Loading

தெய்வானையின் கோபத்தை தனக்குள் ரசித்தவாறே, “ஓகே மிஸஸ் தெய்வானை குகன்” என்று குகனில் ஒரு அழுத்தம் கொடுத்து, “இந்த வேலைக்கு தகுதியான படிப்பு உங்களிடம் இல்லையே?” என்றான் கேள்வியாக. 

அதுவும் உண்மை தானே! என்ன பதில் சொல்வது என்று தெய்வானைக்கும் தெரியவில்லை. கைகளை பிசைந்து கொண்டே, “சார், ஆனால் நான்..” என்று ஏதோ சொல்ல வர, 

அவளின் பேச்சை கையை நீட்டி நிறுத்திய குகன், “சாரி மிஸ்.. சாரி சாரி மிஸஸ் தெய்வானை குகன், உங்களை தொடர்ந்து இங்கு வேலைக்கு வைத்துக் கொள்ள முடியாததற்கு வருந்துகிறேன்” என்று அவளிடம் சொல்லிவிட்டு, தலைமை ஆசிரியரை பார்த்து, 

இப்பொழுது தானே இந்த கல்வி ஆண்டு தொடங்கி இருக்கிறது. இந்த மாதத்திலிருந்தே இவர்களுக்கு பதிலாக வேறொரு நல்ல ஆசிரியரை நியமனம் செய்யுங்கள்” என்று நல்ல என்பதில் அழுத்தம் கொடுத்தான். அவ்வளவுதான் என்பதுபோல அனைவரையும் பார்க்க, அனைவரும் நன்றி சொல்லி அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பினார்கள்.

தெய்வானைக்கு கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது. தனக்கு வேலை போய்விட்டால் தான் தன் குழந்தையை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்ற எண்ணம் ஓடியது. இப்படி திடீரென்று வேலையை விட்டு எடுக்கிறாரே. என் மேல் ஏதும் கோவமாக இருக்குமா? ஒன்றுமே புரியவில்லையே? அல்லது இவர் குகனே இல்லையா?” என்று குழப்பமாக ஆசிரியர்கள் ஓய்வு அறைக்கு வந்து தனது இருக்கையில் அமர்ந்தாள்.

அவளுக்கு எதிரே வந்த கண்ணன், “டீச்சர், உங்கள் கணவன் பெயரும் குகன். நம்ம கரஸ்பாண்டன்ட் பெயரும் குகன்” என்றபடியே அமர்ந்தான். 

இவர் வேற நேரம் கெட்ட நேரத்தில் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவனை பார்க்க, “சார் உங்களுக்கு இங்கு வேலை இல்லை என்று சொல்லிவிட்டார். கவலைப்படாதீங்க, வேறு ஏதாவது இடத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்யலாம்” என்று ஆறுதலாக பேசிவிட்டு அவனது வேலையை பார்க்க சென்றான்.  

கண்ணன் அங்கிருந்து சென்ற பிறகு அவளது எண்ணம் மீண்டும் குகனில் வந்து நின்றது. ஒருவேளை இவர் அவராக இருக்காதோ? அதான் உலகத்தில் ஒருத்தர் போல் ஏழு பேர் இருப்பார்கள் என்று சொல்வார்களே! இவர் அவரைப்போல் உருவம் கொண்டவராக இருக்குமோ? என்றும் நினைத்தாள். 

ஆனால் உருவம் ஒன்று போல் இருந்தாலும், குரல் கூடவா அப்படியே இருக்கும்? இவர் பேசுவது அவர் பேசுவது போலவே தானே இருந்தது. ஆனால் இவர் என்னை தெரியாதது போல் மிகவும் சாதாரணமாக என்னிடம் பேசுகிறாரே? அது எப்படி சாத்தியம்? ஒருவேளை அவர் என்னை மறந்துவிட்டாரா? அது எப்படி மறக்க முடியும்? மறந்துவிடும்படியா நாங்கள் பழகினோம்? என்று பலவாறான சிந்தனைகள் அவளுக்குள் ஓட கோபம் அழுகை கவலை என்று பல உணர்வுகளும் அவர்களுக்குள் தோன்றி தோன்றி மறைந்தது. 

