
அத்தியாயம் 64
“நம்ம வருத்தம் நம்ம பொண்டாட்டிங்க நம்மளோட நேரம் செலவு பண்ண மாட்றாங்க என்பது தானே. நாலு பேரையும் பிரிச்சு, அவங்க மனசைக் கஷ்டப்படுத்தி தனிக்குடித்தனம் கூட்டிட்டுப் போய், நாம மட்டும் சந்தோஷமா இருப்பதற்குப் பதில் நடப்பையும், நம்ம எதிர்பார்ப்பையும் எடுத்துச் சொன்னா என்ன?
மோர் ஓவர் அவங்க சொன்ன மாதிரி, நாம ஒன்னா தான் இருக்கணும் னு இது வரைக்கும் அவங்க கட்டாயப்படுத்தினது இல்ல. அவங்க ஒன்னா இருந்தா போதும் என்பது தானே அவங்களோட எண்ணம். அவங்க நம்மைக் கட்டாயப்படுத்தாத போது, நாம எதுக்காக அவங்களைக் கட்டாயப்படுத்தணும்.
அன்னைக்கு நம்ம வீட்டில் நடந்த சண்டையோட அதிகப்படியான அழுத்தத்தினால் தானே இப்படி நடந்துக்கிறாங்க. நாம அவங்களோட மனசு விட்டுப் பேசி அதை அவங்க புரிஞ்சிக்கிட்டு எல்லோரும் ஒரே வீட்டில் இருந்தாலும் அவங்க நம்மளோட அதிக நேரம் செலவு பண்ணா அது நமக்குச் சந்தோஷம் தானே.” என்றான் தர்மா.
“தர்மா கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. எனக்குத் தெரிஞ்சு அவங்க ஒன்னா இருக்கும் வரைக்கும் நாம நாலு பேரும் தலைகீழா நின்னாக் கூட தனிக்குடித்தனம் வர ஒத்துக்க மாட்டாங்க. அவங்க போக்கில் விட்டா நம்மை பெருசாக் கண்டுக்கவும் மாட்டாங்க.
நம்ம கல்யாண வாழ்க்கையை நாம காப்பாத்திக்கணும், நம்ம பொண்டாட்டியோட நாம நினைச்ச மாதிரி வாழனும் னா அதுக்கு இரண்டே வழிதான் இருக்கு. ஒன்னு நாம நினைக்கிற மாதிரி அவங்க நாலு பேரையும் பிரிச்சு தனிக்குடித்தனம் போறது.
இன்னொன்னு அவங்க நினைக்கிற மாதிரி கண்டிஷன் பேப்பரில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டு, நீயும் நானும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து முறைச்சிக்கிட்டு கடைசி வரைக்கும் ஒரே வீட்டில் இருக்கிறது.
அப்படி இருந்திடலாம், அதில் என்ன பெருசா இருக்குன்னு நீ நினைக்கலாம். ஆனா உன் பொண்டாட்டி உனக்கானவளா மட்டும் இருக்க மாட்டாங்க.” என்ற உடன் பிறந்தவனை அதிர்ச்சியாகப் பார்த்தான் தர்மா.
“என்ன பார்க்கிற, இப்பவே அக்கா அக்கான்னு மத்த மூணு பேர் பின்னாடி சுத்துற உன் பொண்டாட்டி, நாளைக்கு எல்லோருக்கும் குழந்தை குட்டின்னு ஆயிடுச்சின்னு வைச்சிக்கோ, தன் பசங்க அக்கா பசங்கன்னு அவங்களைத் தான் சுத்தி வருவாங்க. உன்னை மொத்தமா மறந்துடுவாங்க.
