Loading

காலை கனவு 24

பனி சிந்தும் புலரா விடியல்.

எங்கும் நீல வர்ணத்தின் குளுமை.

தூரத்தில் வெண்மேகம் கருமையில் ஒளிந்து மெல்ல மிதந்துக் கொண்டிருக்க… வீசும் குளிர்க்காற்று ஸ்பரிசிக்க உயிர் திறப்பாய் ஆவி விலகும் தேநீர் நிரம்பிய இரு கண்ணாடி குவளை ஒன்றுக்கொன்று ஆதரவாய் இணைந்திருந்தது.

“தீர்ந்துப்போகவே முடியாப்பேச்சுக்கள்…

நீண்டு கொண்டே இருந்திடும் நிமிடங்கள்…

மனதோடு தேக்கி வைக்கப்பட்ட அவனின் காதல் ஆசைகள்…

இதயத்தில் அனைத்துமாக ஜீவிக்கும் வலிகள்…

அவனின் அவளோடு சரணடையக் காத்திருக்கிறது…

காதலாய் அவன(ள)து கரங்கள் சேர்ந்திட…”

மெல்லிய குரலாய் அன்விதா கூறிட, அவளின் அருகில் அமர்ந்திருந்த ஆர்விக், விழிகள் விரிய பக்கவாட்டில் அவள் முகம் லயித்தான்.

ஈரக்காற்றில் சிவந்திருந்த முகத்தின் விழிகள் மூடியிருக்க… பெரும் காதலின் குவியலாய் அவனின் வார்த்தையில்… அவளின் குரல்.

“இப்பவும் உன்னோட லவ்வை சொல்லமாட்டியா ஆர்வி?”

அன்விதாவின் ஓசை இடியென இதயத்தை பதம் பார்க்க, பட்டென்று விழிகள் திறந்து தூக்கம் தொலைத்தான் ஆர்விக்.

உடல் முழுக்க நொடியில் வியர்த்துப்போனது.

அருகில் உறங்கிக்கொண்டிருந்த அன்னையை பார்த்த ஆர்விக், சத்தமின்றி வெளியில் வந்திருந்தான்.

*******************************

அந்த அதிகாலை வேளையில் உறக்கம் கொள்ளாது தீவிர சிந்தனையில் மூழ்கியிருந்தாள் நிதாஞ்சனி.

“அய்யோ தலை வெடிக்குது” என தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தவள்,

“லவ் சொல்லிடலாமா?” என அலைபேசியை எடுத்து அதிலிருக்கும் சக்தியின் புகைப்படத்தை திறந்து கேட்டிருந்தாள்.

‘நீ சொல்லலனாலும் அவங்களுக்குத் தெரியும் தான?’ அவளின் மனதின் கேள்விக்கு தானாக ஆமென தலையசைத்திருந்தாள்.

“தெரிஞ்சா மாதிரி காட்டிக்கவே இல்லையே!”

‘எவ்ளோ நாள் உனக்குள்ளவே வைச்சிருப்ப? நேர்ல பார்த்து சொல்லத்தான பயம். போன்ல சொல்லிடு.’

“அவங்க என் நெம்பரை பிளாக் பண்ணி வைச்சிருக்காங்க.”

‘ஆர்வி, யாஷ், அம்மா யாரோ ஒருத்தர் நெம்பரிலிருந்து கூப்பிடுவோம்.’

“அடிச்சிட்டா?”

‘ஆமா… போன்ல அடி விழுது!’

“அப்போ திட்டிட்டா?”

‘வாங்கிக்கோ! உன் காதலுக்கு முடிவென்னன்னு தெரியுமே!’

“ஓ…”

‘நீயும் உன் அப்பா பாக்குற மாப்பிள்ளைக்கெல்லாம் நோ சொல்லிட்டு அவங்களை கஷ்டப்படுத்திட்டு தான் இருக்க.’

நேற்று யாஷ் ஆர்விக்கை கடிந்து பேசிய அனைத்தும் தனக்கும் பொருந்துவதாக எண்ணியே இரவு முழுக்க சரியான உறக்கம் கொள்ளாது, காதல் தவிப்போடு திண்டாடுகிறாள்.

அனிதா வருந்துவதைப் போலத்தானே தன்னுடைய பெற்றோரும், தனக்கு தெரியாது வருந்துவார்களென்ற எண்ணமே அவளை அவளது காதலில் உடனடியாக ஒரு முடிவை எடுக்க வைக்க உந்தியது.

