Loading

சமுத்திரா – 5

இரவுணவை முடித்துவிட்டு நான்காவது தளத்தில் உள்ள முன்னறையில், சக்தி அவனுடைய மடிக்கணினியுடன் சோபாவில் அமர்ந்து வேலை செய்துக் கொண்டிருந்தான். மற்றொரு சோபாவில் அமர் மற்றும் ரங்கா எதை பற்றியோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர்.

கீழே விரிக்க பட்டிருந்த கார்பெட்டில் அமர்ந்திருந்த ஷிவன்யா தன் கேமராவில் இருந்த புகைப்படங்களை தன் மடிக்கணினியில் ஏற்றி கொண்டிருந்தாள். மற்றொரு ஒற்றை சோபாவில் அமர்ந்திருந்த ப்ரதீப் தன் மொபைலை பார்த்துக் கொண்டிருந்தான்.

அனைவரையும், அவர்களின் செயல்களையும் பார்த்த விலோ எரிச்சலுடன், “இங்க நாம எதுக்கு வந்திருக்கோம்..? எல்லாரும் அவங்கவங்க வேலைய பார்த்துட்டு இருக்கீங்க..”

மடிக்கணினியில் இருந்து தலையை உயர்த்திய சக்தி, “ரைட் சைடுல இருக்க ரூம்ல நீயும், உன்னோட ஃபிரண்டும் தங்கிக்கோங்க விலோ.” என கைகாட்டினான்.

“நான் தூங்குறதுக்கு கேட்கலை சக்தி. மணி ஒன்பது தான ஆகுது. எல்லாரும் சேர்ந்து ஏதாவது விளையாடலாம்..” என்று அனைவரையும் பார்க்க,

சக்தி, “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு விலோ. நீங்க விளையாடுங்க நான் பின்னாடி வந்து ஜாய்ன் பண்ணிக்குறேன்.” என்று தன் வேலையை தொடர்ந்தான்.

அவனை தவிர மற்றவர்கள் அவளை கவனிக்க கூட இல்லை என்பதை பார்த்த ப்ரதீப், “அவனாவது பதில் சொன்னான், ஆனா உன்னோட ஆளு உன்னை கண்டுக்க கூட இல்லையே விலோ! சோ சாட்..”, என்று ரங்காவை பற்றி கூறி உச் கொட்டி அவளை கடுப்பேத்தினான்.

அவனை பார்த்து வாயை மூடுமாறு சைகை செய்தவள், “ரங்ஸ்..” என்றழைக்க, “டென் மினிட்ஸ் விலோ..” என்று அவளிடம் கூறிவிட்டு பத்து நிமிடம் கடந்தும் அமரிடம் பேசிக்கொண்டிருந்தான்.

“அப்படி என்னத்தை தான் பேசுவானுங்களோ..” என்று முணுமுணுத்துக்கொண்டே வந்த விலோவை பார்த்து சிரித்த ப்ரதீப் மற்றும் ஷிவன்யாயை முறைத்த விலோ முகத்தை திருப்பினாள். “சரி நம்ம ட்ருத் ஓர் டேர் விளையாடலாமா விலோ?” பிரதீப் அழைக்க,

‘அந்த கேம் விளையாடினால் ஒன்று ரங்காவை பற்றியே கூற சொல்லி கிண்டல் பண்ணுவான். அல்லது டேர் என்று ரங்காவிடம் ப்ரொபோஸ் பண்ண சொல்லி கேலி செய்வான்’ என்று அனுபவத்தில் உணர்ந்த விலோ, “ஒன்னும் வேண்டாம்..” என்று சலிப்புடன் ஷிவன்யா பக்கத்தில் அமர்ந்தாள்.

“அப்ப போடி.. உனக்கு போய் ஹெல்ப் பண்ண வந்த பாரு” என முடிக்கும் முன், “ப்ரதீப்..” என்றான் ரங்கா அதட்டலுடன்.

“சரி டா உன்னோட ஆளை டி சொல்லல போதுமா”, என்றவன், “அங்க உட்கார்ந்திருந்தாலும் காது இங்க இருக்கும் போல..” என்று முணுமுணுத்துக் கொண்டான்.

ரங்கா அதட்டியதை சிரிப்புடன் பார்த்த விலோவிடம், “உன்னோட லவ்க்காக உனக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணிருக்கேன்..? அவன் என்னை திட்டுனா நீ சிரிக்குற..? உன் கூடலாம் விளையாட வர முடியாது போ..” என்றான்.

