Loading

அத்தியாயம் 06

 

 

எப்பொழுதும் பரபரப்பும் பலரின் கண்ணீர்களையும் ஏக்கத்தையும் பார்க்கும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிரிப்பும் கேலியுமாக இருந்தது ‌. நோயாளிகள் ஓரிருவரே இருக்க, அவர்களுக்கான மருந்துகளைப் கொடுத்து கண்ணயர வைத்தபின், அவர்கள் பேச்சு ஆரம்பமானது. 

 

“எப்படி எட்டு வருச லவ்வு… 

உன் புருஷன் எங்கடி‌…” என்று விதுரா சிரிக்க, 

 

“ஆங்… பியோர்(pure) லவ் ஆக்கும். அத பிரிச்சு விட்டு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க” என்று முகம் திருப்பிட, 

அங்கோ மீராவின் கணவன் பாரி நின்றிருந்தான். 

 

“அலோ பாஸ்… இங்குட்டு வாங்க…” என்று கண்களை உருட்டிப் பாரியை அழைக்க, அவளுக்கு இடதுபுறமாக வந்து நின்றுகொண்டான்‌. அவனது வலது காதை அவளுக்கு ஏதுவாக இழுத்துக் கொண்டவள், “புள்ள உண்டாயிக்கு மாம்ஸ்” என்று நாணமாய் உரைக்க, கணவனவனோ கட்டிலில் கிடந்தவளைக் காதலுடன் தன் மார்போடு சேர்த்துத் தூக்கிக் கொண்டான். 

 

 

ஒருபக்கம் வெட்கம் பிடுங்கித் தின்றிட மார்போடு அணைந்து கொண்டவள், “கீழ விடுய்யா. கைல ட்ரிப்ஸ் போகுது… ” என்றாலும் குரல் வெளியில் கேட்டால் தானே… அவர்கள் செயலில் அனைவரும் ஹோவெனக் கத்தினாலும் பைங்கிளிகளின் காதுகளில் எதுவும் கேட்கவில்லை. மீராவின் நிலையுணர்ந்த, விதுரா கைகளில் சிக்கி நின்ற‌ வயர்களை வெண்பிளானில் இருந்து விடுவித்தாள். 

 

 

“சரி வா… கிளம்புவோம்” என்றிட, மறுப்பாய் மீரா தலையசைத்தாள். 

 

“அதுலாம் எனக்கு தெரியாது. இப்ப நீ வர…” என்றவன் முன்னேறிட,  

 

“அண்ணா… உங்க லவ்ஸ் பொங்கி ஊத்துறது எங்களுக்கு நல்லா தெரியுது. ஆனா இது அந்த சொட்ட மண்டையன் ஹெச்.ஆர்க்குப் (H.R) புரியாது. இன்ஃபார்ம் பண்ணிட்டு கிளம்புங்க” என்று வழியனுப்பினாள் விதுரா. 

 

பாரியும் மீராவை ஏறிட்ட காதல் விழிகளில் மாற்றமின்றியே தலையசைப்புடன் வெளியே நடந்தான். 

 

 

***

 

மீரா சென்று ஒரு மணிநேரம் வரை பெரிதாக நோயாளிகள் யாரும் வரவில்லை. விதுராவும் இலக்கின்றி கண்களால் எதையெதையோ அளந்தபடி அமர்ந்திருந்தாள். 

 

“விதுமா… என்ன ஒரு மார்க்கமா உக்காந்திருக்க… “ 

 

“டேய்… தங்கப்புள்ள “

 

“விது… டேய்… “ 

 

சற்று வேகமாக விதுராவைப் பப்பு கலக்கத்துடன் உலுக்க, ‘ஆங்’ என்பதாக நோக்கினாள். 

 

“என்னடா சிலைக்கு உயிர் வந்தது போல முழிக்குற… “

 

“இல்ல இல்ல ஒன்னும் இல்ல… நீ ஓகேவா… “ என்று அவள் கேட்க, அவளை சந்தேகமாகப் பார்த்தவன், “நான் இப்ப ஓகேதான்” என்றவாறு சாய்வாக அமர்ந்து கொண்டான். 

 

“சரி குடிக்க பால் தரேன்” என்றவள், ஃப்ளாஸ்கில் வாங்கி வைத்திருந்த சூடு பாலை ஒரு குவளையில் ஊற்றிக் கொடுத்தவள் தனக்கும் குடிக்க எடுத்துக் கொண்டு அமர்ந்தாள். 

