Loading

தழல் 43:

 

ஆராவின் கழுத்திலிருந்த காயத்தின் தீவிரத்தை ஆராய்ந்தபடியே முகத்தில் முறைப்பைக் காட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள் நித்யா. ஏற்கனவே ஆராவுக்கு மருத்துவம் செய்தவரிடம்  அத்தனையும் விபரமாய் கேட்டு தெரிந்துக் கொண்ட பின்னும் அவளுடைய மனம் அதை ஏற்கவில்லை. தானே சோதித்து அறிந்துக் கொள்வதில் மட்டுமே அவளுக்கு திருப்தி ஏற்படும் என தெரிந்த ஆராவும் அதை தடுக்கவில்லை.

 

இன்னுமே அவளுக்கு எதுவும் முழுதாய் தெரிந்திருக்கவில்லை. நேற்றைய அழுதனின் நிலையும், அதைத் தொடர்ந்த இன்றைய ஆராவின் நிலையும் நிலமையின் தீவிரத்தை அவளுக்கு உணர்த்தியது. அதே நேரம் அங்கிருந்த அனைவரின் முகத்தில் தெரிந்த நிம்மதியும் ஆசுவாச உணர்வும், அந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துவிட்டதையும் சொல்லியது.

 

ஊடகங்களுக்கும் தொலைகாட்சி நிறுவனங்களுக்கும் செய்தி பரவாத வகையில் ரகசியமாக தான் அத்தனையும் நடந்தி இருந்தான் வெற்றி. மகனை பற்றி வெளியில் தெரிந்தால், தனது மரியாதைக்கு பெரிய அடி, தனது தொழிழும் பின்னடையும் என்பதால், வெற்றியின் தந்தையும் கூட இதை ரகசியமாகவே வைத்திருக்க விரும்ப அவனின் வேலை இன்னுமே சுலபமாய் முடிந்துப் போனது. அதனாலே சம்பந்தபட்ட சிலரை தவிர வெளி உலகிற்கு செய்தி பரவாமல் அடங்கி அமிழ்ந்தேப் போனது.

 

நித்யா இப்படியும் அப்படியுமாய் அவளின் கழுத்தை திருப்பி பார்த்தில், வலி உண்டாக முகத்தை சுழித்தபடி அமர்ந்திருந்தாள் ஆரா. ‘போதும்… விட்டுவிடேன்…’ என்ற இரைஞ்சுதலான பார்வை நித்யாவின் பக்கம் செலுத்த இன்னுமே அவளின் முகத்தில் இறுக்கம் கூடியது. இன்னுமே ஆராவிடம் ஒருவார்த்தை கூட பேசியிருக்கவில்லை அவள்.

 

இவரின் மௌனயுத்தம் புரிந்தவள் போல கனி அருகில் வந்து நின்றாள். ஆராவின் கண்ணசைவில் அவளை ஆற்றுப்படுத்த முயன்றாள் கனி.

 

“நித்திக்கா…” என்ற கனியின் வார்த்தைகள், சட்டென்று திரும்திய நித்யாவின் வெட்டும் பார்வையில் மீண்டும் தொண்டைக் குழிக்குள்ளையே புதைந்துப் போனது.

 

“என்ன நடந்துச்சுனு மட்டும் நீ எனக்கு எக்ஸ்பிளைன் பண்ணிடாத கனி…” என்றவள் குரலில் அத்தனை கண்டிப்பும் கோபமும். அக்காவும் தங்கையும் அப்பாவியாய் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு அவளை பார்த்து வைத்தனர்.

 

“எனக்கு யாரும் எதையும் சொல்ல வேண்டாம்… அப்படி சொல்லணும்னா அவளே சொல்லட்டும்… என்கிட்ட நேரடியா சொல்லட்டும்…” என்றாள் அழுத்தமாய் அடமாய் நித்யா ஆராவை பார்த்தபடி.

 

“இப்பவும் எனக்கு அவ எதையும் சொல்லைனு கோபமில்லை கனி… இந்த வாழ்க்கை முழுக்க அவ சொல்லைனாலும் எனக்கு அத பத்தி கவலையில்ல… அது என்னனு தெரிஞ்சுக்கற அக்கறையும் இல்ல…  என்ன நடந்தாலும் நான் அவ கூட இருப்பேன்… எப்பவும் இருப்பேன்… அதேப் போல அவளும் எனக்கு இருக்கணும்…” என்றாள் ஆதங்கமாய் நித்யா. மேலே பேச முடியாமல் தொண்டை அடைத்தது. எச்சிலை கூட்டி விழுங்கியபடி தொண்டையே செறுமிக்கொண்டு மீண்டும் ஆரம்பித்தவளை கனிவாய் பார்த்திருந்தனர் மற்ற இருவரும்.

