Loading

சமுத்திரா – 16:

‘சமுத்திரா!’ விளையாட்டு பெட்டி எங்க போச்சு? யார் அதை எடுத்தது?’ என்று பல கேள்விகள் அனைவரின் மனத்திற்குள்ளும் எழுந்தன. “நான் டைஸை போட்டுட்டு அதை என் கைலையே தான் வெச்சிருந்தேன். மழைக்கு நாம இங்க ஸ்விமிங் ஃபூல் பக்கத்துல வந்து நிக்குறப்ப அதை கையோட தான் எடுத்துட்டு வந்து இங்க நம்ம பக்கத்துல தான் பத்திரமா வெச்சிருந்தேன். ஆனா இப்ப காணோமே..” என்று அங்குமிங்கும் பார்த்த ஷிவன்யா அந்த கடற்கன்னியை நோட்டம் விட்டப்படியே சொன்னாள்.

“அதுக்கு, நீ எதுக்கு அவளை பார்க்கிற? அவ வந்ததுல இருந்து அங்க தான உட்கார்ந்து இருக்கா..” என்று ப்ரதீப் கடற்கன்னிக்கு ஆதரவாக சொன்னான்.

“சரி விடுங்க பக்கத்துல நல்லா தேடிப்பாருங்க. கப்பல் ஆடுனதுல எங்கயாவது உருண்டு போயிருக்கும்.” என்ற ரங்கா அவனும் தேட தொடங்கினான். ஆனால் அந்த இருளில், மழை சாரலின் வேகத்திலும் அமரனின் கையில் இருந்த சொற்பமான கைபேசி வெளிச்சத்தில் அவர்களுக்கு எதுவும் புலப்படவில்லை.

காற்று மிதமான வேகத்தில் வீச தொடங்கினாலும் மழை விடாமல் பெய்துக் கொண்டு தான் இருந்தது. அந்த நீச்சல் குளத்தின் கைப்பிடியில் அமர்ந்து அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள் சௌந்தர்யம் என்ற கடற்கன்னி.

“தேடுங்க.. தேடுங்கன்னா? இங்க ஒரு வெளிச்ச டஷும் இல்ல. இங்க எங்க போய் தேடுறது..” என்று புலம்பியபடியே அங்கிருந்த மதுவால் நிறைந்த அட்டை பெட்டிகளை நகர்த்தியபடி ப்ரதீப் தேடினான்.

“நீ தான இந்த கருமத்தையெல்லாம் இங்க வர வெச்ச?” என்று அந்த அட்டை பெட்டிகளை சுட்டிக்காட்டியவள், “உன்னால தான் இப்ப தேடுற வேலையும் நமக்கு அதிகமாயிருக்கு.” என்று விலோ மேலே பேசும் முன், “ரெண்டு பேரும் ஆரம்பிக்காதீங்க!” என்ற அமரனின் அதட்டலில் இருவரும் முறைத்தப்படி நகர்ந்தனர்.

நண்பர்கள் கூட்டத்துடன் சேர்ந்து மார்ட்டின் மற்றும் விக்டரும் கூட அந்த விளையாட்டு போர்டை தான் தேடிக் கொண்டிருந்தனர்.

**********

இங்கு கப்பலின் அடித்தளத்தில், ரிச்சார்டும் டேனியலும் ஜெனெரேட்டரின் அறையை கஷ்டப்பட்டு வந்தடைந்தனர். ஆனால் அவர்களால் அங்கிருந்த ஜெனெரேட்டர் அறையை திறக்க முடியவில்லை. “இது லாக் ஆகியிருக்கு. இதோட கீ மாஸ்டர்(மார்ட்டின்) கிட்ட தான் இருக்கும். இவ்ளோ தூரம் வந்துட்டோம். எதையாவது பண்ணி கதவை திறக்கலாம்..” என்று சொன்ன டேனியல், ரிச்சார்டுடன் சேர்ந்து அந்த கதவை உடைக்க முயன்றான்.

எவ்வளவு முயன்றும் அவர்கள் இருவராலும் அதனை உடைக்க முடியவில்லை. எனவே, அந்த இருட்டில் அருகில் இருந்த அறையில் ஏதேனும் பொருள் கிடைக்குமா என இருட்டில் மெல்ல கைகளால் துழாவி பார்த்தனர். அங்கே அவர்களின் கைக்கு ஒரு தீயணைப்பு சிலிண்டர் தென்பட்டது. உடனே அதனை அங்கிருந்து கழட்டி அதனின் மூலம் ஜெனேரேடர் அறையின் கதவை திறக்க முயற்சித்தனர்.

