Loading

என்னுள் நீ காதலாய்💞 

அத்தியாயம் 3

கோவிலுக்குள் இருக்கும் சிலைகளை விட .. அழகிய சிலையாக நடந்து வரும் செந்தமிழை கண் இமைக்காமல் பார்த்திருந்தான் இளமாறன் . “என்னடா திங்கிற மாதிரி பார்க்குற .. பொண்ணு உனக்கு தான் .. நீ விடுற ஜொள்ளுல இங்க வெள்ளம் வந்திடும் போல” என்று இனியன் கிண்டலாக சொல்ல அவன் சிரித்தான் .

செந்தமிழை அழைத்து வந்த ரேவதி அவளை இளமாறன் அருகில் உட்கார வைத்தாள் . பெயரளவில் பெற்றோராக கூட செந்தமிழின் அப்பாவும் சித்தியும் அவள் அருகில் நிற்கவில்லை .

அன்று நல்ல முகூர்த்த நாள் .. அடுத்தடுத்து அங்கு திருமணங்கள் நடக்கவிருப்பதால் ஐயர் வேகமாக மந்திரங்களை ஓதினார் . இளமாறன் செந்தமிழ் இருவரும் சம்பங்கி கோழிக்கொண்டை பூவால் ஆன மாலையை மாற்றி கொண்டார்கள் . மத்தளங்கள் நாயனங்கள் ஒலிக்க செந்தமிழ் கழுத்தில் மங்கள நாணை பூட்டினான் இளமாறன் . புனிதவதிக்கு ஆனந்த கண்ணீர் வந்து விட்டது .

ஒப்பந்த திருமணத்திற்கு இவ்வளவு ஏற்பாடு வேற என்று நினைத்த இளமாறன்  .. அவனே மூன்று முடிச்சையும் அவள் கழுத்தில் போட்டான் . தன்னுடைய எதிர்காலமே கேள்விக் குறியாக இருந்தாலும் .. மனதிற்கு விரும்பியவன் கையால் தாலி வாங்கி விட்டோம் என்ற மனமகிழ்ச்சியில் இருந்தாள் செந்தமிழ் .

செந்தமிழ் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி . “இன்றிலிருந்து என் வாழ்க்கை மாற போகிறது .. நான் சந்தோஷமாக வாழ போகிறேன்” என்று மனம் நிறைந்து சிரித்தாள் . பாவம் இன்று தான் அவள் சிரிக்கும் கடைசி சிரிப்பு என்று தெரியாமல் சிரித்து விட்டாள் .

இளமாறன் மாலை போடும் போதும் .. தாலி கட்டும் போதும் .. அதை சரி செய்ய .. செந்தமிழின் உடையை சரி செய்யும் போதும் .. அருகில் நின்றிருந்த இனியனை தெரியாமல் இடித்து கொண்டு இருந்தாள் ரேவதி .

அவள் வேண்டும் என்றே செய்யவில்லை .. கூட்ட நெரிசல் அப்படி . அது தவிர பதட்டத்தில் இருக்கும் தோழிக்கு உதவியாய் இருந்ததில் இனியனை இடித்ததை அவள் கவனிக்கவில்லை . மண்டபத்திற்கு சென்று மேடையில் மணமக்கள் அமரும் போதும் .. போட்டோக்கள் எடுக்கும் போதும் இனியனும் ரேவதியும் மோதிக் கொண்டார்கள் .

“ஏங்க .. எதுக்கு என்னை சும்மா இடிச்சுட்டே இருக்கீங்க” என்று ஒருகட்டத்தில் இனியன் பொறுமையிழந்து ரேவதியிடம் கேட்க .. அவள் மெதுவாக அவனை திரும்பி பார்த்தாள் . அவன் கண் கண்ணாடி போட்டிருக்க .. அதற்கு பின்னால் இருந்த விழிகளில் எரிச்சலுடன் அவளை பார்த்தான் .

