Loading

அத்தியாயம் – 3

 

ஏற்கெனவே ஆதிரா மீது கொலைவெறியில் வந்தவனுக்கு, விக்கியின் இந்த மெத்தனமான செய்கை எரிச்சலை ஏற்படுத்தியது. வெளிப்படையாக அதை முகத்தில் காட்டியும், பெரிதாக எடுத்துக் கொள்ளாத விக்கி அவனை அங்குப் போடப்பட்டிருந்த கல்லிருக்கையில் அமரச் சொல்லி அவனும் அமர்ந்தான்.

“இந்த நேரத்தில் என்ன பேசணும் விக்கி? நாளைக்கு வீட்டுக்கு வா, பேசிக்கலாம். இப்போ போய் அஞ்சலியைப் பார்க்க விடு.” என்று அவன் ஏதோ தன்னை வேண்டுமென்றே உள்ளே விடாமல் இப்படிச் செய்கிறானே எனக் கடுகடுத்தான் விகர்ணன்.

“விகா, ஏன் ஆதிராவுடன் நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தின?” என்று பட்டென்று அவனிடம் கேட்டு விட்டான் விக்கி.

“உனக்குத் தேவையில்லாததுல நீ தலையிடாம இருந்தா நல்லது!” என்று விரல் நீட்டி எச்சரித்து உள்ளே செல்பவனைத் தடுக்கக் கைகளைப் பிடித்தான்.

“கையை விடு விக்கி, என் பொறுமைக்கும் ஒரு எல்லை தான்!”

“நான் இன்னும் பேசி முடிக்கல, பேசிட்டுப் போ…” என்றான் விகர்ணனுக்கு இணையான அழுத்தத்துடன்.

குழந்தை அழவும், பசியாற்ற அஞ்சலியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தவள் கண்டது என்னவோ, கைகலப்பில் இருந்த இருவரைத் தான். அதிர்ந்து நின்ற ஆதிரா, சுதாரித்து அங்கிருந்த காவலாளிகளை விரைந்து அவர்களைப் பிரிக்குமாறு கூறிப் பின்னே ஓடினாள்.

காவலாளிகள் சிரமப்பட்டு அவர்களைப் பிரித்தும் கோபம் அடங்காமல் திமிர, வேறு வழியில்லாமல் விக்கியிடம், அஞ்சலி அவனைப் பார்க்கவேண்டும் என்று கூறியதாகக் கூறினாள். அது உண்மையில்லை என்று அறிந்தும் பெரிதுபடுத்தாமல், விகர்ணனை முறைத்த வண்ணம் உள்ளே சென்றான் விக்கி என்கிற விக்னேஸ்வரன்.

அவன் சென்றதும், தன் கைகளைப் பிடித்திருந்த காவலாளிகளின் கைகளை உதறி அவர்களை முறைத்தான். அவர்கள் மிரண்டு ஆதிராவைப் பார்க்க, தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி அவர்களை அனுப்பி வைத்தாள்.

அவர்கள் செல்லும் வரை அமைதியாக நின்றவன், அவள் கைகளை முறுக்கி முதுகுக்குப் பின் திருகி அழுத்த, வலித்தாலும் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்தவாறு நின்றாள்.

“என்ன தைரியம் இருந்தா, அஞ்சலியை இப்படிக் கடத்திட்டு வந்து என்னை பிளாக்மெயில் பண்ணி இருப்ப? உன்னைக் கொல்லாம விட்டா இன்னும் என்ன வேணாலும் பண்ணுவ?” என்று மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவள் முகத்திற்கு முன் நீட்டினான்.

“உனக்கு எதுக்குச் சிரமம்?” என்று இடது கையால் அவன் பிடித்து இருந்த துப்பாக்கியை மார்பில் நேர் இழுத்து அவன் கையை அழுத்த முயன்றாள்.

அவளது செய்கையில் திடுக்கிட்டவன், அவளைப் பார்த்தவாறு துப்பாக்கியை உள்ளே வைத்தான்.

