Loading

நவிலன் வீட்டிற்கு வந்த பிறகு, அவளுக்கு ஃபோனில் அழைத்து தைரியம் கொடுத்து இருந்தான்.

ஏனோ ,அருகில் கணவனை வைத்துக்கொண்டு அவளிடம் பேசுவதற்கு சிறிது தயங்கினான்.

குழந்தையையும் ஒரு வாரம் பெட்டில் வைத்துவிட்டு, வீட்டிற்கு அழைத்து வந்து இருந்தார்கள்.

ஒன்பதாவது மாத இறுதியில் வனிதாவிற்கு குழந்தை பிறந்திருந்தது.. பெண்மகவை பெற்றெடுத்திருந்தாள்.

நிவேதா தன் தோழிகளுடன் குழந்தையைப் பார்க்க வந்தாள்.

தன் தாய் அருகில் இருப்பதால் “ஏன் அண்ணன் வரவில்லை” என்று கேட்கவில்லை.

அவள் வருவதாக முன்கூட்டியே கூறவில்லை. ஆனால், ஹாஸ்பிடல் வந்த பிறகு ரூம் எண் கேட்டதால் அடித்து பிடித்து வந்திருந்தான் நவிலன்.

அனைவருக்கும் சாக்லேட் கொடுத்தான்..

“யார் ?”என்று வனிதாவின் தாய் கேட்க ..

“என் கூட படிச்சவங்க மா” என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டாள்.

கோமதிக்கு சரண்யாவை தெரியும் என்பதால் வேறு எதுவும் கேட்காமல் அமைதியாகி விட்டார்.

வீட்டிற்கு வந்து பிறகு,” ஏன் அண்ணி அண்ணன் வரல. நீங்க மட்டும் வந்திருந்தீங்க ?”என்று கேட்டாள்

“உங்க அம்மா ,அண்ணி இருப்பாங்க. அவர் வந்தா நிறைய கேள்வி வரும். அதனாலதான்” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாள்.

” எனக்கு இப்ப வரைக்கும் புரியல. அண்ணனுக்கு உங்க பிரண்ட்ஷிப் பிடிக்கலையா ?.”

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை” என்று நிவேதா அமைதியாகி விட்டாள்.

வனிதா தாய் வீட்டிற்கு வந்த பிறகு, நவிலன்  தினமும் வந்து பார்த்துவிட்டு சென்றான். குழந்தையையும், மனைவியையும்.

மூன்றாவது மாதம் தொடங்கிய பிறகு,  வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறியிருந்தான். அருகில் இருப்பதால் தினமும் சென்று பேரபிள்ளையை பார்த்துக் கொள்ளலாம் என்பதால், கோமதி சரி என்று ஒத்துக் கொண்டார்.

நேரம் கிடைக்கும் போது வனிதா நிவேதாவிற்கு போன் செய்து பேசினாள். மீண்டும் கேட்டிருந்தாள் ,”ஏன் அண்ணி அண்ணன் வரல ?”என்று…

” அண்ணனுக்கு உங்க பிரண்ட்ஷிப்பே புடிக்கலையா ?” என்றாள் .

“அவன புடிக்கலடா வனிதா..”என்று தயங்கினாள்.

” புரியல அண்ணி எதனால அவரை பிடிக்கல?”

“அவனைப் பார்த்து பொறாமைப்படுறாரு. தன் மனைவிகிட்ட  இன்னொரு ஆண் க்ளோசா பேசுறத விரும்பல “

“அப்போ இப்போ வரைக்கும் அவர அண்ணனுக்கு பிடிக்காதா? அப்ப ஏன் நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கீங்க ?”என்றாள் கோபமாக,

எதுவும் பேச முடியாமல் நிவேதா அமைதியானாள்.

அதன் பிறகு, தன் நண்பனிடம் பேசுவதை குறைத்து இருந்தாள் நிவேதா.

வனிதா குழந்தை பெற்றெடுத்ததால், உடலில் நிறைய ஹார்மோன் மாற்றங்கள் நிகழும் என்று அமைதியாகி விட்டாள் நிவேதா..

