Loading

அத்தியாயம் 13

செங்கதிரோன் தன் பணியைச் செவ்வனே செய்ய தன் கதிர்களை அனைத்து திசைகளிலும் பரப்பி கிழக்கில் இருந்து அழகாக தோன்றினான்.இன்னைக்கு திருமண நாள்ல வாங்க வாங்க எல்லாரும் கிளம்பி தாத்தா வீட்டுக்கு போகலாம்…

வாசல் முழுவதையும் நிறைந்திருந்த அந்த ரங்கோலி பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தளித்தது.அதை விட்டு நகர மறுத்த கண்களை கஷ்டப்பட்டு விலக்கி வாசலைக் கடந்து உள்ளே சென்றால், வாசலில் சிகப்பு ஊதா மற்றும் பல வண்ணங்களாலானா மலர்களைக் கொண்டு வண்ணமயமான ஆர்ச் நம்மை வரவேற்றது. அதைப் பார்த்து வந்தவர்கள் யாவரும் சில நிமிடங்கள் அங்கே தேங்கி அதை இரசித்து விட்டும் சிலர் அதன் அருகில் நின்று வித விதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டும் இருந்தனர். இதைத் தாண்டி உள்ளே சென்றால் அந்த ஆர்ச்சில் இருந்து வீடு வரை இருந்த புல்தரைகளில் சிகப்பு கம்பளம் விரித்து பாதையின் இரு புறங்களிலும் வண்ண வண்ண ரோஜா, துலிப்ஸ், டெய்சி,லில்லி மலர்களைக் ஒன்றாக கொண்டு சரியான இடைவெளியில் சீராக சிறிய கம்பம் போல் வைத்து அலங்கரித்திருந்தனர். மேலும் தோரணம் போல் மலர்களைத் தொங்கவிட்டு அதன் நுனியில் மணமக்களின் சிறு வயது முதல் தொடங்கி இன்று வரை உள்ள புகைப்படங்களை அதில் தொங்க விட்டிருந்தனர்.

வந்தவர் அனைவரும் ஒவ்வொரு படமாக பார்த்து இருவரின் ஜோடிப் பொருத்தத்தையும் பாராட்டி விட்டு முன்னேறினர். அடுத்து வீட்டின் முன்புறத்தில் பூக்களாலானா பெரிய ரங்கோலி போட்டு நடுவில் பூக்களிலே விநாயகரை வரைந்து, பக்கத்தில் இரு குத்து விளக்கு ஏற்றி வைத்திருந்தனர்.பார்ப்பதற்கு மங்களகரமாக இருந்தது.

பக்கவாட்டில் திரும்பி பார்த்தால் அங்கே “நானும் மாப்ள தான்” என்று பெயர் பலகை தாங்கி அதில் படம் இன்று வெளியிடப்படுகிறது என்றும் ஹீரோ ஹீரோயினாக ஹரி மற்றும் ஸ்ரீ பெயரும் பதிக்கப்பட்டு அவர்களின் கார்டூன் புகைப்படத்தையும் இணைத்து வைத்திருந்தார்கள்.

அதைப் பார்த்து பாராட்டிவிட்டு இன்னும் முன்னேறினால் அதை செய்ய முடியாமல் “என்னைக் கொஞ்சம் பாரேன்” என தோட்டம் அழைத்தது.. அங்கே, தோட்டம் முழுக்க அழகழகாய் வித்தியாசமாய் செல்ஃபி பூத்கள் அமைக்கப்பட்டு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அங்கே சென்று புகைப்படம் எடுத்து போட்டோகிராபரை ஒரு வழி செய்து கொண்டிருந்தனர்.

சரி கலாட்டா செய்தது போதும் என்று முடிவெடுத்து யு டர்ன் அடித்து மீண்டும் வாசலுக்கு வந்தால் அங்கே குட்டி குட்டி குழந்தைகள் சேலை வேஷ்டி என நம் பாரம்பரிய உடையணிந்து பார்ப்பதற்கே மிகவும் அழகாக வரவேற்பில் பன்னீர் தெளித்து ரோஜா, கல்கண்டு கொடுக்க நின்றிருந்தனர்.அவர்களை கொஞ்சாமல் யாரும் உள்ளே செல்ல முடியவில்லை அவ்வளவு அழகு.

