Loading

பாட்டியை சமாதானப்படுத்திய பின்,

ருத்ரன் உடை பெட்டியை தள்ளிக் கொண்டு செல்லத் தொடங்கினான்.

“இருடா ருத்ரா!” என்று அவனைத் தடுத்தார் அம்பிகா.

அவன் பதில் சொல்லும் முன்பே,

அவர் கிச்சனுக்குள் விரைந்து சென்று,

வேலையாட்களின் உதவியுடன் சில உணவு பண்டங்களை எடுத்து வந்து,

ஒன்றன்பின் ஒன்றாக அவனின் காரில் வைத்து விட்டார்.

“என்னமா இது?”

“நீங்க சும்மாவே இருக்க மாட்டீங்களா?”

“இதெல்லாம் எதுக்கு இப்ப?” என்று சலிப்போடு கேட்டான் ருத்ரன்.

அதே நேரம்,

மீண்டும் பாட்டி ஏதோ சொல்ல வாயைத் திறக்கும் முன்,

அம்பிகா  முன்வந்து,

“ருத்ரா… சும்மா இருடா,” என்றார்.

“இதெல்லாம் பால் கொடுக்கிற பொண்ணுங்க சாப்பிட வேண்டிய பண்டம்.

இதெல்லாம் சாப்பிட்டா தான் அவளுக்கு நல்லா சத்து கிடைக்கும்.

பாலும் நல்லா சுரக்கும்,” என்று விளக்கினார்.

பின்னர் சற்றே தாழ்த்திய குரலில்,

“ஆம்பிளை… உனக்கு இதெல்லாம் புரியாது,” என்று சொன்னார்.

“நீயா சுமக்கப் போற?

கார் தானே இதெல்லாம் சுமக்கப் போகுது.கொண்டு போடா,” என்று இறுதியாக அவனிடம் கெஞ்சினார்.

“என்னமோ… போங்க,” என்று முகத்தைச் சுழித்துக் கொண்டு,

ருத்ரன் காரில் ஏறிக் கொண்டான்.

அதன்பின்,அம்பிகா மெதுவாக மருமகளிடம் அருகே வந்து,

“நான் கொடுத்த பண்டம் எல்லாம் சாப்பிடு,” என்றார்.

“சத்தான ஆகாரம் சாப்பிட்டா தான்

உனக்கும் நல்லது…

குழந்தைக்கும் நல்லது,” என்று தாய்மையோடு அறிவுறுத்தினார்.

“சரிங்க அத்தை,” என்று புன்னகையுடன் சொன்னாள் மோனி.

மற்றவர்களிடமும் மென்மையான புன்னகையுடன் விடை பெற்றுக் கொண்டவள்,குழந்தையை அணைத்தபடி காரில் ஏறினாள்.

எல்லோரும் போகும் காரை

ஏக்கத்துடன் சில நொடிகள் பார்த்துக் கொண்டே நின்றார்கள்.

கார் பார்வையை விட்டு மறைந்ததும்,

திரும்பி வீட்டுக்குள் வந்தனர்.

“குழந்தை இருந்த வரைக்கும்

இந்த வீடே கலகலனு இருந்துச்சு…”

“நல்லா பொழுது போச்சு…” என்று

குரலில் வெற்றிடத்தை சுமந்தபடி புலம்பினார் கங்கா.

“இப்போ அவ போனதும்

என்னவோ போல இருக்கு…”என பிருந்தா கூறவும்  மற்றவர்களும்

ஒன்றும் பேசாமல் தலையசைத்தனர்.

வீட்டுக்குள் ஒரு வெறுமை பரவியிருந்தது.

அவர்களின் கவலையை நீக்கும் விதமாக,

“இன்னும் ஒரு மூணு மாசம் வெயிட் பண்ணுமா…எங்க குட்டி வந்திரும்,”

“உனக்கு டையப்பர் மாத்த கூட நேரம் இல்லாம, வச்சு செய்யப் போறான் என் மகன்,” என்று கமல்  சொல்ல,

அங்கே இருந்தவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தனர்.

“போடா படவா…உனக்கு வாய் ஜாஸ்தியாயிடுச்சு,” என்று சொல்லியபடி, அவன் தலையில் நங்கென்று கொட்டினார் கங்கா.

