
அடுத்தடுத்து நடந்து விட்ட இவ்விரு உயிரிழப்புகளும் அங்கிருந்தோரை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியது. தங்களது வருங்கால மகாராணியும் மகாராஜாவும் இறந்ததை எண்ணி ஊர் மக்கள் கவலை கொண்டனர். உறவுகள் அவர்கள் இறந்து விட்டதை தாங்க முடியாமல் மண்ணில் விழுந்து புரண்டனர்.
தமது மகளை எண்ணி பெருமை கொள்வதா! அல்லது அவளது இழப்பை இனி எவ்வாறு தாங்கிக் கொள்ளப் போகிறோம் என்று கவலை கொள்வதா! என்று தெரியாமல் கலங்கி நின்றார் ஏந்திழை அம்மையார்.
அனைவரையும் குருதேவர் தான் ஆறுதல் படுத்தினார், அவர்களைப் போலவே அரசரும் கலங்கிக் கொண்டிருப்பதை கண்டவர்,
“அரசே ஊர் மக்களுக்காக தங்களது உயிரையே தியாகம் செய்த அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்தாமல், அவர்கள் மீண்டும் பிறந்து வருவதற்காக காத்திருப்போம். அனைவரையும் போல தாங்களும் இப்படி கலங்கி நின்றால் அடுத்து நடக்கப் போவதை யார் கையாள்வது?”
“இதற்கு மேல் என்ன நடக்க வேண்டும் குருதேவா? என் வருங்கால சாம்ராஜ்யமே உயிர் துறந்து விட்டதே!… இந்நாட்டு மக்களை காப்பாற்ற என் மருமகள் உயிர்த் தியாகம் செய்து விட்டாள்.
என் மகனும் அந்த தீய சக்தியினால் வஞ்சிக்கப்பட்டு, நஞ்சு கொண்ட அம்பை முதுகில் தாங்கி உயிரை விட்டு விட்டான். இதற்கு மேல் நான் என்ன காண வேண்டும் என்கிறீர்கள் குருதேவா?… போதும் இந்த வாழ்வு,… அந்த எமதர்மர் இப்போதே வந்து என்னை கூட்டி செல்ல மாட்டாரா என்று வேண்டி கொண்டிருகின்றேன்.”
“அரசே என்ன பேச்சு இது? வருங்காலத்தில் அவர்கள் இந்த மண்ணில் பிறந்து வரும்போது, அவர்களுக்கான பாதுகாப்பை நாம் அமைத்து கொடுக்க வேண்டாமா? மறுபடியும் மோகனா உயிர் பெற்று வரும் போது, அவளை முற்றிலுமாக ஒழித்து கட்ட இவர்களுக்கு தேவையான சக்திகளை, நாம் சேகரித்து வைக்க வேண்டாமா?”
“குருதேவா தங்கள் என்ன கூறுகிறீர்கள்? அப்படி என்றால்?”
“ஆம் நாம் மோகனாவை தற்காலிகமாகத் தான் அடக்கி வைத்திருக்கின்றோம், ஒருவேளை அவள் இங்கிருந்து வெளியேறிவிட்டால், அவளை தடுக்க உங்கள் மகனும் மருமகளும் தான் மீண்டும் பிறந்து வருவார்கள், அவர்களுக்கான ஆயுதத்தை நாம் பத்திரமாக பாதுகாத்து வைக்க வேண்டாமா?”
“குருதேவா நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், தங்களின் சொல் படியே நாங்கள் கேட்டு நடக்கின்றோம்.”
குருதேவர் இளவரசன் கைகளில் இருந்த அந்த வாளின் கைப்பிடியை பிடித்து திருக, அது சிறிய கத்தி போன்று உருமாறியது, அதை மகாராணியிடம் கொடுத்தவர்.
