
அன்று மாலை நவிலனிடம் இருந்து நிவேதாவிற்கு மெசேஜ் வந்திருந்தது. “மேடம் காலேஜ் போறீங்க ஒரு வார்த்தை சொல்லல “..
“சார் கூட என்கிட்ட நிறைய விஷயம் சொல்லல , இந்த நிமிஷம் வரைக்கும் முக்கியமான விஷயத்தையெல்லாம் மறச்சு வேற வச்சுட்டு இருக்கீங்க ” என்றாள்.
“வேற ஏதாச்சும் பேசலாமே டி” என்று கேட்டிருந்தான்…அதை பற்றி பேச விருப்பம் இல்லாமல்..
“பேசுற அளவுக்கு எனக்கு டைம் இல்ல சார் “.
“சரி நீ பாப்பா பாரு “என்று மெசேஜ் செய்திருந்தான்.
“ஓவரா பண்ணாத டா ..நைட் மெசேஜ் பண்றேன்.. இனி தினமும் படிக்க செய்வேன், பாப்பா தூங்கிடுறா நைட்ல ஒன்னும் பிரச்சனை இல்ல .
பாப்பா நைட் தூங்க ஆரம்பிச்ச பிறகு தான் நான் காலேஜுக்கு வர ஆரம்பித்து இருக்கேன்.. மெசேஜ் பண்றேன் .போன் பேச முடியாது மேக்சிமம் ..”என்று மெசேஜ் செய்திருந்தாள்.
நவிலன் அவளை எண்ணி சிரித்துக் கொண்டான். நிவேதா அதன் பிறகு அவனின் காதல் பற்றி எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
அவனும் தன் காதல் பிரச்சினை பற்றி அவளிடம் பேசவில்லை .
ஆனால் தினமும் நடக்கும் விஷயங்களை பரிமாறிக் கொண்டார்கள் .
நிவேதா,நவிலன் இறுதி ஆண்டு இறுதியில் இருந்தார்கள். ஃபர்ஸ்ட் செமஸ்டர் முடிந்து பொங்கலுக்கு வந்திருந்த நவிலன் தூரத்தில் இருந்து வனிதாவை பார்த்தும் பார்க்காதது போல் இருந்து கொண்டான்.
வனிதாவின் அண்ணி பூத கண்ணாடி வைத்து தனது நாத்தனாரை வீட்டில் போட்டுக் கொடுக்க முடிவு செய்து அவளையே பார்த்துக்கொண்டிருக்க..
அதற்கு வாய்ப்பு அளிக்காத அளவிற்கு வனிதாவும் , நவிலனும் நடந்து கொண்டார்கள்.
மாட்டுப் பொங்கல் அன்று காலையிலேயே வனிதா நிவேதாவிற்கு போன் செய்திருந்தாள் .
“”ஹாப்பி பொங்கல்..! வனிதா .. பொங்கல் எப்படி போது ?..”
“நல்லா போகுது அண்ணி “என்றாள்.
இப்பொழுதெல்லாம் அண்ணி என்று கூப்பிட ஆரம்பித்திருந்தாள், “இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணி..” என்றாள் சிரித்துக் கொண்டே ..
“அண்ணி அவரை என்ன கோவில்ல வச்சு பார்க்க சொல்லுங்க , பேசலனா கூட பரவால்ல , பிரேம் அண்ணா வீட்டுக்கு வந்தாரு, அப்ப கூட என்ன பார்த்தும் பார்க்காத மாதிரி போயிட்டாரு ..
நடுவுல ரெண்டு மூணு டைம் வந்தான் என்னால பேச தான் முடியல ..அவர நேருக்கு நேரா பாக்காம கூட எனக்கு கஷ்டமா இருக்கு” .
“அவனுக்கு மட்டும் கஷ்டமா இருக்காதா?” .
“நானும், அதை தானே கேட்கிறேன்.. அதை மட்டும் கொஞ்சம் செய்ய சொல்லுங்க”.
