
அத்தியாயம் 3
ஸ்கூட்டியை அந்த வீட்டின் முன் நிறுத்தி பூட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள் ஆனந்தி. அபியின் காரை செட்டில் விட்டிருந்தான். அதனால் அவளை இடித்த கார் எதுவென அப்போது வரை தெரியவில்லை. அதற்கு பின் தெரிந்தாலும் அவனிடம் அதனைப் பற்றி விசாரிக்க போவதில்லை என்பது வேறு விஷயம்.
செக்யூரிட்டியிடம் சண்டையிட்டு உள்ளே வந்தவளுக்கு வீட்டினுள் நுழைய சிறிது தயக்கம் இருக்க, போர்டிகோவிலியே நின்று கொண்டாள்.
இராமனிடம் விசாரித்து விட்டு கிழே இறங்கி வந்தவனின் மனமோ நிச்சயம் அவள் உள்ளே தான் நிற்பாள் என்று அடித்து கூறியது.
முதல் பார்வையிலேயே அவளின் துடுக்கு தனம் அறிந்து கொண்டதால் இப்படி நினைத்தானோ என்னவோ… ஆனால் மனம் கூறியதற்கு மாறாக அவள் வெளியில் நின்றாள்.
“வேலு அண்ணா,வெளிய ஒரு பொண்ணு நின்னுட்டு இருக்காங்க, உள்ள வர சொல்லுங்க…” சோபாவில் அமர்ந்தப்படியே கூறினான்.
‘ யாரா இருக்கும்…’ என ஆர்வமாக சீதா பார்க்க, ஆனந்தி உள்ளே நுழைந்தாள்.
அழகி,பேரழகி எல்லாம் இல்லை
சாதாரண பெண்ணை போல தான் இருந்தாள். ஆனால் ஏதோ ஒன்று அவளை பார்க்க தூண்டியது. அவளின் அமைதியா? இல்லை நிமிடத்திற்கு ஒரு முறை படபடவென அடித்து கொள்ளும் துறுதுறு கண்களோ? ஏதோ ஒன்று ஈர்ப்பது போலிருக்க அவளை பார்த்ததுமே அவருக்கு பிடித்து விட்டது…
வீட்டினுள் நுழைந்தவளை சட்டென இனம் கண்டுக் கொண்டான் அபி. நிமிடம் முகம் இறுக எதிரில் இருந்தவளை அழுத்தமாக பார்த்தான்.
‘எதுக்கு இவன் இப்படி பாக்குறான்…’ என நினைத்தவள் மரியாதை நிமித்தமாக சிரித்து வைத்தாள். அவளின் சிரிப்பை துளியும் கண்டுகொள்ளாமல் “உங்க சி.வி தாங்க…” என்றான்
“என்னத்த சிவி தர சொல்றான் இவன்…” என நினைத்த சீதாவோ தான் மகனிடம் கேட்க வாயை திறக்கவும், ஆனந்தி ஃபைலை அவனிடம் நீட்டவும் சரியாக இருந்தது.
“ஓ ஃபைலா..” என நினைத்தவரின் பார்வை மீண்டும் ஆனந்தியின் மீதே நிலைத்திருந்தது…
அவளின் ஃபைலை திறந்து பார்த்தவனின் விழிகள் அகலதிற்கும் விரிந்தது. அது மட்டுமின்றி முதல் பார்வையிலியே அவளின் மீது இருந்த எண்ணம் மாறி போனது அவனுக்கு. இருந்தும் அதனை வெளிக்காட்டி கொள்ளாமல்
“இவ்வளவு நல்லா படிச்சு இருக்கீங்க, ஏன் இந்த வேலைக்கு வந்திருக்கீங்க, உண்மையாவே இந்த வேலை பிடிச்சு தான் வந்தீங்களா?” அவளை கூர்மையாக பார்த்தபடி கேட்டான்.
“இந்த வேலைப் பிடிச்சு தான் வந்தேன் சார்.” அவனின் கேள்வியில் சட்டென பதில் வர மறுத்தாலும் நிதானமாக அவன் கண்களை பார்த்தே பதில் கூறினாள்.
