அத்தியாயம் 8
“பரசு, துவா எப்படி இருக்கா? அவளுக்கு எதுவுமில்ல தான?” என்று பயத்தை குரலில் தேக்கியபடி கோபிநாத் அவரின் குடும்ப மருத்துவரிடம் வினவினார்.
பரசுராம், பல வருடங்களாக கோபிநாத்தின் குடும்ப மருத்துவராக இருக்கிறார். மேலும், அவர் கோபிநாத்தின் நெருங்கிய நண்பர் கூட. அவர் துவாரகா பற்றியும், அவளின் உடல்நிலை, மனநிலை பற்றியும் நன்கறிவார்.
மேலும், இந்த கடத்தல் சம்பவத்தை பற்றியும் கோபிநாத் கூறியிருக்க, அவர் வெளிப்படையாக கேட்க விரும்பாத கேள்வியையும் புரிந்து கொண்ட பரசுராம், அவருக்கு ஆறுதலளிக்கும் விதமாக, “கோபி, நீ பயப்படுற அளவுக்கு எதுவுமில்ல. அவ உடலளவுல எந்த பிரச்சனையும் இல்ல. இப்போ சலைன் ஏறிட்டு இருக்கு. அவ முழிச்சதும் கவுன்சிலிங் குடுத்து, அவ மனசுல இருக்குறதை கேட்டு தெரிஞ்சுக்கலாம். அதுவரை பொறுமையா இரு.” என்றார்.
பரசுராமின் அறையிலிருந்து சோர்ந்து போன முகத்துடன் வெளியே வந்த கோபிநாத்தை நெருங்கிய மயூரனோ ஒரு நொடி அவரின் முகத்தை கண்டு தயங்கி நின்றான்.
பெண்ணின் நிலை கண்டு தவித்து துடித்து வருத்தத்தில் இருப்பவரிடம் தான் சொல்லப் போகும் செய்தி எவ்வித பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதை நன்கறிந்து தான் இருந்தான் மயூரன்.
இருப்பினும், அவனால் அவளுக்கு ஏற்பட்ட பாதிப்பை மேலும் வளர விடாமல் செய்ய அவனுக்கு வேறு வழிகள் இல்லையே.
அவன் நினைத்ததை விரைவில் செயலாற்ற வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதால், ஒரு பெருமூச்சுடன் கோபிநாத்திடம் சென்றவன், “சார், உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பேசணும். இந்த நேரத்துல, இதை பேசுறது சரியில்ல தான். ஆனா, எனக்கு வேற வழி தெரியல.” என்றான் மயூரன்.
பல வருடங்களாக திறம்பட தொழிலை நடத்தி வரும் கோபிநாத்திற்கு, மயூரனின் தவிப்பும் குற்றவுணர்வும் நன்கு தெரிந்தது.
மேலும், அவனின் பீடிகை வேறு சிறிது பயத்தை அவருக்குள் விதைத்திருக்க, “சொல்லுங்க மயூரன்…” என்று பதைபதைப்புடனே வினவினார்.
“இங்க வேண்டாம் சார்.” என்றவன், மருத்துவமனை கேன்டீனிற்கு அழைத்து சென்று, அவரை நீரை அருந்தச் செய்து சாந்தப்படுத்திய பிறகே, அவன் பேச வந்த விஷயத்தை பற்றி கூறினான்.
“சார், எனக்கும் துவாரகாவுக்கும் கல்யாணம் செஞ்சு வைப்பீங்களா?” என்று மயூரன் தீர்க்கமாக வினவ, அதைக் கேட்டவருக்கு தான் குப்பென்று வியர்த்து போனது.
சற்று முன்னர் குடித்த தண்ணீர் கூட வற்றிப் போனது போல, நா வறண்டு விட, ஒருவித பதற்றத்துடனே, “என்ன சொல்றீங்க… மயூரன்? துவா… நீங்க… துவாக்கு என்னாச்சு? ஏதாவது… தப்பா… ஹையோ!” என்று கத்தியே விட்டார் கோபிநாத்.
