Loading

அத்தியாயம் 7

 

நொடிகளா நிமிடங்களா என்று பிரித்தறிய முடியாத வண்ணம் உறைந்து தான் போயிருந்தான் காளையவன், அந்த வெண்மெத்தையில் காரிகையவளைக் கண்டு!

 

“இவங்க எப்படி இங்க?” என்று திகைப்பில் வாய்விட்டே புலம்பிய மயூரனின் குழம்பிய மனமோ பல வழிகளில் சிந்திக்க ஆரம்பித்து, சரியாக தவறான பாதையில் பயணித்தது.

 

துவாரகா அவனிடம் அடிக்கடி கூறிய, “என்னை விட்டு அவ்ளோ ஈஸியா போயிடுவீங்களா?” என்பது தேவையில்லாமல் நினைவுக்கு வர, தெளிவாக யோசிக்கும் மனநிலையை அந்த சந்தர்ப்பத்தில் முற்றிலுமாக இழந்திருந்தான் மயூரன்.

 

சரியாக அதே சமயம், இருட்டிற்கு பழக்கப்பட்ட கண்களை வெளிச்சத்திற்கேற்ப சரி செய்து, மெல்ல விழிகளை விரித்தாள் துவாரகா.

 

அப்படி விழித்தவள் முதலில் கண்டது மயூரனை தான்.

 

‘ப்ச், இப்போ எதுக்கு இவன் இன்னமும் என் கனவுல வரான்? அவன் அத்தனை சொல்லியும்… ம்ச்…’ – இப்படி தான் எண்ண தோன்றியது அவளுக்கு, முன்தினம் நடந்த கடத்தல் காட்சி நினைவுக்கு வரும் வரை!

 

அதன்பிறகு தான் காண்பது கனவு அல்ல என்பது அவள் மூளைக்கு உறைக்க, “ஷிட்!” என்றவாறே அவசரமாக எழுந்து அமர, அவளின் நிலை கண்டு, அதை விட அவசரமாக போர்வையை சுற்றி அவளை மறைத்துக் கொண்டாள்.

 

அந்நிகழ்வுகள் நிமிடத்திற்கும் குறைவாக நடந்து முடிந்திருக்க, அவற்றை விரக்தி சிரிப்புடன் கண்ட மயூரனோ, “நல்ல ஆக்டிங்!” என்று கூற, அதுவரை தனக்குள்ளேயே தவித்துப் போனவள், அப்போது தான் அவனைக் கவனித்தாள்.

 

அவனின் முகபாவம் அவள் கேட்க விரும்பாததை கூறப் போவதை கட்டியம் கூற, அதற்கு முன்னோட்டமாக வந்து விழுந்தன அவனின் வார்த்தைகள்.

 

முதலில் புரியாமல் விழித்தவள், “ஆக்டிங்கா?” என்று அவனிடமே வினவ, அதற்கு ஒரு நக்கல் சிரிப்பை பதிலாக தந்தவன், “நீங்களே எல்லாம் பண்ணிட்டு, இப்போ எதுவும் தெரியாத மாதிரி நடிக்குறீங்களே! அதை தான் சொன்னேன்.” என்றான் அவன்.

 

“வாட்? என்ன சொல்றீங்க? நான் என்ன பண்ணேன்?” என்று அப்போதும் புரியாமல் வினவியவளின் மூளை சிறிது நேரத்திற்கு பின்னர் தான் அவன் கூற வருவதை புரிந்து கொண்டது.

 

புரிந்து கொண்டது கோபத்தையும் வரவழைத்தது!

 

“உங்களுக்கு என்ன பைத்தியமா மிஸ்டர். மயூரன்? நான் எதுக்கு கடத்தனும்? அதுவும் என்னையே! நேத்து ஏர்-போர்ட்ல வச்சு யாரோ என்னை கடத்துனது தான் எனக்கு லாஸ்ட்டா ஞாபகம் இருக்கு.” என்று அவள் நினைவுகளை புரட்டிப் பார்த்துக் கூற, அதை ஏற்க மனமில்லாதவனோ, 

 

“காரணமா? அதுக்கு தான் ‘லவ்’னு நீங்களே ஒரு பேரு வச்சுருக்கீங்களே! முதல்ல, ஸ்டாக் பண்ணீங்க, அப்பறம் டார்ச்சர் பண்ணீங்க… இப்போ கிட்னாப் பண்ணியிருக்கீங்க! இதுக்கு பேரு தான் லவ்வா? இப்போ நீங்க செஞ்சுருக்குறதோட இம்பாக்ட் என்னவா இருக்கும்னு கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்த்தீங்களா? அதுசரி, நீங்க எங்க அதெல்லாம் யோசிக்கப் போறீங்க? உங்களை பொறுத்தவரை, நீங்க நினைச்சது நடக்கணும்… அதுக்கு எந்த எல்லைக்கு வேணும்னாலும் போவீங்கள?” என்று போர்த்தியிருந்த அவள் மேனியை அருவருப்பாக பார்த்தபடி கூறினான்.