அவன் மறந்து இருப்பான் என்று நினைக்க நினைக்க அவளுக்கு ஏனோ மனதிற்கு அழுத்தமாக இருந்தது. யோசித்து யோசித்து தலைவலியே வந்துவிட பள்ளி முடிந்ததும் சோகமாகவே வீட்டிற்கு கிளம்பினாள். 

கவலையாக வந்த தெய்வானையை கண்ட வள்ளியம்மாள் “என்ன ஆயிற்று? ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்? என்று அவள் நெற்றியை தொட்டு பார்க்க, 

“தலை வலிக்குதும்மா” என்று சொல்லிவிட்டு மகன் எங்கே என்று கூட கேட்காமல் சென்று படுத்து விட்டாள். 

அமைதியாக படுத்ததும் அவளுக்கு குகனின் நினைப்பு மட்டும் அவளை விட்டு போகவே இல்லை. அவர்கள் பண்ணை வீட்டில் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப் பார்த்துக் கொண்டே கண்களை மூடி படுத்திருந்தாள். மூடிய கண்களுக்குள் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. 

வழியும் கண்ணீரை கூட துடைக்க மனம் இன்றி கண்களை மூடி படுத்திருந்தவளின் பின்புறம் அணைத்தவாறு படுத்தான் குகன். அவன் கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்ட தெய்வானை, “என்னை நீங்கள் மறந்துட்டீங்களா?” என்று சோகமாக கேட்டாள்.

“உன்னை என்னால் எப்படிடி மறக்க முடியும்? எனக்கு எப்பொழுதுமே உந்தன் ஞாபகம் தானே” என்றான். 

அவன் கூறியதும் அவனை அணைத்துக்கொள்ள வேகமாக திரும்பினாள் தெய்வானை. 

ஆனால் அவளின் பின்னால் அவன் இல்லை. அதிர்ந்து எழுந்த தெய்வானை சுற்றும் முற்றும் குகனை தேடினாள். எங்கும் அவன் காணாமல் போக, அச்சோ கனவு தான் கண்டேன் போலிருக்கு என்று நினைக்க, அவளுக்கு கண்களில் கண்ணீர் வடிந்தது. 

அவனை விட்டு பிரிந்து வந்த நாளில் இருந்து, இன்று வரை அவனின் நினைவுகளில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்தவள், இன்று அவனை பள்ளியில் பார்த்த பிறகு அவனிடம் பேச வேண்டும் என்று துடிக்கும் தன் எண்ணத்தை நினைத்து வருந்தினாள். 

வேண்டாம் அவரிடம் பேசக்கூடாது. அவருக்கு திருமணம் முடிந்திருக்கும். நாம் போய் இப்பொழுது அவர்களது குடும்ப வாழ்க்கையை கெடுக்கக் கூடாது. அவர் சொன்னதும் சரிதான். எனது கல்வித் தகுதிக்கு இந்த வேலை அதிகம்தான். வேறு வேலை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள். 

இருந்தாலும் அவளுக்கு இத்தனை வருடங்களாக செய்த வேலையை விட்டு செல்வது வருத்தமாக இருக்க, அவரிடம் இந்த வேலையையே தொடர்வதற்கு கேட்கலாமா? வேலை செய்து கொண்டே, அதற்குரிய படிப்பையும் படித்து விடலாம். அதற்கு அவரது அனுமதி வேண்டும் என்று நினைத்தாள்.  

இவ்வாறாக பலவாறு யோசனை அவளுக்குள் ஓட பள்ளியில் இருந்து வந்து இவ்வளவு நேரம் ஆகியும், இன்னும் செந்தூரை காணவில்லையே என்று எழுந்து வெளியே வந்தாள். பக்கத்து வீட்டு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த வள்ளியம்மாளிடம் சென்று, “அம்மா செந்தூரை எங்கே காணவில்லை?” என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். 

“இப்ப வந்துடுவான். விளையாட போயிருக்கிறான்” என்று சொல்ல,  

அவளும் சரி என்று தலையாட்டிவிட்டு, “நான் இரவு உணவு சமைக்கிறேன்” என்று உள்ளே செல்ல போனாள். 

அவளிடம் வள்ளியம்மாள், “இன்று நம் வீட்டிற்கு சாப்பிடுவதற்கு ஒருத்தர் வருகிறார். அவருக்காகவும் சேர்த்து சமைத்து விடு” என்றார். 