வெகு நேர போராட்டத்திற்கு பின், அவர்கள் இருவரும் அந்த கதவை உடைத்து திறந்தார்கள். “ஒருவழியா திறந்துட்டோம்!” என்ற மகிழ்ச்சியுடன் இருவரும் அந்த அறைக்குள் மெல்ல நுழைந்தனர். அந்த அறை அவர்களுக்கு பரீட்சியமானது தான் என்பதால் இருட்டில் துழாவி பார்த்து யூகத்தின் அடிப்படையில் அனைத்து ஜெனரேட்டரையும் இயக்கிவிட்டனர். உடனே, அவ்வளவு நேரம் இருளில் மூழ்கியிருந்த கப்பல் கண்கூசும் வண்ணம் விளக்கொளியில் ஜொலிக்க தொடங்கியது.

**********

இங்கு மேலே திடீரென வந்த விளிச்சத்தில் அனைவரின் கண்களும் கூச, “யார் லையிட்ஸை போட்டது?” என கண்ணை தேய்த்தபடியே கேட்ட ஷிவன்யாவின் கேள்விக்கு, “யார் போட்டா என்ன? அந்த போர்ட்டை நாம இப்ப ஈஸியா தேடலாம்.” என்றான் ப்ரதீப்.

பின் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே, “அதோ.. அங்க இருக்கே!” என்று நீச்சல் குளத்தின் பக்கத்தில் இருந்த சமுத்திரா பெட்டியையும் ப்ரதீப்பே கைகாட்டினான்.

அதை பார்த்த அனைவரும் சற்று ஆசுவாசம் அடைந்தனர். “உஃப். கப்பல் ஆடுனதுல அங்க போயிருக்கும் போல. நான் போய் எடுத்துக்கிட்டு வரேன்.” என மழை தண்ணீரால் அலசப்பட்டிருந்த தளத்தில் வேகமாக நடந்துச் சென்றான் ரங்கா.

அந்த விளையாட்டு பெட்டியின் பக்கத்தில் சென்ற ரங்கா அதனை கையில் எடுத்ததும், அவன் நின்ற இடத்திலிருந்த மழை நீரால் அப்படியே ரங்கா உள்ளிழுக்கப்பட்டான். என்ன என்று ரங்கா உணரும் முன்னே முழங்கால் வரை உள்ளே சென்றுவிட்டான். சுருக்கமாக சொல்லப்போனால் ரங்கா நின்ற இடம்  புதைக்குழியாக மாறியிருந்தது. ‘இந்த இடம் மட்டும் எப்படி இப்படி மாறுச்சு?’ என்று திகைத்தவன் நண்பர்களை அதிர்ந்து பார்த்தான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர்கள்,

அவனின் நிலையை பார்த்து பதறி அவனிடம் ஓடி வந்தனர். “எல்லாரும் அங்கயே நில்லுங்க! இது உள்ள இழுக்குது. யாரும் கிட்ட வராதீங்க.” என்று அடிக்குறலில் கத்திய ரங்கா அவனின் கையில் இருந்த பெட்டியை நண்பர்களை நோக்கி தூக்கிப்போட அதனை அப்படியே பிடித்த ஷிவன்யா ஓரமாக வைத்தாள்.

அமர், ப்ரதீப், சக்தி மூவரும் சேர்ந்து ரங்காவிற்கு ஒருப்புறம் கைகொடுக்க முயன்றனர். மற்றொரு பக்கம் மார்ட்டினும், விக்டரும் கைகொடுத்தனர். ஆனால் ரங்காவால் அவர்களின் கரங்களை பற்ற முடியவில்லை. “கையை புடி ரங்ஸ். எப்படியாவது மேல வர ட்ரை பண்ணு..” என விலோ விசும்பியபடி சொன்னாள்.

அந்த குழி ரங்காவை கீழே இழுக்க, மேலே வர முயற்சி செய்துக்கொண்டிருந்த ரங்கா மூச்சு வாங்கியபடியே, “நானும் அதுக்கு தான டி ட்ரை பண்ணுற..” என்றான்.

“இது எப்படி இங்க வந்துச்சுன்னு தெரியல. கையை நல்லா நீட்டு டா எருமை..” என்ற அமர் ரங்காவின் கையை பற்ற முயன்றான். ஆனால் யாராலும் ரங்காவின் கையை பற்ற முடியவில்லை.