“கடவுளே” என கத்தியவள், “நோ மட்டும் சொல்லக்கூடாது. அப்படி சொல்லிட்டா ஆர்வி மாதிரி அந்த வலியையெல்லாம் என்னால ஏத்துக்க முடியாது” என்று உலகத்திலுள்ள அனைத்து தெய்வங்களையும் மனதில் நிறுத்தி வணங்கி நேரத்தைப் பொருட்படுத்தாது அறையை விட்டு வெளியில் வந்தாள்.

இரவு ஆர்விக்கின் இல்லத்திலேயே தங்கிக்கொண்டாள்.

கூடத்து நீள்விருக்கையில் யாஷ் அமர்ந்த நிலையில் பின் சாய்ந்து உறங்கிக் கொண்டிருக்க… அவனது மடியில் ஆர்வி தலை வைத்து உடல் குறுக்கிப் படுத்திருந்தான்.

யாஷின் கரம் ஆர்விக்கின் மீது அணைவாய் படிந்திருந்தது.

“நேத்து அவ்ளோ திட்டிட்டு இப்போ பாரு” என்று முனகிய நிதாஞ்சனி, “நைட்டு திட்டிட்டோம்னு ஆர்வி கால்ல விழுந்திருப்பானோ?” என மெலிதாகக் கேட்டு நின்றாலும், உறங்காது கண்கள் மட்டும் மூடியிருந்த யாஷ்…

“கற்பனை கொஞ்சம் ஓவராதான் போகுது” என கண்கள் திறந்தான்.

“நீ தூங்கலையா?”

“நீங்க டோர் ஓபன் பண்ண சவுண்ட் எழுப்பிடுச்சு” என்ற யாஷ், “அதுக்குள்ள எழுந்துட்டீங்க?” என்றான்.

“இப்போ அம்மா ஓகேவா” என அனிதாவின் அறையை திறந்திருந்த கதவின் வழி எட்டிப்பார்த்த நிதாஞ்சனி…

“நல்லா தூங்குறாங்க” என யாஷின் முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

“இப்போ ஆர்வி ஓகேவா! மிட் நைட்ல பேசிட்டு இருந்தீங்களோ?” என்றாள்.

“ம்ம்… பூபேஷ், தான்யா போன பிறகு” என்றான்.

நள்ளிரவுக்கு மேல் தான் பூபேஷ் தான்யாவை கூட்டிட்டுக்கொண்டு சென்றிருந்தான்.

“ரொம்ப லேட்டாச்சு நீங்களும் தூங்குங்க” என யாஷ் நிதாஞ்சனியிடம் கூற,

“அம்மா கூட இருக்கேன்” என்றாள் அவள்.

“அங்க ஆர்வி தூங்கிட்டு இருக்கான். உங்களுக்கு இடமிருக்காது” என்ற யாஷ், “நான் இங்க சோபாவில் தான் இருப்பேன். பார்த்துக்கிறேன்” என்றான்.

“ம்ம்… ஏதும்னா கூப்பிடு. ஆர்வி சாப்பிடவுமில்லை. அவன் பாதியில எழுந்தா சாப்பிட வை” என நிதாஞ்சனி சென்ற சில நிமிடங்களில், இரவு வெகு விரைவாகவே உறங்கியதோடு நெஞ்சம் தட்டிய கனவின் அதிர்வால் தூக்கம் கலைந்து எழுந்து வந்தான் ஆர்விக்.

இருள் விளக்கின் ஒளியில் நீள்விருக்கையில் யாஷ் கண்கள் மூடி அமர்ந்திருப்பது தெரிய, மின் விளக்கை உயிர்ப்பிக்காது அவனின் மடியில் தலை வைத்து படுத்து கண்களை மூடிக்கொண்டான்.

“சாப்பிடுரியாடா?”

“வேணாம்.”

“பால்?”

“எதுவும் வேணாம்” என்ற ஆர்வி யாஷின் இடையில் கைகளை சுற்றிக்கொண்டான்.

“கோபமா இருக்கியா?”

“ஆமா…”

“குட்!”

“என்மேல கோபம்…!”

“இருக்கட்டும்… இருக்கட்டும்.”