 

அதில் அவளின் காதலோடு உள்ளமும் உள்ளுக்குளேயே மறித்துப் போக, அதன் வெளிப்பாடாக விழிகளிலிருந்து கோடாக வழிந்தது கண்ணீர்.

 

மேலும் ஏதோ பேச வாயெடுத்தவனை தடுத்தவள், “ஸ்டாப்! போதும்… இதுக்கு மேல ஏதாவது சொல்லி உங்க மரியாதையை கெடுத்துக்காதீங்க! என்னைப் பத்தி உங்க மனசுல இப்படியொரு பிம்பம் இருக்கும்னு நான் நினைச்சு பார்க்கல. ரொம்ப சந்தோஷமா இருக்கு!” என்றவளின் இதழ்கள் விரக்தியாக சிரிக்க, கண்களோ கண்ணீரை விட்ட பாடில்லை.

 

“எஸ், நீங்க சொன்ன மாதிரி, லவ்னு சொல்லி நான் உங்களை ‘ஸ்டாக்’ பண்ணியிருக்கேன்… என்னை லவ் பண்ண சொல்லி  ‘டார்ச்சர்’ பண்ணியிருக்கேன் தான். ஆனா, இப்படி…” என்றவள் அதற்கு மேல் பேச முடியாமல் கண்களை மூடி தன்னைத்தானே நிதானப்படுத்திக் கொண்டாள்.

 

அவளின் தவிப்பை பார்த்த மயூரன், அப்போது தான் தவறாக எண்ணி விட்டோமோ என்பதையே உணர்ந்தான்.

 

“என் தப்பை நான் இப்போ தான் ரியலைஸ் பண்றேன் மிஸ்டர். மயூரன். காதல்ங்கிறது ரெண்டு பேருக்கு இடையில இருக்க ம்யூச்சுவல் ஃபீலிங். அதை ஃபோர்ஸ் பண்ண முடியாது. நான் தான் லூசு மாதிரி உங்களை ஃபோர்ஸ் பண்ணிட்டு இருந்துருக்கேன். ஆனா, அதுக்காக நீங்க என்னை இவ்ளோ கேவலமா நினைப்பீங்கன்னு நான் நினைச்சு பார்க்கல. எனிவே, உங்களுக்கு நான் தான் இதை பிளான் பண்ணி செஞ்சுருப்பேன்னு தோணுச்சுன்னா, அப்படியே நினைச்சுக்கோங்க. உங்க நினைப்பை மாத்திக்க, என்னை ப்ரூவ் பண்றதுல எனக்கு உடன்பாடில்ல! டோன்ட் வொரி, இனி உங்க வாழ்க்கைல நான் இல்ல! ஐ பிரே தாட் வீ வோண்ட் பீ மீட்டிங் எவர் அகேயின்!” என்று அவனை பாராமல் எங்கோ வெறித்துக் கொண்டு கூறியவள், சிதறிக் கிடந்த உடைகளை வேகவேகமாக எடுக்க, அதுவரை அவளையே திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவன், அவன் பார்வையை திருப்பிக் கொண்டான்.

 

அவள் கட்டிலிருந்து இறங்கும் போதே தள்ளாடி கீழே விழ எத்தனிக்க, தன்னிச்சையாக அவளை தாங்கிப் பிடிக்க வந்தான் மயூரன்.

 

அவனை ஒற்றைக் கரம் நீட்டி தடுத்தவளோ, “வேண்டாம் மிஸ்டர். மயூரன். இது கூட நடிப்பா இருக்கலாம்.” என்று நக்கலாக உரைத்தவள், குளியலறை நோக்கி சென்றாள்.

 

முதற்ளோ8ல்லகட்ட அதிர்ச்சி, திகைப்பு, கோபம் எல்லாம் நீங்கி நிதானத்திற்கு வந்த மயூரனோ, அவன் விட்ட வார்த்தைகளை எண்ணி தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டான்.

 

‘ச்சை, ஏன் இப்படி பேசி வச்சுருக்கேன்? கொஞ்சம் பொறுமையா யோசிச்சுருக்கலாம்! இவங்க விஷயத்துல மட்டும் ஏன் என் பொறுமையை இழந்துடுறேன்?’ என்று எண்ணியபடி, சிதறிக் கிடந்த ஆடைகளை வேகவேகமாக அணிந்து கொண்டான்.

 

அப்போது, குளியலறையிலிருந்து தண்ணீர் சத்தத்துடன் அவளின் கேவல் சத்தமும் வெளிவந்தது.

