
மலையடிவாரத்தில் ஒரு பகுதியினர் ஏந்திழை அம்மையாரையும் பாதுகாப்பு வீரர்களையும் தாக்கிக் கொண்டிருக்க, காட்டுக்கு வெளியிலிருந்து இன்னொரு குழு காட்டினை நோக்கி ஆயுதங்களோடு, குருந்தங்காட்டினுள் அடி எடுத்து வைத்தது.
அவர்கள் குருந்தங்காடு மக்கள் வாழும் குடில்களை நெருங்கும்போது, அவர்களைச் சுற்றி மரங்களின் இடையே பதுங்கி இருந்த படைவீரர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு தாக்க ஆரம்பித்தனர்.
படைவீரர்களை தாண்டிக் கொண்டு ஒரு சிலர் குடில்களை நோக்கி முன்னேற, அவர்களை தடுத்து நிறுத்தியபடி வந்து நின்றான் மித்ரன்.
மேகக் காட்டை சேர்ந்த மனிதர்கள், ஆயுதங்களோடு காட்டிற்கு வெளியே பதுங்கி இருப்பதை அறிந்ததுமே, மித்ரன் தமது நம்பிக்கைகுரிய படைவீரர்களை கொண்டு, சிறு குழுவை உருவாக்கி, அவர்களோடு நேற்று இரவே மரங்களின் இடையே வந்து மறைந்து கொண்டான்.
சத்தம் கேட்டு வெளியே வந்த மதுராவை பார்த்து உரக்க கத்தினான் மித்ரன்,
“மதுரா இவர்கள் மேகக் காடு வாழும் மனிதர்கள், ஆயுதங்களோடு நம்மை தாக்க முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். விரைவாக பெண்களையும் குழந்தைகளையும் இந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்.”
மதுரா விரைவாக அங்குள்ள முதியவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களையும் ஒரு குடிலின் உள்ளே அனுப்பி, வீரர்களை அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தினாள்.
மலையடிவாரத்தில் எதிரிகளுடன் போராடிக் கொண்டிருந்த ஏந்திழை அம்மையார், அவர்கள் நெருப்பு வளையத்தை வீசி யாருக்கோ ரகசிய தகவல் அனுப்ப, சுதாரித்துக் கொண்டார்.
இதுவரை அவர்களை முன்னேற மட்டும் விடாமல் தடுத்துக் கொண்டிருந்தவர், முழுமூச்சாக அவர்களுடன் போராடத் தொடங்கினார்.
ஒரு சில நிமிடங்களிலேயே அவர்களை வீழ்த்தியவர், செம்பாவிடம் விரைவாக குடிலை நோக்கி போகுமாறு கட்டளையிட்டார். செம்பாவும் அவரின் குரலிலேயே அவசரத்தை புரிந்து கொண்டு, விரைவாக குடிலை நோக்கி நகரத் தொடங்கியது.
மதுரா மித்ரனை நோக்கி வரும்போது, மேகக் காட்டை சேர்ந்த மனிதர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டிருந்தது. தனது அம்புகளையும் வாளினையும் எடுத்துக் கொண்டு அவர்களோடு போராட தொடங்கினாள்.
மித்ரன் எதிரியின் மீது ஒரு கண்ணும் தன் மணவாட்டியின் மீது மற்றொரு கண்ணுமாகவே, எதிரிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.
ஏந்திழை அம்மையார் அவளுக்கு கொடுத்த போர் பயிற்சிகள், தற்போது அவளுக்கு உதவிகரமாக இருந்தது. எளிதாக வாளினை சுழற்றியும், தூரத்தில் முன்னேறி வரும் எதிரிகளை அம்பெய்தும் வீழ்த்திக் கொண்டிருந்தவளை கண்டு, முகத்தில் புன்னகை தவழ, ரசித்து கொண்டே சண்டையிட்டுக் கொண்டிருந்தான் மித்ரன்.
அந்த ராட்சச உருவங்கள் மதுராவை நெருங்கி சென்றாலும், அவளின் மீது தங்களின் ஆயுதம் படாதவாறே, அவளை சமாளிக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
அதனை கண்ட மித்ரனுக்கு, நெற்றி சுருங்க அவனின் சிந்தனை ரேகைகள் விரிந்தது.