ஆர்விக் தலையை நேராக திருப்பி, பார்வையை உயர்த்தி யாஷை முறைக்க…

“என்னோட ஸ்டேட்மெண்ட் எல்லாம் அப்படியேதான் இருக்கு” என்றான் யாஷ்.

“திரும்ப திட்டப்போறியாடா?” என்ற ஆர்விக்… “அனிக்காக சீக்கிரம் சேஞ்ச் ஆகிடுறேன்” என்றான்.

“அம்மாக்காக இல்லை. உனக்காக மாறனும்” என்ற யாஷ், “உனக்கு வலி கொடுக்கும் அப்படின்னா அதிலிருந்து வெளியவராதன்னு சொல்ல நான் அனிதா இல்லை. நீ வெளிய வந்தாதான் அம்மாவோட வலிப்போகும் சொல்றேன்” என்றான்.

ஆர்விக் பதில் பேசாது அவனையே பார்த்திருக்க…

அவனது முன்னுச்சி கேசம் படர்ந்த நெற்றியில் கை வைத்து வருடிய யாஷ்…

“எனக்கு உன்னைவிட்டா யாரிருக்கா ஆர்வி? உன்னாலதான் அவங்க எனக்கு அம்மா! சத்தியமா, எப்பவுமே வலியோட சுத்திவர உன்னோட இந்த கண்ணை பார்க்க முடியலடா ஆர்வி” என்று யாஷ் உடைந்திருந்தான்.

“இந்த காதல் வலியோட வாழப்பழகிட்டேன் யாஷ். உடனே வெளிவர முடியல. எனக்குள்ளே நான் போராடிட்டு இருக்கேன்.”

“நீ ஏன் வெளியவரணும் ஆர்வி? அன்விக்கிட்ட உன் லவ் சொல்லலாமே!”

“முடியாது யாஷ்.” பட்டென்று மறுத்திருந்தான்.

“அப்போ மொத்தமா வேணாம்னு வெளிய வந்திடு. திரும்ப ஒருமுறை இந்தநாள் வரக்கூடாது” என்ற யாஷ், “அம்மாக்கு ஏதாவதுன்னா அதுக்கு காரணம் உன்னோட இந்த காதலா மட்டும் தான் இருக்கும்” என்றான்.

“இப்போ நான் என்னடா பண்ணனும்?”

“உனக்கே தெரியும்.”

“ம்ம்…” என்ற ஆர்விக், “அம்மா என்ன பண்ணாலும் எனக்கு ஓகே” என கண்களை மூடிக்கொண்டான்.

“புரியல?”

“ஒரு விஷயம் நமக்குன்னு வந்த பிறகு மாற்றம் வரும் சொல்லுவாங்களே! அப்படியாவது இதிலிருந்து வெளிவந்திடுறேன் சொல்றேன்” என்றான் ஆர்விக்.

“நிஜமாவா? ஆர் யூ ஷூயர்?”

“உனக்காகலாம் இல்லை. நீ இவ்ளோ திட்டுறங்கிறதுக்காகவும் இல்லை. எல்லாம் அனிக்காக… அம்மாக்காக மட்டும் தான்” என்ற ஆர்விக்கின் கன்னத்தை கொத்தாகப் பிடித்து இழுத்திருந்தான் யாஷ்.

“காலையில பேச்சு மாறமாட்டியே?”

“ரொம்ப நாளாவே நானும் முயற்சி பண்ணிட்டு தான்டா இருக்கேன். இப்போ இருக்க சூழலை என்னோட காதலுக்கு ஒரு வாய்ப்பா, என் மனசு பார்க்க ஆரம்பிக்கிதோன்னு தோணுது” என சற்று முன்னர் வந்த கனவை கூறிய ஆர்விக், “இது எனக்கு சரியா இருக்கலாம். ஆனால் அம்மாக்கு, உனக்கு… தெரிஞ்சும் உங்களை நான் எப்படி கஷ்டப்படுத்துவேன்” என்றதோடு, “எமோஷ்னலா கனெக்ட் ஆகாம, பிராக்டிக்கலா யோசிக்க நினைக்கிறேன். அப்படியெடுக்கிற முடிவு சரியா இருக்கும் நம்புறேன்” என்றான்.

