Loading

     “காட்டுக்குள்ள யாரு கண்ணுலையும் படாம எப்படியாவது நுழைஞ்சாகனும் .”

    “எது? டேய் வேந்தா, இவன் என்ன சொல்றான்னு பாருடா?”

     “தீபன் சொல்றது சரிதான், அவங்க பேசிட்டு இருந்தத கேட்ட தானே, இப்ப விட்டுட்டா நம்மால, இந்த வழியா போக முடியாது. இனியும் இந்த ஊர்ல, ஒரு உயிர் கூட அவனுங்களால அநியாயமா போகக்கூடாது.

    நானும் தீபனும் அந்த சுரங்க பாதை வழியா உள்ள போறோம்.

     வெற்றி நீ அந்த பாதைக்கு வெளியே நில்லு, உள்ள ஏதாச்சும் பிரச்சனைனா உனக்கு சிக்னல் கொடுக்கிறோம், மூர்த்தி நீ அவனுங்க திரும்ப வந்தா உள்ள வராமல் இருக்க, எதையாச்சும் பண்ணி அவனுங்களை திசை திருப்பி விடு.” 

    “எது, ஏன்டா என்னை மட்டும் அந்த கொலைகார பயலுகளோட கோர்த்து விடுறே? இந்த வெட்டிப் பயல அனுப்ப வேண்டியது தானே?”

     “உன் அளவுக்கு அவனால சமாளிக்க முடியாது மாம்சு. நீதான் பேசியே சமாளிப்பதுல பட்டம் வாங்கினவன் ஆச்சே, பேசுறதுக்கு டைம் இல்ல, அவனுங்க திரும்ப வர்றதுக்குள்ள நாங்க நுழைஞ்சாகணும். சரி சரி நாங்க கிளம்புறோம்.”

    “டேய்  டேய்ய்ய் போயிட்டான், எனக்குன்னே தனியா உக்காந்து ஸ்கெட்ச் போடுவானுங்க போல.

      சும்மாவா சொல்றாங்க, பேய்க்கு வாக்கப்பட்டா, அர்த்த ராத்திரியில அலைஞ்சு தானே ஆகணும். இவனுங்க கூட சேர்ந்ததுக்கு எம்புத்திய…”

       “மச்சான் ஏதாவது ஹெல்ப் வேணுமா? என் செருப்பு வேணா தரவா?”

    “மரியாதையா ஓடிரு, அவனுங்க சொன்னது போல அந்தக் குழிக்கிட்ட போய் நில்லு போ.”
     
     “நண்பன் ஆச்சேன்னு உதவி செய்ய நினைச்சேன், வேண்டாட்டி போ. என்ஜாய் தி மொமெண்ட் மச்சான். டாடா பைய் பைய்.”

      “கொழுப்பு தாண்டா உனக்கு. அய்யய்யோ, தனியா விட்டுட்டு போயிட்டானுங்களே, சமாளிப்போம் என்ன பண்ணிட போறானுங்க.”

            தீபனும் வேந்தனும் சுற்றும் முற்றும் நோட்டமிட்டுக் கொண்டே அந்தப் பாதையை நெருங்கினர்.

        சமதளமாக இருந்த பாதை, ஒரு சருக்கு பாதை போன்று உள்ளே இறங்கியது.

     அதன் வழியாக சென்றபோது, ஒருவர்  மட்டுமே குனிந்து செல்லுமாறு பாதை உருவாக்கப்பட்டு இருந்தது.

   அவர்கள் இருவரும் செல்பேசியிலுள்ள டார்ச்சின் உதவியுடன், அடிமேல் அடிவைத்து எச்சரிக்கையாக அப்பாதை வழியே முன்னேறி சென்றனர்.
     
      சிறிது தூரம் சென்றதும், அப்பாதையின் முடிவில் மண்ணால் ஆன, படிக்கட்டு போன்ற திட்டுக்களை கொண்டிருந்தது.

     அதில் ஏறி மேலே சென்றால், காட்டின் உட்பகுதியை காண முடிந்தது.

