Loading

       ஆலோசனை மண்டபத்தில் அரசரும் அமைச்சர்களும் அமர்ந்திருக்க, மித்ரனும் ரகுநந்தனும் பிரதீபனும் அங்கு அவர்களின் முன்பு நின்று கொண்டிருந்தனர்.

பிரதீபன் கூறிய செய்தியை கேட்டு யோசனையில் இருந்த மன்னர், அமைச்சர் பெருமக்களுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு மித்திரனை பார்த்து,

  “மித்ரா இதில் உன்னுடைய கருத்து என்ன?”

  “அரசே கொற்றவை தேவியை, ரத்னபுரியை சேர்ந்தவர்கள் சென்று வணங்க வேண்டும் என்றால், அவர்கள் அனுமதி கேட்க வேண்டியது அங்கு வாழும் மக்களிடம் தான், இதில் நாம் அனுமதி கொடுப்பதற்கு ஒன்றுமில்லை.

  நிச்சயம் அவர்கள் மற்ற நாட்டினர் காட்டினுள் நுழைவதை, விரும்ப மாட்டார்கள். எதற்கும் ஒரு முறை தாங்கள் ஏந்திழை அம்மையாரிடம் இது பற்றி கேட்டு விடுங்கள்.

     ஒருவேளை காட்டில் உள்ள மக்கள் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால், அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. தாங்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளீர்கள் அரசே, அவர்களுக்கு காவலாக இருப்போமென்று.”

“நீ கூறுவதும் சரி தான் மித்ரா. முதலில் ஏந்திழை அம்மையாரிடம் இதை பற்றி கூறி, அவர்களின் கருத்தை கேட்டறிந்த பின்பு, நாம் ரத்னபுரி அரசருக்கு பதில் மடல் அனுப்பலாம்.

  மித்ரா, நீ நாளையே காட்டிற்கு சென்று, ஏந்திழை அம்மையாரிடம் இதை பற்றி எடுத்து கூறி, அவர்களின் கருத்தினை கேட்டு வா. மற்றவர்களை அனுப்புவதை விட, இந்த நாட்டின் வருங்கால அரசனான நீ சென்று கூறினால் தான் சரியாக இருக்கும், அதுதான் மரியாதையும் கூட”

    மித்ரனால் தன் தலையை மட்டுமே சரி என்று அசைக்க முடிந்தது, பேச வார்த்தை வரவில்லை.

      அரசரிடம் விடை பெற்று அந்த மண்டபத்தில் இருந்து வெளியேறியவன், எவ்வாறு நாளை மதுராவை சந்திக்காமல் தவிர்ப்பது என்று சிந்தனையிலேயே இருந்தான்.

   மதுரா ஏரிக்கரைக்கு சென்று இருந்தால் தப்பித்தோம். இல்லையென்றால் என்ன செய்வது, என்று யோசனைகளிலேயே சென்று கொண்டிருந்தான்.

   நீ செய்து வைத்து விட்டு வந்த வேலைக்கு, அவள் உனக்காக ஆசையாக காத்துக் கொண்டு இருப்பாள் என்று வேறு நினைக்கின்றாயா? என்று அவன் மனசாட்சியே அவனைக் கேள்வி கேட்டது.

   ஆசையாக இல்லை என்றாலும், என்னை அடிப்பதற்காகவாவது அவள் காத்துக் கொண்டிருப்பாள் என்று நினைக்கிறேன், என்று தனக்குத்தானே மனதிற்குள் பேசிக்கொண்டு, நடந்து சென்று கொண்டிருந்தான்.

  அவனை அழைத்துக் கொண்டே வந்த பிரதீபனின் குரலும், ரகுநந்தனின் குரலும் அவன் செவிகளுக்குள் செல்லவே இல்லை.

    “இவன் என்னடா மந்திரித்து விட்டது போல் தனக்குத்தானே தலையை ஆட்டிக் கொண்டு செல்கின்றான்?”

     “நான்தான் கூறினேனே பிரதீபா, அவனின் நடவடிக்கைகள் ஒன்றும் சரியில்லை என்று. நாளை நாமும் அவனுடன் சென்று வரலாம், அன்று கூட காட்டில் தனியாக எங்கோ போய்க் கொண்டிருந்தான், நான் தான் அவனை திரும்ப கோயிலுக்கு இழுத்து வந்தேன்.”

