
அத்தியாயம் 40
மௌனிகாவை தயார் செய்து சரணின் அறைக்குள் அனுப்பி வைத்தனர் பாகீரதியும் வசந்தியும்.
உடலைச் சுற்றியிருந்த புடவையும், தலையை நிறைத்து இருந்த மலர்களின் வாசமும், ரோஜா இதழ்கள் சிதறிக்கிடந்த படுக்கையும், மங்கலான வெளிச்சத்தில் இருந்த அறையும்.. பாவையின் இயல்பைப் பறித்துக் கொண்டு பதற்றத்தைப் பரிசளித்து இருந்தது.
அத்தோடு தோழி சொல்லிச் சென்ற காதலின் புரிதலும், கணவனின் மீது உண்டான பிடித்தமும் என ஒருவித மயக்கத்தைத் தர, அதனை எதிர்கொள்ள இயலாது தவித்தாள்.
நல்ல வேலையாக இவள் வரும் பொழுது ஆடவன் அறைக்குள் இல்லை. இல்லையேல் அவனை நேருக்குநேர் காணும் தைரியம் அற்று, மயங்கி சரிந்திருப்பாள்.
மௌனி அப்படி ஒன்றும் உணர்வுகளின் சூழல்களிற்குள் சிக்கிக் கொள்பவளோ, பலவீகமானவளோ இல்லை.
இந்த மாற்றம் எல்லாம், சரண் என்கிற ஒருவனிற்காக மட்டும் தான். ரஞ்சனி உரைத்தது உண்மை தான். அவள், ஆடவனை நேசிக்கத் தொடங்கி விட்டாள். ஆனால் எப்பொழுதில் இருந்து என்று தெரியவில்லை.
எனினும் பிடித்தத்தின் முதல் விதை விழுந்த அத்தருணத்தை, அறிந்து கொண்டாள் தற்போது.
சட்டென்று உரிமையுடன் அவளது பெட்டியை வாங்கி இரயில் நிலையத்தின் நடைமேடேயில் வைத்து பளீரென அரங்கநாதனாய் புன்னகை சிந்தினானே, அந்நொடியிலேயே தன்னை அறியாமலேயே பாவையின் மனதிற்குள் அம்பு எய்திருந்தான். அதை, அப்பொழுது அவளுமே அறியவில்லை.
இருவரும் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அமையாமல் போயிருந்தால், இறுதிவரை மௌனி அறிந்து கொள்ளாமலேயே இருந்திருக்கலாம். வேறு ஒருவனை மணந்து, வேறொரு வாழ்க்கையையும் வாழ்ந்து முடித்திருக்கலாம்.
ஆனால் காலம் தான் இவர்களிற்குள் முடிச்சிட்டு, காதலை உணர வைத்து விழாவினைக் கொண்டாட காத்திருந்ததே!
கதவு திறக்கப்படும் ஒலியில் பாவையின் சிந்தனைக் கலைந்திட, அத்திசையில் நோக்கினான். ஓய்வறையில் இருந்து தலையைத் துவட்டியபடி வந்தான் சரண். வெள்ளை வேட்டியும் இளம் பச்சை வண்ணத்தில் சட்டையும் அணிந்து இருந்தான்.
மௌனிக்குப் பிடித்த நிறம். அவனைக் கண்டதும் அனிச்சையாய் முகம் மலர்ந்தது.
“எப்ப வந்த மோனி?”
“இப்பதான் த்ரீ ஆர் ஃபோர் மினிட்ஸ் இருக்கும்.”
“ஆல் ஆர் ஓகே?”
“யா..”
“டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கிறியா?” என வினவியபடியே சென்று, அறைக் கதவு தாழிடப்பட்டு இருப்பதைச் சரிபார்த்தான்.
“நான் லாக் பண்ணிட்டேன் சரண்.”
திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தவன், “நான் கேட்டதுக்குப் பதில் சொல்லலையே நீ?”
“சேஞ்ச் பண்ணா ஓகேதான். பட், டிரஸ் இல்லையே? காலையில தான் கொண்டு வந்து தருவோம்னு சொல்லிட்டாங்க ஆன்ட்டி!”
அவளை நோக்கி வந்தவன், “அத்தை! மேரேஜ் ஆகிடுச்சே? மாமியாரை ஆன்ட்டினு கூப்பிட்டா நல்லா இருக்காது. கேன் யூ சேஞ்ச் தி வே யூ கால் மை மதர்?”