   அங்கு நெடுந்துயர்ந்த மரங்கள் வானை எட்டிப் பிடிக்க முயன்று கொண்டிருக்க, அவ்விடம் முழுவதும் மை இருளில் மூழ்கியிருந்தது.

     பாதையின் முடிவில் இருந்து சற்று தூரம் தள்ளி, பேச்சு குரல்களும் சிறு வெளிச்சமும் தென்பட்டது.

காட்டினை நெருங்கும் போதே வேந்தனுக்கு, ஒரு இனம் புரியாத உணர்வு மனதை ஆட்கொண்டது.

   அது எதனால் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

  மூச்சினை இழுத்து விட்டு, தன்னை நிலைப்படுத்திக் கொண்டு தீபனுடன் சென்று கொண்டிருந்தான்.

சிறிது நேரத்திலேயே கண்களுக்கு இருட்டு பழகிவிட்டதால் அந்த வெளிச்சப் புள்ளியை நோக்கி இருவரும் நகர்ந்தனர்.

“தீபா நாம முதல்ல அந்த குறிப்பையும், அவன் சொன்ன அந்த சிலையோட படத்தையும் கைப்பற்றி ஆகணும்.

என்ன நடந்தாலும், நாம அது இல்லாம இந்த காட்டை விட்டு வெளியேற கூடாது.”

   “ம்ம்ம், நீ சொல்றதும் சரிதான்.”

அவர்கள் கண்ட அந்த வெளிச்சமானது கொற்றவை தேவி கோவிலுக்கு சற்று தள்ளி உள்ள கூடாரத்திலிருந்து வந்து கொண்டிருந்தது.

   இருவரும் ஒரு மரத்திற்கு பின் நின்று கொண்டு, அங்குள்ளவர்களை கண்காணிக்க தொடங்கினர்.

     எரிந்து கொண்டிருந்த நெருப்பினை சுற்றி, ஏழெட்டு பேர் அமர்ந்திருந்தனர்.

  கூடாரத்திலிருந்து வந்த ஒருவன், காட்டில் கிடைக்கும் பழங்களை கொண்டு வந்து அனைவருக்கும் கொடுக்க, அதை உண்டு கொண்டே எதைப் பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தனர்.

      “இந்த மாரி இருந்திருந்தா  ஊருக்குள்ள இருந்து, நமக்காக நேரா நேரத்துக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்திருப்பான்.

     அவன் இல்லாதனால, இந்த காட்டுக்குள்ள கிடைக்கிறதை வெச்சு தான், நம்ம பசியை போக்கிக்க வேண்டியிருக்கு.”

     “இந்த ஊருக்குள்ள எவனாவது, மாரிய போல உதவிக்கு கிடைக்கிறானுங்களானு பாருங்கடா.”

     “ஓய் என்னடா மாமியார் வீட்டுக்கு வந்த மருமகன் மாதிரி பேசிகிட்டு இருக்கே.

     நாம இங்கே என்ன டூருக்கா வந்திருக்கோம்? கூடிய சீக்கிரம் இந்த வேலையை முடிச்சு கொடுத்துட்டு, எப்படியாவது இங்கிருந்து கிளம்பியாகனும். இல்லைனா மாரியோட கதி தான் நம்மளுக்கும்.”

     “அட ஏன்டா அதை ஞாபகப்படுத்துற, ஒழுங்கா சிலையை தேடிட்டு இருந்த நம்மள அந்த குருஜி, குருந்த மரத்தை அழிச்சா தான் சிலை இருக்கிற இடம் தெரியும்னு, அங்கே அனுப்பினாரு. நடந்ததை பார்த்த இல்ல?

    இந்த சிலை நமக்கு கிடைச்சிருந்தா இப்படி அங்க நாம போய், மரண பயத்தை கண்ணுல பாத்துட்டு வந்திருப்போமா?”

      “என்னடா நீயும் பாஸ் மாதிரியே புரியாம பேசிட்டு இருக்க.”

  “நாம என்ன முயற்சி செய்யாமையா இருக்கோம், இந்தக் காடு எந்த பக்கம் போனாலும் ஒரே மாதிரி இருக்கு.