ஆனால்,அவளிடம் பேசினாள் ..அவ்வப்போது குழந்தையின் உடல்நிலை மட்டும் கேட்டு தெரிந்து கொண்டாள் நிவேதா.

மூன்று மாதத்திற்கு பிறகு ,வனிதா தன் புகுந்து விட்டிற்கு வந்திருந்தாள்.குழந்தையின் பெயர் ” பேரினியாழ்!”

தன்னவனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது,”  அண்ணனுக்கு உன்ன பிடிக்காதா ?”என்று  கேட்டிருந்தாள்.

” அப்படிலாம் இல்லையே! யார் சொன்னா?” என்று கேட்க .

“உன் பிரண்டு தான் சொல்லுச்சு..” என்று பொரிந்தாள்.

” ஓ!” என்றவன் அமைதியானான்.

” என்ன நவி நான் கேட்டுட்டே இருக்கேன். நீ பதில் சொல்ல மாட்டுற?”

“எனக்கு தெரியாத விஷயத்தை பத்தி சொல்ல முடியாது டி” என்றவன் நகர்ந்து விட்டான்.

வேறு எதுவும் கூறவில்லை..

வனிதா புகுந்த வீட்டிற்கு வந்தும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களை கடந்திருந்தது .ஆனால்,  நவிலன் நிவேதாவிடம்  போன் பேசுவது போல் தெரியவில்லை..

நவிலனும், நிவேதாவிற்கு அழைத்தது  போல் தெரியவில்லை.

” என்ன ஆச்சு நவி. ஏன் நீ உன் பிரண்டு கிட்ட பேசலையா? ஏதும் சண்டையா பேசுற மாதிரியே தெரியல?”

“அவ என்ன கூப்பிடுறத நிறுத்தி ரொம்ப நாள் ஆகுது.. நானும் பேசல.. ஏதாவது பிரச்சனையா இருக்கும்னு கூப்பிடல ..”

“அதுக்காக போன் பண்ணி என்னன்னு கேக்க மாட்டியா?”

” மெசேஜ் பண்ணேன். நான் நல்லா தான் இருக்கேன். ஒன்னும் பிரச்சனை இல்லைனு  சொல்லிட்டா. வேற என்ன அவ கிட்ட பேச..?” என்று அமைதியாகி விட்டான் .

‘தன்னால் தானோ?’ என்று அன்றுதான் உணர ஆரம்பித்தாள்.

வனிதா நிவேதாவிற்கு அழைத்து இருந்தாள்.

  “வனிதா பாப்பா எப்படி இருக்கா? உனக்கு உடம்பு பரவாயில்லையா ?வீட்டுக்கு போயிட்டீங்களா ?”என்று கேட்டாள்.

“அப்போ நான் வீட்டுக்கு வந்தது கூட உங்களுக்கு தெரியாது அப்படித்தானே ?”

அவளிடம் அமைதி.

“நான் என் மனசுல பட்டதை கேட்டேன் .இதை விட இதுக்கு முன்னாடி நிறைய விஷயம் கேட்டு இருக்கேன். அப்ப எல்லாம் கூட நீங்க அவர் கிட்ட பேசறத நிறுத்தல.ஆனா நான் அப்படி கேட்டது மனசுல  பட்டதால ஆதங்கமா கேட்டேன்.அதுக்காக நீங்க அவர்கிட்ட பேசுறத நிறுத்துவீங்களா ? அப்போ அவ்வளவு தானா உங்க பிரண்ட்ஷிப்..”

“அப்படி இல்ல வனிதா அது..” என்று தடுமாறினாள்.

“அண்ணி  ப்ளீஸ்! எனக்கு உண்மையாவே இப்போ கஷ்டமா இருக்கு. நான் இப்ப இல்ல எப்பயுமே உங்க நட்பை தப்பா பார்த்தது கிடையாது. எனக்கு தெரிஞ்சு அண்ணனும் தப்பா பார்க்கல.. தம்பிக்கு உடம்பு சரி இல்லமா  ஹாஸ்பிடலில் உங்களை பார்க்க வந்தப்ப கூட அவர் கிட்டயே உங்களை தேத்த சொல்லித்தான் அண்ணன் சொன்னாரு .

