
” ஓ அப்போ எங்க அம்மா அன்னைக்கு நம்மளை பார்த்தது தான் தப்பு ம்ம்ம், நீங்க செஞ்சது எதுவுமே தப்பு இல்ல அப்படித் தானே? இப்ப கூட நீங்க செஞ்சதை தான் நியாயம்னு சொல்ல வர்றீங்க இல்லையா? ஒரு பொண்ணோட அனுமதியே இல்லாம அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு, சட்டப்படி என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா உங்களுக்கு?
உங்க கிட்ட போய் சட்டத்தை பத்தி பேசுறேன் பாருங்க, அது தான் கூடவே சட்டம் தெரிஞ்ச உங்க ப்ரெண்டு இருக்காரே, அவர் போதாதா வர்ற பிரச்சினைகள்ள இருந்து உங்களை ஈசியா எஸ்கேப் ஆக்கிவிட, நான் சொல்றது கரெக்ட் தானே தீபன் அண்ணா?”
“மது ப்ளீஸ் புரிஞ்சுக்கோ அன்னைக்கு உன்னை நான் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டது, உன்னை போலவே இவங்க யாருக்கும் தெரியாது. கல்யாணம் நடந்ததுக்கு அப்புறம் உங்க அம்மாவை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணின போது தான், அவங்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்துச்சு.
அவசரமா நான் உன்னை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணதுக்கு காரணமே, எங்க உன்னை இழந்து விடுவேனோன்ற பயம் தான். உன்னை நான் எப்பவும் இழக்க விரும்பல மது, உன்னை கல்யாணம் பண்ணி என் கூடவே வெச்சுக்கணும்னு ஆசைப்பட்டேன், நீ எப்பவும் என் கூட இருக்கணும்னு நினைச்சேன். உனக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமோன்னு தான் அவ்வளவு அவசரமா உனக்கு கூட தெரியாம, உன்னை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டேன். சத்தியமா உன் மேல இருக்க காதல்னால தான் இத்தனையும் பண்ணினேன் மது, ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோயேன் வேற எந்த தவறான நோக்கமும் இல்ல.”
” வாட் காதலா?… ஓஓஓஓஓ இதுக்கு பேர் தான் உங்க ஊர்ல காதலா?… லவ் பண்ற பொண்ணு மனசு நோக கூடாதுன்னு நினைக்கற லவ்வரை பார்த்திருக்கேன், தன் லவ்வரோட கால்ல முள்ளு குத்துனா கூட, கண்ணு கலங்கி போற லவ்வரை பத்தி கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா அவளை அவ குடும்பத்து கிட்ட இருந்து பிரிச்சு, கெட்ட பேரு வாங்க வெச்சு அவளை முட்டாள் ஆக்கி, உங்க துணையாக ஆக்கிக்கிறது தான் நீங்க அந்த பொண்ணு மேல வச்சிருக்கற காதலா?”
வேந்தனுக்கு தெரியும் எப்படியும் இந்த சூழ்நிலை வரும், அதை தான் எதிர் கொண்டு தான் ஆக வேண்டி இருக்கும் என்று, ஆனால் அந்த நாள் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று, அவன் எதிர்பார்க்கவே இல்லை. அவளது கோபத்தின் நியாயம் புரிந்தது, ஆனால் தன்னுடைய நிலையினை என்ன சொல்லி அவளுக்கு புரிய வைக்க? வார்த்தைகள் இன்றி தடுமாறினான் வேந்தன்.
“இதுக்கும் மேல உங்க முகத்துல முழிக்க கூட எனக்கு இஷ்டம் இல்ல, தயவு செய்து இனியாவது என்னை விட்டுடுங்க. எனக்கு நல்லது பண்ணனும்னு நினைச்சா இனி என்னை நெருங்காதீங்க, உங்களை பார்க்கவே எனக்கு வெறுப்பா இருக்கு.”
அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே ஒரு தோட்டா பறந்து வந்து வேந்தனது தோளை உரசிக் கொண்டு, கல் மண்டபத் தூணில் பட்டது. உரசி சென்ற குண்டு பட்டு அவனது தோளில் இருந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது. வேந்தனது தோளில் ரத்தத்தை கண்டு உறைந்து போய் நின்றிருந்த மதுவை, கீழே இழுத்து ஒரு தூணுக்கு பின்னால் அமர வைத்த வேந்தன், அவள் மீது எந்த குண்டும் படாதவாறு அவளை மறைத்தபடி அமர்ந்து கொண்டான்.
