
அத்தியாயம் 2
“டேய் யார்ரா நீ….? ஹீரோ ஹோண்டால வந்தா பெரிய ஹீரோன்னு நினைப்பா உனக்கு? மரியாதையா விலகி போயிடு, இல்ல உன்னை அடிச்சு தூக்கி போட்டுட்டு போயிகிட்டே இருப்போம்.“
அங்கு நின்றிருந்த அந்த பைக்காரன், கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவன் போல, திசைக்கொருவராக அவர்களைப் பறக்க விட்டுக் கொண்டிருந்தான்.
அனைவரையும் அவன் அடித்து துவைத்துக் கொண்டிருக்கும் போதே, கார் ஒன்று வேகமாக அவர்கள் அருகே வந்து நின்றது.
அந்தப் பெண்ணை திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு, அவன் முன்னே நடக்க, அந்த யுவதியோ முகத்தை திருப்பியபடி கைகளை கட்டிக் கொண்டு அங்கேயே நின்றாள்.
அவள் நகராமல் இருக்கவே, தனக்கு அருகில் வந்து நின்ற காரின் பின்பக்க கதவை திறந்து, அவளை வேகமாக உள்ளே தள்ளி கதவை சாத்தினான் அந்த பைக்காரன்.
“எக்ஸ் க்யூஸ் மி ஜென்டில்மேன், எங்ககிட்ட இருந்து இவளை காப்பாத்தி, நீங்க மட்டும் தனியா அவளை தள்ளிட்டு போக பார்க்கறீங்களே, இது உங்களுக்கே சுத்த காவாலித்தனமா தெரியல…, அப்போ….நீங்களும் வில்லன் தானா?”
பேசியவன் வாயிலேயே இரண்டு மிதி விட்டவன், தனது பைக்கை அந்த காரின் பின்னே விரட்டினான்.
கார் நேராக ஒரு பில்டிங்கின் பின்புறம் உள்ள, கதவின் முன்பு சென்று நின்றது. கதவு திறந்த பிறகு காரை தொடர்ந்து, பைக் ஆசாமியும் கட்டிடத்தினுள் நுழைய, கேட் கதவு உடனே மூடிக் கொண்டது.
டிரைவர் சீட்டில் இருந்து வெளியே இறங்கிய மாலினி, ஹெல்மெட் ஆசாமியின் முன்பு வந்து நின்றாள்.
“உதய் அந்த சுகந்தா ஓவரா பண்றா, கார்ல இருந்து இறங்க மாட்டேன்னு ரொம்பத் தான் அடம்பிடிக்கிறா?”
“ அப்படியா… மேடம் இறங்க மாட்டேன்னு சொன்னா வேற என்ன பண்றது?
சரி காரை திரும்பவும் அந்த ரவுடி பசங்களை அடிச்சுப் போட்ட இடத்துக்கே திருப்பு, அவனுங்க கைலையே பத்திரமா ஒப்படைச்சிடுவோம்.”
அடுத்த நிமிடம் காரில் இருந்து வேகமாக வெளியே இறங்கியவள், முதலில் தனது தலையில் மாட்டி இருந்த விக்கை கழட்டி பைக்காரன் மேல் வீசினான்.
ஆம் அவன் சுகந்தன் அவனது பெற்றோர்களுக்கு கந்தன், ஆனால் அவனது நண்பர்களுக்கோ சுகந்தா. தற்போது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தி வரும் கம்பெனியில் மெயின் ஆர்டிஸ்ட் அவன் தான்.
“ஏன்டி என்னை மொத்தமா காவு கொடுக்கறதுன்னே முடிவு பண்ணிட்டீங்களா? கொஞ்சம் விட்டிருந்தா அந்த பன்னாடைங்க என்னை பிராண்டி எடுத்திருப்பானுங்க.”