கோபிநாத்தின் எதிர்வினையை ஓரளவு மயூரன் யூகித்திருந்தாலும், இத்தகைய அதிர்ச்சியையும், அதன் விளைவான கத்தலையும் கண்டவன் ஒருநொடி திகைத்து தான் போனான்.
மேலும், முன்பகல் நேரம் என்பதால் கூட்டமில்லாத கேன்டீனில் அமர்ந்திருந்த ஓரிரெண்டு நபர்களின் பார்வையும் இவர்கள் பக்கம் திரும்ப, அவற்றை ஒதுக்கியவன், மீண்டும் கோபிநாத்திற்கு தண்ணீரை கொடுத்து, “ரிலாக்ஸ் சார். என்னை நம்புங்க, தப்பா எதுவும் நடக்கல. இனிமே, நடக்கவும் கூடாதுன்னு தான் இந்த முன்னெச்சரிக்கை!” என்றான்.
புரிந்தும் புரியாத நிலையில் இருந்தவரை மேலும் குழப்ப வேண்டாம் என்று எண்ணியவனாக, இதுவரை மற்றவரிடம் தானாக பகிராத ரகசியத்தை, அவன் வாழ்வின் கருப்பு பக்கங்களாக எண்ணும் சம்பவங்களை பற்றி கூற ஆரம்பித்தான் மயூரன்.
“சார், உங்களுக்கு தெளிவா சொல்லணும்னா, என்னைப் பத்தி முதல்ல சொல்லணும். நான் இன்டர்வியூ வந்தப்போ, உங்களுக்கு ஒரு ஃபோன் கால் வந்துச்சே, ஞாபகம் இருக்கா?” என்று மயூரன் கேட்க, இதற்கும் இப்போது இருக்கும் பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம் என்ற குழப்பத்துடனே, ஆமென்று தலையசைத்தார் கோபிநாத்.
அதை அத்தனை எளிதில் அவரால் மறக்க முடியாதே! ஏனெனில், இதுவரை அவர் சந்தித்திடாத அழைப்பாகிற்றே!
எவ்வித முகாந்திரமும் இல்லாமல், அழைப்பு ஏற்கப்பட்டதும், “உங்க ஆஃபிஸுக்கு மயூரன்னு ஒருத்தன் வேலை தேடி வந்துருக்கான் தான? அவனுக்கு வேலை குடுத்தா உங்களுக்கும் உங்க கம்பெனிக்கும் தான் ஆபத்து. அவன் மேல போலீஸ் கேஸ் இருக்கு. சோ, அவனை வேலைக்கு எடுக்காம இருக்குறது தான் உங்களுக்கு நல்லது.” என்று கட்டைக்குரலில் பேசியவன், அதற்கு மறுமொழியை கூட எதிர்பார்க்காமல் வைத்து விட்டான்.
அத்தனை நம்பிக்கை போலும்! இவை போன்று பல முறை செய்ததால் உண்டானதோ!
கோபிநாத்தோ முதலில் குழம்பி பின்பு தெளிந்தவராக, மயூரனின் சான்றிதழ்களையும் திறமையையும் மட்டும் நம்பி அவனை வேலைக்கு எடுத்துக் கொண்டார்.
அதோடு, ‘நீயென்ன எனக்கே ஆர்டர் போடுற? நான் அதை கேட்கணுமா?’ என்ற எண்ணமும் அவருக்குள் இருந்தது உண்மையே. சொந்த காலில் நின்று முன்னேறிய தொழிலதிபர் அல்லவா!
என்னதான் மயூரனை வேலைக்கு சேர்த்துக் கொண்டாலும், அவன் மீது வழக்கு எதுவும் உள்ளதா என்றவரை மட்டும் விசாரித்து தெரிந்து கொண்டார்.
அதற்கு மேல், அவனின் தனிப்பட்ட வாழ்க்கையை எல்லாம் தோண்டி துருவவில்லை. ஒருவேளை, அதை செய்திருந்தால், இன்றைய நிலை ஏற்பட்டிருக்காதோ என்னவோ!
