Loading

     நிரஞ்சனாவை தேடி சென்ற மாறனும் ராகுலும், பல மணி நேர தேடுதல்களுக்குப் பிறகு, கடைசியாக வேடந்தூருக்கும் மேலூருக்கும் இடையே உள்ள காட்டுக்கு நடுவில், ஒரு குகையை கண்டுபிடித்தனர்.

   பதுங்கிப் பதுங்கி உள்ளே சென்றவர்கள், ரத்தம் உறிஞ்சப்பட்ட நிலையில் பல உடல்கள் அங்கங்கே தூக்கி வீசப்பட்டிருப்பதை கண்டு, அதிர்ந்து போயினர்.

   அங்கு அந்த உடல்களுக்கு நடுவே பெரிய ராட்சச சிலையின் முன்பு, நிரஞ்சனா படுக்க வைக்கப்பட்டிருந்தாள். ஓடிச் சென்று அவளை எடுத்துக் கொண்டு, இருவரும் உடனடியாக அந்த குகையை விட்டு வெளியே வந்து விட்டனர்.

  கொற்றவை தேவியின் சிலை பூமிக்குள் புதைய ஆரம்பிக்கும் போதே, குகை ஆட்டம் காண ஆரம்பித்தது. படிப்படியாக குளத்தில் இருந்த நீரின் அளவு கூட உயரத் தொடங்கியது. அதோடு குகை அப்படியே இடிந்து விழ ஆரம்பித்தது. பெரிய பாறாங்கல் ஒன்று சாமியாரின் மீது விழுந்து, அவனை அப்படியே நசுக்கிக் கொன்றது.

  குகையில் இருந்து விழும் கற்களுக்கு இடையே, தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள அங்கும் இங்கும் ஓடிய மதுராவின் கைகளை, ஒரு வலிய கரம் பிடித்து இழுக்க, தடுமாறி குளத்துக்குள் விழுந்தவளை தன் கைகளில் ஏந்தி கொண்டான் வேந்தன்.

  காட்டிற்கு வெளியே அமைந்திருந்த ஏரியில் குதித்து சுரங்கப்பாதையின் வழியே, மூலவர் சன்னிதியை அடையலாம் என்று நினைத்திருந்தவன், சுரங்கப்பாதை அடைபட்டு இருக்க, தனது கையில் உள்ள வீரபத்திரரின் வாளைக் கொண்டு, அதை சுக்கு நூறாக உடைத்தபடி முன்னேறிச் சென்றான்.

  நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதை உணர்ந்து வேகமாக நீந்திச் சென்று, மதுராவை தனது கைகளில் ஏந்திக் கொண்டு எதிர் திசையில் நீந்தத் தொடங்கினான் மதுராவின் மன்னவன்.

  வேந்தனின் ஸ்பரிசத்தை உணர்ந்த மதுரா, வெகு காலத்திற்குப் பிறகு அவனை சந்திப்பதால் கண்களில் நீருடன் அவனோடு ஒட்டிக் கொண்டாள். அவளைக் கைகளில் இறுக்கமாக பிடித்தபடி எதிர்நீச்சல் போட்டு ஏரி கரையை நோக்கி முன்னேறியவன், அவளையும் சேர்த்து இழுத்துக் கொண்டு ஏரிக்கரையின் மீது ஏறினான்.

   இருவருக்கும் வெகு நூற்றாண்டுகளுக்கு பிறகான சந்திப்பு இது, அந்த நான்கு கண்களும் காதலில் கசிந்துருகி கட்டிக் கொள்ள நினைக்கும் நேரம், இடி முழக்கம் ஒன்று வானில் இருந்து எழுந்து அருகருகே நின்று கொண்டிருந்த இருவரையும் தூர வீசியது.

  மணல் புயலுக்குள் வேந்தன் தத்தளித்துக் கொண்டிருக்க, தூக்கி வீசப்பட்ட மதுராவின் அருகே மோகனமாக தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, ஆவி உருவத்தில் நடந்து வந்தால் மோகனா.

