Loading

ரத்தினபுரிக்கு அருகில் உள்ள லந்தங்காட்டில் உள்ள ஒரு குகையில், காலக்கோடரின் ராட்சச சிலைக்கு முன்பிருந்த மண்டை ஓடுகள் வெடித்துச் சிதறியது. இதை கண்டு அங்கு பூஜிக்கும் குருமார்கள் அதிர்ந்துபோய் ராஜகுருவிடம் சென்ற விஷயத்தை கூற, பதறி வருகிறார் குகையினை நோக்கி.

  மண்டை ஓடுகள் சிதறி கிடந்ததை கண்டு ஏதோ நடக்கக்கூடாத ஒரு விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்தவர், தனது ஞான திருஷ்டியால் என்ன நடந்தது என்று பார்க்க தொடங்கினார்.

  தன் மன கண்களால் அங்கு நடந்தவற்றை அறிந்து கொண்டவர், அதிர்ந்து போய் அப்படியே தரையில் அமர்ந்து விட்டார்.

  விஷயம் அறிந்து வந்த ரத்னபுரியின் அரசர் சிதறி கிடந்த மண்டையோடுகளை கண்டு கொண்டே, அதிர்ந்து போய் அமர்ந்திருக்கும் தமது ராஜகுருவை நோக்கி சென்றார்.

  தரையில் அமர்ந்திருந்த ராஜகுருவிடம் என்ன நடந்தது  என்று அரசர் விசாரிக்க, அவர் கூறிய செய்தியை கேட்டு திகைத்து நின்றார்.

     ராஜகுரு கூறியவற்றை கேட்டுக்கொண்டே குகையினுள் நுழைந்த விஜயந்திர பூபதி பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார்.

“ஐயோ! மகளே, மோகனா…என்னை விட்டு பிரிந்து விட்டாயா? மகாராணியாக உன்னை காண விரும்பினேனே? இப்படி உன்னை பிணக்கோலத்தில் காணவா நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்?”

  ஆம் மோகனா இறந்து விட்டாள். செம்பா அவளை தூக்கி வீசியபோது அந்த ஆயுதத்தோடு தரையில் உருண்டவளின் உடலில், அந்த ஆயுதம் ஏறியது. அதனோடு சேர்ந்தே உருண்டவள் ரஞ்சனிக்கு சற்று தொலைவில் தான் போய் விழுந்தாள். தனது முடிவு நெருங்கி விட்டது என்பதனை உணர்ந்தவள், ஒரு முடிவோடு மந்திரங்களை ரஞ்சனியின் கண்களை பார்த்தபடியே முணுமுணுக்க ஆரம்பித்தாள்.

    அடுத்த நிமிடமே கண்களை திறந்தபடியே ரஞ்சனி தரையினில் விழுந்தாள். மோகனாவின் உடலில் இருந்து வழியும் ரத்தம் ரஞ்சனியை நோக்கி பாய்ந்தது. தனது உடலில் சொருகி இருந்த ஆயுதத்தை இன்னும் பலமாக உள்ளே தள்ளினால் மோகனா, ரஞ்சனியின் கண்களை கண்டபடியே மந்திரங்களை கூறிக் கொண்டிருந்தாள்.

    மோகனாவின் ரத்தமானது ரஞ்சனியை முழுவதுமாக நனைத்திருந்தது. கை கெட்டும் தூரத்தில் இருந்த ரஞ்சனியை எட்டிப் பிடிக்க நினைத்த மோகனா கையை நீட்டிட, அந்நேரமே ரஞ்சனியை கண்களில் நிறைத்தபடியே அவளின் உயிர் பிரிந்து விட்டது.

  மதுராவை தேடி வந்த மித்ரன், இவர்கள் தரையில் கிடக்கும் நிலையினை கண்டு அதிர்ந்து நின்றான். இருவருக்கும் ஏதோ ஆபத்து என்று எண்ணி அவர்களை நெருங்க முனைந்த போது, மோகனாவின் உடலில் இருந்து வெளியேறிய கரும்புகை சூழ்ந்த ஒளிவட்டமானது, ரஞ்சனியை நோக்கி வந்தது.

   அதை கண்டு திகைத்தவன் பின்னோக்கி அடிகளை எடுத்து வைக்க, அந்த ஒளிவட்டம் ரஞ்சனியை நெருங்கும் முன்பே, ருத்ராட்ச மாலை பறந்து வந்து அந்த புகையின் மீது விழுந்தது.