சிரித்தபடியே தனது ஹெல்மெட்டை கழட்டினாள் உதயநிலா, இவர்களது ஒவ்வொரு வேலைக்கும் மூளையாக செயல்படுபவள்.
“அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாதுடா மச்சி, அது தான் நாங்க இருக்கமே, உன்னை அப்படியே விட்டிடுவோமா என்ன?”
“ஆமா நீங்க இருக்கீங்க தான், என் சோலியை முடிக்கிறதுக்கு, அந்தப் பரதேசி கதிரவன், ஒரு சரியான பொம்பள பொறுக்கி. நியாயம் கேட்க போன என்னை அடைச்சு வைச்சிட்டான். நல்லவேளையா நீங்க என் செல்போன் சிக்னல் வச்சு கண்டுபிடிச்சீங்க.
அவனோட பிரெண்ட்ஸ் அவனை விட பொறுக்கிங்களா இருக்கறானுங்க. ஜஸ்ட் மிஸ்ல மறுபடியும் அவனுங்க கிட்ட இருந்து தப்பிச்சு வந்திருக்கேன்.”
மாலினி அவன் தலையில் தட்டி,
“டேய் லூசு உன்னை யாருடா சைடு கேட் வழியா, வெளிய வரச் சொன்னது. ப்ளான் படி நாங்க பின்னாடிப் பக்கம் தான், உனக்காக வெயிட் பண்ணிகிட்டு இருந்தோம். நீ எகிறி குதிச்சு ஓடினது கல்யாண மண்டபத்தோட சைடு சுவர்.”
“ போடீங்க… நானே உசுரை காப்பாத்திக்க ஓடிகிட்டு இருக்கேன், இதுல சைடு எது, பேக் எதுன்னா பார்த்துக்கிட்டு இருப்பேன்.
இனிமே இந்த மாதிரி ப்ராஜெக்ட்ல நான் நடிக்க மாட்டேன் உதய், இவனுங்களை நம்பி பொண்ணு வேஷம் கூட போட முடிய மாட்டேங்குது.”
“உனக்கே தெரியுது இல்லடா, பொண்ணு வேஷம் போட்டதுக்கே இப்படி, இதுல நாங்க அவங்ககிட்ட சிக்கினா அவ்வளவு தான். தற்காப்பு கலை தெரிஞ்சிருந்தாலும் கண்மூடித்தனமான தைரியம் எப்பவுமே கை கொடுக்காது.
வேகத்தோட கொஞ்சம் விவேகமும் இருக்கனும். அதனால தான் இந்த மாதிரி ப்ராஜெக்ட்க்கு எல்லாம், நான் உன்னை அனுப்பறேன்.
அதோட இது தான் நம்ம கடைசி ப்ராஜெக்ட், நீ இதை மறந்துட்டயா என்ன? இனி இந்த எண்டர்டெயின்மெண்ட் இல்லாம, எப்படி தான் இருக்கப் போறமோ?
சரி சரி வேஷத்தை களைச்சுட்டு சீக்கிரம் உள்ள வா, அப்பறம் மாலினி அந்த கல்யாணப் பொண்ணு மஞ்சு, பேலன்ஸ் அமௌண்ட்டை ட்ரேன்ஸ்பர் பண்ணிட்டாங்க. அவங்க போன் பண்ணா, அந்த பொறுக்கிங்கக்கிட்ட சுகந்தா மாட்டினதை, சரியான நேரத்துல நமக்கு சொன்னதுக்கு ரொம்ப நன்றின்னு சொல்லிடு. அதோட கடைசி நேரத்துல நல்லபடியா நடிச்சு, இந்த கல்யாணத்தை நிறுத்த உதவி செஞ்ச, அவங்க ரிலேஷன்க்கும் நம்ம சார்பா நன்றி சொன்னோம்னு சொல்லிடு.”