அவளிடம் இறங்கிப் போக மனசில்லாமல், “உன்னை இதை வச்சுக் கொன்னா கூட இதுக்குத்தான் அசிங்கம்!” என்று அவள் கையை மேலும் திருகினான்.

“ஏன் இப்போ சமாளிக்கிற? பட்டுனு போட்டா பொட்டுனு போயிடப் போறேன். நீயும் நானில்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.” என்று கூறி அவனைப் பார்க்க, கண்களில் எந்தப் பிரதிபலிப்பும் இல்லாமல் அவளாசையை நிராசையாக மாற்றியிருந்தான்.

“ஆமாம்டி. ரொம்ப நிம்மதியாத்தான் இருப்பேன். செத்துத் தொலை!”

“அதெப்படி நீ நிம்மதியா இருக்கலாம். என்னால் நீ அனுபவிக்க வேண்டியது எவ்வளவு இருக்கு? நான் செத்தாலும் உனக்கு நிம்மதி இருக்காது. அப்படித்தான் நான் சாவேன்.” என்றாள் திமிராக.

 

அவளை அப்படியே தள்ளிவிடப் பிடிப்பின்றிக் கீழே விழுந்தவள், எழுந்து கையைத் தேய்க்க இடதுகையைச் சுத்தமாக அசைக்க முடியவில்லை. வலி உயிர் போனது. கீழே பார்த்தால் அவன் விரல் அச்சுப் படிந்த இடமெல்லாம் கன்றிப் போய் ஊதா நிறத்தில் இருந்தது.

அவன் முன் வலியைக் காட்டாமல் நிற்க, மேலும் கோபம் வந்தது அவனுக்கு, “அப்படி என்னடி உனக்கு வீம்பு? வலியைக் கூட காட்டாதா கண்ணு. இப்படி அழுத்தமா இருந்து என்னத்தைச் சாதிக்கப் போற?” என்று மொத்த பலத்தையும் திரட்டி அவளை அடிக்கப் போக அப்படியே இறுகி நின்றிருந்தாள்.

அவள் மேல் காட்ட நினைத்த கோபத்தை அருகே இருந்த மரத்தில் காட்ட, விரல் முட்டி சிராய்த்துக் குருதி எட்டிப் பார்த்தது. அவ்வளவு நேரம் விறைத்து நின்றவள் கண்களில் அவன் ரத்தம் பட, அனைத்தையும் தூக்கிப் போட்டு அவனிடம் செல்ல அடுத்த குத்துக் குத்தினான் அதே கையால்.

“கர்ணா, என்ன இது?” என்று அவனை நெருங்க, கொத்தாக அவள் முடியைப் பிடித்துத் தன்புறம் இழுத்தவனது கேள்வி, “ஏன்டி என்னைப் படுத்துற? உண்மையாவே நான் உன்னைக் காதலிக்கல! உன்னைப் பழி வாங்கத்தான் உன்னை நெருங்கினேன். என்னை விட்டுத் தள்ளி இருக்கிறது தான், உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது!” என்று அவளை விரல் நீட்டி எச்சரித்துக் கடந்து சென்றவனை நிறுத்தினாள்.

“இதுவரை தான என்னைக் காதலிக்கல? இனி என்னைக் காதலிக்கலாம் இல்ல, நான் அதைச் செய்ய வைப்பேன்!” என்று எம்பி அவன் இதழில் தானாகப் பதிக்கும் முதல் முத்திரையைப் பதித்து நிற்காமல் உள்ளே சென்றாள்.

“எனக்கு ஒரு சந்தேகம்?” என்ற அவனது இறுகிய குரலில் திரும்பினாள் ஆதிரா.

“என்ன?”

“உனக்குக் காதல் என் மேலயா? இல்லை என் உடம்பு மேலயா?”

“பொய் சொல்லட்டா? உண்மையைச் சொல்லட்டா?”

“அது உன் இஷ்டம்!” என்றான் தோளைக் குலுக்கி.

