Loading

தேடல் 8:

ஜெயா சொல்லிச் சென்றதில்  அதிர்ந்தவனாய், அருகில் இருந்த தூணைப் பற்றியபடியே அக்னி சரிந்து அமர,

“விடுகதையா இந்த வாழ்க்கை…
விடை தருவார் இங்கு யாரோ..?

உனது கை உன்னை அடிப்பதுவோ…

உனது விரல் கண்ணைக் கெடுப்பதுவோ…

அழுது அறியாத உன் கண்கள்
ஆறு குளமாக மாறுவதோ…

ஏன் என்று கேட்கவும் நாதியில்லை…

விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் இங்கு யாரோ…” 

எனக் கர்ண கொடூரமான குரலில் அவன் காதருகே பாடல் (?!) ஒலிக்க, அதில் சுயம் மீண்டவன், எட்டிப் பாடியவரின் கழுத்தை இறுக்கிப் பிடித்தான்.

“அடேய் மவனே… கழுத்த விடுடா… மூச்சு முட்டுதுடா எனக்கு… அப்பனக் கொன்ன பாவம் உனக்கு வேண்டான்டா மவனே… சொன்னாக் கேளு… விடுடா என்னை…” என அக்னியின் கையைக் கழுத்தில் இருந்து எடுக்கப் போராடிக் கொண்டிருந்தார் தனா.

அவர் கழுத்தில் இருந்து கையை எடுத்தவன், “யோவ்… சித்தப்பு… என்னய்யா சொல்லிட்டுப் போறாரு உன் அண்ணன்… என்னமோ வியாழனுக்கு அப்புறம் வெள்ளிங்கற மாதிரி உனக்குக் கல்யாணம்னுட்டுப் போய்ட்டே இருக்காரு… கட்டிக்கப் போறவன் நான்… என்னை ஒரு வார்த்த இந்த கல்யாணத்துல உனக்கு சம்மதமானு கேக்கணுமா இல்லையா..?” என்றான் மொத்த எரிச்சலையும் கடுப்பையும் அவரிடம் கொட்டி.

வேகமாய் பெரிய பெரிய மூச்சைகளாய் காற்றை உள்ளிழுத்து அதை நுரையீரலில் நிரப்பிக் கொண்டவருக்கு ஒரு நொடியில் கண்களெல்லாம் கலங்கி இமையோரம் நீர் தளும்பி விட்டது. மெல்ல வலி எடுத்த  கழுத்தை நீவி விட்டபடியே, அவனுக்கு அருகில் அமர்ந்தவர், “ஏன்டா எடுபட்ட பய மவனே… இம்புட்டு நேரம் வாயில என்ன கொழுக்கட்டையா வச்சுருந்த… அப்படியே செவிட்டக் காட்டி ஒன்னு விட்டேனாத் தெரியும்… உங்க அப்பன் உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறேனு சொன்னா அவனப் போய்க் கேளுடா வெண்ண… அத விட்டுட்டு என் கழுத்தப் புடிக்க…” என்றார் கடுப்பாய்.

“என்னய்யா பொசுக்குனு உங்க அண்ணன அவன் இவனு மரியாதை இல்லாம பேசிப்புட்ட…” என்றான் நெஞ்சில் கை வைக்காத குறையாக அதிர்ந்து அக்னி.

“அண்ணாவாவுது நொண்ணாவாவுது… லூசு மாதிரி அவரு எல்லாத்தையும் முடிவுப் பண்ணிட்டு வந்து பேசனா அதுக்கு நான் என்னடா பண்ணுவேன்… ஒருத்தன் கல்யாணத்துல நீங்க எல்லாம் குடும்பமா என்னை வச்சு கும்மி அடிச்சது பத்தாது… நீங்க கல்யாணம் தான் பண்ணுங்க… இல்லக் காது குத்தத்தான் வைங்க… உங்க குடும்ப சங்காத்தமே வேண்டான்டா சாமி… என்ன ஆள விடுங்கடா யப்பா…” என அவர் தலைக்கு மேல் கை தூக்கிப் பெரிய கும்பிடாய்ப் போட்டார்.

“யோவ் சித்தப்பு… இப்ப கடைசியா என்ன தான்ய்யா சொல்லற நீ..?” என்றான் அக்னி அவரை முறைத்துக் கொண்டு.