“போ டா..” என்று எழுந்தவள், “நா கப்பலை சுற்றி பார்க்க போறேன். நீயும் வரியா ஷிவ்?”, என ஷிவன்யாயையும் துணைக்கு அழைத்தாள்.

“இல்ல விலோ! கேமரால இருக்குறத லேப்டாப்ல ஏத்துனா தான் நாளைக்கு ஃபோட்டோ எடுக்க முடியும். நீ வேணா போய்ட்டு வா.. நான் நாளைக்கு காலைல பார்த்துக்குறேன்..”

அவளின் பதிலை கேட்ட விலோ அமைதியாக மீண்டும் அமர்ந்து விட்டாள். இதுவரை நன்றாக தான் போய்க் கொண்டிருந்தது.

“தைரியம் இருந்தா? நீ தனியா போய்ட்டு வா விலோ” என்று விலோவை உசுப்பேற்றும் விதமாக சொல்லி வம்பை விலைக்கு.. இல்லையில்லை சும்மாவே வாங்கினான் ப்ரதீப்.

அவனிடம் எப்பொழுதும் ஏட்டிக்கு போட்டி செல்பவள் அவன் கூறியதும், “என்ன பெட் சொல்லு? நான் போய்ட்டு வரேன்.” என்று விலோவும் தைரியமாக பந்தயத்திற்கு தயாரானாள்.

“ம்ம்ம்..” என்று யோசித்த ப்ரதீப், “நீ முதல்ல போய்ட்டு வா.. பின்னாடி பார்க்கலாம்.” என்று அவளை தூண்டிவிட்டான்.

“போய்ட்டு வந்து உன்கிட்ட பேசிக்குறேன் டா.” என்றவள், சிறிதும் யோசிக்காமல் ரங்காவிடம் அனுமதி கேட்டாள்.

ரங்கா, “நைட் நேரம் வேண்டாம் விலோ. நாம நாளைக்கு பகல்ல நல்லா வெளிச்சத்துல கப்பலை சுத்தி பார்க்கலாம்.” என்றான் மென்மையாக.

ஏற்கனவே யாரும் விளையாட வராததால் அவளை நக்கலாக பார்த்த ப்ரதீப்பை எப்படியாவது கடுப்பேத்தும் முடிவுடன் இருந்த விலோ, “நான் சும்மா இப்படி போய்ட்டு அப்படி வந்துடுவேன் ரங்ஸ், ப்ளீஸ்.. இந்த ப்ரதீப் ஓவரா பண்ணுறான் தெரியுமா?” என்று கெஞ்ச தொடங்கினாள்.

அமர், “போய்ட்டு வரட்டும். விடுடா. மேல மட்டும் போக கூடாது விலோ. கப்பல்குள்ளயே போய்ட்டு வா..” என்ற எச்சரிக்கையுடன் விலோவை அமரன் போக சொன்னான்.

அந்த அறையில் இருந்து வெளியே செல்ல தொடங்கிய விலோவிடம் பிரதீப், “பார்த்து எதாவது பேய் இருக்க போகுது..”

“பேய்ய பார்த்தா ப்ரதீப் உள்ள தான் இருக்கான்னு உன்கிட்ட அனுப்பி வைக்கிறேன்..”, என்று பதிலளித்துவிட்டு வெளியேறினாள்.

‘பேய் இருக்குமாம் பேய். லூசு பைய. பெட்ல வின் பண்ணிட்டு வந்து இந்த ட்ரிப்ல உன்னோட பர்ஸ் ஃபுல்லா காலி பண்ணுறேன். இருடா..’ என்று ப்ரதீப்பை மனதிற்குள் திட்டிக்கொண்டே, தன் கால் போன போக்கில் நடந்தாள்.

ஷிவன்யாயின் அருகில் வந்து  அமர்ந்த ப்ரதீப், “உனக்கும் சக்திக்கும் சண்டையாமே விலோ சொன்னா. எதுக்கு சண்டை..” என்றான் தெரிந்துகொள்ளும் ஆவலில்.

அவனை ஒரு முறை திரும்பி பார்த்தவள், “அதை நீங்க விலோகிட்டயே கேட்கலாமே..” என்று மடிக்கணினியில் புகைப்படங்களை ஏற்றிக்கொண்டிருந்தாள்.