“சரி ரகுநந்தா, எதற்கும் நீ அவனுடனே இரு. நான் சென்று அன்னையைப் பார்த்து வருகிறேன். அதுதான் மோகனாவை அங்கு அனுப்புமாறு பெரிய தந்தை கூறியுள்ளாரே, அதைப்பற்றி அன்னையிடம் சென்று கேட்டு வருகிறேன்.”

   ரகுநந்தன் மித்ரன் பின்னே செல்ல, பிரதீபன் தன் அன்னையை தேடிச் சென்றான்.

  மோகனா அவள் அன்னையுடன் தான் இருந்தாள். ரஞ்சனி தனது அப்பா வழி பாட்டிக்கு உடல் சுகம் இல்லை என்ற காரணத்தால், இன்று அரண்மனைக்கு வரவில்லை.

     மோகனா, இன்று எப்படியும் ரத்னபுரியில் இருந்து செய்தி வந்திருக்கும் என்று தெரிந்து தான், தன் அன்னையுடனே சுற்றிக் கொண்டிருந்தாள்.

  அவள் எதிர்பார்த்தபடியே பிரதீபன், அவன் அன்னையிடம் வந்து விஷயத்தை கூற, மேனகா தேவி யோசனையில் ஆழ்ந்தார்.

விஜய பூபதிக்கு அன்று கிடைத்த தண்டனைக்கு பிறகு, அவர் தன் புகுந்த வீட்டிற்கு செல்லவே இல்லை. தன் அண்ணனுடனே, பெற்ற பிள்ளைகளுடன் பிறந்தகத்தில் தங்கி விட்டார்.

அன்று அரசரை சந்திக்க வந்த தன் கணவனின் அண்ணன், ரத்னாபுரியின் அரசராக வந்து பார்த்திபேந்திரரை சந்தித்து விட்டு அப்படியே சென்று விட்டார்.

   இப்போது மோகனாவை பார்க்க வேண்டும் என்று கூறுவதால் புகுந்த வீட்டினரின் கோரிக்கையை ஏற்கவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் குழப்பத்தில் தவித்து நின்றார்.

    “தாயே எதற்காக இந்த குழப்பம்? அழைப்பது நமது நாட்டிலிருந்து தானே? அங்கு செல்வதற்கு எதற்கு இந்த தயக்கம்? எனக்கும் நமது நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று ஆசையாக உள்ளது. சரி என்று சொல்லுங்களேன்.”

   “மோகனா ரத்னபுரியை நமது நாடு என்று சொல்லும் உரிமையை, என்றோ நாம் இழந்து விட்டோம். உன் தந்தையின் அத்தகைய செயலுக்குப்பின், எனக்கு ஏனோ அங்கு செல்லவே பிடிக்கவில்லை. அதனால் மகிழபுரியிலேயே நாம் இருந்து விட்டோம்.

      இப்போது திடீரென்று புதிதாக அவர்கள் உன்னை அனுப்புமாறு கேட்கும் போது, என்னால் சரி என்று சொல்லவும் முடியவில்லை, வேண்டாம் என்று மறுத்து கூறவும் முடியவில்லை, ஏனென்றால் நீ அந்த குடும்பத்தின் ஒரே முதல் பெண் வாரிசு.

      எதற்காக இவ்வளவு காலம் கழித்து மடல் அனுப்பி உள்ளனர் என்று தான் தெரியவில்லை?”

“தாயே ரத்தினபுரியில் இருந்து இந்த மடல் மட்டுமல்ல இன்னொன்றும் வந்திருந்தது. கொற்றவை தேவி திருவிழாவில் கலந்து கொள்வதற்கு அனுமதி வேண்டி அரசருக்கு எழுதப்பட்டிருந்தது.”

     மேனகா தேவிக்கு பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் தான் ஞாபகத்திற்கு வந்தது. அன்று இதுபோலத்தான் தனது புகுந்து வீட்டில் இருந்து கொற்றவை தேவி திருவிழாவிற்காக வந்திருந்தார்.