“யார் அம்மா வராங்க? அண்ணன் வருகிறாரா?” என்று வள்ளியின் மகன் வருகிறார் போல என்று கேட்டாள்.

“இல்லைம்மா, ரொம்ப நெருங்குன சொந்தக்காரங்க ஒருத்தங்க வராங்க” என்று மட்டும் சொன்ன வள்ளியம்மாள், “வாவல் மீன் வாங்கி வைத்திருக்கிறேன். அப்படியே முழுசா வறுத்திடு. சால மீனை போட்டு குழம்பு வைத்துவிடு” என்று சொல்லிவிட்டு, அவர் பாட்டிற்கு பேச ஆரம்பித்து விட்டார். 

வழக்கமாக சமையல்கள் அனைத்தையுமே வள்ளியம்மாள் முடித்து விடுவார். தெய்வானைக்கு அதிகம் சமையல் வேலை இல்லாமல் பார்த்துக் கொள்வார். ஆனால் இன்று தன்னை சமைக்க சொன்னதில், அவரை பார்த்தவாறே, ஒருவேளை அம்மாவிற்கு உடம்பு ஏதும் முடியவில்லை போல? பிறகு கேட்போம் என்று சமைக்க சென்று விட்டாள். 

சமையலுக்கு தேவையான அனைத்தையுமே எடுத்து வைத்திருந்தார் வள்ளியம்மாள். எல்லா வேலையும் அவர்களே முடித்து விட்டார்கள். இதை தாளிச்சு போடுவது மட்டும்தான் எனக்கு வேலை, என்று சொல்லி மசாலா போட்டு வைத்திருந்த மீனை வறுத்து விட்டு, மீன் குழம்பும் வைத்து சோறாக்கி சமையல் வேலைகள் அனைத்தையும் முடித்தாள். 

அரைமணி நேரத்திற்குள் அனைத்து வேலைகளும் முடிந்து விட, குளித்து விட்டு விருந்தினர் வருவதால் சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டு வர, அப்பொழுது செந்தூரை அழைத்துக் கொண்டு குகன் வந்தான். அவனைக் கண்டதும் அதிர்ந்து நின்ற தெய்வானையை, ஓடி வந்து கட்டிப்பிடித்த செந்தூர், “அம்மா, அப்பா கூட பீச்சுக்கு போயிட்டு வந்தேன்” என்றான் மகிழ்ச்சியாக. 

இதுவரை செந்தூரை இவ்வளவு மகிழ்ச்சியாக கண்டதில்லை தெய்வானை. அவனது முகத்தில் இருந்த மகிழ்ச்சியை கண்டவாறு, அவனது ஈர உடைகளை கழட்டியபடி, “டிரஸ் எல்லாம் நனைஞ்சு போச்சு. குளிச்சிட்டு வேற டிரஸ் போடலாம், சரியா?” என்று அவனை அழைத்துக் கொண்டு குளிக்க வைக்க சென்றாள்.  

குகனிடம் எதுவும் பேசாமல் சென்ற தெய்வானையை பார்த்தவாறு, அவனை வரவேற்ற வள்ளியம்மாள், அவனது பையை எடுத்து அவனிடம் கொடுத்து, “துணி ஈரமா இருக்கு தம்பி. மாத்திக்கோங்க” என்றார். 

அதற்குள் செந்தூரை குளிக்க வைத்துவிட்டு தெய்வானை வீட்டிற்குள் வந்துவிட, தனக்கு தேவையான துணிகளை எடுத்துக் கொண்டு குகன் உடைமாற்ற சென்றான். ஓலைகளால் வேயப்பட்ட குளியலறை. இரண்டு பெரிய சிமெண்ட் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டு இருந்தது. நின்று குளிப்பதற்கு தரையில் கற்கள் அடுக்கப்பட்டு இருந்தது. வீட்டின் கூரை குளியல் அறையின் பாதி வரை வந்ததால், மீதி பாதி வானம் தெரிந்தது. அனைத்தையும் குறித்துக் கொண்டே குளித்து முடித்துவிட்டு வீட்டிற்குள் வந்தான் குகன்.

