Loading

  கொற்றவை தேவியின் சிலை செம்பளுப்பு நிறத்தால் ஆன, செம்பவள கற்களால், ஆதிகால மனிதர்களால் உருவாக்கப்பட்டது. தேவியின் கண்களில் உள்ள நீல மணிக்கற்கள், எப்போதும் ஒளி வீசிக் கொண்டிருக்கும்.

இயற்கை அன்னையாக மலைவாழ் மக்களால் போற்றப்பட்டவள். அவர்களின் குலதெய்வமான இந்த தாயை, சுற்றியிருந்த பல ராஜ்யங்களில் உள்ள அரசர்களும், வழிபட்டு வந்தனர். அந்த அளவுக்கு மகிமை பொருந்தியவள்.

போருக்கு செல்லும் முன் இந்த தாயை வழிபட்டால், வெற்றி நிச்சயம் என்பது அப்போது பரவலான கருத்தாக இருந்தது. அதனால் இந்த கொற்றவை தேவியின் சிலையை கடத்திச் செல்லவும், தமது நாடுகளுக்கு தூக்கிச் செல்லவும், பலர் முனைந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் கடைசியில் மாண்டு தான் போயினர்.

  ஒரு கட்டத்தில் அரச குடும்பங்களின் தொல்லைகள் பொறுக்க முடியாமல், மலைவாழ் மக்கள் தமது தேவியை, பத்திரமாக ஒரு குகையில் வைத்து வழிபட தொடங்கினர்.

     அதோடு பொதுவெளியில், கற்களால் ஆன கொற்றவை தேவியின் சிலையை எழுப்பி, அதற்கு விழா எடுத்து வருகின்றனர்.

   இவர்கள் குலத்தில் நீல கண்களுடன் பிறக்கும் பெண் குழந்தை, கொற்றவை தேவியின் அருளுக்கு பாத்தியமானவராக கருதுகின்றனர். அவரே தேவியின் உண்மையான செண்பவள சிலைக்கு, பூஜை புனஸ்காரங்கள் செய்பவர் ஆவார். அவரைத் தவிர வேறு யாருக்கும் தேவியின் சிலை உள்ள இடம் தெரியாது.

   இருபத்து எட்டு வருடங்களுக்குப் பிறகு, இப்போது தான் அந்த மலைவாழ் மக்களின் குலத்தில், ஒரு பெண் குழந்தை நீலக் கண்களுடன் அவதரித்து இருக்கின்றது.

   இக்குழந்தையை பெற்றவர்கள் மிகவும் பாக்கியசாலிகளாக கருதப்படுகின்றனர். அவர்களும் அக்குழந்தையோடு சேர்த்து, தேவியின் உண்மையான சிலையை தரிசிக்க முடியும்.

    அவ்வாறு தேவியின் சிலையை தரிசித்து வந்த இருவர் தான், விஜய பூபதியின் கைகளால் உயிர்த் துறந்தவர்கள்.

  ஏந்திழை அம்மையாரும் இதே போன்று இருபத்து எட்டு வருடங்களுக்கு முன், அரச குடும்பத்தினரால் தம் தாய் தந்தையரை இழந்தவர் தான்.

  “அரக்கனே இரண்டு உயிர்களை அநியாயமாக அழித்துவிட்டு, சிறு குற்ற உணர்வு கூட இல்லாமல் பேசுகிறாயே, நீயும் ஒரு மனிதனா? நீ அதை மட்டுமா செய்தாய்? ஒன்றும் அறியா இந்த பிஞ்சுக் குழந்தையையும் கொல்லத் துணிந்தாயே? சரியாக அந்த நேரத்தில் நான் வில் தொடுத்து விட்ட அம்பு,  உன் உள்ளங்கையை பதம் பார்க்காமல் இருந்திருந்தால், பால்மணம் மறவா இந்த பிஞ்சுக் குழந்தையும், இம்மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றிருக்கும்