நொடியினில் பழைய சம்பவத்தை எண்ணி பார்த்த கோபிநாத், “அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் மயூரன்?” என்று மனதிற்குள் பல யூகங்கள் எழுந்தாலும், அவற்றை ஒதுக்கி விட்டு சம்பந்தப்பட்டவனிடமே வினவியிருந்தார்.
மயூரனோ ஒரு பெருமூச்சுடன், “சம்பந்தம் இருக்கு சார். அன்னைக்கு உங்களுக்கு கால் பண்ணது வேற யாரும் இல்ல, என்னோட தம்பி தான். சித்தப்பா பையன்!” என்று வெறுப்புடன் கூறினான்.
அவன் கூறியதில் சிறிதளவு அதிர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், அதற்கும் இப்போதைய சூழ்நிலைக்கும் என்ன தொடர்பு என்பது இப்போதும் முழுதாக விளங்கவில்லை கோபிநாத்திற்கு.
அவரின் குழப்ப முகத்தை கண்டு கொண்ட மயூரனோ, “நாலஞ்சு பிசினஸ், பரம்பரை சொத்து, தோட்டம்னு செல்வாக்கான குடும்பம் தான் என்னோடது. அது போக, அரசியல்ல இருக்கவங்களோட நட்பு, அதை வலுப்படுத்திக்க உறவு ரீதியான சம்பந்தம் வேற! எல்லாம் இருக்க குடும்பத்துல பாசம், நேசம், அன்பு இதெல்லாம் மட்டும் தூர விலகி நின்னுடுச்சு. அவங்களை பொறுத்தவரை பணம், பதவி, செல்வாக்கு – இது தான் தாரக மந்திரம்! அதை ஏத்துக்கிட்டு இருந்தா தான் அந்த குடும்பத்துல இடம். இல்லன்னா, இப்படி தான், ஒரு வேலைக்கு கூட அலைய வச்சுடுவாங்க.” என்று நிறுத்தினான்.
மயூரனின் குடும்ப பின்னணி ஓரளவுக்கு புரியும்படி இருந்தது கோபிநாத்திற்கு.
பல செல்வாக்கான குடும்பங்களின் பின்னணி இவை தானே!
காசு, பணம், துட்டு என்று அதன் பின்னே ஓடி, நிம்மதி என்பதை தொலைத்து கொண்டு தானே இங்கு பலர் உலவிக் கொண்டிருக்கின்றனர்.
எனினும், இதற்கும் துவாரகாவிற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை அவருக்கு. கேள்வி எதுவும் கேட்காமல், அவனே கூறட்டும் என்று அமைதியாக இருந்தார் கோபிநாத்.
“படிச்சு முடிச்சதும், கேம்பஸ்ல செலக்ட்டாகி வேலைக்கு போனேன். அதுக்கே வீட்டுல பெரிய சண்டை. ஆயிரம் பேருக்கு வேலை குடுக்குற குடும்பத்துல இருந்து, இன்னொருவனுக்கு கீழ வேலைக்கு போறதான்னு. எக்ஸ்பீரியன்ஸ், எக்ஸ்போஸர்னு சமாளிச்சு தான் ஒரு வருஷம் அங்க வேலை செஞ்சேன். இல்லன்னா, இப்போ வேலை தேட இன்னும் கஷ்டமா இருந்துருக்கும்.” என்று விரக்தி சிரிப்புடன் கூறினான் மயூரன்.
அதை தாண்டி, அவன் முகத்தில் வேறு எந்த உணர்வுகளையும் அவரால் காண முடியவில்லை.
அத்தனை வெறுத்து போயிருந்தான் போலும்!