அவர்களைத் தொடர்ந்து உள்ளே சென்றால் நம்ம பிரமிக்க வைக்க ஹால் முழுவதும் ஹீலியம் பலூன்கள் மேலே சீலிங்கில் தொங்கிக் கொண்டு கண்களை கவர்ந்திழுத்தது.

இடது புறம் திரும்பினால் அங்கே நம் நாதஸ்வர மேள தாளங்கள் வாசிப்போர் அவர்களின் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தனர்.

வலது புறம் திரும்பினால் பஃபே முறையில் சிறிய அளவில் பானி பூரி,பேல் பூரி, பாவ் பாஜி,மசாலா பொறி,ஐஸ்க்ரீம்,கூல்ட்ரிங்க்ஸ் போன்றவை மட்டுமல்லாமல் கடலை மிட்டய் ,தேன் மிட்டாய்,பொரி உருண்டை,கமர்கட்டு,இலந்தவடை போன்ற ,காலப்போக்கில் கு(ம)றைந்து போன திண்பண்டங்களும் அடுக்கி வைத்திருந்தனர்.

விருந்தினர்கள் அமர்வதற்கு பஞ்சு மெத்தை விரித்து பட்டுத் துணி போர்த்தி அருகில் வித விதமான தலையணைகளும் வைத்து அழகாக தயார் செய்திருந்தனர்.கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தால் மேடை அலங்காரத்தை பார்த்து கண்கள் மின்னின.பூக்கள் மட்டும் வண்ண வண்ண திரைசீலைகள் கொண்டு மேடையை அமைத்து நடுவே அக்னி குண்டம் எரிந்து கொண்டிருக்க ஐயர் மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தார்.மேடையின் பின்புறம் இருந்த சுவற்றில் ஹரி ஸ்ரீயின் நிச்சயதார்த்ததின் போது எடுத்த புகைப்படத்தை பூக்களைக் கொண்டே வரைந்திருந்தனர். அந்தப் புகைப்படத்தில் ஸ்ரீ அழகாக குனிந்து தன் விரல்களில் தன்னவன் போட்ட மோதிரத்தை பார்த்துக் கொண்டிருக்க ஹரி தன்னவளை ஆசையாக ரசித்துக் கொண்டிருப்பான்.இதை தத்ரூபமாக பூக்களால் வடிவமைத்திருந்தனர்.பார்த்தவர் அனைவர் மனதிலும் பண்ணா இப்படி ஒரு கல்யாணம் பண்ணனும் என்ற எண்ணம் மேலோங்கியது.அந்த அளவிற்கு ஒவ்வொரு இடத்திலும் தங்கள் கலைத் திறமையை கொட்டி தீர்த்திருந்தனர்.

வீட்டில் உள்ள அனைவரும் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு இருந்தனர்.(கல்யாண பரபரப்புல இருக்காங்களாமா).தாத்தாவும் பாட்டியும் வாயிலில் நின்று வந்தவர்களை வரவேற்று கொண்டிருக்க ,அவர்களுடன் நல்லசிவமும் சேர்ந்து கொண்டார்.ஐயர் கூறிய வேலைகளை கலைவாணியும் சாருமதியும் பார்த்துக் கொண்டிருக்க, வந்தவர்களிடம் நலம் விசாரித்து சாப்பிட அழைத்துப் போய்க் கொண்டிருந்தார் பத்மினி.மதிவாணனும் மதியழகனும் பந்தி ஒழுங்காக நடக்கிறதா சமையலுக்கு ஏதேனும் வேண்டுமா என மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்படியே கேமராவை நம்ம மணமகன் அறைக்கு கொண்டு போவோம் வாங்க.

“கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா

இல்லை ஓடிப் போய் கல்யாணம் தான் கட்டிக்கிலாமா” என்ற பாடலை விசிலடித்துக் கொண்டே கண்ணாடியின் முன் நின்று தலை வாரிக் கொண்டிருந்தான் ஹரி.