“நா சொல்ல என்ன இருக்கு..?” என்றார் அலட்சியமாய் தனா.

“போய் எட்டப்பருட்ட இந்தக் கல்யாணத்துல எனக்கு சம்மதம் இல்லைனு சொல்லு… போ…” என்றான் அவன்.

“உனக்கு வாயில்ல… நீயே போய் சொல்லு… பே…”

“அப்போ நானே போய் சொல்லறேன்…”

“அத முதல்ல பண்ணுடா சாமி… உனக்குப் புண்ணியமாப் போகும்…”

“ம்ம்ம்… இப்பவே சொல்லறேன்… எல்லாரையும் கூட்டு வச்சு சொல்லறேன்… எனக்கென்ன பயமா..? நீ நான் நாலாவது படிக்கும் போது எங்க தமிழ் வாத்தியார் பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுக்க சொன்னது… அப்புறம் காலேஜ் படிக்கும் போது உன் லேப் அட்டண்டருக்கு லவ் லெட்டர் குடுத்தது… அப்புறம் காலேஜ் முடிச்சுட்டு கடல முட்டாய வாங்கி வச்சுட்டு கல்யாணம் ஆனவனு கூட தெரியாம ஒருத்தி பின்னாடி கழுதையா சுத்துனீயே… யாரது..? ஹான்  பக்கத்தூரு பரிமளா… அதெல்லாத்தையும் மொத்தக் குடும்பத்தையும் கூட்டி வச்சு விளாவரியா சொல்லறேன்… அதுவும் இப்பவே சொல்றேன்… யோவ் தகப்பா… எங்கய்யா இருக்க நீ…” என்று ஜெயாவைக் கத்தி அழைத்தவனின் வாயை இறுக மூடினார் தனா.

“ஏன்டா… ஏன்… உங்க குடும்பத்துக்கு என்ன பாவம் பண்ணேன் நானு… எப்ப பாரு என் குடும்பத்துலையே கும்பி அடிக்கறீங்க…” என்றார் பாவமாய் தனா.

“உன் லவ்வுக்கு நான் ஹெல்ப் பண்ணேன் இல்ல… இப்போ என் லவ்வுக்கு நீ ஹெல்ப் பண்ணு…” என்றான் சட்டமாய் அக்னி.

“எது… தமிழ் வாத்தியாரோட பொண்ணுக்குக் குடுக்க சொன்ன லெட்டர அவர் பொண்டாட்டிட்ட குடுத்து செருப்படி வாங்கிக் குடுத்தியே அதையாடா உதவினு சொல்லற..?” என்றார் கடுப்பாய் தனா.

“பொண்ணோ பொண்டாட்டியோ… கரெக்டான அட்ரஸ்ல தான குடுத்தேன்… அதப் பாரு சித்தப்பு…”

“எதே…” என அவர் நெஞ்சில் கை வைத்து அவனை முறைத்துப் பார்க்க,

“அத விடு சித்தப்பு… இப்போ உன்னால என் லவ்வுக்கு ஹெல்ப் பண்ண முடியுமா..? முடியாதா..?” என அக்னி அவரிடம் டீல் பேசிக் கொண்டிருக்கும் போதே, வேகமாக அங்கே வந்தாள் நிவேதா ஸ்ரீ.

“ஹலோ… மாம்ஸ் உன்னத் தான்… கட்டிக்கப் போற பொண்ணையும் கொஞ்சம் பாக்கலாமில்லை… சும்மா எந்நேரம் பாத்தாலும் சின்ன மாம்ஸ் கூடவே கொஞ்சிக் குலவிட்டு திரியற…” என அக்னியின் முன் அவள் சொடுக்கிட்டு அழைக்கவும் இருவரும் நிமிர்ந்து அவளை முறைத்துப் பார்த்தனர்.

