
மகாராணியார் தமது மகனுக்கு ஆரத்தி எடுத்து அன்புடன் வரவேற்றார். பல வருடங்கள் கழித்து காணும் தன் மகனை உச்சி முகர்ந்து ஆனந்தம் கொண்டார்.
மித்ரன் அங்கங்கு சிதறி கிடக்கும் பொருட்களை பார்த்து, என்ன நடந்தது என்று அவன் அன்னையிடம் வினவ, அவர் கூறியதை கேட்டு அதிர்ந்தனர் நண்பர்கள் மூவரும்.
மித்ரனுக்கு குழப்பமாக இருந்தது, எதற்காக இரண்டு இடங்களிலும் தமது குடும்பம் தாக்கப்பட வேண்டும்? என்று யோசிக்க தொடங்கினான். தமது ராஜ்ஜியத்தில் படைகளுக்கு இடையே உள்ள புல்லுருவிகளை, முதலில் களைய வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.
சற்று நேரத்தில் ரஞ்சனியும் மோகனாவும் பல்லக்கில் வந்து இறங்கினார். மோகனாவின் முகம் சிவந்திருந்தது. அவளால் என்றுமே கொற்றவைக் கோயிலை பிரச்சினையின்றி நெருங்க முடிந்ததில்லை.
காட்டினுள்ளிருந்து எந்த செய்தியும் வராமல் இருக்கும்போதே, அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவள் வந்து இறங்கும்போது மித்ரனை கண்டதால், இரண்டு திட்டங்களுமே தோல்வியை தழுவியதால், அவளுக்கு அதிக கோபம் தோன்றியது.
அதைவிட கொற்றவை தேவி கோயிலை நெருங்கும் போது, அவள் உடலில் ஏற்படும் அதிர்வினால் உடலானது கொதிக்க ஆரம்பித்தது.
இந்த வெப்பமானது அவளது மேனியை சுட்டு, நெருப்பில் இட்டது போல் துடிக்க வைத்தது. அதை தவிர்ப்பதற்காகவே இவள் அந்த மாந்திரீக மையை உபயோகித்துக் கொண்டிருக்கிறாள். கொற்றவை தேவியின் பிரசாதங்களை கூட இந்த காரணத்தால் தான் அவள் தவிர்த்து வருகிறாள்.
மோகனாவை கண்டவுடன் மகாராணியாரின் முகம் சட்டென சுருங்கியது, அதை மித்ரனும் கவனித்தான்.
மோகனா மித்ரனை நெருங்கும் முன்பே, மித்ரனை அழைத்துக் கொண்டு கொற்றவை தேவி கோவிலினுள் மகாராணியார் நுழைந்து விட்டார்.
மோகனாவிற்கு தன் உடல் எரிச்சலை விட, தாரகை தேவி தன்னை கண்டவுடன் மித்ரனை அழைத்துக் கொண்டு, கொற்றவை தேவி கோயிலுக்குள் நுழைந்தது, ஒருவித எரிச்சலை அவளுக்கு ஏற்படுத்தியது.
முதலில் இந்த கிழவிக்கு ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டும். இல்லை என்றால் என் அத்தானுடன் நான் சேர்ந்து வாழ இவள் ஒரு காலமும் விட மாட்டாள்.
அவளின் மனக்கோபம் முகத்தில் தெரிய, அவளது முகம் விகாரமாக தோன்றியது. ரஞ்சனி அவளது கைகளை பற்றிய பிறகு தான் சுய உணர்வுக்கு வந்தவள், தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
கோயிலினுள் நுழைந்த பிறகு தான், மதுரவாணியும் ஏந்திழை அம்மையாரும் அங்கு இல்லை என்பதை கவனித்து, தமது மகளிடம் வினவினார்.
மதுராவின் பெயரை கேட்டதுமே மித்ரனுக்கு ஒரு பக்கம் சந்தோஷமும் ஒரு பக்கம் பயமும் தோன்றியது. தனது கண்களால் சுற்றி உள்ளவர்களை ஆராய்ந்தான்.
நல்ல வேலையாக அவள் அங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, அவர் யாரைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று தன் அன்னையிடம் வினவினான்.