 

“யார் இத பண்ணா… எதுக்கு இத பண்ணாங்க… எதுவும் எனக்கு தேவையில்ல… ஆனா இப்படி அவங்க பண்ணற அளவுக்கு இவ எப்படி அலட்சியமா இருக்கலாம்… உயிர் அவ்வளவு ஈஸுயா போய்டுச்சுல்ல இவளுக்கு… இன்னும் ஒரே ஒரு இஞ்ச் ஆழமா இறங்கி இருந்தா…” என்றவள் மேலே சொல்ல முடியாமல் வார்த்தைகளை முழுங்கிக் கொண்டாள். எத்தனையோ அடக்க முயன்றும் முடியாயல் கண்ணீர் வேகமாய் கீழிறங்கி கன்னங்களில் வழிந்தோடியது.

 

அவளை ஒற்றை கரத்தால் தோளோடு அணைத்துக் கொண்ட ஆரா, இன்னொரு கையால் காதைப் பற்றியபடியே, கண்களை சுருக்கி, ‘சாரி…’ என பாவனையாய் வாயசைத்தாள்.

 

“பிச்சுடுவேன் ராஸ்கல்… இதான் சாக்குனு இப்படியே ஓ.பி அடிக்கலாம்னு பாக்காத… காயம் ஆறட்டும் பக்கி… அப்பறம் இருக்கு உனக்கு… நான் குடுக்கற ட்ரைனிங்ல உன்னையவே என் கால புடிச்சுட்டு ‘போதும்டி விட்டுனு…’ கதறி அழ வைக்கல நான் நித்யா இல்லடி…” என்றாள் நித்யா மூக்கை சுருக்கிக் கொண்டு கோபம் போல்.

 

இன்னுமே விரிந்த புன்னகையோடு அவளை இறுக அணைத்து கன்னத்தில் இதழ் பதிக்க போனவளை தடுத்தபடியே குறுக்கே தன் முகத்தை நீட்டியிருந்தாள் கனி. தவறுதலாய் முத்தம் அவளின் கன்னங்களுக்கு இடம் மாறியிருந்தது. நடந்ததை மற்ற இருவரும் உணரவே சில நொடிகள் புடித்தது.

 

“சரியான பொஸசிவ் பூனைடி நீ…” நித்யா கடுப்பாய் சொல்ல, “அப்கோர்ஸ்…” என்றபடியே நெருக்கமாய் அமர்ந்திருந்த இவரையும் பிரித்து விலக்கிவிட்டாள் அவள்.

 

இவளின் பாச போராட்டத்தில் நித்யாவிற்கு எரிச்சல் வந்ததோ இல்லையோ, பக்கத்தில் நின்று ஆரஞ்சு பழச்சாற்றை பிழிந்துக் கொண்டிருந்த வேந்தனுக்கு இரண்டு காதுகளிலிருந்து புகையே வந்தது. பிழந்த சாற்றை கண்ணாடி குவளையில் ஊற்றியவன் மடமடவென அதை குடித்து எரிச்சலை அடக்க முயன்றான். அப்படியும் அது அடங்குவேனா என்று அவனுக்கு ஆட்டம் தான் காட்டியது.

 

நமட்டு சிரிப்புடன், “என் பொண்டாட்டிய விட பெரிய பொஸசிவ் பூனை ஒன்னு இங்க நிக்குது போலவே… நான் வேணா எல்லாரையும் வெளிய அனுப்பி வைக்கட்டுமா சகல…” அவனின் தோளில் கைப்போட்டு காதோரம் கிசுகிசுத்தவனை வேகமாய் விலக்கி தள்ளினான் அவன்.

 

அருகில் பழம் வெட்ட வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியபடியே, “கடுப்ப கிளப்பாதீரும்…” என்றவனைக் கண்டு இன்னுமே சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது அவனுக்கு.

 

அப்பொழுது தான் யுவா கண் விழித்திருந்தான். இருந்த இடம் தெரியாமல், கத்தி ஆர்பாட்டம் செய்தவனை ஆராவிடம் அழைத்துச் சொல்வதாய் சொல்லி அமைதிப்படுத்தி அந்த அறைக்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தார் பர்வதம்.