இருவரையும் பிரித்துவிட்டு, இடித்துக் கொண்டு அவர்களுக்கு நடுவில் அமர்ந்தவள், “அப்புறம் மாம்ஸ்… கல்யாணத்த எப்போ வச்சுக்கலாம்..? இந்த மாசத்துலையே ஏதாவது நல்ல நாள் பாக்க சொல்லுவோமா..? இல்ல ஒரு ரெண்டு மூணு மாசம் டைம் எடுத்து கிரான்டா செய்வோமா..? என்னைக் கேட்டா ரொம்ப கிரான்டா எல்லாம் வேண்டாம்னு தான் சொல்வேன்… தேவையில்லாம காசப் போட்டு எதுக்கு கரியாக்கிட்டு… நிச்சயத்துக்குப் பதிலா இந்த வெள்ளிக்கிழமையே கோவில்ல வச்சுக் கல்யாணத்த முடிச்சுட்டாக் கூட எனக்கு ஓ.கேனு தான் தோணுது… நீ என்ன சொல்லற…” என்றாள் அக்னியின் தோளில் இடித்துக் கண்ணடித்து.

“ஏன் நிவி… அவனே கல்யாணம் வேண்டானு சொல்லிட்டு இருக்கான்… நீ என்னடானா..?” என்ற தனாவைத் திரும்பி முறைத்தவள், “யோவ் மாம்ஸ்… உனக்குக் கொஞ்சமாச்சும் விவஸ்தை இருக்கா..? சின்னஞ்சிறுசுங்க பேசிட்டு இருக்கோம் இல்ல… ஊடால உனக்கென்ன வேலை… போய்ப் புள்ளகுட்டிக்கு ஹோம் ஓர்க் சொல்லித் தர வேலையப் பாரு… பே…” என்றவள் திரும்பி அக்னியைப் பார்த்து, “அப்புறம் அக்னி மாமா… ஹனிமூன எங்க வச்சுக்கலாம் மாமா.‌‌.?” என்றாள் குழைந்து நெளிந்துக் கொண்டே, மீண்டும் அவன் தோளில் இடித்து கண் சிமிட்டு, அவன் வெளிப்படையாய் தலையில் அடித்துக் கொண்டான்.

“ஏன்டி நீ வேற என்னப் போட்டு படுத்துற…” என்றான் சலிப்பாய்.

“பின்ன… நீயெல்லாம் போலீஸ் காரனா மாம்ஸ்… பெரிய மாமா என்னமோ நிச்சயங்கறாரு… கல்யாணங்கறாரு… நீயும் புடிச்சு வச்ச சிலையாட்டம் வாய மூடிட்டு கம்முனு நிக்கற… இந்தக் கல்யாணம் வேண்டானு சொல்லித் தொலைக்க வேண்டியது தான…” என்றாள் எரிச்சல் மண்டிய குரலில்.

“ஏன் நீ சொல்ல வேண்டியது தானே…” என்றான் பதிலுக்கு அவனும் கடுப்பாய்.

“அப்படியே கத்திய எடுத்துக் குத்துனேனு வச்சுக்கோ… நேரா நரகம் தான்… வெண்ண… உன்னையே உங்கொப்பா கேக்கல… என்னைத்தான் கேக்கப் போறாராக்கும்..?”

“அதுவும் சரிதான்… இப்போ இதுக்கு என்ன பண்ணலாங்கற..?”

“நீ என்ன பண்ணுவீயோ..? ஏது பண்ணுவீயோ..? அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா இந்தக் கல்யாணத்த நிறுத்துற… ஏன்னா நான் என்கூட வேலை பாக்கற ஒருத்தர லவ் பண்ணறேன்… அப்படி மட்டும் நீ நிறுத்தல…”

“நிறுத்தலைனா… கல்யாணத்துக்கு முதல் நாள் ராத்திரி அவனோட ஓடிப் போய்டுவீயா…” என்றான் அக்னி குரலில் எதிர்பார்ப்போடு.

“ஐய்… ஆச… தோச… உன்னத் தான் கட்டிப்பேன்… அப்புறம் கடைசி வரைக்கும் நீ தான் என்னை வச்சுக் குப்ப கொட்டணும்… பாத்துக்க… நல்லா யோசிச்சு இப்பவே முடிவு பண்ணு… சாய்ஸ் இஸ் யுவர்ஸ்…” என்றவள் தோளைக் குலுக்கிவிட்டு அவன் பதிலையும் எதிர்பாராமல் எழுந்து சென்றுவிட்டாள். சிறுவயதில் இருந்தே பழகியதால் அவர்களிடையே உறவையும் தாண்டிய நெருங்கிய நட்பொன்று இழையோடிக் கொண்டிருந்தது.

“என்னடா அவ இப்படி சொல்லிட்டு போறா…” என்றார் தனா.