“கவர்னஷா வரதுக்கு பிடிச்சு இருக்கா? இல்லை இந்த சம்பளத்தில கவர்னஷா வர பிடிச்சு இருக்கா…”
‘இவ்வளவு படிச்சுட்டு வெறும் பணத்திற்காக ஆயா வேலை பாக்க வந்தியா? நீ’ என்பதை போல் தான் அவனின் பேச்சு இருந்தது’
அபியின் எள்ளல் பேச்சு அவளது கோபத்தை கிளறியது. ‘ஜஸ்ட் ஆயா வேலைக்கு ஆள் கிடைக்காம தான் இவ்வளவு பணம் கொடுத்து ஆள் தேடறீங்க…’ என சொல்ல துடித்த மனதை அடக்கியப்படி அவனைப் பார்த்தாள். அவள் வாய் வார்த்தைகளாக கூற நினைத்த வார்த்தைகள் அவள் விழிகள் சொல்ல, அதனை தெளிவாக புரிந்து கொண்டது இவனது மனம்.
சட்டென ஓர் இறுக்கம் அவனுள் வந்து ஒட்டிக் கொள்ள அடுத்து ஆனந்தியிடம் பேசுவதற்கு முன் “உன் பேரு என்ன மா?” இடையிட்டார் சீதா.
“ஆனந்தி மேம்…” சிறு சிரிப்போடு கூறினாள்.
“ஆனந்தி… அழகான பேரு மா…” என்றவர் அபியிடம் திரும்பி “அபி, இந்த பொண்ணையே வேலைக்கு வர சொல்லிடு ப்பா. நல்ல பொண்ணா தெரியுறா” என அழுத்தமாக கூறினார்.
அவரின் அழுத்தமான பேச்சில் எரிச்சலடைந்தவன் “ம்ம்ம்…” என கர்ஜித்து விட்டு எழுந்து கொண்டான். அவனின் அந்த குரலே கூறியது ஆனந்தியை வேலையில் சேர்க்க அவனுக்கு பிடித்தமில்லையென.
“பசங்க இரண்டு பேரையும் ஸ்கூல்ல விட்டதும் என்னோட ஸ்பின்னிங் மில்லுல உங்களுக்கு ஒர்க் இருக்கும். இரண்டு பேரும் நாலு மணிக்கு வந்துருவாங்க, அப்ப வீட்டுக்கு வந்துடுங்க. அம்மா கெஸ்ட் ரூமை காட்டிடுங்க…”ஆனந்தியிடம் ஆரம்பித்து சீதாவிடம் முடித்தான்.
” கவர்னஷா வர சொல்லிட்டு இப்ப என்னவோ மில்லுக்கு வான்னு ஆர்டர் போடறீங்க. ஒருவேளை மில்லுக்கு ஆள் கிடைக்காம இப்படி கவர்னஸ் வேலைன்னு சொல்லி அங்க வர சொல்றீங்களா?” எனக் கேட்டாள் அடக்கப்பட்ட கோபத்தோடு.
அவள் அப்படி கேட்டதும் புருவம் உயர்த்தி அவளை கேலியாக பார்த்தவன் “அங்க ஒர்க் பண்றதுக்கு தனியா அமௌண்ட் கிரெடிட் ஆயிடும்…” என்றான். அவனது இந்த பதிலே ‘இதற்கு தானே இத்தனை வீர வசனம் பேசினாய் என்பது போலிருக்க, கண்களை இறுக மூடித் திறந்தவள் அவனை நேருக்கு நேர் பார்த்து
“நீங்க எவ்வளவு
அமௌண்ட் கொடுத்தாலும் நான் அங்க வரல சார், சாரி…” என முகத்தில் அறைந்தது போல் கூறிவிட்டாள்.
அபியின் முகம் இறுகி பின் தோளை குலுக்கியப்படி அங்கிருந்து நக்ர்ந்தான். செல்லும் அவனையே பார்த்தவளின் முகத்தில் அத்தனை எரிச்சல்.
அவள் கவர்னஷா வர அடம் பிடித்தக் காரணமே குழந்தைகள் இல்லாத நேரத்தில் அரசு தேர்வுக்கு படிக்கலாம் என்று தான்.
ஆம், இனி வேலை என்றால் அரசு வேலையாக தான் இருக்க வேண்டுமென்று ‘பள்ளியிலிருந்து வரும் போதே தீர்மானமாக எண்ணிக் கொண்டாள். ஆனால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து படிப்பது அவளுக்கு விருப்பமில்லை என்பதால் அடுத்து என்ன செய்வது என குழம்பி கொண்டே வீடு வந்தவளுக்கு அண்ணன் கூறிய வேலை தனக்கு சரியாக இருக்குமென்று தோன்றியது.