அண்ணனும் தப்பா பாக்கல. நீங்க சொன்ன மாதிரிதான் பொசசிவ் இருக்கு .ஏதோ ஒரு வேகத்துல கேட்டுட்டேன் ..அதுக்காக நீங்க அவர்கிட்ட பேசாம இருக்கீங்களா? நான் பேசுனது தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க !” என்று வைத்து விட்டாள்.

தன் மனைவி பேசிய பிறகு, என்ன விடயம் என்பதை உணர்ந்தவன்  அவளை அமைதியாக பார்த்துவிட்டு கடக்க..

“நான் எதுவும் தப்பான எண்ணத்துல கேட்கல..”

“நீயே பாப்பா பிறந்த டிப்ரஷன்ல இருப்ப டி . உன்னை திட்ட இதுல என்ன இருக்கு. ஏதோ ஒரு வேகத்தில் கேட்டுட்ட, அவளும் பேசாம இருக்கா விடு.. அவளுக்கு எப்போ பேசணும்னு தோணுதோ ,அப்போ அவளே பேசுவா” என்று கூறியிருந்தான்.

அதன் பிறகு கிடுகிடுவென்று நாட்கள் உருண்டோட ..

வனிதா நவிலன் குழந்தைக்கு 11 வது மாதத்தில் காதுகுத்து விழா வைத்திருந்தார்கள்.

நவிலன் தன் தோழிக்கு அழைத்து விடயத்தை கூறினான்.” நல்லது டா பங்க்ஷன் எப்போ ? எங்க ?”என்று கேட்டுக் கொண்டாள் நிவேதா.

வனிதா  போன் வாங்கி, பேசினாள் ..”வருவீங்கல்ல ?”என்று கேட்டிருந்தாள்.

அவளும் வருவேன் என்று கூறியிருந்தாள்.

சரி என்று அமைதியானாள். இதற்கு இடையில் ஒரு நாள் வசந்த் எதர்ச்சியாக நவிலனை ரோட்டில் பார்க்க நேரிட்டது.

அப்போது வசந்த் நவிலனிடம் “பிள்ளைக்கு காதுகுத்து வச்சிருக்க போல?”என்று கேட்டான்.

” ஆமாம் மாமா. பதினோராவது  மாசம் ஆகுது இல்லையா அதான் காது குத்திடலாம்னு சொல்லிட்டு .. வனிதா வீட்டிலும் கேட்டுட்டு இருந்தாங்க “என்று கூறினான்.

” சரி டா.. ஆனா எனக்கு சொல்லவே இல்ல?”

“இ..இல்ல மா..மாமா அ..அது “என்று தடுமாறினான்.

” ஏன் ? என்ன எல்லாம் கூப்பிட மாட்டியா? இல்ல நான் வரமாட்டேன்னு நினைப்பா? இவனை ஏன் கூப்பிடனுமுனு நினைச்சியா?”

அவனிடம் பதில் இல்லை ..

“சரிடா. நீயும் அப்பப்ப வீட்டுக்கு போக வர இரு.”

” இல்ல மாமா அது சரியா வராது.. உங்க வீட்ல ஏதாவது நினைப்பாங்க”

” அப்படி எல்லாம் யோசிச்சா வாழ முடியுமா?  அதான் தங்கச்சி இருக்குல்ல கூட்டிட்டு வா ..” என்றான்.

” சரி மாமா. நான் வனிதாவை அப்பப்ப கூட்டிட்டு வரேன்.. நான் வந்து போக இருந்தா சரியா வராது . சரி மாமா இன்னும் நாலு நாள் கழிச்சு தான் காது குத்து வச்சிருக்கேன். கோவில்ல  மொட்டை அடிச்சு, காது குத்திட்டு மட்டும் வந்து, வீட்ல தான்  மத்ததெல்லாம் ..குடும்பத்தோட வாங்க ” என்றான்.