காலம் முழுக்க வாழ வேண்டிய சந்தோஷமான கல்யாண வாழ்க்கையை இரண்டு, மூணு வருஷத்தில் வெறுத்திடுவ. அதுக்கப்புறம் நீ என்ன தான் நினைச்சாலும், உன்னால உன் பொண்டாட்டி கூட மனசு ஒத்துமையா வாழ முடியாது. அவ்வளவுதான் வாழ்க்கைன்னு சலிப்போட தான் மத்த நாட்கள் போகும்.
இதெல்லாம் தேவையா கொஞ்சம் யோசிச்சுப் பாரு. இதுவே, நாம தனியாப் போனா, நீயும் உன் மனைவியும் சந்தோஷமா இருக்கலாம், நிம்மதியா இருக்கலாம். அப்பப்ப ஏதோ விசேஷ நேரத்தில் நாம எல்லாரும் ஒன்னாச் சேர்ந்தா, அவங்க அக்கா தங்கச்சிங்களை பார்த்துக்கட்டும். நாம அதுக்கு ஒன்னும் தடை சொல்லப் போறது இல்லையே.” பெரிய மனதுடன் சொன்னான் தெய்வா.
“ஆமா தர்மா எனக்கும் தெய்வா சொல்றது தான் சரின்னு படுது. நமக்கு நம்ம வாழ்க்கை தான் முக்கியம். நாம ஒன்னும் அவங்க நாலு பேரையும் பிரிச்சு கூட்டிட்டுப் போய் தனிச்சு விடப்போறதில்லை.
நம்ம பொண்டாட்டிங்க ஒவ்வொருத்தருக்கும் அவங்க அக்கா, தங்கச்சிங்க கொடுக்க வேண்டிய பாசத்தையும் சேர்த்து நாமளே கொடுக்கப் போறோம் அவ்வளவுதான்.” உடன்பிறந்தவன் கருத்துக்கு ஆதரவு கொடுத்து இளையவனுக்கு யோசனை சொன்னான் செல்வா.
“எல்லாத்துக்கும் மேல இப்ப நம்ம நாலு பேருக்கும் நடுவில் சுமூகமான ஒரு நிலைமை இருக்கு. இது கடைசி வரைக்கும் இப்படியே இருந்திடட்டுமே. நாம அதிகமாக ஒட்டிக்கவும் வேண்டாம், அதே நேரத்தில் வெட்டிக்கவும் வேண்டாம்.” நாகா கேட்க, தர்மாவும் அரை மனதாக ஒப்புக் கொண்டான்.
“வெரிகுட், இப்போ இருந்து நம்ம மிஷன் ஸ்டார்ட் ஆகுது. இதே மாதிரி யாருக்கும் தெரியாம நம்ம அடிக்கடி மீட் பண்ணி, அடுத்து என்ன பண்ணலாம் னு டிஸ்கஸ் பண்ணிக்கலாம்.
இப்போதைக்கு நம்மளோட முதல் டார்கெட் நமக்கும் நம்ம பொண்டாட்டிங்களுக்கும் நடுவில் இருக்கிற இடைவெளியை இல்லாம ஆக்குறது.
முதல்ல நாமளும் அவங்களும் நல்லா நெருங்கிக்கலாம். அதுக்கு அப்புறம் அவங்க நாலு பேரையும் தனித்தனியா பிரிக்கலாம். சொல்லப்போனா அதுக்கப்புறம் அது ரொம்ப ஈஸியும் கூட.” தெய்வா சொல்ல மற்ற மூவரும் சற்றே சுவாரசியமானார்கள்.
“என்னடா இப்படிச் சொல்றேனேன்னு நினைக்காதீங்க, உங்க நல்லதுக்கும் சேர்த்து தான் சொல்றேன். இப்ப இருந்து நம்ம பொண்டாட்டிங்களை நாம சுத்தி சுத்தி வரனும். அவங்களையும் நம்மைச் சுத்தி வர வைக்கணும்.