     இதுக்கு இடையில, இந்த காட்டு மிருகங்கள் வேற, அடிக்கடி வந்து பயமுறுத்திக்கிட்டு கெடக்கு. மாரிக்கு  நடந்ததை நேர்ல பார்த்ததுல இருந்து தூக்கமே இல்ல. இப்போ உருப்படியா ஒரு வாய் சோத்துக்கும் வழியில்ல.”

  “அட ஏண்டா புலம்பிக்கிட்டே இருக்க, அது தான் நம்ம பாஸ் சாப்பாடு கொடுத்து விடறேன்னு சொன்னார் இல்ல.”
  
    நண்பர்கள் தமக்குள் கண்காட்டி விட்டு மரத்திற்கு பின்னே பதுங்கிப் பதுங்கி, ஒருவர் பின் ஒருவராக கூடாரத்தை நோக்கி சென்றனர்.

     கூடாரத்தினுள்ளே மது பாட்டில்கள் துணிகள் மற்றும் உணவுப் பொருட்கள் என்று குப்பைகளாக அங்கங்கே சிதறிக் கிடக்க, அவைகளுக்கு நடுவே இருந்த பெட்டியை நோக்கி சென்றனர்.

    திறந்திருந்த அந்தப் பெட்டியில் இருந்து, இரண்டு சுருள் காகிதங்களை எடுத்துக்கொண்டு திரும்ப முனையும் போது, கூடாரத்தின் வாயிலின் அருகே பேச்சு குரல் கேட்டது.
 
  சட்டென்று தீபனை இழுத்துக் கொண்டு குப்பையோடு குப்பையாக தரையில் படுத்துக் கொண்டான் வேந்தன்.

    எதுவோ பேச முனைந்த தீபனது  வாயை, தம் கைகளால் மூடிக்கொண்டே இருண்ட பகுதியை நோக்கி சென்றான்.

   ஒருவன் உள்ளே வந்து, மது பாட்டில்களை எடுத்துக் கொண்டு திரும்பிச் சென்றுவிட்டான், இவர்கள் தவழ்ந்து கொண்டே வாயிலை நோக்கி சென்றனர்.

    “இந்தக் கண்றாவிக் குப்பைகளுக்குள்ள என்னைய ஏன்டா இழுத்துவிட்ட, நாத்தம் தாங்க முடியல. என் மூக்கு வேற கீழ எதுலயோ இடிச்சுகிச்சு”

   “ம்ம்ம், உசுரு முக்கியமா மூக்கு முக்கியமா அப்போ மூடிகிட்டு வா மூதேவி பின்னாடி.”

    “இதெல்லாம் போலீஸ் ட்ரைனிங்ல செஞ்சது, இத்தனை வருஷம் கழிச்சு, இப்பதான்டா யூஸ் ஆகுது.”

    பேசிக்கொண்டே இவர்கள் கூடாரத்தை விட்டு வெளியே வந்து விட்டனர். 

  எழுந்து நிற்க முயலும் போது மூவர் கூடாரத்தை நோக்கி நடந்து வருவதை கண்டனர்.
     
   இங்கு மறைந்து கொள்வதற்கும் இடமில்லை. எப்படியும் அவர்கள்  கண்ணில் சிக்கிக் கொள்வோம். எதைக் செய்து தப்பிப்பது என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே, தடதடவென்று பூமி அதிர, ஏதோ சத்தம் கேட்டது.

  மூர்த்தி என்னதான் தன்னை தைரியமாக காட்டிக் கொண்டாலும், சுற்றி இருந்த இருள் அவன் இதயத்தின் சத்தத்தை, அவனுக்கே கேட்கும் அளவுக்கு பலமாக அடித்துக் கொண்டிருந்தது.

     “படுபாவிப் பயலுக, போன இடத்துல அங்கேயே செட்டில் ஆயிட்டானுங்களா?

     இப்படி என்ன இருட்டுல தனியா காவல் காக்க வச்சுட்டானுங்களே.”