“சரி “என்று  சிரித்த முகத்துடன் பேசிவிட்டு சென்று இருந்தான் வசந்த் ..

நிவேதா தன் கணவனிடம் கூறிவிட்டு காதுகுத்து நிகழ்வுக்கு கிளம்பினாள் ..

“குழந்தையும் கூட்டிட்டு கெளம்பு .நம்ம ஒரு பங்க்ஷனுக்கு போகணும் ..” என்றான் திடீர் என வசந்த்..

அவனை அமைதியாக பார்த்தாள்.

என்ன அப்படி பாத்தா அர்த்தம்?”

“இன்னைக்கு நவி பொண்ணுக்கு காது குத்து.. நீங்க தான நவி வீட்டு ஃபுங்ஷன் க்கு போயிட்டு வர சொன்னீங்க இப்போ வேற எங்கையோ கூப்பிடுறீங்க? “

என்றவள்  அதற்கு மேல் அவனிடம் வாதாட விரும்பாமல் எதுவும் பேசாமல் கணவனுடன் கிளம்பினாள்.

சொல்லாமல் கொள்ளாமல் நண்பனின் வீட்டிற்கு தான் அழைத்துக் கொண்டு வந்திருந்தான் வசந்த்.

அவள் அவனை அதிர்ச்சியாக பார்க்க..

” என்ன?” என்றான் புருவம் ஏற்றி புன்னகையுடன்.

“இல்லங்க அது..” என்று தடுமாறினாள்..

” இவ்வளவு நாள் உங்க நட்பை நான் சந்தேகப்படலடி . ஆனா ,பொசசிவ் இருக்கு.  என்னால ஒரு பையன் என் பொண்டாட்டி கிட்ட பேசுறதை அந்த அளவுக்கு ஈசியா எடுத்துக்க முடியல ..அப்படி தான் சொல்லணும் .இப்போ தங்கச்சியே அதை தப்பா எடுக்காத போது, எனக்கு என்ன பிரச்சனை.

அது மட்டும் இல்லாம , நாம குடும்பமா வந்து நிக்கணும்னு  அந்த பொண்ணு யோசிக்கும் இல்லையா?  நீ உன் பிரண்டு கிட்ட ரொம்ப நாள் பேசாம இருக்கிறத நானும் தான் பார்த்தேன். அதுக்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியாது.  ஆனால், என்னால இருக்கக்கூடாது இல்லையா? அந்த பொண்ணு உங்க பிரண்ட்ஷிப்பை தப்பா நினைக்கல.

அதே சமயம் இப்போ கல்யாணம் ஆயிடுச்சு அவனுக்கு. அவங்க வீட்லயும் உங்க பிரண்ட்ஷிப்பை யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க. அந்த நம்பிக்கையில் தான் உன்னை கூட்டிட்டு வரேன். உங்க பிரண்ட்ஷிப்பை இப்ப இல்ல எப்பயும் சந்தேகப்படல . உனக்கு ஒன்னுனா தோள் கொடுக்க தான் செஞ்சிட்டு இருக்கான் ..

அவனும் கஷ்டப்பட்டு தான் வாழ்க்கையில முன்னேறி வந்து இருக்கான் என்ன போல. நம்ப பிள்ளைக்கு ஒண்ணுன்னு இதுக்கு முன்னாடி வந்து பார்க்க யோசிச்சவன் . கல்யாணம் ஆயிடுச்சுன்னு உடனே, நிறை மாச புள்ளனு கூட பாக்காம கூட்டிட்டு வந்திருந்தான் பாரு.அங்க நிக்கிறான் அவன்..அவனோட நட்பும் . அவன் கையில இருந்த  பணத்தை கொடுத்துட்டு போனான்  அவசரத்துக்கு.. அது என்னைக்கும் மறக்க மாட்டேன்.