      ஆனால் நடந்தது என்ன? தனது கணவரின் மறுபக்கத்தை அல்லவா கண்டார். அதுவும் கொடூரமான மறுபக்கம்.

      எப்படித்தான் அந்த பிஞ்சு குழந்தையின் கண்முன்னே, அதன் தாய் தந்தையரை கொன்று விட்டு, அக்குழந்தையையும் கொள்ள துணிந்தார், என்று நினைக்கும் போதே அவரின் மனம் வலித்தது.

  அன்றுதான் தனது கணவரை அவர் கடைசியாக பார்த்தது. அரச தண்டனை நிறைவேறிக் கொண்டிருக்கும் போது யாரோ சிலர், அவரை அழைத்துச் சென்றுவிட்டதாக கேள்விப்பட்டார். அதன் பிறகு, இன்று வரை தன் கணவரை அவர் பார்க்கவே இல்லை.

“பிரதீபா திருவிழாவிற்கு அவர்கள் வருகிறார்கள் என்றால், அப்போதே வந்து மோகனாவை பார்த்து செல்லலாமே. எதற்காக இப்போது மோகனாவை வர சொல்கிறார்கள்?”

  “தாயே அவர்களுக்கே தெரிந்து உள்ளது, எப்படியும் கொற்றவை தேவி திருவிழாவிற்கு அவர்கள் வருவதற்கு அனுமதி கிடைக்காது என்று. அதனால் தான் இந்த மடலையும் சேர்த்தே அனுப்பியுள்ளனர் என்று நினைக்கிறேன்.”

  “பிரதீபா அப்படி என்றால்?”

  “காட்டினுள் செல்வதற்கு முதலில் அங்கு வாழும் மக்களிடம் அனுமதி பெற வேண்டுமே? எப்படியும் அவர்கள் அதற்கான அனுமதியை கொடுக்கப் போவதில்லை. இருந்தாலும் எதற்கும் கேட்டு வருவோம் என்று நாளை மித்ரன் அங்கு செல்ல உள்ளான்.”

   கேட்டுக் கொண்டிருந்த மோகனாவிற்கு ரத்தம் கொதித்தது, திமிர் பிடித்த காட்டுவாசிகள் பௌர்ணமி பூஜை மட்டும் நல்லபடியாக முடியட்டும், அந்த காட்டோடு சேர்த்து, அந்த காட்டுவாசிகளையும் எரித்து விடுகிறேன் என்று மனதில் சூளுரைத்துக் கொண்டாள்.
    
        “தாயே தங்களுக்கு குழப்பமாக இருந்தால், நாளை அத்தானுடன் நீங்களும் சென்று, இதுகுறித்து கொற்றவை தேவி கோயிலில் பூ கேட்டு வரலாமே?”

      “நல்ல யோசனை தான் மோகனா. நான் இது குறித்து அண்ணியாரிடமும் மித்ரனிடமும் கலந்தாலோசித்து விட்டு வருகிறேன்.”

மேனகா தேவி தன் அண்ணியை காணச் செல்ல, மோகனா தன் அண்ணனிடம் புலம்பினாள்.

“ஏன் அண்ணா, இந்த சிறு சிறு  விஷயங்களை கூட அவர்களிடம் சொல்லிவிட்டு தான் நாம் செய்ய வேண்டுமா? இது என்னதான் வழக்கமோ போ, நான் சொன்னாலும் அம்மா கேட்க மாட்டேன் என்கிறார்கள், நீயாவது அவர்களிடம் இப்படி இருக்க வேண்டாம் என்று கூறேன்.”

  பிரதீபன் புன்னகையுடன் அவள் தலையினை வாஞ்சையாக தடவி விட்டு,

  “மோகனா நாம் இருவரும் ஏதாவது முடிவெடுத்தால், முதலில் யாரிடம் வந்து கூறுவோம்? அன்னையிடம் தானே? நமது அன்னைக்கும் அத்தை தான் அன்னையைப் போன்றவர். அதனால்தான் அன்னை அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார்.