     சரசரவென்று தனக்கு பின்னே ஏதோ சத்தம் கேட்க, பயத்தில் அவ்விடத்தை விட்டு ஓட தொடங்கினான்.

  மூர்த்தி தன் மனைவியுடன் கோவிலுக்கு சென்று விட்டு, நேராக தம் நண்பர்களை பார்க்க வேட்டியுடன் வந்திருந்தான்.

  வெற்றி ஏதோ அவசரம் என்று தொலைபேசியில் அழைக்க, இவனும் வேந்தனுடன் கிளம்பி விட்டான்.

   கல் தடுக்கி விழுந்து எழுந்த போது, தன் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தான்.

அடித்த காற்றில் வேட்டி பறந்து சென்று ஒரு மரத்தின் அடிக்கிளையில் சிக்கிக் கொண்டது.

          கிளையில் சிக்கிக்கொண்ட தனது வேட்டியை எடுக்க முயன்று கொண்டிருக்கும்போது, சிறிது சிறிதாக வெளிச்சம் பரவுவதை உணர்ந்தான்.

               சற்று முன் காட்டிலிருந்து வெளியேறியவர்களில் இருவர், தீப்பந்தத்துடனும் கை நிறைய பொருட்களுடனும், காட்டினை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

         உடனே சட்டென்று மரத்துக்கு பின்னால் சென்று, மூர்த்தி ஒளிந்து கொண்டான்.

தீப்பந்தம் பிடித்துக் கொண்டு வந்தவன், மூர்த்தியின் வேட்டியை கண்டு, ஏதோ ஒரு வெள்ளையான உருவம் காற்றில் மிதந்து வருவதாக எண்ணி, பயந்து போய் அருகில் வருபவனிடம் காண்பித்தான்.

     “அய்யோ அண்ணே, அங்க பாருங்க ஏதோ வெள்ளையா ஒரு உருவம், காத்துல மிதந்துட்டு இருக்கு.”

    இன்னொருவனும் அதனைக் கண்டு மிரண்டு தான் போனான்.

   மூர்த்திக்கு சட்டென்று ஒரு யோசனை மனதில் தோன்றியது. அதன்படி சத்தமாக சிரிக்கத் தொடங்கினான்.

        ஏற்கனவே அந்த வெள்ளை உருவத்தை கண்டு பயந்து போய் நின்றிருந்த இருவரும், இந்த சிரிப்பு சத்தத்தில் கையில் இருந்த பொருட்களை கீழே போட்டு விட்டு சுற்றிமுற்றி தேடினர்.

  “யா…யார்? யாரது?”

    மூர்த்தி தன் குரலை மாற்றி கொண்டு சத்தமாக பேச தொடங்கினான்.

      “அண்ணே…. என்ன தெரியலையா? நான் தான் மாரிரிரி.”

       “மாரியா? நீ… நீ தான் செத்துப் போயிட்டியே?”

        “ஆமா நானே தான். என்ன மட்டும் அப்படியே தனியா விட்டுட்டுப் போய்டீங்களே, எப்பவும் உங்களோட தானே நான் இருப்பேன், அதான் இப்போ உங்கள தேடி வந்துட்டேன்.

   நான் சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா? எனக்கு ரொம்ப தாகமா இருக்கு கொஞ்சம் குடிக்க ரத்தம் கிடைக்குமா?”

       இவன் இப்படி கூறியதும் அவர்கள் அலறி அடித்துக் கொண்டு, வந்த பாதையிலேயே திரும்பி ஓட ஆரம்பித்தனர்.

   “அப்பாடா இனி கொஞ்ச நேரத்துக்கு இவனுங்க தொல்லை இல்லை. இவனுங்க போய் ஆளுங்களை கூட்டிகிட்டு திரும்ப வர்றதுக்குள்ள, எப்படியாச்சும் வேந்தனும் தீபனும் காட்டுக்குள் இருந்து வெளியே வந்திடனும்.”