அவன் பணம் கொடுத்தது இங்க விஷயம் கிடையாது . அவனோட மனசு மட்டும் தான்.. உன் வாழ்க்கை எந்த இடத்திலும் அவனால் ,உங்க நட்பால் கேடக் கூடாதுன்னு யோசிச்சான். அதையேதான் நானும் யோசிச்சேன். நீ போய் நின்னனா அவனுக்குனு ஒரு எதிர்காலம் இருக்கு. அது வீணாக்கிட கூடாதுன்னு யோசிச்சேன்.

இப்போ அவன் பொண்டாட்டியே நம்மளை ஏத்துக்கிட்ட பிறகு, நமக்கு என்ன பிரச்சனை. வா..” என்று கூற ..

அப்போதுதான் வனிதா இருவரையும் பார்த்தவள். வேகமாக தன் குழந்தையை தன் தாயிடம் கொடுத்துவிட்டு, ஓடி வந்து, “வாங்க அண்ணா! வாங்க அண்ணி!”  என முகம் மின்ன வரவேற்றாள்.

அதன் பிறகு பிரேம் நவிலனுக்கு வசந்த் வந்த விஷயத்தை கூற, அவனும் வந்து வரவேற்றான்

வனிதாவின் அண்ணி ” இவர் யார் ?” என்று வசந்தை பார்த்துக் கேட்க ..

“அவங்களோட ஹஸ்பண்ட். ஏன்?” என்றாள் .

“என்னமோ சொல்ற ?” என்று பிரச்சனை  பண்ண ரெடியாக..

அப்போது சுந்தர் அருகில் வந்தவன் .” அந்த பொண்ணு யாரு என்னன்னு எனக்கு தெரியும். அவரையும் எனக்கு தெரியும். நீ போய் உன் வேல என்னவோ பாரு.. இங்க நிறைய வேலை கிடக்கு .அதை விட்டுட்டு இங்க என்னன்னு பார்க்க வந்துட்டா” என விரட்டினான்.

“நீ வாங்க.. அண்ணா..அண்ணி..”  என்று அழைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்..

தன் தோழியிடமும் முகம் மலர்ந்து பேச செய்தான் நவிலன்..

வசந்த் இடம் சுந்தரி…” உன் பொண்டாட்டி மட்டும் இல்லன்னா. என் பையன் கல்யாணத்துக்கு என் மருமக வீட்டுல பேச நான் யோசிச்சு இருப்பேன் பா..” என்று கூற,

வசந்த், வனிதா இருவருக்கும் அப்படி ஒரு அதிர்ச்சி…இது புது சேதி இருவருக்கும் அதிர்ச்சியாக நிவேதாவை பார்க்க.

நிவேதா அமைதியாக இருந்தாள்.

“அன்னிக்கு நிவேதா மட்டும் வந்து பேசலன்னா நான் இந்த அளவுக்கு கொஞ்சம் கூட ஒரு அடி எடுத்து வச்சிருக்க மாட்டேன், நிவேதா வந்து பேசவும் தான்..தைரியமா பொண்ணு கேட்டு போனேன்..”என்று கூறினார்.

கண்கள் கலங்க  வனிதா  நிவேதாவின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

” அண்ணி இத்தன நாள் வரைக்கும் என்கிட்ட யாருமே இதை சொல்லவே இல்ல ..”

” நான் தான் சொல்ல வேணாம்னு சொன்னேன் ” என்றான் நவிலன்..

“அன்னைக்கு நான் உங்களை அவ்வளவு பேசினேன் இல்ல  அப்பையாவது சொல்லி இருக்கலாம் இல்லங்க..”என்றாள்.

அடுத்தவர்கள் முன்னிலையில் நவிலனை” வாங்க போங்க” என்று  தான் அழைப்பாள். தனிமையில் மட்டுமே ,”வாடா.. போடா !”போன்ற பேச்சுவார்த்தை..

