Loading

தழல் – 5

‘வானவில் அறக்கட்டளை’ என்ற பெயர் பலகை வானளாவி வாசலை அலங்கரித்து நின்றது. கோவையில் பெயர் சொல்லும் அறகட்டளை அது. மதியிறுக்கம் (AUTISM) மற்றும் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான மருத்துவமனை, சிறப்பு  பள்ளி மற்றும் காப்பகம் என ஒருங்கிணைந்த கட்டிடம் அது. இன்னபிற எல்லா வகையிலும் தன்னால் இயன்ற அத்தனை உதவிகளையும் அவ்வகை குழந்தைகளுக்கு செய்து வருகிறது அந்த அரக்கட்டளை.

அதன் நிர்வாகி அனுராதா முத்துகிருஷ்ணன். தமிழகத்தின் தலை சிறந்த மனநல மருத்துவர் மற்றும் உளவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இப்போது மதியிறுக்கம் வருவதற்கான அடிப்படை காரணிகள் குறித்த தீவிர ஆராய்ச்சியில்  ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சியாளர்.

ஆரல்மொழி, மனநல மருத்துவர் (MBBS., M.D Psychiatrist). அனுராதாவின் தலை சிறந்த முதன்மை மாணவி. அவர்  ஆராய்ச்சியில் உதவியாளர். இந்த அரக்கட்டளையின் செயலாளர். உள நோயாளிகளுக்கான மருத்துவர்.  இங்கே இருக்கும் மாணவர்களுக்கான பயிற்சியாளர்.

ஆராவை நினைத்து எப்போதும் ஒரு பிரம்மிப்பு உண்டு அனுராதாவுக்கு. நாளுக்கு நாள் அவளின் அபார வளர்ச்சியை அருகிலிருந்து துல்வியமாய் கண்டவர் அவர். ஏன் அவளை வார்த்தெடுத்தவரும் அவரே தான்! குன்றின் மேலிட்ட விளக்காய் எந்நிலையிலும் அவளின் திறமை ஒளிரும் என்பதில் அவருக்கு துளியும் ஐயமில்லை. அதன் தூண்டுகோலாய் தான் இருந்ததில், இன்றும் இருப்பதில் நெஞ்சை முட்டும் பெருமிதம் அவருக்கு.  அனுராதாவின் மாணவி ஆரல்மொழி என்பது போய் ஆரல்மொழியின் குரு அனுராதா என்று உலகம் பேசும் நாளுக்காய் வெகுவாய் காத்திருப்பவர். நிச்சயம் ஒருநாள் குருவை மிஞ்சிய சிஷ்யையாய் அவள் மிளிர்வாள் என்பதில் அவருக்கு எள்ளவும் சந்தேகமில்லை.

நடையில் வேகமிருந்தாலும் அவசரமில்லை அவளிடம். யுவாவின் அறையின் முன்னால் கையை பிசைந்துக் கொண்டு நின்றவர்களை தூரத்தில் இருந்தே, கண்டனப் பார்வை பார்த்தபடி வந்துக் கொண்டிருந்தாள் ஆரா.

அவள் வினவும் முன்னமே, “சாரி… சாரி ஆரா… யுவா உள்ள போய் லாக் பண்ணிகிட்டான்… எவ்வளவு கூப்பிட்டும் திறக்க மாட்டேங்கறான்…” என்ற நித்யாவின் குரலில் பெரும் பதற்றம். அவள் ஆராவின் உயிர் தோழி. மருத்துவம் பயில தொடங்கிய முதல் நாளில் ஆரம்பித்தது இருவரின் நட்பும். அரக்கட்டளையின் செயலாளர் என்ற கூடுதல் பொறுப்பை தவிர ஆராவுக்கும் நித்யாவுக்கும் இங்கே எவ்வித வித்யாசமும் இல்லை.

“ஸ்கூட்டிய கேட்டுக்கு வெளியவே நிறுத்துட்டு வந்துட்டேன்… எடுத்துட்டு வந்து உள்ள நிறுத்துங்க போங்க… அப்படியே அந்த வாட்ச்மேனையும் உடனே என்ன வந்துப் பாக்க சொல்லுங்க…” என்று பியூனிடம் சாவியை கொடுத்தவள், நித்யாவை முறைப்பதை நிறுத்தவில்லை.