“அதான் சித்தப்பு எனக்கும் பக்குனு இருக்கு…”

“சரி அத அப்புறம் யோசிப்போம்…  உன் லவ்வுக்கு ஏதோ ஹெல்ப் பண்ணனும்னு சொன்னீயே… அத சொல்லு முதல…”

“அங்க தான் சித்தப்பு… ஒரு சின்னப் பிரச்சனை…”

“அதத் தான்டா என்னனு கேக்கறேன்…”

“அது வந்து சித்தப்பு…”

“என்னடா வந்து போயினுட்டு இருக்க… அந்தப் பொண்ணு வீட்டுல ஏதாவது பிரச்சனை பண்ணுறாங்களா..?”

“அதெல்லாம் இல்ல… அதவிடப் பிரச்சனை கொஞ்சம் பெரிசு…”

“என்ன லவ்வ அந்தப் பெண்ணுட்டையே சொல்லலையா..?”

“அதுவும் இல்லைச் சித்தப்பு… அதவிடப் பிரச்சனை இன்னும் கொஞ்சம் பெரிசு…”

“அப்படியே அறைஞ்சேனா… இதைவிட என்னடா பெரிசா…”

“அது சித்தப்பு… சின்னதா ஒரு டவுட்…”

“என்னா… டவுட்டு…”

“எனக்கு அந்தப் பொண்ணு மேல லவ்வா இல்லையானு ஒரு டவுட்டு சித்தப்பு… அவ்வளவு தான் பெருசா வேற ஒன்னும் இல்ல…” என்றான் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு அக்னி.

“எது..? ஏன்டா அண்ணனும் தம்பியும் சேந்து என்னை மேல அனுப்பாம அடங்க மாட்டீங்களா… மூடிட்டு நிவியக் கட்டிட்டு குடும்பம் நடத்தற வழியப் பாரு… லவ்வு ஜவ்வுனு சொல்லிட்டு என் உயிர வாங்குன நானே உங்கொப்பனக் கூப்பிட்டுப் பத்தி வச்சுடுவேன்… சொல்லிட்டேன்…” என்றார் கடுப்பாகத் தனா.

“அதில்லச் சித்தப்பு… நான் அந்தப் பொண்ண முதல் தடவை ஆக்ஸிடன்ட்ல தான் பாத்தேன்…” எனத் தொடங்கியவன் அத்தனையும் சொல்லி முடித்தான். “ஆனா அந்தப் பொண்ணு மயக்கம் போட்டு விழும் போது எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா..? அவ என்னைத் திட்டுனது கூட மண்டையில ஏறல… அவளுக்கு எதுவுமில்லையேனு தான் முதல்ல பாக்கத் தோணுச்சு… எனக்கு என்னமோ அவளத் தவிர வேற யாரையும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாதோனு தான் தோணுது…” என்றான் தீவிரமாக.

“என்னடா மவனே… இவ்வளவு நடந்து இருக்கு… நீ இப்ப தான் வந்து கதை கதையா‌ சொல்லிட்டு இருக்க… இதப் போய் உங்க அப்பாட்டச் சொன்னா சாமி ஆடிடுவாறேடா… அதவிட முக்கியம் முதல அந்த பொண்ணு உன்ன லவ் பண்ணு தானே தெரியலையே…”

“அதான் சித்தப்பு எனக்கும் என்ன பண்ணறதுனு தெரியல… முதல்ல இந்தக் கல்யாணத்த நிறுத்தணும்…”

“ஆஹான்… நிறுத்திட்டா… உடனே அந்தப் பொண்ணுட்ட லவ்வ சொல்லி லவ் பண்ண வச்சு… கல்யாணத்த முடிச்சுடுவ… அப்படித்தானே.‌.?”

“இல்லையா பின்ன..?” என்றான் அத்தனை நம்பிக்கையாய் அக்னி.

“ரொம்ப நம்பிக்கை தான்டா உனக்கு…” என்றார் தனா கேலியாய்.