“ஒரு வருஷத்துக்கு மேல, எந்த காரணமும் சொல்ல முடியல. கன்ஸ்டிரக்ஷன் பிசினஸை பார்க்க சொல்லிட்டாங்க. ஆனா, எனக்கு அங்க சுத்தமா செட்டாகல. அதோட, ஏற்கனவே பெரியப்பா பையனுக்கு கன்ஸ்டிரக்ஷன் பிசினஸ் மேல கண்ணா இருந்துச்சு. ஏன்னா, எங்க தாத்தா முதல்ல ஆரம்பிச்சது அது தான். சொல்லப்போனா, எங்க குடும்பம் இப்போ இந்த நிலைமைல இருக்க காரணமே அந்த பிசினஸ் தான். தாத்தாக்கு அப்பறம் பெரியப்பா பொறுப்புல வந்தாலும், அவரால தாத்தாவோட உதவி இல்லாம தனியா அதை பார்த்துக்க முடியல. இருந்தாலும், அந்த பொறுப்புல இருந்து விலகிடக்கூடாதுன்னு இழுத்து பிடிச்சுட்டு இருக்காரு. அடுத்து, அந்த பொறுப்புல அவரோட பையன் வரணும்னு சிலபல வேலைகளை பார்த்துருக்காரு. ஆனா, தாத்தாக்கு அதுல விருப்பம் இல்ல போல. இந்த சிசுவேஷன்ல தான், அவங்களுக்கு இடையில நான் போய் மாட்டிக்கிட்டேன்.” என்று வேண்டா வெறுப்பாக கூறினான் மயூரன்.
அதற்கு மேல் இழுக்க விரும்பாமல், “அங்க நடந்த பல விஷயங்கள் என்னோட நிலைபாடுக்கு பொருந்தாம இருந்துச்சு. தாத்தாவோ, பிசினஸ்ல அட்ஜஸ்ட்மெண்ட்ஸ் இருக்கணும்னு சொல்ல, என்னால ஒரு அளவுக்கு மேல ஏத்துக்க முடியல. அதோட, பெரியப்பா, சித்தப்பா, அவங்க பசங்கன்னு எல்லாரும் ஒன்னு சேர்ந்து என்னை கன்ஸ்டிரக்ஷன் பிசினஸ்ல இருந்து மட்டுமில்லாம, வீட்டுல இருந்தே வெளியேத்த பார்த்தாங்க. சில பெர்சனல் இஸ்யூ காரணமாவும், நானே வெளிய வந்துட்டேன்.” என்று சுருக்கமாக கூறி முடித்தான்.
அவன் சொல்லியதை பொறுமையாக கேட்ட கோபிநாத்தோ, “அதான் நீங்களே வந்துட்டீங்களே… அப்பறமும் ஏன்? இந்த சம்பவத்துக்கு அவங்க தான் காரணம்னு எப்படி தெரிஞ்சுச்சு?” என்றார்.
“ஹ்ம்ம், நான் விட்டாலும், என்னை விட மாட்டாங்க போல. என்னதான், எனக்கும் தாத்தாக்கும் சில விஷயங்கள்ல கருத்து வேறுபாடு இருந்தாலும், பிசினஸை என்னால தான் நல்லா பார்த்துக்க முடியும்னு அவரு நம்புறாரு. ஏற்கனவே, எனக்கும் அவங்க பசங்களுக்கும் ஒரு பிரச்சனை நிலுவைல இருக்கு. இதுல, தாத்தா வேற அடிக்கடி என்னை திரும்ப பிசினஸ்ல கொண்டு வரப்போறேன்னு சொல்லிட்டு இருக்காரு போல. அதோட விளைவு தான் இது. என்னை டீஃபேம் பண்ணி, தாத்தாக்கு என்மேல இருக்க நல்ல ஒப்பினியனை மாத்த, இது மாதிரி வேலைகளை பார்த்துட்டு இருக்கானுங்க.” என்றவன் இறுதி வரியை மட்டும் பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான்.
அதைக் கேட்ட கோபிநாத்திற்கும் கோபமே!
‘உங்க சண்டைல, என் பொண்ணு எதுக்கு பாதிக்கப்படனும்?’ என்ற கோபம்!
மனதில் அடக்கி வைக்க முடியாமல், அதை மயூரனிடம் கேட்டும் விட்டார் அவர்.