அவன் அங்கிருந்து அகன்றதும், “இதுக்கு தான் உன்ன பின்னாடியே அனுப்பி வச்சேனா நான்..? அவன் கண்டிஷன் தெரிஞ்சும் உள்ள போய் லாக் பண்ணிகிட்டானு அசால்ட்டா சொன்னா என்ன அர்த்தம்… பேனிக் அட்டாக் வந்தா என்ன பண்ணுவ நீ…” என்றவள் கண்களை மூடி, கோபத்தை கட்டுபடுத்த முயன்றாள்.

“சாரி ஆரா… அப்படி எதுவும் தெரியல… கொஞ்சம் பயந்திருக்கான்… அவ்வளவு தான்…” தலை கவிழ்த்தபடி மெல்லிய குரலில் பதிலளித்தாள் அவள்.

“இத்தன பேர் இருக்கீங்க… எப்படி அவன் வெளிய வந்தான்..? இதான் நீங்க பொறுப்பா இருக்க லட்சணமா..?” இன்னும் காய்ந்தாள் அவள்.

“அவனுக்கு பர்ஸ்ட் கிளாஸ் நீ தானே..! நான் போகவும் உன்ன கேட்டுட்டே இருந்தான்… கொஞ்ச நேரத்துல வந்துடுவேனு சொல்லிட்டே தான் இருந்தேன்… கொஞ்ச நேரத்துல நீ வரலைங்கவும் உன்ன தேடி வெளிய ஓடி வந்துட்டான்… என்னால அவன கண்ட்ரோல் பண்ணவே முடியல… பியூன் பாத்துட்டு அவரும் கண்ட்ரோல் பண்ண ட்ரை பண்ணாரு… நாங்க கண்ட்ரோல் பண்ணறோம்ன உடனே எங்கள அடிக்க ஆரம்பிச்சுட்டான்… அத பாத்துட்டு தான் வேந்தன் சாரும் வந்தாரு… அவருக்கு கையில அடிபடலைனா ஒருவேளை கண்ட்ரோல் பண்ணிருப்பாரோ என்னவோ… எங்களையும் மீறி வெளிய ஓடி வந்துட்டான்…” என்றாள் நித்யா.

“அதனால… உன்மேல தப்பில்லைனு சொல்லற… அப்படிதானே…” என்றவளின் துளைக்கும் பார்வையில் தன்னால் அவள் தலை கவிழ்ந்தது.

“நான் அப்படி சொல்லைல… என்னால முடியலனு சொன்னேன்…”

“ஓ.கே… உன்னால முடியல… ஒருவேளை யுவாக்கு ஏதாவது ஆகி இருந்தா… அப்பவும் இப்படிதான் ரீசன் சொல்லீட்டு இருப்பீயா..? இதே இன்னொரு குழந்தையா இருந்தா இப்படி உன்னால ரீசன் சொல்லிட்டு இருக்க முடியுமா..? இல்ல… யுவாங்கறதால தான் இந்த அலட்சியமா..?” என்றவளின் பார்வையிலும் பாவணையிலும் அப்பட்டமாய் அவளை குற்றம் சாட்டும் தோணி.

“ஏய்… என்னடி பேசற நீ… நான் போய் யுவாவ…” என்றவளுக்கு குரலெல்லாம் நடுங்கிவிட்டது. நொடியில் கண்களும் கூட கலங்கிப் போயிருந்தது.

அவள் கலங்கி நிற்கும் காட்சி இவளையும் கூட வதைக்கிறது தான். ஆனாலும், ‘ஏதாவது ஒன்று தவறாய் நடந்திருந்தால்…’ என்று நினைக்கும் போது மற்றவை எல்லாம் பின்னுக்குப் போய் விடுகிறதே!

சில நொடிகள் அமைதியாய் அவளைப் பார்த்திருந்தவள், “இரண்டு பேரும் இங்கயே நின்னுட்டு இருந்தா… பசங்கள யார் பாக்கறது… போ… போய் முதல பசங்கள பாரு… ஆனாலும் செஞ்ச தப்புக்கு தண்டனை இருக்கு மறந்துடதா…” என்றாள் இறுதியில் சின்னதாய் கேலி இழையோடும் குரலில்.

“சரிதான் போடி…” என்றவள் வேகமாய் அங்கிருந்து கழுத்தை நொடித்துக்கொண்டு வேகமாய் கிளம்பிவிட்டாள்.