  தனது கைகளை சுழற்றி திரிசூலத்தை வரவழைத்த மதுரா அதை மோகனாவை நோக்கி வீச, அது அவளது ஆன்மாவின் உள்ளே புகுந்து சென்று தூர விழுந்தது. ஒரு ஏளனப் பார்வையுடன் மதுராவை நெருங்கியவள்,

   “உன் திரிசூலம் என்னை என்ன செய்துவிடும்?…. நான் இப்போது ஆன்மா மட்டும் அல்ல, எனது ஆன்ம பலத்தை தவத்தின் மூலம் பல்கி பெருக்கிக் கொண்டு, விஸ்வரூபம் எடுத்திருக்கும் காலக்கோடரின் மறு அவதாரம் நான். என்னை வெல்ல உன் கொற்றவையின்  சக்தி மட்டும் போதாதடி காட்டு பிச்சி, எவ்வளவு தைரியம் இருந்தால் மறுபிறப்பிலும் என் மாமனை கட்டிக் கொண்டு, என்னை எதிர்க்க துணிந்திருப்பாய்?… இனி உனக்கு பிறவி என்பதே இருக்காதடி உன் ஆன்மாவை நான் வெளியே விட்டால் தானே, நீ மீண்டும் பிறந்து வருவாய்?… இனி என்றைக்கும் உனது ஆன்மா எனக்கு மட்டுமே அடிமையடி.”

   தனது கைகளால் மதுராவின் கழுத்தை நெறிக்கத் தொடங்கிய  மோகனா, மதுராவின் கண்களின் வழியே அவளது உயிரை உறிஞ்சத் தொடங்கினாள்.

   தனது ஒரு கையால் மடியில் பதுக்கி வைத்திருந்த அந்த பெட்டியையும், இன்னொரு கையால் தனது கழுத்தை நெறுக்கிக் கொண்டிருந்த மோகனாவின் கையையும் மதுரா பிடிக்க, தீப்பட்டது போல அலற தொடங்கினால் மோகனா.

  மூச்சு விட சிரமமாக இருந்த போதிலும், மோகனாவின் கையை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த மதுரா, அவளை இறுக்கமாக தனது கைக்குள் வைத்துக் கொள்ள தொடங்கினால், அடுத்த நிமிடமே வேந்தனை சுற்றி இருந்த மணல் புயல் மறைந்து போனது.

   வேகமாக தனது வாளோடு முன்னேறி வந்தவன், மதுராவின் கைக்குள் அடங்காமல் வெளியேற துடித்துக் கொண்டிருந்த மோகனாவின் மீது, வீரபத்திரரின் வாளை உபயோகிக்க, துடிதுடித்துப் போனாள் மோகனா.

   “மாமா உங்களை திருமணம் செய்து கொள்ள நினைத்தது தவறா? சிறு வயது முதல் உங்களையே கணவனாக மனதில் நினைத்து உயிர் வளர்த்த நான், என்ன குற்றம் செய்து விட்டேன் என்று எனக்கு இப்படி ஒரு தண்டனை…என் மனம் கவர்ந்தவனை…என் மாமன் மகனை அடைய நினைத்தது அவ்வளவு பெரிய   தவறா?… உங்களுக்காக தானே நான் இவை அத்தனையும் செய்தேன்?… என் மீது துளி கூட உங்களுக்கு அன்பு ஏற்படவே இல்லையா?அவ்வளவு பெரிய பாவியா நான்?”

கண்களில் பொங்கும் நீரோடு, தன்னை நோக்கி கேள்விகளை தொடுத்து கொண்டிருந்த மோகனாவின் முகத்தைப் பார்த்து ஒரு நிமிடம் வேந்தன் தடுமாற, அதை பயன்படுத்தி அவன் பிடியிலிருந்து வெளியேற முயன்றவளை, மதுரா தன் கை கொண்டு வீரபத்திரரின் வாளை மோகனாவின் மீது வைத்து அழுத்த, அடுத்த நொடி மதுராவின் கைகளில் உள்ள வளையல்களில் இருந்து சக்தி ரூபத்தின் ஒளி, சிவ வடிவமான  வீரபத்திரரின் வாளின் வழியே பாய்ந்து, சிவசக்தி ரூபமாக மோகனாவை தாக்கத் தொடங்கியது.