அவர்கள் குடில்களை நோக்கி முன்னேறாமல் மதுராவை மட்டுமே தங்களது குறிக்கோளாக கொண்டு, அவளை சுற்றி வளைக்க முனைந்து கொண்டிருந்தனர்.
அந்த கும்பல்களுக்கு இடையே புகுந்த மித்ரன், அவளுடன் சேர்ந்து நின்று, இருவருமாக அவர்களை எதிர்த்து போராட தொடங்கினர்.
எதிர்த்து நின்ற மேகக்காடு மனிதர்களுடன் போராட, குருத்தங்காட்டு மக்களால் இயலவில்லை. அவர்களில் ரத்தினபுரியை சேர்ந்த போர் வீரர்களும் கலந்திருந்ததால், அவர்களின் போர் திறனை எதிர்த்து இவர்களால் போராட முடியவில்லை.
ஒரு கட்டத்தில் தீரனும் மதுராவும் மட்டுமே தனித்து அவர்களுடன் போராடிக் கொண்டிருக்க, அப்போது சரியாக அரசருடன், சிறுபடையும் அங்கு வந்து சேர்ந்தது.
தமது இளவரசருக்கு ஆபத்து என்று தெரிந்ததும், அப்படை வீரர்கள் அங்கிருந்த மேகக்காடு மனிதர்களை எதிர்த்து சண்டையிட்டனர்.
அரசருக்கும், அவரோடு வந்த அனைவருக்கும், மித்ரனை அங்கு கண்டது ஆச்சரியமாக இருந்தது. அத்தோடு அவன் மதுராவோடு சேர்ந்து எதிரிகளை பந்தாடிக் கொண்டிருந்தது, அவர்களின் புருவத்தை உயரச் செய்தது.
இருவரும் ஒருவருக்கொருவர் உதவி கொண்டே சுற்றி இருந்தவர்களை, அடித்து வீழ்த்திக் கொண்டிருந்தனர்.
மதுராவை பின்னால் இருந்து தாக்க வந்தவர்களிடமிருந்து அவளை பாதுகாக்க, அவளின் இடுப்பை வளைத்து தூக்கி, மறுபுறம் விட்டுவிட்டு, அவர்களுடன் எதிர்த்து போராடிக் கொண்டிருந்தான் மித்ரன்.
அவர்களின் இந்த அன்னியோன்யத்திலேயே, இது அவர்களது முதல் சந்திப்பு அல்ல என்பது தெளிவாகப் புரிந்தது.
பெண்களிடம் எப்போதும் எட்டி நின்று பேசும் தமது மகன், கன்னி பெண்ணான மதுரவாணியோடு சேர்ந்து, எதிரிகளை பந்தாடிக் கொண்டிருந்ததை பார்த்து தாரகை தேவிக்கு சட்டென்று மூளையில் மின்னல் வெட்டியது.
ஒருவேளை தான் நினைப்பது போல இருக்குமோ? என்று அவர் முகத்தில் புன்னகை அரும்பியது. சட்டென்று தன்னுடன் மோகனாவும் வந்திருப்பது நினைவு வந்தவராக , அவளை நோக்கி திரும்பினார்.
பிரதீபனும் இந்த காட்சியை கண்டுவிட்டு, தனது ஆருயிர் நண்பனான மித்ரனின் மனது புரிந்துவிட, எவ்வாறு தன் தங்கை இதை தாங்கிக் கொள்ளப் போகிறாளோ என்று எண்ணியவாறு, மோகனாவைத் தான் திரும்பிப் பார்த்தான்.
அவளின் அகம் படும் பாடு, அவள் முகம் செந்தனலாய் சிவந்திருந்ததிலேயே தெரிந்தது. எப்போதும் அலங்காரத்தோடு திகழும் அவளின் அழகு வதனமது, அதிக கோபத்தாலும் ஆத்திரத்தாலும் விகாரமாக காட்சியளித்தது.
சிறு நொடி பிரதீபனது சிந்தனை சிதற, எதிரி வீரன் தாக்கியதால், சுருண்டு மோகனாவின் காலடியிலேயே விழுந்தான்.
