Loading

   அரண்மனை அந்தப்புரத்தில் உடலெங்கும் ஆபரணங்கள் பூட்டி, அலங்கார சுரூபிணியாக கண்ணாடியின் முன்பு நின்று கொண்டிருந்தாள் மோகனா.

   சாதாரண நாட்களிலேயே நிலை கண்ணாடியை விட்டு நகராதவள், இன்று வேறு அவளின் மனம் கவர்ந்த மன்னவன் வரும் நாள், ஒப்பனையை அவ்வளவு சீக்கிரம் முடித்து விடுவாளா என்ன?

   காலையில் இருந்து ஒப்பனை இடுவதும், அதனை கலைப்பதுமாக ஐந்து ஆறு முறை ஆகிவிட்டது.

      மோகனாவின் மஞ்சத்தில் கன்னத்திற்கு கையினை தாங்கிக் கொண்டு, ரஞ்சனி அமர்ந்து பல மணி நேரங்கள் ஆயிற்று.

       ரஞ்சனிக்கு அரண்மனை பணியாளர்கள், மோகனாவிற்கு வழங்கும் பயம் கலந்த மரியாதையை காணும் போது, ஆச்சரியமாக இருக்கும்.  பணியாளர்களை தனது கண் அசைவிலேயே ஆட்டி வைப்பவள் மோகனா.

   இப்போது கூட அவள் ஆங்காங்கே  வீசி உள்ள ஆடைகளையும், ஆபரணங்களையும் எடுத்து வைத்துக் கொண்டே இருக்கிறார்கள், முகத்தில் சிறு சுனக்கம் கூட இல்லாது.

     ரஞ்சனிக்கு பல வருடங்கள் கழித்து தனது அத்தானை காண போகும் ஆசை இருந்தாலும், அதை மோகனாவின் முன் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

    சிறுவயதில் இருந்தே தன்னை எப்போதும் தாங்கும், அத்தானை ரஞ்சனிக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் மோகனாவின் தோழியாக ஆன பிறகு, அவனை பார்ப்பதை கூட தவிர்த்து விட்டாள்.

   மோகனாவிற்கு ஒன்று பிடிக்கவில்லை என்றால், அதை அப்படியே ஒதுக்கி விட வேண்டும். இல்லையென்றால், தானாக அது நம் கையை விட்டுப் போகும்படி செய்து விடுவாள்.

   அதற்கு பயந்தே ரகுநந்தனை அவள் நேரடியாக, ஒரு பார்வை கூட பார்ப்பதில்லை. ரஞ்சனியின் அத்தை மகனாகவே இருந்தாலும், அவனின் தந்தை ஒரு போர் வீரர் ஆதலால், மோகனாவை பொறுத்தவரை அவன் ஒரு சேவகன் மட்டுமே ஆவான்.

  இன்று அவள் அத்தான், அவளுக்கு ஆசையாக வாங்கி கொடுத்த, நகைகளையும் பட்டாடைகளையும் தான் உடுத்தி இருந்தாள். இதன் மூலம், தனது மனதை அவனுக்கு வெளிப்படுத்த நினைத்திருந்தாள்.

   பெரியவர்கள் எல்லோரும், எப்போதோ கொற்றவை தேவி கோயிலுக்கு சென்று விட்டனர். ஆனால் மோகனாவோ இன்னும் தனது அலங்காரங்களை முடித்த பாடாக தெரியவில்லை.

  மோகனாவிற்கு அந்தக் காட்டு தேவியின், கோயிலுக்கு செல்வது என்றாலே பிடிப்பதில்லை. அந்த காட்டுவாசிகளின் தெய்வத்தை நாம் ஏன் வணங்க வேண்டும், என்ற எண்ணம் அவள் மனதில் இருந்தது. அவளின் இந்த எண்ணத்திற்கு வித்திட்டவர் அவளின் தந்தை தான்.

    தன் ஆசைத் தந்தை தங்களை விட்டு பிரிவதற்கு காரணமான, அந்த காட்டுவாசிகளின் இருப்பிடத்திற்கு, தான் செல்வதா? என்ற எண்ணமே அவளை அங்கு போகவிடாமல் தடுப்பது.