” ஐயோ தீரா…, ர… ரத்தம்…. ரத்தம் வருது…”
அவள் கதறியபடி அவன் அருகில் செல்வதற்குள் இன்னும் பல தோட்டாக்கள் அவர்களை சுற்றி வெடிக்க ஆரம்பிக்க, சூழ்நிலையை புரிந்து கொண்ட நண்பர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு எதிரிகளை தாக்கத் தொடங்கினர். துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தவனை நோக்கி தீபன் ஒரு கட்டையை தூக்கி வீச, அது சரியாக அவனது கையில் பட்டு துப்பாக்கி தூரச்சென்று விழுந்தது. அதற்குள் அடியாட்கள் ஐந்தாறு பேர் கையில் ஆயுதங்களுடன் அவர்களை சூழ்ந்து கொண்டனர்.
“தங்கச்சி சீக்கிரமா அந்த கல் மண்டபத்துக்குள்ள அவனை கூட்டிட்டு போம்மா, இது யாரோட வேலைன்னு தெரியல. ஆனா அவங்களோட குறி எல்லாமே வேந்தன் மேல இருக்கிற மாதிரி தான் தெரியுது. சீக்கிரமா ரெண்டு பேரும் உள்ள போங்க, வெற்றி உடனே கோயில்ல இருக்க நம்ம ஊர்காரங்களுக்கு கால் பண்ணி, உடனே இங்க வரச் சொல்லு.”
நண்பர்கள் ஆயுதங்களோடு வந்த அடியாட்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்க, வந்தவர்களில் ஒருவன் மட்டும் மதுராவின் அருகே அடிபட்டு படுத்திருந்த வேந்தனை நோக்கி, கத்தியை தூக்கி பிடித்தபடி அடியெடுத்து வைத்தான்.
கண்களில் மிரட்சியோடு அமர்ந்திருந்த மதுராவை மண்டபத்தின் உள்ளே தள்ளிவிட்ட வேந்தன், தனது தோளில் பட்ட காயத்தோடு வந்தவனோடு எதிர்த்து சண்டையிடத் தொடங்கினான்.
“எவ்வளவு தைரியம் இருந்தா எங்க ஐயாவையே ஜெயிலுக்கு அனுப்பி இருப்ப நீ? எங்க தலைவரை ஜெயில்ல அடைச்சுட்டு அவர் பொண்ணுக்கே நீ கல்யாணத்துக்கு தேதி குறிக்கிறியோ? நீ உயிரோட இருந்தா தானே டா ஐயாக்கு எதிரா சாட்சி சொல்லுவே, அவர் பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வைப்பே, எங்க ஐயா சொன்னபடி உன்னை உரு தெரியாம ஆக்குறேன் பாரு டா, அப்புறம் அந்த டாக்டர் பயலையும் வெட்டி வீசறேன், அப்பறம் எப்படி இந்த கல்யாணம் நடக்குதுன்னு பார்கறோம் டா.”
வேந்தனின் தோளில் துப்பாக்கி குண்டு லேசாக மட்டும் உரசி விட்டு சென்றிருக்க, சிறு காயத்தோடு வேந்தன் தப்பித்தான். அதனால் வந்தவர்களோடு அவனும் போராடிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவனை எதிர்த்து சண்டையிட்டு கொண்டிருந்தவன் மறைத்து வைத்திருந்த சிறு கத்தியை எடுத்து, ரத்தம் வழிந்து கொண்டிருந்த அவனது தோளிலேயே இறக்க, ஒரு நொடி வலியினால் நிதானம் இழந்து வேந்தன் தடுமாறினான்.
அவனை நோக்கி முன்னேறியவனை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளியவன், விழுந்தவனை நெருங்குவதற்கு முன்பாகவே வலி காரணமாக கீழே விழ போனான், உடனே அவனை தனது மடியில் தாங்கி கொண்டாள் மது.
