
கொம்பு என்பது ஒரு தூம்பு வகை பழங்கால தமிழர்களின் இசை கருவி. இது ஒரு ஊது கருவி. கொம்பு பண்டைய காலத்தில் விலங்குகளின் கொம்புகளை பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும் தற்காலத்தில் உலோகங்களாலும் உருவாக்கப்படுகிறது.
நாட்டுப்புற இசையிலும் கோயில்களிலும் இந்த கொம்பு வகை இசைக்கருவி பயன்படுத்தப்படுகிறது தற்காலத்தில் பித்தளை வெண்கலம் போன்ற உலோகங்களால் கொம்பு செய்யப்படுகிறது. பித்தளையால் செய்யப்பட்ட கொம்பை விட, வெண்கலத்தால் வார்க்கப்பட்ட கொம்பில், ஒலி அதிர்வு கூடுதலாக இருக்கும்.
இதை இசைப்பவர்கள், தமது முழு பலத்தையும் பயன்படுத்தி அடிவயிற்றில் இருந்து ஊதுவதன் மூலம், யானை பிளிறுவது போன்ற ஓசை கொம்பில் உருவாகின்றது.
அத்தகைய ஓசையை கேட்டு தான், ரகுநந்தன் அவசரமாக தனது அத்தை வீட்டில் இருந்து வெளியேறினான்.
நண்பர்கள் குருகுலத்தில் இருந்தபோது அவசரகால செய்தியை தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள, இந்த கொம்பு ஒலியை தான் உபயோகித்தனர். அதையே தான் வியாபாரியின் வீட்டில் வேலையாளாக இருக்கும் உளவாளியிடம் கொடுத்திருந்தான் மித்ரன்.
ரகுநந்தன் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியை விட்டு சற்று தள்ளி, குகை போன்ற அமைப்பில் இருந்த ஒரு இடத்திற்குள் நுழைந்தான்.
அங்கு அவனுக்கு முன்பே மித்ரன், வியாபாரியிடம் வேலையாளாக இருந்த உளவாளியுடன் பேசிக் கொண்டிருந்தான்.
“என்ன ஆனது மித்ரா அப்படி என்ன அவசர செய்தி?”
மித்ரன் சிந்தனையில் இருக்க, வேலையால் ரகுநந்தனுக்கு பதில் கூற ஆரம்பித்தான்.
“ஏதோ சதி திட்டம் ஒன்று நாளை அரங்கேற உள்ளது. அந்த வியாபாரி தமது பெட்டிகளில் நிறைய ஆயுதங்களை பதுக்கி எங்கேயோ அந்த யோகினியுடன் புறப்பட்டு சென்றான். நாட்டில் அங்கங்கு அவனுக்கு உதவி செய்த பணியாளர்களை தங்கள் கண்டுபிடித்து, அவர்களை வேலையில் இருந்து மாற்றி விட்டதால், அவன் தெருவை சுற்றிக் கொண்டு காட்டை ஒட்டிய பாதையில் சென்றான். நான் அவர்களுடன் செல்ல எவ்வளவோ முயற்சித்தேன் ஆனால் அவர்கள் இருவர் மட்டும் ஒரு வண்டியில், அந்த பொருட்களை வைத்து வியாபாரத்திற்கு செல்வது போல் சென்றனர்.
நானும் அவர்கள் அறியாமல் அவர்களை பின்தொடர்ந்து தான் சென்றேன். சிறிது நேரத்தில் ராட்சச உருவம் கொண்ட இருவர் வந்து அந்த பெட்டிகளை எடுத்துக்கொண்டு சென்றனர். அந்த ராட்சச உருவம் கொண்ட மனிதர்களின் நெற்றியில் உள்ள குறிகள், அந்த மலை மீது வாழும் மேக காடு மக்கள் இட்டுக் கொள்ளும் குறியீடு போல இருந்தது.”
“மேக காட்டில் வாழும் மக்களுக்கும் மோகனாவிற்கும் என்ன சம்பந்தம்? சில காலமாக மேக காட்டு மக்கள் மாந்திரீகங்களில் ஈடுபட்டு வருவதாக கேள்விப்பட்டேன், நம் குருநாதர் கூட ஒரு சில ஊர்களில் மாந்திரீக வேலைக்காக அவர்கள் அப்பாவி பொதுமக்களை பலி கொடுக்க முனைந்த போது துரத்தி அடித்தாரே!”