“ஆர்வி?” காதலிலிருந்து நண்பன் மீண்டுவிட வேண்டுமென அதீத ஆசை. அதற்காக சரியாக அதிகமாக பேசிவிட்டான். ஆனால் இக்கணம் வலியை மறைத்துக்கொண்டு ஒலிக்கும் ஆர்விக்கின் வார்த்தைகள் அவனை கனக்கச் செய்தது.

“முதல் காதல்… எப்பவும் மனசோட இருக்கும் சொல்வாங்களே! அப்படி என் காதலும் எனக்குள்ள மட்டும் வாழ்ந்து போகட்டும். இப்பவும் அப்படித்தான இருக்கு…” என நிறுத்தி, “என்னோட காதல்… சொல்லாத, இனி சொல்லவே முடியாத ஒருதலை காதல்தான?” என்ற ஆர்விக்கின் மூடிய கண்ணிலிருந்து இமை முட்டி நின்ற நீரின் ஒரு துளி யாஷின் விழி சேர்ந்தது.

அவனிடத்தில் பெருமூச்சொன்று இதயத்தின் பாரமாய் வெளியேறிட, பின்னால் சாய்ந்து விழிகள் மூடினான். அவனது கரம் ஆர்விக்கில் அணைவாய் இறுக்கம் கொண்டது.

இருவரிடத்திலும் அதன் பின்னர் ஒற்றை வார்த்தையில்லை.

இத்தனை நாட்கள் அன்னையை நினையாது சுயநலமாக இருந்துவிட்டோமோ எனும் எண்ணமே ஆர்விக்கின் மனதை துளையாய் துளைத்துக் கொண்டிருக்கிறது.

அன்னைக்கு முன்பு இங்கு எதுவும் அவனுக்கு பெரியதாகத் தெரியவில்லை… காதலை விட்டுக்கொடுத்திட்டான், அவனின் காதல் அழுத்தமில்லையோ எனும் எண்ணம் அவனுக்கேத் தோன்றினாலும், அவனிடத்தில் இருக்கும் ஒரே பதில், ‘அம்மா.’

அவருக்காக மீண்டுவர முயன்றுவிட்டான்.

தன்னுடைய காதலிலிருந்து தான் வெளிவருவதுதான் அன்னையின் ஆரோக்கியத்திற்கு நல்லதென அறிந்திட்டப் பின்னரும் அக்காதலில் தேங்கி நிற்க அவனால் எப்படி முடிந்திடும். கடக்க நினைக்கிறான் என்பதற்காக அவனது காதல் இறந்துவிட்டதென்று அர்த்தமில்லை.

இங்கு கிடைக்கவே கிடைக்காதென பல உள்ளன. ஆனாலும் நம் மனதில் அதன் ஆசைகள் இருந்துகொண்டே தான் இருக்கும். அதுதான் நியதி. அந்த எதார்த்தத்தில் இனி அவனது காதலும்.

காதலுக்கு எந்தளவிற்கு உண்மையாக இருந்திட்டானோ… அதேபோன்று வரும் வாழ்விற்கும் உண்மையாக இருந்திடுவான் என்பதில் அவனிடத்திலும் சிறிதும் ஐயமில்லை.

அந்த அச்சமின்மையே அவனை முயன்று முடிவை எடுக்க வைத்திருந்தது.

முயற்சிக்கிறேன் என்பதைவிட, களம் இறங்கினால் தானே முயற்சியில் முயன்றிட முடியுமா தோற்றிட முடியுமா என்பது தெரியும்.

தெரிந்துகொள்ள துணிந்திட்டான்.

துணிதலின் திடத்தோடு மூடிய விழிகள் கண்ணீரை நிறுத்திக்கொள்ள… தூக்கத்தை அளித்தன.

யாஷும் ஆர்விக்கின் வார்த்தைகளோடு உழன்றவனாக உறங்கியிருக்க நிதாஞ்சனி வந்திருந்தாள்.

யாஷுடன் சிறு பேச்சிற்குப் பின்னர், “மொபைல் வேணுமே!” என்றாள்.

யாஷ் ஏன் எதற்கென்றெல்லாம் கேட்கவில்லை…

“என்னோடது ரூம்ல இருக்கு. போய் எடுத்துக்கோங்களேன்” என்க,

“ஆர்வியோடது?” எனப் பார்த்தாள்.

