Loading

என்னுள் நீ காதலாய்💞

அத்தியாயம் 8

அன்று ஞாயிறு விடுமுறை என்பதால் ரேவதி அவள் தோழியை காண இளமாறன் வீட்டிற்கு சென்றாள் . செந்தமிழ் அவளை பார்த்ததும் அணைத்து கொண்டாள் . அறையில் இருந்த இளமாறன் ஹாலுக்கு வந்து ரேவதியை வரவேற்று அவளிடம் நன்றாக பேசினான் .

புனிதா செந்தமிழை அன்பாக கவனித்துக் கொள்வதை பார்த்த ரேவதியும் அசந்து போனாள் . மூன்று பெண்களும் பேசிக் கொண்டே சமைத்து கொண்டிருக்க அங்கு இனியன் வந்தான் . ரேவதியை பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்து கொண்டான் .

சமையல் வேலை முடிந்து எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு முடிக்க .. புனிதா வெளியே “தோழியை பார்க்க போகிறேன்” என்று சொல்லி சென்றார் . ரேவதியும் செந்தமிழும் அறையிலும் .. இனியனும் இளமாறனும் ஹாலிலும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் .

செந்தமிழ் நடந்த அத்தனையும் ரேவதியிடம் சொல்லி அழுதாள் . “உன் மாமியார் தங்கம் .. அண்ணனும் பார்க்க நல்லவங்களா தான் இருக்காங்க .. ஆனா ஏன் இப்படி பண்றாங்கன்னு தான் தெரியல” என்று யோசனையாக கேட்டாள் ரேவதி .

“புனிதாம்மா நல்லவங்க .. அவங்கள ஏமாத்துறோம்னு நினைச்சா கஷ்டமா இருக்கு” என்று செந்தமிழ் சொல்ல ..

“நான் எனக்கு தெரிஞ்ச நர்ஸ் கிட்ட சொல்லி ஆம்பிளைகளுக்கு ஆசை வர்ற மாதிரி மருந்து வாங்கி தர்றேன் .. நீ அதை அண்ணனுக்கு தெரியாம கொடுத்திடு .. நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஆகிட்டா .. உங்களுக்கு குழந்தை பிறந்துட்டா எல்லா பிரச்சனையும் சரி ஆகிடும்” என்று அவளுக்கு ஆறுதல் சொன்னாள் ரேவதி .

செந்தமிழுக்கு இளமாறன் வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை . ரேவதியோ “தன் தோழி இங்கு இருப்பது தான் பாதுகாப்பு .. அதோடு அவள் வாழ்க்கையும் சிறப்பாக வேண்டும்” என்று நினைத்து தான் இந்த ஐடியாவை சொன்னாள் .

புனிதா வீட்டிற்கு திரும்பியதும் இனியன் தான் பேச்சை ஆரம்பித்தான் . “அம்மா நாங்க பிசினஸ் சீக்கிரமா ஆரம்பிக்கணும் .. போட்டி அதிகமாகிட்டே இருக்கு .. இடம் பார்த்துட்டோம் .. அப்ரூவலுக்கு வெயிட் பண்றோம் .. கொஞ்சம் பணத்தை ஏற்பாடு பண்ணி தாங்க” என்று அவன் புனிதாவிடம் தயங்கி தயங்கி கேட்க ..

“இனியா பொறுமையா இருங்க .. நீங்க பிசினஸ் பத்தியே பேசுறீங்க .. நான் அவன் வாழ்க்கையை பத்தி யோசிக்கிறேன் .. ஒரு வீடு பார்க்க சொல்லு .. சொந்தமா வாங்கிடலாம் .. இளமாறனுக்கு குழந்தை பிறந்தா சொந்த வீட்ல தான் பிறக்கணும் .. அப்படியே பிசினஸ்க்கு பணம் தரேன்” என்று அலட்சியமாக பதில் சொன்னார் .

“புனிதாம்மா நீங்க என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க .. கல்யாணம் பண்ணுன்னு சொன்னீங்க .. இப்போ குழந்தை பெத்துக்கோன்னு சொல்றீங்க .. பெத்த அப்பாவும் எனக்கு சொத்துன்னு ஒண்ணும் வைக்கல .. வேணும்னே ஒரு சீரும் வேணாம்னு இவளை என் தலையில கல்யாணம் பண்ணி வச்சுட்டீங்க .. அவளும் ஒண்ணும் கொண்டு வரல .. எனக்கு உதவ யாரும் இல்ல .. நீங்க உங்க வீட்டு பணத்தை தர வேணாம் .. என் சம்பள பணத்தை குடுங்க போதும் .. நான் சமாளிச்சுக்கிறேன்” என்று இளமாறன் கண்கள் சிவக்க நரம்புகள் புடைக்க கோபமாக கத்தினான் .