  நமது தந்தை செய்த தவறை இதுவரையிலும் ஏதாவது ஒரு நாளாவது சுட்டிக்காட்டி, நம்மை இழிவாக பேசியிருக்கின்றாரா? அவரது பிள்ளைகள் போல தானே நம்மையும் பார்க்கிறார். இனி இது போல் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதே.”

  ஒரு நல்ல தமையனாக, தனது அன்பு  தங்கைக்கு நல்ல புத்திமதிகளை சொல்லி விட்டு, பிரதீபன் அங்கிருந்து சென்றான்.

     ரத்தினபுரி ராஜ்யத்தை அரசாண்டு வந்த நாகேந்திர பூபதி, உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாகி விட , அவரின் புதல்வர் ரங்கராஜ பூபதி தற்போது அரசாண்டு கொண்டிருக்கிறார்.

     “ராஜகுரு எதற்காக மோகனா கொற்றவை திருவிழாவிற்கு மகிழபுரி அரசனிடம் அனுமதி கேட்கச் சொன்னால்? ஏற்கனவே அங்குள்ள நம் நாட்டு வியாபாரிகளை சந்தேகக் கண் கொண்டு நோட்டமிட்டு வருகிறார்கள். இப்போது நம் நாட்டில் இருந்து அனுமதி கேட்டால் கொடுப்பார்களா?

அனுமதி கிடைத்தவுடன் நமது படைகளை மகிழபுரிக்கு கொஞ்சம் கொஞ்சமாக அனுப்ப வேண்டும் என்று வேறு கூறுகிறாள். இது ஒன்றும் கடைசி பூஜை இல்லையே இன்னும் ஒரு பூஜை மீதம் உள்ளதே?

  தாங்கள் தானே கூறினீர்கள் அங்கு கொற்றவையின் அருளாசி உள்ளவரை, நம்மால் அந்த நாட்டில் உள்ள செடிகளை கூட அசைக்க முடியாது என்று, இப்போது எதற்காக இந்த ஏற்பாடு எல்லாம் அவள் கூறியபடி செய்யச் சொல்கிறீர்கள்?”

     “சரிதான் அரசே இது கடைசி பூஜையில்லை தான் இன்னும் ஒரு பூஜை உள்ளது. ஆனால் அடுத்த பூஜையை அடுத்த வருடம் செய்ய தேவையில்லை, இந்த பௌர்ணமி முடிந்து வரும் அமாவாசை திதியில் தான் செய்ய வேண்டும்.

   இந்த பௌர்ணமி பூஜைக்கு முன் ஒரு கன்னிப் பெண்ணின் ரத்தத்தை, கொற்றவை தேவியின் கோயிலை சுற்றி, வேலி போன்று தெளித்து, அவளை மந்திரக்கட்டுக்குள் அடைக்க வேண்டும்.

      அப்படி நாம் செய்து விட்டால் அம்மாவாசை திதியில் நாம் வழங்கப் போகும் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலியை, அந்த காட்டினுள் கொடுத்து காலக்கோடரின் சக்தியை அந்த ராஜ்ஜியம் முழுவதும் பரப்பலாம்.

  கடைசி பூஜை முடிந்து விட்டால் மோகனாவிற்கு காலக்கோடரின் சக்திகள் அனைத்தும் வந்துவிடும். பிறகு அந்த கொற்றவையே, மந்திர கட்டை உடைத்துக் கொண்டு நம்மை எதிர்த்து வந்தாலும் கூட, அவளால் நமது சக்தியை எதிர்த்து தாக்கு பிடிக்க முடியாது. அந்த சமயத்தில் நமது படைகள் அங்கே இருந்தால் சுலபமாக மகிழபுரியை சுற்றி வளைத்து விடலாம் ஆகையால் தான் கூறுகிறேன்.”

   “ராஜகுரு அப்படி என்றால்…”

   “ஆம் அரசே மகிழபுரி ராஜ்ஜியம், காலகோடரின் கட்டுப்பாட்டிற்குள் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. பௌர்ணமி பூஜைக்காக மோகனா வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.”

   “ராஜகுரு, நாம் பலி கொடுக்க வேண்டிய அந்த கன்னிப் பெண்ணை எவ்வாறு மகிழபுரிக்கு மோகனாவுடன் அனுப்பி வைப்பது.