அதற்குள் ஊர்க்கார்களும் வந்துவிட அங்கிருந்து அடியாட்களை போலீஸ் உதவியோடு தீபன் சுற்றி வளைத்து பிடித்து விட்டான். வலியோடு போராடிய படியே தன் நண்பர்களை அருகே அழைத்த வேந்தன், அரை மயக்கத்தில் இருந்தபோதே தன் நண்பர்களிடம் உறுதியாக கூறி விட்டான்.
“டேய் வந்தவங்க மினிஸ்டர் கேஸ் விஷயமாக தான், என்னை கொல்ல வந்ததாக வெளியே சொல்ல வேண்டாம் புரிஞ்சுதா. எக்காரணம் கொண்டும் சந்துரு, லாவண்யாவோட பேரை எங்கேயும் வெளியே வர விடாதீங்க. அப்புறம் இவங்க கல்யாணத்துல பிரச்சனை வந்திட போகுது.”
“இதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம் டா வேந்தா, டேய் என்ன பார்த்துட்டு இருக்கீங்க? தூக்குங்கடா நாம ரோட்டுக்கிட்ட போறக்குள்ள ஆம்புலன்ஸ் வந்திடும்.”
“ஒரு நிமிஷம் மூர்த்தி.”
மதுவின் மடியில் இருந்தபடியே தலை தூக்கி அவளை பார்த்தவன், அவள் கண்ணீரை துடைத்து விட்டபடி,
” மது உன்னை நான் வாழ்நாள் முழுக்க, என் கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கணும் நினைச்சேன், என்னால முடிஞ்ச அளவுக்கு உனக்கு சந்தோஷத்தை மட்டுமே அள்ளி அள்ளிக் கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன், உன்னை காயப்படுத்தனும்னு என் மனசால கூட நான் நினைச்சது கிடையாது.
ஆனா எதிர்பாராத விதமாக சில சம்பவங்கள் எல்லாம் நடந்துடுச்சு, என்னை மன்னிச்சிடு மதுரா. என் உயிர் போற நொடியுல நீ என்னை உன் மடியில தாங்கின சந்தோஷமே எனக்கு போதும், ஐ லவ் யூ மதுரா.”
“ஐயோ அப்படி எல்லாம் பேசாதீங்க… அண்ணா நீங்க தூக்குங்க, ரத்தம் வேற நிக்க மாட்டேங்குதே…”
தீபன் அடியாட்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துச் செல்ல, மற்ற நண்பர்கள் மதுராவுடன் வேந்தனை தூக்கி கொண்டு மருத்துவமனை நோக்கி ஆம்புலன்ஸில் சென்றனர்.
ஆம்புலன்ஸில் இருந்த கருவிகளைக் கொண்டு, சந்துரு வேந்தனுக்கு முதலுதவி செய்யத் தொடங்கினான். மதுவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. கண்களை மூடியபடி இருந்த வேந்தனின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டவள், குழுங்கி அழ தொடங்கினாள்.
மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வேந்தனுக்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. கதவுகளுக்கு வெளியே நின்றிருந்த மதுவின் கண்களில் கண்ணீர் வற்றாமல் வந்து கொண்டே இருந்தது. அதைத் துடைக்க கூட தோன்றாமல் தன் கைகளில் இருந்த வேந்தனின் ரத்தத்தை, வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
“எந்த நேரத்துல அவரை இனி பார்க்கவே கூடாதுன்னு சொன்னேனோ அப்படியே நடந்திடும் போல இருக்கே…, கடவுளே எப்படியாவது அவரை காப்பாற்றி கொடு, இனி ஒரு நாளும் அவரை விட்டு பிரிய மாட்டேன், எனக்கு அவர் வேணும் கண்டிப்பா வேணும்.”