மோகனாவின் அலறல் இப்போது அதிகமாகிக் கொண்டே சென்றது, மோகனம் சிந்திய அவளது கண்கள் இருள் குழிகளாக மாற, கரும் புகை போர்த்திய உடலில் ஐந்தடிக்கு  குறையாத நாக்கு ஒன்று தொங்கி வாளாக சுழல, அவளது மோகன ரூபம் மறைந்து கொடூர பிசாசாக அவளது உருவம் மாறியது.

   “அத்தை மகள் என்றால் போதுமே, ஆவியாக இருந்தால் கூட அவளின் கண்களில் நீரை கண்டதும், உங்கள் மனம் அப்படியே அவள்புறம் பாய்கிறதோ?…. உங்களை பிறகு பேசிக் கொள்கிறேன்.

    என்னே உந்தன் வார்த்தை ஜாலங்கள்!… இந்த அளவுக்கு பேசும் நீ, அடுத்தவள் கணவனை அபகரிக்க நினைப்பது தவறு என்பதை மட்டும் நினைக்காமல்  போனாயே? போன ஜென்மத்தில் மட்டுமல்ல, இந்த ஜென்மத்திலும் அவர் எனது கணவர் தான், ஏன் இனி வரும் என் அத்தனை பிறவிகளுக்கும் அவர் எனக்கானவர் தான் புரிந்ததா உனக்கு?”

அலறலினோடே அவள் இவளை முறைத்து கொண்டு மதுரா மீது பாய வர,

  “இவ்வளவு நாட்கள் செய்த தவறுக்காக மண்ணுக்குள் புதைந்து கிடந்து, இவ்வளவு தண்டனைகளை  அனுபவித்தும் கூட, உனது மனம் மீண்டும் தீய வழிக்கு தான் செல்கின்றது. இனி நீ திருந்த போவதுமில்லை, உன்னால் இவ்வுலகத்திற்க்கு எந்த பிரயோஜனமும் இருக்கப் போவதில்லை, யாருக்காக நீ இதையெல்லாம் செய்தாயோ? அவர் கைகளாலேயே நீ மடிந்து போ, தீரா உங்கள் வாளை சுழற்றி இவளை மோகினி பள்ளத்தை நோக்கி வீசுங்கள். அங்கு குருதேவர் ஶ்ரீ சக்கர பூஜை செய்து கொண்டிருக்கிறார், இன்றே இவளுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும், ம்ம்ம் சுழற்றுங்கள்.”

அவள் கைகளை எடுப்பதற்கு முன்பே, அவள் கைகளோடு தன் கைகளை இணைத்தவன் வாளை சுழற்றி வீச, அது மோகனாவின் ஆன்மாவோடு மோகினி பள்ளத்தை நோக்கி பறந்தது.

  தனது கைகளை அவன் கைக்குள் இருந்து வம்படியாக பிரித்தவள், அவனை முறைத்தபடியே மோகினி பள்ளத்தை நோக்கி வேகமாக சென்றாள்.

  “ஹம்ம்,… எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இவள் என்னை முறைப்பதையும், சந்தேக கண் கொண்டு எரிப்பதையும் விடமாட்டாள் போலவே?”

  என்றபடியே அவள் பின்னால் ஓடினான் வேந்தன்.

  மோகினி பள்ளத்தின் முன்பு ஶ்ரீ சக்கரத்தின் மையத்தில், வீரபத்திரரின் வாளோடு ஆன்மாவாக வந்து சேர்ந்தாள் மோகனா. தனக்கு முன்பு யாக குண்டத்தில் அமர்ந்து வேத உச்சாடனங்கள் புரிந்து கொண்டிருந்த குருதேவரை, தனது சக்திகளின் மூலம் தடுக்க முயச்சித்தாள்.

   அந்த ஶ்ரீ சக்கரத்தில் இருந்து அவள் வெளியேற முயற்சித்துக் கொண்டிருக்க, வேகமாக ஓடி வந்த மதுராவை பார்த்து குருதேவர் பேச தொடங்கினார்.

“அம்மா மதுரவாணி உடனே மந்திர தகடுகளை மோகனாவை நோக்கி வீசு.”