சாந்த குரு அடிகளார்தான் அந்த கரும்புகையின் மீது ருத்ராட்ச மாலையை வீசி இருந்தார். ருத்ராட்சம் அந்த கரும்புகையின் மீது விழுந்த அடுத்த நொடி, மோகனாவின் அலறல் சத்தம் அந்த காட்டையே அதிர செய்தது.

  அந்தக் கரும்புகையானது சட்டென்று உயிரே எழும்பி மேலே சென்று, காட்டை விட்டு பறந்து செல்ல, ருத்ராட்சம் தரையினில் விழுந்தது.

அப்போதுதான் மித்ரன் கொற்றவை தேவி கோயிலின் மண்டபத்தில் செம்பாவையும் மதுராவையும் கண்டான். உடனே அவர்களை நோக்கி ஓடினான்.

     தம்மை நோக்கி யாரோ வருவதை உணர்ந்து கோபத்துடன் திரும்பிய செம்பா, மித்ரனை கண்டு அடங்கி அமைதியாக நின்றது. செம்பாவை தாண்டி கொண்டு மதுரவே நோக்கி சென்றவன், படுத்திருந்த அவள் தலையினை தனது மடியினில் வைத்து அவளை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தான்.

  ஏந்தழை அம்மையார் மயங்கி இருந்தோரில் ஒவ்வொருவராக அப்போதுதான் தெளிய வைத்து கொண்டிருந்தார். திடீரென்று இந்த அலறல் ஒலி கேட்க ரகுநந்தனும் பிரதீபனும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினர். மயக்கம் தெளிந்தவர்களும் அவசரமாக அவர்களை பின்தொடர்ந்தனர்.
 
அங்கு பெண்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து கிடப்பதை கண்டு நண்பர்கள் இருவரும் அதிர்ந்து நின்றனர். இவர்கள் அவர்களை நோக்கி செல்ல அடி எடுத்து வைக்க, சாந்தகுரு அடிகளார் அவர்களை தடுத்து நிறுத்தினார்.

“பிரதீபா நீ அவர்களை நெருங்காதே,ரகுநந்தா ரஞ்சனியை உடனே அந்த ரத்தத்தில் இருந்தும் மோகனாவின் பார்வையில் இருந்தும் சற்று தள்ளி படுக்க வை.”
  
ரகுநந்தன் அவர் கூறியவாறே ரஞ்சனியை மோகனாவின் பார்வையில் இருந்தும் அவள் ரத்தம் தோய்ந்த இடத்தில் இருந்தும் சற்று தள்ளி படுக்க வைத்தான்.

  இவர்களைத் தொடர்ந்து வந்த மற்றவர்கள் மோகனாவின் நிலையை கண்டு திகைத்தனர். மேனகா தேவி இதை கண்ட உடனே மயங்கி விழுந்து விட்டார்.

   பிரதீபனும் மகாராணி தாரகை தேவியும் தான் மேனகா தேவியை இருபுறமும் தாங்கி பிடித்துக் கொண்டனர்.

  சிவனடியாரை கண்ட மன்னர் பார்த்திபேந்திரன் அவர் முன்பு தலைவணங்கி நின்றார்.

“பார்த்திபேந்திரா, உடனே உன் படை வீரர்களை அனுப்பி கொற்றவை தேவியின், தீர்த்த குளத்தில் இருந்து, இரண்டு குடம் தண்ணீரைக் கொண்டு வரச் சொல்.”

    மன்னரும் சிவனடியாரின் சொல்படியே வீரர்களை அனுப்பி,தீர்த்த குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தார்.

   இப்போது அங்கு வந்த ஏந்திழை அம்மையாரை நோக்கி சிவன் அடிகளார்,

  “தேவி இந்த பெண்ணை எந்த  கெட்ட துர்சக்தியும் நெருங்க கூடாது, என்று மனதில் அந்த அன்னையை வேண்டி, இந்த தீர்த்த நீரை அவள் மீது ஊற்றி, இந்த தாயத்தை அவள் கைகளில் கட்டுங்கள்.”

ஏந்திழை அம்மையாரும் சிவனடியாரை வணங்கி, அவர் சொன்னது போலவே செய்தார்.

“அரசே எக்காரணம் கொண்டும் இந்த தாயத்தானது இந்த பெண்ணின் கைகளை விட்டு நீங்க கூடாது. அப்படி ஏதேனும் நடந்துவிட்டால் வரப்போகும் பேராபத்திலிருந்து மகிழபுரியை யாராலும் காப்பாற்ற முடியாது, உலகை ஆளும் எம் ஈசனாலும் முடியாது.”