“நீ எதைப் பார்த்து என்னைக் காதலிக்கிறேன்னு நெருங்கி என்னைத் தொடப் பார்த்தியோ, அதைப் பார்த்து மயங்கித்தான் உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சேன்.” என்று தெளிவாக எதையும் கூறாமல் அவனைப் பார்த்தாள்.

“என்னை நீ தான்டி டெம்ப்ட் பண்ண… ஆனால் அந்த அளவுக்கு எதுவுமே நான் பண்ணலையே” என்றான் வெளிப்படையாக.

“அதே தான் நானும் சொல்லுறேன்.” என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்து அங்கிருந்து சென்றாள்.

என்னை எந்த விதத்திலும் உன் வார்த்தைகள் பாதிக்கவில்லை என்கிற விதத்தில், அஞ்சலியைக் காணச் சென்றான். அங்கு அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவள் அருகே அமர்ந்து தங்கள் மகவின் பாதத்தை வருடிய விக்கிக்கு, எதை அவள் பாதத்துடன் ஒப்பிடுவது என்று தெரியாமல் சிலிர்த்துப் போனான்.

கையில் ரத்தத்துடன் உள்ளே வந்த விகர்ணன், விக்கியை முறைத்தவாறு குழந்தையை வாங்க எதுவும் பேசாமல் அவனையே பார்த்திருந்தான்.

காற்றைப் போல லேசாக, அஞ்சலியின் மறுபதிப்பாக அவனுக்குத் தெரிந்தாள். நெற்றியில் உதட்டை மடித்து முத்தமிட்டு, அஞ்சலியைப் பார்க்க அவளோ நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். இருவரையும் மாறி மாறிப் பார்க்க, அவ்வளவு நேரம் இருந்த கொதிநிலை மாறிச் சற்றுச் சாந்தம் ஆகியிருந்தது அவன் மனம்.

விக்கியும் எதுவும் பேசாமல் அவன் செய்கையைக் கவனித்த வண்ணம் நின்றிருந்தான். குழந்தையை அவன் கையில் கொடுத்த விகர்ணன், “அவளோட சேர்ந்து, அஞ்சலிக்கு ஏதாவது கஷ்டம் கொடுத்த. உன்னைக் கொன்றுவேன். அஞ்சலி எப்பவும் எனக்கு ஸ்பெஷல் தான். நீ ஜஸ்ட் அவளோட லைப் பார்ட்னர் தான். நீ மட்டும் அவளோட லைப் இல்லை. இப்படி அவளைப் பணயம் வைக்கிறது இதுவே கடைசித் தடவையா இருக்கட்டும். அவளோட கண்ணுல கண்ணீர் வந்தா அதுக்குக் காரணம் ஆன யாரையும் சும்மா விட மாட்டேன்.” என்று அவன் பேசப் பேச விக்கிக்கு இன்னொருவனின் பதிப்பாகத் தெரிந்தான்.

அதை உறுதிப்படுத்த அவன் அருகே விக்கி செல்ல, “அவளைக் கஷ்டப்படுத்தினதை எப்பவும் நான் மறக்க மாட்டேன். தரவேண்டிய நேரத்தில் இதுக்கான பதிலைத் தர்றேன்.” என்று விறுவிறுவென அங்கிருந்து சென்று விட்டான் விகர்ணா.

விக்கிக்கு அவன் மீதான சந்தேகம் வலுப்பெற, இதை எப்படியாவது கண்டுபிடித்து ஆதிராவை மீட்க வேண்டும் என்று மனத்தில் குறித்துக் கொண்டான்.

அதே சமயம், விகர்ணனின் கொதிநிலைக்குக் காரணமானவளோ சற்று நிதானமாக காருக்குச் சென்றாள்.

காரில் ஏறியதில் இருந்து, தான் செய்வது சரியா? தவறா? பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள்.