   வியாபாரிகள் போல் வேடம் இட்டவர்களுடன் அவளை வேலையாளாக அனுப்பி வைக்கலாம் என்று நினைக்கிறேன். இப்போதே வீரர்களை அனுப்பி நாட்டிலுள்ள கன்னிப்பெண்களை அழைத்து வர சொல்கிறேன்.”

“தேவையில்லை வேந்தே, நாம் கொடுக்கப் போகும் பலியானது, அந்த கொற்றவை தேவியினுடைய காட்டில் தான் வளர்ந்து கொண்டிருக்கிறது.”

“அப்படியா? யார் அது ராஜகுரு?”

“ஏந்திழையின் வளர்ப்பு மகள், பிறப்பிலேயே கொற்றவை தேவியின் அருளை பெற்றவள். அவளைத்தான் நாம் இந்த பௌர்ணமி பூஜைக்காக பலி கொடுத்து, அந்த கொற்றவையை மந்திர கட்டுக்குள் வைக்கப் போகிறோம்.”

  “ஆஹா கொற்றவையை மந்திர கட்டுக்குள் வைக்க, அவளின் பக்தர்களையே பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம் என்ன ஒரு அருமையான திட்டம்!

   ஆனால் எவ்வாறு அந்த காட்டில் நுழைவது? அப்படியே நுழைந்தாலும் ஏந்திழையை மீறி எவ்வாறு அவளது மகளை பலி கொடுப்பது?”

    “அதற்கான நாடகம் நாளையே அரங்கேறும். இது முழுக்க முழுக்க மோகனாவின் விருப்பம். தனது தந்தையை விட்டு பிரிய காரணமாக இருந்த குடும்பத்தில் பிறந்த குழந்தை, உயிருடன் இருக்கக் கூடாது என்று நினைக்கிறாள். இந்த நாடகத்தை வழிநடத்த போகிறவளும் அவள்தான்.”

    ரஞ்சனியின் வீட்டில் அவளது அப்பாவின் தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஒன்று கூடிய அவர்களின் உற்றார் உறவினர்கள், வீடு எங்கும் பரவி இருந்தனர். மகாராணியார் கூட தனது நாத்தனாரின் அத்தை முறை என்பதால், வந்து பார்த்துவிட்டு தான் சென்று இருந்தார்.

  ரகு நந்தனின் தாயும் தந்தையும் கூட அங்கு தான் இருந்தனர். வைத்தியர் வந்து பார்த்துவிட்டு பாட்டியின் இறுதி காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறியதால், அவர் தனது பேரனுக்கும் பேத்திக்கும் திருமணம் செய்து வைத்து பார்க்கும் ஆசையினை, தன் பிள்ளைகள் இருவரிடமும் பகிர்ந்து கொண்டார்.

  ரஞ்சனியின் தந்தையும் ரகுநந்தனின் தந்தையும் அன்றே, ராஜாங்க ஜோதிடரை சென்று கண்டு வந்தனர்.

    அவர்களின் ஜாதகத்தை கணித்த ஜோதிடரின் முகமானது குழப்ப ரேகைகளால் சூழப்பட்டு இருந்தது.

“இருவருக்கும் பொருத்தம் அமோகமாக உள்ளது, நீங்கள் திருமண வேலையை தாராளமாக தொடங்கலாம். வரக்கூடிய பௌர்ணமி நாள் சுபமுகூர்த்த தினமே. அந்நாளிலேயே நீங்கள் இவர்களின் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்.”

  “கொற்றவை தேவியின் திருவிழா வருகிறது, அது முடிந்து வரும் வளர்பிறை நாளிலே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்.”

அதை கேட்ட ஜோதிடர்,

“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இவர்களின் திருமணம் நடைபெறுவது உசிதம்.”

என்று கூறினார்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. கொஞ்சம் திகிலா பயங்கரமா கதை நகருது.. என்ன நடந்திருக்குமோ அப்படின்னு பயமா இருக்கு.. அப்போ சாக போறது மதுராவும் மித்ரனுமா 😳😳

    1. Author

      இப்ப தான் கதையின் முக்கிய நிகழ்வுகள் ஆரம்பம் சிஸ்🙂