   தன் மகளை சந்திக்கும் போதெல்லாம், தான் வணங்கும் தெய்வமான, காலகோடனின் அருமை பெருமைகளை விஜய பூபதி பேசாத நாளே இல்லை. அந்த தெய்வத்தால் தான், நான் இன்று உயிருடன் உன்னிடம் நின்று பேசிக் கொண்டிருக்கின்றேன், என்று தன் அன்பு மகளிடம் கூறுவான்.

   வருங்காலத்தில் நீ இந்த மகிழபுரியின் மகாராணியாக ஆகும் போது, இந்த காட்டுவாசிகளின் குலதெய்வமான, கொற்றவையின் கோயிலை இடித்து தரைமட்டம் ஆக்கி விட்டு, அதன் மீதே நம் தெய்வத்துக்கு கோயில் கட்ட வேண்டும், என்று வாக்குறுதி கூட தன் மகள் மோகனாவிடம் வாங்கினான்

    மித்ரன் குருகுலத்திற்கு செல்லும் முன், அவனுடன் இருப்பதற்காகவே அந்த கோயிலுக்கு சென்று வந்தவள். அவன் குருகுலம் சென்றதும் ஏதோ ஒரு காரணத்தை கூறி, அந்த காட்டுக் கோயிலுக்கு செல்வதையே தவிர்த்து வந்தாள்.

    இப்போது கூட பெரியவர்களுடன் செல்லாமல் சிறிது நேரம் தாழ்த்தி சென்றால், மித்ரன் வருவதற்கு சற்று நேரத்துக்கு முன் அங்கு தான் சென்று விடலாம். அதனால் காட்டுவாசிகளின் இருப்பிடத்தில், தான் போய் நேரம் செலவழிக்க வேண்டிவராது என்று நினைத்தாள்.

  நிலைகண்ணாடியில் தன்னை  பார்த்து கொண்டிருந்த மோகனாவிற்கு, இந்த ஆடைக்கு ஏற்ற அணிகலன்கள் இவையல்ல என்று தோன்றிட, அதை கழட்டி எறிய வந்தவளின் கையை, வந்து இறுக பற்றி கொண்டால் ரஞ்சனி.

      “அடி மோகனா, மறுபடியும் முதலில் இருந்தா? பெரியவர்கள் எல்லோரும் சென்று வெகு நேரமாகி விட்டது. இதற்கு மேலும் நீ காலதாமதம் செய்தால், நீ சென்று உன் அத்தானை வரவேற்க முடியாது? ஏனெனில் அவர் நமக்கு முன்பே கோயிலை அடந்து விடுவார். பிறகு உன் அத்தானுக்கு வெற்றி திலகம் இட்டு வரவேற்க வேண்டும் என்ற, உனது கனவு கனவாகவே போய்விடும்.”

“இல்லையடி ரஞ்சி, இந்த பட்டாடைகளுக்கு சரியான இணையாக, இந்த ஆபரணங்கள் சேரவில்லை. அதுதான் கழட்ட முனைந்தேன்.”

   “இந்த வெண்பட்டாடைகளுக்கு ரத்தின ஆபரணங்கள் அழகாகத்தான் உள்ளது. அத்தானை பார்க்கும் ஆவலில், உன் முகம் ஜொலிக்கும் ஜொலிப்பிற்கு அது ஈடாக தெரியவில்லை அவ்வளவுதான்.”

      “அப்படியா கூறுகிறாய் ரஞ்சி!”

     “அப்படித்தான் கூறுகிறேன் எனது அருமை மோகன சுந்தரியே, இப்போதாவது கிளம்புவோமா? இதற்கு மேல் தாமதித்தால், பெரியோர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் செல்லலாமா?”

  “ம்ம்ம் சரி சரி கிளம்புவோம்.”

  தன் துரு துரு பேச்சாலும் குறும்பு பார்வையாலும், காட்டில் வாழும் மனிதர்களை மட்டுமல்லாமல் அங்குள்ள மிருகங்களையும் வசீகரிக்கும், தன் பதினாறு வயது செல்ல மகளைதான், இழுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார், ஏந்திழை அம்மையார்.

