
உயிர் – 28
அப்படியே நாட்கள் நகர வழக்கம்போல் காலை எழுந்து காபி போடுவதற்காக கீழே வந்தாள் அனுராதா.
உமா தன் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். காபி குடித்ததற்கான எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை.
கிச்சனுக்குள் நுழைந்தவள் தனக்கு காபியை போட்டுக் கொண்டு, அவர் குடிப்பாரோ மாட்டாரோ என்ற சிறு தடுமாற்றத்திற்கு பிறகு அவருக்கும் சேர்த்து காபியை போட்டு எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
சட்டென தன் முகத்திற்கு அருகே காபி கப் நீண்டிருக்கவும், அவளை நிமிர்ந்து பார்த்த உமா எதுவும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருக்கவும்.
அவருக்கு முன்னே இருந்த டீபாயில் காபியை வைத்தவள். சற்று தள்ளி இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு தன் காபியை பருக தொடங்கினாள்.
அவள் வைத்து சென்ற காபியை எடுத்து எதுவும் பேசாமல் பருகினார் உமா.
இதைக்கண்ட அனுராதாவின் இதழிலோ மெல்லிய புன்னகை.
கல்லூரி செல்வதற்காக தயாராகி கீழே வந்த தாரணி தன் தாயை பார்த்து, “என்னம்மா டல்லா இருக்கீங்க? உடம்புக்கு ஏதும் முடியலையா?”.
“ஆமா டி. தலைவலியா இருக்கு. உடம்பே அனத்துற போல இருக்கு”.
“அப்போ டிபன்?”.
“ஏன் டி உடம்பு முடியலைன்னு சொல்றேன். டிபன் செய்யலையான்னு கேக்குற”.
அவர்களின் உரையாடலை கவனித்த அனுராதா, “தாரணி 2 மினிட்ஸ் இதோ வந்துடறேன்” என்றவாறு வேகமாக கிச்சனுக்குள் நுழைந்தவள்.
பிரிட்ஜில் இருந்த தேங்காயை எடுத்து சில் எடுத்து ஒரு புறம் தேங்காய் சட்னியை அரைத்துக் கொண்டே தாரணிக்கு தோசை ஊற்றினாள்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் தோசையையும், சட்னியையும் தயார் செய்தவள் டேபிளில் வைக்கவும்.
தாரணி உண்டு முடித்து கல்லூரிக்கு கிளம்பி விட்டாள்.
அவளையே கவனித்தவாறு தான் அமர்ந்திருந்தார் உமா. ஆனால், அவளை எதுவும் தடுக்கவும் இல்லை, மறுப்பு கூறவும் இல்லை.
அதன் பிறகு ஆதவ்விற்காக காபியை தயாரித்து எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்குள் நுழைந்தாள்.
அப்பொழுது தான் குளித்து முடித்ததற்கு சான்றாய் உடலில் நீர் துளிகள் தெளித்து இருக்க. வெற்று மேனியோடு இடையில் ட்ராக் பேண்டுடன் தலையை துவட்டியவாறு நின்றிருந்தான் ஆதவ் கிருஷ்ணா.
அவனை இப்படி ஒரு காட்சியில் பார்த்தவள் அதிர்ந்து விழித்தவாறு நிற்கவும்.
அவள் செயல்படுவதற்கு முன்னதாகவே முந்தி கொண்ட ஆதவ், தன் தலையை துவட்டிக் கொண்டிருந்த துண்டினால் தன் மேனியை மறைத்தவாறு, “ச்சீ! என்ன நீ என்னை இப்படி பாக்குற?”.
அவனின் செயலில் அவளின் அதிர்ந்து விழித்த விழிகளில் கோபம் குடியேற, “ம்ம்.. எப்படி பாக்குறேன்?” என்று முறைத்தாள்.
“ஒரு பையன் குளிச்சிட்டு வந்து தலை துவட்ட முடியுதா.. இப்படித்தான் வச்ச கண்ணு வாங்காம பார்க்கிறதா?”.
