
சபதம் -34
“மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.”
பொருள்:
வீரம் (மறம்), தன்மானம், சான்றோர்கள் வகுத்த நல்வழியில் நடத்தல் (மாண்ட வழிச்செலவு), மற்றும் அரசனால் நம்பப்படுதல் (தேற்றம்) ஆகிய இந்த நான்கு பண்புகளுமே ஒரு படைக்குச் சிறந்த பாதுகாவல் (ஏமம்) ஆகும்.
ராணா கோட்டையின் மேல் மேகம் இருண்டு கொண்டு வர, அந்த இரவு ஒரு கொடூரமான சம்பவத்தைக் கோட்டைக்குள் நிகழ்த்திக் கொண்டிருந்தது. புகை கரும்பாம்புகளைப் போல சுருண்டு மேலேறியது.
நூற்றாண்டுகளாக நிலைத்திருந்த அந்தப் பழமையான கோட்டைச் சுவரை, முகலாயப் படையின் பீரங்கிகள் இடித்தெறியும் ஒலி உள்ளிருக்கும் மக்களை நடுங்கச் செய்தது.
கோட்டையின் உள்கட்டில், உள் பாதுகாப்புப் படையின் தளபதி ஹம்சா கான், வாளைக் கைகளில் ஏந்தியபடி நின்றிருந்தான்.
அவன் கண்கள் கூர்மையுடனும், மன உறுதியுடனும் நின்றிருந்தன. அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த கடமை, கோட்டை வீழும் நிலை வந்தால் நின்று போராடாமல் ராணா மற்றும் அதிவார் இரத்தத்தின் இளைய தலைமுறையை உயிருடன் காக்க கோட்டையை விட்டு வெளியேற வேண்டும் என்பதே.
கோட்டைக் கதவுகள் பெரும் சத்தத்துடன் இடிக்கப்பட, எந்த நிலையிலும் அந்தக் கதவுகள் வீழும் நிலையில், தூசி மற்றும் கண்ணீர் கலந்த முகத்துடன் ராஜகுமாரி யசோதரா அவனை நோக்கி ஓடிவந்தாள்.
யசோதரா, ” தளபதி ஹம்சா… கதவுகள் உடைந்துவிட்டால், நீங்கள் எனது தம்பி மற்றும் அதிவார் இளவரசரோடு மெஹருன்னிஷாவையும் அழைத்துக் கொண்டு சுரங்கப்பாதை வழியே வெளியேறி விடுங்கள். எக்காரணம் கொண்டும் நமது வம்சம் அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு” என்று அவனுக்குக் கட்டளையிட்டவள் சுரங்கப்பாதை நோக்கி அவர்களை வெளியேற்ற வழிவகுத்தாள்.
தன்னைக் கட்டிக் கொண்டு போகமறுத்த தனது தம்பியின் கண்ணீரை துடைத்தவள், வீரின் இளவலையும் அணைத்து, இருவரின் நெற்றியில் முத்தமிட்டவள், “உங்கள் இருவரின் கைகளில் தான் வருங்கால ஆரவள்ளி உயர்ந்து நிற்கும். அது ஒரே இரவில் நடந்து விடாது. நேருக்கு நேர் பாய்வது மட்டும் வீரமன்று. காலம் வரும்வரை நமது வாரிசுகளுக்கு ஞாபகப்படுத்துங்கள், ‘அரவள்ளியின் தூண்கள் நாம் என்று. அரவள்ளி தாக்கப்படும் போது இந்த இரு ராஜ்யங்களின் ரத்தம் உயிர்த்தெழும் என்பதை மறந்து விடாதீர்கள். ஜெய் ராஜ்புதான!” என்றவள் ஹம்சாவிடம் கண்காட்ட, “சுரங்கப் பாதையின் மூலம் வெளியேறுங்கள். பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டாம்” என்றவளின் கண்கள் நீரில் நிரம்பி இருந்தது.
அதைக் கண்ட ஹம்சாவின் தாடை இறுக, மெல்ல தலையணைத்தவன், “என் உயிரை கொடுத்தாவது பாதுகாப்பேன் இளவரசி” என்றவனின் கைகளை பிடித்த யசோதரா, “அவர்களை மட்டும் அல்ல… மேஹ்ருன்னிஷாவையும் அழைத்துச் செல்லுங்கள். அவளும் உயிர் பிழைக்க வேண்டும்.”
தலைகுனிந்து அதனை ஏற்ற ஹம்சா மெஹருன்னிஷாவை தேடிக்கொண்டு இரு இளவரசர்களோடு வெளியேறினான். அவனுக்குத் தெரியாது அந்தக் கணமே விதி தன் பாதையை மாற்றிவிட்டது என்பது.