“ம்க்கும். அவ என்கிட்ட சொல்லிட்டு தான் மறுவேலை பார்ப்பா. நீ சொல்லேன் ஷிவ். இல்லனா எனக்கு தலையே வெடிச்சிடும்”

அதில் நகைத்த ஷிவன்யா, “பெருசா ஒன்னுமில்லை. எனக்கு சினி பீல்ட்ல இருக்கவங்களை பிடிக்காது. உங்க ஃபிரென்ட் சக்திக்கு ரிப்போர்ட்டர்னா பிடிக்காது. சக்தி – தயாரிப்பாளர். நான் ரிப்போர்ட்டர். சோ சாதாரணமா தொடங்கிய பேச்சுவார்த்தை, வாக்குவாதமாகி, அப்படியே எங்களுக்குள்ள சண்டையாகிடுச்சி..” என்று தோள்களை குளுக்கி கொண்டாள்.

“இவ்வளவு தான..? பெருசா எதிர்பார்த்தேன்.” என்றான் யோசனை படிந்த பாவனையுடன்.

“நீங்க செய்யுற வேலையை பத்தி உங்ககிட்டயே மட்டம் தட்டி பேசுனா உங்களுக்கு கோபம் வராதா..?” என்றவளின் கேள்விக்கு,

“கண்டிப்பா வரும். அதே மாதிரி சண்டை போடுறப்ப நீயும் சக்தியோட வேலையை பத்தி தான தப்பா பேசிருப்ப..? நாம சரியா இருந்தா தான அடுத்தவங்கிட்டயும் அதை எதிர்பார்க்க முடியும்.” என்றவன் வேறெதுவும் பேசாமல் தள்ளி அமர்ந்துவிட்டான்.

அதுவரை அனைவரையும் நக்கலடித்து பேசிக் கொண்டிருந்தவனின் பேச்சு ஷிவன்யாவை யோசிக்க வைத்தது. நிச்சயமாய் ப்ரதீப் இப்படி பேசுவான் என்று அவள் எதிர்பார்க்க வில்லை. அதை யோசித்தவள், “ஊஃப்” என்று தலையை உலுக்கிவிட்டு அவளின் வேலையை தொடர்ந்தாள்.

அவர்கள் அனைவரும் இருந்தது கப்பலின் மேல் தளதிற்கு அடுத்த தளம், அதற்கு கீழ் இன்னும் மூன்று  தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தளமாக படிகளின் வழியே பார்த்து கொண்டிருந்த விலோ, இறுதியில் அந்த கப்பலின் அடி மட்டத்திற்கு சென்றாள். அங்கு தேவையில்லாத பொருட்கள் மட்டுமே போட்டு வைக்கப்பட்டிருந்தது.

பொதுவாக  கடலலையின் ஆட்டத்தில் கப்பலில் உள்ள பொருட்கள் கீழே விழாமல் இருக்க, அனைத்தையும் முடிந்த வரை கயிற்றோடு கட்டி வைத்திருப்பார்கள். இல்லையேல், காந்தகமோ ஆணியோ உபயோகித்து  சுவற்றிலோ, தளத்திலோ ஒட்ட வைத்திருப்பார்கள். அந்த அறையில் உள்ள பொருட்களையும் அப்படி தான் சில அலமாரிகளில் கட்டிவைத்திருந்தனர்.

ஏதோ ஒரு உணர்வு! விலோவை உள்ளே போகுமாறு ஊந்த அந்த அறைக்குள் சென்றுவிட்டாள். சுற்றி பார்க்க அங்கிருந்த அலமாரியில் அனைத்து பொருட்களும் கட்டிவைக்க பட்டிருந்தது. ஏனோ அவளின் மனம் படபடவென அடிக்க தொடங்கியது. ‘இங்கிருந்து உடனே செல்ல வேண்டும்’ என்ற மூளையின் எச்சரிக்கைக்கு உடன்பட்டவள் அந்த அறையில் இருந்து வெளியேற தயாரானாள்.

திடீரென்று பலத்த புயல் காற்று வீச ஆரம்பித்தது. கருமை நிற மேக கூட்டங்கள் அனைத்தும் முழுநிலவினை மறைத்துக் கொண்டு எப்பொழுது வேண்டுமென்றாலும் மழை பொழிய தயாரானது. இல்லை இனி இங்கு நிலவ போகும் அனர்த்தனங்களை பார்க்க நிலவிற்கு தெம்பில்லையோ? அதனால் தான் மேக்கூட்டதோடு தன்னை மறைத்துக் கொண்டது போல!