“ஹலோ.. ஹலோ.. அவ்வளவு சீன் எல்லாம் இல்ல. ஓவரா பண்ணாதீங்க.. இப்போ பார்த்தா மட்டும் என்னவாம்?” என்றாள் வீம்புக்கு.
அவளின் வார்த்தையில் சட்டென்று தன் மேனியை மறைந்திருந்த துண்டை எடுத்து கட்டிலில் போட்டவன், “அப்போ ஓகே.. நல்லா பாத்துக்கோ” என்றதும் அதிர்ந்து தன் வாயின் மீது கையை வைத்தவள், “உங்களை… வேணும்னே பண்றீங்களா.. என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது?”.
“நல்லா அப்படி இப்படி இருக்க படம் எல்லாம் பாக்குற பொண்ணுன்னு தெரியுது. படத்தையே பார்க்கும் போது புருஷனையும் பார்க்கலாம் தப்பில்லை” என்றான் தன் ஒற்றை கண்ணை சிமிட்டி குறும்பு புன்னகையோடு.
அவளிடமிருந்து கோபத்தில் உஷ்ண பெருமூச்சுகள் எழ.
அவளையே ரசனை பொங்க பார்த்தவன், “சோ ஹாட்!” என்றான் மீண்டும் சீண்டலாய்.
“உங்களுக்காக காபி கொண்டு வந்தேன் பாருங்க.. என்னை சொல்லணும்” என்றவாறு அவள் தன் கையில் இருந்த காபி கப்போடு வெளியே செல்ல முற்படவும்.
“ஏய்! நில்லு டி. காபி கொடுக்காம எங்க போற.. குடுத்துட்டு போ” என்றதும்.
வேகமாக அவனை நோக்கி முன்னேறியவள். கோபத்தோடு அவனின் கையில் அந்த காபி கப்பை திணித்து விட்டு திரும்பியும் பாராமல் அவள் வெளியேற முற்படவும்.
“ஹலோ மேடம் ஒரு நிமிஷம்..” என்றவனின் குரலில் கதவை திறக்கச் சென்றவள் அப்படியே திரும்பி ‘என்ன’ என்பது போல் அவனை பார்க்கவும்.
காபி கப்போடு அவளை நெருங்கி வந்தவன், “ஒரு மிடர் அருந்திவிட்டு காபி கொஞ்சம் கூட சூடே இல்லையே.. இதான் காபி போடுற லட்சணமா” என்று கிண்டல் தொனியில் கேட்கவும்.
கப்பை தொட்டுப் பார்த்தவள், “சூடா தான் இருந்துச்சு. நீங்க பேசிப்பேசியே அதை ஆற வச்சுட்டீங்க. சரி குடுங்க, நான் திரும்ப சூடு பண்ணி கொண்டு வரேன்” என்றவாறு அவனிடம் இருந்த கப்பை அவள் வாங்க செல்லவும்.
அவளிடம் மறுப்பு தெரிவிக்காமல் தன் கையில் இருந்த கப்பை அவள் கைக்கு இடம் மாற்றியவன். தன் கரம் கொண்டு அவளின் இடையை வளைத்தவாறு அவளின் இதழை ஆழமாக முற்றுகை இட்டிருந்தான்.
அவனிடமிருந்து இதை சற்றும் எதிர்பார்த்திடாதவள், திமிரவும் முடியாமல் கையில் காபி கப் வீற்றிருக்க. எங்கே நகர்ந்தால் சிதறி விடுமோ என்ற எண்ணத்தோடு அசையவும் முடியாமல், அவனின் அதிரடியில் திணறிக் கொண்டிருந்தாள்.
அவளிடமிருந்து பிரிய மனமே இல்லை.. ஆனால், இன்று சீக்கிரமே அலுவலகம் செல்லும் வேலை வேறு இருந்தது. வேறு வழியின்றி அவளிலிருந்து பிரிந்தவன் அவளின் முகம் பார்க்கவும். அதுவோ குங்குமமாய் சிவந்திருந்தது.