மேலே வர முயன்ற ரங்காவால் இப்பொழுது சிறிதும் அசைய முடியவில்லை. அவனின் இடுப்பு வரை இறங்கிவிட இயலாமையுடன் அனைவரையும் பார்த்தான். “டேய் கையை நல்லா நீட்டு டா. டோன்ட் கிவ் அப் மேன்.” என்றான் சக்தி. அமரன் தொடர்ந்து அவனின் கையை பிடிக்க முயன்றான்.

“இல்ல அமர். இதெல்லாம் வேலைக்கு ஆகாது. அந்த பாய்மரத்துல இருக்க கயிற எடுத்துட்டு வாங்க..” என்று மார்ட்டின் சொன்னதும் விலோவும் ஷிவன்யாவும் வேகமாக சென்று அதனை எடுத்து வந்தனர்.

பின் அனைவரும் சேர்ந்து கயிறை ரங்காவிடம் போட்டனர். ரங்கா அதனை பற்றியவுடன் அவனை மேலிழுக்க முயன்றனர். ஆனால், அவர்களால் அவனை மேலே இழுக்கவே முடியவில்லை. இதிலும் அவர்கள் தோல்வியையே தழுவினர். இப்பொழுது ரங்காவின் நெஞ்சு வரை அந்த புதைகுளிக்குள் சென்றுவிட அனைவரும் கண்கள் கலங்க பதட்டத்துடனும் பயத்துடனும் அவனையே பார்த்தனர்.

அந்நேரம் யாரும் எதிர்பாராத வண்ணம் நீச்சல் குளத்தில் இருந்த கடற்கன்னி  இரு கைகளை மட்டுமே ஊன்றி அங்கு வந்தாள். அவள் அந்த புதைக்குழியிலே இறங்க அவளை தடித்து பிடித்தான் ப்ரதீப். அதில் அவனை திரும்பி ஒரு பார்வை கடற்கன்னி பார்க்க, பிரதீப் தானாகவே அவனின் கைகளை விலக்கிக் கொண்டான்.

பின் அந்த புதைகுழியினுள் இறங்கிய கடற்கன்னி, ரங்காவின் கையை பிடித்து ஒரே இழுவையில் அவனை இழுத்து மேலே போட்டாள். அதன் பின் அவள் மீண்டும் நீச்சல் குளத்தின் மேலே சென்று சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள்.

அங்கு நடந்ததை அனைவரும் திகைப்புடன் பார்த்தனர். மேலே வந்த ரங்கா மூச்சு வங்கியபடியே அனைவரையும் பார்க்க, “ரங்ஸ்..” என்று அழுகையுடன் அவனை பாய்ந்தணைத்து கொண்டாள் விலோ.

“போதும் போதும். அவனை விடு..” என்று அவளை ரங்கவிடமிருந்து விலக்கினான் ப்ரதீப். விலோவும் ப்ரதீப்பை முறைத்தப்படி நகர்ந்தாள். “டேய் ரங்கா! உனக்கு ஒன்னுமில்லை தான?” என அனைவரும் அவனை நலம் விசாரித்தனர். ஒரு நொடி கண்ணை மூடி தன்னிலைக்கு வந்த ரங்கா, “ஒண்ணுமில்லை. நல்லா தான் இருக்கேன்.” என்றான் பதட்டம் நீங்கிய குரலில்.

“என்ன இருந்தாலும் ஏஞ்சல். ஏஞ்சல் தான். முதல்ல சக்தியை காப்பாத்தினாள். இப்ப ரங்கா. இந்த செயலை தான் செய்ய வந்திருக்குன்னு க்ளுல போட்டிருக்கும் போல..” என்று ப்ரதீப் யோசனையுடன் சொன்னான்.

பின் அனைவரும் ரங்கா விழுந்த இடத்தை பார்த்தனர். இப்பொழுது அது சாதாரண ஈரம் நிறைந்த இடமாகவே காட்சியளித்தது. அத்துடன் மழையும் படிப்படியாக குறைந்து மறைய தொடங்கியது. இருண்ட வானத்தையும் அந்த இடத்தையும் பார்த்த ஷிவன்யா, “மூழ்கவைக்கும் வல்லவன்னு அந்த குறிப்புல கடைசி லைன் வந்துச்சு. அது இதுதான் போல..” என்றாள்.