கட்டிலில் அமர்ந்து அல்வாவை அபேஸ் பண்ணிக் கொண்டிருந்த கார்த்தியும் விஜயும் இவன் செய்கையைப் பார்த்து கிண்டலடித்தனர்.

கார்த்தி அல்வாவை அமுக்கிக் கொண்டே,”டேய் லூசுப்பயலே அதான் கல்யாணம் ஆகப்போகுதே அப்பறம் எதுக்கு இந்த பாட்டை பாடுற நீ பாட வேண்டிய பாட்டு என்ன தெரியுமா ,

“நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை

மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை

நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்

மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை

இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்

இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்

இன்று முதல் இரவு

இன்று முதல் இரவு நீ என் இளமைக்கு உணவு..

மெல்லவா உனை கிள்ளவா இல்லை அள்ளவா நீ வா”

என்று பாடிக் கொண்டே விஜயை கட்டிலில் தள்ளி அவனை கட்டிப் பிடித்தான்.

அவனை தள்ளி விட்டு பதறி அடித்து எழுந்த விஜய்,”டேய் பன்னாடை என்னடா பண்ற அவனாஆஆஆ நீ!!!!!” என இழுத்து கிண்டலடித்தான்.

இவர்களின் கூத்தைப் பார்த்து ஹரி சிரிக்க, கார்த்திக் ,”சிரி ராஜா நல்லா சிரி ..இன்னைக்கே நல்லா சிரிச்சுக்கோ இனிமேல் அது வாழ்க்கைல இருக்க போறதே இல்லை” என்று கிண்டலடித்தான்.

“ஏன் விஜய் மாப்ளைக்கு கூட தான் கல்யாணம் ஆய்ருச்சு அவன் சிரிக்கலையா என்ன ?? இதே டயாலாக்கை எவ்ளோ நாள் டா சொல்லுவீங்க?? அப்படி சொல்றவன் கல்யாணம் பண்ணிக்காம இருக்கனும் நீ இருப்பியா??” என ஹரி அவனிடம் வினவினான்.

“ச்சீ ச்சீ நான் வாழுறதே அந்த சம்பவம் என் வாழ்க்கைல நடக்கணும்னு தான்…. இப்படி அபசகுனமா சொல்லிட்ட முதல்ல போய் வாயைக் கழுவுடா பரதேசி” என பதிலளித்தான் கார்த்திக்.

அப்போது உள்ளே வந்த நல்லசிவம், “ஐயர் கூப்பிட்டாரு மாப்பிள்ளை” என்று கூறி விட்டு விஜய்யை மாலை அணிவித்து கூட்டி கொண்டு வர சொன்னார்.

மூவருமே பட்டு வேஷ்டி சட்டையில் மாப்பிள்ளை போல திகழ, மாலை அணிவித்ததும் ஹரியின் முகத்தில் தேஜஸ் கூடி மாப்பிள்ளை களை வந்தது.

மாடியில் இருந்து ராஜ தோரணையோடு இறங்கி வந்தவனை அனைவரும் இமைக்க மறந்து பார்த்தனர்.மேடைக்கு வந்தவன் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டு அமர்ந்து ஐயர் சொல்வதை செய்ய ஆரம்பித்தான்.

ஐயர் அருகில் வந்த கார்த்திக்,” என்ன அய்யரே சௌக்கியமா ” என்று வினவினான்.

ஹரியும் ,விஜயும் அவனை குழப்பமாக பார்த்துக் கொண்டிருக்க , ஐயரோ,”யாருடா அம்பி நீ நேக்கு தெரியலையே…நான் நல்லா திவ்யமா இருக்கேன் டா அம்பி” என பதிலளித்தார்.

“அய்யோ அய்யரே என்ன அம்பி ஆக்கிறாதீங்க நான் ரெமோ ” என்று கூறி யோயோ என்று கத்திக்கொண்டே கைகளை ஆட்டி அய்யரின் கண்களை குத்தி விட்டான்.