தனது கருப்பு சூட்டை களைந்தவள், இன்னும் சுகந்தன் அவளை முறைத்துக் கொண்டு நிற்பதைக் கண்டு, கழட்டிய உடையை அவனை நோக்கி வீசினாள்.
“ டேய் வர்ற க்ளைன்ட் நீ நிக்கிற போஸை பார்த்துட்டு, இது அன்றில் மேட்ரிமோனியா, இல்ல வேற மாதிரி இடமான்னு கேட்டிட போறாங்க டா, போய் தாவணியவாச்சும் ஒழுங்கா போட்டுட்டு வந்து தொலை.”
“ அது எங்க என்கிட்ட இருக்கு…? அந்த தாவணியைத் தான் அவனுங்க அப்பவே உருகிட்டானுங்களே, நல்லவேளையா சரியான நேரத்திற்கு நீங்க வந்தீங்க இல்லைன்னா என் நிலைமை…”
“வேற என்ன சோலிக்கே பீச்சே கியா கே தான்.”
சொல்லி விட்டு மாலனி ஓட்டம் எடுக்க, சுகந்தன் அவளை துரத்திக் கொண்டு உள்ளே ஓடினான்.
சிரித்துக் கொண்டே நிலா அவர்கள் பின்னே செல்ல முனையும் போது, அவள் அன்னையிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது.
“சொல்லுங்கம்மா டாக்டர் செக்கப் முடிஞ்சுதா?அவர்கிட்ட எல்லா மெடிக்கல் சர்டிபிகெட்லையும் கையெழுத்து வாங்கிட்டீங்க தானே?
நானே மதியம் போல கூட்டிட்டு போறேன்னு எவ்வளவு முறை சொன்னேன்? ஆனா நீங்க என் பேச்சை காதுலயே வாங்காம அப்பாவோட தனியா கிளம்பிட்டீங்க…”
“ஆமா நீ வந்து கூப்பிட்டு போனா, நாங்க அர்த்த ராத்திரி தான் செக்கப்பை முடிக்க முடியும். சும்மாவே நீ வீட்டுக்கு லேட்டா தான் வருவே, இன்னைக்கு ஏதோ முக்கியமான வேலைன்னு சொல்லிட்டு நேரத்துலயே வேற கிளம்பி போயிட்ட, உன்னை நம்பி வீட்ல உட்காந்தா, எப்போ சர்டிபிகேட்ல எல்லாம் கையெழுத்து வாங்கறது?”
“சரி சரி டாக்டர் என்ன சொன்னார்? அப்பாவால இந்த கண்டிஷன்ல டிரேவல் பண்ண முடியுமா? எந்த டாகுமெண்ட்டையும் மறக்கலையே? “
“ அதெல்லாம் நான் கரெக்டா வாங்கிட்டேன். மாப்பிள்ளை ஆதிரன் இப்ப தான் கூப்பிட்டார், பிளைட் ஏறிட்டாராம்.
உனக்கு ரொம்ப நேரமா ட்ரை பண்ணினாராமே, நீ ஏன் போனை எடுக்கல?”
“அது… கொஞ்சம் முக்கியமான வேலையில இருந்தேன் ம்மா, அது தான் அட்டன் பண்ண முடியல, இப்ப கூப்பிட்டு பேசிக்கிறேன்.”
“உதயா என்ன பழக்கம் இது? எவ்வளவு தான் முக்கியமான வேலையாய் இருந்தாலும், உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவர் கூப்பிடும் போது, அதுவும் இன்னைக்கு ஆன் சைட்ல இருந்து இந்தியாவுக்கு வர்றாரு.
அவரோட பேசுறதை விட உனக்கு வேற என்ன முக்கியமான வேலை வந்திடப் போகுது. மேட்ரிமோனி வெச்சு நடத்தற நீயே, இப்படி பொறுப்பில்லாம நடந்துக்கிட்டா, இது நல்லாவா இருக்கு?”