“டிரை பண்ணுறேன்!”
“ஓகே.. டிரஸ் இந்த கபோர்ட்ல இருக்கு!” என அலமாரியைக் கை காட்டியவன், “உனக்குப் பிடிச்சதை சேஞ்ச் பண்ணிக்கோ!” என்றுவிட்டு நகர்ந்தான்.
அவள் அணிவது போலான நான்கு வித இரவு உடைகள் இருந்தன. சென்னைக்கு சென்ற போது நேரில் கண்டதால், அதேபோல் வாங்கி வைத்திருந்தான் சரண்.
ஆகாய வண்ணத்தில் இருந்த உடையை எடுத்தவள், “சேஞ்ச் பண்ணுறதுக்கு ரூம் இருக்கா சரண்.?”
“ரெஸ்ட் ரூம் பெருசு தான். அங்கேயே மாத்திக்கலாம். ரைட் சைடுல ஈரம் இல்லாம, ஸ்கிரீன் போட்டு இருக்கும்!”
தலை அசைத்துச் சென்றவள், ஐந்து நிமிடங்களில் புடவையை மாற்றி வந்தாள்.
கையற்ற இரவு உடை, முழங்காலிற்குச் சற்று மேலேயே நின்று இருந்தது. கண்ணாடியின் முன்சென்று நின்றவள்.. ஆடையோடு பொருந்தாமல் இருக்கும் சிகை அலங்காரத்தைக் கலைக்கத் துவங்கினாள்.
ஆறு சரமாய் குழலை மறைத்து இருந்தது மரிக்கொழுந்துடன் கலந்து கட்டிய மல்லிகை மலர். நான்கு கொண்டை ஊசிகளின் உதவியால், அதனைப் பின்பக்க தலையில் நிலைநிறுத்கி இருந்தனர்.
ஒவ்வொன்றாய் எடுக்கத் துவங்கிட, “எனி ஹெல்ப்?” என்றபடி, அவளின் பின்னால் வந்து நின்றான்.
“ம்ம்..” எனக் கண்ணாடியில் கணவனின் பிம்பத்தைப் பார்த்திட.. பூக்களை எடுத்து, பின்னலையும் பிரித்து, குழலில் விரல்களைக் கோர்த்து சிக்கல்களை விலக்கி இழுத்து சரிசெய்து விட்டான்.
“கை, எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிற மாதிரி மூவ் ஆகுதே சரண்.?”
சற்றே குனிந்து அவளின் இரு பக்கத் தோள்களில் தனது கரங்களைப் பதித்தவன், மௌனிக்கு வலது பக்கமாய் முகத்தை சற்று முன்புறம் கொண்டுவந்து கண்ணாடியில் அவளை நோக்கி, “நம்ம வீட்டுல ரோகிணி இருக்கிறதை மறந்துட்டியா.? எல்லாம் அவளை வச்சுக் கத்துக்கிட்டது தான்.”
பாவை புன்னகைத்திட, “ஜுவல்ஸ் இருக்கட்டுமா.?”
“கழட்டிடலாம். தூங்குறப்ப அன்கம்ஃபர்டா ஃபீல் ஆகும்.”
காலையில் அவன் கட்டிய மங்கல நாணைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் கழட்டி விட்டாள் மௌனி. இரு கரங்களில் வளையல்கள் மட்டும் நிறைந்து இருந்தது.
ஆபரணங்களைப் பத்திரப்படுத்தி விட்டு வர, படுக்கையில் அமர்ந்து அவளைப் பார்த்துப் புன்னகைத்தான் ஆடவன்.
அவனைக் கண்டதும், “என்ன.?” என்றிட, “ஒன்னும் இல்ல!” என்பதாய் பதில் வந்தது.
அவனின் அருகே சென்று அமர்ந்தாள். இடக்கடத்தைப் படுக்கையில் ஊன்றி உடலைச் சற்று சாய்த்தது போல் உட்கார்ந்து இருந்தவளின் மார்பில், அவளின் வலது தோள்பட்டை உரசியது.
இரு கரங்களையும் கோர்த்து மடியினில் வைத்திருந்தாள்.
அவன் வலது கரத்தால் மனைவியின் வலது கை விரல்களைப் பற்றிட, கழுத்தைத் திருப்பி முகம் நோக்கினாள்.
“வித் யுவர் பர்மிஷன்?” என மிச்சத்தை சொற்களாய் உரைக்காது கண்களால் கேட்டிட, சம்மதமாய் தலை அசைத்தாள்.