        காட்டினுள் தங்களுக்கு முன்னால் மலை போன்ற உருவம் கொண்டு, பூமி அதிர வேகமாக, நெருப்பினை நோக்கி ஓடிக் கொண்டிருந்த காட்டெருமைகளை தான், வேந்தனும் தீபனும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
 
     கூடாரத்தை நோக்கி வந்து கொண்டிருந்த மூவர் இவற்றைக் கண்டு, மற்றவர்களை நோக்கி கத்திக் கொண்டே ஓடினர்.

   “தீபா இதுதான் நமக்கு கிடைச்ச சரியான சந்தர்ப்பம், அந்த சுரங்கப்பாதை நோக்கி ஓடு சீக்கிரம்.”

         வேந்தனுக்கு மனதின் உள்ளுணர்வில் ஏதோ உந்துதல்  போன்று தோன்ற, சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தான்.

         அங்கு காட்டு எருமைகளை பின்னிருந்து விரட்டிக் கொண்டே, ஒரு மான், நீலக் கண்களுடன் அவனைப் பார்த்துக் கொண்டே சென்று கொண்டிருந்தது.

      அதனை கண்டவுடன் பிரம்மை பிடித்தது போல வேந்தன் அசையாமல் நின்று விட்டான். அவன் மனதில் பல எண்ணங்களும் காட்சிகளும் மாறி மாறி வந்து போயின.

     அதன் கண்களில் இருந்தது ஏக்கமா! அல்லது மனதின் வலியா! என்று பிரித்தறிய வேந்தனால் முடியவில்லை.

      ஆனால், அதன் கண்கள் எனும் நீல நிற ஆழ்கடலுக்குள், மூழ்கிடவே வேந்தனின் மனம் விரும்பியது.

    அசையாது நிற்கும் தன் நண்பனை உலுக்கி, நிகழ்காலத்துக்கு கொண்டு வந்த தீபன், அவனை இழுத்துக்கொண்டு சுரங்க பாதையை நோக்கி ஓடினான்.

   “டேய் விடுடா, அந்த மான் அந்த மான்கிட்ட நான் போய் ஆகணும்.”

     “லூசாடா நீ? அங்க எங்கடா மான் இருக்கு? காட்டெருமைங்க தான் கட்டுக்கடங்காம ஓடிக்கிட்டு இருக்கு. அதுக்குள்ள போய் சாக சொல்றியா?”

      “அங்க… அங்க உனக்கு ஏதும் தெரியலையா தீபா? அந்த மான் அந்த மான் உனக்கு தெரியலையா? அங்க அந்த மரத்துகிட்ட?”

       தீபன் நின்று திரும்பி பார்த்து,

          “அங்க ஒண்ணுமே இல்லயேடா. நாம இங்க இருந்து முதல்ல தப்பிச்சாகணும்.”

        “இல்லடா நான் போய் ஆகணும் போயே ஆகணும்.”

       தன் கையை உதறிவிட்டு செல்ல முயற்சித்தவனை தம் பலம் கொண்ட மட்டும், இழுத்து கொண்டு வந்து கொண்டிருந்தான் தீபன்.

         இவர்கள் சென்று அதிக நேரம் ஆனதால், வெற்றியும் அந்த சுரங்கப்பாதையின் எல்லையில் இருந்து, காட்டுக்குள் இருக்கும் மற்றொரு எல்லைக்கு இவர்களை தேடி வந்து விட்டான்.

         தூரத்திலிருந்தே தீபன் வேந்தனை இழுத்துக் கொண்டு வருவதை கண்டு, ஏதோ விபரீதம் என்று அறிந்து அங்கு விரைந்தான்.

        “என்னடா ஆச்சு? நீ ஏன் இவனை பிடிச்சு இழுத்துட்டு வர்றே?”

            “அவன் ஏதேதோ உளறிட்டு இருக்கான். முதல்ல இவனை புடி, நாம அவனுங்க வர்றதுக்குள்ள அவங்க கண்ணுல படாம இந்த காட்டுக்குள்ள இருந்து வெளியேறி ஆகணும்.”