“ம்மா… போதும் போதும், உங்க மாப்பிள்ளையை நான் என்ன புதுசா வா பார்க்க போறேன், சின்ன வயசுல இருந்து என்னோடவே வளர்ந்தவர் தானே. இவ்வளவு நாள் அவரை பேர் சொல்லி தானே கூப்பிட்டீங்க, இப்ப என்ன அவரு இவருன்னு மரியாதை வேண்டி கிடக்கு?
நான் எவ்வளவு சொன்னாலும் அவரை தான் நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னீங்க, சரின்னு உங்க இஷ்டத்துக்கு விட்டுட்டேன்.
இப்போ அப்பாவுக்கு உடம்பு சரியில்லாத நிலைமையிலும், எங்களுக்கு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டு தான், அவருக்கு ஆபரேஷன் பண்ணுவேன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.
இதுல உன் மாப்பிள்ளை வர்றான்னு, நான் இங்க இருக்குற என்னோட வேலை எல்லாம் விட்டுட்டு, அவரோட போன் பேசிகிட்டு இருந்தா, என் மேட்ரிமோனியை மொத்தமா இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான். “
“அப்போ நீ அந்த வேலையை விட்டுடு, முழு நேரம் மாப்பிள்ளையை மட்டும் பார்த்துக்குவியாம். எப்படி இருந்தாலும் இன்னும் ரெண்டு வாரத்துல, அந்த ஆபீஸை உன் ப்ரெண்டுங்க கைல கொடுத்துட்டு, எங்க கூட வெளிநாட்டுல வந்து செட்டில் ஆக போறவ தானே?”
“ம்மா… இப்ப எதுக்கு போன் பண்ணிங்க? அதை மட்டும் சொல்லுங்க.”
“ சரி சரி… மாப்பிள்ளை எப்படியும் நாளைக்கு மதியம் வந்திடுவேன்னு சொன்னாரு. அதனால நாளைல இருந்து வீட்ல இருக்கிற வழியை பாரு. ”
“இங்க பாருங்க நீங்க சொன்னபடியே நீங்க பார்த்த மாப்பிள்ளைக்கு தான் நான் கழுத்தை நீட்டப் போறேன்.
கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி எல்லாம் பண்ணா, நான் கல்யாணமே வேண்டாமுன்னு வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன் ஜாக்கிரதை.”
“நீ செஞ்சாலும் செய்வ, இதுக்குத் தான் அப்பவே சொன்னேன் உங்க அப்பாகிட்ட, கல்யாணம் பேசி முடிச்ச உடனே அவளை வீட்ல இருக்க சொல்லுங்கன்னு, எங்க கேக்குறாரு.”
“இப்ப இதை சொல்லத் தான் எனக்கு கூப்பிட்டீங்களா? மண்டைல ஏத்திக்கிட்டேன், அப்போ நான் போனை வைச்சிடவா…”
“அட இரு நான் சொல்ல வந்ததை இன்னும் சொல்லவே இல்லயே, அது…வந்து…”
தனது அன்னை சற்று தயங்கி இழுத்துப் பேசுவது கண்டு,
“என்னாச்சு ம்மா… இவ்வளவு நேரமும் படபட பட்டாசா வெடிச்சுகிட்டு இருந்தீங்க, இப்ப என்னாச்சு? வீட்டுக்கு வரும் போது, உங்க மாப்பிள்ளைக்கு பிடிச்ச ஐட்டம் ஏதாவது, ஸ்பெஷலா வாங்கிட்டு வரணுமா என்ன?”
“ அதெல்லாம் நான் வீட்டுலயே செஞ்சு கொடுத்துப்பேன்… அது… இன்னைக்கு ஈவினிங் ஆறு மணிக்கு, உன்னால ராம் ஜுவல்லரிக்கு வர முடியுமா? அப்பா உனக்காக கல்யாணத்துக்கு நகை பார்க்கணும்னு சொன்னாரு.”