வேந்தே நாங்கள் தான் அரச சங்கார்த்தமே வேண்டாம் என்று தானே, நாங்கள் உண்டு காடு உண்டு என்று இருந்தோம். உங்கள் முன்னோர்கள் தான், எமது அரச பரம்பரையால் தங்களுக்கு, எந்த தீங்கும் நேராது என்று தேவியின் மீது உறுதி பூண்டனர். அதனால் தான் தங்கள் நாட்டினரை மட்டும், தேவியை பூஜித்து கொள்ள சம்மதம் கூறி, காட்டினில் வந்து செல்ல அனுமதித்தோம். இப்போது இதற்கு என்ன பதில் கூற போகின்றீர்கள். பெற்றோரை இழந்து நிற்கும் ஒன்றும் அறியா, இந்த சிறு குழந்தைக்கு தாங்கள் கூறப் போகும் நியாயம் தான் என்ன?”

   “தாயே எமது முன்னோர்கள் கொடுத்த வாக்கு எப்போதும் மாறாது. நான் வழங்க போகும் இந்த தண்டனை நாட்டில் உள்ள, அனைவருக்கும் ஒரு பாடமாக அமையும். நான் தங்களுக்கு ஒரு வாக்கு கொடுக்கிறேன். நான் மட்டுமல்ல என் பரம்பரையே தங்களது குலத்திற்கு பாதுகாப்பாளராக இருப்பர். தங்கள் குலத்தில் உள்ளோருக்கு ஏதாவது ஆபத்து என்றால், எங்களது உயிரை கொடுத்தாவது காப்போம். இது எனது மணி முடி மீது ஆணையாக, நான் எடுத்துக் கொண்ட உறுதியாகும்.

  விஜயா நீ செய்த தவறை எண்ணி வருந்துவாய் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நீயோ சிறு குற்ற உணர்வு கூட இல்லாத நின்று கொண்டிருக்கிறாய். இரண்டு உயிர்களின் மதிப்பு அவ்வளவு எளிதாக போய் விட்டதா உனக்கு? இதோ உனது உயிரும் துடிக்கும் போது, அதை நீ உணர்ந்து கொள்வாய். யார் அங்கே இவனை நாட்டு மக்கள் அனைவரும் பார்க்குமாறு, முச்சந்தியில் நிறுத்தி சாகும்வரை முள் சாட்டையால் அடியுங்கள்.”

  “மன்னா நான் ரத்தினபுரியின் இளவரசன், அத்தோடு தங்களின் மைத்துனனும் ஆவேன். இந்த காட்டுவாசிகளுக்காக என்னை எதிர்க்க துணிந்தீர்களா?”

   “நீ யாராய் இருந்தால் என்ன? மகிழபுரியில் எப்போதும் நீதிக்கு மட்டுமே முதலிடம். செய்த குற்றத்திற்கு தக்க தண்டனையை நீ அனுபவித்தே ஆக வேண்டும். ம்ம்ம் இவனை இழுத்துக் கொண்டு செல்லுங்கள்.”

வீரர்கள் விஜய பூபதியை சங்கிலியால் பிணைத்து, இழுத்துக் கொண்டு சென்றனர்.

  இந்த தீர்ப்பை யாருமே எதிர்பார்க்கவில்லை என்பது, அவர்களின் முகத்திலேயே தெரிந்தது. மேனகா தேவி அழுது கொண்டே குழந்தைகளுடன் சென்று விட்டார்.

கொற்றவை தேவி திருவிழாவிற்காக தன் பிறந்தகம் வந்தவர், தன் கணவரின் இந்த செயலை அவர் எதிர்பார்க்கவே இல்லை. செய்வதை எல்லாம் செய்துவிட்டு, சிறு குற்ற உணர்வு கூட இல்லாது, எதிர்த்து கொண்டு நிற்கும் அவரை காண்கையில், மேனகா தேவிக்கு வருத்தமாக இருந்தது.

   தனது அண்ணனின் நீதி நியாயங்களை பற்றி தெரிந்தவர் ஆதலால், தன் கணவருக்காக பரிந்து கொண்டு பேசவும், அவரால் முடியவில்லை. இருதலைக்கொல்லி எறும்பாக தவித்து நின்றார்.

  அரச கட்டளையை வீரர்கள் நடுவீதியில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது, ஐந்தாறு குதிரைகளில் வந்த, கருப்பு துணியால் முகத்தை மூடிய வீரர்கள், காவல் வீரர்களை அடித்துப் போட்டு விட்டு விஜய பூபதியை தூக்கிக் கொண்டு சென்றனர்.