தன்னிடம் அவன் காட்டிய அன்பு எதுவும் உண்மையல்ல, வெறுப்பின் உச்சியில் தன்னைப் பழிவாங்க அவன் ஆடிய நாடகம் என்று மூளை கூறினாலும், அதை அவள் மனம் ஏற்கவில்லை. காதல் கொண்ட மனம் ஒருபுறம் தன்னை அமைதியாக இருக்கக் கூறினாலும், அவன் மேல் கொண்டுள்ள சினமோ அவனுக்கு வலியைக் கொடுக்கத் தள்ளுகிறது.

இதில் எதன் பின் சென்றாலும், வலி என்னவோ தனக்குத் தான் என்று தெரிந்தும், எதற்கு இந்தப் போராட்டம் என்று அவளுக்குத் தெரியவில்லை. ‘அவன் ஏமாற்றியதாகவே இருக்கட்டுமே! அவனை விட்டு விலகித் தன் வழியில் செல்வது தானே சரியான முடிவு. ஆனால் இப்போது தான் செய்வது எந்த ரகத்தில் சேர்ப்பது. வேண்டாம் என்பவனை வலுக்கட்டாயமாகத் தன்னுடைமை ஆக்க நினைப்பது சரியா?’ என்று மனம் கேட்க, ‘உன்னை எப்படி அவன் காதல் செய்றேன்னு உன் உணர்ச்சியைத் தூண்டினான்.’ என்று சட்டென்று அந்த நாளை நினைவூட்டியது மூளை.

 

*******

அடுத்தநாள், ஒரு முக்கியமான மீட்டிங் இருப்பதால் அதற்கான பைலைப் படித்துக் கொண்டிருந்தாள் ஆதிரா. படிப்பை முடித்த அடுத்த நாளே அவள் தந்தையிடம் சென்று அலுவலகம் வருவதாகக் கூறியிருந்தாள்.

முழுதாக மூன்றாண்டு முடிந்திருக்கும் வேளையில், அவளது தந்தையின் பெரும்பாலான வேலைப்பளுவைக் குறைத்து அவள் பொறுப்பில் தனியாக அனைத்தையும் பார்த்து வருகிறாள்.

பெயருக்குத் தான் அந்த அலுவலகத்தில் அவளது தந்தை முதலாளி, அவள் அனுமதி இல்லாமல் ஒரு அணுவும் அங்கு ஆசையாது.

வேலையில் மூழ்கி இருந்தவளை, “மே ஐ கம் இன்?” என்ற அழைப்பு நினைவிற்குக் கொண்டு வந்தது.

“எஸ் கம் இன்!” என்று நிமிர அட்டகாசமான சிரிப்புடன் நின்றிருந்தான் விகர்ணன்.

“ஹாய் விகர்ணன். டேக் யுவர் சீட்!”

“தேங்க்ஸ். நீ ரொம்ப ஒர்கஹாலிக்கா இருக்க தீரா…” என்றவனுக்கு மெல்லிய புன்னகையை பதிலாகக் கொடுத்தாள்.

“நேரா நான் வந்த விஷயத்துக்கு வரேன். தீரா, நம்ப ஏன் இன்னைக்கு லஞ்ச் டேட் போகக்கூடாது. நோ மட்டும் சொல்லிறாத.” என்று கெஞ்சாமல், கொஞ்சாமல் தன்னை நெருங்கி வரும் விகர்ணனைப் பார்த்தவள் பதில் கூறாது பைலுக்குள் தலையை விட்டாள்.

இருபுறம் தலையை ஆட்டி, “வென்யூ மெசேஜ் செய்கிறேன்.” என்று அங்கிருந்து சென்று விட்டான்.

அவன் செய்கை ஆதிராவிற்குச் சிரிப்பூட்டியது. தன்னை இப்படி எல்லாம் கையாளுகிறான் என வியந்தாள். ‘தன்னிடம் அனுமதி கேட்டால் நிச்சயமாக மறுத்து விடுவேன் என்று எப்படிக் கேட்டுச் செல்கிறான்.’ என யோசித்தவள் வேலையை விடுத்து விகர்ணனைக் காணச் சென்றாள்.