தாரகை தேவியும் தாக்க வந்த படை வீரர்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிய அந்த பெண்ணை பற்றி கூறினார்.
மித்ரனுக்கு இப்போதே தனது மதுராவை சென்று காண வேண்டும் போல் இதயம் துடித்தது. அதே நேரம் வெளியே அரசர் வரும் அறிவிப்பு கேட்டது.
அப்போதுதான் மித்ரன் நினைவு வந்தவனாக அரசரைக் காண வேகமாக வெளியே சென்றான்.
கோபமாக உள்ளே நுழைய இருந்த அரசரைத் தடுத்து, இங்கு நடந்தவைகளையும், தான் யூகித்த விசயங்களையும் பற்றி அவரிடம் எடுத்துரைத்தான்.
மோகனாவும் அங்குதான் நின்று மித்ரன் கூறியதை கேட்டுக் கொண்டிருந்தாள். தமது படைவீரர்களின் அறிவாற்றலை எண்ணி மனம் குமுறினாள். தமது திட்டத்தை சரியாக செயல்படுத்தாத தன் தந்தையையும் சிற்றப்பாவையும் எண்ணி கோபமுற்றாள்.
ஏந்திழை அம்மையார் வருவதைக் கண்டு, மோகனா தன் அன்னையுடன் ஒதுங்கி நின்று விட்டாள்.
அரசருடன் சேர்ந்து அரசு குடும்பத்தினர் அனைவரும் கோவிலினுள் செல்ல, மோகனா வேண்டா வெறுப்பாக உள்ளே நுழைந்தாள்.
உள்ளே நுழைந்த மோகனாவினால் அங்கே இருக்க முடியவில்லை. யாரும் அறியா வண்ணம் கோயில் மண்டபத்தில் இருந்து வெளியேறினாள்.
கோயிலை விட்டு சற்று தூரம் வந்த பிறகுதான் அவளால் மூச்சையே நன்றாக விட முடிந்தது.
மோகனாவைப் போலவே இன்னொரு ஜீவனும் கோயிலில் இருந்து வெளியேற தவித்துக் கொண்டிருந்து, அது நம் மித்ரன்தான். சரியான நேரம் பார்த்து அங்கிருந்து வெளியே வந்து, மலைவாழ் மக்கள் குடியிருக்கும் குடிலை நோக்கி சென்றான்.
குடில்களுக்கு அருகே வந்த மித்ரனுக்கு, மதுராவின் வீடு எங்குள்ளது என்று தெரியவில்லை.
அங்கு ஒரு குடிலின் முன்பு படுத்திருந்த செம்பாவை கண்டு, மனதில் ஏதோ ஒரு உந்துதல் தோன்ற, அதனை நோக்கி செல்ல நினைக்கையில் அவன் தோள் மீது ஒரு கரம் படிந்தது.
அதிர்ந்து திரும்பிய மித்ரனின் முன்னால் ரகுநந்தன் நின்று கொண்டிருந்தான்.
“பெரு மதிப்புக்குரிய இளவரசர் அவர்களே, எங்கே இவ்வளவு அவசரமாக செல்கிறீர்கள் என்று அடியேன் தெரிந்து கொள்ளலாமா?”
“ம்ம்ம், ஏரிக்கரை பிசாசை பார்க்க செல்கிறேன். துணைக்கு வருகின்றாயா?”
“அடடா என்ன இளவரசே இது? ஆயிரம் தான் இருந்தாலும் தங்களின் அத்தை மகளை பிசாசு என்று கூறலாமா? அதுவும் மகிழபுரியின் எதிர்கால மகாராணியாரை பற்றி, தாங்கள் இப்படி ஒரு வார்த்தை கூறலாமா?”
“என்னடா உளறிக் கொண்டிருக்கின்றாய், நீ யாரைப் பற்றி கூற வருகிறாய்? சிறிது காற்று வாங்கலாம் என்று இங்கு வந்தேன், அது ஒரு குற்றமா?
உடனே வால் பிடித்தது போல் பின்னாலேயே வந்து விட்டாயா? குருகுலத்தில் தான் உனது தொல்லை தாங்க முடியவில்லை என்றால், அரண்மனைக்கு திரும்பிய பிறகும் கூட ஏனடா என்னை படுத்தி எடுக்கின்றாய்?”
