
தமிழ் அவனை அமைதியாகப் பார்க்க,
“இது நமக்கான வாழ்க்கை, விழி மா… பொறுமையா நிதானமா நம்ப தான் உட்கார்ந்து பேசி முடிவு எடுக்கணும். எதை எதையோ யோசிச்சு, பேசிக் கிட்டத்தட்ட ஒரு வருஷத்தை இழந்து நிற்கிறோம். உனக்கு இதெல்லாம் நான் சொல்லித் தான் புரியனுமா டி” என்று அவளது கண்ணை உற்று நோக்கிக் கொண்டு சொல்ல,
அவனைப் பார்த்து லேசாகச் சிரிக்க செய்தாள்.
அவளது கண்களும் சேர்ந்து சிரிக்க, அவளது கண்ணையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
“என்ன மாமா பண்ற? அந்தப் பக்கம் திரும்பு. எனக்கு ஒரு மாதிரி இருக்கு, இப்படிப் பார்க்காத” என்றாள்.
“கண்ணைத் தாண்டி பார்க்கச் செஞ்சேன். என்னவோ என் பார்வை வேற எங்கயோ போன மாதிரிப் பேசுற” என்றான் லேசான சிரிப்புடன்.
“நீ வர வர தப்புத் தப்பா பேசுற” என்று சிரித்தாள்.
அவளது தாடையில் லேசாகக் கிள்ளிவிட்டு, “என் பொண்டாட்டிகிட்டத் தப்புத் தப்பா பேசினா தப்பு இல்லடி” என்று அவளது தோளில் சாய்ந்தான்.
“அது சரி, தப்பு இல்ல தான். யாரு இப்போ தப்புன்னு சொன்னது?” என்று சிரித்துவிட்டு,
“மாமா, நாளைக்குக் கோவிலுக்குப் போயிட்டு எங்கே போகலாம்? இன்னைக்கு நீங்க எங்க போக முடிவு பண்ணி இருந்தீங்க? என்னை வெளிய கூப்பிட்டீங்க இல்லையா?” என்று கேட்டவுடன் அவனுக்கு இவ்வளவு நேரம் இருந்த சந்தோஷம் மொத்தமும் ஒரே அடியாகக் குறைந்தது போல் உணர்ந்தான்.
முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு, “ஆமாம் நான் கூப்பிட்ட உடனே வந்துட்ட பாரு” என்றான்.
“சரி சரி, கோபப்படாத மாமா” என்று அவனது தாடையைப் பிடித்துக் கொஞ்சிக் கொண்டே கேட்க,
“ஆமா, நீ மட்டும் கோபப்படலாம். நான் கோபப்பட்டால் மட்டும் உனக்கு வலிக்குமோ?” என்றான்.
“சரி விடு, சின்னப் புள்ள மாதிரி எதுக்கெடுத்தாலும் மூஞ்சைத் தூக்கி வச்சுக்காத மாமா, சொல்லு” என்று கொஞ்ச,
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லடி” என்று சிரித்து விட்டு எழுந்தான்.
“என்னை இங்க உக்கார வச்சுட்டு நீ எங்க போற? யோவ் மாமா” என்றாள்”.
அவளை ஒரு நொடி திரும்பி முறைத்துவிட்டுப் பிறகு சிரித்துக் கொண்டே “வாய் கூடிப் போச்சுடி” என்று அவள் நெற்றியோடு நெற்றி குனிந்து முட்டிவிட்டு,
“இருடி, எங்கையும் போல” என்று விட்டு பீரோவைத் திறந்து இரண்டு கவர்களை எடுத்துக் கொண்டு வந்தான்.
“நீ வரும்போது உன் கையில் எதுவுமே இல்லையே மாமா”.
“நான் வந்த பிறகு தான நீ வந்த, இன்னைக்கு லேட்டா தான அதும் வந்த” என்றாள்.