அவங்களோட மனதும், கவனமும் திரும்பத் திரும்ப நம்மைத் தேடிக்கிட்டே இருக்கிற மாதிரி நாம அவங்களை மாத்தணும். அக்கா, தங்கச்சிங்கன்னு மட்டுமே யோசிச்சிக்கிட்டு இருக்கிற அவங்களோட புத்தி, மனசை முழுக்க முழுக்க நம்மைப் பத்தி மட்டுமே யோசிக்க வைக்கணும்.
அவங்க அப்படி நம்மைப் பத்தி யோசிக்க யோசிக்க அவங்களையே அறியாம நாலு பேரும் ஒவ்வொருத்தர் கிட்ட இருந்தும் மனசு அளவுல பிரிய ஆரம்பிப்பாங்க.” பலமாகப் பேசிக்கொண்டே போனான் தெய்வா.
“இரு இரு… இப்படி நீ மூச்சுவிடாமப் பேசுறதை எல்லாம் பார்த்தா எனக்கு டவுட்டா இருக்கு. இதெல்லாம் நீயா சொல்ற மாதிரி தெரியல, யாரோட குரலுக்கோ நீ டப்பிங் கொடுக்கிற மாதிரி இருக்கு.” விஷயத்தைப் பிடித்தான் நாகா.
“ப்ச் யாரு சொன்னா என்ன. என்னோட நல்ல வாழ்க்கைக்காக ஒருத்தர் எனக்குச் சொன்னாங்க அதை நான் உங்களுக்கும் சொல்றேன்.” என்றான் தெய்வா.
“நீ சொல்றதெல்லாம் கேட்கிறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஆனா இவங்க தான், நம்ம பக்கத்தில் போனாலே கண்டிஷன் பேப்பரில் கையெழுத்துப் போடு, அதைப் போடு இதைப் போடுன்னு கடுப்பேத்திக்கிட்டு இருக்காங்களே.” கடுமையான குரலோடு சொன்னான் செல்வா. லீலாவின் அமைதி மற்றும் விலகல் அவனைக் கடுமையாகப் பாதித்ததின் அடையாளம் அது.
“ம்ம்ம்… கரெக்டான பாயிண்டுக்கு வந்துட்ட. ஆக்சுவலி நானும் அடுத்து இதைத் தான் சொல்ல நினைச்சேன். இப்போதைக்கு அவங்க கொடுக்கிற பேப்பரில் எல்லாம் கண்ணை மூடிக்கிட்டு கையெழுத்து போட்டுக் கொடுத்திடுங்க.” என்ற தெய்வா அடுத்த வார்த்தை சொல்வதற்குள்,
“போடாங்… நல்ல ஐடியா கொடுக்கிறான் பாரு. அவங்க கேட்கிற மாதிரி கையெழுத்துப் போட்டுக் கொடுத்திட்டா அவ்வளவு தான். நம்ம மொத்த குடுமியும் அவங்ககிட்ட சிக்கிடும்.” பதறினான் நாகா.
“ப்ச்… அப்படி அதிகபட்சம் அதில் என்ன இருக்கு. அவங்களோட கண்டிஷனை நாம மீறினா, அவங்க நம்மை விட்டுப் போகலாம், அதை நாம யாரும் கேட்கக் கூடாதுன்னு தானே.
இப்போதைக்கு நாம அதில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டு, அவங்களை நம்மை நம்ப வைப்போம். அதுக்கு அப்புறம் நாம நடந்துக்கிற விதத்தில் அவங்களே நம்மை விட்டுப் போக நினைக்க மாட்டாங்க.” என்க, இது நம்ப வைத்து ஏமாற்றுவது போல் இருப்பதாக தர்மாவின் மனம் தடுத்தது.
“இதிலும் ஒரு சிக்கல் இருக்கு. ஒரே நேரத்தில் நாம நாலு பேரும் போய், நாங்க மனசு மாறிட்டோம் கண்டிஷன் பேப்பரில் கையெழுத்துப் போடுறோம் னு சொன்னா, நம்ப மாட்டாங்க.
