
பூகம்பம் – 14
பெற்றவர்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி ஆதிராவை வருத்தினாலும் மறுபுறம் ரூபனும் அவளை இம்சிக்க, இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்து துடித்தவள் மறந்தும் பெற்றவர்களின் முன்பு வராமல் அறைக்குள் முடங்கினாள்.
அவர்களை வழியனுப்பி விட்டு சிவாவும் நிவேதாவும் வர, “பெரிம்மா திராவுக்கு இந்த சம்பந்தம் பொருந்திரும்னு தோணுது.. அவங்களும் திராவை நல்லாவே பார்த்துப்பாங்க” என்று சந்தோசமாக நிவேதா கூறிட, கல்யாணிக்கும் ஆனந்தமே.
“துரு திரா எங்க.?” என்று நிவேதா வினவியதும், வேறு வழியின்றி துருவினியும் “உள்ள தான் இருக்கா அக்கா..” என்றிட, “ஓஹோ” என்றவள் ஆதிராவை தேடி சென்றாள்.
‘அய்யோ இந்த அக்கா என்ன பேச போறாங்கனு தெரிலயே..’ என்று மனதினுள் துருவினி புலம்பினாலும் நிவேதாவின் பின்னே நடந்தாள்.
அமைதியாக அமர்ந்திருந்த ஆதிராவை கண்டு “என்ன திரா எங்களுக்கு எப்படி தெரிஞ்சுச்சுனு ஷாக்கா இருக்கா.?” என்று நிவேதா புதிர் போட, பதிலின்றி ‘என்ன.?’ என்பதை போல் ஏறிட்டாள் ஆதிரா.
“என்னடி வாயை திறந்து பேச மாட்டியா.?” – ஆதிரா
“ப்ச் என்னனு சொல்லுங்க” – ஆதிரா
“ரொம்ப அலுத்துக்காத.. ரஞ்சித் கேட்டா தான் பல்லை காட்டி என்னனு கேட்பீயோ.?” – நிவேதா
‘அய்யய்யோ இந்த அக்கா ரொம்ப ஓவரா போறாங்க.. அவ வேற ரொம்ப கடுப்புல இருக்காளே’ என்று பயந்த துருவினி “அக்கா முதல்ல என்னனு சொல்லுங்க.?” என்று பேச்சை தன்புறம் இழுத்து கொண்டாள்.
“இவளும் ரஞ்சித்தும் லவ் பண்றது நமக்கு தெரியாதுனு நினைச்சிட்டு இருக்கா பாரு துரு.. அவன் என்கிட்ட எல்லாமும் சொல்லுவான்.. இவ ஏதாவது கோவத்துல போசாம போனாலும் என்கிட்ட தான் போன் பண்ணி புலம்புவான்.. இப்பவும் இவளை விட்டு குடுக்காம வீட்டுல இவ கெட்ட பேரு வாங்க கூடாதுனு நம்மளே பொண்ணு கேட்போம்னு சொல்லி கூட்டிட்டு வந்தான்.. இவ போனை எடுக்கலனா என்கிட்ட தான் அவன் புலம்புவான்..
அப்பவாவது ரெண்டு பேரும் சொன்னாங்களா.? இல்லையே.. இதுல இவகிட்ட ஏன் சொல்லலனு சண்டை போட கூடாதுனு வேற இவளோட வருங்கால கணவன் ஆர்டர் போடுறான்.. எல்லாம் என் நேரம்.. இதைய எல்லாம் கேட்டும் இதுகளுக்கு கல்யாணம் பண்ணி வெக்கணும்னு நான் வந்துருக்கேன் பாரு.. அவன் ஆதிரா ஆதிரானு ரொம்ப இம்சை பண்றான்.. அந்த இம்சைல இருந்து விடுதலை கிடைக்கவே இவங்க கல்யாணத்தை சீக்கிரம் முடிச்சரணும்னு உங்க அப்பாகிட்ட சொல்ல போறேன் பாரு..” என்று குற்றம் சுமத்துவது போல் கேலி செய்தாள் நிவேதா.