       இவள் வளர வளர ஏந்திழை அம்மையாருக்கு, மனதில் எச்சரிக்கை உணர்வும் அதிகமானது. எக்காரணம் கொண்டும் தன் மகள், அந்த அரசு குடும்பத்தாரின் பார்வையில், பட்டுவிடக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தார்.

   ஆனால் அவரின் செல்ல மகள் தன் ஐந்து வயதிலேயே, அதற்கு அச்சாரம் போட்டு விட்டால் என்பதை, பாவம் அந்த தாயார் அறியவில்லை.

  “அன்னையே இப்போது எதற்காக என்னை குகை கோயிலுக்கு கூட்டி செல்கின்றீர்கள்?”

     “மகளே வாணி, அரச குடும்பத்தினர் இன்று கொற்றவை தேவி கோயிலுக்கு வருகை புரிகின்றனர். அதனால்தான் உன்னை குகை கோயிலுக்கு கூட்டி செல்கிறேன்.”

   “அவர்கள் எதற்காக இப்போது வருகிறார்கள் தாயே? கொற்றவை திருவிழா நடைபெறுவதற்கு தான் இன்னும் நாட்கள் உள்ளனவே?”

  “இளவரசர் குருகுலத்தில் இருந்து இன்று நாடு திரும்புகிறார். அவருக்காக விஷேச பூஜையினை ஏற்பாடு செய்துள்ளனர்.”

     மதுராவிற்கு தன் சிறுவயது உற்ற தோழனான, தீராவின் நினைவு தான் வந்தது.

  சிறுவயதில் தன் கிராம மக்கள் தன்னை தெய்வமாக எண்ணி எட்டி நிறுத்த, விளையாட யாருமே இல்லாது தனித்து இருந்தபோது, தன்னை தனிமையில் இருந்து விடுவிக்க, தோழனாக வந்த தீராவை மதுராவிற்கு மிகவும் பிடிக்கும்.

  இளவரசன் வருகிறான் என்றால், அப்போது தன் தீராவும் திரும்ப வருகிறானா!!! மதுராவின் உள்ளம் குதூகளிக்க தொடங்கி விட்டது.
   
       மோகனாவும் ரஞ்சனியும் அரண்மனையில் இருந்து புறப்பட தொடங்கும் போது, மோகனாவின் சேவகியான யோகினி, அவளை நோக்கி அவசரமாக ஓடி வந்தாள்.

  மோகனா அவளை பார்த்துவிட்டு சிறிது யோசித்தவாறே, அவசரமாக பல்லக்கை நிறுத்துமாறு கூறினாள். ரஞ்சனியிடம் திரும்பி, தான் இப்போது வந்து விடுவதாக கூறிவிட்டு யோகினியை நோக்கிச் சென்றாள்.

   ரத்னபுரியை சேர்ந்த யோகினி என்ற ஒரு பெண்ணை, ஆதரவற்றவள் என்று கூறி, தனது சேவகியாக நியமித்திருந்தாள் மோகனா.

   அவள் மூலமாகத் தான் மோகனா, தன் தந்தை விஜய பூபதியை சந்தித்து வந்தாள்.

   யோகினியை கேள்வியாக நோக்கியவள், அவள் ஆம் என்று தலையசைத்ததும், வேகமாக தனது அறையை நோக்கிச் சென்றாள். யோகினி கதவை மூடியதும், அவசரமாக நிலை கண்ணாடியை தள்ளிவிட்டு, அதற்கு பின்புறம் இருந்த கதவைத் திறந்து, உள்ளே பிரவேசித்தாள் மோகனா.

  அது ஒரு ரகசிய சுரங்கப்பாதை. சிறிது படிக்கட்டுகளை கடந்து சமதள பரப்பை அடையும் போது, அங்கு விஜய பூபதி நின்று கொண்டிருந்தார்.

  “தந்தையே, தாங்கள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நான் சொன்ன வேலை என்ன ஆனது?”

     “மகளே நீ கூறி, நான் எதையாவது மறுத்து பேசி இருக்கின்றேனா? ஏற்கனவே நமது ஆட்களை இந்நாட்டு மக்கள் போன்று உடையுடன் காட்டினுள் அனுப்பி விட்டேன். இந்நேரம் அங்கு பிரச்சினை தொடங்கி இருக்கும். நான் வந்தது இன்னொரு முக்கியமான விஷயம் சொல்வதற்காக தான்.

