ஜீவன் 7
நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தாள் அகல்யா. தரையில் படுத்து இருந்த தரணீஸ்வரனுக்கு முழிப்பு வந்துவிட்டது. ஆனாலும் கண் திறக்க முடியவில்லை. கடினப்பட்டு கெஞ்சி கூத்தாடி விழித்திறந்தவன் எழ முடியாமல் படுத்திருந்தான். தலை பாரமாவது போல் இருந்தது. அரை மணி நேரம் கடந்தும் படுத்திருந்தவன் தன்னை தயார் படுத்திக் கொண்டு எழுந்தான்.
எழுந்தவன் பார்வையில் முதலில் விழுந்தது அகல்யா தான். வாயை நன்றாக பிளந்து கொண்டு ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். மணியை திரும்பிப் பார்த்தான். அது ஒன்பது என்று காட்டியது. அவளைக் கண்டு கொள்ளாமல் குளியலறை சென்றவன் முகம் கழுவ, அப்பொழுது தான் நேற்று காலை நடந்தது நியாபகத்திற்கு வந்தது.
பாதி கழுவிய முகத்தோடு வெளியில் சென்றவன், “என் வீட்ல இருந்துட்டு என்னையவே நக்கலா பேசிட்டு, எவ்ளோ தைரியமா தூங்கிட்டு இருக்கா பாரு. மணி ஒன்பது ஆகுது… கும்பகர்ணன் கூட இவ்ளோ நேரம் தூங்க மாட்டான்.” என அவள் தூங்கும் தைரியத்தில் சத்தமாக பேசினான்.
‘என்ன செய்யலாம்’
வெகு நேரம் யோசித்தவன் ஏதாவது கிடைக்கிறதா என்று அறை முழுவதும் தேடினான். அந்த யோசனையில் தன்னை யாரோ இரவு அரைகுறையாக திட்டியது நியாபகத்திற்கு வர, “நான் எப்படி தரையில படுத்தேன்.’ மீண்டும் யோசனைகளை சுழல விட்டான்.
சரியான பதில் கிடைக்காததால் சலிப்போடு திரும்பியவன் பார்வையில் உடற்பயிற்சிக்காக உபயோகிக்கும் கயிறு கண்ணில் பட்டது. பட்டென்று கண்ணில் மின்னல் அடிக்க வேகமாக அதை எடுத்து வந்தான். தூங்கிக் கொண்டிருப்பவள் எழுந்து விடாமல் சாமர்த்தியமாக இரண்டு கைகளையும் கட்டி விட்டான். காலை கட்டில் இருக்கும் தூரத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் அவை இருக்கும் தோரணைக்கு ஏற்ப துணி கொண்டு கட்டி விட்டான்.
‘நீ ஒரு ஆளு உன்கிட்ட நான் தப்பா நடந்துட்டேன். ஆளையும் மூஞ்சியும் பாரு நல்லா தேவாங்கு மாதிரி.’ தனக்குள் அவளை திட்டிக் கொண்டவன் நினைவு அன்று மீட்டிங் நடக்கும் நாளை நினைத்தது.
நிதானம் இல்லாமல் தான் அங்கு சென்றான். கதவில் சாய்ந்து கொண்டு நிற்க, வேகமாக திறந்தவள் மீது விழுந்துவிட்டான். ஆதிலட்சுமி சுதாரித்து அருகில் வருவதற்குள் அவனை பலம் கொண்டு தள்ளினாள். மகனை காப்பாற்றியவர் அறைக்கு அழைத்துச் சென்றார்.
மகனை நன்கு திட்டி தீர்த்தவர்கள் மீட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று விட்டு, அகல்யாவை அனுப்பி வைத்தார்கள் அவனைப் பார்த்துக் கொள்ளும்படி. வந்தவள் முதலில் அவன் இருக்கும் கோலத்தை பார்த்து முகம் சுழிக்க,
“ஹேய்! எதுக்காக என்னை அப்படி பார்க்குற? அழகா இருக்கன்னு சைட் அடிக்கிறியா.” என்று குழைந்தான்.