“இங்கதான் இருந்தது” என டீபாயின் மீதிருந்த புத்தகத்தை நகர்த்தி, அதற்கு அடியிலிருந்த அலைபேசியை எடுத்துக்கொடுத்தான்.

“பாஸ்வோர்ட்?”

“அனிதா!”

“சரியான அம்மா பிள்ளை” என புன்னகைத்த நிதாஞ்சனி, “பேசிட்டு வர்றேன்” என நகர்ந்தாள்.

அம்மா பிள்ளை எனும் வார்த்தை யாஷை நண்பனின் முகம் காண வைத்தது. அவருக்காகத்தானே அவனால் முடியாதென்று தெரிந்தும் முயலும் முடிவு. மென்மையாக ஆர்விக்கின் உடலில் தட்டிக்கொடுத்தான்.

நகர்ந்து சென்ற நிதாஞ்சனி எங்கு சென்று பேசலாமென பார்க்க…

“பேக் சைட் சிட்அவுட் போங்க. பேசலாமா, வேணாமான்னு உட்கார்ந்து ஒரு முடிவுக்கு வந்து கால் பண்ண பிளேஸ் வசதியா இருக்கும்” என்ற யாஷின் சிரிப்பு கலந்த குரலில் ஆர்விக் உறக்கம் கலைந்து எழுந்திருந்தான்.

நிதாஞ்சனி நின்று அவஸ்தையாகப் பார்த்தாள்.

“என்னாச்சு?” ஆர்விக் புரியாது இருவரையும் மாற்றி மாற்றி ஏறிட…

“உன் அக்காவுக்கு லவ் சொல்ல தைரியம் வந்திடுச்சு” என மேலும் சிரித்தான் யாஷ்.

“நிஜமாவா நிதா” என்ற ஆர்விக், “ஆல் த பெஸ்ட்” என்றான்.

“வந்த தைரியமும் ஓடிடும் போலடா” என்று பாவமாகப் பார்த்த நிதாஞ்சனி, “எப்படிடா கண்டுபிடிச்ச?” என யாஷிடம் கேட்டாள்.

“வேற யாருக்கும் கால் பண்ணனும்னா தான் உங்க மொபைல் இருக்கே” என்றவன், “உங்க முகத்துல இருக்க பதட்டமே சொல்லுது” என்றான்.

“ஆமா… சொல்லிடலாம் தோணுது. ஒரு முடிவு தெரிஞ்சிக்கத் தோணுது. நேத்து நீ பேசினது ஆர்விக்கு மட்டுமில்ல… எனக்கும் பொருந்தும் தான?” என்ற நிதாஞ்சனி, “அம்மா, அப்பா எனக்கு கல்யாணம் செய்து பார்க்க அவ்ளோ ஆசைப்படுறாங்க. ஆனால் நான்? சொல்லாத காதலுக்கு உயிர் இல்லைதானே?” என்றாள்.

“ரொம்ப யோசிக்காத? சொல்லணும் தோணுதுல… சொல்லிடு” என்றான் ஆர்விக்.

“ஆனால் இப்போ அங்க சிட்டுவேஷன்?” என்று இழுத்த நிதாஞ்சனி, “கௌதம் இந்நேரம் வீட்டுக்குப் போயிருப்பான். தென்னரசி ஆண்டி சண்டையை ஆரம்பிச்சிருப்பாங்க” என்றாள்.

“அந்தளவுக்கெல்லாம் ஆக திரு விடமாட்டாங்க. அவங்களுக்கு இந்த விஷயத்தில் அவ்ளோ கோபமிருக்கு. அப்படியிருந்தும் இவ்வளவு நாள் பொறுமையா இருக்காரே! காரணம் சொந்தத்துக்குள்ள சண்டை வேணாம் நினைக்கிறார். அதனால கௌதம் விஷயத்தை ஸ்மூத்தாதான் ஹேண்டில் பண்ணுவார். கௌதம் அம்மா, அப்பா யாரும் திரு முன்னாடி வாய் திறக்க முடியாது” என்றான்.

“அதென்னவோ உண்மை தான். யாராலும் வாய் திறந்து பேச முடியாது.”

“உன்னால முடியாதுன்னு சொல்லு.”

“முடியும்.”