“அடடா இளவரசர் இப்படி எல்லாம் பேசலாமா? நான் தங்களின் உயிர் நண்பன் மட்டும் அல்ல, மகாராணியார் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட தங்களின் மெய் காப்பாளனும் கூட, உங்களை விட்டு அணு அளவும் நான் பிரிய மாட்டேன்.
தாங்கள் தேடி வந்த காற்று அதோ அந்த யானை படுத்திருக்கும் குடிலுக்கு, பக்கத்து குடிலில் தான் நின்று கொண்டிருக்கிறது. நான் வேண்டும் என்றால் இங்கேயே நிற்கிறேன், தாங்கள் சென்று சிறிது காற்றுடன் அளவளாவி வாருங்கள். ஆனால் ஜாக்கிரதை இளவரசே, அது பார்ப்பதற்கு தான் தென்றல், ஆனால் நிஜத்தில் அது சூறாவளி. தங்களையும் அதனோடு சேர்த்து இழுத்துக் கொண்டு சென்று விடும்.”
என்ன இவன் உளறிக் கொண்டிருக்கிறான், என்று நினைத்துக் கொண்டே திரும்பிய மித்ரனின் கண்களில் மோகனா பட்டாள்.
கெட்ட சக்திகளை மனிதர்களை விட விலங்குகளும் பறவைகளும், நன்கு உணர்ந்து கொள்ளும் தன்மையை பெற்றுள்ளது.
மோகனாவை கண்டவுடன் செம்பா பிளிற தொடங்கினான். ஏற்கனவே உடல் எரிச்சலால் அவதிப்பட்டு கொண்டிருப்பவள், யானையின் பிளிறலை கண்டு கோபம் கொண்டு, தன் மடியில் வைத்துள்ள மூலிகை பொடியை எடுத்து சில மந்திரங்கள் கூறி அதனை நோக்கி வீசினால். அடுத்த நொடியே செம்பா மூர்ச்சையாகி மண்ணில் விழுந்தது.
மோகனாவின் இந்த ரூபத்தைக் கண்டு நண்பர்கள் இருவரும் அதிர்ந்து நின்றனர். ரகுநந்தன் ஏதோ பேச வாய் எடுக்க, அவனது வாயை பொத்தி இழுத்துக் கொண்டு மறைவினில் ஒதுங்கிக் நின்றான் மித்ரன்.
மோகனாவிற்கும் சற்றுமுன் நடந்த சம்பவங்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக மித்ரனுக்கு தோன்றியது. அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டுமென்றால் சற்று காலம் அவள் அறியாமல், அவளை பின்தொடர்ந்து தான் ஆக வேண்டும் என்று முடிவெடுத்தான்.
குடிலினுள் மதுரா நல்ல உறக்கத்தில் இருந்ததால், வெளியே நடந்த நிகழ்வுகள் எதுவுமே அவளுக்கு தெரியவில்லை.
அந்த யானையைக் கண்டு ஒரு ஏளன சிரிப்பு ஒன்றை உதிர்த்த மோகனா,
“முட்டாள் யானையே, இனி ஒரு முறை என்னை எதிர்க்கத் துணிந்தால், உன் உயிரை இழப்பாய். இந்த மோகனாவை கண்டு பிளிறிக் கொண்டா வருகிறாய், ஜாக்கிரதை.”
தூரத்தில் ரஞ்சனி இவளின் பெயரைக் கூறி, தேடி கொண்டிருப்பதை கண்டு அவளை நோக்கிச் சென்றாள் மோகனா.
“மித்ரா இவள் ஏரிக்கரை பிசாசு அல்லடா கொள்ளிவாய் பிசாசு. சிறிது நேரத்திலேயே அவ்வளவு பெரிய யானையை மந்திரம் கூறி சாய்த்து விட்டாளே!”
மித்ரன் அந்த யானையை நோக்கி சென்றான், குருகுலத்தில் கற்ற மருத்துவ பயிற்சியை வைத்து அதன் கண்களை திறந்து சோதித்தான்.
அங்கு நின்று கொண்டிருந்த ரகுநந்தனிடம் சில பச்சிலைகளின் பெயரைக் கூறி, பறித்து வருமாறு கூறினான்.