அத்தனை நேரம் கோபமும் வெறுப்பும் தாண்டவமாடிய முகத்தில் குற்றவுணர்வும் தயக்கமும் குடி கொண்டு விட, தலையை குனிந்தபடி, “இதுக்கு மன்னிப்பை தவிர என்கிட்ட எதுவும் இல்ல சார். ‘மன்னிப்பு’ கேட்க கூட எனக்கு தகுதி இருக்கான்னு தெரியல. ஏன்னா, இந்த பிரச்சனை வேணும்னா அவங்க பண்ணதா இருக்கலாம். ஆனா, அதுக்கு முன்னாடி உங்க பொண்ணோட மனசை ஹர்ட் பண்ணியிருக்கேன்.” என்று உண்மையான வருத்தத்துடன் பேசியவன், அவர் முகத்தை பார்த்து, “சாரி சார்.” என்றான்.
கோபிநாத்திற்கும் அதற்கு எவ்விதம் எதிர்வினையாற்ற வேண்டும் என்று புரியவில்லை. அவருக்கு மயூரனை பற்றியும் தெரியும், துவாரகாவை பற்றியும் தெரியும். அவள் அவனுக்கு கொடுத்த தொல்லைகளும் தெரியும் என்பதால் அவனின் மன்னிப்பிற்கு மௌனம் காத்தார்.
ஆனால், அவன் முதலில் கூறிய திருமண விஷயத்தில் மௌனம் காக்க முடியாதல்லவா?
“நீங்க என்ன சொன்னாலும், கல்யாணம் எப்படி இதுக்கு தீர்வாகும்? அதுவும், உங்க ரெண்டு பேருக்குள்ள… மயூரன், கல்யாணம் சாதாரண விஷயம் இல்ல. ரெண்டு பேரு மனசு ஒத்து போய் செய்ற கல்யாணத்துலயே பல பிரச்சனைகள் வருது. இங்க… துவா ரொம்ப காயப்பட்டுருக்கா மயூரன்.” என்றவர் சிறு இடைவெளி விட்டு, “நான் அவளுக்காக மட்டும் யோசிக்கல. இதுல, உங்க வாழ்க்கையும் இருக்கு. ஒரு பிரச்சனைக்காக, மொத்த வாழ்க்கையையும் அடகு வைக்குறது, சரின்னு எனக்கு படல.” என்றார் கோபிநாத்.
“உங்க பொண்ணு ரொம்ப காயப்பட்டுருக்காங்கன்னு எனக்கு புரியுது சார்.” என்றவனின் நினைவில், அன்று காலை அவள் அவனிடம் பேசிய விதம் வந்து போனது.
“இனியும் அவங்க காயப்பட வேண்டாம்னு தான் நினைக்குறேன் சார். என்னை தாக்குறதா நினைச்சுட்டு, அந்த ராஸ்கல்ஸ் இன்னும் என்னவெல்லாம் பண்ணுவாங்கன்னு தெரியல.” என்றவன், சற்று முன்பு வந்த அலைபேசி அழைப்பை எண்ணிப் பார்த்தான்.
*****
சற்று முன்னர்… கோபிநாத் துவாரகாவின் உடல்நிலையை குறித்து அறிய பரசுராமின் அறைக்கு சென்ற சமயம், மயூரன் அங்கிருந்து கிளம்பலாம் என்று எண்ணும் வேளையில் தான் அவனுக்கு அந்த அலைபேசி அழைப்பு வந்தது.
அழைத்தது வேறு யாருமல்ல, அவனின் பெரிய தந்தையின் மகன் கார்த்திகேயன் தான்.
அப்போது தான், மயூரனின் சந்தேகம் அவனின் குடும்பத்தின் பக்கம் திரும்பியது.
எப்போதும் அவர்களின் அழைப்பை பொருட்படுத்தாமல் விடுபவன், முதல் முறையாக, ஒருவித அதிர்வுடன் அதை ஏற்றிருந்தான்.
“அட, வழக்கம் போல கட் பண்ணிடுவன்னு நினைச்சேன். இப்படி அட்டெண்ட் பண்ணி, பெட்ல என்னை தோக்க வச்சுட்டியே மயூரா!” என்று கேலி விரவிய குரல் கார்த்திகேயனது தான்.