அதோடு நிற்காமல் இருவரையும் சேர்த்து நிவேதா கிண்டல் செய்திட, வேறு பேச்சிற்கு துருவினி மாறினாலும் இப்பேச்சை விடாமல் நிவேதா அதிலே நிற்க, கடுப்பாக இருந்தது ஆதிராவுக்கு.. ‘நான் என் அபியை மட்டும் தான் லவ் பண்றேன்.. அவனை மட்டும் தான் எப்பவும் லவ் பண்ணுவேன்’ என்று நிவேதாவிடம் கத்த வேண்டும் போலிருந்தது.
‘முதலில் அபியிடம் பேசி விட்டு.. ரஞ்சித்திடம் நறுக்கென்று நாலு கேள்வி கேட்க வேண்டும்.. அவனை நான் காதலிக்கறேன் என்று எப்போது கூறினேன்.? அவன் மட்டும் இப்போது இவள் எதிரில் வந்து விட்டால் அவ்வளவுதான்.. உன் மீது காதலில்லை என்று ரஞ்சித்திடம் கூறி விடு என்று எவ்வளவு முறை காவ்யா கூறியதை அசட்டை செய்தது மிகப்பெரிய தவறு என்பதையே இப்போது தான் உணர்ந்தாள்.
இவர்கள் பேசுவதை அமைதியாக பார்த்திருந்த சிவா ஆதிராவின் பிடித்தமின்மையை அவளின் முகப்பாவனைகளிலே கண்டு கொண்டான்.. ஏன்.? எதனால்.? இருவரும் காதலிக்கிறார்கள் என்று தான் ரஞ்சித் கூறியது. ஆனால் ஆதிராவிடம் எவ்வித மகிழ்ச்சியும் தென்படவில்லையே.
“நிவே அத்தை தனியா சமைச்சுட்டு இருக்காங்க பாரு” என்று மனைவியை அனுப்பியவன் ஆதிராவின் அருகில் அமர்ந்து “திராமா இங்க பாரு” என்றான்
இதில் நிமிர்ந்த ஆதிரா “மாமா” என்று கலங்கிட,நேராகவே “நீயும் ரஞ்சித்தும் லவ் பண்றேனு அவன் சொன்னது உண்மையா.?” என்று சிவா கேட்க, இல்லையென்று தலையசைத்தாள் கண்ணீருடன்.
ஆதிராவின் ‘இல்லை’ என்ற பதிலில் இதுதான் அவளின் வருத்ததிற்கான காரணமோ என்று சிவாவே நினைத்து கொண்டான். அவளிடம் வேறு ஏதாவது வினாவை எழுப்பி இருந்தால் அவளே ரூபனை காதலிப்பதை கூறி இருப்பாள்..
இதோடு சிவா வெளியேறிட, “அக்கா மாமா கிட்ட சொல்லிருக்கலாமே.?” என்று துருவினி கூறிட, “அவங்க தான் கேட்கலயே.?” என்ற ஆதிராவிற்கு கண்களும் கலங்கி போனது.
கல்யாணியிடம் ரஞ்சித்தை பற்றி பெருமையாக நிவேதா கூறி கொண்டிருக்க, சிவாவோ “அத்தை ஆதிராவுக்கு சம்மதம்னா மட்டும் மத்ததை பேசலாம்.. அவளை வற்புறுத்தி சம்மதிக்க வெக்காதீங்க.. ஏன்னா வாழ போறது அவதான்.. அவளுக்கு தான் பிடிக்கணும்..” என்றான்.
“ஏங்க அதான்…” என்று பேச வந்த மனைவியை தடுத்தவன் “எல்லாம் நீயே முடிவு பண்ண கூடாது நிவே.. இது ஆதிரா வாழ்க்கை.. அவதான் முடிவு எடுக்கணும்” என்று அழுத்தமாக கூறியவனின் கூற்றில் நிவேதாவின் பேச்சும் அதோடு தடைப்பட்டு நின்றது.
‘ச்சே அவனை போய் நம்பி..? கல்யாணமே பொய் சொல்லி தான் நடத்தணுமா என்ன.?’ என்று உள்ளுக்குள் பொரும்பியவன் ரஞ்சித்தின் வார்த்தையை நம்பி ஆதிராவிடம் ஒரு வார்த்தை கேட்காமல் விட்ட தன் மடத்தனத்தை எண்ணி நொந்தான்.
வீட்டை விட்டு வெளியே வந்தவன் ரஞ்சித்திற்கு அழைத்து ‘உன்னுடன் பேசணும்’ என்றிட, அவனும் வருவதாக வாக்குறுதி அளித்தான்.