அவனோ தனக்கான அறையில் கணினியில் எதையோ தேடிக் கொண்டிருந்தான். அவள் வந்திருப்பதை உணர்ந்தும், அவளை உடனே ஆராதிக்காமல் அலைக்கழிக்க நினைத்துத் திரையில் பார்வையைப் பதித்தான்.

“மிஸ்டர் விகர்ணன்!”

“ம்ச்! கர்ணன்!” என்று திருத்தினான்.

தெத்துப்பல் தெரிய இதழ் பிரித்து, “ஷால் வி ஹேவ் கப் ஆப் காபி” என்று அவன் கேட்டதை முழுதாக ஒத்துக் கொள்ளாமல், அதே சமயம் அவனை அறிய எழுந்த ஆவலை அவனிடம் காட்டாமல் கேட்டும் விட்டாள்.

அவள் விழிகளில் பதில் தேடித் தோற்றுப் போனவனாக, தலையைச் சிலுப்பி நடந்து செல்ல அவளும் அவனைப் பின் தொடர்ந்தாள்.

அவர்களுக்கான முதல் அன் அபீஷியல் மீட்டிங் இது. இருவர் தந்தையரும் பல வருட நண்பர்கள் எனினும், இவர்களுக்குள் அப்படி ஒன்றும் நல்ல உறவு இல்லை. இருவரும் நேரில் சந்தித்த தருணம் வெகு சொற்பமே.

கல்வி முழுவதும் விடுதியில் தங்கிப் படித்தாள் ஆதிரா. பதின்வயதில் ஒரு நிகழ்ச்சியில் ஏற்பட்ட மனக்கசப்பால் இவனிடம் தள்ளியே இருந்தாள். அதன்பின், நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அரிதாகிப் போக, இவன் அந்நியமாகிப் போயிருந்தான் அவளுக்கு. அனைத்தையும் யோசித்தபடி வந்தவள், அவன் காரை நிறுத்தவும் தான் இடத்தைப் பார்த்தாள்.

அவனது மகிழுந்து நின்ற இடம் அவளுக்கு மிகவும் விருப்பமான கஃபே. மற்ற இடத்தை விட இது தனித்திருந்த காரணம் அந்த இடம் தான். பார்வையாளரைத் தகிக்க வைக்கும் காட்சியோடு, குளுமையான தோற்றம் கொண்டு காட்சியளிப்பதால் அந்த இடம் ஆதிராவின் விருப்பப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருந்தது.

அவளுக்குப் பிடித்ததை அவனே ஆர்டர் செய்யக் கேள்வியாக அவனைப் பார்த்தாள்.

அவளைக் காதலாகப் பார்த்தவன், “ஐ ஸ்மெல்ட் யூ!” என்று பல் வரிசை தெரியச் சிரித்தான்.

அப்படி ஒரு வசீகரம் அவன் சிரிப்பில். ‘வசியம் செய்து விடுமோ என்று தான் இவன் அரிதாகச் சிரிக்கிறானோ?’ என்ற எண்ணம் தோன்ற மானசீகமாகத் தலையில் அடித்து வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.

“தீரா, ஆர்டர் வரும் வரை கேம் ரூம் போகலாமா?” என்றான். அவளும், நேரத்தைக் கடத்த சரி என்று கூற, அவள் கையைப் பற்றி அந்த அறைக்கு அழைத்துச் சென்றான்.

அவன் கையைப் பிடித்ததும் மெலிதாக அவள் உடல் சிலிர்த்து அடங்கியது. அதை வெளியே காட்டாமல் இருக்கப் பெரிதும் போராடி அதை வென்றாள். அவர்களைத் தவிர அந்த அறைக்குள் யாருமில்லை. தனிமை விரும்பி என்பதால் பெரிதாகத் தெரியவில்லை ஆதிராவிற்கும்.

