அவனை அழைத்தவன்,

“உன்னோட கையில இருக்க டைசை அப்படியே கீழ போடு. அதுல என்ன வருதுன்னு நாங்க பார்த்துக்குறோம்.” என ஆலோசனை சொன்னான்.

அது ப்ரதீப்பின் காதில் சரியாக விழவில்லை. “என்னடா சொல்லுறீங்க? ஒன்னுமே கேட்கலை..” என ப்ரதீப் மீண்டும் கத்தினான்.

சக்தி சொன்னதையே ரங்காவும் அமரனும் மீண்டும் கத்தி சொன்னார்கள்.

“ப்ரதீப். சீக்கிரமா போடு டா.. நீ மூணு போட்டா கேம் முடிஞ்சிடும். உன்னோட கையில இருக்க டைசை அப்படியே கீழ போடு!” என்ற அமரன் செய்கையுடன் கத்தி சொன்னான்.

அதனை புரிந்துக் கொண்ட ப்ரதீப். முயன்று கையை ஆக்டோபஸின் பிடியில் இருந்து உருவினான். பின் அந்த சிவப்பு நிற பகடையை அவர்களை நோக்கி மெதுவாக வீசினான்.

மேலிருந்து கீழே விழுந்த வேகத்தில் பகடையோ சிறிது தூரம் துள்ளி துள்ளி சென்றது. உயிரை பிடித்துக் கொண்டு அனைவரும் அதல் விழ போகும் எண்ணை தான் பார்த்தனர். அவர்கள் அனைவரின் கவனமும் அதில் நிலைத்திருக்க பகடையில்  நான்கு என விழிந்தது. அதிலே அனைவரின் முகத்திலும் ஏமாற்றம் தெரிய துவங்கியது.

அந்த கேம் போர்டில் உள்ள ப்ரதீப்பின் பிங்க் நிற குட்டி கப்பல் அப்படியே நகராமல் நங்கூரமிட்டது போல் அழுத்தமாக இருந்தது.

பின் வழக்கம் போல் அந்த குமிழுக்குள் எழுத்துக்கள் மின்ன துவங்கின.

“உன் ஆட்டம் தடுக்க படுகிறது!”

என வந்ததை பார்த்த அனைவருக்கும் ஒருவித அயர்ச்சி தான் வந்தது.

“கடவுளே!” என அனைவரும் சோர்ந்து போயினர். ‘மூன்று விழும். ஆட்டமும் முடிந்துவிடும். என எண்ணிக் கொண்டிருக்க மீண்டும் இந்த கடலில் உள்ள உயிரினங்களோடு உயிருக்கு போராட வேண்டுமே!’ என்ற எண்ணம் தான் அவர்களுக்கு தோன்றியது.

“என்னடா வந்துச்சு? மூணு வரலையா?” என ப்ரதீப் கேட்க,

“நாலு வந்திருக்கு டா. அதுனால கேம் முடிக்க முடியல..” என்று சக்தி ப்ரதீப்பிற்கு சொன்னான்.

இவர்கள் இங்கு ஒரு புறம் ப்ரதீப்பின் ஆட்டத்தை முடித்திருக்க, கடலில் இருந்து மொத்தமாக வெளியே வந்த ஆக்டொபஸ் முழுதாக அவர்களின் கப்பலை முற்றுகையிட்டிருந்தது.

“ஆக்டொபஸுக்கு எட்டு கைன்னு தான சொல்லுவாங்க. ஆனா இங்க வந்த ஆக்டொபஸுக்கு எட்டுக்கு மேலயும் இருக்கும் போல.. முழு கப்பலையும் வளைச்சு பிடிச்சிருக்கு..” என்று ஷிவன்யா கப்பலை முழுதாக பார்த்துவிட்டு சொன்னாள்.

“இங்க இருக்க ஆக்டொபஸுக்கு அது பொருந்தாது போல..” – அமரன்.

“டேய்! இது என்னோட இடுப்பெலும்பையே உடைச்சிடும் போல.. ஏதாவது பண்ணுங்க டா..” என்று ப்ரதீப் வேறு ஒருபுறம் கத்திக் கொண்டிருந்தான்.

*****

ஒரு பெரிய ஆக்டொபஸ், அதனின் கைகள் அனைத்தையும் உபயோகித்து ஒரு பெரிய பாய்மர கப்பலை அணைத்தபடி இருந்ததை தான் தொலைநோக்கு கருவியால் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆரலி. “அவர்களின் கப்பலை பெரிய நீராளி (ஆக்டோபஸ்) ஒன்று சுற்றி வளைத்திருக்கிறது. அதிலிருந்து அவர்கள் பிழைப்பது நிச்சயம் கடினமான ஒன்று! என்ன நடக்கிறது என நாம் சற்று பொறுத்திருந்து பார்க்கலாம்.” என கடற்கொள்ளையர்களிடம் சொல்லிய ஆரலியின் முகத்தில் நக்கல் மிகுந்து இருந்தன.

“என்னை வேண்டாம் என்று நிராகரிதாய் அல்லவா? அனைத்தையும் அனுபவி..” என குரூரமாக சிந்தித்தாள் ஆரலி.

*****

“முதல்ல ப்ரதீப்பை காப்பாதனும்.” என அமரன் சொல்ல ஆக்டொப்ஸின் கரம் ஒன்று அவர்களிடம் நீண்டு வந்தது.

“இதென்ன நம்ம கிட்ட வருது..” என்ற ஷிவன்யா காலை குறுக்கி அமர்ந்தாள். அனைவரும் வேறு வேறு பக்கம் செல்ல, விலோவை யாரும் கவனிக்கவில்லை.

அந்நேரம் ஆக்டொப்ஸின் கரம் விலோவிடம் சென்றது. ‘விலோவால் ஓட முடியாதே!’ என அவளிடம் அனைவரும் வர துவங்கினர்.