இளவரசர் வரும் வழியில் அவரை நிறுத்தி வைப்பதற்காக, திட்டம் தீட்டி இருந்தோம் இல்லையா?”

“ஆமாம்.”

     “நாகேந்திரன் திடீரென்று அந்தத் திட்டத்தை மாற்றி விட்டான். அரசரையும் உடன் வரும் இளவரசரையும் தாக்க விரைந்து கொண்டிருக்கின்றனர், காட்டுவாசிகள் போல் வேஷம் தரித்த நமது படை வீரர்கள்.”

  மோகனா அதிக கோபத்துடன் தன் தந்தையை பார்த்து, கத்த தொடங்கி விட்டாள்.

   “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் உமது நண்பர். சொந்தம் என்று நினைத்து நான் அமைதியாக சென்றால், என்னை கிள்ளுக்கீரை என்று நினைத்து விட்டாரோ? இல்லை, காலகோடரின் முழு அருளை பெற்ற என்னையே பகைத்துக் கொள்ள துணிந்து விட்டாரா? இனி அடுத்து பௌர்ணமி பூஜை எப்படி நடை பெறுகின்றது என்று பார்க்கிறேன். என் அத்தானுக்கு மட்டும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், உங்கள் நண்பரது மரணம் என் கையால் தான் நிகழும்”

      “மோகனா அவசரப்பட்டு வார்த்தையை விடாதே மகளே. எனக்கு உன்னை பற்றி தெரியாதா? அல்லது உன் அத்தான் தான் உனது உயிர் என்று எனக்கு தெரியாதா? அரசரை கொல்லத்தான் ஆட்களை அனுப்பியுள்ளோம். ஒரு வேலை அரசர் கொல்லப்பட்டால், அடுத்து மித்ரன் அரசன் ஆவான். அதற்கு அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும், அதனால் தான் இந்த ஏற்பாட்டுக்கு நானும் சம்மதித்தேன்.

   ஆமாம் நீ எதற்காக மகாராணியை இன்றே கொன்று விட வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறாய்? ஒருவேளை இது தான் காரணமோ?”

  “இல்லை தந்தையே அதற்கு வேறு காரணம் உள்ளது. மகாராணிக்கு என் மீது சந்தேகம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.”

  “சந்தேகமா?”

   “ஆம் தந்தையே, சில நாட்களாகவே அவர் என்னை சந்தேக கண் கொண்டு தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். எனக்கு தெரியாமல் புதிய பணியாளர்களை அமர்த்தி, என் அறையை சோதனை இட்டுக் கொண்டிருக்கிறார்.”

   “ஒரு முறை கொற்றவையின் பிரசாதத்தை எனக்கு வழங்க வந்தார். நான் அதை தட்டி விட்டு விட்டேன், அதிலிருந்து தான் என்னை சந்தேகக் கண் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல, என் ஜாதகத்தையும் அரசாங்க ஜோதிடரிடம் கொடுத்து பார்த்திருப்பார் போல.

   அவர் உயிருடன் இருந்தால் இனி நமக்குத்தான் பாதிப்பு. அதனால்தான் நமது வீரர்களை இந்நாட்டு படை வீரர் போல காட்டுக்குள் அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தி, அதில் அவரை கொன்றுவிடுமாறு கூறினேன்.

   இதன் மூலம் நமக்கு இரண்டு லாபம் தந்தையே, ஒன்று அந்த மகாராணியின் மரணம். மற்றொன்று, அரசருக்கு இதன் மூலம், காட்டுவாசிகளின் மீது இருந்த நன்மதிப்பு குறைந்து, பகை ஏற்படும்.”

  விஜய பூபதி அண்டை மாநில அரசர்களின் உதவியை நாடிக் கொண்டிருக்கும்போது, மோகனா சத்தம் இல்லாமல் இன்னொரு வேலையை செய்து கொண்டிருந்தாள். தனது ரத்னபுரியை சேர்ந்த ஆட்களை மகிழபுரியின் படைகளில் பிறருக்கு சந்தேகம் வராதவாரே சேர்த்துக் கொண்டிருந்தாள்.