 

களைந்த தலையும், கங்கிய உடையும், செவ்வரியோடிய விழிகளுமாய் தளர்ந்த நடையுடன் உள்ளே நுழைந்தவனை கண்டதுமே உருகிப் போயிற்று ஆராவுக்கு. நடந்த எதுவுமே அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. கடைசி வரை தெரியவே வேண்டாம் என்பது தான் அங்கிருந்த அனைவரின் விருப்பமாகவும் இருந்தது.

 

ஆராவைக் கண்டதுமே அதிர்ச்சியில் விரிந்த அவன் விழிகளே காட்டிக் கொடுத்தது அவளின் இந்த நிலையை அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்று. வேகமாய் அவளிடம் ஓடி வந்திருந்தவன், “ஆரும்மாவுக்கு என்ன… என்னாச்சு… என்னாச்சு..?” என்றான் மீண்டும் மீண்டுமாய் கண்களில் தவிப்புடன்.

 

அவனை அமைதிப்படுத்தி எதிரிலிருந்த நாற்காலியில் அமர வைத்தாள் நித்யா. அவனின் பார்வை முழுவதும் ஆராவிடமே தவிப்பாய் படிந்திருத்தது. அவனைக் கண்டபின்னும் கூட பேசாத ஆராவைக் கண்டு இனம்புரியாத தவிப்பொன்று அவன் விழிகளில்.

 

“இங்க பாரு யுவா… என்ன பாரு… ஆராவுக்கு ஒன்னுமில்ல… பைக்ல இருந்து கீழ விழுந்துட்டா அவ்வளவுதான்… இப்போ நல்லா இருக்கா… சீக்கரமே சரியாகிடுவா…” என்றாள் அவனின் முகத்தை தன் பக்கமாய் திருப்பியபடி நித்யா. முகத்தை திருப்பிய பின்னும் கூட அவனின் பார்வை ஆராவிடம் தான் நிலைத்திருந்தது.

 

“அப்போ இது… பெருசா இருக்கே…” என்றான் அவளின் காயத்தை காட்டி.

 

“விழும் போது கல்லு குத்திட்டு… அதான்…”

 

“பேசல..?” என்றான் அவளிடமிருந்து பார்வையை அகற்றமாலே.

 

“காயம் ஆறுற வரைக்கும் பேச முடியாது யுவா… பேசுனா வலிக்கும் இல்ல… சரியானதும் பேசுவா…”

 

“எப்போ சரியாகும்…”

 

“சீக்கரமே…”

 

“சீக்கரமேனா எப்போ..?”

 

“இன்னும் இரண்டு மாசம் ஆகும் யுவா…”

 

“இரண்டு மாசம் ஆகும் சரியாக…” மீண்டும் மீண்டும் அதையே தனக்குள் உருப்போட்டபடி அமைதியாய் என்றவன் அவளருகில் அமர்ந்துக் கொண்டான் யுவா.

 

ஆரஞ்சு பழச்சாற்றை பிழிந்து ஸ்ட்ராப் போட்டு இம்முறை ஆராவிடம் நீட்டினான் அவன். அதை வாங்கி அவள் யுவாவிடம் நீட்ட, வேந்தனிடமிருந்து கிளம்பிய பெரும்மூச்சுக் காற்று பலமாய் அவளை தாக்கியது.

 

இதழ் கடையோரம் அவள் புன்னகையை அடக்கியபடியே, “இன்னொன்னு ப்ளீஸ்…” என்று வாயசைத்தது அவனுக்கு தெளிவாகவே புரியதான் செய்தது.

 

“நமக்குனே பாச பயிர வளக்க பஸ் புடிச்சு கிளம்பி வருவானுங்க போல…” தனக்குள் முனுமுனுத்தபடியே அடுத்தைப் பிழியப் போனான் அவன். அதை பார்த்து சிரித்ததோடு அமைதியாய் நின்றிருக்கலாம் இந்த அறிவு.

 

“வீரனோட வாழ்க்கையில இதெல்லாம் சகஜம் சகல…” என்றான் நமட்டு சிரிப்புடன்.