“டேய் என்னடா பண்ற நாதாரி” என ஹரியும் ,விஜயும் அவனை கடிந்து கொள்ள,

“அபிஸ்து தள்ளி போடா” என அய்யர் கண்களை தேய்த்துக் கொண்டே அவனை திட்டினார்.

அவரை விட்டு விலகி ஹரியின் அருகில் அமர்ந்தவனை பார்த்து விஜய்,”டேய் அந்தாளு கண்ணை ஏண்டா குத்துன அவர் உனக்கு என்ன பாவம் பண்ணாரு” என காதைக் கடித்தான்.

“அது இல்லை மச்சி கொஞ்சம் காசை கொடுத்து ‘பொண்ணை சீக்கிரம் அழைச்சுட்டு வங்கோனு’ சொல்ல சொல்லி ஹரிக்கு ஹெல்ப் பண்ணலாம்னு பார்த்தேன் ..இப்படி ஆய்ருச்சு” என அசடு வழிந்தான்.

“தெய்வமே நீ ஆணியே புடுங்க வேணாம் வாயை மூடிட்டு உட்காரு போதும்” என ஹரி அவனிடம் கூறிவிட்டு அய்யர் சொன்ன வாய்க்குள்ளே நுழையாத மந்திரங்களை உளறிக் கொண்டிருந்தான்.வாய் அதன்போக்கில் ஒரு வேலையை செய்து கொண்டிருக்க கண்கள் இரண்டும் தன்னவளின் வருகைக்காக தவமிருந்தது.

அங்கே மணமகள் அறையில் அழகு சிலையென தயாராகி அமர்ந்திருந்த ஸ்ரீயும் எப்போதடா கூப்பிடுவார்கள் என நகத்தைக் கடித்து கொண்டே காத்திருந்தாள்.

அவள் அருகில் வந்த மது அவள் கையைத் தட்டி விட்டு,”நகத்தை கடிக்காதன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன் அமைதியா உட்காரு ஹரி அண்ணா வேற யார் கழுத்துலயும் தாலி கட்டிற மாட்டாங்க” என கிண்டல் பண்ணினாள்.

அவள் அதை கண்டு கொள்ளாமல் மீண்டும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்து சிரித்த நந்து ” இந்த சுச்சுவேஷன்க்கு கரெக்டா சாங்க் சொல்லுங்கடி” என்று தன் நண்பிகளை பார்த்து கூறினாள்.

நிஷாவோ,

“ஹ … ஹ…..ஹ….ஹ…ஹா

கல்யாண சமையல் சாதம்

காய்கறிகளும் ப்ரமாதம்

அந்த கௌரவப் ப்ரசாதம்

இதுவே எனக்கு போதும்

கல்யாண சமையல் சாதம்

காய்கறிகளும் ப்ரமாதம்

அந்த கௌரவப் ப்ரசாதம்

இதுவே எனக்கு போதும்

ஹ … ஹ…..ஹ….ஹ…ஹா

ஹ … ஹ…..ஹ….ஹ…ஹா ” என பாடி ,”எனக்கு இப்போதைக்கு இந்த சாங்க் அண்ட் சோறு தான் மைன்ட்ல இருக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ண சொல்லுங்கடி எப்படி ஸ்மெல் வருது பாரு என்னால இங்க உட்காரவே முடியலை” என பிரியாணி வாசனையை ஆழ்ந்து முகர்ந்து கொண்டே கூறினாள்.

அவள் செய்கையில் அனைவரும் சிரிக்க, அப்போது உள்ளே வந்த கலைவாணி ஸ்ரீயை பார்த்து “என் செல்லம்” என திருஷ்டி கழித்து கண்மையை எடுத்து அவள் கழுத்துக்கு பின்புறம் வைத்து விட்டார். தன் பின்னலையே வந்த ஆதிராவிடம் மாலையை ஸ்ரீக்கு அணிவிக்க சொல்ல அவளோ ஸ்ரீ இன்னும் தன்னிடம் பேசாததால் என்ன செய்வதென்று குழப்பத்தில் கைகளை பிசைந்து கொண்டு நின்றாள்.