“ஹாய்மா” என்று வந்த ரூபனின் செய்தியை வெறித்த ஆதிரா “ம்ம்ம்ம்” என்றிட, “வொர்க் எல்லாம் முடிஞ்சுச்சா.?” என்றவனுக்கு அப்போதும் “ம்ம்ம்ம்” என்று மட்டும் பதிலளித்தாள்.
அவளின் பதிலிலே ஏதோ சரியில்லை என்றுணர்ந்தவன் “ஆதி ஏதாவது பிரச்சனையா.?” என்று பதட்டத்துடன் கேட்டு விட்டான்.. அவனின் கேள்விக்கு என்ன பதிலளிப்பது என்று புரியாமல் முகத்தை அழுத்த துடைத்து ஆமாம் என்று எழுதிய சமயம் நிவேதா அங்கு வர, அப்படியே மூடி விட்டாள்.
பொதுவாக ஏதேதோ நிவேதா பேசிட, அமைதியாக அதை கேட்டிருந்த ஆதிரா வாயை திறக்கவே இல்லை.. ஏனோ இப்போது நிவேதாவின் பேச்சு கடுப்பாக இருந்தது ஆதிராவுக்கு.
இறுதியில் ரஞ்சித்தின் குடும்பத்தை பற்றி பேச்சை எடுக்க, “ப்ச் அக்கா இப்பவே எதுக்கு.?” என்று அப்பேச்சை முடிக்க எண்ணினாள் ஆதிரா..
ஆனால் விடாமல் நிவேதாவோ “உண்மையாவே சொல்றேன் ரஞ்சித் அம்மா நல்ல குணம்.. பொண்ணுனா அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. வீட்டுல பெண் குழந்தைனு இல்லனு ரொம்ப வருத்தப்படுவாங்க.. என்னையவே நல்லா பார்த்துக்கறவங்க மருமகளை எப்படி பார்த்துப்பாங்க.?
மாமியார், மாமனார், நாத்தனார்னு உனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. குடுத்து வெச்ச மகராசி ஆதிரா நீ.. உங்க அத்தையும் தான் இருக்கே.. எப்ப பார்த்தாலும் சிடுசிடுனு கத்திட்டு.. நம்ம உயிரை வாங்கிட்டு இருக்குது.. ஆனா உனக்கு அப்படி எதுவும் இல்ல.. நீயும் ரஞ்சித்தும் தனியா போறதுனாலும் அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்க..” என்றாள் சற்று சிடுசிடுப்பாக.
அப்போது தான் வந்த துருவினி “நிவே அக்கா சைடு கேப்புல எங்க அத்தை மேல இருக்கற வன்மத்தை கொட்டறீங்க போல.. யாராவது கேட்டுட்டா என்னாகும்.? மெதுவா சொல்லுங்க நாங்க மட்டும் கேட்டுக்கறோம்” என்று கேள்வி கலந்த கிண்டலுடன் கூறினாள்.
இவர்களின் பேச்சை காதில் வாங்காமல் துருவினி வந்ததும் “நீங்க பேசிட்டு இருங்க நான் வந்தறேன்” என்று ஆதிரா வெளியேறிட, அவளை யோசனையாக நிவேதா பார்ப்பதை உணர்ந்த துருவினி அவளின் எண்ணத்தை திசை திருப்பி விட்டாள்.
அமைதியாக மாடிக்கு சென்றவள் இருளுடன் கலந்த இரவை வெறித்து நின்றாள்.. அந்த இருளில் சிறு வெளிச்சப்புள்ளி மட்டும் தெரிந்தது சற்று தொலைவில். அவளின் காதலுக்கும் இந்நிலைமை தானே.. இன்னும் காதலே கூறபடாமல் இருக்க, தன்னவனும் தன்னை காதலிப்பதை மட்டும் உறுதி செய்து விட்டால் போதும் வெளிச்சப்புள்ளியை அடைய முயற்சி செய்யலாம்.
கண்ணை கட்டி நடுகாட்டில் விட்டதை போல் திக்கெற்று நிற்கிறாள் பெண்ணவள்.. துளிர் விடும் முன்பே அவளின் காதல் கருகி விடுமோ.? என்ற பயமும் அவளுள் எழுந்திட, விழிகளும் விழிநீரை சிந்தியது.