வேண்டா வெறுப்பாக முகத்தை திருப்பிக் கொண்டாள் அகல்யா. அதைப் பார்த்தவன், “நீதான் அந்த அகல்யாவா! எப்ப பாரு எங்க அம்மா உன் புராணத்தையே பாடுறாங்க. நான் கம்பெனி பக்கம் வராததால அவங்களை மயக்கி நீ எம்டி ஆகலாம்னு பார்க்கிறீயா.” என்றதும் கோபம் வந்துவிட்டது அவளுக்கு.
“பேசுறதை யோசிச்சு பேசுங்க சார். இதை வாங்கி தான் பிழப்பு நடத்தணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. எங்க அப்பாவே எனக்கு போதுமான அளவு சேர்த்து வச்சிருக்காரு. ஊதாரியா சுத்திட்டு என்னை குறை சொல்ற வேலை வச்சுக்காதீங்க.” என்று வெடித்தாள்.
“ஏய்! யாரடி ஊதாரின்னு சொல்ற?”
“இங்க உங்களைத் தவிர வேற யாரு இருக்கா.”
“அடிங்க்க்கு…” என அவளை அடிக்க எழ முயன்றவன் தொப்பென்று இருக்கையில் அமர்ந்தான் முடியாமல்.
“ஒழுங்கா எந்திரிச்சு நிக்க கூட முடியல இதுல கோபம் ஒரு கேடு. இந்த அளவு அப்பா அம்மா கஷ்டப்படுறதை பார்த்தும் எப்படி தான் குடிக்க மனசு வருதோ! தினம் ஒரு மணி நேரமாது மேடம் உங்களை பத்தி பேசுவாங்க. பெருமையா பேசுவாங்கன்னு நினைச்சுக்காதீங்க. அழாத குறையா மனசு நொந்து பேசுவாங்க. பெத்தவங்களை அழ வச்சிட்டு ரொம்ப நாள் நல்லா வாழ முடியாது.”
அவள் பேசிய வார்த்தைக்கு கோபம் கொள்ளாதவன் அழுக ஆரம்பித்து விட்டான். எதிர்பாராத அவன் அழுகையில் கலங்கிய அகல்யா அருகில் சென்று, “எதுக்கு இப்போ அழுறீங்க. நான் எதோ ஒரு ஆதங்கத்துல பேசிட்டேன்.” என்றாள் மனம் இறங்கி.
பதில் எதுவும் சொல்லாமல் அவன் அழுகையை அதிகரிக்க, “சாரி சார் ப்ளீஸ்.” என்றாள் பயந்துக் கொண்டு.
“நீ எதுக்கு சாரி சொல்ற நான் தான் சாரி சொல்லணும். என்னை பெத்தவங்களை அநியாயத்துக்கு கஷ்டப்படுத்துறேன். என்னை மாதிரி ஒரு பையனை பெத்ததுக்கு அவங்க சும்மாவே இருந்திருக்கலாம்.” என்று சத்தமாக அழ ஆரம்பித்து விட்டான்.
“ப்ளீஸ் சார்… அழாதீங்க யாராது வர போறாங்க.”
“உனக்கு தெரியாது நான் அவங்களை எவ்ளோ கஷ்டப்படுத்துறேன்னு. இன்னைக்கு கூட குடிக்காம தான் இங்க வரணும்னு நினைச்சேன். ஆனா, முடியல என்னால. அவ நியாபகம் இதோ இந்த” என தலையில் வேகமாக அடித்துக் கொண்டு,
“இங்க வந்து கொல்லுது. எதுக்கு டி இப்படி பண்ணன்னு அவளை பார்த்து கேக்கணும். அப்போ தான் என் மனசு அடங்கும்.” என்றான் புலம்பிக் கொண்டு.