 

“ஒரு கிளாஸ் இரண்டு கிளாஸ்னா பரவாயில்ல… இதோட பன்னென்டாவது கிளாஸ்… நானென்ன நடமாடும் ரெடிமேட் ஜூஸ் மேக்கரா… உன் பொட்டாட்டி மட்டுமே மூக்க ஊறிஞ்சுட்டே மூணு கிளாஸ் வாங்கி குடிச்சுருக்கு… நானும் போனா போகுது நம்ம கொழுந்தியாளாச்சேனு பாத்தா…” பேசியபடியே லாவகமாய் அறிவின் கைகளுக்கு ஆரஞ்சையும் பழம் புழியும் தட்டையும் நகர்த்தியிருந்தான் வேந்தன்.

 

வேகமாய் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்த வள்ளியம்மையின் பார்வை வேந்தனை தான் தேடியது. அவரின் பின்னோடே சின்ன குரலில் ஏதோ சொல்லியபடி இருந்தார் அனுராதா. அதையெல்லாம் காதில் வாங்காமல் நேராய் மகனிடம் போய் நின்றவரின் தீப்பார்வை அவனின் முதுகை துளைத்துக் கொண்டு முன்பக்கத்தை சுட்டது.

 

“என்ன வேந்தா இது…” குரல் உயரவில்லை அதில் அடக்கமுடியாத அளவிற்கு கோபம் தெரிந்தது.

 

‘என்னனு கேட்டா எதை சொல்லுவேன் நானு…’ என்றெண்ணியபடியே மிக மெதுவாய் அவரை திரும்பிப் பார்த்து கடவாய் பல் தெரியும் அளவிற்கு இழித்து வைத்தான் அவன்.

 

“என்னடா இழிப்பு… என்ன பண்ண நீ…” தனது கைப்பேசியை அவனின் முகத்தின் முன்பு தூக்கி பிடித்தபடியே கோபமாய் கேட்டவரை பார்த்து பாவமாய் விழித்து வைத்தான் அவன்.

 

‘ஒன்னா… ரெண்டா… தீடிருனு கேட்டா எதை சொல்லுவேன் நான்…’ தனக்குள்ளேயே பேசியப்படி அசடு வழிய விழித்து வைத்தான் அவன்.

 

“என்ன பண்ணேனு கேட்டேன் உன்ன…” மீண்டுமாய் ஒரு அதட்டல் அவரிடம்.

 

“விடுக்கா… ஏதோ சின்ன பையன்…” என ஆரம்பித்த அனு, தமக்கை திரும்பி பார்த்து முறைக்கவும் கப்பென்று வாயை மூடிக் கொண்டார்.

 

“சின்ன பையனாம்… சின்ன பையன்… வேணா சொப்பு ஜாமன் விளையாட சொல்லுவோமா..? எல்லாம் நீ குடுக்கற செல்லம்… அவன கெடுத்து குட்டி செவராக்கறதே நீதான்…” அவரிடம் பொறிந்துக் கொட்டிய வள்ளியம்மையின் பார்வை மீண்டுமாய் வேந்தனின் பக்கம் தான் திரும்பியது.

 

“என்ன பண்ணனு கேட்டேன் உன்ன…” பதில் சொல்லாமல் விடமாட்டார் என தெரிந்தவன், எச்சிலை கூட்டி விழுங்கியபடியே, “அது வந்தும்மா… உங்க சேப்டிக்கு தான்… ஹாக்கிங் ஆப்…” என்றவன் அவரின் சுட்டெரிக்கும் பார்வையிலேயே கப்பென்று வார்த்தைகளை விழுங்கிக் கொண்டான்.

 

“வேற என்ன பண்ண…” இன்னும் அழுத்தமாய் மிரட்டலாய் ஒலித்தது வள்ளியம்மையின் குரல்.

 

“இரண்டு ஷெடியூல் என்கவுண்டருக்கு கமிஸ்னர்கிட்ட பர்மிஷன் கேட்டேன்… ரொம்ப நாளா தரலை… அதான் நீங்க அப்ரூவல் குடுக்க சொன்ன மாதிரி பார்மலா உங்க மெயில இருந்து கமிஷ்னருக்கு ஒரு பார்மல் மெயில் அனுப்பினேன்…” என்றான் திருதிருவென விழித்தபடியே.

 

ஆழ மூச்சை இழுத்து விட்டவர், “வேற என்ன பண்ணுன…” என்றார் உறுமலாய்.

 

“எனக்கு திருநெல்வேலில இருந்து கோவைக்கு ட்ரன்ஸ்பர்…” என்றவனை மேலே சொல்ல விடாமல் காதைப் பிடித்து திருக தொடங்கியிருந்தார் வள்ளியம்மை.