அவன் எடுத்து வந்ததும் அதன் சாறினை பிழிந்து தும்பிக்கையில் சிறிது விட்டு விட்டு, அதன் வாயில் பிழிந்து விட்டான்.
தன்னுடன் என்றுமே இருக்கும் கொற்றவை தேவியின் பிரசாதத்தை எடுத்து, அந்த யானைக்கு வைத்து விட்டான்.
அதன் பிறகு தான் செம்பா சிறிது சிறிதாக கண்களைத் திறந்தது. தன்னைக் காப்பாற்றிய மித்ரனின் கைகளை தன் தும்பிக்கையால் இறுக்கமாக பிடித்துக் கொண்டது.
“பயந்து விட்டாயா நண்பா? ஒன்றுமில்லை சிறிது நேரம் ஓய்வெடுத்தால், உன் உடல் வலியும் சரியாகிவிடும்…”
“மித்ரா நாம் உடனே மோகனாவை பற்றி அரசரிடம் சென்று கூறியாக வேண்டும். அவள் அரண்மனையில் இருந்தால் மற்றவர்களுக்கு தான் ஆபத்து.”
“பொறு நந்தா ஆதாரம் இல்லாமல் அவளைப் பற்றி எவ்வாறு நாம் அரசரிடம் சென்று முறையிடுவது? முதலில் அவள் எதற்காக இப்படி நடந்து கொண்டால்? ஏன் இப்படி இருக்கிறாள்? என்று கண்டுபிடிக்க வேண்டும். எனக்கு என்னவோ இன்று நடந்த சம்பவங்களுக்கும் அவளுக்கும் கூட, ஏதோ சம்பந்தம் இருக்கும் என்று தோன்றுகிறது.”
“அப்படியும் இருக்குமோ? அய்யய்யோ எனது ரஞ்சனி எந்நேரமும் அவளுடன் தானே சுற்றிக் கொண்டிருக்கிறாள்.
அவளையும் ஒருவேளை இதே போன்று மாற்றி விடுவாளோ? உன் அத்தை மகள் ஏனடா இவ்வாறு நடந்து கொள்கிறாள்? தயவுசெய்து இனி என் அத்தை மகளுடன் அவள் சேர்ந்து சுற்றுவதை நிறுத்தச் சொல்லேன்.”
“நான் போய் கேட்டு வரவா? அறிவு கெட்டவனே ரஞ்சனியும் எனக்கு அத்தை மகள் தானே, முதலில் இதில் அவள் பங்கு என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும். சரி வா கோயிலை நோக்கி செல்லலாம், பிறகு இதைப் பற்றி பேசிக்கொள்ளலாம். ஆனால் இந்த விஷயம் எதுவும் பிரதீபனுக்கு தெரிய வேண்டாம். ஆதாரத்தை சேகரித்து விட்ட பிறகு அவனிடம் கூறிக் கொள்ளலாம்.”
அவர்கள் கோயிலை நெருங்கும் போது பூஜைகள் முடிந்து குறி செல்லும் நிகழ்ச்சி ஆரம்பமாகி இருந்தது. குங்குமம் மற்றும் சந்தனத்தால் வரைந்த சக்கரங்களின் நடுவில், மஞ்சள் பூசிய முகமும் நெற்றி நிறைய பொட்டுமாக அருள் வந்து அமர்ந்திருந்தார் ஏந்திழை அம்மையார்.
மோகனா தனக்கு ஏதோ உடல் உபாதை என்று கூறி ரஞ்சனையுடன் கிளம்பி விட்டாளாம், அவளின் தாயார் மகாராணியாரிடம் கூறிக் கொண்டிருந்தார்.
மகாராணிக்கும் அவள் இவ்விடத்தை விட்டு சென்றது நிம்மதியாகத்தான் இருந்தது. எப்படியும் கோயிலுக்கு அவள் சரியான நேரத்திற்கு வர மாட்டாள் என்று நினைத்திருந்தார். அதுபோலத்தான் நடந்தது. ஆனால் இங்கு நடந்த பிரச்சனைகளால் பூஜை சற்று தாமதமாக நடந்தது, அதனால் குறி சொல்லும் நிகழ்ச்சியும் ஆரம்பம் ஆவதற்கு சற்று தாமதமானது
எங்கே அவளின் முன்னே மித்ரனின் திருமணத்தைப் பற்றி, குறி கேட்க வேண்டி வருமோ என்று வருத்தப்பட்டார். ஆனால் அவள் சென்றது ஒரு விதமான நிம்மதியான உணர்வை ஏற்படுத்தியது.