அவனின் செயலில் ஆரம்பத்தில் அதிர்ந்து விழித்திருந்தாலும், அவளையும் மீறி ஏதேதோ ஹார்மோன்கள் சுரந்திருக்க. உள்ளுக்குள் உணர்வுகளின் போராட்டத்தோடு நின்றிருந்தாள்.
அவளின் இதழை பார்த்துவிட்டு விழிகளை பார்த்தவன். அவளின் கையில் இருந்த கப்பை ஒற்றை கரம் நீட்டி பெற்றுக் கொண்டு அதை ஒரு மிடர் அருந்தினான்.
“சூடு போயிடுச்சே” என்றாள் வெளிவராத குரலில்.
“அதான் சூடு ஏத்திட்டேனே!” என்று விட்டு வேகமாக காபியை குடித்து முடித்து அவள் கையில் மீண்டும் கப்பை திணித்திருந்தான்.
அவளோ அடுத்து ‘என்ன’ என்பது கூட மறந்து போனவளாக அவனைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள்.
கடிகாரத்தை ஒரு முறை பார்த்து விட்டு வேக வேகமாக தயாராகியவன். தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளின் முன் வந்து நின்றவாறு முகத்தை வெகு சாதாரணமாக வைத்துக் கொண்டு, “இன்னைக்கு எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதை இன்னைக்கு செஞ்சாகணும். இல்லனா நானும் பொறுமையா இப்படியே உன்ன பாத்துக்கிட்டே…” என்றவனின் பார்வையோ அவளில் மேலிருந்து கீழ் ஊடுருவ.. அவளுக்குத் தான் அவன் எதிரே நிற்க முடியவில்லை.
“இப்படியே பார்த்துகிட்டு என்ன வேணும்னாலும் செய்யலாம். ஆனா, இப்போ கடமை அழைக்குதே என்ன செய்ய?” என்று பெருமூச்சோடு கூறி முடிக்கவும்.
அவளுக்கோ அவன் கூறிய உடல் மொழியில் பட்டென்று சிரிப்பு வந்துவிட்டது.
“சிரிக்கிறியா.. நல்லா சிரிச்சுக்கோ.. இதுக்கும் சேர்த்து உன்ன கவனிச்சுக்கிறேன்” என்றவனோ அப்பொழுது தான் நினைவு வந்தவனாக, “மறந்தே போயிட்டேன் பாத்தியா” என்றான் சட்டென்று.
அவனின் திடீர் குரல் மாறுதலில் என்னவோ என்று அவள் பதறிப் பார்க்கவும்.
“முத்தா கொடுக்கும் போது மூக்கும் மூக்கும் இடிக்கவே இல்ல பாரேன்!” என்றான் தன் தாடையில் கையை வைத்து கொண்டு.
அவனின் வார்த்தையில் இவளுக்கு தான் ‘ஐயோ’வென்று ஆனது.
“ஐயோ! நீங்க இருக்கீங்களே.. நான் கீழ போறேன்” என்று விட்டு அவள் ஓட பார்க்கவும்.
அவளின் கையை பிடித்து தடுத்தவன், “ஹலோ எங்க போற? நீயும் என் கூட தான வர”.
“இல்ல, இன்னைக்கு நான் வரல. அத்தைக்கு உடம்பு முடியல. அதனால நான் இன்னைக்கு வீட்டிலேயே இருக்கலாம்னு இருக்கேன்”.
“வீட்டிலேயே இருந்து மாமியாரை கரெக்ட் பண்ண பாக்குறியா?”.
அவனை அவள் முறைத்து பார்க்கவும்.
“சும்மா.. சும்மா சொன்னேன் ஹாட் பொண்டாட்டி.. அப்போ நான் தான் இன்னைக்கு உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்று விட்டு அலுவலகம் கிளம்பி விட்டான்.
அவன் அறையை விட்டு வெளியேறியதும் தான் அவளுக்கு மூச்சே சீராக வந்தது.
இருவருக்குமான முதல் இதழ் தீண்டல்.. அவளின் உயிர் வரை ஊடுருவி விட்டது என்று கூறினால் அது மிகையாகாது.
தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு எதையும் வெளிக்காட்டாமல் இருப்பதற்குள் அவள் பட்ட பாடு அவள் மட்டுமே அறிந்த ஒன்று..