“மித்ரா மறந்து விட்டாயா? அன்று கூட காட்டில் அந்த யானையை மோகனா ஏதோ பொடியை தூவி, மந்திரங்களை முணுமுணுத்து மூர்ச்சை அடையச் செய்தாளே, அதுவும் மாந்திரீக வேலையாக இருக்குமோ? “
“என்ன?…என்ன கூறிக் கொண்டிருக்கிறாய் ரகுநந்தா? எனது தங்கை மந்திரங்களை கூறி யானையை மூர்ச்சை அடைய செய்தாளா?”
அந்த இடத்தில் அந்த நேரத்தில் பிரதீபனை மித்திரனும் ரகுநந்தனும் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. இந்த கொம்பின் ஒலியை அவன் கேட்டாலும், தங்களது ஊரில் ஒலிப்பதால் இதை அவன் குறிப்பில் எடுத்துக் கொள்ள மாட்டான் என்று நினைத்திருந்தார்கள். ஆனால் அவன் சரியாக அதை கண்டுபிடித்து, அவர்கள் வழக்கமாக கூடும் இடத்திற்கு வருவான் என்று நினைக்கவே இல்லை.
“மித்ரா இங்கு என்னதான் நடக்கின்றது? எதற்காக மோகனாவை பற்றி இவ்வாறு கூறிக் கொண்டிருக்கிறீர்கள்?”
பிரதீபனிடம் இதற்கு மேலும் உண்மையை மறைக்க விரும்பாமல், நடந்த அனைத்தையும் அவனிடம் கூறினார்.
“மித்ரா என் தங்கை சற்று கண்டிப்போடு நடந்து கொள்பவள் தான். ஆனால் அதற்காக இப்படிப்பட்ட செயல்களில் எல்லாம் ஒரு நாளும் ஈடுபட மாட்டாள். ஒருவேளை அந்த யோகினியே என் தங்கையின் அனுமதி இல்லாமல் தனியாக இவ்வாறு செய்திருக்கலாம் அல்லவா?”
“பிரதீபா, நாங்கள் இதைப் பற்றி தீர விசாரிக்காமல் முடிவுக்கு வந்திருப்போம் என்று நினைக்கின்றாயா?”
“வாழ வேண்டிய பெண்ணின் மீது, இப்படிப்பட்ட பழி சொற்களை வீசுகிறீர்களே? உங்களுக்கு இரக்கமே இல்லையா? குழந்தையடா அவள். மித்ரா உனக்கு என் தங்கையை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்றால், அதை நேரடியாக கூறிவிடு. அதற்காக இவ்வாறான பழிச் சொற்களை அள்ளி அவள் மீது வீசாதே.”
“பிரதீபா, உன் தங்கையின் மீது வைத்த பாசத்தின் காரணமாக, இந்த நண்பர்களின் மீது வைத்த நம்பிக்கையை இழந்து விட்டாயா? மித்ரனை பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் நீயா, அவனைப் பற்றி இப்படியெல்லாம் பேசுகின்றாய்?
உனக்கு எங்கள் மீது சந்தேகம் என்றால், நாளை கொற்றவை தேவி கோவிலுக்கு உன் தங்கையையும் உடன் அழைத்து வா. அவளால் சில நாழிகைகள் கூட, தேவியின் கோயிலுக்குள் இருக்க முடியாது. பிறகு நீயே அறிந்து கொள்வாய், உண்மை எதுவென்று.”
“ரகுநந்தா போதும் நிறுத்து, பிரதீபா அமைதி கொள், உன் நிதானத்தை இழக்காதே. நாங்கள் கூறியவை அனைத்தும் உண்மை, பொறுமையாக நாங்கள் கூற வருவதை சற்று புரிந்து கொள்ள முயற்சி செய் நண்பா.”
“வேண்டாம் நான் எதையும் கேட்க விரும்பவில்லை.”
பிரதீபன் அங்கிருந்து கோபமாக கிளம்பி விட்டான்.
“நாம் இந்த கொம்பின் ஒலியை ரகசிய குறியாக வைத்திருக்கக் கூடாது என்று, எனக்கு இப்போது தோன்றுகிறது ரகுநந்தா.”
“விடு மித்ரா, பிரதீபனை பிறகு சமாதானப்படுத்திக் கொள்ளலாம். இவன் கூறிய செய்தியை பற்றி முதலில் கவனிப்போம்.”