“இளமாறா.. என் பொண்ணை எதுவும் சொல்லாத .. அப்புறம் என்கிட்ட அடி வாங்குவ” என்று புனிதா சொல்ல ..

“ஹ்ம்ம் .. வீட்ல இருக்க என்னை பத்தி யோசிக்காம எவளையோ கூட்டிட்டு வந்து பொண்ணுன்னு கொஞ்சுறீங்க .. இன்னும் உங்க சொத்தை கூட எழுதி வைங்க .. நான் வீட்டை விட்டு போயிடுறேன் .. இவன் நொண்டி தான .. இவன் எங்க போயிட போறான்னு தான நீங்க நினைக்கிறீங்க” என்று இளமாறனும் கோபம் குறையாமல் பேசினான் .

அந்த வார்த்தையில் அவன் அம்மாவுக்கும் மனைவிக்கும் உயிரே வலியில் துடித்தது . அவன் கோபமாய் அறைக்கு சென்று கதவடைத்து கொண்டான் . இனியனும் ரேவதியும் கிளம்பி விட .. புனிதா அப்படியே சோபாவில் உட்கார்ந்து அழ தொடங்கினார் .

“அழாதீங்க ம்மா..” என்று செந்தமிழ் அவர் கண்ணீரை துடைத்து விட்டாள் . “நான் அவனை அப்படியா நினைக்கிறேன் .. நான் என்ன பேசுனா அவன் என்ன பேசுறான் .. இளமாறன் நல்லா இருந்தான் .. எல்லாம் அவளால வந்தது” என்று புனிதா சொல்லி சட்டென அமைதியானார் . “யாருமா ..” என்று செந்தமிழ் கேட்க பதறி போனார் .

“ஒண்ணுமில்ல டா நீ போய் தூங்கு” என்று அவளை அனுப்பி விட்டு அவர் அறைக்கு சென்று விட்டார் . “ஏற்கெனவே திட்டுவார் .. இதுல கோபமா வேற இருக்கார் .. என்னெல்லாம் பேசுவாரோ” என்று செந்தமிழ் யோசித்துக் கொண்டே பயந்தவாறு அறைக்கு சென்றாள் .

இளமாறன் கண்ணீருடன் படுத்திருந்தான் . அவன் கண்ணீரை பார்க்க அவளுக்கு இதயம் பதறியது . “என்னாச்சுங்க?? எதுக்கு அம்மா கிட்ட கோபமா பேசுறீங்க .. அவங்க பாவம் தான” என்று அவள் கேட்க .. “என் அம்மா கிட்ட நான் கோபப்படுவேன் அதை கேட்க நீ யாரு?? நல்லா டிராமா பண்ற .. என் அம்மாவை மயக்கிட்டா பணத்தை எல்லாம் சுருட்டிட்டு போயிடலாம்னு பார்க்குறியா” என்று அவன் கேட்க .. அவள் உடல் அதிர பதற்றமாக அவனை பார்த்தாள் .

“உன்னை இந்த வீட்டுக்குள்ள கொண்டு வந்தது தான் என் தப்பு .. நான் நினைச்ச எதுவும் நடக்கல .. அப்படியே என் அம்மாவை கொஞ்சுற .. நீ இந்த வீட்டை விட்டு போயிட்டா என் அம்மா கஷ்டப்படுவாங்கன்னு உனக்கு தெரியாதா .. எல்லாம் தெரிஞ்சே பண்ற” என்று அவன் பேச பேச .. அவள் மனம் சுக்கு நூறாக உடைந்துவிட்டது .

செந்தமிழ் பதிலுக்கு ஒன்றும் பேசாமல் போய் படுத்து கொண்டாள் .. இன்று மன வலி கொஞ்சம் அதிகம் தான் . அதிகமாய் அழுதாள் .. அழுது கொண்டே இருந்தாள் .. அவள் அழுகை சத்தம் கேட்டு இளமாறன் விழித்து பார்த்தான் . “நிம்மதியா என்னை தூங்க விட மாட்டியா .. அழுதுட்டே இருக்க .. போ அப்படி போய் உட்கார்ந்து அழு” என்று இளமாறன் சொல்ல .. கீழே பெட்ஷீட் விரித்து படுத்துக் கொண்டே அழுதாள் .