முதலில் அரசர் சென்று ஏந்திழை அம்மையாரை வணங்கி விட்டு, ராஜ்யத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களை பற்றி கேட்டுக் கொண்டிருந்தார்.
“உன் எதிரியை அருகிலேயே வைத்துக்கொண்டு என்னிடம் வந்து கேட்கின்றாயே? ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள். நாட்டில் உள்ள மக்கள் மட்டுமல்ல, இந்த காட்டில் வாழும் மக்கள் அனைவருமே என் பிள்ளைகள் தான். அவர்களுக்கு என்றுமே உன்னால் தீங்கு ஏற்படக்கூடாது புரிந்ததா?”
“புரிந்தது தாயே, எதிரிகளின் சூழ்ச்சியை பற்றி அறியாமல், இவர்கள்தான் அவ்வாறு செய்தார்கள் என்று எண்ணி விட்டேன். என்னை மன்னித்தருளுங்கள் தாயே. இனி ஒரு போதும் தீர விசாரிக்காமல் இதுபோன்று தவறான முடிவை எடுக்க மாட்டேன்.”
“உமது ராஜ்யத்தில் எதிரிகளோடு மாந்திரீகர்களும் கலந்துள்ளனர். அவர்களை உடனடியாக கண்டறிந்து வெளியேற்றவில்லை என்றால் ராஜ்யத்தை ஆபத்து சூழும்.
உறவு என்று எண்ணாமல் எதிரியாய் பார்த்தால் இந்த ராஜ்யத்தில் அமைதி நிலவும். இல்லை என்றால்…”
“தாயே?”
“கலங்க வேண்டாம் மன்னா இனிவரும் பிரச்சனைகளை எல்லாம் உன் மகன் பார்த்துக்கொள்வான். நீ நாட்டு மக்களுக்கு தீங்கு விளைவிப்போரை உறவாக எண்ணாமல் எதிரியாக மட்டும் பார்ப்பாயாக.”
அரசரின் சகோதரிகள் ஒவ்வொருவராக வந்து தங்கள் பிள்ளைகளின் திருமணம் பற்றி கேட்க, காலத்தின் தீர்ப்புப்படி நடக்கும் என்று அனைவருக்கும் ஒன்று போலவே கூறினார்.
அடுத்ததாக மகாராணியார் சென்று ஏந்திழை அம்மையாரின் முன்பு வணங்கி நின்றார்.
“தாயே சில நாட்களாகவே என் மனதில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. என் மகனை ஒரு கெட்ட சக்தி நெருங்கி வருவது போலவே தோன்றுகிறது. அவனின் திருமணம் பற்றி கேட்க விளைகிறேன்.
அது நல்லபடியாக அவன் மனம் போல் முடிந்திடுமா? அந்த திருமணத்தால் இந்நாட்டு பிரஜைகளுக்கு எந்த ஆபத்தும் நெருங்காதே?”
தனது உதட்டினில் புன்னகையை படரவிட்ட ஏந்திழை அம்மையார், மகாராணியை நோக்கி சற்று குனிந்து மெதுவாக பேசத் தொடங்கினார்.
“ஏற்கனவே திருமணம் ஆன உன் பிள்ளைக்கு, மறுமணம் செய்து வைப்பதற்காக கேட்கின்றாயா? அல்லது நடந்த திருமணத்தால் ஏற்பட போகும் விளைவுகளை பற்றி கேட்கிறாயா?”
மகாராணியார் அதிர்ச்சியுடன் தனது மகனை திரும்பி பார்த்துவிட்டு, ஏந்திழை அம்மையாரை நோக்கி வினவினார்,
“தாயே என்ன கூறுகிறீர்கள்? என் மகனுக்கு திருமணம் முடிந்து விட்டதா?”
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஆத்தீ .. மன்னவா உங்க குட்டு வெளிப்பட போகுது ..
🤣🤣நன்றி சிஸ்🙂