  நடந்தவைகளை கேள்விப்பட்டதும் பார்த்திபேந்திரர், கடும் கோபம் கொண்டார். ரத்தினபுரி அரசருக்கு அவசரமாக மடல் ஒன்றை எழுதினார்.

உங்கள் தம்பி மகிழபுரி நாட்டின் குற்றவாளி, அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கேள்விப்பட்டால், எங்கள் நாட்டைப் பகைத்துக் கொண்டதாக அர்த்தம். போர் முரசு விரைவில் முழங்கும்.

மடலை கண்டதும் ரத்னபுரியின் அரசரும், விஜய பூபதியின் அண்ணனுமான நாகேந்திர பூபதி, அடித்து பிடித்துக் கொண்டு பார்த்திபேந்திரரை சந்திக்க வந்தார்.

“அரசர் பெருமானே, நான் அந்த பாவிக்கு அடைக்கலம் கொடுக்கவே இல்லை. அவன் எங்கு இருக்கிறான் என்று கூட எனக்கு தெரியாது. தயை கூர்ந்து நான் சொல்லுவதை நம்புங்கள்.”

“நான் உன்னை நம்புகிறேன் நாகேந்திரா, ஒருவேளை நீ பொய் சொல்கிறாய் என்று தெரிந்தால், ரத்தினபுரி தனி நாடாக இல்லாமல் மகிழபுரியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.”

   விஜய பூபதியின் உடல் முழுவதும் மூலிகை கட்டுகள் போடப்பட்டு, மஞ்சத்தின் மீது படுக்க வைக்கப்பட்டிருந்தான்.
 
  ரத்னபுரியின் ராஜகுருவான, சர்வேஸ்வரர், விஜய பூபதிக்கு மூலிகை நீரை புகட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது நாகேந்திர பூபதியின் மகனும் விஜய பூபதியின் தோழனுமான, ரங்கராஜ பூபதி அவசரமாக அந்த அறையினுள் நுழைந்தான்.

   “ராஜகுரு விஷயம் கேள்விப்பட்டீர்களா, என்ன தைரியம் இருந்தால் அந்த பார்த்திபன், நமது நாட்டை சிறை பிடிக்கப் போவதாக மடல் அனுப்பி இருப்பான். என் தந்தையும் வெட்கமின்றி அவன் கால்களில் போய் விழுந்து கிடக்கிறார்.”

   “நானும் கேள்விப்பட்டேன் ரங்கா, அவனுக்கு தலைக்கனம் கூடிவிட்டது. ஒரே அடியாக அவன் தலையை கொய்து, நமது தெய்வம் காலக்கோடனுக்கு காணிக்கையாக்கி விடுவோம்.”

   “விஜயன் சற்று பொறுமை காத்திருக்கலாம் என்று தோன்றுகிறது ரங்கா. அந்த இரண்டு  காட்டுவாசிகளையும் துன்புறுத்தி, கொற்றவையின் இருப்பிடத்தை அறிந்திருந்தால், அவளது சிலைக்கு கீழ் உள்ள மந்திர தகடுகளை எடுத்து, நம் தெய்வத்திற்கு காணிக்கையாக்கி இருக்கலாம். அத்தோடு அந்த மகிழபுரி சாம்ராஜ்யமும் நமது கட்டுப்பாட்டின் கீழ் வந்திருக்கும். நிலைமை கைமீறி போய்விட்டது. இனி அந்த காட்டினுள் நுழைவது முடியாத காரியம். நாம் சற்று காலம் பொறுத்து தான் போக வேண்டும்.”

   “விஜயனுக்கு தற்போது எப்படி உள்ளது ராஜகுரு? தன் தங்கையின் கணவன் என்று கூட பாராமல், நடுவீதியில் நிறுத்தி, இப்படி உயிர் போகும் அளவுக்கு சித்திரவதை செய்ய சொன்ன, அந்த பார்த்திபனை பற்றி நினைக்கும் போது என் உள்ளம் கொதிக்கின்றது.”