“என்ன சித்தப்பு நீ வேற கண்ட நேரத்துல காமெடி பண்ணிட்டு… இப்ப என்ன பண்ணிக் கல்யாணத்த நிறுத்தலாம் சொல்லு… ஏன்னா நாளைக்கு மறுநாள் தட்டு மாத்தறது… அநேகமா அத இங்க வச்சே தான் பண்ணுவாங்கனு நினைக்கறேன்… அதுக்குள்ள இதத் தடுத்து நிறுத்தணும்…”

“நிறுத்தணும் நிறுத்தணுமுனா… எப்படிடா நிறுத்த முடியும்? நான் போய்ச் சொன்னா மனுஷன் வள்ளுனு விழுவாருடா…”

“என்ன சித்தப்பு… இப்படிச் சொல்லிட்ட..? உன் மேல எட்டப்பருக்கு எம்புட்டுப் பாசம்…”

“பாசம் தான்டா… எனக்காக உயிரையே தருவாரு… ஆனா இந்த விசயத்துல கேக்க மாட்டாரு…” என்றார் யோசனையாய் தனா.

“இரு… இரு என்ன சொன்ன இப்போ… உயிரக் குடுக்கற அளவுக்கு பாசமா…” என்றான் சட்டென்று தொற்றிக் கொண்ட ஆர்வத்தோடு அக்னி.

“ஆமா… அதுக்கு என்ர இப்ப…” என்றார் சந்தேகமாய் அவனைப் பார்த்துக் கொண்டே தனா. ‘இந்த தடவ என்னென்ன கூத்துப் பண்ண போறானுங்களோ ஆண்டவா..?’ என்று தான் அவரின் எண்ணத்தில் ஓடியது.

“தெய்வம் சித்தப்பு நீ… எவ்வளவு பெரிய ஐடியா குடுத்திருக்க…” என அவரைக் கட்டிக் கொண்டு கன்னத்தை ஈரம் செய்தவன் துள்ளிக் குதித்துக் கொண்டு வேலைக்குக் கிளம்பி விட்டான்.

“டேய்… டேய்… என்னைய வச்சு புதுசாப் பிளான் எதுவும் பண்ணலையே… சொல்லிட்டுப் போடா டேய்… உசுர வாங்குறானே…” என இவர் பின்னோடு கத்திக் கொண்டே சென்றதற்கெல்லாம் பயனே இல்லாமல் போனது.

❤️❤️❤️❤️❤️

வழக்கம் போல தனது அழகு நிலையத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் மிளிர். அவளையும் விடப் பரபரப்பாகத் தயாராகிக் கொண்டிருந்தனர் தில்லைநாதர்-வசுமதி தம்பதியினர்.

“மதி… எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டீயா? சீக்கரம் கிளம்பும்மா… இப்ப கிளம்புனாத் தான் ராத்திரிக்குள்ள திரும்பி வர முடியும்…” என அவரை அவசரப்படுத்திக் கொண்டிருந்தார் நாதர்.

“இதோங்க… எல்லாமே எடுத்து வங்சுட்டேன்… நம்ம மிளிரோட ஜாதகத்தைத் தான் ரொம்ப நேரமாத் தேடிட்டு இருக்கேன்… ஆனாக் கிடைக்கலைங்க…” என பூஜையறையையே அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார் வசுமதி.

“என்னம்மா நீ… இதெல்லாம் பொறுப்பா வைக்கறதில்லையா..?” என நாதரும் சேர்ந்து பரபரப்பாகத் தேடிக் கொண்டிருக்க, அதையெல்லாம் கண்டு கொள்ளாது நிதானமாக இனியன் கொடுத்த தேனீரையை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தாள் மிளிர்.

இருவருக்கும் எங்கு தேடியும் அவளின் ஜாதகம் கிடைத்தபாடில்லை. ஓய்ந்து மிளிருக்கு அருகே அமர, “இவ்வளவு நேரம் இதையா தேடறீங்க இரண்டு பேரும்..?” என்றபடியே அவள் கையில் இருந்த நோட்டை இப்படியும் அப்படியுமாகத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள் மிளிர்.

“உனக்கு எல்லாத்துலையும் விளையாட்டுத் தான்…” என்றபடி அவளிடமிருந்து அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டார் வசுமதி.

“ஏன்ம்மா… இந்த ஒன்பது கட்டத்துல தான் ஒருத்தனோட வாழ்க்கையே இருக்கா…  இதெல்லாம் இன்னுமா நம்பிட்டு இருக்கீங்க நீங்க..?” என்றாள் ஏளனமாய் அவள்.