” அரசே மகாராணியாரிடம் இருக்கும் அந்த வளையலையும், இதோ இந்த வீரபத்திரரின் வாளையும், முறையாக உங்கள் குடும்பம் தலைமுறை தலைமுறையாக பாதுகாத்து வர வேண்டும். பிற்காலத்தில் உமது பரம்பரையில் இளவரசரும், ஏந்திழை அம்மையாரின் தலைமுறையில் மதுரவாணியும் பிறந்த வருவார்கள். இவர்கள் இருவருக்காகவும் தாங்கள் இனி பாதுகாக்கப் போகும் இந்த பொருட்கள் தான், உற்ற துணையாக இருந்து மோகனாவின் ஆன்மாவை முற்றிலுமாக ஒளித்துக் கட்ட அவர்களுக்கு வழிவகை செய்து கொடுக்கும்.”
“அப்படியே செய்கிறோம் குருதேவா.”
சில நாட்களில் அந்த பள்ளத்தின் அருகே முளைத்த குருந்த மரத்தின் வேர்கள், அந்த மோகினி பள்ளத்தை அப்படியே மூடிவிட்டது. மகிழபுரியில் கவிதாயிணிக்கும் பிரதீபனுக்கும் மன்னரின் உத்தரவின்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது, அந்த வாளையும் வளையல்களையும் பத்திரமாக ஒரு பெட்டியில் வைத்து, பூஜை அறையில் அவர்களிடம் கொடுத்த குருதேவர், அவற்றை முறையாக பூஜை செய்து வருமாறு கூறினார்.”
அத்தோடு அரசு குடும்பத்திற்கும் ஏந்திழை அம்மையாரின் வம்சாவழியினருக்கும், பெண் கொடுத்து பெண் எடுக்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்று, குருதேவர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
பிரதீபனுக்கும் கவிதாயிணிக்கும் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, தனது மகனைப் பிரிந்த துயர்த் தாளாமல் மகாராணியாரும் அரசரும் ஒருவர் பின் ஒருவராக இறைவனடி சேர்ந்தனர்.
கொற்றவை தேவியின் அருளாசியின்படி குருந்தங்காட்டில் வசித்த மக்களில் இருந்து ஒரு குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தக் குடும்பத்திற்கும் அரச குடும்பத்திற்கும் இடையே பெண் கொடுத்து பெண் எடுக்கும் பழக்கம் வழி வழியாக பின்பற்றப்பட்டது. அவர்கள் தான் வேலப்பன் ஐயாவின் முன்னோர்கள்.
சிறிது நாட்களிலேயே ஏந்திழை அம்மையாரும் இறைவனடி சேர்ந்து விட, குருந்தங்காட்டுக்குள் மேகமலையை சேர்ந்த ஆதிவாசிகளின் அட்டூழியங்களும் அராஜகங்களும் எல்லை மீறின, அதனால் அங்கிருந்த மக்களில் பாதி பேர் அவர்களால் அழிந்து போயினர்.
அங்கிருந்து தப்பித்து வந்த ஒரு சில குடும்பங்கள் மட்டும் ரத்தினபுரிக்கு குடி பெயர்ந்தனர். அதுதான் பின்னாளில் வேலப்பன் ஐயாவின் குடும்பம் குடியிருக்கும் மேலூராக மாறிப்போனது.
தற்போது பல தலைமுறைகள் கடந்து வேலப்பன் ஐயாவின் காலத்தில் தான் குலதேவி ஜனித்திருக்கின்றாள்.
மெதுவாக காலச்சக்கரத்தில் பயணித்து நாம் இன்றைய நாளுக்கு திரும்பி வந்தால், அதோ தனது பூர்வ ஜென்ம நினைவுகளின் பிடியில் சிக்கி, தனது உயிர் போகும் கடைசி நிமிடத்தில் தன் கண்களுக்குள், தனது கணவனை நிரப்பிக் கொண்ட அதே மதுரவாணியாகவே எழுந்தமருகின்றாள் மதுரயாழினி. அவள் தனது கண்களை திறந்த போது கருவிழிகள் இரண்டும் நீல நிறத்தில் மிளிர்கின்றன.
விழிதாண்டி வழிந்த கண்ணீரை துடைத்தெறிந்தவள், இது கண்ணீர் விடும் நேரம் அல்ல மற்றவர்களுக்கு கவலையை உண்டாக்கும் மோகனாவின் கதை முடிக்க வேண்டிய நேரம், நான் இப்போது பிறந்திருக்கிறேன் என்றால் அவளும் உயிர் தெழுந்திருப்பாளே, அவளால் பிற உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் முன்பே, அவளை எப்படியாவது அழிக்க வேண்டும் என்ற முடிவோடு, அவளை புதைத்த அந்த மோகினி பள்ளத்தை நோக்கி கோபத்தோடு நடக்க தொடங்கினாள்.