” வனிதா லவ்வர்ஸ்க்கு நடுவுல என்னால பேச முடியாது, நான் பேச மாட்டேன்”.
அண்ணி” அம்மா போன்ல இருந்து அவருக்கு போன் பேச எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது. ஆனா, அது இன்னும் ஏதாச்சு பெரிய பிரச்சினை உண்டு பண்ணிடும் அதான் அமைதியா இருக்கேன்..
ஏற்கனவே ,அவங்க அம்மா கிட்டவும் போய் சண்டை போட்டு இருக்காங்க எங்க வீட்ல இருந்து,அவங்க அம்மாவுக்குமே விஷயம் தெரிஞ்சிருச்சு .அது இன்னும் பெருசாகிட கூடாது என்பதற்காக தான் அமைதியா இருக்கேன்.
நீங்க சொன்னா அவர் கேட்பார் அதான் “என்றாள்.
“நான் சொன்னாலும் அவன் கேட்க மாட்டான்,நான் சொல்லவும் மாட்டேன் “என்று விட்டு , “பொங்கல ஒழுங்கா செலிப்ரேட் பண்ணு, அவனையே பார்த்துட்டு இருந்து வீட்ல திட்டு வாங்கதா..” என்று விட்டு வைத்து விட்டாள்.
அன்று மாலை கோவிலுக்கு கிளம்பி இருந்தாள் வனிதா ..,
தூரத்தில் தனது நண்பர்களுடன் உட்கார்ந்து இருக்கும் நவிலனை கண்கள் மின்ன பார்த்தாள் .
ஆனால் ,அவன் இவளை பார்க்கவே இல்லை. அவனது நண்பர்கள் சொல்லியும் கூட திரும்பி பார்க்காமல் அமைதியாக இருந்தான்.
வனிதா தான் புலம்பிக்கொண்டே அவனைத் தாண்டி சென்று சாமியை தரிசனம் செய்து கொண்டிருந்தாள்.
அவள் கண்கள் மூடி சாமியின் முன்பு இரு கரங்களை கூப்பி வேண்டிக் கொண்டிருக்க..
அவளது நெற்றியில் திருநீறு பூசப்பட்டது ஒரு கரங்களால், கண்களை திறக்காமல் அவனது பரிசத்தத்தை உணர்ந்தவளின் கண்களில் கண்ணீர் காட்டாற்று வெள்ளமாக வழிந்தது .
தனக்கு திருநீர் இட்டு விட்டது. யார் என்பதை அறியாதவளா ? மூடிய கண்களில் நீர் வழிய அமைதியாக இருந்தாள்…
“கண்ணை திறந்து பாரு டி , லூசு உனக்காக தான் வந்து இருக்கேன். சுத்தி ஆளுங்க இருக்காங்க, யாராச்சும் வர மாதிரி இருந்தா சிக்னல் கொடுக்க சொல்லிட்டு தான் வந்து இருக்கேன்…ப்ளீஸ் ரெண்டு வார்த்தை பேசுடி” என்றான்..வலியுடன் உணர்ச்சியாக..
அப்போதும் அவள் கண்களை திறக்காமல் இருக்க..
” எனக்கு ஒரு மாதிரி இருக்கு டி .பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு ..உன்ன பாக்காம..உன் கிட்ட பேசாம .” என்றான் குரல் கம்ம, தொண்டை அடைக்க
வேகமாக கண்களை திறந்தவள்.. அவனது சட்டையை கொத்தாக பிடித்திருந்தாள். ஆனால் ,அவளுக்கு வார்த்தை வரவில்லை ,அவனை பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“பிளீஸ் டி கொல்லாத வனி “.. என்றான் இறைஞ்சலாக..
அவனை திரும்பி பார்த்தவள் , அவனது கண்களோடு தன் கண்களை கலக்க விட்டவள் ,அடுத்த நொடி வேகமாக திரும்பி விட்டாள்.