அந்த நேரம் செவியைப் பிளக்கும் சத்தம் கோட்டை எங்கும் எதிரொலித்தது. ராணா கோட்டையின் பெரும் இரும்புக் கதவுகள், பெருமையின் சின்னங்கள், முகலாயப் பீரங்கிகளின் தாக்குதலில் சிதறின.
முகலாயப் படை வேகத்துடன் உள்ளே நுழைந்தது. கூச்சல்களும், குழப்பங்களும் கோட்டைக்குள் எதிரொலித்தது. ராணா வீரர்கள் வீரத்துடன் போரிட்டனர். ஆனால் எதிரியின் எண்ணிக்கை கடலென திரண்டு வந்து கொண்டிருந்தது.
கோட்டை மதில்கள், இரும்பு மோதும் சத்தத்தாலும், உயிர் காக்கும் அலறல்களாலும் நிரம்பியது. யசோதரா வாளை கைகளில் இறுகப் பற்றியபடி தனது குலத்துக்காக துணிச்சலுடன் நின்றாள்.
யசோதரா தனது கோட்டைக் காவல் வீரர்களுக்கு தலைமையேற்று, “வீரர்களே! கோட்டைக் கதவுகள் வேண்டுமானால் கைவிட்டிருக்கலாம். ஒவ்வொரு ராணா வீரனின் உயிர் இருக்கும் வரை நமது ராஜ்யத்தை அழிக்க முடியாது. ஜெய் ராஜ்புதான!” என்று வீரமாக முழங்கியவளின் பின், ஹூன் வம்சத்தின் வீரப் பெண் சூலைக்கா, மற்றும் ராஜபுத்ரா குல வீர ஆண்கள் பெண்கள் என்று அனைவரும் போரிட்டனர்.
இரு பெண்களும் தோளுக்கு தோள் நின்று, உள் கோட்டையை காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் முகலாயப் படை முடிவில்லாத அலைபோல் வந்துகொண்டே இருந்தது.
வெளிப்புற பாதுகாப்பு முற்றிலும் உடைந்ததும், கோட்டையின் உள்ளே பயம் பரவியிருந்தது.
தாய்மார்கள் குழந்தைகளை மறைக்க முயன்றனர். மூதாட்டிகள் நடுங்கும் குரலில் பிரார்த்தனை செய்தனர்.
முகலாயப் படை கட்டுப்பாட்டை இழந்தது. அவர்கள் அறைகளை உடைத்து, மக்களை இழுத்து வெளியேற்றினர். புனிதமான இடங்களை அவமதித்தனர்.
அவர்கள் அந்தப்புரத்தை அடைந்தபோது, அங்கு இருந்த பெண்கள் ஒரு உண்மையை நன்கு உணர்ந்திருந்தனர். கோட்டை வீழ்ந்தால் தங்கள் நிலை என்ன என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
சிலர் வாளை இறுகப் பிடித்து போரிட தயாராகினர். சிலர் தங்கள் குழந்தைகளை அணைத்தபடி பயந்திருந்தனர். சிலர் தெய்வத்தின் பெயரை மெல்ல முணுமுணுத்துக் கொண்டிருந்தனர்.
அந்தப்புரத்தின் கதவுகள் உடைக்கப்பட்டபோது, யசோதரா மற்றும் சூலைக்கா அங்கே வந்தடைந்தனர். அவர்கள் இருவரும் பெண் சிங்கங்கள் போல் போரிட்டனர். வேகம், கோபம், தளராத மனதுடன் சுழன்றனர்.
அவர்களின் வாள்கள் அந்த இரவின் ஒளியில் மின்னின. அவர்களின் போர்க்குரல்கள் கல் சுவர்களை அதிரச் செய்தன. ஆனால் இரண்டு வீரப் பெண்களால் ஒரு பெரும் படையைத் தடுக்க முடியாது போனது. இருப்பினும் அவர்கள் பின்னடையவில்லை.
சூலைக்கா, “யசோ—போ! உன்னை காப்பாற்றிக்கொள்! சுரங்கப்பாதை வழியாக கோட்டையை விட்டு வெளியேறு . இவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றவளை ஏறிட்ட யசோதரா, “என் மக்களை விட்டு எங்கு போவேன் சுலைக்கா. உன் தமையனுடன் நீ ஏன் வெளியேறவில்லை?” என்றதும் சுலைக்கா தன் வாளை சுழற்றியபடி, “வாழும் ஆசை எனக்கில்லை யசோ. இந்த மண்ணில் வீரத்தோடு போரிட்டு உயிரை விடவே ஆசை கொண்டேன்” என்றவள் யசோதாவை கண்ணோடு கண் பார்த்து, முடிந்தால் எனக்கு ஒரு உதவி செய்!” என்ற தோழியை குழப்பத்துடன் பார்த்தாள் யசோதரா.