அதனால் ஒவ்வொருத்தரா ஆரம்பிக்கலாம். முதல்ல தர்மா நீ தான் இதைப் பண்ணனும். ஏன்னா நீ தான் கொஞ்சம் இரண்டு பக்கமும் யோசிக்கிற ஆளு. நீ சீக்கிரத்தில் மனசு மாறிட்டன்னா கண்டிப்பா எல்லோரும் நம்புவாங்க.
சோ இன்னைக்கு நீ போய் உன் பொண்டாட்டி கேட்கும் கண்டிஷன் பேப்பரில் கையெழுத்துப் போட்டுக் கொடு. அப்புறம் நாங்க மூணு பேர் இருக்கும் போது எங்களை எரிச்சல் படுத்துற மாதிரி உன்னோட பொண்டாட்டிகிட்ட நீ பேசணும். தெளிவா சொல்லணும் னா கொஞ்சணும். அதைப் பார்த்து பொறாமைப்பட்டு நாங்களும் எங்க பொண்டாட்டிங்க கூட சேர்ந்ததா ப்ரேம் பண்ணனும்.” பலத்த திட்டமாகச் சொன்னான் தெய்வா.
“ப்ச் என்னால இதெல்லாம் பண்ண முடியாது. பொய் சொல்றதே தப்புன்னு நினைக்கிறவன் நான். கண்டிஷன் பேப்பரில் கையெழுத்துப் போட்டுட்டு, அதை மீற என்னால முடியாது. அதோட உங்க முன்னாடி என் வொய்ப் கிட்ட பொய்யா நடிப்பது எல்லாம் சாத்தியமே இல்லாதது.” வெட்கம் தயக்கம் இரண்டும் கலந்த குரலில் சொன்னான் தர்மா.
“அட யாருடா நீ, இந்தக் காலத்துல போய் பொய் சொல்ல மாட்டேன்னுக்கிட்டு. இவ்வளவு நேர்மையா இருக்கிறதுக்காக உனக்கு யாரும் எந்த அவார்டும் தரப் போறது கிடையாது. பொய்மையும் வாய்மையிடத்துன்னு திருவள்ளுவரே சொல்லி இருக்காரு.
நம்ம நோக்கம் சரின்னா நாம போற பாதை எதுவா இருந்தாலும் அதில் தப்பே கிடையாதுன்னு கீதா உபதேசம் பண்ண கிருஷ்ணனே சொல்லி இருக்கார்.” தம்பியை மடக்கினான் தெய்வா.
சற்று யோசித்த தர்மா, “அதெல்லாம் சரிதான். ஆனா நான் எங்களோட ரூமில் கூட தேவகி கூட ரொமான்ஸ் பண்ணது கிடையாது. திடீர்னு உங்க மூணு பேரும் முன்னாடியும் நீங்க சொல்ற மாதிரி நடந்துகிட்டா, அவங்களுக்குச் சந்தேகம் வந்திடாதா.” அப்பாவியாய் கேட்டான் தர்மா.
“அடப்பாவி அப்ப இத்தனை நாளா என்னதான்டா பண்ணிட்டு இருந்தீங்க இரண்டு பேரும். உண்மையைச் சொல்லு உனக்கு உடம்பில் ஏதாவது பிரச்சனை இருக்கா. செல்வா மாதிரி இல்லாம நல்ல டாக்டர் கிட்ட போய் இப்பவே பார்த்திடலாம்.” சிரிப்புடன் கிண்டலடித்தான் நாகா. வழக்கம் போல் அதில் வன்மம் இல்லாமல் நிஜமாகவே கிண்டல் மட்டும் தான் இருந்தது.