“ம்ம்ம். அவர்களுக்குள் வேறு ஏதாவது சம்பாஷனை நடந்ததா? யோகினியும் அந்த வியாபாரியும் அவர்களிடம் அவற்றைக் கொடுத்துவிட்டு வேறு எங்கு சென்றனர்?”
“யோகினி அவர்கள் மூவரிடமும் ஏதோ கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் அந்த ராட்சச உருவங்களுடன் வியாபாரியும் கிளம்பிவிட, யோகினி அவர்கள் செல்லும்வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அரண்மனைக்கு திரும்பி விட்டாள்.”
மித்ரன் சிறிது நேரம் யோசித்து விட்டு, ரகுநந்தனிடம் திரும்பி, தனது திட்டங்களை விவரிக்க தொடங்கினான்.
அதே நேரம் தன் தங்கையின் வீட்டுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, படுக்கையில் படுத்திருந்த அவரது அத்தையை பார்க்க சென்றிருந்த மேனகா தேவி, நாளை கொற்றவை தேவி கோவிலுக்கு அண்ணியாருடன் போவதாக கூறினார்.
திருமணம் முடிவாக உள்ள நிலையில், ரஞ்சனியும் கொற்றவை தேவி கோயிலுக்கு சென்று, அந்த தேவியின் ஆசி பெற்று வந்தால், நன்றாக இருக்கும் என்று தெய்வநாயகி பாட்டி கூற, நாளை ரஞ்சனியையும் உடன் அழைத்துச் செல்வதாக கூறி சென்றார் மேனகா தேவி.
அரண்மனைக்கு வந்த பிரதீபன், நாளை கொற்றவை தேவி கோவிலில் உனது திருமணத்திற்காகவும் பூ கேட்க போகிறோம். அதனால் எங்களோடு நீயும் வந்தே ஆக வேண்டும் என்று கட்டளை போல் மோகனாவிடம் கூறிச் சென்றான்.
தனது அறையில் சிந்தனையுடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் மோகனா.
“தேவி தற்போது என்ன செய்வது? தாங்கள் வரவில்லை என்றால், எப்படி பலி பூஜை நடக்கும்? எப்போதும் போல ஏதாவது ஒரு காரணத்தைக் கூறிவிட்டு அங்கு செல்வதை தவிர்த்து விடுங்கள்.”
“இல்லை யோகினி, நான் அவர்களுடன் செல்லவில்லை என்றால் என் மீது ஏற்பட்டுள்ள சந்தேகம் வழுப்படும். ஏற்கனவே அந்த ராணியாருக்கு என் மீது சந்தேகம் உருவாகியுள்ளது. தற்போது ஏந்திழைக்கும் அவளது மகளுக்கும் ஒரு பிரச்சனை என்றால், அவள் சந்தேக கண்ணை என் மீது தான் திருப்புவாள். நமது இடத்தில் அந்த ஏந்திழையின் மகளை பலி கொடுத்து அவளது பிரேதத்தை கொற்றவை கோயிலில் போடலாம் என்று இருந்தோம், இப்போது கொற்றவை கோவிலிலேயே வைத்து அவளை பலியிட்டு விடுவோம். யோகினி நமது திட்டத்தில் சிறு மாற்றம், இதைப் பற்றி அந்த மலைவாசிகளுக்கு தெரியப்படுத்தி விடு.”
என்று கூறி சில பல திட்டங்களை மோகனா, யோகினியிடம் உரைத்தாள்.
“அரண்மனை முன் வாசல் வழியே செல்ல வேண்டாம். என் அண்ணன் கண்களிலோ அல்லது என் அத்தானின் கண்களிலோ விழுந்து விட்டால், தேவையில்லாத சந்தேகம் உண்டாக வாய்ப்புள்ளது. அதனால் நீ சுரங்கப்பாதை வழியே செல், முடிந்தால் திரும்பி வா இல்லை என்றால் அவர்களுடனே இரு. நான் இங்கு அரண்மனையில் ஏதாவது கூறி சமாளித்துக் கொள்கிறேன்.”
யோகினி மோகனாவின் அறைக்குள் இருக்கும் சுரங்கப்பாதை வழியே சென்றாள். அவள் மலைவாசிகளிடம் மோகனா சொன்ன திட்டங்களை கூறிவிட்டு, அரண்மனைக்கு திரும்பும் போது, எதிர்பாராத ஒருவரிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டாள்.