எதிரியால் தாக்கப்பட்டு கீழே விழுந்தது கூட தெரியாமல் மோகனாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான் பிரதீபன்.
அவள் கோப முகத்தோடு ஏதோ சில மந்திரங்களை உச்சரிப்பது, அவனுக்கு தெளிவாக கேட்டது.
சட்டென்று அருகில் உள்ள மரங்கள் எல்லாம் தீப்பிடித்து எறிய, அவள் முகம் தற்போது ஒரு இகழ்ச்சி புன்னகையை சிந்தியது.
தீ பற்றிக் கொண்டதும், அந்த ராட்சச உருவங்கள் தங்கள் அங்கிகளில் மறைத்து வைத்திருந்த இலைகளை, அந்த தீயினை நோக்கி வீசினர். சட்டென்று அந்த இடமே புகை மண்டலமாக மாற தொடங்கியது.
புகை வர ஆரம்பித்ததுமே, அதில் மயக்கம் வருவதற்கான இலைகள் உள்ளதை உணர்ந்து கொண்ட நண்பர்கள் மூவரும், தமது மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டனர். ஆனால் மற்றவர்கள் இவற்றை அறியாததால் புகை பரவப் பரவ ஒவ்வொருவராக மயங்கிச் சரிந்தனர்.
இந்த திடீர் மாற்றத்திலிருந்து அவர்கள் சுதாரிக்கும் முன்பே, மதுராவிற்கு பின்னால் நின்றிருந்த ராட்சச உருவம் ஒன்று, தன் கைகளில் ஒரு திரவத்தை தடவி, மதுராவின் மூக்கில் வைத்து அழுத்த, அடுத்த நொடியே அவள் மயங்கிச் சரிந்தாள்.
மயங்கி சரிந்த மதுராவை தன் தோள்களில் தூக்கி போட்டுக் கொண்ட அந்த ராட்சச உருவம், மோகனாவின் கண்ணசைவில் அவளின் பின்னால், கொற்றவை தேவி கோயிலை நோக்கிச் சென்றது.
காட்டினில் நுழைந்ததுமே இந்த யுத்த காட்சியை கண்டு பயந்து போன ரஞ்சனி, அங்கிருந்து சற்று தள்ளி வந்து விட்டாள்.
அதனால் அங்கிருந்த அந்த புகை மூட்டமானது அவளை எட்டவில்லை. சிறிது நேரத்தில் ஒரு ராட்சச உருவம் யாரோ ஒரு பெண்ணை தனது தோளில் போட்டுக் கொண்டும், மோகனாவை அழைத்துக் கொண்டும் செல்வது போல் தோன்ற, மோகனாவிற்கு ஏதோ ஆபத்து என்று பயந்து போனவள், அவர்களை பின்தொடரத் தொடங்கினாள்.
ஏந்திழை அம்மையார் தங்களது குடில்களைச் சுற்றி காட்டுத்தீ பற்றி எரிவதோடு, புகை மூட்டத்தால் சூழப்பட்டிருப்பதை கண்டார். அதில் மயக்க மூலிகை கலந்திருப்பது போன்று நெடி வர, முந்தானையால் தன் மூக்கை சுற்றி மறைந்து கொண்டு, தீயை அணைக்க தொடங்கினார்.
அவர் குடிலின் அருகில் வந்து இறங்கிய மறு நொடியே, செம்பா மதுரா இருக்கும் இடத்தை உணர்ந்து, அவளை நோக்கிச் சென்றது.
ஏந்திழை அம்மையார், ஓரளவுக்கு தீயை கட்டுப்படுத்தி விட்டு, சில மூலிகைகளை பறித்து வந்து, மயங்கி இருந்தவர்களை தெளிய வைக்க தொடங்கினார்.
சற்று தொலைவில் மேக காடு வாழும் மனிதர்களும் மகிழபுரியை சேர்ந்த படைவீரர்களும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டிருப்பதை கண்டு, இங்கு என்ன நடந்திருக்கும் என்பதை ஒருவாறு உணர்ந்து கொண்டார்.
தனது மகளுக்கு ஏதோ ஆபத்து என்று தாய் மனது உணர்த்திய போதிலும், கண் முன்னே இருக்கும் உயிர்களை காப்பாற்றுவதே தனது முதல் கடமை என்று, அவர்களை தெளிய வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் தனது மனதில் அந்த கொற்றவை தாயிடம், தமது மகளை காத்தருளுமாறு உளமார வேண்டினார்.