தரணீஸ்வரன் யாரைக் குறிப்பிடுகிறான் என்பது தெரியாததால் குழப்பமாக அவள் பார்த்துக் கொண்டிருக்க, வெடுக்கென்று எழுந்து அவளை பயமுறுத்தினான். நெஞ்சில் கை பின் நகர்ந்து பயத்தோடு பார்க்க,
“நான் எதுக்கு அவளை கேட்கணும். அவ யாரு எனக்கு? நான் வேணாம்னு போனவ எக்கேடு போனாலும் கவலை இல்லை எனக்கு. அவளை நினைச்சு இனிமே நான் குடிக்க மாட்டேன். இது உன் மேல சத்தியம்.” என்று பயந்து கொண்டிருந்த அகல்யா தலை மீது கை வைத்து சத்தியம் செய்தான். அதிர்ந்தாள் எதற்காக தன் மேல் செய்தான் என்று.
“அய்யய்யோ! உன் மேல சத்தியம் பண்ணிட்டேனே. திரும்ப நான் குடிச்சா நீ செத்துப் போய்டுவியா.” உளறிக் கொண்டு இருக்கையில் அமர, அவள் தான் முழி பிதுங்கி நின்றாள் தரணி முன்பு.
‘எதுக்குடா என் மேல சத்தியம் பண்ண’ என்ற ரீதியில் அவள் முக பாவனைகள் இருக்க, “நீ யாரு எனக்கு? நீ செத்தா நான் ஏன் கவலைப்படனும். நான் இங்க இருந்து போனதும் குடிப்பேன்.” என்றதில் சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது அவளுக்கு.
பைத்தியக்காரனிடம் சிக்கிக் கொண்டது போல் அகல்யா நொந்து கொண்டிருக்க, அங்கிருந்து வெளியேற பார்த்தான் தரணீஸ்வரன். அவன் செல்வதை தாமதமாக உணர்ந்தவள்,
“சார்! நீங்க எங்கயும் போகக்கூடாது உள்ள வாங்க.” என்று அழைத்தாள்.
காதில் வாங்கிக் கொள்ளாத தரணீஸ்வரன் கதவை திறக்க, ஓடி சென்று அதை மூடிவிட்டாள்.
“ஏய்!” என்றவன் கதவை திறக்க,
“சார், சொன்னா கேளுங்க. மேடம் வர வரைக்கும் உங்களை எங்கயும் என்னால அனுப்ப முடியாது.” என்று மீண்டும் கதவை மூடினாள்.
“அவ தான் என்னை விட்டு போய் ரொம்ப வருஷமாகுதே. அவ எப்ப வரது நான் எப்ப வெளிய போறது.”
இப்போதும் அவன் யாரை சொல்கிறான் என்பது விளங்கவில்லை அவளுக்கு. இருந்தும் தவறான ஆளை குறிப்பிடுகிறான் என்பதை அறிந்து, “சார், நான் சொன்னது உங்க அம்மாவ.” என்றாள் திருத்தமாக.
“அதான!” என மறுபடியும் அழத் துவங்கினான். பேயிடம் சிக்கிக் கொண்டதாக தவித்தாள் அகல்யா. அவன் அழுகை சத்தம் அதிகரித்தது. யாராவது வருவதற்குள் நிறுத்த நினைத்தவள்,
“எதுக்காக சார் அழுறீங்க?” பாவமாக கேட்டாள்.
“எங்க அம்மாவ தவிர வேற யாரும் இல்லையே எனக்கு. அவ என்னை விட்டுப் போயிட்டான்னு தெரிஞ்சும் இன்னமும் யோசிக்கிறேன் பார்த்தியா என்னை எதைக் கொண்டு அடிக்க” என்று அவள் காலை பிடித்தான்.
பதறிய விலகுவதற்குள் அகல்யாவின் காலணிகளை கழட்ட முயன்றான். அவன் செய்யப் போவதை யூகித்து, “இப்படி எல்லாம் பண்ணாதீங்க சார்.” தடுத்தாள்.
கேட்காது காலணிகளை கழட்டுவதிலே குறியாக இருக்க, கெஞ்சி பார்த்தவள் ஒரு கட்டத்தில் கோபம் கொள்ள ஆரம்பித்தாள். அதை மீறியும் ஒரு காலணியை கழட்டி விட, வேகமாக தள்ளிவிட்டாள் தரையில்.