சொல்லப்படாத காதலுக்கு தானே வலிகள் அதிகம்.. ரூபனுடன் பேசிய ஒவ்வொன்றையும் நினைவடுக்கில் இருந்து தட்டி எழுப்பி அதனை நினைத்து பார்க்க பார்க்க விழிகள் உவர்நீரை தேக்கி கொள்ள, மனமும் பாராங்கல்லாக வலிகளை சுமந்து கொண்டது.
பாரமான மனதுடன் அலைப்பேசியை உயிர்பித்தாள்.. அதில் அவளவனின் குறுஞ்செய்திகளே முன்னால் நின்றிருந்தது.. “ஆதி.. ஆதிமா.. என்ன பிரச்சனைடா.?
உனக்கு ஒண்ணும் இல்ல தானே.? ஹலோ ஆதிமா இருக்கீயா.?” என்று பலவாறான செய்திகள்.. அதுவும் பதட்டம் கலந்த தவிப்புடன்.
அவனின் ஆதி என்ற அழைப்பை வருடியவளின் கண்ணீர் பூக்கள் அலைப்பேசியிலும் விழுந்திட, ‘எனக்கு என்ன பண்றதுனே புரில’ என்று தலையை பிடித்து கொண்டவளுக்கு அவளின் அபியை விடவும் மனமில்லை.
‘கண்டிப்பா என் அபிக்கும் என்னைய பிடிக்கும்.. அவனை சம்மதிக்க வெப்பேன்.. காதலை சொல்லாமயே இப்படி ஃபீல் பண்ணிட்டு இருக்கீயே த்தூ’ என்று அவளின் மனதே அவளை காறி துப்பிட, ‘ரைட்டு விடு சொல்லிட்டு ஃபீல் பண்ணிக்கறேன்’ என்று அதனை அடக்கினாள்.
“ஆதிமா” என்று விடாமல் வந்த குறுஞ்செய்தியை பார்த்து குறுநகை புரிந்த பெண்ணவள் “ம்ம்ம்ம் சொல்லுங்க” என்றிட, அவன் ஆதியின் பதில் வந்ததும் தான் ரூபனின் மனது சாந்தமடைந்தது.
“ஒண்ணும் பிரச்சனை இல்லயே.?” – ரூபன்
“அதெல்லாம் இல்ல..” – ஆதிரா
“நீ ஓக்கே தானே.?” – ரூபன்
“ம்ம்ம்” – ஆதிரா
“உண்மையா.?” – ரூபன்
“ம்ம்ம்ம் சத்தியமா..” – ஆதிரா
“பயந்துட்டேன்..” – ரூபன்
“நானும் கூட பயந்துட்டு இருக்கேன்” – ஆதிரா
‘அய்யோ ஆதிக்கு என்ன ஆச்சு.?’ என்று புலம்பி “என்னடா.?” என்று கேட்க, “நீங்க எனக்கு கிடைக்க மாட்டிங்களோனு தான் பயமா இருக்குனு சொல்றேன்..” என்று விட்டாள் பட்டென்று.
இதை புரிந்து கொள்ளவே ரூபனுக்கு பல நிமிடங்கள் கடக்க, அதிர்ச்சியில் “ஆதி” என்றே ஆடவனின் விரல்கள் தட்டச்சு செய்திட, “எஸ்.. உங்க கையை பிடிச்சுட்டு வாழ்நாள் முழுவதும் உங்க கூடவே இருக்கணும்.. கஷ்டத்துல உங்க மடிலயும் சந்தோசத்துல உங்க தோளுலயும் சாஞ்சுக்கணும்..” என்று மனதில் தோன்றியதை கூறி விட்டாள்.
அவளிடம் இதை எதிர்பார்க்கவில்லை போலும்.. பேச்சற்று ரூபன் அமர்ந்திருக்க, இவன் என்ன பதிலளிப்பான் என்ற தவிப்பில் தீயில் நிற்பதை போல் துடித்து நின்றிருந்தாள் ஆதிரா.
கள்வனே எனது காதலை
மறுத்து விடாதே!
அதோடு சாய்வது
என் காதல் மட்டுமில்லை
எனது உயிரும் கூட.!!!
அழகிய பூகம்பம் தொடரும்..