காட்டில் ஏந்திழை அம்மையாருக்கு ஏனோ மனது நெருடலாகவே இருந்தது. ஒருவித அவஸ்தையை உணர்ந்தவர், அந்த இரவு வேளையிலும் கொற்றவை தேவியின் கோயிலை நோக்கிச் சென்றார். அந்த தேவியின் முன்பு அவரை நோக்கியப்படியே அமர்ந்து விட்டார்.
தன் அன்னையை குடிலினுள் காணாமல் அவரை தேடி வந்த மதுரா, கொற்றவை தேவி கோயிலில் தனது அன்னையைக் கண்டு, வழக்கம் போல தனது தோழனான செம்பா அவளை பின்தொடர, அவரை நோக்கிச் சென்றாள்.
“தாயே என்னவானது? எதற்காக உறங்காமல் இந்த நேரத்தில், தேவியின் கோயிலில் வந்து அமர்ந்திருக்கிறீர்கள்?”
“வாணி ஏதோ மனதிற்கு தப்பாக படுகின்றது. எதுவோ நடக்க கூடாத ஒன்று நடக்கப் போவதாக, உள்ளம் எச்சரிக்கை செய்கின்றது. என் மனம் ஒரு நிலையிலேயே இல்லை, அதுதான் இந்த தேவியை தேடி வந்தேன். இம்மக்களுக்கு ஏதோ தீங்கு நடைபெற போவதாக உள்ளம் உரைக்கின்றதே என்ன செய்வேன்.”
“தாயே இந்த அன்னையின் அருள் நமக்குள்ளவரை, யாரால் நம்மை என்ன செய்து விட முடியும். தங்களின் மனதின் பிரம்மையில் இருந்து வெளியே வாருங்கள். தற்போது உங்களுக்கு நல்ல உறக்கம் தான் தேவை, என்னோடு வாருங்கள் குடிலுக்கு செல்வோம்.”
ஏந்திழை அம்மையார் கொற்றவை தேவியை நோக்கி மனதார வணங்கி விட்டு, குடிலை நோக்கி மதுராவுடன் சென்றார்.
அரண்மனையில் அரசர் பார்த்திபேந்திரர் அனைவரையும், அதிகாலையிலேயே கொற்றவை கோயிலுக்கு செல்ல கிளப்பிக் கொண்டிருந்தார். அதிகாலை பூஜையில் அனைவரும் சென்று கலந்து கொள்ளலாம் என்றும், அவரும் உடன் வருவதாகவும் கூறினார்.
மோகனா இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தாங்கள் காலம் தாழ்த்தி அங்கு சென்று சேர்வதற்குள் அனைத்தும் முடிந்து விடும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் இப்போது திடீரென்று உடனே கிளம்புமாறு கூற, என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தால். சரி வருவது வரட்டும் என்று அவளும் அவர்களுடன் தயாராகி வந்தாள்.
இவர்களுடன் சேர்ந்து கோயிலுக்கு செல்ல, சிறுபடையே தயாராக இருந்தது. போன முறை போல ஏதும் தவறாக நடந்து விடக்கூடாது என்று அரசர் இந்த காவலர் படையை உருவாக்கி இருந்தார்.
மேனகா தேவி, தாரகை தேவி, ரஞ்சனி, மோகனா, பார்த்திபேந்திரர், பிரதீபன் மற்றும் ரகுநந்தனுடன் சிறுபடையும் கோயிலை நோக்கி, அந்த அதிகாலை வேளையில் சென்றது. மித்ரனுக்கு அவசர வேலை ஒன்று வந்ததால், அவர்களுடன் பின்னர் வந்து இணைந்து கொள்வதாக நேற்று இரவே கூறி சென்றிருந்தான்.
ஜோதிடர் அரசருக்கு நடக்கப்போகும் ஆபத்தை எடுத்துரைக்கும் முன்பே, விதியானது தனது ஆட்டத்தை தொடங்கி விட்டது.
காட்டினில் ஏந்திழை அம்மையாரின் குடிலின் கதவு அவசரமாக தட்டப்பட்டது.
விவசாய நிலத்தில் காவல் காக்கும் வீரர்களில் ஒருவர், ரத்தக்காயங்களுடன் அவரின் முன்பு நின்று கொண்டிருந்தார்.