“உனக்கு ஒரு விசயத்துல நம்பிக்கை இல்லைனா அடுத்தவங்க நம்பிக்கைய அவமதிக்கக் கூடாது மிளிர்…” என்றார் நாதர் கண்டிக்கும் குரலில்.

“சாரிப்பா… ஆனா எனக்கு இப்போ கல்யாணத்துல இஷ்டம் இல்லை… எனக்கே நான் யாருனு தெரியாதப்போ… எப்படிப்பா கல்யாணம்..?” என்றாள் மறுப்பாய் மிளிர். இப்போது கல்யாணப் பேச்சை எடுப்பதில் துளியும் அவளுக்கு விரும்பமில்லை. இரு தினங்கமாய் எப்படியெல்லாமோ தனது மறுப்பை சொல்லிவிட்டாள். ஆனால், பெற்றவர்கள் அதைக் காதில் வாங்கிக் கொள்வதுப் போலக்கூட தெரியவில்லை. இதோ பிடிவாதமாக ஜாதகத்தைப் பார்க்க கிளம்பிவிட்டனர்.

“உனக்கு எங்களத் தெரியுதாம்மா..?” என்றார் நாதர் அவளைக் கூர்ந்து பார்த்தபடி.

“அப்பா…” என்றாள் மிளிர் தடுமாறி.

“இல்ல மிளிர்ம்மா எங்களை உனக்கு அடையாளம் தெரியுதான்னு கேக்கறேன்…” என்ற அவரின் கேள்விக்கு இல்லை என இடவலமாகத் தலையாட்டினாள் மிளிர்.

“அப்புறம் எப்படி எங்கள உன் சொந்தம்னு நம்பற… நாங்க சொல்லற எல்லாத்தையும் நம்பற…” என்ற அவரின் கேள்விக்கு பதிலேதும் சொல்லாது அமைதியாக இருந்தாள் அவள். அவளுக்கே அதற்கான பதில் தெரியாத போது, என்னவென்று அவருக்கு சொல்வாள்.

“தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்னு பெரியவங்க சொன்னது சும்மா இல்லைம்மா… எல்லாத்தையுமே மறந்தாலும் அந்தப் பிணைப்பு உடைஞ்சு போகாது… ரத்த பந்தம் அறுந்து போகாது… அதே மாதிரித் தான் உன் கல்யாணமும்… அந்த பந்தம் இப்படித் தான் ஏற்படணுமுனா ஏற்பட்டே ஆகும்… இது நாங்க எங்க திருப்திக்காகப் பாக்கறது… அப்படியேனாலும் இன்னைக்கே ஜாதகம் பார்த்து நாளைக்கேவா உனக்குக் கல்யாணம் பண்ணிடப் போறோம்..?” என்றார் நிதானமாக.

அவர் சொல்லியது புரிந்தது என்னும் விதமாகத் தலையாட்டியவள் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு அழகுநிலையம் கிளம்பிவிட்டாள்.

“இனியா… நாங்க வர எப்படியும் ராத்திரி ஆகிடும்… நாங்க நம்ம சொந்த ஊருக்குப் போறோம்… வர முன்ன பின்ன ஆகலாம்… ஒரு வேளை வரமுடியலனா… ராத்திரி நம்ம பூர்வீக வீட்டுலையே தங்கிடுவோம்… கடையப் பொறுப்பாப் பாத்துக்கோ… காலைக்கும் மதியத்துக்கும் சமைச்சு வச்சுருக்கேன்… சாப்பிடுங்க… ஒரு வேளை ராத்திரி வரலைனா மாவு ப்ரிட்ஜில இருக்கு… அக்காவுக்கு நீயே தோசை ஊத்திக் குடுத்துடு… அவள சமைக்கச் சொல்லாத… புரியுதா..?” என்றபடியே கிளம்பிக் கொண்டிருந்தார் வசுமதி.

“ஏம்மா ஜாதகம் தானே… இங்கையே எங்கையாவது பாக்கலாம் தானே… இதுக்காகத் திருவண்ணாமலை வரைக்கும் போகணுமா என்ன..?” என்றான் யோசனையாய் இனியன்.