“அப்பா சாமி, அப்பயும் இந்தக் கவர்ல என்ன இருக்குன்னு பிரிச்சிப் பார்க்க மாட்ட. எத்தனை கொஸ்டின்டி. பொறுமையா கேளு.”
“சரி நான் கேட்டதுக்கு எல்லாம் பதில் சொல்லுங்க, முதல்ல” என்றாள்.
அவளைச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டே “நான் மதியமாவே வந்துட்டேன். மனசு சரி இல்ல, ஒரு மாதிரியா இருந்துச்சு. அதனால லீவ் சொல்லிட்டு வந்துட்டேன்…”
“என்னால தானே” என்று கேட்டாள்.
“அப்படி எல்லாம் சொல்ல முடியாதுடி விடு” என்றான்.
“எனக்கு தெரியும்.”
“கொஞ்ச நேரம் அமைதியா இரு, சந்தோஷமா இருக்கணும்னு ஆசைப்பட்டா… திரும்பத் திரும்ப அதையே பேசுற”.
“அப்ப நான் பேசுறது உனக்குச் சந்தோஷமா இல்லையா?”
“அடியே” என்று அவள் தலையில் லேசாகக் கொட்டி விட்டு அவனாகவே அவளது அருகில் உட்கார்ந்து அந்தக் கவரை அவளது மடியில் வைத்தான்.
“பிரிச்சுப் பாரு” என்றான்.
“சரி” என்று ஒரு சில நொடி அவனைப் பார்த்துவிட்டுப் பிரித்துப் பார்க்க ஒரு கவரில் இரண்டு துணி பாக்ஸும், இன்னொரு கவரில் நகை பாக்ஸும் இருக்கச் செய்தது.
முதலில் துணியைப் பிரித்துப் பார்த்தவள், தனக்குப் பிடித்த ஆகாய வண்ணப் பட்டுப் புடவையும், அதுக்கு மேட்ச் ஆக பிளவுஸ்சும் தைத்திருப்பதையும் பார்த்தாள்.
சில நொடி அவனைப் பார்த்து விட்டு, “பிளவுஸ் எப்படி?” என்று கேட்டாள்.
“அது ரெடிமேட் பிளவுஸ், அதை முதலில் ஒழுங்காப் பாரு” என்றான்.
அவனை முறைத்து விட்டு “ரெடிமேட் பிளவுஸ் கூட நீ எப்படி வாங்கினா?” என்று கேட்டாள்.
அவன் அவளை முறைக்க,
பின், சிரித்துக் கொண்டு சரி சரி என்று விட்டு அமைதியாகி விட்டாள்.
“அப்போ கூட இது நல்லா இருக்கா இல்லையான்னு யோசிக்க மாட்ட. இந்த பிளவுஸ் எப்படி வந்துச்சுன்னு கொஸ்டின் பண்ற இல்ல?” என்றான்.
“விடு மாமா, வாழ்க்கைனா இப்படித்தான் இருக்கும். இதெல்லாம் சகஜம் தான். என் மாமாவுக்கு எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு தெரியாமலா போயிடும். எனக்குப் பிடிக்காத விஷயத்தை என் மாமா பண்ணிடுவாரா?” என்று அவனது தோளில் சாய,
அவனுக்குக் கண்கள் கலங்கியது.
“ஆனாலும், உனக்கு என்ன புடிச்சிருக்குன்னு எனக்குத் தெரியலையேடி” என்று குரல் கம்மச் சொல்ல,
அவனைப் பார்த்து முறைத்துவிட்டுப் பிறகு சிரித்துக் கொண்டே, “அதான் இப்போ புரியுது இல்லை மாமா, அதுவே போதும்” என்று அவனது நெற்றியில் இதழ் பதித்து விட்டு லேசாக விலகி உட்கார்ந்தாள்.