ஒருசில நொடிகள் மூடியிருந்த கதவின் மீதே பார்வை பதித்திருந்தவள், “யுவா… கதவ திற…” என்றாள் மெல்லமாய் தட்டியபடி.

அப்பக்கமிருந்து பதில் எதுவும் இல்லை என்றதும், “நீ கேட்ட ஆங்கில்ட் பிரஸ் செட் வாங்கிட்டு வந்திருக்கேன்… வெளிய வந்து வாங்கிக்கோ… வா யுவா… கூடவே உனக்கு பிடிச்ச டார்க்ட் சாக்லேட்டும் வாங்கிட்டு வந்திருக்கேன்… வேண்டாமா உனக்கு..?” என்றபடியே கைப்பையிலிருந்து ஓவியம் வரையும் அந்த தூரிகையை எடுத்து கதவில் தட்டிக் கொண்டிருந்தாள் ஆரா.

சில முறைகள் அவள் அழைத்தும், அவன் கதவை திறக்கவில்லை என்றதும், அவன் பயத்தின் அளவை துல்லியமாய் கணிக்க முடிந்தது அவளால். கதவின் இடைவெளி வழியே அந்த பொருட்களை அவன் அறையில் தள்ளியவள், “இங்கையே வைக்கறேன்… எடுத்துக்கோ யுவா… நான் மதியம் வரேன்…” என்றவளிடம் ஒரு பெருமூச்சு. இனி பதற்றம் தெளிந்து பயம் குறைந்து அவனாய் கதவை திறந்தால் தான் உண்டு. சில சமயங்களில் தொடர்ந்து இரண்டு நாட்கள் கூட கதவை திறக்காமல் இருந்திருக்கிறான்.

அவன் யுவபாரதி. ஆட்டிசத்தால் பாதிக்கபட்ட குழந்தை. ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகள் பயம் கொண்டால் வலிப்பு வர வாய்ப்புகள் அதிகம். அது தீவிரமாகும் பட்டத்தில் மரணம் நேரவும் வாய்ப்புண்டு. அதுவே ஆராவின் கோபத்திற்கு முதல் காரணம்.

இந்த அரக்கட்டளைக்கு வரும் போது அவனுக்கு இரண்டு வயதிருக்கும். அன்றிலிருந்தே அவனுக்கும் ஆராவிற்குமான உறவு தொடங்கிவிட்டது எனலாம். இன்னதென்று வார்த்தைக்குள் வரையறுக்க முடியாத ஒரு அபூர்வ உறவு அவர்களது. பெரிதாய் அவளை தேடி அவன் ஆர்பாட்டமெல்லாம் செய்யமாட்டான். வேலை நாட்களில் எல்லாம் ஆரா வந்துவிட்டாளா என்பதை ஒற்றை பார்வையில் உறுதிப்படுத்திக் கொண்டு தன்பாட்டில் தன்வேலையை பார்க்க தொடங்கி விடுவான். ஒருவேளை என்றாவது வர இயலவில்லை என்றால் அவனிடம் தான் முதலில் தகவல் சொல்லி செல்வாள். மற்றபடி அவன் அவளை இத்தனை தேடுவான் என்பதே இன்றைக்கு தான் அவளுக்கு தெரிந்திருக்கிறது.

அந்த பெரிய வரவேற்பரையில் கையை பிசைந்தபடி தவிப்புடன் நின்றுக் கொண்டிருந்தார் அந்த வாயிற்காவலர். அவரைக் கடந்து, தனது அறையை நோக்கி விரைந்தவளின் பின்னாலேயே, “மேடம்… மேடம்… சாரி மேடம்…” என பரிதாபமான குரலில் கெஞ்சியபடி அவளின் பின்னோடே ஓட்டமும் நடையுமாய் தொடர்ந்துக் கொண்டிருந்தார் அவர்.

குறிபிட்ட அந்த அறையை கடக்கும் போது, ஒரே ஒரு நொடி அவளின் நடையில் தேக்கம். மேசை மீது தூக்கி வைத்திருந்த கால்களை ஆட்டியபடியே, ஒற்றை விரலால் காதை அலட்சியமாய் குடைந்துக் கொண்டிருந்த வேந்தன் கண்ணாடி கதவுகளின் வழியே காணக் கிடைத்தான். அவன் செயலின் பிடித்தமின்மையை நொடியில் முகத்தில் காட்டிவிட்டு அவள் நகர்ந்திருந்தாலும், அவனும் அதை கவனிக்கதான் செய்திருந்தான். அதற்கு அடுத்த அறைதான் அவளது தனியறை. வேகமாய் அவள் உள்ளே நுழைய, அவர் வாயிலிலேயே தேங்கி நின்றார்.