 

“ம்மா… வலிக்குதும்மா…” என்றபடியே நின்ற இடத்திலிருந்து குதிக்க துவங்கி இருந்தான் அவன்.

 

“சொல்லு… முழுசா சொல்லு…”

 

“எனக்கு கோவைக்கு ட்ரன்ஸ்பர் ஆடர் ரெடி பண்ண சொல்லி உங்க அசிஸ்டன்ட் கிட்ட சொன்னேன்…” என்றான் அவன் குதித்தபடியே.

 

“அவ்வளவு தானா… வேற என்ன பண்ண சொல்லு…” இன்னுமே அவனின் காதை வலுவாய் திருக தொடங்கி இருந்தார் வள்ளியம்மை.

 

“அவ்வளவு தான்ம்மா… நிஜமா அவ்வளவு தான்… நம்புங்கம்மா ப்ளீஸ்…” என்றபடியே எந்த பக்கமிருந்தாவது அவனுக்கு ஆதரவு கரம் நீள்கிறது என்று பார்வையை சுழற்றினான் அவன்.

 

அறிவு கொடுத்த பழச்சாற்றை மிடறு மிடறாய் விழுங்கியபடியே ரசித்து பார்த்திருந்தாள் ஆரா. அவளோடு சேர்த்து மொத்த கும்பலுமே அவனை சுவாரஸ்யமாய் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தது. இனி வேறு வழியில்லை. எப்பொழுதும் போல் சிற்றன்னையிடம் சரணாகதி அடைந்துவிட வேண்டியது தான் என்றெண்ணியவனாய், பாவமான முகத்துடன் “அனும்மா…” என்றான் கெஞ்சலாய் அவர் பக்கம் பார்வை செலுத்தினான் அவன். அவ்வளவு தான் உருகிவிட்டது அந்த தாயுக்கு.

 

“போதும் விடுக்கா… சின்ன பையன அடிக்கற மாதிரி… இதென்ன பழக்கம்…” என்றார் வலுக்கட்டாயமாக தமக்கையின் கரத்தை அவன் காதிலிருந்து பிடிங்கியபடியே

 

“இப்ப நீதானடி சொன்ன அவன் சின்ன பப்பானு…”

 

“தெரியாம சொல்லிட்டேன்… விடேன்… பாவம்… பாரு புள்ள காதே சிவந்து போச்சு…” என்றார் அவனின் காதை தடவி கொடுத்தபடியே.

 

“போனா போகுதுனு விட அவனென்ன சின்ன தப்பா பண்ணிருக்கான்…” என்றபடியே அவனின் முதுகில் சுள்ளென்று ஒன்று வைத்தார்.

 

“ஸ்ஸ்ஸ்… அனும்மா…” என்றபடியே துள்ளி குதித்தவன், “பின்ன கல்யாணத்த பண்ணிட்டு நான் அங்கையும் அவ இங்கையும் இருந்தா எப்படி குடும்பம் நடத்துறதாம்…” என்றான் கடுப்பாய் முதுகை தேய்த்துவிட்ட படியே வேந்தன்.

 

“உன்ன மாதிரி யாருடா முதல பொண்ணு தரேனு சொன்னது…  வந்துட்டான் அதுக்கு முன்னாடி ட்ரன்ஸ்பர் ஆடர தூக்கிட்டு…” அவர் சொல்லி முடிக்கும் முன்னே கீழே சாஸ்டாங்கமாய் விழுந்துக் கிடந்திருந்தான் வேந்தன்.

 

அவரின் கால்களை இறுக பற்றியபடி, “ட்ரன்ஸ்பர் ஆடர வேணா கேன்ஷல் பண்ணிடுங்க தெய்வமே… நான் வீடியோ கால்லையே வேணாலும குடும்பம் நடத்திருக்கிறேன்… அதுக்காக பொண்ணு மட்டும் இல்லைனு சொல்லிடாதீங்க தெய்வமே…” என்றான் கெஞ்சலாய் கொஞ்சி. வள்ளியம்மையின் முகத்தில் சின்னதாய் ஒரு புன்னகை கீற்று. அவனின் செய்கையில் அங்கிருந்த அனைவரின் முகத்திலுமே சின்னதான ஒரு புன்னகை தோன்றி, தொடர்ந்த அவனின் ரகளையில் அது நிலைத்தும் போனது.

 

                         – பற்றி எரியும்…

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்