அவளின் தவிப்பை உணர்ந்து கொண்ட ஸ்ரீ புன்னைகையுடன் ஆதிராவை பார்த்து,” என்ன நாத்தனாரே என்னை அண்ணியா ஏத்துக்க மாட்டீங்களா??” என கேலி குரலில் வினவினாள்.

அவள் தன்னிடம் பேசிவிட்டதை நம்ப முடியாமல் பார்த்த ஆதி ,இது கனவல்ல நிஜம் என்று புரித்ததும் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. அவளும் அதே புன்னகையோடு,” என்ன இப்படி சொல்லிட்டிங்க அண்ணியாரே நீங்க விளக்கேத்த தான எங்க வீடு தவமிருக்கு” என்று கூறிவிட்டு மாலையை அவளுக்கு அணிவித்தாள்.

அதன்பின் அனைவரும் மகிழ்ச்சியோடு கீழே இறங்கி வந்தனர்.தோழிகள் படை சூழ வானத்து தேவதை போல் தன்னவன் தேர்ந்தெடுத்த அரக்கு வண்ண பட்டணிந்து அதற்கு ஏற்றவாரு அணிகலன்கள் அணிந்து உதட்டில் நிறந்த புன்னகையும் கண்களில் தன்னவனை காணும் தவிப்போடும் செதுக்கி வைத்த தங்க சிலை போல் மெல்ல நடந்து வந்த தன்னவளை பார்த்து மூச்சு நின்று போனது ஹரிக்கு.அங்கு இருந்த அனைவரும் ஃபேட்(fade) அவுட் ஆக அவள் மட்டுமே அவனுக்கு தெரிந்தாள்.

அவளும் பட்டு வேஷ்டி சட்டையில் ஆண்மைக்கே இலக்கணமாக திகழ்பவனை போல் மனையில் வீற்றிருந்த தன்னவனை பார்த்து கண்ணிமைக்க கூட மறந்தாள்.

அய்யர் தான் சொன்னதை செய்யாமல் அங்கு வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஹரியை பார்த்து,”தம்பி..மாப்பிள்ளை தம்பீஈஈ!!!” என கத்தியும் தன்னை கண்டுகொள்ளாத ஹரியை பார்த்து கடுப்பாகி என்னமோ பண்ணி தொலை என நினைத்துக் கொண்டு மந்திரங்களை சொல்ல ஆரம்பித்தார்.

கார்த்திக் அய்யரை பார்த்து நக்கலாக சிரித்து விட்டு ஹரியின் காதில் அங்கு அழகுபடுத்தியிருந்த பூக்களின் காம்பை எடுத்து உள்ளே விட்டான்.

முதலில் ஒன்றும் உணராமல் அமர்ந்திருந்த ஹரி சிறிது நேரத்தில் வித்தியாசமாக தோன்றவும் “பூரான் எதும் காதுக்குள்ள போய்ருச்சோ” என நினைத்துக் கொண்டு, ஸ்ரீயின் மீதிருந்த பார்வையை விலக்கி தன் காதுக்கு அருகில் கைவத்து பார்த்தான்.

இது கார்த்திக் வேலை என்று தெரிந்ததும் அவனை முறைத்தவனை தடுத்த கார்த்திக்,”டேய் நீ விட்ட ஜொல்லுல அய்யர் ஆப்பிரிக்காக்கு நீந்தி போய்ட்டாரு டா..அவர் தான் உன்னை ரொம்ப நேரமா கூப்பிட்டு கூப்பிட்டு டயர்ட் ஆய்ட்டாரு அதான் அவருக்கு ஹெல்ப் பண்ணேன் பாவம் ஓல்ட் மேன்” என்று கிண்டல் பண்ணினான்.

அதற்குள் ஸ்ரீ வந்து அனைவரையும் வணங்கி விட்டு தன் அருகில் அமர கார்த்திக்கை டீலில் விட்டுவிட்டு மறுபடியும் தன் சைட் அடிக்கும் பணியை தொடர ஆரம்பித்தான் ஹரி.