“உள்ள வாங்க…” என்றபடியே அவள் சென்று தனது இருக்கையில் அமர, “சாரி மேடம்… இனிமே இப்படி நடக்காது… இந்த ஒரு தடவ மன்னிச்சுடுங்க மேடம்… ப்ளீஸ் மேடம்… தப்பு என்மேல தான்…” தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தவரை அவளின் ஒற்றை கேள்வி நிறுத்தி வைத்தது.

“டூயூட்டி டைம்ல எங்க போனீங்க…”

“அது வந்து மேடம்…” மேலே சொல்லாது தடுமாறினார் அவர்.

“ஒரே கேள்விய திரும்ப திரும்ப கேட்கற அளவுக்கு எனக்கு பொறுமையும் இல்ல… நேரமும் இல்லை…” என்றாள் தீர்கமாய் அவரை ஊடுறுவி விழித்தபடி.

தயங்கி தயங்கி தலைகுனிந்தபடியே அவர் ஏதோ சொல்ல வர, “ரொம்ப கஷ்டபட்டு யோசிச்சு பொய் எதுவும் சொல்ல வேண்டாம்… ஏன்னா நான் கண்டிப்பா வாசல இருக்க சிசிடிவி கேமராவ செக் பண்ணுவேன்…” என்றவளை கலவரமான முகத்துடன் பார்த்தார் அவர்.

அவர் பதிலெதுவும் சொல்லாது அமைதியாய் இருக்கவும், அவரை ஒருமுறை அழுத்தமாய் பார்த்தவள் பார்வை சுவர் கடிகாரத்தில் குறிப்பாய் பதிந்தது.

“சாரி மேடம்… எனக்கு ரொம்ப வேண்டபட்ட ஒருத்தர் வந்திருந்தார்… அவர்கூட பக்கத்துல இருக்க டீ கடை வரைக்கும் போயிருந்தேன்… பக்கத்துல தானே இருக்கு யாரும் வரதுக்கு முன்ன உடனே வந்துடலானு நினைச்சு தான் மேடம் போனேன்… அதுக்குள்ள இப்படி ஆகும்னு நினைக்கல… தப்புதான்… மன்னிச்சுடுங்க மேடம்…” என்றார் கெஞ்சும் தொனியில்.

“இன் கேஸ் டீயூட்டி டைம்ல ஏதாவது தவிர்க்க முடியாத சூழ்நிலைனா கேட்ட வெளிப்பக்கமா பூட்டிட்டு போங்கனு இங்க வேலைக்கு சேரும் போதே சொல்லி இருக்காங்க தானே…”

“ஆமான் மேடம்…” என்றவர் தயங்கி, “பக்கத்துல தானே…” என ஆரம்பிக்க,

“அக்கவுண்ட் டிப்பார்ட்மெண்ட்ல இந்த மாச மீதி சம்பளத்த வாங்கிக்கோங்க… கிளம்புங்க…” என்றாள் ஆரா அவரின் பேச்சை துண்டிக்கும் விதமாக.

“மேடம்… மேடம்… ப்ளீஸ் மேடம்… இந்த ஒரு தடவ மன்னிச்சுடுங்க மேடம்… சத்தியமா இனிமே இப்படி நடக்காது மேடம்…”

“திரும்ப என்ன சொல்ல வைக்காதீங்க… கிளம்புங்க…” என்றாள் உறுதியான குரலில் வாசல் புறம் கண்ணைக்காட்டி.

கண்ணாடி கதவின் மீது சாய்ந்து நின்றபடி, அவளைத் தான் ஊடுறுவி பார்த்துக் கொண்டிருந்தான் வேந்தன். இங்கே அவளுக்கான மதிப்பு, அவளின் அதிகாரம் சொல்லாமலேயே புரிந்தது. அந்த ஆளுமை கொஞ்சமே கொஞ்சம் பிடிக்கவும் கூட செய்தது.