அதே நேரம் சுலைக்கா போரிட்டுக் கொண்டிருந்த இரு வீரர்களில் ஒருவன் வாளை அவள் தோளை நோக்கி பாய்ச்ச அதை தடுக்க முயன்றவள், மற்றொரு வீரன் அவள் இதயத்துக்கு நேராக பாய்ச்சிய வேலைக்கவனிக்க தவறினாள்.
ரத்தம் கொட்ட கீழே விழுந்தவளின் அருகே தனது எதிரியை வீழ்த்திவிட்டு ஓடி வந்த யசோதராவிடம், “என…க்கு ஒரே ஒ…ரு உதவி… உன் த..மைய..னிடம் சொல். சுலைக்கா வீ..ரத்துடன் போரிட்டு மடிந்தாள் என்று. அ..டு..த்த ஜென்மத்திலாவது அவரது காதல் கிடைக்கும் வரம் வேண்டி …” என்றவள் உயிர் பிரிந்திருந்தது.
யசோதராவுக்கு பெரும் அதிர்ச்சி. சுலைக்கா, சூரன் காதலா? என்றவளுக்கு யோசிக்கவோ, தோழியின் மறைவை எண்ணி வருந்தவோ முடியாத துரதிஷ்ட நிலை.
அந்தப்புரத்தில், ராணா குல பெண்கள் தங்கள் முடிவை எடுத்திருந்தனர். அவர்கள் பிடிபடப் போவதில்லை என்று. முகலாய வீரர்களால் அவமதிக்கப்பட விரும்பவில்லை.
அவர்கள் மரியாதையை இழக்க விரும்பவில்லை. சிலர் பற்றி எரியும் நெருப்பில் புகுந்து உயிர்விட துணிந்து நடந்தனர். சிலர் கோட்டைக் கோபுரத்தின் மேல் ஏறி, “ஜெய் ராஜ்புதானா” என்ற கோஷத்துடன் அகழியில் குதித்து முதலைக்கு உணவாகினர். அவர்களின் அந்த ஆழ்ந்த தைரியம் கோட்டையை நடுங்கச் செய்தது.
முகலாயக் கொடிகள் கோட்டையின் உயர்ந்த கோபுரத்தில் ஏற்றப்பட்டன. ராணா வீரர்கள் முற்றிலும் தகர்ந்தனர். சுரங்கப்பாதையில் குழந்தைகளை அழைத்துச் செல்லும் ஹம்சா கான், ஒருமுறை மட்டும் பின்னால் திரும்பிப் பார்த்தான். அவன் காக்க வேண்டிய கோட்டை முழுவதும் எரிந்துகொண்டிருந்தது. அதன் உள்ளே, யசோதரா,சூலைக்கா மற்றும் அவன் மக்கள் போரிட்டுக்கொண்டிருந்தனர்.
ஸ்வர்ணக் காடி போர்க்களம் சிதறிக் கொண்டிருந்தது. புகை வானத்தை நோக்கி சுருண்டு எழுந்தது. பீரங்கிக் குண்டுகள் நிலத்தை நடுக்கச் செய்தன. முகலாயப் படை கருங்கடல் போல முன்னேறியது.
முன்னணியில் வீர், இரத்தத்தில் நனைந்தபடி போரிட்டுக் கொண்டிருந்தான். அவனின் பக்கத்தில் ராணசூர், நண்பனுக்கு இணையாக போரிட்டு கொண்டிருந்தான். அந்த நேரத்தில், முகலாய குதிரைப்படை அலைபோல் பாய்ந்தது. வீர் தன் கரத்தை நீட்டி ராணசூரைத் தடுத்தான்.
வீர், “சூரா..போ! கோட்டை தகர்ந்து கொண்டிருக்கிறது. யசோதரா உள்ளே இருக்கிறாள்.
அவளுக்கு உன் தேவை அதிகம்… நான் சமாளித்துக் கொள்கிறேன்” என்றதை மறுத்து
ரணசூர் தலையசைத்தான். அந்த கண்களில் கோபமும் அன்பும் கலந்திருந்தது.
ரணசூர், “உன்னை இங்கு தனியாக போராட விட்டுப் போக மாட்டேன்!” என்றவனை போரின் முழக்கத்தைக் கடந்து, வீர் கோட்டையின் பக்கமாக அவனைத் தள்ளினான்.