விட்டால் பல்டி அடித்து இருப்பான் போல அந்த அளவிற்கு இருந்தது அவள் வேகம். எழுந்து அமர்ந்தவன் மயக்க நிலையில் அவளை பார்க்க,
“லூசாடா நீ? அறிவுகெட்ட தனமா என் காலை பிடிச்சிட்டு இருக்க. யாரைப் பத்தி பேசுறன்னு சொல்லிட்டு பேசுனா தான எனக்கு கொஞ்சமாது புரியும்.” என்ற மிரட்டலில் பயந்து அழத்துவங்க,
“இன்னொரு தடவை அழுத ஓங்கி அறைஞ்சிடுவேன். ஆம்பள புள்ள மாதிரியா நடந்துக்குற சும்மா சும்மா அழுதுட்டு. தொடடா கண்ண!” என்று கட்டளையிட்டாள்.
இப்பொழுது அவன் பேயை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான் அகல்யாவை. சொன்னதை செய்யாமல் இருக்கும் தரணீஸ்வரனை உஷ்ணத்தோடு ஏறிட்டவள், “சொல்றேன்ல கண்ணை தொடன்னு. தொடடா!” சத்தமாக கத்தினாள்.
மயக்கம் அனைத்தும் தெளிந்தது அதில். தன்னிலை உணர்ந்து எழுந்து நின்றவன் அவளை முறைக்க, “என்னடா முறைக்கிற? எருமை மாடு வயசாகுது இன்னமும் சின்ன குழந்தை மாதிரி பண்ற.” என்றாள்.
அவ்வார்த்தை அவன் கோபத்தை கிளற, “ஏய்! ரொம்ப பேசுற நீ” என்று தன்னை நிதானிக்க ஆரம்பித்தான்.
ஆடவன் நினைவு திரும்புவதை அறியாது, “வந்ததுல இருந்து ரொம்ப பண்ணிட்டு இருக்குறது நீதான். இன்னைக்கு யாரு முகத்துல முழிச்சன்னு தெரியல உன் கூட மல்லு கட்ட வேண்டியதா இருக்கு. ஆள… மூஞ்ச பாரு.” என்றாள்.
யார் என்று தெரியாதவள் தன்னை திட்டுவதை உணர்ந்தவன்,
“இன்னொரு வார்த்தை பேசுன வாய உடைச்சிடுவேன். நான் யாருன்னு தெரிஞ்சும் பேசுறன்னா உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கும். இப்பவே உன்ன வேலைய விட்டு அனுப்புறேன் பாரு.” அவனும் பேச்சுக்கு பேச்சு ஈடு கொடுக்க ஆரம்பித்தான்.
“முதல்ல அதை பண்ணு. உன்னை மேய்க்கறதுக்கு நாலு எருமைய மேய்ச்சிட்டு போலாம்.” என்றவளை அவன் பதிலுக்கு திட்ட வர, மீட்டிங்கை முடித்த பெற்றோர்கள் உள்ளே வந்தார்கள்.
அவர்களைக் கண்டதும் தரணீஸ்வரன் அமைதியாக தலை குனிந்து கொள்ள, இவளோ வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். நினைவில் இருந்து வெளிவந்தவன்…
“அன்னைக்கே பதில் கொடுத்து இருக்கணும் விட்டுட்டேன். இன்னைக்கு இருக்கு உனக்கு” என்றான்.
ஜீவன் துடிக்கும்…
ஜீவன் 8
அன்றைய நிகழ்வுகளில் இருந்து வெளிவந்தவன் தூங்கிக் கொண்டிருப்பவள் எழுவதற்காக காத்துக் கொண்டிருந்தான். அவனை அதிகம் காக்க வைக்காமல் எழுந்தாள் அகல்யா.