“ப்ச்… அறிவு இல்லாம பேசாத நாகா. நடந்தது ஒரு அரேஞ்ச் மேரேஜ். அதுக்குள்ள எப்படி எல்லாம் நடக்கும். இரண்டு பேரும் கொஞ்சம் பேசி செட்டாகி அதுக்கப்புறம் எல்லாம் பார்த்துக்கலாம். வாழ்க்கை எங்கேயும் போகாதுன்னு நினைச்சேன்.” அவஸ்தையுடன் சொன்னான் தர்மா.
உடன்பிறந்தவர்கள் என்று இத்தனை வருடத்தில் ஒன்றாக அமர்ந்து பொதுப்படையான விஷயத்தைப் பற்றிக் கூட பேசியதில்லை என்னும் போது அந்தரங்க விஷயத்தைப் பற்றி இப்படியெல்லாம் பேச வேண்டியது இருக்கிறதே என்னும் கடுப்பு அவனுக்கு.
“தர்மா வாழ்க்கை எங்கேயும் போயிடாது தான். ஆனா வயசு போயிடும். இப்ப கொஞ்சம் செட் ஆகட்டும் னு தள்ளிப் போட்டு இருக்கீங்க. இனி உன் பொண்டாட்டி நான் படிச்சிட்டு இருக்கேன், படிப்பு முடியட்டும் னு தள்ளி வைப்பாங்க. இப்படியே போயிட்டு இருந்தா, வாழ்க்கை என்னத்துக்கு ஆகுறது.
எல்லாம் நடக்க வேண்டிய நேரத்தில் சரியா நடந்திருந்தா, பொண்டாட்டிங்களை அவங்க அக்கா, தங்கச்சிங்ககிட்ட தூக்கிக் கொடுத்துட்டு இப்படி நாம இங்க தனியா நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.” தம்பிக்கு அறிவுரை சொன்னான் நாகா. இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால் நிஜமாகவே தம்பி வாழவேண்டும் என்கிற நோக்கத்தில் சொன்னான்.
“நீ சொல்றது சரின்னா உன்னோட வொய்ப் ஏன் உன்கூட தனிக்குடித்தனம் வர ஒத்துக்கல.” தர்மா கேட்க, ஒரு நொடி தடுமாறியவன் சமாளித்துச் சிரித்து, “வாத்தியாரை ஜெயிக்க முடியாதுன்னு சும்மாவா சொன்னாங்க.” என்று மனதோடு நினைத்துக்கொண்டான் தான் ஒரு வக்கீல் என்பதை மறந்து.
“அவனை விடு தர்மா, நீ கேட்கிற மாதிரி ஒருவேளை உன் பொண்டாட்டிக்குச் சந்தேகம் வந்துட்டா, நாம சேர்ந்திட்டோம் அதே மாதிரி உன் அக்காங்களையும், அவங்க புருஷங்க கூட சேர்த்து வைக்கிறதுக்காக நம்ம இப்படி பண்ணலாம் னு சொல்லு. இப்படிச் சொன்னா உன்கூட எரிமலைக்குள் இறங்கக் கூடத் தயங்க மாட்டாங்க தேவகி.” என்றான் தெய்வா.
“எனக்கு என்னவோ இதில் இப்பவும் முழு மனசா உடன்பாடு இல்லை தான். இருந்தாலும் நம்ம எல்லாருக்கும் இது நல்லதுன்னா நான் இதை ஏத்துக்கிறேன்.” சகோதரர்களுக்காக பாதி மனதோடு அரைப் பொய் சொல்ல ஒப்புக்கொண்ட தர்மராஜனைப் போல், தானும் தன் சகோதரர்களுக்காகப் பாதி மனதோடு ஒப்புக்கொண்டான் தர்மா.
“ஓகே லெட்ஸ் ஸ்டார்ட் தி கேம். தர்மா இன்னைக்கு உனக்கான நேரம். நம்ம ஆட்டத்தோட பிள்ளையார் சுழியைப் நல்லபடியா போட்டுவிடு.” சந்தோஷமாய் சொன்னான் நாகா. அவனுக்கு அத்தனை குஷியாக இருந்தது.