மதுராவிடம் இருந்து பறந்து சென்ற மோகனாவின் கரும்புகையானது மந்திர உச்சாடனங்களால் இழுக்கப்பட்டு, தற்போது அது மேலூருக்கும் வேடந்தூருக்கும் இடையே உள்ள காட்டினை நோக்கி சென்றது.
முன்னொரு காலத்தில் காலகோடரின் சிலை பூஜிக்கப்பட்ட அதே குகையில், ரத்தத்தால் வரையப்பட்ட சக்கரத்தின் நடுவே நிரஞ்சனாவை படுக்க வைத்து, சுற்றி ரத்தத் துளிகளை சிதறவிட்டு, மந்திரங்களை உச்சரித்து கொண்டிருந்தனர் குருஜியின் சிஷ்யர்கள்.
நிரஞ்சனாவை தூக்கிக் கொண்டு வரும்போது அவள் கத்தி கூச்சல் போட்டதால் மயக்க மருந்தை அவள் மூக்கில் வைத்து அமுத்தி, அவளை தூக்கிக் கொண்டு வந்திருந்தனர். அரைகுறை மயக்கத்தில் அவளது காதுகளில் இவர்களின் மந்திரங்கள் ஒலித்தாலும், அவள் கைகளில் கட்டி இருந்த கயிறு அவளைக் காத்து நின்றது.
மதுரா மேல் அறையில் இருந்து கீழே இறங்கி வந்து பார்த்த போது, அந்த வீட்டில் ஒரு அமானுஷ்யம் உலவுவதை அவளால் உணர முடிந்தது.
சற்று நேரத்திற்கு முன்பிருந்த குடும்ப உறுப்பினர்கள், ஒருவரை கூட காணவில்லை. அங்கே ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்தவள், தன் கண்களை மூடி அங்கிருக்கும் தீய சக்தி என்ன என்பதை யூகிக்க முயற்சித்தாள்.
அப்போது திடீரென்று வீட்டிற்கு பின்புறம் இருந்த, கருப்பட்டி காய்ச்சும் கொட்டகையில் இருந்து சத்தம் வருவது போல இருக்க, உடனே அங்கு சென்று பார்த்தாள்.
அவள் ஓலை வேய்ந்த அந்த கொட்டகைக்குள் சென்ற அடுத்த நிமிடமே, முன்பக்க கதவு சாத்திக் கொண்டது. திடீரென்று ஜன்னலுக்கு வெளியே சிரிப்புச் சத்தம் கேட்க, யாருடைய வேலையாக இருக்கும் என்று எட்டிப் பார்த்த போது, அங்கு கைகளில் தீப்பந்தத்தை ஏந்திய படி தீபனின் தந்தையான பூபதி ஏளன சிரிப்போடு நின்று கொண்டிருந்தார். முந்தைய பிறவியில் மோகனாவின் தந்தையான விஜயேந்திர பூபதியாக இருந்தவன் இவன் தான்.
ராகுலுடன் வேந்தன் நிரஞ்சனாவை தேடி அங்கிருந்து கிளம்பிச் சென்றதுமே, பலமான சூரைக்காற்று வீச ஆரம்பித்தது. வீட்டிற்கு முன்புறம் போடப்பட்ட பந்தல்கள் எல்லாம் காற்றில் சுக்குனூறாகின, அங்கிருந்தவர்கள் அனைவரும் தங்களது உயிரை காப்பாற்றி கொள்ள திசைக்கொருவராக அங்கிருந்து சிதறி ஓடினர்.
அப்போது தான் பூபதி தனது முகத்தை ஒரு துணியினால் மறைத்துக் கொண்டு அடியாட்களுடன் உள்ளே நுழைந்து, அங்கிருந்த குடும்ப உறுப்பினர்களை அடித்து இழுத்துச் சென்றான்.