“கூட்டத்துல இருந்தா அங்கங்க இடி விழ தான் செய்யும் .. இடிக்காம இருக்கணும்னா வீட்டிலேயே இருக்க வேண்டியது தான” என்று சத்தமாக திட்டிய ரேவதி .. “இவர் பெரிய அழகன் .. இவரை தேடி வந்து இடிக்கிறாங்க” என்று முணுமுணுத்துக் கொண்டே சென்று விட்டாள் .

அவள் குண்டு விழிகளை உருட்டி கோபமாக பேச .. இனியன் மிரண்டு விட்டான் . “என்னா வாய் பேசுது இந்த பொண்ணு .. சரியான வாயாடி போல .. இவளை கட்டிக்க போறவன் ரொம்ப பாவம்” என்று இனியன் மனதிற்குள் புலம்பி கொண்டான் .  பாவம் அவன் தான் அந்த பாவப்பட்ட ஜென்மம் என்று தெரியாமல் போனது அவனுக்கு .

மண்டபத்தில் கொஞ்சம் கூட்டம் அதிகமாக தான் இருந்தது . எல்லோரும் புனிதவதியின் ஆள் பழக்க வழக்கம் , சொந்த பந்தங்கள் , அண்டை வீட்டார்கள் தான் .

சாப்பிட்டு முடித்ததும் .. போட்டோகிராபர் மணமக்களை போட்டோக்கள் எடுத்தார் . பெரும்பாலும் இளமாறனை உட்கார வைத்து .. அவன் அருகில் செந்தமிழை நிற்க வைத்து வேறு வேறு போஸ்களில் போட்டோக்கள் எடுத்தார் . அது கொஞ்சம் இளமாறன் ஈகோவை தூண்டி விட்டது . போட்டோ எடுத்தது போதும் என்றான் .

நண்பனின் மனதில் உள்ளதை புரிந்து கொண்ட இனியன் போட்டோகிராபரிடம் பேச .. அவர் இளமாறனை செந்தமிழ் தோளில் கை போட்டு கொண்டு அணைத்து நிற்க சொன்னார் . இளமாறன் தயங்கி கொண்டே அவளுக்கு அருகில் நின்றான் . காலுக்கு பேலன்ஸ் இல்லாமல் விழ போனவனை கையை பிடித்து இழுத்து தூக்கினாள்  .

செந்தமிழ் அவனுடைய ஒரு கையை அவள் தோளில் வைத்து .. இன்னொரு கையை அவள் இடையில் வைத்து விட .. இளமாறன் அவன் கையால் அவள் இடை சுற்றி வளைத்து அவளை லேசாக அணைத்தான் .

அவள் முகத்தை பார்த்தான் .. எந்த போலியும் பாசங்கும் இல்லாத அழகு முகம் .. அதில் மென்மையான செவ்விதழ் .. அந்த செவ்விதழில் புன்னகை தவழ .. கண்களில் காதல் நிறைந்து அவனை பார்த்தாள் . அந்த காதல் பார்வை அவன் உயிர் வரை சென்றது .

அவளை பொறுத்த வரை இவன் என் கணவன் .. எனக்கானவன் என்று அன்பாக பார்க்கிறாள் . ஆனால் அந்த பார்வையில் இருக்கும் அன்பு அவன் இதயத்தை சிலிர்க்க செய்தது .. அவனை தடுமாற செய்தது .

போட்டோகிராபர் போட்டோ எடுத்து முடிக்க .. போதும் இந்த கல்யாணத்துக்கு போட்டோ ஒண்ணு தான் குறைச்சல் என்று அவன் மெதுவாக சொல்ல .. இருந்த மொத்த புன்னகையும் காணாமல் போனது செந்தமிழ் முகத்தில் . சட்டென அவளை விலகி சென்றவன் அதன் பின்னர் அவளுக்கு அருகில் வரவே இல்லை.