“லூசு உன்னை பார்க்க தான்டி இவ்ளோ கஷ்டப்பட்டு வந்து இருக்கேன்”என்றான் அழு குரலில்..
“இவ்ளோ நாளா என்ன பாக்கணும்னு தோணல ..இப்ப மட்டும் என்னவாம் ?”என்றாள் உதடு துடிக்க.
“அப்படி இல்ல டி “.
“வேண்டாம்” என்று விட்டு அவனை விட்டு நகர்ந்து செல்ல முயல…
“வனி..” என்று வேகமாக அவளது கையை பிடித்தான்..
” யாராச்சும் பாத்திடா போறாங்க ..கையை எடு,நீங்க போயிட்டு உங்க வேலை என்னவோ அதை பார்க்கலாம் .
என் பின்னாடி வந்து டைம் வேஸ்ட் பண்ணவும் வேணாம் ,உங்க பேர கெடுத்துக்கவும் வேணாம் ” என்று கோபமாக சொல்லி விட்டு வேகமாக கீழே இறங்கி கூட்டுதத்தோடு சேர்ந்து விட்டாள்.
சிரித்துக் கொண்டான் நவிலன், ‘இப்போ கூட உனக்கு என் மேல நம்பிக்கை இல்லாம இல்ல டி, என்னை யாரும் எதும் சொல்லிட கூடாதுன்னு நினைச்சுட்டு போற ..
உள்ளுக்குள்ள அவ்ளோ ஆசை என்ன பாக்கணும்னு ,ஆனாலும் ஒரு நிமிஷம் கூட முழுசா என் கண்ணை கூட உன்னால பார்க்க முடியல ‘என்று மனதிற்குள் எண்ணி விட்டு கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு நகர்ந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டான்.
பொங்கல் லீவ் நல்ல முறையில் முடித்துக் கொண்டு நவிலன் காலேஜ்க்கு திரும்பி விட்டான்.
வனிதா பஸ் ஏறியவுடன்
நிவே தான் “பொங்கல் எப்படி போச்சு வனிதா?” என்றாள்.
“நல்லா போச்சு அண்ணி.. உங்களுக்கு எப்படி போச்சு” என்று கேட்டாள் .
“எனக்கு என்னடா அம்மா வீட்டுல தான இருக்கேன். அவர் வந்து பார்த்துட்டு போனாரு. ..”
“நீங்க பொங்கலுக்கு உங்க வீட்டுக்கு போகலையா? ”
“போகணும் வனிதா இந்த இயர் முடிச்சிட்டு தான் போவேன்…”
“ஓ! சரி அண்ணி. பாப்பா நல்லா இருக்காளா ?..”
“நல்லா இருக்கா வனிதா. ஒன்னும் பிரச்சனை இல்லையே. ..” என கேள்வி எழுப்பினாள்.
வனிதா நிவேதாவிடம் “நீங்கதான் அவர என்ன பாக்க வர சொன்னீங்களா ?”என்று கேட்டாள் .
“உன்ன வந்து பார்த்தானா என்ன ?”என்றாள் ஆனந்தமாக.
“அப்போ நீங்க என்ன பாக்க வர சொல்லி சொல்லலையா ?” .
அவளது கையை வேகமாக பிடித்த நிவே.” நான் உன்கிட்ட சொன்னது தான், நான் அவன் கிட்ட உன்ன வந்து பார்க்க சொல்லி சொல்லல …”
சரி அத விடு.. உன் கிட்ட பேச செஞ்சானா?”
நடந்ததை வனிதா சொல்ல..
” பேசி இருக்கலாம் இல்ல வனிதா”.
“பேசுனா சரி வராது அண்ணி.என்னோட ஃபியூச்சர் எப்படி முக்கியம்னு அவர் நினைக்கிறாரோ ,அதே அளவுக்கு அவரோட ஃபியூச்சர் எனக்கு முக்கியம் .