அதோடு, “நான் தான் சொன்னேனே, அந்த பொண்ணு மேல அண்ணனுக்கு கண்ணுன்னு. இப்போ பெட்ல நான் தான் வின் பண்ணேன்.” என்ற மற்றொரு குரல், மயூரனின் சிறிய தந்தையின் மகன் குமரகுருபரனுடையது.
இதுவே சாட்சியாகிப் போனது, இந்த ஈனச்செயலுக்கு காரணம், அவனின் குடும்பத்தினர் என்பதற்கு!
அது மட்டுமா, தன்னை நோக்கிய தாக்குதலில் தேவையில்லாமல் துவாரகா சிக்கியது மட்டுமல்லாமல், அதற்கு அவளையே பழி சொல்லியல்லவா இருக்கிறான்.
அந்த குற்றவுணர்வு கோபமாக மாற, பல்லைக் கடித்துக் கொண்டு, ஏதோ கேட்க முற்பட, அப்போது அபஸ்வரமாக ஒலித்தது குமரகுருபரனின் குரல்.
“சும்மா சொல்லக் கூடாது மயூ… ச்சே ச்சே… அண்ணன் அவர்களே, அந்த ஃபிகர், ஃபோட்டோல செமையா இருக்கு. உனக்குன்னு பார்த்து எப்படி இவ்ளோ அழகான பொண்ணெல்லாம் அமையுது? ஹ்ம்ம், நேர்ல தான் பார்க்க முடியல. ஃபோட்டோலயாவது பார்த்து ரசிச்சுக்குறேன்.” என்று குமரகுருபரன் கூற, இங்கு மயூரனின் உடலும் உள்ளமும் நடுங்கி விட்டது.
“ப்ச், என்னத்த ரசிக்க? அந்த மேரி பொண்ணு ஒரு ஃபோட்டோவை கூட உருப்படியா எடுக்கல. இதை வச்சு என்னத்த பிளாக்மெயில் பண்றது?” என்று அலுத்துக் கொண்டான் கார்த்திகேயன்.
அவர்கள் பேசியவற்றை கேட்க கேட்க, மயூரனுக்கு ஒருபுறம் கோபம் கரையை கடக்க முயற்சிக்க, மறுபுறம், ‘ச்சீ, இவ்வளவு தானா இவர்கள்? இவர்களோடா சிறு வயதிலிருந்து இருந்தேன்.’ என்று அருவருப்பு உண்டானது.
‘என்னை ஜெயிக்க, இன்னொரு பொண்ணை இப்படி அசிங்கப்படுத்துவாங்களா?’ என்று உள்ளம் எரிமலையாக கொதித்தது.
இத்தனை நாட்களாக, அவர்கள் தொழிலில் தான் சரியில்லை என்று எண்ணியிருந்தான் மயூரன். ஆனால், அவர்கள் மொத்தமாகவே சரியில்லை என்பது இப்போது தான் புரிந்தது.
“கார்த்திண்ணா, இந்த ஃபோட்டோவை பெருசு கிட்ட காட்டினாலே, கெழம் பொட்டுன்னு போயிடும். ஏன்னா, அதுக்கு குடும்ப கவுரவம் தான முக்கியம்! உசுரே போனாலும், கவுரவத்துக்கு பங்கம் வந்துடக் கூடாதுன்னு சொல்லும்ல. இப்போ, அதோட பிரியமான பேரனோட இந்த நிலைமையை பார்த்தா, எங்க கொண்டு போய் மூஞ்சியை வச்சுப்பாராம்?” என்றான் குமரகுருபரன்.
“அட நம்ம மட்டும் பேசிட்டு இருக்கோம். இந்த ஃபோட்டோவோட ஹீரோ எதுவும் பேசாம இருக்காரே. மயூரா… லைன்ல தான் இருக்கியா?” என்று கிண்டலாக கேட்ட கார்த்திகேயன், சற்று இடைவெளி விட்டு, “நாங்க பேசுறது புரியல போலயே. உன் வாட்சப்புக்கு ஃபோட்டோஸ் அனுப்பி இருக்கேன் பாரு. பார்த்தா எல்லாம் புரியும்.” என்றான் நக்கலாக.