கடலலையும் தன் பங்கிற்கு அதனின் உயரத்தையும் வேகத்தையும் பன்மடங்கு கூட்டி சீறிக் கொண்டிருந்தன.

புயலின் தாக்கத்திற்கும், அலையின் வேகத்திற்கும் கப்பல் ஆட்டம் காண.. வெளியே செல்ல ஓரடி எடுத்துவைத்த விலோ நிற்க கூட முடியாமல் தடுமாறி, “அம்மா..” என்ற கத்திக் கொண்டே அந்த அறையிலேயே கீழே விழுந்தாள். ‘நல்ல வேளை இங்கிருக்க பொருட்கள அலமாரில கட்டி வெச்சிருக்காங்க, இல்லனா எல்லாமே என் மேல தான் விழுந்துருக்கும்..’ என புலம்பிக் கொண்டே அவள் எழ முயற்சித்தாள்.

அப்பொழுது, இன்னோரு பெரிய அலையின் தாக்குதலில் விலோ மீண்டும் விழ, அதுவரை அங்கு எரிந்துகொண்டிருந்த விளக்குகள் அனைத்தும் அணைந்து அறையில் இருள் சூழ்ந்தது.

அந்த இருட்டிய அறையில் புயல் காற்றின் இரைச்சலும் கடலலையின் சத்தமும் நன்றாகவே அவளின் செவிகளை எட்டியது. ‘இந்த ப்ரதீப் பேச்சை கேட்டு வந்திருக்கவே கூடாது!’ என்று அந்த நிலையிலும் அவனை திட்டிக்கொண்டாள்.

வியர்வையில் குளித்திருந்த விலோவிற்கு பயமும் பதட்டமும் ஒருபுறம் இருந்தாலும் மனதை திடப்படுத்திக் கொண்டே இருட்டிற்கு தன் கண்களை ஓரளவிற்கு பழக்கியவள் மெல்ல எழும்ப முயற்சிக்க, டக்கென்று விளக்கு வந்து அவளின் கண்ணை கூச செய்தது. சிரமத்துடன் கண்ணை கசக்கிக்கொண்டு தெளிவானாள்.

அலையின் வேகத்திற்கு மீண்டும் கப்பல் ஆட, இந்த முறை கீழே விழாமல் அலமாரியை பற்றிக்கொண்டு திடமாக நின்ற விலோ, ‘இங்கயிருந்து சீக்கிரம் போகணும்’ என்று மெதுவாக நடக்க தொடங்கினாள்.

மீண்டும் விளக்கு அணைந்து, அந்த அலமாறியின் மேல் இருந்து எதுவோ(!?) ஒன்று டம்மென்ற சத்தத்துடன் அவளின் காலடியில் வந்து விழுந்தது. அந்த ஒரு நொடி! அவளின் இதயம் நின்று துடிக்க.. எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டே, ‘ஒன்னுமில்ல விலோ, ஒன்னுமில்லை!’, என்று தனக்கு தானே தைரியம் சொல்லிக்கொண்டு நெஞ்சை நீவிவிட்டுக் கொண்டாள். பின் கீழே குனிந்து கைகளால் துழாவிப்பார்க்க மரப்பெட்டி போன்றொரு பொருள் தட்டுப்பட, விளக்கு மறுபடி ஒளிர்ந்தது.

‘எதுக்கு லைட் இப்படி விட்டு விட்டு எரியுது’, என்ற எரிச்சலுடன் நினைத்துக்கொண்டே கீழே இருந்த செவ்வக வடிவ மரப்பெட்டியை பார்த்தவள், அதனை கையில் எடுத்து திறக்க முயற்சித்தாள்.

ஆனால், பலவருடமாக அது உபயோகப்படுத்தப்படாமல் இருந்த காரணத்தால் நன்றாக தூசி படிந்து திறக்க முடியாமல் வலுவாக இருந்தது. ‘சரி அலமாறிலயே வெச்சிடலாம்’ என அங்கேயே வைத்தாள். அது மறுபடி கீழே அவளின் காலின் அருகிலே விழுந்தது. மீண்டும் வைக்க; விழ என்று மூன்று முறை நடந்தது.