        இருவரும் சேர்ந்து வேந்தனை சுரங்கப்பாதை வழியே காட்டுக்கு வெளியில் கூட்டி வந்தனர்.

              வெளியே வந்த பிறகு தான் வேந்தனுக்கு, மனது ஒரு நிலை பட்டது.

          தான் ஏன் இவ்வாறு நடந்து கொண்டோம் என்று அவனுக்கே புரியவில்லை.

        மூர்த்தி அச்சுரங்கப்பாதையின் வாயிலில் நின்று கொண்டு, இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தான். அவனது நிலையை கண்டதும் வெற்றியும் தீபனும் சிரிக்க தொடங்கி விட்டனர்.

        “என்ன கண்றாவி டா இது? உனக்கு வேட்டி கட்டினால் இந்த பட்டாபட்டி போடுற பழக்கம் எல்லாம் இல்லையா? இந்த கொடுமையெல்லாம் பாக்கணும்னு நம்ம தலையில எழுதி இருக்குது பாரு.”

   “டேய் நீங்க அப்புறமா புலம்புங்க, ஏற்கனவே காட்டுக்குள்ள வர இருந்த ரெண்டு பேரை, இப்பதான் விரட்டி விட்டிருக்கேன், முதல்ல அந்த மரத்தில் இருக்க என் வேட்டிய எடுத்துட்டு சீக்கிரம் இந்த இடத்தை காலி பண்ணலாம் வாங்க டா.”

     அதற்குமேல் நண்பர்கள் நேரத்தை வீணடிக்கவில்லை, மறக்காமல் மூர்த்தியின் வேட்டியையும் எடுத்துக்கொண்டு தம் வாகனத்தை நோக்கி சென்றனர்.

     வேந்தனின் மௌனத்தை நண்பர்கள் யாரும் கலைக்கவில்லை. அவனின் மனக்குழப்பம்  முகத்தில் தெரிந்ததால், அவனே மீண்டு வரட்டும் என்று விட்டுவிட்டனர்.

  மூர்த்தி இது பற்றி கேட்க, பிறகு சொல்வதாக செய்கையால் கூறிவிட்டனர்.

   நண்பர்கள் நால்வரும் நேராக வெற்றியின் பண்ணை வீட்டுக்கு தான் சென்றனர்.

     தீபன் தன் கையில் உள்ள அந்த இரு காகிதங்களை பிரித்துப் பார்க்க, அதில் கொற்றவை தேவியின் சிலை செம்பளுப்பு நிறமாக மிளிர்ந்ததை கண்டான்.

“ஹேய் இது கொற்றவை தேவி சிலை தானே, ஆனா இது ஏன் வேற கலர்ல இருக்கு?”

  “நானும் அதைத்தான் யோசிச்சிட்டு இருக்கேன். இந்த மாதிரி சிலையை அங்க பார்த்த மாதிரியே ஞாபகம் இல்லையே. நம்ம நாச்சியம்மன் கோவிலில் தான் கொற்றவை தேவி சிலையோட போட்டோவும் கோவிலோட போட்டோவும் இருக்கே.”

     வேந்தனின் முகம் இப்போது தெளிவாக இருந்ததை கவனித்த தீபன், அந்த இரு காகிதங்களையும் அவனிடம் நீட்டினான்.

      “நீ இதை பத்தி ஏதாச்சும் கேள்விப்பட்டிருக்கியா வேந்தா.”

    அந்த புகைப்படத்தை கண்டவுடன் வேந்தனுக்கு இறந்த காலமானது ஒரு சுழல் போல், அவனை உள்ளே இழுப்பது போன்று இருந்தது.

    பல காட்சிகள் மனதினில் தோன்றி மூளைக்குச் செய்தி அனுப்ப, நிகழ் காலத்துக்கும் இறந்த காலத்துக்கும் இடையே உண்டான அழுத்தத்தை தாங்க முடியாமல், மயக்கமடைந்து கீழே விழுந்தான் வேந்தன்.

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அய்யோ மயங்கிட்டானா … வேந்தன் மன்னவனா மாற வேண்டிய நேரம் வந்திடுச்சு போலயே …