பின்,குரல் மென்மையாக மாற,

கண்களில் ஒரு எதிர்பார்ப்பு மின்ன,

“என் பேரப் பிள்ளையைப் பார்க்க

எனக்கு சலிப்பு வருமா?” என்று

“எப்போ நேரம் கிடைக்கும் னு

காத்துட்டே இருப்பேன்,” என்று

அந்த நாளுக்கான ஆசையோடு கூறினார்.

ருத்ரன் கார் வீட்டின் முற்றத்தை தாண்டி சென்றவன் திரும்பி ரிவர்சில் வந்தான்..

அந்த  வளைவில் குப்பைகளை  கொட்டும் ட்ரங்க் இருந்தது…

அங்கு கார் நின்றதும் வெளியே ஒரு கை நீண்டு அம்பிகா கொடுத்த உணவு பண்டத்தை குப்பையில் தூக்கி எறிந்தது…

பின் கார் வேகமெடுத்து பயணித்தது…

மோனி பார்வை குப்பை தொட்டியையும்,ருத்ரனையும் மாறி மாறி பார்த்தபடி இருந்தன…

அவன் அவளை கார் ரிவ்யூ மிரரில் முறைத்து  பார்க்கவும் இவள் பார்வையை ஜன்னல் பக்கம் திருப்பி கொண்டாள்…

அவள் மடியில் இருந்த நிலா அப்..பா..அப்பா என அவன் தோளை தட்டி அவளிடமிருந்து திமிரவும் அப்படியே கைகளை பின்னே கொண்டு சென்றவன் ஒரே கையில் மகளை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டான்…

மகள் தன்னை விட்டு தந்தையிடம் செல்ல துடிப்பதையும்,அவன் நிலாவை தூக்கி வைத்து கொள்வதையும் வெறித்து பார்த்தாள்…

********

பால் குடித்து நிறைந்த வயிற்றுடன்,

உதட்டின் ஓரத்தில் இன்னும் வழிந்த பாலின் சுவையைத் தாங்கியபடி,

சின்ன விரலைச் சப்பி கொண்டே

அமைதியாகத் தூங்கிக் கிடந்த குழந்தையின் அழகு வதனத்தை

ஒரு கணம் கூட கண் இமைக்காமல்,

உள்ளமெல்லாம் நெகிழ

இனி  ரசித்துக் கொண்டிருந்தாள்…

அவள் தோள் பட்டையில்

திடீரென ஒரு அடி விழுந்தது.

திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.

இடுப்பில் கை வைத்தபடி,

தங்கையை முறைத்துக் கொண்டிருந்தாள்

அஞ்சலி.

“என்ன அஞ்சு… ஏன் இப்போ அடிச்ச?” என்று இனி சிணுங்கியபடியே முதுகைத் தேய்த்துக் கொண்டாள்.

தங்கையை முறைத்துக் கொண்டே,

அவள் மடியில் இருந்து குழந்தையை மெதுவாகத் தூக்கினாள் அஞ்சலி.

அவனின் வாயிலிருந்த கட்டை  விரலை எடுத்து விட்டு,

தன் துணியால் உதட்டோரம் சுத்தமாகத் துடைத்தாள்.

பின், முதுகை மெதுவாகத் தட்டி கொடுத்தாள்.

குழந்தை ஒரு சின்ன ஏப்பம் விட்டு,

மிக மெலிதாகச் சிணுங்கவும்,

மீண்டும் அவனைத் தட்டிக் கொடுத்து

அமைதியாகத் தூங்க வைத்தாள்.

அதன்பின்,அவனுக்குரிய

சின்னஞ்சிறிய கட்டிலில்

அவனை மெதுவாகப் படுக்க வைத்தாள்…

இனி,

தவறிழைத்த குழந்தை போல

கைகளைப் பிசைந்துக் கொண்டு,

திருதிருவென விழித்தாள்.

“இனி… உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?”

அவனுக்கு பால் கொடுத்துட்டா,

வாயைத் துடைச்சுட்டு,

முதுகைத் தட்டி ஏப்பம் வர வச்சிட்டு தான் தூங்க வைக்கணும்…” என கோபமாக கேட்டாள்…

இனி,

பாவமான முகத்துடன்,

பயந்தபடி தலையைத் தாழ்த்தி நின்றிருந்தாள்.