ஆனால், அவ்வளவு நேர இடைவெளியில் விலோ மொத்தமாகவே தவளையாக உருமாறியிருந்தாள். விலோவினால் நடக்க தான் இயலாதே தவிர, இப்பொழுது அவளால் தத்தி தாவி குதிக்க முடிந்தது. எனவே அந்த ஆக்டொபஸ் அவளை தீண்டும் முன் அவள் ஒரே தவ்வாக தாவி தப்பித்தாள்.

அவளின் செயலை அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தனர். “பார்! முழுசா தவளையா மாறியிருக்க உன்னோட விலோவை பார். அப்படின்னு ப்ரதீப் உன்னோட பக்கத்தில இருந்தா சொல்லிருப்பான்.” என சக்தி ப்ரதீப்பை போலவே பேசிகாட்டினான். அவனின் தோளிலே பட்டென்று ஒன்று வைத்தாள் விலோ.

“டேய். நான் ஒருத்தன் இங்க இருக்கேன் டா. உருவம் இருந்தா கூட கத்தி கத்தி தான் நான் இருக்குறதையே உங்களுக்கு தெரியப்படுத்துறேன். ஐயோ! இந்த ஸ்மெல் வேற..” என மூச்சினை பிடித்துக் கொண்டான் ப்ரதீப்.

விலோவை பிடிக்க முடியாமல் போக அங்கிருந்த சமுத்திரா பெட்டியை ஒரு கரத்தில் சுற்றி எடுத்துக் கொண்டது ஆக்டொபஸ்.

“வர்றது எல்லாத்துக்கும் அந்த கேம் மேல தான் ஒரு கண்ணு. அந்த திருடி, இந்த கொடி இப்ப இது..” என ஷிவன்யா சொல்ல, அந்த ஆக்டொபஸ் அந்த பெட்டியை கடலிற்கு மேல் தூக்கி பிடித்தது.

“ஐயையோ அதை கடல்ல போட போகுது. எதாவது பண்ணனும்.” என்ற சக்தி அங்கிருந்த டேபிளை தூக்கி அதன் மீது போட்டான். அவன் செய்வதை பார்த்தவர்கள் அங்கு கிடப்பது அனைத்தையும் அதன் மீது போட்டனர்.

அது அந்த கேமை இப்பொழுது கப்பலின் மேலே தூக்கி பிடித்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்த விலோ. மூன்று முறை தாவ முயன்று; தோல்வியடைந்து நான்காவது முறையில் உயரமாக தாவி ஆக்டொப்ஸின் கரத்தில் இருந்த கேம் போர்டை பிடுங்கிவிட்டாள்.

“வாவ். விலோ செம்ம ஐடியா.” என அனைவருமே அவளை பாராட்டினர்.

“எப்படியோ இப்ப நமக்கு கேம் வந்துடுச்சு. ப்ரதீப்பை காப்பாத்த வழி ஏதாவது நிச்சயமா நமக்கு கிடைக்கும். ப்ரதீப்புக்கு அடுத்து அமர் தான போடணும். சீக்கிரமா போடு அமர்.” என்றான் ரங்கா.

“டைஸ் கொடு டா?” என அமரன் கையை நீட்டினான்.

“எனக்கு தெரியாதே! ப்ரதீப் போட்டதும் நான் அதை எடுக்கலையே?” – ரங்கா.

“நானும் எடுக்கல..” – சக்தி.

“நானும் எடுக்கலையே!” – ஷிவன்யா.

ப்ரதீப்பிற்கு மூன்று விழவில்லை என்ற கவலையில் இருந்தவர்கள் உண்மையிலேயே பகடையை மறந்தேவிட்டனர்.

“ஐயோ இவ்ளோ கேர்லசாவா நாம இருப்போம். இப்ப அதை எங்கன்னு போய் தேடுறது..” என்ற ரங்கா அந்த தளத்திலே தேட துவங்கினான்.

அவனுடன் சேர்ந்து மற்றவர்களும் தேட துவங்கினர். அந்நேரம் அங்கிருந்த கொடியை நகர்த்த கையை நீட்டிச் சென்றான் சக்தி. “டேய் அங்க கூம்பு நத்தை இருக்கு பாரு டா. எப்பவும் கவனமா இருக்கனும்.” என்றான் அமரன். ஆனால், நம் கவனமும் சில சமயம் சிதற தானே செய்யும்!

ஷிவன்யா, “ஒருவேளை இவ எடுத்து வெச்சிருப்பாளோ?” என சந்தேகத்துடன் அந்த கடற்கன்னியை தான் பார்த்தாள். அவளின் எண்ணத்தை படித்தது போல் கடற்கன்னி ஷிவன்யாவை முறைத்தாள். அதில் ஷிவன்யா முகத்தை திருப்பிக் கொண்டாள்.

விலோவும் அவளால் முடிந்த அளவு அங்கங்கு தவ்விச் சென்று தேடத் துவங்கினாள்.

“நாம வேற அந்த ஆக்டொபஸ் மேல எல்லாத்தையும் தூக்கி தூக்கி போட்டோமே? அதுல டைஸ் போயிருக்குமோ?” என ரங்கா யோசனையாக கேட்டான்.

“தெரியலையே?” என்ற அமரன் அங்கு மழைக்கு சுருட்டி வைக்கப்பட்டிருந்த பாய்களிடம் சென்று சோதனை செய்தான்.

அனைவரும் இப்படி தேடியபடி இருக்க, அந்த இருண்ட கடலில் இருளை கிழித்துக் கொண்டு வெளிச்சக்கீற்றாய் ஒரு உருவம் வெளிவந்தது.

– சமுத்திரா வருவாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்