‘என்ன சார் இன்னைக்கு ஓவரா வழியுராரு மஞ்சக்கயிறு மாஜிக் கட்டுறதுக்கு முன்னாடியே வொர்கவுட் ஆகுதோ ஸ்ரீ உன் காட்டுல இன்னைக்கு அடைமழை தான் என்ஜாய்’ என குத்தாட்டம் போட்டுக்கொண்டு ,அய்யர் சொன்னதை செய்வது போல் ஓரக்கண்ணால் அவனை சைட் அடித்துக் கொண்டிருந்தாள் அவள்.

இவர்கள் இருவரையும் பார்த்த ஐயர் ‘இதுங்க ரெண்டும் மந்திரத்தை முழுசாலாம் சொல்லாதுங்க அவனா தாலியை எடுத்து கட்றதுக்குள்ள நம்மளே குடுத்து மானத்தை காப்பாத்திக்குவோம்’ என நினைத்துக் கொண்டு “போய் எல்லார்கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிட்டு வாங்கோ” என தாலியை நந்துவிடம் கொடுத்து அனுப்பினார்.

முதலில் மேடையில் இருந்த நாராயணசாமி குடும்பத்தார் மற்றும் விஜயின் குடும்பத்தாரிடம் வாங்கிவிட்டு பின் கீழே உள்ள அனைவரிடமும் காண்பித்து விட்டு மஞ்சள் தடவிய அரிசியும் ரோஜா இதழ்களும் கலந்த அர்ச்சதையை அனைவரிடமும் கொடுத்து விட்டு மேடையேறி வந்து ஐயரிடம் தாம்பூலத்தட்டை கொடுத்தாள்.

“கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்று ஐயர் கூற மங்கள வாத்தியங்கள் முழங்க அங்கு கூடியிருந்த அத்தனை நல்ல உள்ளங்களும் அர்ச்சதை தூவி ஆசிர்வதிக்க,

“மாங்கல்யம்

தந்துனானே மம ஜீவன

ஹேதுனா

கண்டே பத்னாமி சுபாகே

சஞ்சீவ சரத சதம்” என்று ஐயர் ஓத அதன் அர்த்தமான ,

“மங்கள வடிவமாக திகழும்

பெண்ணே

உன்னுடன் துவங்கும்

இல்லற வாழ்வை நல்ல முறையில் நடத்த

வேண்டும் என்று இந்த

திரு மாங்கல்ய

கயிறை உன் கழுத்தில்

அணிவிக்கிறேன் .

என் இல்லற துணையாக ,

அனைத்து சுக

துக்கங்களிலும்

பங்கேற்று ,

நிறைந்த யோகத்துடன் நீ

என்னுடன்

நூற்றாண்டு காலம்

வாழ்வாயாக ” புரிந்து உணர்ந்து ஹரி ஸ்ரீயின் காதிற்கு அருகில் குனிந்து,

“உன்னை என்னில் சரிபாதியா முழுமனசோட சம்மதிச்சு இனிமேல் உன்னோட சுக துக்கங்களில் பங்கெடுத்து உறுதுணையா நிற்பேன்னும், எவ்வளவு பிரச்சனை வந்தாலும் பிரிய மட்டேன்னும் ,இவனை ஏன் கல்யாணம் பண்ணேன்னு உன் வாழ்க்கைல ஒரு நொடி கூட சிந்திக்க விடாத அளவு உன்ன பார்த்துப்பேன்னும் அந்த இறைவன் சாட்சியாவும் இங்க இருக்குற அத்தனை பேர் சாட்சியாவும் உனக்கு வாக்கு தரேன் லட்டுமா” என்று கூறியவன் நிமிர்ந்து அவள் கண்களோடு தன் கண்களை கலந்து தாலியை கட்டவா?? என அவள் சம்மதத்திற்காக காத்திருந்தான்.