 

 

அவள் மனதிலோ “நமக்கும் இப்ப ஒரு குழந்தை கைல தவழ்ந்திருக்கும்ல… ஆனா நமக்குதான் அந்த பாக்கியமே இல்லையே… காதலும் கைசேராது. குழந்தை பாக்கியமும் இல்ல…”

 

“ஏன்மா வெறுமனே என்ன மட்டும் பெத்த… எனக்கு ஒரு அண்ணனோ தங்கச்சியோ பெத்து குடுத்துருக்கலாம்ல… என்கூட நீயும் இல்ல. சொல்லிக்க ஒரு சகோதரமும் இல்ல…ஐயா இருந்தும் அப்பான்னு கூப்பிட முடியல… நான் எதுக்கு இந்த உலகத்துல பாரமா இருக்கேனோ?…”

 

 

“இந்த பப்புவுக்கு இன்னமும் உண்மை தெரியாது. தெரிஞ்சா அவன் எல்லாம் என்கூட இருப்பானோ??.. இல்லையோ??.. ஒரு ஃப்ரெண்டா எல்லாம் தாங்கி தாண்டி வர முடியும். ஆனா காதல் கல்யாணம்னு போனா கட்டாயம் எதுவும் நடக்காதுமா…” 

 

“ஆனாலும் பாருங்கமா… இந்த பப்புவோட காதல் எனக்கு எப்பவும் ஆச்சரியம் தான். பார்த்த முதல் பார்வைல எப்படிமா காதல் வரும். அந்த ஒரு பார்வைல என் பின்னாடி வந்தவன் இப்பவரை என் கூடவே இருக்கான்‌. எனக்கு என்ன செய்யனு தெரியலமா…”

 

“எனக்கு அவன் மேல எந்த உணர்வும் வந்து தொலைய மாட்டுதே… போய்த்தொலைடா னு தொரத்திப் பாத்துட்டேன்‌. அப்படி என்ன இடிவிழுந்த காதலோ என்னையே சுத்தி வர்றான்” எனத்தன்பாட்டிற்கு இலக்கின்றி யோசனையில் இருந்தாள். 

 

சிறிது நேரம் செல்ல, அப்போதும் விதுரா ஒரு சலனமற்ற பார்வையுடன் அமர்ந்திருந்தவளைக் கண்டான் பப்பு. சூடான பால் மடக்கு மடக்கென வேகமாக இறங்கியிருந்தது. 

 

சில நிமிடங்களில் மருத்துவர் வந்து வீட்டிற்குக் கிளம்ப அனுமதி அளித்து வரும் நாள்களில் போட வேண்டிய மருந்தைக் கொடுத்து பின்பற்ற வேண்டியவை பட்டியல் மற்றும் செய்யக் கூடாதவை பற்றி விளக்கி விட்டுச் சென்றார்‌. 

 

“கிளம்பலாமா?…” என பப்பு கேட்க, மருத்துவர் வந்தபோது நிகழ்வுலகம் வந்திருந்த விதுரா, ஆம் என்பதாய்த் தலையசைத்து வாங்கிய மருந்துகளுக்கு பணம் கட்டி முடித்து அவனையும் அழைத்துச் சென்றாள். 

 

 

 

 

அதே நேரம் வீட்டிலோ “எப்பா… கணேசா இங்க வாயேன்” தன்னுடன் இருக்கும் தன் காரியதரிசியை அழைத்தார் 

ஜாண்போஸ். 

 

“சொல்லுங்க ஐயா…” 

 

“எனக்கு ஒரே குழப்பமா இருக்குப்பா… நம்ம பொண்ணும் அந்த வளவன் தம்பியும் பழகறத பாத்தா காதலிக்கிறத போல தெரியலயே ப்பா… என் தாயிக்கு இதுல விருப்பம் இல்லையோ?…”

 

“அந்த தம்பி கண்ணுல காதல் சுடர் விட்டு எரியுது. என்கிட்ட மறைக்க அந்த தம்பி ரொம்ப கஷ்டப்படுது. ஆனாலும் வெளிய தெரியுது அதோட காதல்… ஆனா நம்ம புள்ள ஒதுங்கியே இருக்காவளே…” என்று தனது மனதின் எண்ணத்தைக் கூறினார்.