“பார்க்கலாம்” என்றுவிட்டு கிளம்பினான் தர்மா. “என்னடா இவன் சரி சொல்ற தோரணையே சரி இல்லையே. இவன் போயி என்னத்த பண்ணி, அந்த பொண்ணு தேவகி எப்படி இவன் கூட சமாதானமாகி, ஷப்பா முடியல டா.” சிரித்தான் தெய்வா.
“அதெல்லாம் இருக்கட்டும் எனக்கு இப்போ ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லுங்க இரண்டு பேரும். ஒன்னுமே நடக்கலைன்னு தர்மா சொல்லும் போது எனக்கு மட்டும்தான் அது ஷாக்கா இருந்துச்சு, சிரிப்பு வந்துச்சு. நீங்க இரண்டு பேரும் கல்லை விழுங்கின மாதிரி அமைதியா இருந்தீங்க. இதுக்கு அர்த்தம் ஒருவேளை உங்க வாழ்க்கையிலும் ஏதும் நடக்கலையா?” சீண்டினான் நாகா.
அவன் அண்ணன்மார் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் சங்கடத்துடன் பார்த்துக் கொள்ள, “அடச்சே உங்க வீரமெல்லாம் ஒருத்தருக்கொருத்தர் சண்டை போடுறதில் தான்டா. ஏன்டா இப்படி இருக்கீங்க. ஐயோ, உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப சிரிப்பா வருது.” சொன்ன நாகா விழுந்து விழுந்து சிரிக்கவும் செய்தான்.
“ஏன்டா சிரிக்க மாட்ட இந்த விஷயத்தில் ஓரளவுக்கு எங்களுக்குச் சாமர்த்தியம் பத்தல தான், நான் ஒத்துக்குறேன். ஆனா உனக்கு இதில் ஏகப்பட்ட சமார்த்யம் இருக்கு போல. இல்லன்னா இப்படி இரண்டே மாசத்துல உன் பொண்டாட்டி இண்டு புள்ளைங்களுக்கு அம்மாவா இருப்பாங்களா?” என்றான் தெய்வா.
“இங்க பாரு அதுல கை வைக்கக் கூடாது. அது நம்ம கையில் இல்லை. எல்லாம் கடவுள் கொடுக்கிறது. ஒன்னோ, இரண்டோ கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்கு அப்புறமோ, இரண்டு மூணு வருஷத்துக்கு அப்புறமோ இல்லை கல்யாணம் ஆன அடுத்த மாசமோ எல்லாமே கடவுளோட கையில தான் இருக்கு. இதை என் பொண்டாட்டி என்கிட்ட சொன்னா.” தடுமாற்றத்துடன் சமாளித்தான் நாகா.
“செய்யுறதெல்லாம் செஞ்சிட்டு நல்லாச் சமாளிக்கிற மேன்.” சிரித்தனர் இருவரும். “வேற வழி” என்று தானும் அவர்களோடு சிரித்தான் நாகா.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
14
+1
1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


போலீஸ்கார் உங்களுக்கு கேஸ் இல்லையா .. உங்க வீட்லயே மிஷனை ஸ்டார்ட் பண்ணிட்டீங்க .. பாவம் தர்மா அவன் ஒருத்தன் தான் நல்லவன் அவனையும் கெடுத்து விடுங்க .. எல்லோரும் சேர்ந்துட்டீங்க சரி .. ஆனா திருந்தி ஒற்றுமையா வாழ்வோம்னு வாய் வருதா .. பிரிஞ்சு போறதுக்கு ஒண்ணு சேர்ந்து பிளான் போடுறாங்க .. கருநாகம் ரொம்பத்தான் உன் வாயை கம்மி பண்ணுப்பா .. பண்றது பிராடுதனம் .. இதுல திருக்குறள் .. கீதை எடுத்துக்காட்டு வேற … என்ன தெய்வா இதெல்லாம் ..