“ஆர் யூ ஸுயர் மோனி?”
“ம்ம்..” என்றவள் அவனது மார்பில் தலை சாய்த்திட.. இடது கரத்தை மனைவியின் இடையில் கோர்த்தபடி பின்பக்கமாய் அப்படியே படுக்கையில் சரிந்தான் சரண்.
பற்றியிருந்த அவளின் கரத்தை ஒருமுறை தூக்கிப் பார்த்தவன், அப்படியே நகர்த்திச் சென்று இதழ்களின் மீது வைத்து முத்தமிட, தலையைத் திருப்பிக் கணவனின் முகத்தைப் பார்த்தாள் மௌனி.
“என்னமா.?”
“அம்மா அப்பா விட்டுப் போன பின்னாடி, எனக்குக் கிடைக்கிற ஃபர்ஸ்ட் கிஸ். ஆச்சி கிஸ் கொடுப்பாங்க தான், ஆனா இப்படி டேரெக்டா லிப்ஸ்ஸால இல்ல! ஒருமாதிரி சொல்லத் தெரியல. சந்தோஷமாவும் இருக்கு. அதேநேரம்..”
“பயமா இருக்கா.?”
“இல்ல சரண்.”
“அப்புறம், வேற என்ன?”
“தெரியல!” எனச் சின்னதாய்ச் சிரித்தவள், “எனக்கும் உங்களுக்கும் இடையில இருக்கிற இந்த மொமண்ட்ஸ் எல்லாம் பாஸிங் க்லௌவ்ட் மாதிரி டக்குனே மூவ் ஆகாம, லாங் மெமரியா வேணும்! சோ, எல்லாத்தையும் ஒரே நாள்ல இல்லாம, கொஞ்சம் ஸ்லோவா போவோமா.?”
அவளை வியப்புடன் நோக்கிடவன் சட்டென்று பக்கவாட்டில் திரும்பி முகம் பார்த்து, “வாட் எ சேஞ்ச் மோனி.?”
“ஏன், நான் கேட்கிறது ஆக்வர்டா ஃபீல் ஆகுதா.?”
“இல்ல, ஹேப்பியா இருக்கு. நீ இதுக்கு முன்னாடி, என்கிட்ட இவ்வளவு உரிமையா பேசுனது இல்ல.”
“ரஞ்சுதான் சொன்னா, மேரேஜுக்கு அப்புறமும் உங்கக்கிட்ட டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ண வேண்டிய அவசியம் இல்ல. மனசுல இருக்கிறதை வெளிப்படையா பேசுனு.”
“ம்ம்.. குட் சிஸ்டர். நெக்ஸ்ட் டைம் ரஞ்சனியை பார்க்கும் போது ஸ்பெஷலா கவனிச்சிடுறேன்.’
அவள் சிரிக்க, “வேற என்ன எல்லாம் உனக்கு சொல்லி கொடுத்தா?”
“அதெல்லாம் ஃப்ரெண்ட்ஸ் எங்களுக்கு நடுவுல இருக்க சீக்ரெட்ஸ். உன்கிட்ட சொல்ல முடியாது!”
“போச்சா? சோ சேட்!”
மௌனி சட்டென்று சிரித்து, “ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ் சரண். கணி விஷயத்துல ரொம்ப பெரிய ஹெல்ப் பண்ணி இருக்கீங்க.?”
அவனது பெயரைக் கேட்டதும், முதல்நாளின் நிகழ்வுகள் நினைவிற்கு வர, அதுவரை இருந்த மலர்ச்சி சட்டென்றுதொலைந்து போனது.
கணவனது முக மாற்றத்தை கவனித்த மௌனி, “என்னாச்சு சரண்?”
இத்தனை நம்பிக்கையுடன் தன்னைக் கரம்பற்றி இருக்கும் மனைவியிடம், நடந்தவற்றை மறைப்பதற்கு அவனின் மனம் ஒப்புக் கொள்ள மறுத்தது. அதனால் உண்மையைச் சொல்லிவிட முடிவெடுத்தான்.
தன்னருகே இருந்தவளின் கன்னத்தில் கரம் பதித்துக் கண்களை நோக்கியவன், நெற்றியில் இதழ்களை ஒற்றினான்.
கணவனது இரு முத்தங்களிற்குமான வேறுபாடை உணர்ந்து, குழப்பத்துடன் பார்த்தாள் பாவை.