அவனது நண்பர்களுக்கு அவளை பார்க்கவே பாவமாக இருந்தது. இப்போது தான் வாழ்க்கையையே தொடங்கி இருக்கிறார்கள், அதற்குள் அடுத்தடுத்து எத்தனை பிரச்சனைகள்? அதைவிட வேந்தனின் நிலைமை என்ன ஆகுமோ என்ற பயம் வேறு, அவனது குடும்பத்திற்கு இவனை பற்றிய விவரம் சொல்லாமல் இருக்க முடியாதே, ஊர்காரர்கள் மூலம் விஷயம் தெரிந்தால் அவர்கள் பதட்டப்படக் கூடும் என்று நினைத்து, சந்துருவே தனது தந்தைக்கு அழைத்து அவர் மூலம் வீட்டில் இருப்பவர்களுக்கு நடந்தவற்றை எடுத்துக் கூற வைத்திருந்தான். அவர்களும் பதறிக் கொண்டு ஆஸ்பத்திரியை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வேந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மொத்த குடும்பமும் ஐ.சி.யூ விற்கு வெளியே சோகமாக புலம்பியபடியே காத்திருந்தனர். சந்துருவின் பெற்றோர்களும் அங்கு தான் இருந்தனர். சந்துரு மருத்துவர்களோடு உள்ளே இருந்து, வேந்தனது உடல்நிலையை கண்காணித்துக் கொண்டிருந்தான். வெற்றியும் மூர்த்தியும் தான் குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறிய படி, பெரியவர்களுக்கு அவ்வப்போது அருந்துவதற்கு நீர் கொடுத்து கவனித்துக் கொண்டனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு வெளியே வந்த சந்துரு, வேந்தன் ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டதாக தெரிவித்தான்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல வேந்தனை நார்மல் வார்டுக்கு மாத்திடுவாங்க, இப்ப தான் காயம் ஆன இடத்துல ஸ்டிச்சஸ் போட்டிருக்காங்க, அதனால கொஞ்ச நேரம் ஐ சி யூ ல அவனை வெச்சு தான் ஆகணும்.”
குடும்பத்தினருக்கு ஒரு இரண்டு மணி நேரமே இரண்டு யுகமாக தான் கடந்தது. அதற்கு பிறகு வேந்தன் தனியறைக்கு மாற்றப்பட, அனைவரும் அங்கு சென்றனர்.
இன்னும் அவன் கண் விழிக்காததை கண்டு அனைவரும் கவலை கொண்டனர். சிறிது நேரத்திற்கு முன்பு வேந்தனை விட்டு பிரிந்து செல்லப் போவதாக கூறிய மதுவோ, தற்போது அவனது கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். அதுவும் அவன் மருத்துவ உபகரணங்களுடன் சுவாசித்துக் கொண்டிருப்பதையும், அவன் உடல் முழுவதும் மருத்துவ உபகரணங்கள் மாட்டியிருப்பதையும் கண்டு கண்ணீர் சிந்தினாள்.
“அவனுக்கு கான்சியஸ் வர கொஞ்ச நேரமாகும் தாத்தா, அவனுக்கு நினைவு வந்தவுடனே நானே கால் பண்றேன். அதுவரைக்கும் இத்தனை பேர் ஹாஸ்பிட்டல்ல இருக்க வேண்டாம், மற்ற பேஷன்ட்ஸ்க்கு தொந்தரவா இருக்கும், அது தான் நாங்க எல்லாம் இருக்கிறோமே, நாங்க அவனைப் பார்த்துக்கிறோம். நீங்க எல்லாரும் வீட்டுக்கு போய் பிரஷ் ஆகிட்டு வாங்க .”
“சந்துரு சொல்றது சரி தான் அது தான் நாங்க மூணு பேர் இருக்கோமே, நாங்க பாத்துக்குறோம்.” என்று வேந்தனின் நண்பர்கள் கூற,
“ஆமாப்பா முதல்ல நான் போய் சாமிக்கு நேர்த்திக் கடனை செய்யனும், என் பேரன் மறு ஜென்மம் எடுத்தது போல திரும்பி வந்திருக்கான். கண்டிப்பா நான் வீட்டுக்கு போய் குளிச்சிட்டு, கோயிலுக்கு போயி நேர்த்திக் கடனை முடிச்சிட்டே இங்க வரேன்.”
என்றபடி பூவுப் பாட்டி கிளம்ப, இங்கே இருந்து வேறு ஏதும் செய்ய முடியாது என்ற காரணத்தால், குடும்ப உறுப்பினர்களும் அங்கிருந்து கிளம்பினார். ஆனால் மது மட்டும் அங்கிருந்து செல்லாமல் வேந்தனது கைகளை பிடித்தபடியே அமர்ந்திருக்க,
“மது நீயும் வீட்டுக்கு போய் குளிச்சிட்டு வாம்மா, அதுதான் நாங்க எல்லாம் இங்க இருக்கோமே.”