அதையும் மீறி அவள் முகம் சிவந்து போனதெல்லாம் வேறு விஷயம்..
கண்ணாடியின் முன் நின்று தன்னை பார்த்தவளுக்கு தனக்குள் தோன்றும் மாற்றங்களை அவளாலேயே நம்ப முடியவில்லை.
ஆதவ்வினால் தன் இதழில் வெட்கப் புன்னகை அரும்பும் என்றெல்லாம் அவள் கனவிலும் நினைத்தது கிடையாது.
ஆனால், இதோ மலர்ந்திருக்கிறதே..
இதழ் மட்டுமா மலர்ந்திருக்கிறது.. உடல் முழுவதுமே குறுகுறுப்பில் ஏதேதோ உணர்வுகள்..
அன்று முழுவதும் வீட்டிலேயே இருந்தாலும் பெரிதாக உமாவிடம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனாலும், அவரின் தேவைகளை அவர் கேட்காமலேயே செய்து கொடுத்து கொண்டு இருந்தாள்.
அவரும் இவளிடம் எதுவும் கேட்டு பெறவில்லை. அவள் செய்வதை வேண்டாம் என்றும் மறுக்கவில்லை. ஒரு வித மோன நிலை தான் இருவருக்குள்ளும்.
ஆனாலும், கொஞ்சம் கொஞ்சமாக அவளை புரிந்து கொள்ள முயற்சித்தார்.
இரவு வீடு திரும்பிய சத்யராஜ், “என்ன உமா இப்போ உடம்பு எப்படி இருக்கு? காலைல ரொம்ப அனத்தலா இருக்குன்னு சொன்னியே”.
கட்டிலில் படித்திருந்தவர் எழுந்து அமர்ந்தவாறு, “இப்போ பரவாயில்லைங்க. மாத்திரை போட்டதும் குறைஞ்சிடுச்சு” என்றார் முகம் தெளிவாக.
மீண்டும் சற்று இடைவெளிவிட்டு, “அனு தான் என்னை இன்னைக்கு பாத்துகிட்டா”.
“மருமகளோட கவனிப்புல தெளிஞ்சிட்டியோ” என்று கிண்டலாக அவர் கேட்கவும்.
“அப்படியும் வச்சுக்கலாம்”.
“இவ்வளவு சீக்கிரம் உனக்குள்ள இவ்வளவு மாற்றம் வரும்னு நான் நினைச்சு கூட பாக்கல”.
“சும்மா வீம்புக்காக இழுத்து பிடிச்சு பேசி என்னங்க பண்றது? என்ன தான் பொண்ண பெத்து வச்சிருந்தாலும், வீட்டுக்கு வர மருமக தானே அந்த வீட்டோட மகாலட்சுமி. நம்ம குடும்பத்தை அடுத்து வழி நடத்த போறவ அவ தான.. அவகிட்ட கோவிச்சுக்கிட்டு முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு எங்க போயிட போறேன். ஆரம்பத்துல இருந்தே பிடிக்காம போயிட்டதால அவ்வளவு சீக்கிரமாக என்னால ஏத்துக்க முடியல. ஆனாலும், காலம் எல்லாத்தையும் மாத்தும்ல”.
தன் மனைவியின் புரிதல் மொழியில் மென்மையாக புன்னகைத்திருந்தார் சத்யராஜ்.
உமாவின் மாற்றத்தை அவர் தன் மகன் ஆதவ்விடம் கூற. அவனின் இதழிலும் மனம் நிறைந்த புன்னகை.
என்ன தான் அனுராதாவை பற்றிய அபிப்ராயம் அவரின் மனதிற்குள் சற்று மாற்றம் பெற்றிருந்தாலும், அதை அவளிடம் காண்பித்துக் கொள்ள தான் அவரின் மனம் முன் வராமல் சண்டித்தனம் செய்தது.
*****
கதையை பற்றிய உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ் 😊
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
5
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


வெரி வெரி குட் மாமியார் 😝😝😝
😁😁 dank u