    “எப்படியும் விஜயனின் உடல் தேறுவதற்கு சில மாதங்களாவது ஆகும். நீ உன் தந்தையிடம் இது பற்றி எதுவும் கூறி விடாதே, அந்த பார்த்திபனுக்கு பயந்து, விஜயனை காட்டிக் கொடுக்கவும் அவர் தயங்க மாட்டார்.”

  மேனகா தேவி தன் குழந்தைகளுடன் புகுந்த வீட்டிற்கு செல்லாமல் பிறந்தகத்திலேயே தங்கி விட்டார்.

   பிரதீபன் தன் தாயினைப் போன்று அமைதியான குணம் படைத்தவன். ஆனால் மோகனாவோ தன் தந்தையை ஒத்து வளர்ந்து வந்தாள்.

   தனது கீழ் வேலை செய்யும் வேலைக்காரர்களை, அவள் ஒருபோதும் மதித்ததே இல்லை. ரஞ்சனியே அவளின் உற்ற தோழியானாள்.

அவளுக்கு பிடித்தது இரண்டு விஷயங்கள் தான், ஒன்று புத்தாடைகளும் ஆபரணங்களும் அணிந்து கொண்டு, தன்னை அலங்கரித்துக் கொள்வது. இன்னொன்று மித்ர தேவேந்திரன்.

  மித்ரன் அரண்மனையில் எங்கிருக்கிறான் என்று தெரிய வேண்டும் என்றால், மோகனாவை கேட்டால் போதும், ஏனெனில் அவனின் பின்னே அவள் தான் வால் போன்று, எப்போதும் தொடர்ந்து கொண்டே இருப்பவள்.

   மித்ரன் தனது நண்பர்கள் பிரதீபன் மற்றும் ரகுநந்தனுடன், கொற்றவை தேவி திருவிழாவை காண சென்று கொண்டிருந்தான். ரகுநந்தன் ரஞ்சனியின் அத்தை மகன்.

   மித்ரன் கொற்றவை தேவி திருவிழாவிற்கு செல்வது, அந்த நீலவிழிப் பெண் குழந்தையை காண்பதற்காக தான். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக அங்கு சென்று எங்கு தேடியும், அவளை காண முடியவில்லை.

  ஏந்திழை அம்மையார் தாய் தந்தை இல்லாத அந்த பிஞ்சு குழந்தைக்கு, தானே கன்னி தாயாக மாறினார். அவளுக்கு மதுரவாணி என்று பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்தார்.

  அரசு குடும்பத்தை சேர்ந்தவர்களின் கண்கள், அவள் மீது பட்டுவிடக் கூடாது என்பதற்காக, விழா நடைபெறும் போது எல்லாம், அவளை அழைத்துச் சென்று  குகை கோயிலில் விட்டு விடுவார்.

    நண்பர்கள் மூவரும் தமது குதிரைகளில், பேசிக் கொண்டே போய்க் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு பின்னால் பல்லுக்கு வரும் சத்தம் கேட்டது.

    நண்பர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மித்ரன் வெளிப்படையாகவே தலையினில் அடித்துக் கொண்டான்.

   “அடே பிரதீபா, உன் தங்கைக்கு மித்ரனை பின் தொடர்வதை தவிர, வேறு வேலையே இல்லையா என்ன? அவன் எங்கு சென்றாலும் எப்படித் தான் கண்டுபிடிக்கின்றாளோ தெரியவில்லை. இவளுக்குத் தெரிய கூடாது என்று தான், அரண்மனையை சுற்றிக் கொண்டு பின் வாசல் வழியே திருவிழாவுக்கு புறப்பட்டோம், அப்படியும் கண்டுபிடித்து துரத்தி வந்து விட்டாளே.”

    “என் தங்கை மித்ரனை எந்நேரமும் பின்தொடர்கிறாள் என்று உனக்கு எப்படி தெரியும்?”

   “அது தானே, நந்தா அவள் என்னை பின்தொடர்வது அரண்மனைக்குள் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும். வெளியிடங்களில் அவ்வளவாக என்னை பின்தொடர மாட்டாளே? நீயோ ஓரிரு முறை தான், அரண்மனைக்குள் வந்து சென்றுள்ளாய், அது உனக்கு எப்படி தெரியும்?”