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும். எழுந்திரு மோனி!” என்று சரண் அவள் எழுவதற்கு உதவி செய்து, தானும் எழுந்தான்.
ஒருவரின் முகத்தை மற்றவர் பார்க்கும் படியாய், இருவரும் படுக்கையில் எதிரெதிரே அமர்ந்து இருந்தனர்.
“என்னப்பா?”
“கணியோட காயத்தைப் பத்தி நேத்து விசாரிச்ச இல்ல?”
“ம்ம்.. ஆக்ஸிடெண்ட்டுனு சொன்னானே?”
“அதுக்கு நான்தான் காரணம்னு, உன்கிட்ட அப்பவே சொன்னேன். ஞாபகம் இருக்கா?”
உண்மையில் திருமண பரபரப்பிலும் மனதில் இருந்த கலவையான உணர்வுகளாலும், சரண் அப்போது உரைத்தது அவளின் கருத்தில் பெரிதாய் பதியவில்லை.
“ஆமா, ஆனா..” எனச் சிந்தனையுடன் கேள்வியாய் நோக்க, “அது ஆக்ஸிடெண்ட் இல்ல மோனி. நான்தான் அவனை அடிச்சேன்!”
திகைப்புடன் நோக்கியவள், “சரண்? என்ன? ஆனா ஏன்? எதுக்காக?”
“அவன் கணினு எனக்கு அப்ப தெரியாதுடா. அவனை நான் முன்னாடி பார்த்தது இல்லேல?” என நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் உரைத்தவன், விமலுடனான அவளின் இயல்பான உறவு மாறுபட்டுப் போவதை விரும்பாது, தம்பியானவன் எட்டி உதைத்ததையும் தான் செய்ததாகவே மொழிந்தான்.
“என்னால அவன் ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய் வந்து, ரொம்ப ஆழமா காயப்பட்டு இருந்தான். இப்ப மறுபடியுமா? நீங்கதான அவன்மேல கேஸ் இல்லாம பண்ணீங்க? இப்ப நீங்களே அவனை ரத்தம் வர்ற அளவுக்கு அடிச்சு இருக்கீங்க? என்ன சரண் இது?”
“மௌனி ஸாரிமா..” என மேலும் சமாதானம் உரைக்கும் வழி தெரியாது, தவிப்புடன் மனைவியைப் பார்த்தான்.
பாவையானவள் எவ்வித மறுமொழியும் சொல்லவில்லை. கண்கள் லேசாய் கலங்கி இருந்தது.
“ப்ளீஸ்.. இன்னைக்கு, இதுக்கு மேல எதுவும் பேச வேணாம். எனக்கு கொஞ்சம் டைம் வேணும்!” என்று உரைத்துப் படுக்கையின் ஓர் ஓரத்தில் படுத்துக் கொண்டாள்.
எதுவும் செய்ய வழி இன்றி சரணும் மறுபக்கமாய் கலங்கிய மனதோடு படுத்தான்.
கைக்கலப்பு இல்லாத விழா இரசிக்குமா என்ன?
மாமன் மச்சினனிற்கு இடையே முதலில் உருவான மெலிதான புரிதலின்மை விதையாய் விழுந்திட, அது புதிதாய் திருமணமான கணவன் மனைவிக்கு நடுவே ஊடுருவி வந்து பிளவை உண்டாக்கி இருந்தது.
காதல் விழா கலகலக்க வேண்டுமாயின், ஊடல் அவசியம். அந்த ஊடலிற்கு முன்பு ஏற்படும் வாதங்கள் யாவும் உறவை பலப்படுத்தும் அடிப்படைகள்.
அவ்வகையில் சரண் மௌனியின் உறவுக்கு இடையேயான அடிப்படை பலமாய் போடப்பட்டு இருந்தது. இனி உறவைத் தக்க வைப்பதற்கான ஏற்பாடுகள் ஒவ்வொன்றையும் சரியாய் செய்யத் துவங்கினால், இறுதியில் விழா கலைக்கட்டி விடும்.
ஒரே அறையில் ஆளிற்கு ஒரு பக்கமாய் இருக்கும் சரண் மௌனி, வெவ்வேறு ஊர்களில் இருக்கும் அருண் ரஞ்சனி, லாவண்யா திவாகர், கணியன் ரோகிணி என நான்கு ஜோடிகளின் நெஞ்சிற்குள் உண்டாகும் காதல் விழாக்களையும் இரண்டாம் பாகத்தில் காணலாம்..
நன்றி.