  குருதேவரின் சொல்படி மதுரா மந்திர தகடுகளை மோகனவை நோக்கி வீசிய அடுத்த நிமிடம், மோகனாவின் ஆன்மா பற்றி எரியத் தொடங்கியது. அவளின் கதறல் எட்டுத்திக்கும் ஒலிக்க ஆரம்பித்தது. சில நிமிடங்களிலேயே மோகனா காற்றோடு காற்றாக கரைந்து போனாள். அதோடு காலகோடரின் குகையும் வெடித்து சிதறியது.

“நீங்கள் இருவரும் மறுஜென்மம் எடுத்து வந்ததற்கான நோக்கம், முற்றுப் பெற்று விட்டது. இருந்தும் இன்னும் சில நாட்களுக்கு பூர்வ ஜென்ம ஞாபகங்களோடு தான் நீங்கள்  வாழப் போகின்றீர்கள். இந்தக் குருந்த மரத்தின் அடியில் கொற்றவை அன்னையின் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும், அந்த சமயத்தில் உங்கள் இருவருக்கும் இடையே இருந்த பூர்வ ஜென்ம நினைவுகள் அனைத்தும், அப்படியே மறைந்து போகும். தங்கள் கைகளில் இருக்கின்ற வீரபத்திரரின் வாளையும், கொற்றவை அன்னையின் சக்திகளை உள்ளடக்கிய இந்த வளையல்களையும், இதோ கொற்றவை அன்னையின் இந்த சிறு விக்ரகத்தையும், ஒரு பெட்டியில் வைத்து, அந்த சிலைக்கு அடியில் அஸ்திவாரமாக புதைத்து வைக்க வேண்டும்.

இனி இந்த மோகினிப் பள்ளம் தீய சக்திகளை விரட்டும் ஒரு புண்ணிய ஸ்தலமாக வருங்காலத்தில் புகழ் பெறப் போகின்றது. இந்த எல்லை கோட்டை மிதிக்கும் போதே தீயவைகள் அனைத்தும் அடியோடு சாம்பலாகும், இது என் அப்பன் ஈசனின் அருள்வாக்கு. இதை முன் நின்று செயல்படுத்த வேண்டியது தங்களது பொறுப்பு இளவரசே.”

  “தங்கள் விருப்பப்படியே செய்கிறேன் குருதேவா.”

   அன்றைய அனைத்து செய்தித் தாள்களிலும் அமைச்சர் பொன்னுரங்கம் கைது செய்யப்பட்டது தான், பரபரப்பான தலைப்புச் செய்தியானது. பணத்திற்காக வெளிநாட்டுக்காரர்களிடம் இந்த மண்ணின் பொக்கிஷமான தெய்வ சிலைகளை, எடுத்து தருவதாக வாக்குறுதி கொடுத்து, அதற்காக பல உயிர்களை அந்த சாமியாரின் துணை கொண்டு பறித்த குற்றத்திற்காக, தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டிருந்தான்.

இவர்களின் சதிக்கு உறுதுணையாக, இந்த ஊரிலிருந்து உதவி செய்து வந்ததாக கூறி, தீபனின் தந்தை பூபதியும் கைது செய்யப்பட்டார்.

        ஊர் மக்களால் இதை நம்பவே முடியவில்லை. இவர் இப்படி இவ்வளவு அமைதியாக அதுவும் ஆன்மீக போர்வை போர்த்திக் கொண்டு, இத்தனை வேலைகளை செய்திருக்கிறாரா? என்று அனைவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

வேலப்பன் ஐயாவின் குடும்பத்தார் வேடந்தூரில் இருக்கும் மூர்த்தி தாத்தாவின் வீட்டிற்கு வந்திருந்தனர். ராகுலையும் நிரஞ்சனாவையும் கூட்டிக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு வந்த மாறன், நடந்தவைகள் அனைத்தையும் தனது குடும்பத்தாரிடம் விரிவாக எடுத்துரைத்தான். இவ்வளவு நாட்களாக அரசியல் என்ற பெயரில், தமது குடும்பத்திற்கு பல இன்னல்களை ஏற்படுத்தியதற்கு, மன்னிப்பு வேண்டி வேலப்பன் தாத்தாவின் கால்களில் விழுந்தான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்