   “அதை நான் கூறுகிறேன் மித்ரா, என் தங்கையின் தோழியை, எந்நேரமும் ரகுநந்தர் பின் தொடர்வதால், அவருக்கு இந்த விஷயம் தெரிந்துள்ளது என்று நினைக்கிறேன்.”

“என்ன? அப்படியா நந்தா?”

   “அட நீங்கள் வேறு ஏனடா? கேலி செய்து கொண்டிருக்கிறீர்கள். என் மாமன் மகள் ஆறு வயது வரை, அத்தான் அத்தான் என்று என் பின்னே சுற்றிக் கொண்டிருந்தாள். என்று உன் தங்கை அவளின் தோழியானாளோ, அன்றிலிருந்து என்னை பார்த்தால்,  முகத்தை திருப்பிக் கொண்டு செல்கின்றாள். அழகிய ஆடைகள் ஆபரணங்கள் கூட வாங்கி, என் அத்தையின் மூலம் அவளுக்கு கொடுத்து பார்த்தேன், பிரயோஜனமே இல்லை.”

“மானங்கெட்டவன், மாமன் பெண்ணை வசீகரிக்க, ஆடை ஆபரணங்களை லஞ்சமாகக்  கொடுக்கின்றான் பார்.”

    “உனக்கு என்னடா பிரதீபா? உன் மாமன் மகளை வசீகரிக்க, சங்கினில் சிறிது பாலை ஊற்றி புகட்டினால் போதும். எனக்கு அப்படியா?”

  “எது? அடேய், கவிதாயினி இரண்டரை வயது குழந்தையடா. அவளைப் போய் என்னுடன் சேர்த்து வைத்து பேசுகிறாயே மடையா.”

   “முதலில் இருவரும் உங்களது சண்டையை நிறுத்துகிறீர்களா? பிரதீபா உன் தங்கை இன்று என்னை பின்தொடரக் கூடாது, அது உன் பொறுப்பு. நந்தா, நான் இப்படியே குறுக்கு பாதை வழியாக, கொற்றவை தேவி கோயிலை நோக்கி செல்கிறேன். அவர்களை எப்படியாவது திசைத்திருப்பு.”

  மித்ரன் குதிரையை தட்டி பாதையில் இருந்து விலகி காட்டினுள் நுழைந்தான்.

  பாதையை விட்டு விலகி வந்ததால் கரடு முரடான மேடு பள்ளங்களில் புகுந்து தான், செல்ல வேண்டி இருந்தது.

   அவன் சென்ற பாதை, கொற்றவை தேவி கோயிலின், பின்புறத்தை சென்று அடைந்தது. அங்கு கோயிலின் குளம் இருந்ததால், அதற்கு சற்று தள்ளியே குதிரையை கட்டிவிட்டு, மித்ரன் இறங்கி நடக்கத் தொடங்கினான்.

  தீர்த்த குளம் முழுவதும் அல்லி மலர்களால் சூழ்ந்திருந்தது. அழகாக பூத்திருந்த பூக்களை கண்டதும், அதை பறிக்க அருகில் சென்ற மித்ரன், குளத்தின் கரையினில் செல்லும் போது, கால் வழுக்கி அதன் உள்ளே விழுந்தான்.

     குளத்தில் உள்ளிருந்து எழ நினைத்த மித்ரனால், எழ முடியவில்லை. அவன் கால்களை அல்லி மலர் கொடிகள் நன்றாக சுற்றிக் கொண்டிருந்தது.

   குளத்தினில் நன்றாக மூழ்கி அதை அகற்றிட நினைக்கும் போது, நீல விழிகள் கொண்ட குட்டிப் பெண் பூ ஒன்று, அவனை நோக்கி வந்தது. தன் பிஞ்சு கரங்களில் இருந்த கூர்மையான கல்லை கொண்டு, அவன் கால்களை சுற்றியுள்ள கொடிகளை அறுத்தெறிந்தது.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அடடா பண்டைய தமிழ் வசனங்களா ?? அழகு .. கதை விறுவிறுப்பா போகுது ..