  பிரதீபனின் நிலைதான் மிகவும் மோசமாக இருந்தது. தனது உயிருக்கும் மேலான தங்கை இறந்ததை எண்ணி வருந்தவதா? அல்லது என் தங்கையை பற்றி முழுவதுமாக உண்மை தெரிந்தால் அன்னையின் நிலை என்னவாகுமோ என்று அதனை எண்ணி வருந்துவதா? என்று மனதினுள் போராடிக் கொண்டு இருந்தான்.

   சிவனடியார் மோகனாவின் உடலை நெருங்க கூடாது என்று கூறியதால், தூரத்தில் இருந்தே தன் தங்கையின் நிலையைப் பார்த்து, கண்ணீர் மழை பொழிந்து கொண்டிருந்தான்.

   பறந்து சென்ற அந்தக் கருப்பு புகை லந்தக்காட்டில் உள்ள காலகோடரின் குகையை நோக்கித்தான் சென்றது, ஆக்ரோஷத்தோடு அங்கிருந்த பொருட்களை விலாசியபடியே காலக்கோடரின் சிலையின் முன்பு கோபமாக நின்றது.

விஜயேந்திர பூபதி தனது மகளின் இந்த நிலையை கண்டு, தலையில் அடித்துக் கொண்டு கதறி அழத் தொடங்கிவிட்டார்.

தனது தந்தையின் கவலை தோய்ந்த முகத்தைக் கண்டு தான், மோகனாவின் ஆன்மா சற்று நிதானத்திற்கு வந்தது.

“தந்தையே எனது உடல் தான் அழிந்து விட்டது எனது ஆன்மா அதே திடத்தோடு தான் உள்ளது, நான் மீண்டும் எழுந்து வருவேன். அதற்கான வேலையை நான் ஏற்கனவே தொடங்கி விட்டேன். தயவு கூர்ந்து தங்கள் கவலை கொள்ள வேண்டாம், தங்களை இவ்வாறு காண என்னால் முடியவில்லை.”

   “மோகனா என்ன கூறுகிறாய்? உனது உயிர் உன் உடலை விட்டு பிரிந்து விட்டதே, இதற்குப் பிறகு வேறு என்ன செய்ய முடியும்? “

  “முடியாத காரியத்தை கூட, இந்த மோகனா நினைத்தால் முடித்து வைப்பாள் ராஜகுரு. என் உயிர் பிரிவதற்கு முன்பே கூடுவிட்டு கூடு பாயும் மந்திரத்தை ரஞ்சனியின் கண்களை பார்த்து கூறி முடித்து விட்டேன்.”

  “எனது ரத்தமும் அவள் உடலின் மீது முழுவதுமாக படும்படி செய்து விட்டேன், கடைசியாக எனது ஆன்மா அவளின் உடலின் உள்ளே செல்வதற்கு முன்பு, அந்த முட்டாள் சிவனடியார் வந்து எல்லாவற்றையும் கெடுத்து விட்டான்.

  நாளைய விடியலுக்கு முன்பு நான் அவளது உடலில் சென்று சேர வேண்டும். இல்லை என்றால் எல்லாமே கெட்டுவிடும். எப்படியும் கொற்றவையின் சக்தி அந்த காட்டை விட்டு வெளியே வர முடியாது ஆகையால் ரஞ்சனியின் உடலை மகிழபுரியில் வைத்துத்தான் எனது வசமாக்க வேண்டும்.”

  “நீ ரஞ்சனியின் உடலை கைப்பற்ற முயற்சி செய்வாய் என்று அந்த சிவனடியாருக்கு தெரிந்திருக்கும், அதை தடுப்பதற்கு உண்டான ஏற்பாடுகளை ஏற்கனவே அவன் செய்ய தொடங்கி இருப்பான். பிறகு எவ்வாறு நாம் ரஞ்சனியின் உடலை கைப்பற்றுவது.”

“எனக்கும் தெரியும் ராஜகுரு, நான் கூறும் திட்டத்தை அப்படியே செயல்முறை படுத்துங்கள், பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன்.”

பிரதீபனின் நிலையை கண்டு வருந்திய அரசர் பார்த்திபேந்திரர், அவனை தேற்ற முயன்றார்

“பிரதீபா நீயே இப்படி உடைந்து போனால் எப்படி? பிறகு எவ்வாறு உன் அன்னையை தேற்றுவாய்?”