 

என்னதான் தன் அழுகையை மறைக்க குழாயை திறந்து விட்டிருந்தாலும், தன்னவனாக எண்ணியிருந்தவன் தன்னை இத்தனை கேவலமாக எண்ணி விட்டானே என்ற தவிப்பில் சிந்தும் கண்ணீரை அதனால் மறைக்க முடியவில்லையே!

 

‘ச்சீ, ஒரு சங்கடமான சூழல்ல, என்னை கொஞ்சமும் நம்பாம சந்தேகப்படுறவன் பின்னாடியா இத்தனை நாள் நான் சுத்திட்டு இருந்தேன்!’ என்று மனதிற்குள் கேட்டு கேட்டு சலித்தப் போனவளுக்கு தந்தையின் நினைவு வர, வேகமாக அவளின் பைக்குள்ளிருந்து அலைபேசியை வெளியே எடுத்தாள்.

 

அவளின் அலைபேசி அணைந்து போயிருக்க, அவசரமாக அதை உயிர்ப்பித்தவள், அதில் தந்தையிடமிருந்து வந்திருந்த எண்ணிலடங்காத அழைப்புகளை கண்டு மீண்டும் கண்ணீர் வடித்தாள்.

 

இந்த அழுகைக்கான காரணம், அவளின் தற்போதைய நிலை அல்ல, தந்தையின் தவிப்பே ஆகும்!

 

கண்களிருந்து வழியும் கண்ணீர் திரையை மறைக்க, வேகமாக அதை துடைத்துக் கொண்டவள், தந்தைக்கு அழைப்பு விடுத்து காத்திருந்தாள்.

 

அழைப்பு ஏற்க தாமதமாகும் ஒவ்வொரு நொடியும், இங்கு பெண்ணவளின் இதயம் துடித்து அடங்கியது. 

 

தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்கான காரணம் கூட கேட்கப்படாமல், தன்னையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நிறுத்தியிருக்கும் அவலத்தை எண்ணி, அவளின் மனம் துடிக்க, அந்த தவிப்பை நீக்க, அவளுக்கென்று இருக்கும் ஒரே ஜீவன் அவளின் தந்தை தானே!

 

இந்த அசாதாரண சூழலும், அவளின் தந்தைக்கான ஏக்கமும், அவளின் சிந்தையை கொஞ்சம் கொஞ்சமாக மயங்க செய்ய, அந்த கடைசிக்கட்ட நேரத்தில் அவளை மீண்டும் உயிர்ப்பிக்க, அவளின் அழைப்பை ஏற்றிருந்தார் கோபிநாத்.

 

“துவாம்மா…” என்று மறுமுனையில் கோபிநாத்தின் குரல் வேதனை தோய்ந்து வெளிவர, சிறு நிம்மதி புன்னகை அவரின் மகளிடம்!

 

மயக்கத்தின் பிடியில் தள்ளாடிய துவாரகாவோ, அதிகம் பேச முடியாது என்பதை உணர்ந்து, சற்று முன்னர் போர்வையில் பதிக்கப்பட்டிருந்த அந்த விடுதியின் பெயரைக் கூறி, “மயூரன்…” என்றபடி மயங்கிப் போனாள்.

 

வெளியிலிருந்த மயூரனின் மனமோ துவாரகாவின் அழுகையில் துடிக்கத்தான் செய்தது. காரணமின்றி அவளின் மனம் புண்படும்படி பேசி விட்டோம் என்று இரண்டாவது முறையாக குற்றவுணர்வுக்கு ஆளானான்.

 

சிறிது நேரத்தில் அவளின் கேவல் அடங்கிப் போக, வெளியே வருவாள், அவளிடம் இரண்டு சம்பவங்களுக்கும் சேர்த்து வைத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காத்திருந்தான் மயூரன்.

 

ஆனால், நிமிடங்கள் கடந்த போதும் அவள் வெளியே வராததால் துணுக்குற்றவன், உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று யோசித்த சமயம், கோபிநாத்திடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

 

ஒருவித தயக்கத்துடன் அதை ஏற்றவனை, அதன்பின்னர் தேங்க செய்ய விடவில்லை, அழைப்பில் கோபிநாத் சொன்ன செய்தி.

 

“மயூரன்… துவாக்கு… என்னமோ ஆச்சு. நீங்க அவகூட தான் இருக்கீங்களா? பிளீஸ், அவளுக்கு என்னாச்சுன்னு பாருங்களேன்.” என்று கலங்கியபடி கோபிநாத் கூற, அவரின் பதற்றம் அவனையும் தொற்றிக் கொள்ள, முதலில் அவனை சமாதானப்படுத்த வேண்டும் என்று எண்ணியவன், “ரிலாக்ஸ் சார். நான் மேம் கூட தான் இருக்கேன். என்னன்னு பார்த்துட்டு நான் உங்களுக்கு கால் பண்றேன்.” என்று கூறினான்.