“இப்படி பாவமா முகத்தை வச்சுக்காதடி…”

என்று சொல்லியபடி,

அவள் தலையில் மெதுவாக கை வைத்தாள் அஞ்சலி.

“இந்த முகத்தைப் பார்த்தா,

கோபமா கூட பேச வரல எனக்கு,”

என்று சலிப்புடன் சொன்னவள்,

“எத்தனை தடவை சொல்றதுடி…”

பால் குடிச்சுட்டு,

ஏப்பம் வராம பிள்ளையை தூங்க வச்சுட்டா வயிறு கனக்கும்…

நெஞ்சு அடைஞ்ச மாதிரி

அவனுக்கு இருக்கும்.

இதுனால அவனுக்குத்தான்

உடம்பு முடியாம போகும்,

என்று கவலையோடு உரைத்தாள்.

ஒரு நொடி நின்று,

குரலில் இன்னும் வருத்தத்தை சேர்த்து,

“அவனுக்கு முடியாம போயிடுச்சினா,

நான் அவனை பார்த்துக்கிறதா…

அவனை நினைச்சு அழுது

வெள்ளமே வர வைக்கிற

உன்னை பார்த்துக்கிறதா சொல்லு…” என்றாள்.

இனி இன்னும் முகத்தைத் தாழ்த்திக் கொண்டு, பதிலளிக்க முடியாமல்

மௌனமாக நின்றாள்.

“குழந்தை விஷயத்துல

ரொம்ப கவனமா இருக்கணும் இனி.”

இவன் ப்ரீ மெட்யூர் பேபி…

எட்டு மாசத்துல பிறந்தவன்.

உடல் எதிர்ப்பு சக்தியும்

ரொம்ப கம்மியா இருக்கு.

சோ நாம ரொம்ப கவனமா

இவனை பார்த்துக்கணும்…

புரியுதா?” என்று

தாழ்ந்த குரலில் அறிவுறுத்தினாள்.

மெதுவாக தலையை உயர்த்திய இனி, தன் இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு,

“சாரி அஞ்சு…” என்று

கண்களில் கண்ணீர் நிறைய,

விக்கியபடியே கெஞ்சினாள்.

உடனே தங்கையை அணைத்துக் கொண்ட அஞ்சலி,

“ஏ லூசு… இதுக்குப் போய் அழலாமா?”

என்று கடிந்து கொண்டவாறே

அவள் கண்ணீரைத் துடைத்தாள்.

“நீயே இன்னும் குழந்தைதனமா தான் இருக்க,” உனக்கு ஒரு குழந்தை ?”

என்று கவலையுடன் சொன்னாள்.

அந்த வார்த்தைகளில்,

இனியின் முகம் சற்றே மாறியது.

அவள் அக்காவின் அணைப்பிலிருந்து

மெதுவாக விலகிக் கொண்டாள்.

அவள் முக மாற்றத்திலேயே,

அஞ்சலிக்கு புரிந்தது

தான் உதிர்த்த சொற்கள்

இனிக்கு பிடிக்கவில்லை என்று.

இருந்தாலும்,

தான் சொன்ன கருத்திலிருந்து

அவள் பின் வாங்கவில்லை.

மாற்றுக் கருத்தும் கூறவில்லை.

இனிக்கு,

அக்காவின் வார்த்தைகள்

உள்ளுக்குள் உறுத்தினாலும் ,

அவற்றை புறம் தள்ளி விட்டு

“இவன் அப்படியே வீர் தூங்குற சாயல்ல தூங்கினானா, பார்க்க

வீர் மினியேச்சர் மாதிரி இருந்தான்…”

என்று ஆசையுடன் சொன்னவள்,

அதான் அவன் அழகை ரசிச்சதுல,

மத்த எல்லாம் மறந்துட்டேன்…”

என்று காரணம் கூறினாள்.

அந்த வார்த்தைகள் கேட்ட நொடியில்,

அஞ்சலியின் மனதுக்குள்

ஆத்திரம் பொங்கி எழுந்தது.

தங்கையை கன்னம் கன்னமாக

அறைய வேண்டும் போல் என

கை பரபரத்தது.

“வீர்…வீர்… வீர்…”

தன் தங்கையின்

அந்த வீர் பைத்தியத்தை

நேரில் கண்டு,எரிச்சலில் இருந்தவள் இப்பொழுது அது குழந்தை விடயத்திலும் பாதிப்பு தருவதை உணர்ந்தவளுக்கு உள்ளுக்குள் எரிச்சல் கூடியது.