‘இப்படி விழுந்துட்டே இருந்தா..? எங்கேயாவது இடிச்சி எதாவது ஆகிடுமே.. நம்ம எடுத்துட்டு போய் கேப்டன் கிட்ட கொடுக்கலாம்’ என்று கையில் எடுத்தவள் அறியவில்லை, இதனால் எவ்வளவு இன்னல்கள் அவர்களுக்கு வர போகிறதென்று! பின் அவர்களின் நண்பர்கள் இருந்த இடத்தை நோக்கி செல்ல தொடங்கினாள்.

“இவ எங்க டா போனா? இன்னும் ஆளையே காணோமே? நான் போய் பார்த்துட்டு வரேன்.” அமரிடம் சொல்லிவிட்டு ரங்கா கிளம்ப எத்தனிக்க, கையில் பெட்டியுடன் வந்துகொண்டிருந்தாள் விலோச்சனா.

அவளை பார்த்த ரங்கா, “எங்க விலோ இவ்வளவு நேரம் போன? ஆமா கைல அதென்ன என்ன பெட்டி?” என்று வினவ, நடந்ததை அனைவரிடமும் கூறினாள்.

சக்தி, “நீ எதுக்கு அங்க போன? கேப்டன் எதாவது சொல்ல போறாங்க..”

விலோ, “இது எதுலயாவது இடிச்சி கப்பலுக்கு சேதாரம் ஆகிருந்தா..? அவங்களுக்கு நல்லது தான நான் பண்ணிருக்கேன். சோ எதுவும் சொல்ல மாட்டாங்க. அண்ட் இதை அவங்கிட்டயே தான கொடுக்க போறேன்.” என சொல்லிச் சென்றாள்.

கேமராவை சார்ஜில் போட்ட ஷிவன்யா, “இத திறந்து உள்ள என்ன இருக்குனு பார்த்தியா விலோ?” என்று ஆவலுடன் கேட்டாள்.

“இல்ல ஷிவ், ஒரே தூசியா படிஞ்சி இருக்கு. தொடச்சு கிளீன் பண்ணிட்டு நாம திறந்து பார்க்கலாம். நீ போய் ஒரு வேஸ்ட் துணி எடுத்துட்டு வா..” என்று ஷிவன்யாவை விலோ விரட்டினாள்.

பிரதீப் நக்கலுடன், “அப்படி என்ன புதையலா அதுல இருக்க போகுது? ஓவரா பில்டப் கொடுக்குற..”

“நான் பெட்ல வின் பண்ணிட்டேன். இந்த ட்ரிப்ல நான் கேட்குறதெல்லாத்தையும் ஒழுங்கா வாங்கி கொடுக்குற வழியா பாரு”

“பார்க்கலாம்”

விலோ அவனை முறைத்துக்கொண்டே, “முடிஞ்சா இதை திற வா..” என்று ப்ரதீப்பையும் அழைத்தாள்.

‘என்னமோ பண்ணிக்கொள்ளுங்கள்’ என்று சக்தி, ரங்கா, அமர் அவர்களை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டனர்.

ஷிவன்யா எடுத்துவந்த துணியை வைத்து பெட்டியின் அடியிலும் சைடிலும் முழுவதும் துடைத்தாள். இறுதியாக பெட்டியின் மேல் துடைக்க கை வைக்க, அதன் மேல் எழுத்துவடிவில் எதோ எழுதியிருப்பதை அவளின் கரங்களால் உணர முடிந்தது.

“இது மேல எதோ எழுதியிருக்கு..” என்று விலோ சொல்லிக்கொண்டே வேகமாக தூசியை துடைத்தாள்.

தூசியை துடைத்துக்கொண்டே, அதில் வரும் ஒவ்வொரு எழுத்தாக ‘ச’, ‘மு’, ‘த்’, ‘தி’, ‘ரா’ உச்சரித்தவள், இறுதியில் அதனை கோர்த்து ஒரே வார்த்தையாக “சமுத்திரா” என்று வாசித்து முடித்த அடுத்த நொடி அண்டசராசமும் அதிரும் வண்ணம் பலத்த ஓசையுடன் இடி மற்றும் மின்னல் அந்த கரும் வானில் தோன்றியது. அந்த இடியின் ஓசையில் அவர்கள் அறுவரும் நடுங்கியேவிட்டனர்.

(இனி சமுத்திராவின் ஆட்டம்)

– வருவாள்

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்