 

“ஐயா… நம்ம பாப்பா முகம் ரொம்ப வாடியே இருக்குதுங்களே… பழைய நிலைல இருந்து இன்னமும் பாப்பா மீண்டு வரலைங்களோ?…” 

 

“அத சொல்லி எனக்கு இன்னொரு பூகம்பம் வர வைக்காதய்யா ‌‌… அவ ஓஞ்சு போய் உக்காந்த நாளுலாம் என்னால மறக்கவே முடியாது”

 

“சரி விடுங்க விடுங்க… எல்லாம் சரி ஆகிடும். ஆனாலும் நம்ம பாப்பா அப்படியே ஆத்தாவ போல… இரண்டு நாள் முன்னுக்க ஆஸ்பத்திரில போய் பாத்தேனுங்க ஐயா… ஒவ்வொரு மனுசனையும் என்னமா பாத்துக்குது… அங்க இருந்து வரவே தோணல… அவக கைபட்ட மனுசன் நோய் பஞ்சா பறந்துரும்போல…“ 

 

“சும்ம சொல்லாதப்பா… மருந்து கொடுக்குறவக டாக்டர். இவக அன்பா கவனிக்குறாக… நீ என் புள்ளைய மட்டும் கவனிச்சிருப்ப… மத்தவகளும் இப்படிதான் பாத்துப்பாக…”

 

“அன்பான கவனிப்பும் கனிவான வார்த்தையும், கூட தோள்சாய ஒரு துணையும், சமயத்துல சரியான கற்ற மருத்துவ அறிவும், கடவுள் தயவும் இருந்தா எந்த நோயும் நேரமெடுத்தாலும் போயிடும். இதுல ஒன்னு இல்லாம போனாலும் அந்த நோய் நம்மைய வாட்டி எடுத்துடும்னு என் மகராசி சொல்லுவா… அவ சொல்லையே கேட்டு கேட்டு வளந்த என் புள்ள எப்படி இருப்பா… ஆத்தாவோட போதனைய மனசுல நிறைச்சு வேலை சொய்யுறாக” என்று பெருமிதம் பொங்கிடச் சொல்லிக் கொண்டார். 

 

வீட்டின் வெளியே பப்புவை அழைத்து வந்த விதுராவிற்கு இவற்றைக் கேட்க மனம் நிறைந்து போனது. அவள் நிலையறிந்து பப்பு மட்டும் வீட்டிற்குள் சென்றுகொள்ள, விதாரா அருகிலிருந்த பூங்காவில் நுழைந்து கொண்டாள் மனதினை நிலைப்படுத்தவேண்டி. 

 

 

****

 

நாட்கள் அப்படியே நகர்ந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களை விழுங்கி, எந்தவித முன்னேற்றமும் இன்றி சென்றன. 

 

‘பாரதத்தில் பத்து கோடி

 பொண்ணு இருக்கு

ஒன் ஒருத்தி மேலே தாண்டி

 ஊரு கண்ணு இருக்கு

வைகை ஆத்து பாலம் பக்கம் 

நடந்து போனேன் நா

என்ன போலோவ் பண்ணி வர்றாங்களே 

பாவி பசங்கதா

கண்ணு, கண்ணில் காமம் வெச்சு கொல்லுறியே கொல்லுறியே

கண்ணா பின்னான்னு சொல்லுறியே சொல்லுறியே’ 

 

   

வேந்தன் தற்போது தங்கி இருக்கும் வீட்டில் ஹோம் தியேட்டர் செட்டப் செய்து வைத்தான். இனி எழிலைத் தன் பெறுப்பென அழைத்து வந்தாகிற்று. எழிலுக்கு நைன்டீஸ் பாடல்கள் இன்றி அந்த நாளே விடியாது. அவன் உடல் நலனிற்கு அதிக நேரம் தொலைக்காட்சியோ அலைபேசியோ ஒத்துழைக்காது. அதனால் அவனுக்கு ரேடியோ அல்லது ஹோம்தியேட்டரில் பாடல்களை நன்கு சத்தமாக வைத்து ஆடிக்கொண்டு திரிவதே அவனது பொழுதுபோக்கு. 