வீர், “போ… அரவள்ளியை காப்பாற்று” என்றதற்கு ராணசூர் பதில் சொல்லும் முன்,
வீர் அவனை ராணா கோட்டைக்குச் செல்லும் காட்டு பாதையில் தள்ளிவிட்டான்.
அதில் தடுமாறிய ராணசூர், கடமைக்கும் பாசத்திற்கும் நடுவே சிக்கித் தவித்தான். வீர் அவனை நோக்கி பார்த்த பார்வையில் அன்பு, வருத்தம், சொல்லாத விடைபெறல் இருந்தது.
ராணசூர் சில அடிகள் முன் சென்றவனின் செவிகளில் ஒரு வேதனைக்குரல் எட்டியது. இதயம் துடிக்க திரும்பிப் பார்த்தவன் கண்கள் நிலைக்குத்தி நின்றது. வீரின் நெஞ்சில் ஈட்டி பாய்ந்து முழங்காலில் விழுந்திருந்தான்.
நிமிர்ந்து பார்த்த ரணசூரன் முன் முகலாய ஆளுநர் மிர்சா குத்புத்தீன் நின்றிருந்தான். நண்பனின் நிலை கண்டு கர்ஜித்த ரணசூரன், தனது பலத்தை எல்லாம் திரட்டி ஆளுநருடன் போர் புரிந்தான்.
தொடர்ந்த யுத்தம், இரு பக்கமும் இணையான வீரம், ஆனால் ரணசூரனிடம் இருந்து வெளிப்பட்ட வீரம் ஏமாற்றம், கோபம், இழப்பு மற்றும் துரோகம் அனைத்தும் கலந்து ஆங்காரமாக வெளிவந்தது.
துரோகம் செய்தவனுக்கு ரணசூரனிடம் இருந்து புறமுதுகு காட்டுவது பெரிதல்லவே, பின்வாங்கி சென்ற ஆளுநரைத் தொடர்ந்து துரத்தி செல்ல முயன்ற ரணசூரனை, வீரின் குரல் தடுத்தது.
“சூரா” என்று மெலிந்த குரலில் அழைத்த வீரைத் தூக்கி தன் மடியில் கிடத்தி கொண்டான்.
வீரின் மூச்சு மெல்ல மெல்ல குறைந்தது. கண்கள் மங்கியபடி, “சூரா… நான் உனக்கு துரோகம் செய்ய நினைக்கவில்லை. யசோவுக்கான எனது அன்பு… உனக்கு எதிரானதல்ல.” என்ற வார்த்தைகளை கேட்ட ராணசூரின் தொண்டை இறுகியது.
ராணசூர், “வேண்டாம் வீர்.. பேசாதே… நான் உதவி—” என்றவனை தடுத்த வீர் தலையசைத்தவன், “யசோவிடம் சொல்லு…என் கடைசி மூச்சுவரை நான் அவளை நேசித்தேன் என்று. அரவள்ளிக்காகப் போராடி இறந்தேன் என்று சொல். நரகத்திலும் சொர்க்கத்திலும்… அவள் என் இதயத்தில் வாழ்வாள்.” என்றவன் ராணசூரின் கையை இறுகப் பிடித்தான்.
வீர், “யசோதாராவை காப்பாற்று. அரவள்ளியை காப்பாற்றுவாய் என்று எனக்கு வாக்கு கொடு” என்றதை கேட்ட ராணசூரின் கண்ணீர் வீரின் கவசத்தில் விழுந்து சிதறியது.
ராணசூர், “ஐயோ யசோவிடம் என்ன சொல்வேன். உன்னை நானே கொன்று விட்டேனே. நண்பனை கொன்ற பாவத்தை நான் எங்கு சென்று கழுவுவேன். இந்த அழிவு, இந்த போர் அனைத்துக்கும் நானல்லவா காரணி ஆகிவிட்டேன். உன் பேச்சை கேட்டிருக்க வேண்டும். நீ எச்சரித்த போதே அரவள்ளிக்குள் நுழைந்த முகலாயர்களின் சிறு படையை கொன்றிருக்க வேண்டும். தவறிழைத்துவிட்டேன்…. வீர் தவறிழைத்துவிட்டேன்” என்றவனை பார்த்தபடி வீரின் உயிர் உடலை விட்டு பிரிந்தது.
போர்க்களம் அமைதியாகிவிட்டது. வீரின் உடலை கைகளில் ஏந்தியபடி, ராணா கோட்டையை நோக்கி நடந்தான் ரணசூரன். கண்களில் உயிரை துளைத்து வெறும் கூடாய் நடந்தவனின் கைகளில் வீரின் உடலின் கணம் உணராமல் பிணமாய் நடந்து ராணா குண்ட் கோட்டையை அடைந்தான்.
ரணசூரன் வந்துவிட்டான்………