அரைகுறை தூக்கத்தில் இருந்தவள் கை கால்களை அசைக்க முயல, அதுவோ கட்டி வைத்திருந்ததால் நகர மறுத்தது. அசோகர்யமாக இருப்பதால் தூக்கம் அவளை விட்டு பறந்தோடிது. கை கால்கள் கட்டப்பட்டு இருப்பதால் பயத்தோடு எழுந்தமர முயன்றாள். அவள் முயற்சி தோல்வியில் முடிய, அசாதாரண சூழ்நிலையை பயத்தோடு எதிர்கொண்டாள்.
ஆந்தை கண் போல் விரிந்திருக்கும் அவளின் விழிகளில் உற்சாகம் கொண்டவன் அவள் முன்பு நின்றான். மேலாடை இல்லாமல் தன் முன் நிற்கும் தரணீஸ்வரனை கண்டு முறைத்தவள் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள,
“இனி நீ திரும்பி எதுவும் ஆகப்போறது இல்ல.” என்றான் கள்ள சிரிப்போடு.
அவன் வார்த்தையில் அதிர்ந்து திரும்பியவள் முகத்தை பின்னுக்கு இழுத்தாள் அவன் முகம் தன் அருகில் இருப்பதை உணர்ந்து. நெருங்கி சென்றவன் அவளை ரசிப்பது போன்ற பாவனையை விழிகளால் கொடுக்க,
“பொறுக்கி! எதுக்குடா அப்படி பார்க்குற?” என்றவளை இன்னும் அலற விட்டான் பக்கத்தில் படுத்து.
கை கால்களை அசைக்க அவள் முயற்சி செய்ய, “சும்மா சொல்லக்கூடாது நேத்து நைட்டு செமையா ஒத்துழைச்ச. நான் கூட நீ பிடிவாதம் பிடிப்பன்னு கை கால எல்லாம் கட்டிப் போட்டுட்டேன் தெரியாம.” என்றவாறு இன்னும் அவளுடன் நெருங்கியவன்,
“நீ சும்மா சொல்லிட்டு இருந்த வார்த்தை உண்மை ஆகிடுச்சு. இதையும் மறக்காம எங்க அம்மா கிட்ட சொல்லு.” என்று கன்னம் தட்டினான்.
பதில் எதுவும் பேசாமல் அவள் முறைத்துக் கொண்டு இருக்க, “என்னடி முறைக்கிற? இனிமே இந்த முறைப்பெல்லாம் என்கிட்ட ஆகாது. தாலி கட்டி ஃபஸ்ட் நைட்யும் முடிச்சிட்டேன்.” என்றான்.
பற்கள் கடிக்கும் ஓசை பக்கத்தில் இருந்ததால் நன்றாக கேட்டது தரணீஸ்வரனுக்கு. அவளைப் பார்த்தவாறு இருந்தவன் கட்டி இருக்கும் அவள் வலது கையில் படுத்துக்கொண்டு, “நீ எதுக்கு முறைக்கிறன்னு தெரியும், சொல்லட்டா?” என அவள் இருக்கும் பக்கம் முகத்தை திருப்பினான்.
அவளோ பார்க்க சகிக்காமல் வேறு புறம் திரும்பிக் கொள்ள, “உனக்கு இது ஃபர்ஸ்ட் நைட். எனக்கு இது செகண்ட் நைட் அதனால தான.” என்றதோடு நிறுத்தாமல் அதிக சத்தத்தோடு சிரிக்க, அவளுக்கு எரிச்சல் உற்றது.
“எங்க அம்மாவ கேள்வி மேல கேள்வி கேட்டியே நீ ஒழுங்காடி.” என்றதும் அவள் பார்வையில் அனல் தெறித்தது.
“நல்லா பிளான் பண்ணி இந்த வீட்டுக்கு மருமகள் ஆகிட்ட. இதுவே ஒன்னும் இல்லாத ஒருத்தனை ரெண்டாம் தரமா கட்டிக்க சம்மதிச்சு இருப்பியா? பையன் வசதியா இருக்கவோ வாழ்க்கை தரேன்னு உள்ள புகுந்துட்ட. இந்த லட்சணத்துல நீ என்னை குப்பைன்னு சொல்ற.”