 

 

   இதோ எழிலை எழுப்புவதற்கு அலாரம் போல சிம்பு மற்றும் ரம்யாகிருஷ்ணன் இணைந்து நடித்த பாடலை ஒலிக்க விட்டு தன் வேலைகளை செய்ய ஆரம்பித்தான் குறிஞ்சி வேந்தன்.

 

‘மச்சி போட்டு தாக்கு

போட்டு தாக்கு, ஏய் போட்டு தாக்கு, 

ஏய் போட்டு தாக்கு மச்சி போட்டு தாக்கு

ஏய் போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு

ஹிட்டு சாங் ஒன்னு போட்டு தாக்கு’

 

“காலையில காயத்ரி மந்திரம் சொல்லி எழும்புற மக்கள் இருக்காங்க. சாமி பாட்டு பாடுற மக்கள் இருக்காங்க… அல்லாஹ் னு கூப்பிட்டு பக்தியா எழும்புறவங்களும் இருக்காங்க. ஆனா இங்க இருக்குற வீடுகளிலயே இந்த குத்துப்பாட்டு கேட்டு எழும்புற ஒரு ஆள் உண்டுனா அது நீயா தான் இருப்ப” வேந்தன். 

 

“போடா பூமர் வாயா… நீயெல்லாம் ஒரு ஆளு… இது வாலிப வயசு. இதுல இப்படி தான் காலைல எழும்பணும். நீ சொல்ற எல்லாரும் பழுத்த பழம்… அந்த பழம் எல்லாம் பச்சை காயா இருந்தப்ப என்னப்போல தான் இருந்துப்பாங்க…”

 

“அப்படி இல்லையா பக்திப் பழம் போல இமேஜ் கிரியேட் பண்ணிட்டு ரூமுக்குள்ள ‘உள்ளுக்குள்ள குலுங்குதடி..’ பாடுறவனுகதான்… சோ கிளம்பு பூமர் அங்கிள்” என்றவன் குத்தாட்டம் போட்டபடியே காலைக்கடன்களை செய்யச் சென்றான். 

 

காலைக் கடன்களை முடித்து வந்தவனுக்குத் தான் செய்த இட்லியும் எம்டி சால்னாவும் வைத்துக் கொடுத்துத் தானும் சாப்பிட்டான். 

 

 

“சரி கிளம்பு…” 

 

“எங்க…”

 

“நான், இப்ப ரிசர்ச்க்குப் பிரின்ட் பண்ண பேப்பர் தீந்துடுச்சு. அதான் பண்டில் வாங்க எக்மோர் போறேன்‌. அங்க இருந்து கன்னிமாரா லைப்ரரி போய்ட்டு பொறுமையா தான் வருவேன். நீ பார்க் போறியா?… அதர்வைஸ் வெற ப்ளேஸ் சொல்லு.. ட்ராப் பண்றேன். பட் நீ கேர்ஃபுலா இரு” 

 

“ கன்னிமாரா போற தானே… நானும் வரேன். உன்னோட லேப்டப் குடு எனக்கு”

 

“முடியாது. லைப்ரரில நான் உனக்கு கொஞ்சம் புக்ஸ் செலக்ட் பண்ணி தர்றேன். படிச்சுக்கோ…” 

 

 

“ இதுலாம் ரொம்ப ஓவர்டா “ என்று வராத கண்ணீரை வரவைக்க முயல, 

 

“இல்லாத கண்ணீரை எங்கிருந்து வர வைக்க ட்ரை பண்ணுற… அதுக்குத்தான் நான் பார்க் போ னு சொன்னேன்” என்றான் வேந்தன். 

 

“அப்படினா என்ன கிண்டி பக்கத்துல காந்தி மண்டபம்ல ட்ராப் பண்ணு. அங்க தான் காலேஜ் ஸ்டுடன்ஸ் நிறைய வருவாங்க. நானும் கண்ணுக்குக் குளிர்ச்சியா சைட்டடிப்பேன்” என்றவன் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு மியூசிக்கை துவக்கி விட்டான். 

 

வேந்தனும் தலையசைப்போடு தன் மகிழுந்தில் ஏறியவன், கிண்டியை நோக்கி பயணத்தை தொடங்கினான். 

காந்தி மண்டபம் அவனுக்கு எவற்றைக் காட்ட காத்திருக்கிறதோ??… 

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்