வீட்டுக்குள் நுழையும் பொழுதே மீன் குழம்பின் மனம் அவனது நாசியை துளைக்க, “மீன் குழம்பா?” என்றவாரே உள்ளே வந்தான். அவன் உட்காருவதற்கு நாற்காலி எதுவும் இல்லாமல் இருக்க, வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்த்தான். ஒரு மூலையில் விறகடுப்பு சமையல் மேடை. அருகே சில பாத்திரங்கள். மறுபக்கம் சிறிய மர பீரோ. கொடியில் சில துணிகள். வாசலுக்கு அருகே பாயை எடுத்து விரித்த வள்ளியம்மாள், “உட்காருங்க தம்பி. இங்கு நாற்காலி எதுவும் இல்லை” என்றார் கவலையாக. 

“பரவாயில்லை ஆன்டி” என்ற படியே கீழே சாதாரணமாக உட்கார்ந்து விட்டான். 

அவன் மடியில் உரிமையாக சென்று அமர்ந்து விட்டான் செந்தூர். 

வள்ளியம்மாள் குகனுடன் சாதாரணமாக பேச, அவருக்கு பதில் சொல்லியபடியே செந்தூருடன் விளையாடிக்கொண்டிருந்தான் குகன். 

அங்கு தான் மட்டும் தனித்து நிற்பது போல் தோன்றியது தெய்வானைக்கு. இவ்வளவு காலம் வீட்டிற்கு வந்தவுடன் அவளின் கால்களை சுற்றி சுற்றி வரும் செந்தூர், இன்று வந்ததிலிருந்து அவளை திரும்பி கூட பார்க்காதது அவளுக்கு வருத்தமாக இருக்க, அது அவளது முகத்தில் பிரதிபலித்தது. 

வள்ளியம்மாளுக்கு பதில் சொல்லிக்கொண்டு, செந்தூருடன் விளையாடிக் கொண்டிருந்தாலும், குகனின் கண்கள் அவ்வப்போது அவனது மனையாளை உரிமையுடன் தழுவியது. அவளின் முகத்தில் இருந்த கவலையை கண்டதும் வள்ளியம்மாளிடம், “ஆன்ட்டி, நான் சாப்பிட உட்கார்ந்து ரொம்ப நேரம் ஆகுது. பசிக்குது, இன்னும் சாப்பாடு தரவில்லையே?” என்றான்.

அதன் பிறகு தான் வள்ளியம்மாளும் “ஐயோ தம்பி, பேசிக்கிட்டு இருந்ததுல சாப்பிட சொல்ல மறந்துட்டேன்” என்று மன்னிப்பாக சொல்லிவிட்டு, தெய்வானையை பார்த்து, “என்னம்மா? மசமசன்னு நின்னுகிட்டு இருக்க. தம்பி சாப்பிட உட்கார்ந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சு இல்ல? சாப்பாடு பரிமாறலாமே!” என்றார். 

இதற்கு மேலும் பேசாமல் இருப்பது சரியில்லை என்பதை உணர்ந்த தெய்வானை, “இதோ ஒரு நிமிஷம் அம்மா” என்று சொல்லி தட்டில் சோறு வைத்து குழம்பு ஊற்றி வறுத்த மீனையும் வைத்து அவரின் கையில் கொண்டு கொடுத்தாள்.

“நானா இப்ப சாப்பிட போறேன்? தம்பிக்கு கொடு” என்று சொல்ல, தயங்கிய படியே அவனின் முகத்தைப் பார்க்காமல் அவனின் முன் தட்டை வைத்தாள். அவன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, தட்டு வைத்தும் இன்னும் அவன் உணவில் கை வைக்காததை கண்டு, அவன் முகம் பார்த்தாள் தெய்வானை. 

அவள் பார்த்ததும் “சாப்பிடலாமா?” என்றான். 

‘பசிக்குதுன்னு சொன்னார் இல்ல? சாப்பிட வேண்டியது தானே! நான் வேண்டாம்னு சொன்னா! சாப்பிடாம எழுந்துருச்சு போயிடுவாராக்கும்?’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, அவனை முறைத்துக் பார்த்து சரி என்று தலையாட்டினாள்.

“நீ வேண்டாம் என்றால் நான் எழுந்து போய் விடுவேன்!” என்றான் அவனும் டக்கென்று. 

நாம் நினைத்ததை கண்டுபிடித்து விட்டாரே! என்று அதிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள் தெய்வானை.

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
16
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்