நன்றாக நான்கு அடி கொடுத்து

அந்த காதல் பைத்தியத்தை

தெளிய வைக்க வேண்டும் போல இருந்தது.

ஆனால்,

என்ன செய்தாலும்

இந்த பைத்தியம் தெளியாது என்பதை,

முன் அனுபவத்தில் தெரிந்தவள்,

தன் ஆத்திரத்தையும் உணர்வுகளையும்

கட்டுப்படுத்திக் கொண்டாள்.

மிகப் பிரயத்தனப்பட்டு

நிதானத்தை கையில் எடுத்துக் கொண்டு,

குரலில் வரவழைத்த பொறுமையுடன்,

“நிறுத்து இனி.”

“உன் காரணம் எதுவும்

இப்போ கேட்க

எனக்கு நேரம் இல்ல,”

என்று அவள் பேச்சைத் தடுத்தாள்.

பின், அவள் முன்னே

ஒரு விமான டிக்கெட்டை நீட்டினாள்.

“இந்தா… பிடி.

ஃப்ளைட் டிக்கெட்.”

இனி அதை

மௌனமாக வாங்கிக் கொண்டாள்.

“இங்க நீ சின்ன கவனக்குறைவா இருந்தா கூட,

சரி பண்ண நான் இருக்கேன்.

அம்மாவும் இருக்காங்க.

ஆனா நீ போற இடத்துல

யாரும் இருக்க மாட்டாங்க.

சோ அதனால

கவனக்குறைவா இருக்காத.

பார்த்து ஜாக்கிரதையா இரு,”

என அவள் சொல்லவும்,

“அதான் வீர்…”

என்று இனி ஆரம்பித்த அதே நொடியில்,

அஞ்சலி வெளிப்படையாகவே

கர்ண கொடூரமாக

தமக்கையை முறைத்தாள்.

அவளின் பார்வையிலிருந்த

கடுமை மட்டும் போதாது போல,

உஷ்ண மூச்சுகளை

வெளியே விட்டாள்.

அவளின் கோபத்தை நேரில் கண்ட இனிக்கு, மீதி பாதி வார்த்தைகள்

தொண்டையிலேயே

அமிழ்ந்து போய்,

வெளியே வந்தது

காற்று மட்டும் தான்.

தங்கையின் வாய்

முழுமையாக மூடியதும்,

அஞ்சலி மீண்டும் தொடர்ந்தவள்,

“குழந்தைக்கு முடியல,

அசௌகரியமா ஏதாவது

ஃபீல் பண்ணானா

அவன் அழுவான்.

அவனுக்கு தெரிஞ்ச

பாஷை அது தான்.

சோ…அவன் ஓயாம அழுதா,

உடனே எனக்கு

வீடியோ கால் பண்ணு

நான் என்னனு பாக்குறேன்.

அண்ட் உடனே ஹாஸ்பிடல் போய்

காட்டணும் சரியா?”

ஒரு சின்ன குழந்தைக்குச் சொல்லுவது போல,

மிக மெதுவாக,

ஒவ்வொரு வார்த்தையையும்

புரிய வைத்தாள் அஞ்சலி…

“போதும்டி…

நீ டாக்டர்னு நான் ஒத்துக்கிறேன்.

ரொம்ப அட்வைஸ் பண்ணாத,”

என தமக்கையை சீண்டினாள் இனி.

“வாலு… வாலு…”

என்று சொல்லிக்கொண்டே

தங்கையின் காதைப் பிடித்து

 சின்னதாய்திருகியவள்,

“அதான்

பீடியாட்ரிசியன் நான் கூட இருக்கும்போதே

நீ இவ்வளவு பார்த்துக்குறே.

நானும் இல்லாம

நீ எப்படி சமாளிக்க போறியோன்னு

அதை நினைச்சுதான்

எனக்கு கவலையே,”

என்று ஆரம்பத்தில் குரலில் சலிப்போடு ஆரம்பித்தவள்

வார்த்தைகள் முடியும் நேரத்தில்

முழுக்க முழுக்க கவலையாய் மாறியது.

தேவன் வருவான் ❤️ ❤️ ❤️…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்