இலவு காத்த கிளியாக அவர் மதுரா வேந்தனோடு சேராமல் இருக்க வேண்டும் என்று, ஊரின் எல்லையில் அவளுக்காக காத்துக் கொண்டிருக்க, குடும்ப உறுப்பினர்களின் துணையோடு இங்கு இவர்கள் திருமணம் செய்து கொண்டு வந்த செய்தி அறிந்து, கோபத்தோடு வேந்தனின் வீட்டை நோக்கி வந்தவர், தமது கோபத்தையெல்லாம் அங்கிருந்தவர்களின் மீது காட்டினார்.
தனது மகளுக்கு எதிராக இவர்கள் செயல்பட்டால் அவர்களை அழித்து விட முடிவு செய்தவன், அடியாட்களின் மூலம் அவர்களை ஊரை விட்டு தள்ளி இருந்த ஒரு குடோனில் அடைத்து வைத்தான்.
வேந்தன் மறு பிறவி எடுத்ததை அறிந்ததுமே இந்த ஜென்மத்தில் மதுரா பிறப்பு எடுக்காமல் இருக்க, பல மாய யாகங்களை செய்து அவள் பிறப்பை தடுத்து வந்தான். ஆனால் எப்படியோ வேலப்பன் ஐயாவின் இரண்டாவது பிள்ளை மூலம், மதுரா அவதரித்து விட்டாள். அவள் ஒருவேளை இந்த ஊருக்குள் வந்தால் அதை தெரிந்து கொள்வதற்காக வேண்டியே, அவர் எப்போதும் ஊருக்கு வெளியே இருக்கும் அய்யனார் கோயிலில் காத்துக் கொண்டிருந்தார்.
“அடியே காட்டுப்பிச்சி வசமாக மாட்டிக் கொண்டாயா? நீ உயிரோடு இருக்கும் வரை என் மகளால் அவளது காதலனுடன் சேர இயலாது, அதனால் உன்னை இங்கேயே சாம்பலாக்கி விடுகிறேன். “
என்று தீப்பந்தத்தை ஒலை மீது வைக்க செல்லும் போது, சரியாக அங்கே வந்த தீபன் அவரது கைகளை பிடித்து தடுத்து நிறுத்தி விட்டான்.
வேந்தன் வீட்டில் இருந்து நிரஞ்சனாவை தேடி கிளம்பிய சிறிது நேரத்திலேயே, அவனுக்கு ஏதோ ஓர் உள் உணர்வு தோன்ற, தீபனுக்கு தொலைபேசியில் அழைத்து தற்போதுள்ள நிலைமையை எடுத்துக் கூறி, வீட்டில் உள்ளவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு தான் சென்றேன். அவன் வீட்டிற்குள் நுழைந்த போது தான், மதுரா கருப்பட்டி கொட்டகைக்குள் நுழைவதை கண்டு நேராக அங்கு வந்து சேர்ந்தான்.
“அப்பா உங்களுக்கு என்ன ஆச்சு? எதுக்காக இப்படி பண்ணறீங்க அந்த பொண்ணு வேந்தனோட வைஃப். அந்த பொண்ணை எதுக்காக குடிசைக்குள்ள வைச்சு எரிச்சு கொல்ல பாக்குறீங்க? “
“பிரதீபா என்னை விடு, உன் தங்கையினுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்றால், இவள் உயிரோடு இருக்கக் கூடாது.”
“எது தங்கச்சியா? என்ன உளர்றீங்க? நான் உங்களுக்கு ஒரே பையன் தானே?”
“தங்கச்சி தான்டா, உன்னோட போன ஜென்மத்து தங்கச்சி, அவ உயிரிழக்கறதுக்கு காரணமே இவதான், என் பொண்ணை துடிக்க துடிக்க கொன்னது இவதான், இவ உயிரோட இருந்தா இந்த ஜென்மத்துலயும் என் பொண்ணால தன்னோட காதலை அடைய முடியாது, அதனால இவளை நான் கொன்னே தீருவேன்.”
“அப்பா என்ன உளர்றீங்க முதல்ல தீப்பந்தத்தில் இருந்து கை எடுங்க.”