உடனே கவர்னஷாக செல்கிறேன் என்று கூறியது மட்டுமல்லாமல் அண்ணனின் எதிர்ப்பையும் மீறி கிளம்பி வந்துவிட்டாள். அவளுக்கு தற்பொழுது செய்யும் வேலை என்ன என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. அவளின் இலக்கு கவர்ன்மென்ட் வேலையை வாங்கி விட வேண்டும் என்பது தான். ஆனால் அந்த எண்ணத்தை இரண்டே வார்த்தையில் குழி தோண்டி புதைத்து இருப்பான் இந்த அபி…
‘ பிள்ளைங்க இரண்டு பேரும் ஸ்கூலுக்கு போயிட்டாங்க போலவே. வீடே ஏதோ சூனியம் மாதிரி இருக்கு” என நினைத்தவள், அருகில் தன்னையே விடாது பார்த்து கொண்டிருந்த சீதைவைப் பார்த்து “என்னோட ரூம் எதுன்னு சொன்னீங்கன்னா என்னோட திங்க்ஸ் எல்லாத்தையும் எடுத்து வைச்சிருவேன் மேம்…” மெல்லிய குரலில் கேட்டாள்.
ஆனந்தியின் கேள்வியில் தன்னிலைக்கு வந்தவர் “வேலு, இவங்களுக்கு கெஸ்ட் ரூமை காட்டிட்டு…” என்றார்.
“சரிங்கம்மா…” என்ற வேலுவும்
“வாங்கம்மா” என்றபடி நடக்க, வேலுவின் பின்னாலயே நடந்த ஆனந்தியின் காதில்
“குளோரியா ஆன்ட்டி…” என்ற குழந்தைகளின் கத்தல் கேட்டது. சட்டென நின்று குரல் வரும் திசையை பார்த்தாள்.
அதே நேரம்,மாடியேறி கொண்டிருந்த அபியின் காதிலும் பிள்ளைகளின் கத்தல் நன்றாகவே கேட்க, சட்டென நின்றவன் திரும்பி பார்த்தான்.
இன்று காலையில் கார் மீது கல்லெறிந்தது ஆனந்தி என்பதை அறிந்து தான் அவளுக்கு குளோரி என்ற பெயரை வைத்தனர் என்பது அவர்கள் சொல்லாமலேயே புரிய, மெல்லிய ஆர்வத்தோடு மூவரையும் பார்த்தான் அபி.
இங்கு ஆனந்தியோ ‘என்ன குளோரி ஆன்ட்டியா…’ என அதிர்ச்சியாக வாயை பிளந்தபடி நின்றாள்.
அது கூட நொடி மட்டுமே அடுத்த நிமிடமே “என்ன பார்த்தா அந்த லூசு மடகாஸ்கர் குளோரி மாதிரியா இருக்கு…” என இடுப்பில் கைவைத்து இருவரையும் பொய்யாக முறைத்தப்படிக் கேட்டாள்.
அண்ணனின் மகன்களோடு இணைந்து பல முறை பார்த்த கார்ட்டூன் என்பதால் குழந்தைகள் கூறும் குளோரி யாரென்று தெளிவாக புரிந்தது அவளுக்கு. அதனாலயே அவர்களிடம் இலகுவாக கேள்வி கேட்க முடிந்தது.
ஆனந்தியின் பொய்யான முறைப்பையும், கோபத்தையும் பார்த்த வாண்டுகள் இரண்டும் வாயில் கைவைத்து சிரிக்க, அதில் கடுப்பானவள் காற்றினை வாயில் நிரப்பி, உதட்டைக் குவித்து கோபமாக இருவரையும் பார்த்தாள்.
அவளின் செய்கையில் பிள்ளைகள் இருவரும் வாய்விட்டு சிரித்தனர் என்றால் அபியோ இதழ்களை அழுத்தி கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டப்படி அங்கிருந்து நகர்ந்தான்.