“வா ரேவதி .. எங்க போகணும் நான் உன்னை இறக்கி விடறேன்” என்று இனியன் கேட்க .. “ஓ .. உங்களுக்கு என்னை தெரியுமா?? அங்க செந்தமிழ் வீட்ல என்கிட்ட நீங்க ஒரு வார்த்தை கூட பேசல” என்று கிண்டலாக கேட்டாள் . “அது இளமாறன் எதாச்சும் தப்பா நினைச்சுப்பான் .. அதான் நான் அங்க ஒன்னும் பேசல” என்றான் . “தப்பா நினைக்கிறதுக்கு என்ன இருக்கு??” என்று அவள் கேட்க .. அவன் பதில் சொல்ல தடுமாறினான் .

இனியன் அவளுடன் பேசிக் கொண்டே வண்டியை தள்ளிக் கொண்டே நடந்தான் . “நான் பஸ்ல போயிக்கிறேன் .. நீங்க கிளம்புங்க” என்று அவள் சொல்ல .. “வா ரேவதி ரொம்ப லேட் ஆகிடுச்சு .. நான் ட்ராப் பண்றேன் .. உங்க வீட்ல ஏதும் சொல்வாங்களா??” என்று கேட்டான் .

“அப்படிலாம் இல்ல ..” என்று அவள் சொல்ல .. “அப்போ உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா??” என்று கேட்டவன் சட்டென அங்கேயே நின்றான் .. “அய்யோ அதெல்லாம் இல்ல வாங்க போகலாம்” என்று அவள் பைக்கில் ஏறிக் கொள்ள இனியன் மெல்லிய புன்னகையோடு பைக்கை ஸ்டார்ட் செய்தான் .

“நீங்க உங்க ஃப்ரெண்ட கண்டிக்க மாட்டீங்களா??” என்று அவள் கேட்க .. “இளமாறன் இப்படி எல்லாம் பேசுற ஆளே இல்ல .. அவனுக்கு ஏதோ பிரச்சனை இருக்கு .. இப்போ கோபமா இருக்கான் .. அவன் பொறுமையா இருக்கும் போது தான் அவன் கிட்ட அதை பத்தி பேசணும்” என்றான் . அவளோ இனியனுக்கும் அவர்கள் திருமண ஒப்பந்த விஷயம் தெரியும் போல என நினைத்து கொண்டாள் .

“இங்கேயே இறக்கி விட்டுடுங்க ..” என்று சொல்லி ஒரு தெருவின் முன்னால் இறங்கி சென்ற ரேவதி .. அந்த தெருவின் கடைசி சின்ன தகர வீட்டிற்குள் நுழைய .. இனியனோ அவளை விட்டு பிரிய விரும்பாத அவன் இதயத்தை தொட்டு .. “கொஞ்சம் வெயிட் பண்ணுடா!!” என்று தட்டிக் கொடுத்தான் .

காலையில் எழுந்த இளமாறன் யாருடனும் பேசாமல் .. சாப்பிடாமல் வேலைக்கு சென்றுவிட்டான் . செந்தமிழ் அறையை விட்டு வெளியே வரவில்லை . புனிதா சாப்பிட அழைத்தும் அவள் செல்லவில்லை . அவர் தோசைகளை தட்டில் வைத்து அறைக்கே கொண்டு வந்து அவளிடம் தர .. “பசியில்ல ம்மா .. வேண்டாம்” என்றாள் . “அவன் கிடக்கிறான் ரெண்டு நாள்ல சரியாகிடுவான் .. நீ சாப்பிடு” என்று புனிதா அவளுக்கு ஊட்டி விட அழுது கொண்டே சாப்பிட்டாள் .

“புனிதாம்மா நீங்க என்னை விட்டு போயிடாதீங்க .. எனக்கு யாரும் வேணாம் .. நீங்க மட்டும் போதும்” என்று செந்தமிழ் அவர் மடியில் படுத்து அழ .. “என் பொண்ணை விட்டு நான் எங்கேயும் போகமாட்டேன்” என்று அவர் சொல்ல .. இன்னும் அதிகமாய் அழுதாள் .

இளமாறன் வீட்டில் சாப்பிட்டு பேசி மூன்று நாட்கள் ஆகி விட்டது . அன்று ஆபீஸில் அவனிடம் நிரஞ்சனா திருமண பத்திரிக்கை கொடுக்க வந்து .. அவன் கோபத்தை அதிகமாக்கி சென்றிருக்க வீட்டிற்கு வந்தவன் ஒன்றும் பேசாமல் சாப்பிட்டான் .. சமாதானம் ஆகிவிட்டான் போல என்று மாமியாரும் மருமகளும் நினைத்துக் கொண்டார்கள் .

இளமாறன் சாப்பிட்டு முடித்து அறைக்குள் செல்ல .. சட்டென திரும்பியவன் அவனுக்கு பின்னாலே சென்ற செந்தமிழ் மீது மோதினான் . “தள்ளு ..” என்று அவன் கத்த .. “நீங்க வந்து என்னை இடிச்சுட்டு நீங்களே என்னை திட்டுறீங்க” என்று சிரித்தாள் . கோபத்தில் அவளை மெத்தையில் பிடித்து தள்ளி விட்டவன் .. தள்ளி விட்ட வேகத்தில் பேலன்ஸ் இல்லாமல் தடுமாறி அவள் மீதே விழுந்தான் .

“என்னங்க நிக்க முடியாம விழுந்திட்டீங்களா??” என்று அவள் சிரிக்க .. அவன் எழ முயற்சி செய்து அவள் மீதே மீண்டும் விழுந்தான் . “உங்களால தான் முடியலைல .. விடுங்க” என்று அவள் சிரிக்க .. அது அவனுக்குள் இருக்கும் ஈகோ மிருகத்தை தட்டி எழுப்பி விட்டது .

“என்னடி சிரிக்கிற?? நிக்க முடியலைன்னு சிரிக்கிறியா?? இல்ல இவன் ஆம்பிளையா?? இவனால என்ன பண்ண முடியும்னு நினைச்சு சிரிக்கிறியா?? என்று கேட்டவன் அவள் “இல்லங்க ..” என்று பதில் சொல்லும் முன்பு .. அவள் இதழை தன் இதழால் சிறைப்பிடித்து முத்தமிட்டு .. அவன் கையால் அவள் மார்பை சிறைப்பிடித்து அழுத்த .. அவள் சிரிப்பு தொலைந்து வலியில் முகம் சுருங்கினாள் .

முதல்முறையாய் இளமாறன் அவளை தொடுகிறான் .. அதுவும் காதலாய் இல்லாமல் வன்மையாய் . மிருகத்தனமான அவன் தீண்டலில் .. அவள் கைகளும் உடலும் நடுங்க ஆரம்பித்தது .

அவள் உடல் முழுவதும் ஒருவித பயம் படர கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள் . அவனை தள்ளி விட முடியாமல் கீழே இருந்த போர்வையை கைகளால் இறுக்கியவள் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது .

செந்தமிழின் ஒட்டுமொத்த வலிகளுக்கும் மருந்தாய் இருந்த அவன் மீதான காதல் .. இன்று அதை விட அதிகமான வலிகளை தர மன வேதனையில் துடித்தாள் .

அவளுக்கு விருப்பமானவன் தான் .. அவள் காதலன் தான் .. அவள் கணவன் தான் .. அவன் தான் தொட்டான் .. இருந்தாலும் அவன் தீண்டிய இடங்கள் நெருப்பாய் பற்றி எரிகிறது . அவன் காதலோடு தொடவில்லை .. அவன் மனதில் ஒரு ஓரத்தில் கூட அவளில்லை .. அப்படியிருக்க அவன் அவளுக்கு வேறொருவன் தானே .

அவள் ஆசை ஆசையாக காதலித்தவன் அவனில்லை .. எதற்காக அவன் மீது காதலில் விழுந்தாளோ அது அத்தனையும் தலைகீழாக மாறியிருக்க உயிர் போகும் வலியில் துடித்துக் கொண்டிருந்தாள் .

காதலாய் வருவாள் 💞 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
10
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. தோழி வாழ்க்கை சிறக்க வழி சொல்கிறேன் என்று விபரீதமாக ஏதும் செய்யாமல் இருந்தால் சரி.

    புனிதாமா எதை மறைக்கிறார்? ஏன் எதனால் இளமாறன் இப்படி நடந்துகொள்கிறான்?

    தாழ்வுமனப்பான்மையில் செந்தமிழ் சாதாரணமாக சொல்லும் விடயங்களை கூட தவறாக புரிந்து கொண்டானே.

    தான் நினைத்தது நடக்காத விரக்தி, அலுவலகத்தில் நிரஞ்சனா ஏற்படுத்திய கோபம், தமிழ் பேச்சினில் தூண்டப்பட்ட சுயமரியாதை என நிலை இழந்து அவசரப்பட்டுவிட்டான்.

    1. Author

      உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் பதில் கிடைக்கும் … தொடர்ந்து வாசியுங்கள் … பேரன்புகள் …

  2. பாவம் இல்லையாடா அந்தப் பொண்ணு

    இப்படியாடா மிருகத்தனமா நடந்துக்குவே

    யாரோ ஒருத்தி ஏமாத்தினால் உலகத்தில் உள்ள பெண்கள் எல்லாம் மோசமானவர்கள் ஆகிவிடுவார்களா?

    ரேவதி, இனியன் சூப்பர்

    1. Author

      இன்னும் சுவாரஸ்யங்கள் காத்திருக்கிறது … தொடர்ந்து வாசியுங்கள் … பேரன்புகள் …