இது கோபப்படுவதற்கான சமயம் அல்ல என்பதை புரிந்து கொண்ட மயூரனோ, கோபத்தை அடக்கியபடி, புலனத்தில் குவிந்த புகைப்படங்களை கண்டான்.
கிட்டத்தட்ட இருபது புகைப்படங்கள்!
மயூரனும் துவாரகாவும் மெத்தையில் அணைத்தபடி படுத்திருப்பதை போன்று சில புகைப்படங்கள், மிகவும் நெருக்கமாக சில புகைப்படங்கள், இறுதியாக வெறும் போர்வையில் இருவரும் இருப்பதை போன்று சில புகைப்படங்கள் இருந்தது.
அவற்றை கண்டதும் அவனின் கோபம் மேலும் பெருக, மனதிற்குள்ளேயே அவர்கள் இருவரையும் தாக்கிக் கொண்டிருந்தான்.
கண்ணெதிரில் இருந்திருந்தால் நேரடியாகவே புரட்டி எடுத்திருப்பான். அவன் மனதும் நிம்மதியடைந்திருக்கும்!
“ஹலோ ப்ரோ, என்ன நீயும் ஃபோட்டோலேயே ரசிச்சுட்டு இருக்கியா?” என்று குமரகுருபரனின் குரல் நாராசமாக கேட்க, “பா*****! உங்களுக்கு என்மேல தான டா கோபம். எதுக்கு அவளையும் இதுல இழுத்து விட்டுருக்கீங்க? நீங்க எல்லாம் மனுஷங்க தானா?” என்று கத்தி விட்டான் மயூரன்.
“என்ன தம்பி கோபம் வருதா? அப்போ சரியான இடத்துல தான் கையை வச்சுருக்கோம் போல.” என்ற கார்த்திகேயன், “அந்த பெருசு, உன்கிட்ட பேசி இங்க கூட்டிட்டு வர பிளான் போடுது. நீ என்ன பண்ற, முன்னாடி மாதிரி, உனக்கும் இதுக்கும் சரி வராதுன்னு ஒதுங்கி போயிடுற. இல்ல, தாத்தா சொல்லிட்டாரு, நான் வந்து புடுங்குவேன்னு நினைச்சா கூட… இதோ இது தான் ஞாபகம் வரணும். இது வெறும் சேம்பில் தான். மெயின் பிக்சர் இன்னும் பயங்கரமா இருக்கும். ஃபோட்டோ எடுத்த எனக்கு மார்ஃப்பிங் பண்ண தெரியாதா என்ன?” என்று கார்த்திகேயன் சிரிக்க, மயூரன் கைகளை இறுக்கி மூடி கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டான்.
கொஞ்சம் கூட குறைந்து விடாமல், மொத்தமாக அவர்கள் மீது காட்ட வேண்டும் என்று எண்ணினானோ என்னவோ!
“கார்த்திண்ணா, உங்களுக்கு ப்ரோ பத்தி தெரியாதா என்ன? ரொம்ப நல்லவரு, வல்லவரு… ஒரு பொண்ணோட லைஃப் மேட்டர் வேற. சோ, ஃப்ரீயா விடுங்க.” என்ற குமரகுருபரன், “அப்பறம் ப்ரோ, நான் கேள்விப்பட்டது உண்மையா? அந்த பொண்ணு, நீதான் வேணும்னு உன் பின்னாடி சுத்துதாமே! உனக்கு தான் இதுல எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லையே… சோ, இங்க அனுப்பி விடுறது. நாங்களும் உன் குடும்பம் தான?” என்று விரசமாக பேச, அதற்கு மேல் அழைப்பில் இருந்தால், தன்னையும் மீறி ஏதாவது சொல்லி விடுவோமோ என்று அழைப்பை துண்டித்தான்.
அழைப்பை துண்டித்தாலும், அவர்களின் பேச்சு இன்னும் செவிக்குள் ஒலித்துக் கொண்டிருப்பதை போன்று இருக்க, கண்களை இறுக்க மூடிக் கொண்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டான்.