  அதுமட்டுமல்லாமல் அந்தக் காட்டுவாசிகளில், ஆசைக்கு மயங்கும் ஒருவனை பிடித்து நமது திட்டத்துக்கு துணையாக இருக்க, ஏற்பாடு செய்யுமாறு தன் தந்தையிடம் கூறியிருந்தால். இப்போது அவர்களை வைத்து தான், இந்த நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்து இருக்கிறாள்.

கொற்றவைக் கோயிலில் அலங்கார தோரணங்கள் விமர்சையாக இருந்தது. பல வருடங்கள் கழித்து வரப்போகும் தமது இளவரசரை காண, மக்களும் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

மேளதாளங்களுடன் மங்கள இசையும் இசைக்கப்பட்டு கொண்டிருந்தன.

  குகைக்கோயிலில் அமர்ந்திருந்த மதுராவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லை. ஏனோ அலைபாய்ந்து கொண்டே இருந்தது. அது தீரனை வெகு காலத்திற்குப் பிறகு பார்க்க போகும் ஆசையாலா? அல்லது தன் நெருங்கிய உறவுகளுக்கு ஏதேனும் ஆபத்தா? என்று அவளால் அறிந்து கொள்ள முடியவில்லை.

  காட்டு விலங்குகளின் தோழியான அவளுக்கு, பறவைகளின் வித்தியாசமான சத்தம் கேட்டது. அது ஆபத்தை குறிக்கும் ஒலி. எனவே சற்றும் தாமதிக்காமல் தமது குடிலை நோக்கி செல்ல முடிவெடுத்தாள்.

      குகையில் இருந்து வெளியே வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, சத்தமாக காட்டினை நோக்கி செம்பா என்று அழைத்தாள்.

   அவள் அழைத்த இரண்டாவது நிமிடம், ஒரு யானை காட்டினில் இருந்து இவளை நோக்கி ஓடி வந்தது.

     அவள் அதனைப் பார்த்து இரண்டு கைகளையும் தூக்கிக் கொள்ள, அந்த யானை தன் தும்பிக்கையால் அவளின் இடுப்பினை பிடித்து தூக்கி, தன் மீது அமர வைத்துக் கொண்டது.

“செம்பா உடனே குடிலை நோக்கி வேகமாக செல்.ஏனோ மனதில் தவறு நடக்க போவதாக தோன்றுகிறது.”

      அவள் குடிலை நெருங்கிக் கொண்டிருக்கும் போது, சச்சரவு சத்தம் காதை பிளந்தது. அது மக்கள் ஒருவருக்கொருவர் அடித்து சண்டையிட்டு,  போர்கருவிகளுடன் மோதிக் கொள்ளும் சத்தம் தான்.

   நாட்டு மக்களுக்கும் தமது மலைவாழ் மக்களுக்கும் இடையே கைகலப்பு நடந்து கொண்டிருந்தது. அதை விளக்க எண்ணி அரச குடும்பத்தின் பாரம்பரிய உடை அணிந்த பெண்கள் போராடிக் கொண்டிருந்தனர்.

    சிறிது நேரத்தில் அந்த கைகலப்பு பெரிய சண்டையாக உருவெடுத்தது.

   சிறிது தூரம் தள்ளி மதுராவின் அன்னை தமது மலைவாழ் மக்களிடம், அமைதியாக இருக்குமாறு கூறிக் கொண்டிருந்தார்.

   அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அரசு குல பெண்களை தாக்க, தூரத்திலிருந்து இரண்டு மூன்று படை வீரர்கள் பதுங்கி பதுங்கி வந்து கொண்டிருந்தனர்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அடேங்கப்பா வாவ் … கதை விறுவிறுப்பா போகுது .. பயங்கரம் .. அப்பாவும் மகளும் எப்படியெல்லாம் திட்டம் போட்டு செயல்படுத்துறாங்க .. அப்போ ரஞ்சனி தான் நிரஞ்சனா .. மோகனா தான் பேயா அலையுறா .. அடுத்தடுத்து ஆக்ஷன் சீன் வரும் போல .. அரசனும் அரசியும் காப்பாத்தப்படுவாங்களா ..