“அப்போ எங்ககிட்ட பேசி நேரத்தை வீணாக்காம… அங்க அப்படி இருக்குமோ இப்படியாகியிருக்குமோ சாக்கு சொல்லாம உன் லவ்வை சொல்லு பார்ப்போம்” என்ற ஆர்விக், “ஒன்னை தக்கவைச்சிக்கிறதைவிட, கிடைக்க வைக்கிறதுக்கு அதிகமாவே போராடனும்” என்றான்.

“உன் காதலுக்கு நீயும் போராடியிருக்கலாமே!” என நிதாஞ்சனி சொல்ல…

“இறங்கி வந்திருக்கவனை ஏற வைச்சிடாதீங்க. இப்போ அவன் பேச்சே இல்லை. நீங்க உங்க ஆளுக்கிட்ட லவ் சொல்றதை பாருங்க” என்றான் யாஷ்.

“ரொம்பத்தாண்டா எல்லாரையும் மிரட்டுற நீ?” என்ற நிதாஞ்சனி, ஆர்விக்கின் அலைபேசியிலிருந்து சக்திக்கு அழைப்பு விடுத்தாள்.

விடுத்த கணம்… இணைப்பு சேராது ஒலியின்றி அழைப்பு நீடித்தது.

“கனெக்ட் ஆகல…”

“திரும்ப ட்ரை பண்ணுங்க” என யாஷ் சொல்ல, “பீப் ஆகுது. கனெக்டட் பட் ரிங் இல்லை” என்றாள் நிதாஞ்சனி.

“தூங்கிட்டு இருந்தால் டிஸ்டர்ப் பண்ற மாதிரி இருக்கும்ல?” என்றான் ஆர்விக்.

“இல்லை… இந்தநேரம் பெர்ரி தோட்டத்துக்கு பார்வைக்கு போவாங்க.”

“அவங்களைப்பற்றி எல்லாமே ஃபிங்கர் டிப் போல?”

“எங்க வீட்டு வழியாதான் போவாங்க. சோ தெரியும்.”

“இல்லைன்னாலும் தெரிஞ்சு வைச்சிருப்பாங்கடா. லவ் பண்றாங்களே” என யாஷ் சொல்ல…

“உஷ்… வாய் மூடுங்கடா” என்று இருவரையும் நிதாஞ்சனி அதட்டிட, அதற்கு முன்பே சக்தி அழைப்பை ஏற்றிருந்தான்.

“என்ன எடுக்கலையா?” ஆர்விக் கேட்க,

“ரிங் போன மாதிரியே தெரியல… சவுண்ட் கேட்கல” என சொல்லிக்கொண்டே காதிலிருந்து அலைபேசியை எடுத்து திரையை பார்த்தவள், அழைப்பு ஏற்கப்பட்டிருக்க…

“போச்சு… போச்சு…” என்றவளாக, ஆர்விக்கின் கையில் அலைபேசியை தூக்கிப் போட்டிருந்தாள்.

“ஹேய் நிதா” என்ற ஆர்விக், “ஹலோ” என்றான்.

“சொல்லு ஆர்வி!”

“நிதா தான் உங்ககிட்ட பேசணும் கால் பண்ணாங்க” என ஆர்விக் உண்மையை போட்டுடைக்க… நிதாஞ்சனிக்கு பயத்தில் மூச்சு நின்றது.

“மயங்கிடப்போறாள் ஆர்வி” என்ற சக்தியின் குரல் புன்னகையோடு ஒலித்தது போன்றிருக்க, அதனை ஆர்விக் முழுசா உணரும் முன்பு சக்தி அழைப்பைத் துண்டித்திருந்தான்.

சக்தியின் வார்த்தையில் நெற்றி சுருக்கிய ஆர்விக், சட்டென்று பொருள் புரிந்திட சத்தமாக சிரித்திட்டான்.

“என்னடா?” என யாஷ் கேட்க,

ஆர்விக்கின் தோளில் படபடவென இரு கைகளாலும் மாற்றி மாற்றி அடித்திருந்தாள் நிதாஞ்சனி.

“ஹேய் நிதா… ரிங் போகாமலே கால் கனெக்ட் ஆகிடுச்சுபோல” என்ற ஆர்விக், “எதிலிருந்து கேட்டாங்கன்னு தெரியல” என்று மேலும் சிரித்தான்.