“வாய மூடிட்டு என் கை கட்ட அவுத்து விட்டுடு. இல்லன்னா இன்னைக்கு உன் சாவு என் கைல.”
முன்பு போல் திரும்பிப் படுத்தவன் ஒரு கையை தலைக்கு தாங்கிக் கொண்டு, “ஆஹான்! எந்த கையால நடக்கும்… இந்த கையா? இல்ல இந்த கையா?” கட்டியிருக்கும் இரண்டு உள்ளங்கைகளை சுரண்டி விட, கூச்சம் வருவதற்கு பதில் நெருப்பு தான் பற்றி எரிந்தது அவளுக்குள்.
“என்னை தொட்டு பேசுற வேலை வச்சுக்காத.”
“அட கிறுக்கு பயபுள்ள! நேத்தே எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு சொல்றேன் இன்னும் தொட்டுக்காத ஒட்டிக்காதன்னு…” என்று அவளை இன்னும் கோபப்படுத்தினான்.
பதில் எதுவும் பேசாமல் மீண்டும் அவள் முறைப்பில் ஈடுபட, “இப்படி எல்லாம் பார்த்தா
மயங்கி திரும்பவும் ஏதாச்சும் பண்ணிடுவேனா. உனக்கு அவ்ளோ சீன் இல்ல.” என்றான் முகம் வருடி.
அவளோ, அவனே மேலிருந்து கீழாக கேவலமாக ஒரு பார்வை பார்த்தாள். புருவம் சுருங்கி கேள்வியில் நிற்க, “அதுக்கெல்லாம் முதல்ல நீ ஒர்தா இருக்கணும்டா குடிகாரா.” என்ற ஒரே வரியில் அவனின் கோபத்தை பன்மடங்காக தூண்டிவிட்டாள்.
அகல் கழுத்தை நெறித்து தன் கோபத்தை காட்டியவன் பேசுவதற்கு முன், “நிக்க கூட நிதானம் இல்லாம தினமும் தள்ளாடிட்டு வர நீ ஒரு ஆளுன்னு பயப்படுவேன்னு பார்க்கிறீயா. நீ மட்டும் தைரியமான ஆம்பளையா இருந்தா கைய அவுத்து விடுடா அப்ப தெரியும்.” என்றாள் அவனை துச்சமாக பார்த்து.
மனைவியின் வார்த்தைக்கு பதில் அளிக்காமல் அவன் முறைக்க, “பேசு… இவ்ளோ நேரம் பேசுனியே” இன்னும் கேலி பேசிட,
“கைய அவுத்து விட்டா மேடம் என்ன பண்ணுவீங்க?” எதற்கும் தயார் என்று துணிந்து பேச்சை துவங்கினான்.
“முதல்ல ரோஷத்தோட என் கை கட்ட அவுத்து விடுடா.”
“முடியாது”
“இதுல இருந்து தெரியல நீ ஒரு வெத்து வெட்டுன்னு. காலைல போதை தெளிஞ்சி நடிக்க பார்க்குறியா. உன்னால என்னை எதுவும் பண்ண முடியாது. அந்த அளவுக்கு நீ தைரியமான ஆம்பளையும் கிடையாது.” என்றவள் பேச்சை முடிக்கும் பொழுது கைகட்டை அவிழ்த்து விட்டான் தரணீஸ்வரன்.
இதற்காகத்தானே அவள் இவ்வளவு பேசியது. அதை அறியாத தரணீஷ்வரன் அவளின் கன்னம் பற்றி, “யாரைப் பார்த்துடி தைரியமான ஆம்பள இல்லன்னு சொன்ன. என் முன்னாடி நிற்க எத்தனை பேர் நடுங்குவாங்கன்னு தெரியுமா உனக்கு?” எரிந்து கொண்டிருக்கும் புகையை தண்ணீர் ஊற்றி அணைப்பது போல் அவன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது போர்வையை முகத்தில் மூடி ஜாக்கி சான் போல் அடிக்க ஆரம்பித்தாள்.