சிறிது நேரம் யோசித்தவனுக்கு நன்கு தெரிந்தது, அவர்கள் இதை அப்படியே விடப்போவதில்லை என்பது. இப்போது தாத்தாவின் கோரிக்கையை ஒதுக்கி விட்டாலும், பின்பு இதையே காரணம் காட்டி மிரட்டுவர் என்பதும் தெளிவாக புரிந்தது.
இதற்கு ஒரே தீர்வு, துவாரகாவை அவர்கள் தொட முடியாத நிலையில் நிறுத்துவது. அதற்காக தான் அவளை திருமணம் செய்யும் முடிவிற்கு வந்தான். அதோடு, இத்தனை நாள் ஒதுங்கி இருந்ததை விடுத்து, அந்த கயவர்களை எதிர்க்கவும் முடிவெடுத்து விட்டான்.
*****
“மயூரன்… மயூரன்…” என்று கோபிநாத் சில முறை அழைத்த பின்பே நிகழ்விற்கு வந்தான் மயூரன்.
அவனின் பேச்சும், அதற்கு பிறகான சிந்தனையும் கோபிநாத்திற்கு அச்சத்தை கொடுக்க, “என்ன பிரச்சனை மயூரன்? மறைக்காம முழுசா சொல்லுங்க. என் பொண்ணு…” என்று நெஞ்சை பிடித்துக் கொண்டார்.
அவரை தாங்கிப் பிடித்தவன், “சார், பிளீஸ் என்னை நம்புங்க. உங்க பொண்ணோட பாதுகாப்பு என் பொறுப்பு. இந்த கல்யாணம் கூட அதுக்காக தான். ஆனாலும், நீங்க சொல்றதும் சரி தான். கல்யாணத்துக்கான காரணம் பாதுகாப்பு மட்டுமா இருக்கக் கூடாது.” என்று நிறுத்தியவன், ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்தான்.
“உங்க பொண்ணுன்னு இல்ல, யாரா இருந்தாலும், காதல், கல்யாணம் பண்றதுல எனக்கு இண்ட்ரெஸ்ட் இருக்கல. காரணம், என் குடும்பம்! நான் மாட்டிட்டு படுறதே போதும்னு நினைச்சு தான், வேண்டாம்னு இருந்தேன். ஆனா… இப்போ அது தப்புன்னு தோணுது.” என்று எதையோ எண்ணி பல்லைக் கடித்தவன், மீண்டும் சாந்தமாக மாறி, “சார், பிரச்சனைக்காக தான் இந்த கல்யாணம்னாலும், எங்க கல்யாண வாழ்க்கை பிரச்சனையோட முடிஞ்சுடாது. என்னை நம்புங்க.” என்றான் உறுதியாக.
என்னதான் பெண்ணின் வாழ்க்கை, மயூரனின் சிக்கலான குடும்ப சுழலுக்குள் சிக்கி விடுமோ என்ற பதைபதைப்பு இருந்தாலும், மயூரனின் கோரிக்கையை கோபிநாத்தால் நிர்தாட்சண்யமாக மறுக்க முடியவில்லை.
அதற்காக, முழு மனதுடன் ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை.
“ஆனா, துவா என்ன சொல்லுவான்னு தெரியல…” என்று குழப்பத்துடன் கோபிநாத் கூற, “அதை நான் பார்த்துக்குறேன் மாமா.” என்று அழுத்தமாக கூறினான் மயூரன்.
அவனின் ‘மாமா’ கோபிநாத்தை அசைத்துப் பார்க்க, திகைப்புடன் மயூரனை அவர் நோக்க, ஆறுதலான சிரிப்புடன் அவரின் கைகளை பற்றி விடுவித்தான்.
மாமனார் – மருமகன் என இவர்கள் முடிவெடுத்து விட்டால் போதுமா என்ன?
அங்கொருத்தி இருவரையும் படுத்தவென்றே விழிகளை மலர்த்தி இருந்தாள்.
தொடரும்…