ஏந்திழை அம்மையார் அவரிடம் என்ன ஏது என்று கேள்வி கேட்கும் முன்பே, மடமடவென்று அங்கு நடந்தவற்றை கூற ஆரம்பித்தார்.
“தாயே மேகக் காடு வாழும் மக்கள் எங்களை தாக்க ஆரம்பித்து விட்டனர். நாங்கள் எவ்வளவு போராடியும் ஏதோ வினோதமான மந்திரங்களை முணுமுணுத்தும், கற்களை எங்களின் மீது தூக்கிப் போட்டும் விளைநிலங்களில் முன்னேறிக் வந்து கொண்டுள்ளனர். நமது வீரர்கள் அவர்களுடன் போரிட முடியாமல் போராடிக் கொண்டிருக்கின்றனர்.”
“என்ன? ஆனால் எப்படி? நான் தான் மந்திர நடுகல்களை, எல்லையில் பாதுகாப்பிற்க்காக நட்டு வைத்திருக்கின்றேனே?”
“ஆம் தேவி, ஆனால் அவர்கள் அதனை தூக்கி வீசிவிட்டு, நம் காட்டினை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் உடனே அங்கு வந்து அவர்களை தடுக்க வேண்டும், இல்லையென்றால் நம் காட்டினுள் புகுந்து பல சேதாரத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.”
“தாயே இன்னும் எதற்கு தாமதம். உடனே மலை அடிவாரத்தை நோக்கி செல்லலாம் வாருங்கள்.”
“வாணி நீ இங்கேயே இரு, நான் அங்கு சென்று பார்த்து வருகிறேன்.”
“ஆனால் தாயே…”
“நான் சொல்வதை புரிந்து கொள் வாணி. ஒருவேளை அங்கு எங்களால் தாக்கு பிடிக்க முடியாவிட்டால், இங்கு உள்ளவர்களை காப்பது உனது கடமையாகும்.”
“சரி தாயே, ஆனால் நீங்கள் செம்பாவையும் உடன் அழைத்துக் கொண்டு செல்லுங்கள்.”
“மகளே பத்திரம், நமது மக்களின் பாதுகாப்பு இப்போது உன் கையில். எங்களை மீறி ஓரிருவர் உட்புகுந்தாலும் அவர்கள் உயிரோடு இந்த காட்டை விட்டு செல்லக்கூடாது. நமது மக்களை பாதுகாப்பது உனது கடமையாகும்…”
ஏந்திழை அம்மையார் செம்பாவின் மீது ஏறி, மலையடிவாரத்தை நோக்கி சென்றார்.
அவர் மலையடிவாரத்தை நெருங்கும் போது, பாதுகாப்பு குழுவில் உள்ள பாதிப்பேர் மாண்டிருந்தனர். ஒரு சிலர் இரத்த காயங்களோடு அவர்களை முன்னேற விடாமல் எதிர்த்து போரிட்டுக் கொண்டிருந்தனர்.
அவரும் பாதுகாப்பு வீரர்களோடு சேர்ந்து,மேக காடு வாழும் மக்களை எதிர்த்து போரிடத் தொடங்கினார். அவர் வருகை புரிந்த ஒரு சில நாழிகைக்கு பின் மேக காட்டைச் சேர்ந்த ஒருவன், நெருப்பு வளையத்தை வானினை நோக்கி வீசினான்.
அப்போதுதான் ஏந்திழை அம்மையார் ஒரு விஷயத்தை கவனித்தார். அவர்கள் எதிர்த்துப் போரிடுவதை விட, தன்னை இங்கே நிறுத்தி வைப்பதற்காக போரிட்டு கொண்டிருப்பதாக தோன்றியது.
ஏனெனில் அவர்கள் காட்டினை நோக்கி முன்னேற, ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. அத்தோடு ரகசிய குறியீடு போல, ஒரு நெருப்பு வளையத்தை, வானினை நோக்கி வீசியது, அவர் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது.
அதே நேரம் அந்த நெருப்பு வளையத்தை கண்ட காட்டிற்கு வெளியே இருந்த மேக காட்டினை சேர்ந்த மானிடர்களும், அவர்களை போலவே வேடம் பூண்ட ரத்தினபுரியை சேர்ந்த வீரர்களும் காட்டினை நோக்கி, தமது ஆயுதங்களுடன் முன்னேற தொடங்கினர்.