“எவ்ளோ தைரியம் இருந்தா என் கைய கட்டி வச்சிருப்ப. இன்னையோட நீ செத்தடா என்கிட்ட. தாலியா கற்ற தாலி. ஒருத்தி போனா இன்னொருத்தின்னு வருவியா. செகண்ட் நைட்டு கேக்குதா உன் முகர மூஞ்சிக்கு.” என்றவள் ஓங்கி அவன் தலையில் கொட்டினாள்.
உள்ளே இருந்தவனுக்கு கண் எல்லாம் கலங்கிவிட்டது அவள் கொடுத்த வலியில். அதை அறியாதவள் மீண்டும் ஓங்கி மூளை இருக்கும் பக்கத்தில் ஒரு குத்து விட, நேற்று இரவு அகல்யா அடித்தது நியாபகத்திற்கு வந்தது அவனுக்கு. சுனாமி போல் மேலெழுந்து தன் மேல் இருக்கும் போர்வையை அவள் மேல் போற்றி கீழே தள்ளினான்.
கால்கள் இரண்டும் இன்னும் அவிழ்க்கப்படாமல் இருப்பதால் அவன் சாய்த்த வேகத்தில் சிக்கிக்கொண்டது. முகத்தை மூடி இருக்கும் போர்வையை விலக்கியவன், “நேத்து ராத்திரி என்னை அடிச்சியாடி?” என்று கேட்டான்.
அதுவரை கோபத்தில் அவனைத் தாக்கும் எண்ணத்தில் இருந்தவள் முழிக்க ஆரம்பித்தாள். அவள் முட்ட கண் முழியில் இன்னும் சந்தேகம் கூட, “சொல்லுடி! நேத்து ராத்திரி என்னை நீ தான அடிச்சு கீழே தள்ளிவிட்ட.” என்று திரும்பவும் கேட்டான்.
கருவிழியை வலப்புறம், இடப்புறம் அசைத்தவாறு சுழன்று அவனைப் பார்த்தவள் பேச்சு வராமல் தடுமாற, “எதுக்குடி அடிச்ச? காலைல எழுந்ததும் தலை ஒரு பக்கம் செம்மையா வலிச்சுது. அப்பவே யோசிச்சு பார்த்தேன் நியாபகத்துக்கு வரல. இப்ப நீ அடிக்கும் போது தான் சந்தேகம் வந்துச்சு. என் வீட்டுல இருந்துட்டு என்னை அடிக்கிற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா. என்னை தொட்ட கைய உடைக்காம விடமாட்டேன்.” என்றவன் இடது கையைப் பிடித்து முறுக்க ஆரம்பித்தான்.
துள்ளி எழுந்து அமர்ந்தவள் கையை விடுவித்துக் கொள்ள போராட, மற்றொரு கையையும் சேர்த்து பிடித்தவன் முறுக்கு பிழிவது போல் வளைக்க ஆரம்பித்தான்.
“ஆஆ… அய்யோ! வலிக்குது விடுடா.” போராடிக் கொண்டிருப்பவள் வேதனையில் உள்ளம் மகிழ்ந்தவன் இன்னும் அலற விட்டான்.
“டேய் குடிகாரா! கை உடைஞ்சிற போதுடா விடு.”
“உடையட்டும்…டி” என்று இன்னும் அதில் பலத்தை கூட்ட, ஏதோ ஒரு மூட்டு அசைந்து சத்தத்தை கொடுத்தது கையில்.
“அம்மா” என்று பெரும் சத்தம் அவளிடம். பயந்து கையை விட்டவன் என்ன ஆனது என்று தெரியாமல் முழிக்க, மூக்கில் ஓங்கி ஒரு குத்து குத்தினாள்.
தலை மொத்தமும் ராட்டினம் போல் சுழன்று மயக்க நிலைக்கு கொண்டு சென்றது அவனை. ஏற்கனவே நேற்று இரவு குடித்தது இன்னும் மண்டைக்குள் பாக்கி இருக்க இப்போது அவளின் குத்து உயிரை எடுக்கும் வேலையில் இறங்கி இருந்தது.