“அக்காவுக்கு ஜாதகம் எழுதிக் குடுத்ததே அவர் தான்டா… இந்தப் பேர வைக்கச் சொன்னது கூட அவர் தான்… என்னமோ அப்பா அங்க போய்ப் பாக்கணுமுனு பிரியப் படறாரு… அப்படியே அங்க உள்ள நம்ம சொந்தக்காரங்களையும் பாத்த மாதிரி இருக்கும் இல்ல…” என்றபடியே அவர் கிளம்பி வாசல்வரை வந்துவிட,

“டேய்… பசங்க இந்நேரம் கடையத் திறந்து இருப்பாங்க… போய்க் கடையப் பாக்கப் பாரு… அத விட்டுட்டு எங்கையாவது ஊர சுத்துனனு தெரிஞ்சுது கால உடச்சுடுவேன் படுவா… அக்காவையும் கவனமா பாத்துக்க…” எனச் சொல்லித் தான் கிளம்பி இருந்தார் நாதர்.

பேருந்து நிலையம் வரை இருசக்கர வாகனத்தில் வந்து அங்கிருந்து திருவண்ணாமலைக்குப் பேருந்தில் செல்வதாக ஏற்பாடு. இருவரும் அங்கே சென்றடைய கிட்டதட்டத் நான்கு மணி நேரம் ஆகியிருந்தது. அங்கிருந்து அவர்களை அழைத்துச் செல்ல நாதரின் பங்காளி முறையில் உள்ள ஒருவர் வந்திருந்தார்.

கிட்டத்தட்ட அடுத்த நாற்பது நிமிடப் பயணத்தில் ஊரை அடைந்திருந்தனர் அவர்கள். இன்னும் பழைமை மாறாதிருந்தது அந்தக் கிராமம். தன்னை அழைத்து வந்தவர் வீட்டிலேயே மதிய உணவை முடித்துக் கொண்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு மதியம் மூன்று மணிக்கு மேலே தாங்கள் சந்திக்க வந்தவரைத் தேடிச் சென்றனர் அவர்கள்.

வீட்டின் வெளியே வேப்பமர நிழலில் ஒரு மரச் சாய்வு நாற்காலியில் கண்களை மூடி அமர்ந்திருந்தார் அவர். நேற்றே நாதர் வருவதாக தகவல் சொல்லி இருக்க, அவர்களுக்காகத் தான் காத்திருந்தார் அவர். கிட்டத்தட்ட எண்பதை நெருங்கும் வயது. உடலில் ஒரு தொய்வு தெரிந்தாலும் முகத்தில் தெய்வீகக் களை தவழ்ந்தது.

“வணக்கங்க ஐயா…” என நாதர் அவரை வணங்க, “வாய்யா நாதரு… இப்போ தான் சொந்த ஊருக்கு வழி தெரிஞ்சுதோ..? வீட்டுல எல்லாம் நல்லா இருக்காகளா..?” என்றபடியே அருகில் இருந்த திண்ணையைக் காட்ட இருவரும் அதில் அமர்ந்தனர். அதன் பிறகு சில நிமிடங்கள் பொதுவான நல விசாரிப்பில் கழிந்தது.

“ஆத்தா… முல்லை வந்தவங்களுக்குக் காபித் தண்ணி எடுத்தாத்தா…” என இவர் இங்கிருந்து குரல் கொடுக்க, “இதோங்க மாமா…” என்றபடியே பதில் கொடுத்தவர், வெளியே வந்து சில நிமிடங்கள் அவர்களிடம் நலம் விசாரித்துவிட்டே உள்ளேச் சென்றார்.

“அப்புறம் நாதா… வந்த விசயத்தச் சொல்லு…” என்றார் பெரியவர்.

“இல்லைங்கைய்யா நம்ம மிளிருக்குக் கல்யாணம் பண்ணலாமுனு நினைக்கறோம்… எப்போ கைகூடி வருமுனு நீங்க தான் கணிச்சுச் சொல்லணும்…” என்ற நாதர் மிளிரின் ஜாதகத்தை அவரிடம் நீட்ட,

“நான் எழுதுனத எங்கிட்டையே காட்டறீயாக்கும்…” எனப் புன்சிரிப்பைத் தவழ விட்டவர் அதை மெல்லப் புரட்டிப் பார்த்தார்.

“ஏன்ய்யா நாதா, நம்ம மிளிருக்கு எதுக்கு இந்தப் பேர வச்சேனு நீ நினைக்கற..?” என்றார் பெரியவர்.