தன்னிடம் இருந்த மூலிகைகளை கைகளால் நசுக்கி, மயங்கி இருப்பவர்கள் மூக்கிற்கு அருகே வைத்து அவர்களை வாசம் பிடிக்க வைத்தார்.
மலையடிவாரத்தில் எதிரிகளுடன் போராடியதால் ஏற்பட்ட சோர்வினையும் புறந்தள்ளிவிட்டு, இங்கு இருக்கும் உயிர்களை காப்பாற்ற, தன்னால் முடிந்த அளவு வேகமாக மூலிகைகளை பறித்து, மயங்கி விழுந்தவர்களின் மூக்கிற்கு அருகில் வைத்தார்.
பிரதீபனால் நம்பவே முடியவில்லை, தனது தங்கையின் இந்த மாற்றத்தை, அவனும் பார்த்துக் கொண்டுதானே இருந்தான்.
மந்திரம் போட்டு தங்களை சுற்றியுள்ள மரங்களை, எரிய வைத்ததோடு அல்லாமல், அவளின் கண் அசைவுக்கு கட்டுப்பட்டு அந்த ராட்சச உருவம் அந்த பெண்ணை தூக்கிக்கொண்டு அவள் பின்னால், கொற்றவை தேவி கோயிலை நோக்கி நடந்து சென்றதை பார்த்து அதிர்ந்து போனான்.
தன் நண்பர்கள் கூறியபோது அவர்களை நம்பாமல், கோபித்துக் கொண்டு வந்த தனது மடமையை எண்ணி வருந்தினான்.
தந்தை இல்லாத குறை தெரிந்து விடக்கூடாது என்று, ஒரு குழந்தையைப் போல தானே அவளை வளர்த்து வந்தேன், ஏன் அவளது சிந்தனை இப்படி துர்த்திசையில் சென்றது? ஆண்டவா இது என்ன சோதனை? இவளின் சுயரூபம் அன்னைக்கு தெரிந்தால், அவர் தன் உயிரை அக்கணமே மாய்த்து கொள்வாரே? என்று உள்ளம் நொந்தான்.
அவன் கீழே விழுந்து கிடந்ததை கண்டு ரகுநந்தன் அவசரமாக அவன் அருகினில் வந்து, அவனை எழுப்பி நிறுத்தினான்.
அந்தப் புகையானது கண் எரிச்சலை ஏற்படுத்த, ஒரு சில வினாடிகள் கண்களை இறுக மூடி திறந்த மித்ரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. மதுராவை சுற்றி முற்றி தேடியன் அவளை காணாது கலங்கி நின்றான். தன்னால் முடிந்த மட்டும் அவளது பெயரை கூறி காடே அதிரும்படி கத்தினான்.
“மதுரா…”
அந்த சத்தத்தில் தன்னிலைக்கு திரும்பிய பிரதீபன், அவன் கைகளை மோகனா சென்ற திசையை நோக்கி நீட்டி,
“மித்ரா…கொற்றவை தேவி கோவில்.”
அவனது குறிப்பை உணர்ந்து கொண்ட மித்ரன், வேகமாக கொற்றவை தேவி கோயிலை நோக்கி ஓடினான்.
ஜோதிடரின் குருதேவரான சாந்தகுரு அடிகளார் சாரியாக அந்த நேரத்தில் தான், அங்கு வந்து சேர்ந்தார். அங்குள்ள நிலைமையை கண்டு அதிர்ந்தவர், விதியின் ஆட்டம் தொடங்கிவிட்டதை உணர்ந்து, இறைவனை வேண்டிக் கொண்டு கொற்றவை தேவி கோயிலை நோக்கி வேகமாக சென்றார்.
அவர் அந்த இடத்தை அடைந்த போது ஒரு கன்னி பெண்ணின் உயிர் பிரிந்து, கன்னி பலி நடந்து முடிந்திருந்தது.
மதுராவை தூக்கிச் சென்ற அந்த ராட்சச உருவம், கொற்றவை தேவி கோயிலை நெருங்காமல், சற்று தூரத்திற்கு முன்பே நின்று விட்டது.