அவங்க ஃபேமிலி பத்தி எனக்கு தெரியாதது எதுவும் இல்லை .இருக்கட்டும் கொஞ்ச நாள் போகட்டும் “என்று விட்டு தனது வகுப்பறை நோக்கி சென்று விட்டாள் வனிதா.
பொங்கல் முடிந்து ஒரு வாரம் இருக்கும்.. அன்று திடீரென்று நவிலன் இரவு வேளையில் தன் வீட்டிற்கு வந்திருந்தான் .
தனது அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று தனது அம்மா போன் செய்திருக்க..
,வேகமாக வந்து அப்பாவை மருத்துவமனை அழைத்துச் சென்றிருந்தான்.
அங்கு இதற்கு மேல் தாக்கு பிடிக்காது ..குடித்து குடித்து குடல் வெந்து போயிருக்கிறது, இவர் இதற்கு மேல் பிழைப்பதற்கு சாத்தியம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
தன் அப்பாவை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தான் ..
அன்று இரவு நவிலனின் அம்மா சுந்தரி புலம்பி தள்ளி இருந்தார் .
தன் தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டு இருந்தார்.” இந்த மனுஷனை கட்டி எந்த சுகத்தை கண்டேன்.. .. என் புள்ளைங்களுக்கு கூட எதையும் வாங்கி போடல..அப்பனா அவனுங்களும் எதும் செய்யல..புருஷனா எனக்கும் ஒன்னும் செய்யல..ஒன்னுத்குக்கும் உதவாம இருந்தாலும்.. ஆம்பளனு கூட துணைக்கு மட்டும் தான் இருந்தான்…” என்று மனதில் இருப்பதை வாய் விட்டு கொட்டி அழுதார்..
மறுநாள் விடியற்காலை 4:00 மணி போல் நவிலன் தந்தை முருகேசன் இறந்துவிட்டார்.
விடியற்காலை 3:00 மணி போல் தனக்கு வயிறு ரொம்ப வலிப்பதாக தனது மனைவியிடம் சொல்ல..
வேகமாக நவிலன் அவரது அருகில் வந்தவன்..” என்ன செய்து.. என்ன பண்ணுது பா ” என்று கேட்டான் .
“இதுவரைக்கும் நான் உங்களுக்கு எந்த நல்லது செய்யலடா என்ன மன்னிச்சிடுங்க. ஆனா, உங்க அம்மாவை இப்படியே விட்டுடாதா .. உயிர் போகுற நிலைமையில் இருக்கும்போது தான் உன் ஆத்த மேலே எனக்கு கொஞ்ச நஞ்ச பாசம் கூட வருது.
ஆம்பள பையனா இருப்பதால நீ எப்படியும் பொழச்சிப்ப ,ஆனா உங்க ஆத்தாவை இங்க சுத்தி இருக்க மக்க முன்னாடி இப்படியே விட்டுட்டு போறது கொஞ்சம் பயத்தை தருது டா.
என் தொல்லை தாங்காம தான் பம்பாய் போய் வேலை செஞ்சிட்டு இருக்கா, இனியாவது அவளை இங்கேயே வச்சு பாத்துக்க டா .அவளை அங்க தனியா அனாதை மாதிரி அனுப்பி வச்சிடாதீங்க டா “என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அவரது உயிர் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்று இருந்தது.
நவிலனுக்கு ஒரு சொட்டு கண்ணீர் மட்டுமே வந்ததே தவிர, மேற்கொண்டு அவனுக்கு அழுகை கூட வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும் .
இறக்கும் தருவாயில் தான் தன் தாயின் மீது அவருக்கு பாசம் கூட பொங்கி இருக்கிறது என்று எண்ணியவன் ,தன் கண்ணீரை துடைத்து விட்டு தன் அம்மாவை தேற்றினான்.