அவள் அவனை முறைத்துப் பார்ப்பதை உணர்ந்தவன், அலட்சியமாய் தோளைக் குலுக்கிக் கொண்டான். அந்த காவலாளியின் தோளில் கைப்போட்டு இறுக்கிக் கொண்டவன், “அதான் பெரிய மேடமே சொல்லிட்டாங்களே… வாங்க போவோம்… என்னம்மோ இவங்கிட்ட மட்டும் தான் வேலை இருக்கற மாதிரி… இது இல்லைனா ஆயிரம் வேலை… விடுங்கண்ணே…” என்றபடியே அவரை அழைத்துக் கொண்டு வெளியேறியவனை, ஆராவோடு சேர்த்து அவரும் வித்தியாசமாய் பார்த்து வைத்தார்.

மெல்ல நெற்றியை நீவிவிட்டு கொண்டவளுக்கு தலை வலிப்பதைப் போலிருந்தது. காலையிலிருந்து மாறி மாறி உண்டாகியிருந்த  மன அழுத்தம், பெரும் சோர்வையும் தந்திருந்தது. மேசையில் அப்படியே தலைசாய்த்து படுக்க போனவளின் கவனத்தில் இப்போது தான் விழுகிறது அந்த குட்டி சதுர வடிவ பரிசுப் பொருள். நீல நிற பளபளப்பு தாள் சுற்றபட்டு பாங்காய் அவளின் எதிரே அமர்ந்திருந்தது அது.

யோசனையாய் அதை எடுத்து பார்க்க, மேலே அவளின் நாமம் மட்டும் தாங்கிய சிறு அட்டை. அதை பிரிக்க உள்ளே டைட்டன் நிறுவனத்தின் கைக்கடிகார பெட்டி. அந்த பெட்டியின் வடிவமைப்பும் நுணுக்கமுமே உள்ளே இருக்கும் பொருள் விலையுயர்ந்தது என்று சொல்லாமல் சொல்லியது.

அதை திறக்கும் போதே அவள் கைகளில் மெல்லிய நடுக்கம். கருப்பு வார் வைத்த, தங்க நிறத்தில் நீள் வட்ட வடிவ டையலை உடைய பார்ப்பதற்கு சாதரண தோற்றம் கொண்ட கைக்கடிகாரம் அது. ஆனால் அந்த டையல் முழுவதும் தங்கம் என்பது அவளுக்கு பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்துதான் போனது.

அந்த பெட்டியிலிருந்து கடிகாரத்தை வெளியே எடுக்க தேவைக்கும் அதிகமாய் பல நிமிடங்களை செலவிட்டிருந்தாள் அவள். கண்களை மூடி திறந்து, தன்னை நிலைபடித்திய படியே அதை உற்று நோக்க, நேரம் 10.20 காட்டி நின்றிருந்தது. நிறுத்தப் பட்டிருந்தது. தீயினை தொட்டதுப் போல் அனிச்சை செயலாய் அந்த கைகடிகாரத்தை தூர எறிந்திருந்தாள் அவள். இதுவரைவும் கூட அத்தனையையும் இயல்பான நிகழ்வாய் நினைத்தவளுக்கு இப்போதும் அப்படி நினைக்க முடியவில்லை.

அந்த அட்டைபெட்டியை உற்றுப் பார்க்க உள்ளங்கை அளவு ஒரு வாழ்த்து அட்டை. அதை எடுக்க நினைத்தவளின் கரம் ஒத்துழைக்காது வெகுவாய் நடுங்கிக் கொண்டிருந்தது. நடுங்கும் இடது கரத்தால், நடுங்கும் வலது கரத்தை அழுந்த பற்றிய பிடித்தபடியே அதை எடுத்தாள் அவள். அதில் சிவப்பு வண்ண மைக்கொண்டு, “மை டைம் இஸ் ப்ரோஜன்… தி மூவ்மெண்ட் ஐ சா யூ…” (My time is frozen… The moment I saw you…) என்று எழுதபட்டிருந்தது. அதற்கு கீழே, “பை யுவர் லவ்வபிள் டெவில்…” (By your lovable devil) என்றும் இருந்தது. நொடியில் அவளின் இதய துடிப்பு பன்மடங்காய் பெருகிட, உடலின் அத்தனை வியர்வை சுரபிகளும் சீராய் ஒரே நேரத்தில் வியர்வையை பெருக்கி அவளை நனைத்திருந்தது. அழுத்தம் தாளாமல் அப்படியே மயங்கி மேசை மேல் சரிந்தவளின் கையிலிருந்து நழுவி வழுவிய அந்த சிறிய வாழ்த்து அட்டை கீழே விழுந்திருந்தது.

     – பற்றி எரியும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்