“தேவி இதற்கு மேல் என்னால் அந்த கோயிலை நெருங்க முடியாது. இந்த பெண்ணுக்கும் நாம் கொடுத்த மந்திர மருந்து வேலை செய்வதை நிறுத்திவிடும். அவள் எழுந்து விட்டாள் நாம் நினைத்த காரியம் எளிதாக நிறைவேறாது. இங்கேயே அவளை பலியிட்டு விட்டு, சடலத்தை கோயிலின் உள்ளே சென்று போட்டு விடுவோம். “
“ம்ம்ம் அவளை இங்கே படுக்க வை, நமது மாந்திரீக மையை அவளை வெட்டப் போகும் ஆயுதத்தில் பூசு.”
அவள் கூறியதை கேட்டு திடுக்கிட்டு போனவன்,
“தேவி என்ன கூறுகிறீர்கள்? அப்படி செய்தால் இவளின் ஆன்மா…”
“ஏவலுக்கு வேலை செய்யும் துர்சக்தியாக மாறிவிடும். அது தெரிந்து தான், மையை அந்த ஆயுதத்தில் பூசச் சொல்கிறேன். எவ்வளவு தைரியம் இருந்தால் என் அத்தானை நெருங்குவாள், இனி இவள் என்றும் என் ஏவலுக்கு வேலை செய்யும் ஒரு அடிமை.”
மோகனாவிற்கு பின்னே அவளை தொடர்ந்து வந்த ரஞ்சனி, இவர்கள் பேசுவதை கேட்டு அதிர்ந்து, அப்படியே கால்களை மடக்கி கீழே அமர்ந்து விட்டாள்.
அந்த சத்தத்தில் திரும்பிப் பார்த்த மோகனாவிற்கு, அப்போது தான் ரஞ்சனி தங்களுடன் வந்தது தெரிந்தது.
தன்னை யாராவது பின் தொடர்கிறார்களா என்று கவனிக்காமல் விட்ட, தனது கவனக்குறைவை எண்ணி, தன்னையே திட்டிக் கொண்டாள்.
இவளிடம் விவரித்துக் கொண்டிருக்க இது நேரம் இல்லை என்பதை உணர்ந்தவள், தன் மடியில் இருந்து ஒரு பொடியை எடுத்து, ஒரு மந்திரத்தை முணுமுணுத்து ரஞ்சனியின் மீது வீசினாள்.
ரஞ்சனி அப்படியே அமர்ந்தவாக்கிலேயே, அந்த இடத்தினில் சிலையாகிப் போனாள்.
“என்னை மன்னித்துவிடு தோழி, சிறிது நேரத்திற்கு நீ இவ்வாறு இருப்பது தான் நல்லது. ம்ம்ம் ஆயுதம்?”
அவள் கட்டளை போல் கேட்டதுமே, அந்த ராட்சச உருவம் மதுராவை தரையில் படுக்க வைத்து விட்டு, ஆயுதத்தில் மாந்திரீக மையை தடவி, மோகனாவின் கைகளில் கொடுத்தது.
மோகனா காலகோடரை மனதில் நினைத்து வேண்டிக் கொண்டு, மதுராவை வெட்ட ஆயுதத்தை ஓங்கிய அடுத்த நொடி, அந்த ஆயுதத்தோடு சேர்த்து, ரஞ்சனி இருந்த இடத்தை நோக்கி தூக்கி வீசப்பட்டாள்.
செம்பா தான் மோகனாவை தூக்கி வீசி இருந்தது, தனது மதுராவை கொல்ல துணியும் அயோக்கியர்களை கண்டு, மூர்க்கமாக அவர்களை தாக்கியது. அங்கு நின்றிருந்த ராட்சச உருவத்தை தமது தும்பிக்கையால் தூக்கி வீசி, கால்களால் அவனை மிதித்து கொன்றது.
கீழே தரையில் படுத்திருந்த மதுராவை மெதுவாக தனது தும்பிக்கையினால் ஏந்தி கொண்ட செம்பா, கொற்றவை தேவி கோயில் மண்டபத்திற்க்கு சென்று, அங்கு அவளை படுக்க வைத்தது.