தலையைப் பிடித்துக் கொண்டு மெத்தையில் சரிந்தான். அவனைக் கண்டு கொள்ளாதவள் கால் கட்டை அவிழ்த்து விட்டுக்கொண்டு, “இன்னொரு தடவை என்கிட்ட உன் வீரத்தை காட்டணும்னு நினைச்ச அவ்ளோ தான்.” என்று வெளியில் சென்று விட்டாள்.
மருமகளுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள் வீட்டின் பெரியவர்கள். கோபத்தோடு வந்தவள் அவர்களை பார்த்து அமைதியாகி விட, “அகல் டீ குடி.” என்று மருமகள் கையில் தேனீர் கோப்பையை கொடுத்தனர்.
நேற்று அவர்கள் பேசியதற்கு பின் கொஞ்சம் அவள் மனம் மாறி இருக்க, எதுவும் பேசாமல் குடிக்க ஆரம்பித்தாள். மருமகளின் மாற்றத்தை கண்டவர்களா உள்ளுக்குள் நிம்மதி அடைய,
“உங்க அம்மா போன் பண்ணி இருந்தாங்க. உன்னையும் தரணியையும் மறு வீட்டுக்கு அழைச்சு இருக்காங்க. உனக்கு என்ன விருப்பம்னு சொல்லு அதுபடி நாங்க பேசிக்கிறோம்.” என்றார் தயாளன்.
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக டீ குடித்துக் கொண்டிருக்க, மருமகளுக்கு விருப்பமில்லை என்பதை உணர்ந்தவர்கள், “உங்க அம்மா கிட்ட இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு எல்லாத்தையும் வச்சுக்கலாம்னு சொல்லிக்கிறோம்.” என்றார்கள்.
இவர்கள் புரிந்து வைத்திருக்கும் அளவுக்கு கூட தன் தாய் புரிந்து வைக்கவில்லையே என்ற வேதனை அவளுக்குள். என்ன மாதிரியான சூழ்நிலையில் மகள் இருக்கிறாள் என்பதை அறிந்தும் கேட்கும் அன்னை மீது அளவு கடந்த கோபமும் எழுந்தது. தன்னை தானே நிதானப்படுத்தியவள் நேரத்தை கடந்தாள்.
அவளுக்குள் மாற்றத்தை கொண்டு வர விரும்பிய ஆதிலட்சுமி, “நீ ஃப்ரீயா இருந்தா வீட்ட சுத்தி பார்த்துட்டு வரலாமா.” என்று உத்தரவு கேட்டிட, உடல் மொழியாமல் தலையசைத்து சம்மதம் சொன்னாள்.
சிரிப்போடு மருமகளை அழைத்துச் சென்றார். முதலில் நின்றார்கள் சமையல் அறையில். அங்கிருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி விளக்கியவர் அடுத்தடுத்து நகர ஆரம்பித்தார் மருமகளோடு. அவளோ முதலில் வேண்டா வெறுப்பாக கேட்டுக் கொண்டிருக்க, மாமியாரின் முகத்தில் தெரியும் மகிழ்வில் சாதாரணமாக கேட்க ஆரம்பித்தாள்.
அவர்களின் அறைக்கு அழைத்துச் சென்றவர், “இந்த ரூம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் அகல். நாற்பது வருஷமா என்னோட நல்லது கெட்டது எல்லாத்தையும் இந்த அறை பார்த்திருக்கு. உன்ன மாதிரி தான் நானும் என்னோட கண்ணீரை யாருக்கும் காட்டக்கூடாதுன்னு நினைப்பேன். ஆனா, இந்த அறை அதையும் பார்த்துடுச்சு.” என்றதில் அப்படி என்ன இவருக்கு வருத்தம் என்று யோசித்தாள் அகல்யா.
காலதாமதமான குழந்தை அதுவும் ஒரே குழந்தையை பெற்று அவன் வாழ்க்கை தன் கண் முன்னால் காணாமல் போனதை தவிர பெரிய கஷ்டம் என்ன இருக்கப் போகிறது அவருக்கு.
ஜீவன் துடிக்கும்…