அடுத்து அவனது சட்டையைப் பார்க்க, அது வேஷ்டி சட்டையாக இருக்க, “ஏன், வேஷ்டி சட்டை?” என்று கேட்டாள்.
“முதல் வருடக் கல்யாண நாள்டி. அதுமட்டும் இல்லாமல் அத்தை சொன்ன மாதிரி நம்ம எங்கயுமே வெளிய போல. நானே நாளைக்கு நம்ம கோவிலுக்குப் போலாம்னு பிளான் பண்ணி இருந்தேன். அத்தை, மாமா வந்து குலதெய்வக் கோவிலுக்குப் போகலாம். அதுவும் குடும்பத்துடன் சொன்னதால ஓகேனு என் மனசைத் தேத்திக்கிட்டேன், அவ்வளவுதான்.
நமக்கான டைம் எப்பயும் இருக்கு தான, அதுவே போதும்” என்று சிரித்தான்.
அடுத்து இன்னொரு கவரில் இருக்கும் நகை பாக்ஸை ஓபன் செய்ய,
அதில் இரண்டு மோதிரமும், ஒரே போல் ஒரு ஒரு பவுனில் இரண்டு செயினும் இருந்தது.
அவனை முறைத்துவிட்டு “இப்போ எதற்கு இவ்வளவு செலவு?’ என்றாள்.
“விழி, தேவையில்லாம எந்தச் செலவும் நான் செய்யல இதுவரைக்கும். தேவையில்லாத செலவு இதுவரை நான் செஞ்சு இருக்கேனா? மொத்த சம்பளத்தைக் கூட நான் வீட்ல மாமாகிட்ட தானே கொண்டு வந்து தரேன்” என்றான்.
தமிழ் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
“சரி சரி உன் கைல தான் கொடுத்து இருக்கேன், போதுமா.”
“அப்பக் கூட உனக்கு ஒரு நாள் கூடத் தோணுனதே இல்லையா மாமா?” என்று கேட்டாள்
“சத்தியமாகத் தோணலடி, அப்பக் கூட உன் அண்ணன் வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லல.”
“நீ அவர்கிட்ட ஒரு பொண்ண லவ் பண்றேன்னு சொன்னியா?”என்றவுடன் அவளது வாயிலே அடித்தான்.
“சரி சரி விடு, தெரியாம கேட்டுட்டேன்” என்று சிரித்தாள்.
“பர்ஸ்ட்ல இருந்து ஆரம்பிக்காத விழி” என்று சொல்லிவிட்டு “நல்லா இருக்கா?” என்றான்.
“நல்லா இருக்கு. ஆனா அந்தச் செயின்?” என்றாள்.
“எப்பயும் போட்டுக்க தான். எப்பவும் நம்ம கழுத்தில் இருக்கிற மாதிரி போட்டுக்கலாம். விழி மா, தாலி கட்டும்போது நீ வேற ஒரு மனநிலையில் இருந்த, நானும் வேறு ஒரு மனநிலையில் இருந்தேன்.
அதை இனி மாற்றவும் வேணாம். மாத்த முயற்சி செய்யவும் வேண்டாம். இனி தான் நமக்கான வாழ்க்கையோட ஆரம்பம்னு யோசிச்சுக்கலாமே. ப்ளீஸ்டி” என்றான்.
அவனைப் பின்பக்கம் இருந்து கட்டிக்கொண்டு சிரித்து விட்டு, “சரி மாமா” என்று எழுந்து அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு,
“சரி இப்பவே 12 மணிக்கு மேல ஆயிடுச்சு. காலையில சீக்கிரம் எழுந்தா தான் சரியா இருக்கும், தூங்கலாம்” என்றாள்.
“என்ன தூங்கணுமா?” என்றான்.
அவனை அமைதியாக ஒரு சில நொடி பார்த்துவிட்டு, “வேற என்ன யோசிச்ச?” என்றாள்.