அவன் பேசியதில் கண்கள் கலங்க கட்டுமாறு அமர்ந்திருந்தவள் அவன் தன் சம்மதித்திற்காக காத்திருப்பதை உணர்ந்து கண்களை மூடித் திறந்து சம்மதம் தெரிவித்தவளின் கண்களில் இருந்து இரு துளி கண்ணீர் உருண்டு கன்னத்தில் வழிந்தோடியது. அதை துடைத்து விட்டவன் ,அழக்கூடாது என தலையை இடமும் வலமுமாக ஆட்டிவிட்டு, குனிந்து அந்த மங்கள நாணை அவள் சங்கு கழுத்தில் பூட்டினான்.

நாத்தனார் முடிச்சு போட வந்த ஆதிராவை தடுத்து விட்டு மூன்று முச்சுகளையும் தானே இட்டான்.(yayyyyyy!!!! கல்யாணம் முடிஞ்சிருச்சு).

இருவரின் முகத்திலும் அப்படி ஒரு பேரானந்தம். அனைவரின் ஆசியுடனும் தங்கள் காதல் கைகூடியதில் இருவரின் முகமும் மகிழ்ச்சியில் மிளிர்ந்தது.சுற்றி இருந்த அனைத்து சொந்தங்கள் நண்பர்கள் என அனைவரும் கைதட்டி சத்தமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த தருணத்தை இத்தனை வருடமாக எதிர்பார்த்திருந்த நாராயணசாமியின் குடும்பத்தார் ,அது சுபமாக நடந்து விட்ட மகிழ்ச்சியில் அனைவருக்கும் கண்கள் கலங்கியது. பஞ்ச பாண்டவிகள் அனைவரும் ஸ்ரீயின் வாழ்வு இனி சந்தோஷமாக இருக்கும் என்ற ஆனந்தத்தில் அவளை கட்டியணைத்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.அங்கே விஜய்,கார்த்திக்,அஷ்வின் கூட அதைத் தான் செய்து கொண்டிருந்தனர். அஷ்வின் ஒரு படி மேலே போய் தன் ஆசை மாமாவின் கன்னத்தில் இதழ் பதித்தான். அனைவரும் அதைப் பார்த்து கொல்லென சிரிக்க போட்டோகிராபர் இந்த ஒவ்வொரு விலை மதிப்பில்லா திரும்ப கிடைக்காத தருணங்களை அழகாக படம்பிடித்தார்.

பின் ஐயர் கூறியவாரு கையை சுற்றி கொண்டு வந்து அவள் பிறை நெற்றியில் குங்குமம் வைத்து விட்டவன் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் ஒரு சின்ன இதழொற்றலை பரிசாக அளித்தான்.ஸ்ரீ அதிர்ச்சியில் திகைத்து அவனை பார்க்க அவனோ மாயக்கண்ணனின் புன்னகையோடு அவளை பார்த்து கண்ணடித்தான். இவனின் செயலில் அங்கிருந்த இளவட்டங்கள் அனைவரும் “ஓஓஓஓஓஒ!!!!” என பெரும் கூச்சலிட அந்த இடமே கலகலப்பாக இருந்தது.

அதன் பின் அவர்களை எழச்சொல்லி இவனின் அங்கவஸ்திரத்தையும் அவளின் புடவை முந்தானையையும் ஒன்றாக முடிச்சிட்டு அஷ்வின் ஹரி கையை பிடித்துக் கொள்ள ,ஹரி ஸ்ரீயின் கையைப் பிடித்து வர அவர்களின் பின்னால் ஆதிரா தொடர அக்னியை மூன்று முறை வலம் வந்தனர்.

பின் தாத்தா பாட்டியிடம் முதலில் சென்று ஆசி வாங்க அவர்கள் காலில் இருவரும் ஒன்றாக விழுந்தனர் ..அப்போது கார்த்திக் வர்ஷூவை இழுத்துக் கொண்டு அவர்களுக்கு அருகில் விழுந்தவன்” எங்களையும் ஆசிர்வாதம் பண்ணுங்க தாத்தா பாட்டி எனக்கும் கல்யாணம் ஆய்ருச்சு ” என்று மெல்லாமல் முழுங்காமல் ஒரு பேரிடியை அனைவரின் தலை மேல் இறக்கினான்.

அதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் மின்சாரம் தாக்கியதை போல் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்!!!!!!

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment