
அத்தியாயம்-14
யாவரும் பொத்து பொத்தென அவரவர் வீட்டு கட்டிலில் வந்து விழுக, ‘அடப்பாவி.. கூட்டிட்டு போகும்போது மட்டும் சொகுசா தானே கூட்டிட்டு போன, விடும்போது ஏன்டா திடும் திடும்னு இறக்கு?’ என்று தன் இடுப்பைப் பிடித்தபடி ஜான் புலம்ப, அவள் அலைபேசி ஒலித்தது.
தன் தோழமைக் கூட்டம் தான் என்பதைக் கண்டவள், ‘நம்ம புலம்புற கேப்ல கான்பரென்ஸ தட்டிவிட்டுடானுங்க’ என்றபடி அழைப்பை ஏற்க,
“பார்த்தியா ஜானு.. நாங்கூட அறிவாளித்தனமா இருந்திருக்கேன்” என்று விஷ் பெருமையோடு கூறினான்.
“உன் பெருமைய எருமை மேய்க்க அனுப்பு நாயே” என்றவள் “அகா..” என்க,
அவள் புறம் அமைதி மட்டுமே நிலவியது.
“அடியே..” என்று ஜான் கத்த,
“ஜான் வெயிட்..” என்ற துருவன் “எல்லாரும் போய் ரெடியாகுங்க.. நம்ம ஜனவரி இரண்டாம் தேதிக்கு வந்திருக்கோம். இன்னிக்கு மீட்டிங் இருக்கு. அதை முடிச்சிட்டுப் பேசிக்கலாம்” என்று கூறினான்.
“அப்றம் என்னத்துக்குடா ஃபோன போட்டீங்க” என்ற ஜானும் விஷ்வேஷும் ஒன்றுபோல புலம்பிக் கொள்ள,
அழைப்புத் துண்டிக்கப்பட்டது.
கட்டிலில் தன் முட்டுக்கால்களைக் கட்டிக் கொண்டு மௌனமாக கண்ணீர் சிந்திய அகநகை செல்வி, “அகா.. எழுந்திருச்சிட்டியா? மீட்டிங் இருக்கு” என்று அன்புக்கரசி கதவைத் தட்டவும்
“ம்..ம்ம் ம்மா.. எழுந்துட்டேன்” என்று கூறிக் கொண்டாள்.
அங்கு, ‘விடுதலை விடுதலை விடுதலை.. அந்த குட்ட மண்டைக்கிட்டருந்து விடுதலை.. கண்டுபிடிச்ச கன்னுக்குட்டி பாலுகிட்டருந்து விடுதலை.. அம்மாவ முதல்ல ஒரு நல்ல பில்டர் காஃபி போட்டுத்தர சொல்லி குடிக்கணும்’ என்று மனதோடு கணக்குப் போட்டுக்கொண்டே தயாராகிய விஷ் வெளியே வந்தான்.
அவனைக் கண்டதும் தன் குரலைச் செருமிய மூர்த்தி (விஷ் தந்தை) “இந்த முறையாவது வேலையோட வருவாரா உன்ற மவன்?” என்று ஏற்ற இறக்கத்தோடு வினவ,
‘ம்ஹும்.. எத்தனை மீட்டிங்குல மண்ண கவ்விட்டு வந்திருப்போம்.. இதைக்கூட பழகிக்க மாட்டோமா?’ என்று எண்ணியபடி சட்டையைத் தட்டிவிட்டுக் கொண்டு வந்து உண்ண அமர,
தன் பெரிய வயிற்றைத் தூக்கியபடி பூஜையறையிலிருந்து வந்த சர்வேஷினி அவனுக்கு குங்குமமிட்டுவிடவும், “குட்டி சர்வா.. மாமாவ ப்ளஸ் பண்ணுங்க” என்று அவள் வயிற்றை கொஞ்சிக் கொண்டு கூறினான்.
அதில் சிரித்துக் கொண்ட சர்வா, “அடேய்.. அக்காகிட்ட பிளஸிங்ஸ் வேணாமா?” என்று வினவ,
“என் குட்டி சர்வா பிளஸிங்ஸ் தான் வேணும்” என்று சிரம் தாழ்த்தி ஆசிர்வாதம் வாங்குவது போல் நின்று கூறினான்.
அவன் தலையில் கரம் வைத்தவள், “குட்டி சர்வா பெரிய சர்வா ரெண்டு பேரோட பிளஸிங்ஸும் தரோம். நல்லபடியா போயிட்டுவா” என்று கூற, தனலட்சுமி (விஷ் அம்மா) உணவுடன் வந்தார்.
அங்கு துருவன் வீட்டிலும் ஜான் வீட்டிலும் ஏதோ முதல் முறை நேர்காணல் செல்பவனைக் கிழப்புவதுபோல பார்த்துப் பார்த்து அனைத்தையும் செய்துகொடுத்து அனுப்பினர்.
மூவருமாக அகா வீட்டிற்கு வர, உடை நாகரீகத்தில் கச்சிதமாகத் தயாராகி வந்தபோதும் அவள் முகத்தில் மருந்துக்கும் புன்னகை இல்லை. இப்போது ஏதும் பேசவேண்டாம் என்றெண்ணிக் கொண்டு நால்வரும் நேர்காணலுக்குச் சென்றனர்.
அகநகையின் நேரத்திற்கு நால்வரில் அவளுக்குத்தான் முதல் நேர்காணல் என்றிருந்தது. தன் முறை வரவும் ஒருபெருமூச்சை இழுத்துவிட்டுக் கொண்டவள் உள்ளே செல்ல, அங்கு அமர்ந்திருந்தவனைக் கண்டு அதிர்ந்து போனாள்.
நேர்காணலை நல்லபடியே முடித்துக் கொடுத்து அதிர்ந்தபடி வந்தமர்ந்தவள் ஒரு லிட்டர் நீரை ஒரே மூச்சில் குடித்து முடிக்க, உள்ளே அவள் அகர்ணனைக் கண்டிருப்பாளோ என்ற எதிர்ப்பார்ப்போடு சென்ற துருவன் ராஜைக் கண்டு அதிர்ந்து நின்றான்.
நால்வருக்கான நேர்காணலும் முடிய முடிவுகள் மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும் என்று யாவரையும் அனுப்பிவைத்தனர்.
“அவருக்கு நம்மளை தெரியலைல?” என்று அந்த பூங்காவின் ஊஞ்சலில் ஆடியபடி விஷ் கேட்க,
“ம்ம்..” என்று மற்ற மூவரும் கூறினர்.
அவனுக்கு பக்கவாட்டிலிருந்த மற்றைய ஊஞ்லில் ஆடியபடி லாலிபாப்பை சப்பிய ஜான்,
“நம்ம பார்த்த ராஜ் கதாபாத்திரம் இங்க உண்மைலயே இருக்குறபோல அகர்ணனும் ஏன் இருக்கக் கூடாது?” என்று வினவ,
அந்த வார்த்தை அங்கு சீசாவின் ஒரு பக்க இருக்கையில் அமர்ந்திருந்த அகாவை குளிர்வித்தது.
ஒரு பெருமூச்சுடன் தன் முகம் தொங்கியபடி அவள் குனிந்துக் கொள்ள, தன் கல்லூரி புத்தகங்களுடனும் திருட்டு முழியுடனும் அமிர்தப்ரியா அங்கு வந்தாள்.
அவளைக் கண்டவுடன் விஷ்வேஷின் உதடு இந்த கன்னத்திலிருந்து அந்தக் கன்னம் வரை விரிய,
“அடேய்.. க்ளோஸ் பண்ணுடா” என்று ஜான் அவன் காதைக் கடித்தாள்.
அங்கிருந்த அனைவரும் அமிர்தப்ரியாவைப் பார்த்து புன்னகைக்க, தானும் புன்னகைத்தவள், “எதுக்கு வரச் சொன்னீங்க?” என்று விஷ்வேஷைப் பார்த்தாள்.
“அடப்பாவி.. எந்த கேப்லடா இவள கூப்ட?” என்று துருவன் வினவ,
மீண்டும் ‘ஈ..’ என இளித்து வைத்தவன், “காலைலயே வர சொல்லிட்டேன்டா” என்றான்.
அதில் நாணம் கொண்ட பெண் தலைகுனிய, “உக்காரு ப்ரியா” என ஜான் ஏதோ தன் வீட்டுக்கு வந்தவளை வரவேற்பது போல் கூறவும் அங்கு இருந்த சீசாவின் இரு பக்கமும் அகா மற்றும் துருவன் அமர்ந்திருப்பதையும், இரண்டு ஊஞ்சலிலும் விஷ் மற்றும் ஜான் அமர்ந்திருப்பதயும் பார்த்து சிரித்தாள்.
“என்ன தங்கம் இடமில்லையா? மாமா மடில உக்காந்துக்குறியா?” என்று விஷ் வினவ,
“உன் ஓமா.. மவனே இதுலாம் உங்க வீட்ல வச்சுக்கோ.. இது சிறுவர் பூங்கா” என்ற ஜான் “அப்டி சர்கஸ்ல உக்காரு” என்க,
சிரித்தபடி சென்று அமர்ந்தவள் அடிக்கடி அகாவை ஒரு பார்வை பார்த்துக் கொண்டாள்.
அமிர்தப்ரியாவும் சிறுவயது முதல் இவர்களுடன் பழக்கம் என்பதால் தங்கு தடையின்றி பேசி சிரிக்க, அகநகையும் ஓரளவு பேச்சிற்குள் தன்னை நுழைத்துக் கொண்டாள்.
“கிளாஸ பங்க் பண்ணிட்டு வந்தியா?” என்று துருவன் வினவ,
“பின்ன இவங்கள பார்க்கணும்னு கேட்டா எனக்கு லீவா தருவாங்க” என்றாள்.
“உங்க மம்மீக்கு தெரிஞ்சா திட்டமாட்டாங்க?” என்று ஜான் வினவ,
“ஏன்டி கோர்த்துவிடுற மாதிரியே பேசுற?” என்று விஷ் வினவினான்.
“இல்லடா ஒரு ஜெனரல் நாலேஜுக்கு” என்று அவள் கண்களை சிமிட்டி பாவம் போல் கூற,
“ரொம்ப அறிவு வேணாம் ஜானு.. மூளைல இடம் பத்தாம மூக்கு வழியா வடிஞ்சுட போகுது” என்றான்.
அதில் மீண்டும் யாவரும் சிரிக்க, “சரி நான் கிளம்புறேன்.. இப்ப கிளம்பினா தான் வீட்டுக்குப் போக கரேக்டா இருக்கும். நூறு தடவ நீ பங்க் பண்ணிட்டியானு கேட்டு கேட்டே பீதிய கிளப்பிவிட்டுட்டீங்க” என்று ப்ரியா கூறினாள்.
“இல்லாட்ட மட்டும் நீ ரொம்ப தைரியசாலி தான்” என்று துருவன் கூற,
“ஆமா ஆமா.. இவன் ரொம்ப தைரியசாலி..” என்று ஜான் முனகினாள்.
அனைவரிடமும் விடைபெற்ற ப்ரியா அகாவை மீண்டும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு நகர,
விஷ்வேஷ், “டூ மினிட்ஸ்” என்றபடி எழுந்தான்.
“என்ன மேகி கிண்ட போறியா?” என்று துருவன் வினவ,
“மச்சி… குட் ஜாப்டா.. நைஸ் ஜோக்” என்று ஜான் கூறியதில் எதையோ சாதித்ததைப் போல், “தேங்ஸ் மச்சி” என்றான்.
இருவரையும் பார்த்து ‘த்தூ’ என்று துப்பிவிட்டுச் சென்றவன், ஓடிவந்து தன்னவள் கரம் பற்றி நிற்க,
“மா..மாமா” என்றாள்.
‘எத்தனை நாட்களுக்கு பிறகு இந்த அழைப்பைக் கேட்கின்றோம்’ என்று எண்ணி உடல் சிலிர்த்தவன்,
“லவ் யூ டி அத்த மகளே” என்றான்.
அவனது காதல் மொழிவில் சிரித்துக் கொண்டவள், “லவ்யூ டூ மாமா” என்று காற்றாகிப் போன குரலில் கூற,
“எதோ ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ற போல இருக்குடி” என்று அவள் கரத்துடன் தன் கரம் கோர்த்துக் கொண்டான்.
“ம்ம்.. எனக்கும் தோனுச்சு” என்று அவள் கூற,
சிரித்துக் கொண்டவன், “நான் உன்கிட்ட சொல்லுவேன்ல.. நீ என்னை அலையவிட்டமாதிரி அடுத்த ஜென்மத்துல நான் உன்னை அலையவிடுவேன்னு” என்று வினவினான்.
“ஆமா..” என்று சிரிப்போடு அவள் கூற,
“அதை நான் வாபஸ் வாங்கிக்குறேன்” என்று கூறினான்.
“ஏன்?” என்று மீண்டும் சிரிப்பினூடே அவள் வினவ, அவள் கண்ணீரோடு தன்னிடம் வந்து கெஞ்சியது அவன் கண்முன் வந்துபோனது.
“என் பாப்பாவ நான் எப்பவும் கண்கலங்கவோ கெஞ்ச வைக்கவோ கூடாதுனு இருக்கேன். அதனால தான்” என்று அவன் கூற,
அதில் இன்பமாக சிலிர்த்தவள் அவன் கரத்தை மேலும் இறுகப் பற்றிக் கொண்டாள்.
“லவ் யூ மாமா” என மீண்டும் காற்றுக்கே வலிக்காத குரலில் அவள் கூற,
சிரித்தபடி தன் பிடறி முடியை அழுந்தக் கோதிக் கொண்டவன், “பார்த்து போடா” என்று பேருந்து நிலையத்தில் அவளை விட்டுவிட்டு ஒரு பறக்கும் முத்தத்தை யாருமறியா வண்ணம் அவளுக்கு அனுப்பிவிட்டு திரும்பி வந்தான்.
பேருந்தில் அமர்ந்ததும் அவளது அலைபேசி ஒலிக்க, ‘அய்யோ..ஃபோன் பண்றாரே..’ என்ற பீதியோடு அழைப்பை ஏற்றாள்.
“ஏ ப்ரீ.. கொடுத்துட்டியா?” என்று அவன் வினவ,
அலைபேசியை இறுக பற்றியவள், “சாரிபா.. அ.. அவ ஏதோ சோகமா இருந்தா.. அதான் கொடுக்கலை.. அ..அன்ட் பயமா இருந்தது” என்றாள்.
“ஆனாலும் இவ்வளவு பீதி உனக்கு ஆகாதுடி” என்றவன், “சரிவிடு.. கொடுக்க வேண்டாம்” என்க,
“ஏ சாரிபா.. நா..நாளைக்கு கண்டிப்பா தரேன்” என்றாள்.
“இல்ல ப்ரீ வேணாம்.. நான் வேற ஐடியா யோசிச்சுட்டேன்” என்றவன், “உன் மாமாவ பார்த்தாச்சா?” என்று வினவ,
“ம்..ம்ம்” என்றாள்.
அதில் சிரித்துக் கொண்டவன், “சரிமா.. பார்த்து போ” என்க,
“ஓகேபா” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
இரண்டு வாரம் அமைதியாகவே சென்றது. தான் எப்போதும் செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்று சுற்றி சுற்றித் தேடியும் தன்னவன் தன் கண்களில் படாததில் வெகுவாக சோர்ந்து போனவள் சில சமயம் நண்பர்கள் தோள் சாய்ந்து கண்ணீர் விட, அவர்களுக்கும் பாவமாக இருந்தது.
அன்றைய காலை வெகு சீக்கிரமே விழிப்புப் பெற்று மாடியில் நின்றிருந்த அகநகை பின்னே கேட்ட காலடி சத்தத்தில், “நாயே சத்தம் நல்லாவே கேட்டுடுச்சு” என்றபடி திரும்பினாள்.
அவளைக் கண்டு சிரித்த விஷ், “ஒரு சர்ப்ரைஸ் நியூஸ் சொல்லி பயமுறுத்தலாம்னு வந்தேன்” என்று கூற, மற்ற இருவரும் அங்கு ஆஜர் ஆகினர்.
“ஏ அகா.. நம்ம நாலு பேருக்குமே அந்த கம்பெனில வேலை கிடைச்சுடுச்சு” என்று கூறி அவளை பிடித்து சுற்றிய ஜான் குத்தாட்டம் போட,
“பிள்ளைய பெத்துபோடச் சொன்னா குட்டிசாத்தான பெத்து போட்டிருக்காங்க” என்று துருவன் கூறினான்.
அதில் மற்றது மறந்து சிரித்த அகா, “செம்மடா.. எப்போ ஜாயின் பண்றோம்?” என்று வினவ,
“மண்டேல இருந்து” என்றனர்.
நால்வர் வீட்டிலும் விடயம் கூறப்பட, அத்தனை மகிழ்வாக குதூகலித்தனர். கிட்டத்தட்ட ஒருவருட தேடலுக்குப் பின்பு கிடைத்திருக்கும் வேலையதை வெகு சிரத்தையுடன் செய்ய தங்களுக்குள் உறுதிமொழி எடுத்துக் கொண்டவர்கள் இன்பமாக புறப்பட்டனர்.
முதல் நாள் வேலையில் பல அனுபவங்களை அடைந்த நால்வருக்கும் அத்தனை பிடித்துப் போனது அவர்கள் வேலை. மிகுந்த சந்தோஷத்தோடு அன்றைய வேலையை முடித்துவிட்டு நால்வரும் வெளியே வர அமிர்தப்ரியா அங்கு நின்றிருந்தாள்.
“ஏ அமி.. நான் இங்க தான் வேலை பாக்குறேன்னு உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டபடி விஷ்வேஷ் அவளிடம் செல்ல,
“நீங்க இங்கயா வேலை பார்க்குறீங்க?” என்று அவளும் கேட்டாள்.
“அய்யோ கீய (சாவிய) வச்சுட்டு வந்துட்டேன்” என்ற அகா மீண்டும் உள்ளே செல்வதற்குத் திரும்ப, வலுவான புஜங்களில் மோதிக்கொண்டு தடுமாறி விழப்போனாள்.
அவள் இடித்த அந்த நபரின் கைகள் தடுமாறியவள் இடையை பற்றிக் கொண்டு பிடித்திட, அந்த ஆடவன் முகம் கண்டவள் அதிர்வின் எல்லைக்கே சென்றுவிட்டாள்.