உதட்டுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு, “கேடி, நீ யோசிக்கிற மாதிரி எல்லாம் எதையும் யோசிக்கல… அதப் பத்தி என்னோட யோசனை போகல. நீயாவே தப்புத் தப்பா யோசிக்காத” என்றான்.
“நான் எதை யோசிச்சேன்னு உங்களுக்கு வந்து யார் சொன்னா?”.
“என் பொண்டாட்டி பத்தி எனக்குத் தெரியாதா?” என்று சிரித்தான்.
“அது சரி, பொண்டாட்டியாம்ல, ஒரு வருஷமா இந்த வீட்ல, இந்த ரூம்ல, நீ கட்டின தாலியை தான் சுமந்து கிட்டு இருக்கேன். ஆனாலும், இன்னைக்கு தான் நான் உனக்குப் பொண்டாட்டின்னு தோணி இருக்கு” என்று சிரித்தாள்.
அவள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு, “கட்டில்ல வந்து படு விழி, எனக்கு ஒரு மாதிரி இருக்குடி. ஒரு வருஷமா கீழே படுத்து இருக்க” என்றான்.
“நாளைக்குப் படுக்கிறேன் மாமா, இன்னைக்கு இங்கேயே படுக்கிறேன்” என்றாள்.
அவளது கண்ணை உற்றுப் பார்த்தவன் எதுவும் சொல்லாமல், “சரி டி” என்று விட்டு அவளது அருகிலே சிறிது இடைவெளி விட்டுக் கீழேயே படுத்தான்.
“மாமா நீ போய்…” என்று சொல்லும் பொழுதே அவளது வாயில் கை வைத்தவன்,
“நீ தான் மேல வர மாட்டேன்னு சொன்ன. நான் அமைதியா விட்டுட்டேன்ல. என்னைக் கீழே படுக்காத என்று சொல்லாதே” என்று விட்டு அமைதியாக அவளது நெற்றியோடு நெற்றி முட்டிவிட்டுப் படுத்துக் கொண்டான்.
அவன் படுத்தவுடன் வேகமாக லைட்டை நிறுத்திவிட்டு வந்தவள் அவன் நெஞ்சில் தன் தலையைச் சாய்த்துப் படுத்துக் கொண்டாள்.
“கேடி” என்று விட்டுத் தன் கை விட்டுப் போன பொருள் இப்போது தன் கைவந்து சேர்ந்த உணர்வை உணர்ந்த ருத்ரன், தனது விழியைக் கட்டியணைத்துக் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்தான்.
அசதியிலும், சந்தோஷத்திலும் தமிழும் தூங்கி இருந்தாள்.
விடியற்காலை 5 மணி போல் அவர்கள் ரூம் கதவு தட்டப்பட்டது.
கண்ணைக் கசக்கிக் கொண்டே எழுந்த விழி நேரத்தைப் பார்த்துவிட்டு, ‘அச்சோ, இவ்ளோ நேரம் தூங்கிட்டோமா? எல்லாம் இந்த மாமாவால’ என்று தனது மாமாவைப் பார்த்துச் சிரித்து விட்டு,
அவனது நெற்றியில் இதழ் பதித்துவிட்டுத் தன்னை ஒரு முறை சரி பார்த்தவள், முடியைச் சரி செய்து கொண்டே வந்து கதவைத் திறக்க, தனா முறைத்துக் கொண்டு நின்றாள்.
“என்னடி?” என்று கேட்க,
“மணி என்ன ஆகுது அண்ணி? ஆறு மணிக்கு அத்தையும், மாமாவும் கோயிலுக்குக் கிளம்பி இருக்கச் சொன்னாங்க. இப்பவே மணி அஞ்சு…”
“சாரி டி தூங்கிட்டேன்” என்றாள் தமிழ்.
“நைட் லேட்டா படுத்தா தூங்காம வேற என்ன செய்வீங்க? சீக்கிரம் குளிச்சிட்டு வரீங்களா?” என்றாள்.
தனது அத்தை மகளைப் பார்த்துச் சிரித்து விட்டவள், “சரி தனா, நீ போயிட்டுக் குளி, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு” என்றாள்.
“வேலையெல்லாம் நாங்க பாத்துட்டோம். நான் குளிக்கவும் செஞ்சிட்டேன், நீங்க குளிச்சிட்டு வாங்க” என்றாள்.
தனாவை மேல் இருந்து கீழ் வரை பார்த்தவள். அவள் தலையில் துண்டு கட்டி நைட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
“அண்ணி, என்னை இப்படி மேல இருந்து கீழவரை பார்க்கறத விட்டுட்டு அண்ணனை எழுப்பி ரெண்டு பேரும் குளிச்சிட்டு வந்தீங்கன்னா கரெக்ட்டா இருக்கும். அப்புறம் எனக்குத் தெரியாது. அத்தை மாமா வந்ததுக்கு அப்புறம், அதுவும் உங்க தங்கச்சி வந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்ல” என்று சிரித்து விட்டாள்.
“உன் பிரண்டைப் பற்றி உனக்குச் சொல்லவா செய்யணும்?” என்று சிரித்துவிட்டுத் தமிழ் வேகமாக ரூமுக்குள் வந்தாள்.
அவனை எழுப்பலாம் என்று எண்ணினாள்.
‘இல்ல, நம்ம குளிச்சிட்டு வர வரைக்கும் அவர் தூங்கட்டும்’ என்று எண்ணி விட்டு எதுவும் பேசாமல் குளியல் அறைக்குள் புகுந்து இருந்தாள்.
குளித்துவிட்டு தலையில் துண்டு கட்டிக்கொண்டு வெளியில் வந்தவள், ‘எந்தப் புடவை கட்டுவது?’ என்று புரியாமல் தனது தாய் தந்தை எடுத்துக் கொடுத்ததைக் கட்டுவதா? இல்லை, தன் மாமா தனக்காக ஆசையாக வாங்கிக் கொண்டு வந்த புடவையைக் கட்டுவதா?’ என்று புரியாமல் ஒரு சில நொடி தவித்துக் கொண்டு நிற்க,
அவள் குளிக்கக் செல்லும் போதே எழுந்து இருந்த ருத்ரன் அவள் வரும் வரை அமைதியாகப் படுத்திருந்தான்.
அவள் ரொம்ப நேரமாக இரண்டு புடவையையும் பார்த்துக் கொண்டு யோசனையில் இருப்பதை ஒற்றை விழியில் பார்த்தவன்,
அவளது அருகில் வந்து அவளது தோளில் தன் தாடையைப் பதித்து விட்டு, “என்ன விழி, பலத்த யோசனை போல?” என்றான்.
“நீ எப்ப மாமா எழுந்த?” என்றாள்.
“நீ குளிக்கப் போகும் போதே நான் எழுந்துட்டேன். இப்போ உனக்கு என்ன யோசனை? அதைச் சொல்லு” என்றான்.
“நேரம் ஆகுது மாமா நீ போய் குளிச்சிட்டு வா” என்றாள்.
“தமிழ்” என்று அவன் அழைக்க,
அவன் குரலில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்தவள்,
“இல்ல மாமா, நீ எடுத்துக் கொடுத்த புடவையைக் கட்டட்டா, இல்ல அம்மா எடுத்துக் கொண்டு வந்த புடவையைக் கட்டட்டானு யோசனையா இருக்கு. அதான்…” என்றாள்.
“உனக்கு எதைக் கட்டணும் என்று தோணுதோ, அதைக் கட்டு. இதுக்கு எதுக்கு இவளோ யோசிச்சிகிட்டு இருக்க?” என்று அவளது நெற்றியோடு நெற்றி முட்டிவிட்டுக் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான் ருத்ரன்
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Interesting