அவர்கள் நேராகச் சென்ற இடம் பௌ அண்ட் ஏரோ செக்ஷன் தான். இருவருக்கும் அது பிடித்தமான விளையாட்டு. ஆனால் ஒருத்தர் தான் விளையாட முடியும் என்பதால் முதலில் ஆதிராவை விளையாடக் கூறினான்.

அவளும் ஆர்வமாக வில்லை விட, அனைத்தும் குறி தவறியது. அவனோ வேகமாக அவளை நெருங்கி அவள் கை மேல் கை வைத்து நூல் அளவு இடைவெளியின்றி அவளைப் பின்னிருந்து அணைத்தாற் போல நிற்க, முதல் முறை ஒரு ஆணின் ஸ்பரிசம் பட்டு மீண்டும் அவள் மேனி சிலிர்த்தது.

 

அவள் கைகளை வளைத்து அவனுக்குத் தகுந்தாற் போல் வைத்துக் குறி பார்த்து விட, அது சரியாகச் சென்றிருந்தது. அதுவரை எழாத உணர்வு, அதன் பிறகு விகர்ணனை ஆட்கொண்டது.

அவன் விரல்கள் அத்துமீறி அவள் இடையைத் தழுவ, திரும்பி அவன் கைகளைப் பிடித்து, “கர்ணன் நான்…” என்று முடிப்பதற்குள் அவள் வார்த்தைகளை தன் இதழுக்குள் விழுங்கி இருந்தான்.

தாபமோ, தாகமோ… அவன் தான் அறிவான் அவள் இதழைச் சுவைக்கச் சுவைக்க, வேகம் அதிகமானதே தவிரக் குறையவில்லை, முதல் முத்தத்தில் மொத்தமாகத் துவண்டு போனாள்.

முதலில் தன்னிலைக்கு வந்தது விகர்ணனே, தான் செய்த செயலால், தலையில் அடித்துக் கொண்டு அவளைப் பார்க்க, அவனைப் பார்க்காமல் வேறெங்கோ பார்த்தபடி நின்றிருந்தாள்.

“தீரா, வெளியில போய் பேசிக்கலாம்.”

“கர்ணன், ஐ நீட் டு ட்ரெஸ் அப்!” என்றவளை அப்போது தான் பார்த்தான்.

சேலை ஆங்காங்கே கசங்கி மடிப்புக் கலைந்து இருந்தது. ஏனோ அவள் மீது காதல் கடந்து ஒரு மோகம் இன்று தலை தூக்குவதை உணர்ந்தான். எத்தனைப் பெண்களைக் கடந்து வந்திருக்கிறான், இப்படி ஒரு எண்ணம் வந்தது இல்லையே என்று மனம் கேள்வி கேட்க, முதல் முறை பதில் இல்லாமல் போனது அவனிடம்.

அவளை நெருங்கியவன், “யாரும் வரமாட்டாங்க, நீ டிரஸ் பண்ணு. நான் வெளியே இருக்கேன்.” என்று சென்று விட்டான்.

அந்த நினைவில் இருந்து வெளியே வந்தவளுக்கு, ‘அவனிடம் தான் நெருங்கியது அன்று தானே… அவனது காதலின் மற்றொரு பரிணாமம் தான் தாபம் என்று நினைத்தேனே, எல்லாம் பொய்யா? மோகம் கொண்டது தன் ஒருத்தி மேல் மட்டும் தானே!’ என்று மனம் அடித்துக் கொள்ள, அவள் மூளையோ அவன் உன்னை ஏமாற்ற நினைத்துத் தான் உன்னை நெருங்கினான். அன்று மட்டுமல்ல, கிடைக்கும் சந்தர்ப்பம் அனைத்திலும் என்று கூற வலிக்க ஆரம்பித்தது அவளுக்கு.

கடைசியாக அவர்கள் சந்தித்தபோது, அவன் கொடுத்த பரிசை ஆடை விலக்கிப் பார்த்தாள். தனக்கு வலி மட்டுமே கொடுத்தவனுக்குத் திருப்பித் தர முடிவெடுத்து நிம்மதியாகக் கண்ணை மூடினாள்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்