“இந்தா உன் துணிமணி” என்று துணிகள் நிறைந்த ஒரு கட்டப்பையை செந்தமிழ் கையில் தந்த அவள் சித்தி .. “இன்பமோ துன்பமோ இனி எங்க வீட்டு பக்கம் எதுக்கும் வந்திடாத .. இன்னையோட என்னை பிடிச்ச சனியன் தொலைஞ்சு போச்சு” என்று வெளிப்படையாகவே கத்தி விட்டு எல்லோரையும் அழைத்து கொண்டு கிளம்பி விட .. குற்ற உணர்ச்சியில் மகளின் முகத்தை திரும்பி கூட பார்க்காமல் போனார் செந்தமிழின் அப்பா .

உணர்ச்சி துடைத்த முகமாய் இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்தவள் கண்களில் ஒரு துளி கண்ணீர் வரவில்லை . ரேவதி வந்து அவள் கையை பிடித்துக் கொண்டிருக்க .. அவளுக்கு அருகில் வந்த புனிதவதி .. “இனிமே நாங்க உனக்கு இருக்கோம் .. நீ கவலைப்படாத டா” என்று அவள் தலையை வருடி தர .. அவரை பார்த்து லேசாக சிரித்தாள் .

மணமக்கள் இளமாறன் வீட்டிற்கு செல்ல .. ரேவதியும் இன்னும் சில பெண்களும் ஆரத்தி எடுத்தார்கள் .

புனிதவதி இனியனை அழைத்து “இங்க பாரு இனியா .. நீயே மண்டபத்துல நடந்ததை பார்த்தேல .. அந்த பொண்ணு பிறந்த வீட்ல இருந்து அவ்ளோ காயத்தை சுமந்திட்டு வந்திருக்கா .. இவன் வேகமா வந்து அவ கிட்ட நான் இருக்கேன்னு சொல்ல வேணாமா .. கல்லு மாதிரி நிக்கிறான் ..

எதுக்கு இப்போ மூஞ்சிய தொங்க போட்டுட்டு இருக்கான் .. இவனை நம்பி என் மருமகளை இந்த வீட்டுக்கு கூப்பிட்டு வந்திருக்கேன் .. இவனால அந்த பொண்ணு கண்ணுல ஒரு துளி கண்ணீர் வந்துச்சு மகன்னு பார்க்கமாட்டேன் .. அவனை வெளியே துரத்தி விட்டுருவேன்” என்று சொல்ல இனியன் வாயை பொத்திக் கொண்டான் .

“என்னம்மா நீங்களே இளமாறனை இப்படி சொல்றீங்க” என்று அவன் கேட்க .. “அவனை பத்தி எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா .. ஏதோ திருட்டுத்தனம் பண்றான் .. கண்டுபிடிக்கிற அன்னைக்கு அவனுக்கு இருக்கு” என்றார் .

“நான் ஒரு பொண்ணா இந்த சமூகத்துல நிறைய கஷ்டப்பட்டிருக்கேன் .. என்னை நம்பி வந்த அந்த பொண்ணு என் மருமக இல்ல மக .. என் மகளை நான் கஷ்டப்பட விட மாட்டேன் .. அந்த பிள்ளை கிட்ட அன்பா இருக்க சொல்லு .. இன்னைக்கு என்ன நாளு தெரியும்ல .. உன் ஃப்ரெண்ட் கிட்ட பார்த்து பக்குவமா நடந்துக்க சொல்லு” என்று அவர் சொல்ல ..

“சினிமால இதெல்லாம் பொம்பளை பிள்ளை கிட்ட தான சொல்லி அனுப்புவாங்க .. நீங்க என்ன உங்க பையன் கிட்ட சொல்ல சொல்றீங்க” என்று இனியன் கேட்க .. “சினிமா பார்த்து தான்டா நீங்களாம் கெட்டு போயிருக்கீங்க” என்று அவன் முதுகில் தட்டி விட்டு சென்றார் .

புனிதா அறையில் இருந்து கிச்சனுக்கு வந்த செந்தமிழ் .. வெளியே நின்று இதையெல்லாம் கேட்டு விட்டாள் . தன் சித்தியை போல ராட்சசியை பார்த்தவளுக்கு புனிதவதி பெண் தெய்வமாக தெரிந்தார் . “இந்த மாதிரி ஒரு பெண்ணா!” என்று நினைத்து அவள் அதிசயித்து போயிருந்தாள் . தன் மேல் அன்பு காட்டும் முதல் ஜீவன் .. இன்றுதான் கடவுள் இருப்பதை உண்மையென அவள் நம்பினாள் .

இனியன் அவன் அறையில் இருந்த இளமாறனை சென்று பார்த்தான் . “ஏன் டா உனக்கும் அம்மாவுக்கும் இடையில நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்” என்று இனியன் சொல்ல .. “என்ன என்னோட புனிதாம்மா இப்படி எல்லாம் சொன்னங்களா” என்று அவர் சொன்னதை வார்த்தை மாறாமல் அவனும் சொன்னான் ..

“அதெப்படி இவ்ளோ கரெக்ட்டா சொல்ற” என்று இனியன் கேட்க .. “அவங்க என்னோட அம்மா டா .. நான் இத்தனை வருஷமா அவங்களை பார்க்குறேன் .. எனக்கு தெரியாதா என் அம்மாவை பத்தி” என்றான் .

“நிஜமாவே உங்க அம்மா ரொம்ப கிரேட் .. தைரியமானவங்க டா .. தப்பு பண்றது யாரா இருந்தாலும் கேட்பேன்னு சொல்றாங்க பாரு சூப்பர்” என்று இனியன் சொல்ல .. “அய்யோ இன்னும் என் கல்யாண விஷயம் தெரிஞ்சா எங்க அம்மா என்ன முடிவு எடுப்பாங்களோ” என்று மனதிற்குள் பயந்தான் இளமாறன் .

“அதுசரி மச்சான் .. இன்னைக்கு உனக்கு முதலிரவு .. ஏதாவது டவுட் இருந்தா கேளு சொல்றேன்” என்று இனியன் கேட்க .. “ஏன் மச்சான் உனக்கு நிறைய முதலிரவு நடந்திருக்குதா” என்று இளமாறன் அவன் காலை வாரி விட ..

“ஹ்ம்ம்க்கும்.. எனக்கெல்லாம் கல்யாணம் நடக்கிறதே பெருசு இதுல முதலிரவு நடந்துட்டாலும் .. நான் புனிதாம்மாவுக்கு மகனா பிறந்திருக்கணும் .. எனக்கு தான் அந்த கொடுப்பினை இல்லையே .. சரிடா மச்சான் என் தங்கச்சியை கண் கலங்காம பார்த்துக்கோ .. அப்புறம் இன்னைக்கு நைட் பார்த்து பக்குவமா நடந்துக்கோ” என்று சொல்லி கண் அடித்து சென்று விட்டான் .

அவன் வெளியே சென்றதும் சிரித்த முகம் மாறி .. டென்ஷனாக நகம் கடிக்க ஆரம்பித்தான் இளமாறன் .

புனிதா மகனையும் மருமகளையும் குளித்து உடை மாற்ற சொல்லி விட்டு .. இரவு உணவு சாப்பிட வைத்து .. மருமகள் கையில் பால் சொம்பை கொடுத்து “செந்தமிழ் நீ பூஜை ரூமுக்கு போய் விளக்கேத்தி சாமி கும்பிட்டுட்டு ரூமுக்கு போடா .. பயப்படாத .. அவன் முரட்டுத்தனமான நடந்தா பொறுமையா சொல்லு .. கேட்கலைனா தள்ளி விடு தப்பே இல்ல” என்று சொல்லி அனுப்பினார் .

செந்தமிழ் பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றி விட்டு .. மெல்ல இளமாறன் அறைக்கு சென்றாள் . “முதன்முதலில் ஒரு ஆடவனுடன் தனியாக இருக்க போகிறோம் .. அவன் என்ன செய்வானோ” என்று அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது . தந்தையை தவிர எந்த ஆணையும் அவள் நிமிர்ந்து பார்த்ததில்லை . அவள் முதன்முதலாக நிமிர்ந்து பார்த்தது ரசித்தது எல்லாம் இளமாறனை மட்டும் தான் .

செந்தமிழ் அறைக்குள் நுழைந்ததும் .. இளமாறன் வேகமாக எழுந்து கதவை பூட்டி விட்டு மெத்தையில் அமர்ந்தான் .

காதலாய் வருவாள் 💞 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
19
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. “ஒப்பந்த திருமணத்திற்கு இத்தனை ஏற்பாடுகள் வேறு என்ற மனநிலையில் நாயகன்”.
    “எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தாலும் தனது மனம் கவர்ந்த ஒருவன் கைபிடிக்கும் மனமகிழ்வுடன் நாயகி”.
    பிறந்த வீட்டில் இருந்து கிடைக்க வேண்டிய அத்தியாவசிய ஆதரவு கூட இல்லாமல் கஷ்டங்களை மட்டுமே கடந்து வந்த மருமகளுக்கு ஆதரவாக நிற்கும் மாமியார். அவளை மகளாக காக்க எண்ணுகிறார். ஆனால் தன்னுடைய மகனிடமிருந்து தான் காக்க வேண்டும் என்று அறிந்தால்! என்செய்வார்?
    ரேவதி இனியன் பேச்சுகள் சுவாரசியம்.
    இளமாறன் மனம் இன்னுமே பிடிபடவில்லை. என்ன செய்யபோகின்றானோ? பார்ப்போம்.

    1. Author

      சகி உங்களோட கமெண்ட் கள் எல்லாம் ரசிக்கிற மாதிரி இருக்கு … முழுக்கதைக்கும் அவ்ளோ அழகா கருத்துரை சொல்றீங்க … எல்லா கதைகளிலும் உங்க விமர்சனங்கள் பார்த்தேன் … இந்த மாதிரி ஊக்குவிப்புகள் தான் எங்களை மாதிரி எழுதுறவங்களை ஊக்கப்படுத்தும் … தொடர்ந்து வாசியுங்கள் … அன்புகள் …

      1. நன்றி சகோதரி 🥰🥰 இன்னும் பல அருமையான படைப்புகள் படைக்க வாழ்த்துகள் 👏🏼👏🏼

        1. Author

          நிச்சயமாக உங்கள் ஊக்குவிப்புகள் தான் எங்கள் பொக்கிஷங்கள் … அதுதான் எங்களை இன்னும் எழுத தூண்டுகிறது …

  2. ரொம்ப வேகமா தான் கதவைப் பூட்டுறான். இனி என்னத்தை சொல்ல போறானோ தெரியல.
    புனிதவதி பெயருக்கு ஏற்றார் போன்ற புனிதமானவள்.

    ஏண்டா மாப்பிள்ளை, பொண்ணு தான் படு ஷோக்காகீதே பிறகும் ஏண்டா இப்படி டென்சனில் நகத்தை கடித்து சாப்பிடுறே…

    உங்க அப்பன் புத்தி அடிக்கடி வருது.

    இனியன் பாவம் தான் உன் நிலமை.

    ரேவதி தான் உனக்கு இணையா ? என்ஜாய்….

    1. Author

      இனியன் ரேவதி கிட்ட மாட்டிக்க போறான் … செந்தமிழ் இளமாறன் கிட்ட நல்லா மாட்டிக்கிட்டா … இனி என்னெல்லாம் நடக்குதுன்னு தொடர்ந்து வாசிச்சு கருத்துக்கள் சொல்லுங்க … மிக்க நன்றி சகி …