“முடியவில்லை மாமா என் தங்கையின் இறப்பை நினைத்து வருந்துவதா? இல்லை என் அன்னையின் உடல்நிலையை எண்ணி வருந்துவதா? ஒரு குழந்தையைப் போல் தானே அவளை நாங்கள் பார்த்துக் கொண்டோம். என் தாய் வாழ்வதே எங்களுக்காக தானே, இவளுக்கு ஏன் இப்படி புத்தி வழி தவறிப் போனாது, இவளைப் பற்றிய உண்மை என் அன்னைக்கு தெரிந்து விட்டால், ஐயோ! அதற்குப் பிறகு அவர் உயிரோடு இருக்கவே மாட்டாரே.”

தன்னிலை மறந்து உடைந்து போய் அழ தொடங்கிய அவனை, தாய்மாமனான அவர் தாயாக மாறி அரவணைத்துக் கொண்டார்.

  பிரதீபனின் கலக்கத்தை கண்ட சாந்தகுரு அடிகளார், அவனை தேற்ற முயன்றார்.

“பிரதீபா, விதியின் செயலை யாரால் மாற்ற முடியும். மோகனா இப்படி ஆனதற்கு நீயோ உன் தாயோ பொறுப்பாக முடியாது. இதற்கு முழுக்க முழுக்க உங்கள் தந்தைதான் காரணகர்த்தா ஆவார்.”

  பிரதீபன் அதிர்ந்து நின்றான்,

  “என்ன? என் தங்கை இப்படி ஆனதற்கு காரணம் என் தந்தையா?”

“ஆம் பிரதீபா, சிவனடியார் கூறுவது உண்மைதான். அதற்கு சாட்சியம் உண்டு, இவ்வளவு நாள் அரண்மனைக்கு கீழே சுரங்க பாதையை உருவாக்கி உன் தந்தை அடிக்கடி உன் தங்கையை சந்தித்து வந்துள்ளார் அவள் மாந்திரீகத்தில் ஈடுபட்டதற்கும் அவர்தான் காரணம்.

   இன்று காலையில் தான் உன் தங்கையின் ரகசியங்களை அறிந்த அவளது அந்தரங்க வேலையாளான யோகினியை பிடித்தேன். அவள் ரத்னபுரியை சேர்ந்தவள், உன் தந்தையால் உன் தங்கைக்கு காவலாக அனுப்பி வைக்கப்பட்டவள்,அவள் மூலமாகத்தான், இங்கு இப்படி ஒரு போர் நடக்க இருப்பதை தெரிந்து கொண்டு தான், சிறு படையுடன் காட்டினுள் நுழைந்தேன்.”

    ஆம் யோகினி நேற்று மாட்டிக்கொண்டது அரசரிடம் தான். அரசாங்க பொறுப்புக்களை இளவரசனிடம் அரசர் ஒப்படைத்து விட்டாலும், அங்கங்கு சில ரகசிய ஒற்றர்களை வைத்து, அவர்களின் மூலம் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை கண்காணித்துக் கொண்டிருந்தார், அப்படித்தான் யோகினியும் சிக்கினாள்.

   அரசருக்கு ரத்தினபுரியைச் சேர்ந்த ஒற்றர்கள் மகிழபுரியில் பணிபுரிந்து கொண்டே, ஒற்று வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அவர்களை அவர்களுக்கே தெரியாமல், வேறு உபயோகம் இல்லாத வேலைக்கு இளவரசரின் மூலம் பணிக்கு மாற்றப்படுவதும் தெரியும். ஆனால் அந்த ஒற்றர் குழுவுக்கு தலைவியாக இருந்து கொண்டு, மோகனா தான் இந்த கூட்டத்தையே வழி நடத்தி வருகிறாள் என்று, அவர் நினைத்து கூட பார்க்கவில்லை.

    ஒருவேளை, நாளை அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்கு செல்வதாக இருந்த முடிவை மாற்றினால், இவர்கள் வேறு ஏதாவது திட்டம் தீட்ட கூடும் என்று கோயிலுக்கு செல்லும் திட்டத்தில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தி, குருதங்காட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதி படி அவர்களைக் காக்க ஒரு சிறு படையுடன் எதிரிகளை எதிர்க்க தயாரானார்.

  அவர் அறியாத ஒன்று என்றால் அது மித்ரன் மற்றும் மதுராவுக்கு இடையில் இருந்த உறவை பற்றிதான். அரசருக்கு இளவரசர் அடிக்கடி ஏரி பக்கம் செல்வதும் பிறகு தண்ணீரில் குதித்து காணாமல் போவதாக ஏற்கனவே ஒற்றர்கள் அவரிடம் கூறியிருந்தனர். இளவரசன் ஏதோ மூச்சுப் பயிற்சியை மேற்கொள்வதாகத்தான் அரசர் இதுவரை எண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் மித்ரன் தனது உயிர் மூச்சானவளை காணத்தான் அந்த ஏரிக்கு சென்று வருகிறான் என்று அவருக்கு எப்படி தெரியும் பாவம்!
 