“இல்லண்ணா அவர் கண்ணு முழிச்சதுக்கு அப்பறமே நான் போறேன், அவர் கூட ஒரு வார்த்தை பேசிட்டா எனக்கும் நிம்மதியா இருக்கும்.”
“என்னம்மா தங்கச்சி நீ? அவன் கண் முழிக்கும் போது நீ இப்படி கை புல்லா ரத்தக்கறையோட இந்த நிலைமையிலயா அவன் கண்ணு முன்னாடி வந்து நிற்பே? நீதானம்மா அவனோட எனர்ஜி பூஸ்டர் வீட்டுக்கு போய் குளிச்சிட்டு பிரஷ்ஷா வா, கண்டிப்பா அவன் கண்ணு முழிச்சா உடனே உனக்கு கால் பண்றேன். எப்படியும் அவன் கண் முழிக்கறதுக்கு இன்னும் ரொம்ப நேரம் ஆகும், அதுக்குள்ள நீ வீட்டுக்கு போயிட்டே வந்துடலாம் .”
பெரியவர்களுக்கும் அதுவே சரி என்று பட, அவளை வற்புறுத்தி தான் வீட்டிற்கு தங்களுடன் அழைத்துக் கொண்டு சென்றனர். கிளம்புவதற்கு முன்பு வேந்தனது கை விரல்களை இறுக்கமாக பிடித்து, ஒரு முறை அவனை உற்று நோக்கி விட்டுத் தான், அங்கிருந்து சென்றாள் மது.
தீபன் அப்போது தான் போலீஸ் ஸ்டேஷனில் அடியாட்களை சிறையில் அடைத்து, அவர்களின் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்துவிட்டு வேந்தனிடம் வாக்குமூலம் வாங்குவதற்காக, அவனைக் காண மருத்துவமனைக்கு வந்திருந்தான். அவர்கள் சென்று விட்டதை உறுதி படுத்திக் கொண்ட தீபன், கதவை தாழிட்டு விட்டு வேந்தனின் அருகே வந்து நின்றான்.
இப்போது அந்த அறைக்குள் வேந்தனோடு அவனது நண்பர்கள் நால்வர் மட்டுமே இருந்தனர். சந்துரு அங்கிருக்கும் மானிட்டரை செக் செய்து, குறிப்பேட்டில் ஏதோ எழுதிக் கொண்டிருக்க, அவனுக்கு சற்று தள்ளி வெற்றியும் மூர்த்தியும் கவலையுடன், வேந்தனை சோகமாக பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர்.
சந்துருவை நேர்விழி கொண்டு நோக்கிய தீபன்,
“அப்புறம் டாக்டர் சார், வேந்தன் இப்போ ரொம்ப சீரியஸா இருக்கானா?”
“ஆ…ஆமா, ஆமா நீ ஏன் என்னை ஒரு மாதிரி பார்த்துட்டு இப்படி கேக்குறே? உன் கண்ணு முன்னாடி தானே கத்தியால குத்துனாங்க, தோள்ள தோட்டா உரசிட்டு போன இடத்துலயே கத்தியால குத்தினதால பிளட் லாஸ் அதிகமா ஆயிருக்கு, அவன் தோள்ள ரொம்ப பெரிய ஸ்டிச்சஸ் போட்டிருக்கு, அவன் கண் முழிக்க இன்னும் கொஞ்ச நேரமாகும். நீ வேணா போயிட்டு அப்புறமா வா டா வாக்குமூலம் தானே வாங்கணும், அவன் கண் முழிச்சதும் நானே உன்னை கூப்பிடுறேன்.”
“உங்களுக்கு எதுக்கு டாக்டர் சார் சிரமம், இதோ நானே அவன்கிட்ட வாக்குமூலம் வாங்கிக்கறேன்.”
சந்துரு திரு திரு திருவென்று முழிக்க தீபன் வேந்தனின் வலது கால் அருகே சென்று அதன் மீது ஏறி அமர, அம்மா என்று அலறியபடியே எழுந்து அமர்ந்தான் வேந்தன்.