**********
‘என்ன பொண்ணு இது, ரேங்க் ஹோல்டரா இருந்துட்டு இந்த வேலைக்கு வந்து இருக்கா. அப்படி என்ன கஷ்டம் இந்த பொண்ணுக்கு…’ ஆனந்தி இங்கு வந்த முதல் நாள் அவன் மனம் எழுப்பிய கேள்வி இது…
இதோ இரண்டு வாரங்கள் முடிந்திருந்த நிலையிலும் அதே கேள்வியை எழுப்பியது. பதில் தான் இன்றுவரை கிடைக்கவில்லை. ராமனிடம் விசாரிக்கலாம் தான் ஆனால் பணியை தவிர வேறு எதுவும் இதுநாள் வரையிலும் பேசியதில்லை… அப்படியிருக்க திடீரென்று வீட்டை பற்றி விசாரித்தால் நன்றாக இருக்காது என்று நினைத்து அமைதியாகி விட்டான்.
அதே நேரம், ஆனந்தி செய்ய வந்த வேலை நிச்சியம் அவளுக்கு தகுந்த வேலையில்லை என்று தான் அன்று அவளை ஸ்பின்னிங் மில்லுக்கு அழைத்தான்.
அங்கு மேனேஜர் வேலைக்கு ஆள் தேடிக் கொண்டு தான் இருந்தான். நிச்சியம் அவளின் திறமைக்கு இந்த வேலை தீனியாக இருக்குமென்றே நம்பினான்… ஆனால் அவளின் பேச்சும், எள்ளல் பார்வையும் எரிச்சலை கிளப்ப, எப்படியோ போய் கொள் என்பதை போல் விட்டுவிட்டான்.
என்ன தான் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் அவளின் படிப்பும், திறமையும் கண்முன்னே வந்து ‘ஆனந்தியின் வீட்டின் நிலையைப் பற்றி அறிந்து கொள்ள தூண்டிக் கொண்டே இருந்தது’ ஆனந்தி என்பதால் மட்டுமில்லை அவளிடத்தில் வேறு யார் இருந்தாலும் இதை தான் நினைத்து இருப்பான்…
சில சமயம் ‘இன்னொரு முறை அவளை வேலைக்கு அழைக்கலாமா…’ என்று அவனது மனம் கேட்கும். அப்பொழுதே அந்த எண்ணத்தை குழி தோண்டி புதைத்து விடுவான். அவன் மீண்டும் அழைத்தால் அவளின் எள்ளல் பேச்சையும், பார்வையும் காண வேண்டும் என்பதாலேயே அதை அவளிடம் கேட்கவில்லை…
அதேபோல் இந்த இரண்டு வாரங்களில் குழந்தைகளும் அவளுடன் நன்றாகவே ஒட்டிக் கொண்டனர். இரவில் தனக்கென ஒதுக்கிய அறையிலேயே குழந்தைகளையும் உறங்க வைத்து விடுவாள். இன்றும் அப்படி தான் இருவரையும் உறங்க வைக்க பிரபல சிறார் எழுத்தாளரின் கதையை படித்து காட்டி பாவனைகளோடு கூறிக் கொண்டிருந்தாள்.
கதைக்குள் இருக்கும் ஈர்ப்பா இல்லை ஆனந்தி கதை கூறும் விதமா ஏதோ ஒன்று இளையவர்களை ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்து செல்ல, அவர்களோடு இவளும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.
ஆனந்தி உறங்கிய சில நிமிடங்களிலேயே பிள்ளைகளை பார்க்க அபி அவளது அறைக்குள் நுழைந்தான். பிள்ளைகளை அணைத்தப்படி உறங்கி கொண்டிருந்த ஆனந்தியை பார்க்கவும் எரிச்சலாக வந்தது அவனுக்கு. பிள்ளைகளின் கேசத்தை வருடிக் கொடுக்க கூட இவளைத் தாண்டி தான் அவர்களிடம் செல்ல வேண்டுமென்ற நிலை இருக்க, அப்போதைக்கு பல்லைக் கடித்தபடி வெளியேறுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை அவனுக்கு.
அதே நேரம் ‘இனி அவர்களின் அறையிலேயே உறங்க வைத்துவிட்டு உனது அறைக்கு வந்துவிடு, அவர்களோடு உறங்காதே, அவர்களிடம் அதீத உரிமை எடுத்துக் கொள்ளாதே’ என்று கூற வேண்டுமென்று நினைத்துக் கொண்டான்.
பாவம் அவனுக்கு தெரியவில்லை அந்த எண்ணம் வெறும் எண்ணமாக மட்டுமே செல்லுமென்று.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
32
+1
1
+1