“பிரதீபா, எல்லா ஜென்மத்திலும் நீ உன் தங்கையுடைய வாழ்க்கையை கெடுக்கவே நினைப்பாயா? சேரக் கூடாத பக்கம் சேர்ந்து கொண்டு, பெற்ற தகப்பனையும், உடன் பிறந்த தங்கையையுமே எதிர்த்து நிற்க துணிந்து விட்டாயா? தள்ளி போ, அவளுக்கு இன்றே ஒரு முடிவு கட்டியாக வேண்டும். இனி பார்த்திபேந்திரனின் வம்சம் உனது தங்கையின் மூலமாகத் தான் ஜனிக்க வேண்டும், இல்லையென்றால் இந்த குடும்பத்தில் உள்ள அத்தனை பேருக்கும் உயிரோடு சமாதி கட்டி விடுவேன்.”
குடிலுக்குள் இருந்த மதுரா சத்தமாக சிரிக்க தொடங்கினாள், அவள் விரல் சொடுக்கிய அடுத்த நிமிடம், கதவு தானாக திறந்து கொண்டது.
” என்ன விஜயேந்திர பூபதி?… என்னை தீர்த்து கட்ட மறுபடியும் திட்டம் போட ஆரம்பித்து விட்டாயா? உன் திட்டங்களை எல்லாம் தான்டி இதோ நாங்கள் இணைந்து விட்டதற்கு சான்றாக, எம்மன்னவரின் கைகளினால் நான் சூடிக் கொண்ட இந்த திருமாங்கல்யம். என்னை கொன்று விட்டால் அவர் உன் மகளுடன் சேர்ந்து வாழ்வார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா என்ன? முட்டாள்…”
அடுத்த நிமிடமே பலமான காற்றில் விஜேந்திர பூபதியின் கைகளில் இருந்த தீபந்தம் அணைந்து போனது. உக்கிர காளியாக மதுரா கோபமாக பார்த்த ஒரு பார்வையில், விஜயேந்திர பூபதி தூக்கி வீசப்பட்டான்.
அங்கு நின்ற கொண்டிருந்த தீபனுக்கு அங்கு என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்றே புரியவில்லை, எப்போதுமே அமைதியாக இருக்கும் தனது தந்தை, இன்று ஏன் இவ்வாறு வித்தியாசமாக நடந்து கொள்கிறார் என்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் போதே, மதுராவின் இந்த எதிர்வினை அவனை குழப்பத்தில் ஆழ்த்தியது. தூக்கி வீசப்பட்ட தனது தந்தையை தேடிச் செல்வதைக் கூட மறந்து, மதுராவை தான் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
கீழே விழுந்த பூபதியை நோக்கி வந்த மதுரா, தனது கைகளை காற்றில் சுழற்றிட, அடுத்த நிமிடமே மோகினி பள்ளத்திற்குள் புதைந்து கிடந்த திரிசூலமானது பறந்து வந்து அவளது கைகளுக்குள் தஞ்சமானது.
விஜயேந்திர பூபதியை நோக்கி அவள் திரிசூலத்தை எறிய முனைந்த போது, அங்கு வந்த குருதேவர் அவளை தடுத்து நிறுத்தி விட்டார்.
” நில் மதுரா இவனை கொல்வதை விட முக்கியமான வேலைகள் உனக்காக காத்துக் கொண்டிருக்கின்றது. இவனது மகளை முதலில் அழிக்க வேண்டும், அவள் இருக்கும் தைரியத்தால் தான் இவன் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறான், இவனை அழித்து இந்த பாவத்தை இப்பிறவியில் நீ ஏற்றுக் கொள்ள வேண்டாம்.
அவனை விட்டு விடு, தீபா உனது தந்தையின் சுயரூபத்தை கண்டு கொண்டாயா? அவன் சுந்தரமூர்த்தி ஐயாவுடைய குடும்ப உறுப்பினர்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்து கொண்டிருக்கிறான், எப்படியாவது நீ சென்று அவர்களை காப்பாற்று.”
தீபன் மந்திரத்துக்கு கட்டப்பட்டவன் போல குருதேவரை வணங்கி விட்டு, அவர் சொல்படி சுந்தரமூர்த்தி ஐயாவின் குடும்பத்தை காப்பாற்ற விரைந்து சென்றான்.