“அத்தாடி! அதுக்காக இப்படியா ஒரு குழியையா பறிக்கணும். அடுத்து ஆடலாம் வாங்க..” என்றபடி அமரன் எழுந்துக் கொண்டான். “பார்த்து வாங்கப்பா கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கு..” என்று சொல்லிக்கொண்டே எழுந்த ப்ரதீப் பின்னாடி பார்த்துவிட்டு, “இதோ அடுத்து ஒன்னு கிளம்பிடுச்சு..” என்றான் தந்தியடிக்கும் குரலில்.

அவன் கூறியதை கேட்டு திரும்பிய அனைவரும் திடுக்கிட்டனர். அங்கே அவர்கள் அனைவருக்கும் முன்பே ஒரு பெரிய முதலை வாயை பிளந்தபடி இருந்தது.

“முதலையோட வேலை முதல்லையே முடிஞ்சிடிச்சுன்னு நினைச்சா, மறுபடியும் அது வைல்ட் கார்ட்ல என்ட்ரி கொடுக்குதே..” என்று விலோ கூற, அந்த முதலை அவர்கள் அனைவரையும் நெருங்கிய படி ஊர்ந்து வந்தது.

அவர்கள் நின்றிருந்த மேல் தலத்தை அடுத்து கப்பலின் இரு முனைகளிலும் மேலே  சிறு தலம் இருந்தது. அதற்கு செல்ல படிகளும் இருந்தன. ஆனால் அதில் இத்தனை நபர்கள் இருக்குமளவு இடமில்லை. எனவே, இதற்கு மேல ஓடவும் முடியாது! ஒளியவும் முடியாது! என்ற நிலைக்கு வந்துவிட்டனர். முதலையிடமிருந்து தப்பிக்க பின்னே சென்றுக் கொண்டே, “என்ன செய்வது?” என ஒருவரின் முகத்தை மற்றவர் பார்த்தனர்.

ரங்காவை மேலெழுப்ப உபயோகித்த கயிற்றை பார்த்த அமரனிற்கு யோசனை ஒன்று வர மெல்ல அனைவரிடமும் சொன்னான். “டேய் பார்த்து டா. அதுகிட்ட மட்டும் மாட்டுனோம். நாம காலி..” என்ற ராங்க அந்த கயிறை எடுத்து அமரனிடம் கொடுத்தான்.

அமரன் அந்த கயிறை சுருக்கு கயிறாக மாற்றி, கோர பற்களால் நிறைந்திருந்த வாயை, பிளந்துக்கொண்டு ஊர்ந்தபடியே அவர்களை நெருங்கிய முதலையின் வாய் அந்த கயிற்றில் அடங்குமாறு போட்டவன் அதனின் முடிச்சினை சுருக்கி கட்டிவிட்டான். அந்த கயிற்றின் முடிச்சியினால் பிளந்திருந்த முதலையின் வாய் பசைத்தடவியது போல் மூடிக்கொண்டது.

முதலையின் பலமே அதன் வாய் தான். அதனின் வாயை மூடிவிட்டால் அவ்வளவு சீக்கிரம் அதனால் திறக்க முடியாது. எனவே, அதனின் வாயை கயிற்றில் கட்டி வைத்ததனால், “இப்பொழுது ஆபத்தில்லை..” என அதனை நெருங்கிய அமரனும் ரங்காவும் சேர்ந்து அலேக்காக தூக்கி கடலில் வீசினர். ‘தொப்!’ என்ற சத்தத்துடன் உவர்நீர் சிதற கடலுக்குள் தூக்கிப்போடபட்ட முதலை மெல்ல மெல்ல கடலின் உள்ளே அமிழ தொடங்கியது.

அதனை பார்த்துவிட்டு அப்படியே அந்த கைப்பிடியில் சாய்ந்து அமர்ந்தான் ரங்கா. அவனின் அருகே அனைவரும் கலக்கமாக அமர்ந்தனர். ஏற்கனவே குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த அனைவரும் சற்றுமுன் நிகழ்ந்த நிகழ்வினால் மேலும் சோர்வுற்றனர்.

இப்பொழுது மழை மொத்தமாக விடைபெற்றிருந்தது. அப்படியே கப்பலின் நிலையை சுற்றி பார்த்தனர், மழை நன்றாக அந்த கப்பலை கழுவிச் சென்றிருந்தது. மழை நின்ற பின்னும் அங்கங்கே சொட்டு சொட்டாக நீர்துளிகள் விழுந்தபடி இருந்தது. மது குடுவைகள் நிறைந்த அட்டைப்பெட்டிகளும் அங்கங்கே சிதறி கிடக்க, ஒரு மூலையில் “சமுத்திரா” விளையாட்டு பெட்டியும் இருந்தது.

– சமுத்திரா வருவாள்

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்