“போடா… எப்போ பாரு மாட்டிவிட்டுட்டே இருக்கீங்க. உங்ககிட்ட பேசவேமாட்டேன்” என்று நிதாஞ்சனி வேகமாக அறைக்குள் சென்று மறைய,

“ஹீ ஆல்சோ லவ்ஸ் டா” என யாஷிடம் கூறினான் ஆர்விக்.

“அப்படியா?”

“மே பீ” என்ற ஆர்விக் உண்மையில் தான் தெரிந்துகொண்டதில் நிதாஞ்சனிக்காக அதிக மகிழ்வு கொண்டான்.

“அப்போ இந்த கதையில யாரும் லவ்வை சொல்லக்கூடாதுன்னு இருக்கீங்க… நடத்துங்கடா” என்று எழுந்த யாஷ், “அம்மா எழுந்ததும் கால் பண்ணுடா. நான் மேல போறேன்” என சென்றான்.

“கொஞ்சம் ஓப்பன் அப் ஆகலாம்” என சக்திக்கு ஆர்விக் குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான்.

அடுத்தநொடி பார்க்கப்பட்டுமிருக்க…

மெலிதாக சிரிக்கும் பொம்மை பதிலாக வந்தது.

நிஜத்துக்கும் அங்கு சக்தி அதரங்களில் மென்விரிப்பை படரவிட்டு தான் நின்றிருந்தான்.

நேற்றையை பறிப்பு முடிந்திருக்க… புதிய பழங்களின் காய்ப்புகளை பார்வையிட்டபடி செடிகளுக்கு நடுவில் நடந்து கொண்டிருந்த சக்தி,

அலைபேசி கையிலே வைத்திருக்க, ஒலிக்கும் முன் அதிர்வு கொடுக்கவுமே, “ஆர்வி இந்த நேரத்தில்” என்ற யோசனையோடு ஏற்றிருந்தான்.

ஆர்விக், “தூங்கிட்டு இருந்தால்?” என்றதிலிருந்தே எல்லாம் கேட்டிருந்தான் சக்தி.

அதற்கு நிதாஞ்சனி சொல்லிய பதில், யாஷின் கேலி என எல்லாம் கேட்டவனுக்கு, ஆர்விக் தான் அவளை வைத்து ஏதோ சேட்டை செய்திட அழைத்திருக்கிறான் என்றே நினைத்தான்.

ஆனால், நிதாஞ்சனி சொல்லிய “போச்சு… போச்சு…” என்பதில் சக்தியின் முகம் கனிந்து சிவந்து மறைந்தது.

நாவின் நுனியை உட்புறம் கன்னத்தில் முட்டி விடுத்தவனாக, “ஹலோ” என்றான்.

ஆர்விக் நிதாஞ்சனியை போட்டுக்கொடுக்க… தன்னுடைய மௌனத்தை அணு அளவிற்கு வெளிப்படுத்தியிருந்தான். தனது வார்த்தைகளால். அதுவும் எதிர்ப்புறம் ஆர்விக் என்பதால் மட்டுமே!

“எங்க வீட்டு வழியாதான் பெர்ரி தோட்டம் போவாங்க…” அழைப்பை வைத்த பின்னரும், அவளின் குரலை செவி வழி மனதோடு அசைபோட்டவனாக இதம் உணர்ந்திருந்தவன், ஆர்விக்கின் தகவலில் மென்னகைத்திருந்தான்.

“கண்டுபிடிச்சிட்டான்.” சொல்லிக்கொண்ட சக்தி சிரிக்கும் பொம்மையை அனுப்பி வைத்தான்.

“சிரிக்கிறீங்க நீங்க?”

“வேறென்ன பண்றது?”

“ஓகே சொல்லலாமே?

“முடிஞ்சா, உன் அக்காவை என் முன்னாடி வந்து டூ செக்கென்ட்ஸ் நிக்க சொல்லு… பார்ப்போம்.”

“ரைட்… ஒரு முடிவோடதான் இருக்கீங்க.”

“மே பீ…” என்ற சக்தி,

“தென்னரசியும், ரகுபதியும் வந்திருக்காங்க சக்தி” என கதிர்வேலனடமிருந்து வந்த அழைப்பில்…

“கௌதம் மேட்டரை முடிச்சிட்டு வர்றேன்…” என ஆர்விக்கு பதில் அனுப்பியவனாக வீட்டிற்கு புறப்பட்டிருந்தான்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 51

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
38
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. நிதா ஆர்விக் யாஷ் செம