“தெரியலையே ஐயா…” என்றார் பவ்வியமாய் நாதரும். நாதருக்கே ஜாதகம் கணித்து எழுதியவர் அவர் தான். கிட்டத்தட்ட அவரின் வாக்கு நாதருக்கு வேதவாக்கு. அவர் அறிந்து பெரியவரின் வார்த்தை பொய்த்ததே இல்லை. அதனாலேயே இத்தனை வருடங்களுக்கு பிறகு இங்கே அவரை தேடிக் கொண்டு வந்திருந்தார் அவர்.

“நம்ம மிளிர் அந்த நெருப்பப் போல நாதா… தன்னை நோக்கி வர எல்லாத்தையும் தன்னுள்ள ஈர்த்துட்டு இன்னும் இன்னும் அதிகமா மிளிரக் கூடியவ…” என்றவர் சிறிது நிறுத்தி, “ஆனா அந்தப் பிரகாசம் என்னைக்காவது குறைஞ்சு தானே ஆகணும்..?” என்றார் வேதனை நிறைந்த ஆழ்ந்த குரலில்.

“ஐயா நீங்க சொல்லறது எனக்கு சரியாப் புடிபட மாட்டேங்குதே…” என்ற நாதரின் குரலில் மெல்லிய நடுக்கம்.

“இது நம்ம மிளிருக்கு மறுபொறப்புனு சொல்லறேன்… புதுசாப் பொறந்த குழந்தை மாதிரித் தான் அவ உங்களுக்குக் கிடைச்சு இருப்பா… ஆனா இது நிரந்தரம் இல்லை…” என்றவர் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடர, அதற்குள் அவர்கள் இருவரின் இதயமும் தாளம் தப்பித் துடிக்கத் தொடங்கி இருந்தது.

“முன் ஜென்ம நினைவு வந்தா இந்த ஜென்மம் பெரிய  குழப்பமாகிடும்… அதனால தான் அந்த ஆண்டவன் நம்ம யாருக்கும் அந்த நினைவத் தரதில்லை… அதே தான் மிளிருக்கும்… அவளுக்கு கடந்த காலத்தோட நினைவு வந்தா… அவளோட இந்த நிகழ்காலம் நிரந்தரமில்லை… அவ உயிர் அவளுக்குச் சொந்தமில்லை… எல்லாத் தேடலும் பதில மட்டுமே தராது… சிலது மரணத்தையும் தரும்…” என்று அவர் சொல்லி முடிக்கும் முன்னே நாதர், வசு இருவருமே கண்கள் கலங்கிப் போனது.

“கலங்காத நாதா… இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே பறிச்சு இருக்க வேண்டிய உசுர அந்த சிவன் காரணமாத்தான் விட்டு வச்சுருக்கான்… உன் மக பொழைக்கணுமுனா அதுக்கு அவனே வழி சொல்லுவான்… அந்த சிவன நம்பு… எல்லாமே நல்லதா நடக்கும்…” என்றார் அவர்.

“என் பொண்ணு பொழைக்கப் பரிகாரம் எதாவது இருக்குங்களாய்யா…” என்றார் தவிப்பாய் வசு.

“சாகற உயிரை எல்லாம் பரிகாரம் செஞ்சு புடிச்சு வைக்கலானா இந்த உலகத்துல ஒருத்தர கூட மரணம் தீண்டாதேம்மா…” என்றார் அழுத்தமாய் பெரியவர்.

“அப்போ மிளிர் பொழைக்க வழியே இல்லைங்களாய்யா..?”

“அவன் என்ன நினைக்கறானோ அத நான் சொல்ல முடியுமா..? மிளிருக்கு மித்திரனா ஒருத்தன் துணை நிப்பான்… அவன் துணை இருந்தா மிளிர் அகிலத்தையே ஜெயிக்கலாம்… ஆனாலும் அவனாலையும் அவ உயிரப் புடிச்சு வைக்க முடியும்னு சொல்லறதுக்கு இல்ல… அதுக்கு அந்த ஈசன் தான் பதில் சொல்லணும்… நல்லதே நடக்கும்னு நம்புங்க…” என்றவர் அதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை என்பதைப் போல எழுந்து கொள்ள, வேறு வழியின்றி இவர்களும் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.

– தேடல் தொடரும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்