“பிரதீபா இனி இது பற்றி பேச ஒன்றுமில்லை, முதலில் ஒரு நல்ல தமையனாக உன் தங்கைக்கு செய்ய வேண்டிய ஈமக்காரியங்களை முதலில் செய்து முடி.”

  “சுவாமி தாங்கள்தான் அவளை நெருங்கவே கூடாது என்று கூறி விட்டீர்களே, பிறகு எப்படி இவளை இங்கிருந்து எடுத்துச் செல்வது?”

   “இல்லை பிரதீபா மோகனவை இங்கே தான் தகனம் செய்ய வேண்டும்.”

      அதைக் கேட்டு ஏந்திழை அம்மையார் தான் அதிர்ச்சியுடன் சிவனடியாரை பார்த்து பேச தொடங்கினார்.

“சுவாமி கோயிலுக்கு அருகில் எவ்வாறு இந்த உடலை தகனம் செய்வது? அப்படி செய்தால் தீட்டாகி விடுமே? பிறகு கொற்றவை தேவிக்கு மந்திர கட்டு இட்டது போல் ஆகிவிடுமே?”

“தேவி இப்போது இங்கு நடந்த கன்னி பலியே கொற்றவை தேவிக்கு மந்திர கட்டு இட்டது போலத்தான். அந்த அன்னையால் இனி இந்த காட்டை விட்டு வெளியே வர முடியாத படி, மந்திர கட்டால் அவளை கட்டுப்படுத்தியது போலத்தான்.”

  “சுவாமி என்ன சொல்கிறீர்கள்? அப்படி என்றால் கெட்ட சக்திகள் இனி சுதந்திரமாக நடமாடுமே? இப்படி ஒரு கெட்ட சம்பவம் ஏன் தான் நடந்தது?”

     “இந்த கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கின்றது தேவி, நல்ல வேலையாக இந்த பலி கோவிலினுள் நடக்கவில்லை, மோகனாவின் இந்த இறப்பானது கோவிலினுள் நடந்திருந்தால், அந்த அன்னை கர்ப்ப கிரகத்தை விட்டே வெளியே வர முடியாத படி மந்திர கட்டால் பிணைக்கப்பட்டு இருப்பாள்.”

     “சுவாமி எப்படி அன்னையை மந்திர கட்டில் இருந்து விடுவிப்பது? அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? தயை கூர்ந்து அதற்கான வழிமுறையை கூறுங்கள்? அன்னை மந்திர கட்டில் இருப்பது பெரும் அபத்தங்களை ஏற்படுத்தும்.”

  “48 நாட்கள் விரதம் இருந்து அன்னைக்கு சுமங்கலி பூஜை செய்து, ஈரேழு தேசங்களில் இருந்து கொண்டு வரப்படும் தீர்த்த நீரினால், அபிஷேகம் செய்ய வேண்டும். நாள் தவறாமல் பூஜை புனஸ்காரங்களால் மூலவர் சன்னதியில் குங்கும பூஜை நடந்து கொண்டே இருக்க வேண்டும்.”

  “சுமங்கலி பூஜையா? அதை திருமணம் ஆனவர்களால் தானே செய்ய முடியும். மூலவர் சன்னதிக்கு நானும் என் மகளும் மட்டுமே செல்ல முடியும், பிறகு எவ்வாறு இந்த பூஜைகளை செய்வது?”

  “உன்னால் செய்ய முடியாது ஆனால் உன் மகளால் இந்த பூஜையை செய்ய முடியும் அல்லவா?”

  “வாணிக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று கூற வருகிறீர்களா? அன்னை இப்படி மந்திர கட்டில் இருக்கும் வேளையில் எவ்வாறு நல்ல காரியம் செய்வது? அப்படியே செய்வதாயினும் திடீரென்று மணமகனுக்கு எங்கு செல்வது?”

“உனது மகள் உனக்கு அந்த வேலையையே வைக்காமல், ஏற்கனவே தனது மணமகனை தேர்ந்தெடுத்து, பத்து வருடங்களுக்கு முன்பே மாலையும் சூட்டிவிட்டாள்.”

“என்ன கூறுகிறீர்கள் சுவாமி என் வாணிக்கு திருமணம் முடிந்து விட்டதா?”

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்