” நான் தான் சொன்னேன் இல்ல.. நீ அவளை அவளுக்காக புரிஞ்சுக்கணும். அவ நமக்கு ஏதாவது  நல்லது செய்யுறா அப்படின்ற எண்ணத்தில் புரிஞ்சுக்க கூடாது ..” என்று கூற.

” அவங்களை நான் புரிஞ்சுக்காம கிடையாது. ஆனால் “என்றவள் அமைதியாக ..

வனிதாவின் அம்மாதான் “யார் ?”என்று கேட்க.

” அவரோட பிரண்டு தான் மா “என்று கூறினாள் முதன் முறையாக .

வனிதாவின் தாய் அதிர்ச்சியாக பார்க்க .

“அம்மா தப்பா எடுத்துக்காதீங்க. என் பொண்டாட்டி மேலயும் சரி, உங்க மருமகன்  மேலயும் சரி எனக்கு நம்பிக்கை இருக்கு. அவங்க பிரண்ட்ஷிப் கடைசி வரைக்கும் நிலைச்சு நிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.  அன்னைக்கு நிறை மாசமா இருக்கும்போது என் புள்ளக்கு உடம்பு சரி இல்லாம இருந்ததை பாக்குறதுக்காக தான் வனிதா வந்துச்சு” என்று கூறினான்.

” இல்லப்பா அதெல்லாம் சரிப்பட்டு வருமா? ஆம்பள பொம்பள பிரண்ட்ஷிப்..” என்றார் கோமதி.

“அம்மா நம்ப நம்பிக்கை வச்சா போதுமே!”என்றான்.

சுந்தரும், சங்கரும் “அவங்க பிரண்ட்ஷிப் எங்களுக்கு ஏற்கனவே தெரியும்” என்றார்கள்.

” என்ன ?”என்று அம்மா,மகள் இருவரும் அதிர்ச்சியாக..

“அம்மா நவிலன் கல்யாணத்துக்கு பொண்ணு கேட்டு வந்த பிறகு ,எங்களை தனிப்பட்ட முறையில் கடையில் வந்து பார்த்து, இது மாதிரி அவனுக்கு ஒரு பிரண்ட்ஷிப் இருக்கிறத சொல்லிட்டான். ஆனா, உன்கிட்ட சொல்ல கொஞ்சம் தயங்கினது நாங்க தான்..நீ   ஏற்கனவே அவனுக்கு கட்டி கொடுக்க யோசிச்ச அதனால” என்று கூற .

கண்கள் கலங்க தன் மகளை பார்க்க.

” எனக்கு எந்த சந்தேகமும் இல்லமா அவர் மேல.அவங்க நட்பு மேல ” என கூற..

அதன் பிறகு அங்கு சந்தோஷமாக காது குத்து விழா நடந்து முடிந்தது ..

அன்றிலிருந்து அவர்களின் நட்பு, இருவரின் நட்பாக மட்டும் இல்லாமல் , இரண்டு குடும்பங்களின் இணைப்பாகவும் மலர்ந்தது.

சிரிப்பிலும் ,சோகத்திலும், வெற்றியிலும் ,தோல்வியிலும் ஒன்றாக நின்று கைகளை பற்றிக் கொண்ட உறவாக  வளர்ந்தது.

அவர்களின் துணையும், அந்த நட்பிற்கு உறுதியான ஆதரவாக இறுதி வரை இருக்கட்டும்.

இன்று போலவே, என்றும் இந்த பந்தம் சிதையாமல் தொடரட்டும்.

இரு காதலும், இரு நட்பும் வாழ்நாள் முழுவதும் அழியாத தடமாக பதியட்டும்…

நட்பு என்று தொடங்கிய பாதை,

குடும்பம் என்று வேரூன்றியது.

அந்த வேர்கள் காலம் கடந்தாலும் உலராததாக இருக்கட்டும்.

சேர்ந்த கைகள் பிரியாததாக இருக்கட்டும்.

இரு மனங்கள்…

இரு நட்புகள்…

இரு காதல்கள்…

ஒரு குடும்பமாக இறுதி வரை தொடரட்டும்…

முற்றும்..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்