 

அதன்படி, குளியலறை கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றவன் கண்டது மயங்கி விழுந்திருந்த துவாரகாவை தான்.

 

அவளை அந்த நிலையில் கண்டவனின் சிந்தை ஒருநொடி உறைந்து, மறுநொடியே அவளை தூக்கி படுக்கையில் படுக்க வைத்தவன், அவளின் மயக்கம் தெளிவிக்கும் பணியை செய்ய ஆரம்பித்தான்.

 

இடையில் கோபிநாத் மீண்டும் அழைத்திருக்க, அவரிடம் அவர்கள் இருக்கும் அறையை கூற, “மயூரன், என்னாச்சு? துவாக்கு எதுவும் இல்லையே!” என்று படபடப்புடன் கேட்டார் அவர்.

 

அவருக்கு என்னவென்று சொல்வது? ஏற்கனவே, ஹோட்டல் அறை என்பதில் தவித்துப் போன மனிதரை இன்னும் பதற்றப்பட வைக்க வேண்டாம் என்று எண்ணிய மயூரனோ, “பெருசா எதுவும் இல்ல சார். நீங்க பார்த்து வாங்க.” என்று அழைப்பை துண்டித்தவன், மயங்கிக் கிடக்கும் துவாரகாவை எழுப்ப முயற்சித்தான்.

 

ஆனால், அவன் முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை.

 

அதற்குள் வாயில் மணி அடிக்க, ‘அதுக்குள்ள வந்துட்டாரா?’ என்ற ஆச்சரியத்துடன் கதவை திறந்தான் மயூரன்.

 

மகளின் உடல்நிலை அந்த ஐம்பத்தைந்து வயது மனிதரை ஓடி வரச்செய்திருந்தது!

 

கதவை திறந்த மயூரனின் கரங்களை பற்றிக் கொண்ட கோபிநாத், “துவா எங்க மயூரன்?” என்று அவன் பதிலுக்காக காத்திருக்க, “உள்ள வாங்க சார்.” என்று வேறெதுவும் சொல்லாமல் அவரை உள்ளே அழைத்துச் சென்றான்.

 

கட்டிலில் மயங்கிக் கிடந்த மகளை பார்த்த கோபிநாத், “துவாம்மா…” என்று அழைத்தபடி அவளை எழுப்ப முயற்சிக்க, “சார், நான் டிரை பண்ணி பார்த்துட்டேன். அவங்க மயக்கத்துல இருந்து முழிக்கல. சீக்கிரம் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிடலாம்.” என்று மயூரன் அவசரப்படுத்தினான்.

 

கோபிநாத்திற்கும் அதுவே சரியென்று பட, “பக்கத்துல தான் எங்க ஃபேமிலி டாக்டரோட ஹாஸ்பிடல் இருக்கு. நாம அங்க போயிடலாம். நான் அவருக்கு சொல்லிடுறேன்.” என்று மீண்டும் மகளை பார்த்தார் கவலையாக.

 

இப்போது இருக்கும் கவலை எல்லாம் மகளை எப்படி கீழே அழைத்து செல்வது என்பது தான்.

 

அதை புரிந்து கொண்ட மயூரனோ, “சார், நீங்க ஹாஸ்பிடலுக்கு தகவல் சொல்லுங்க. நான் மேமை தூக்கிட்டு வரேன். ரொம்ப லேட்டாக்க வேண்டாம்.” என்று கூறி, கையோடு அவளை தூக்கியும் கொண்டான், ‘ஆபத்திற்கு பாவமில்லை!’ என்று அவனின் மனதை அடக்கியபடி.

 

அதன்படி, அடுத்த பத்து நிமிடங்களில் மருத்துவமனையில் இருந்தனர். துவாரகாவிற்கான சிகிச்சைகள் ஆரம்பமாகி இருந்தன.

 

மகளை அறைக்குள் அனுப்பி விட்டு வெறும் கூடாக அங்கிருந்த நாற்காலியில் தொப்பென்று அமர்ந்தார் கோபிநாத்.

 

அவரருகே அமர்ந்த மயூரனோ, “சார், எதுவும் ஆகாது. நீங்க ரிலாக்ஸா இருங்க.” என்றான்.

 

“எப்படி என்னால ரிலாக்ஸா இருக்க முடியும்? காயு என்னை நம்பி துவாவை விட்டுட்டு போனா. ஆனா, நான் இப்படி அவளை கவனிக்காம விட்டுட்டேனே. அவளுக்கு என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சும், தனியா விட்டுட்டு பிசினஸ் தான் முக்கியம்னு அங்க போயிருக்கக் கூடாது.” என்று அரற்ற துவங்கினார் கோபிநாத்.

 

அவர் ‘பிரச்சனை’ என்று கூறியதும், அது என்ன என்று அறிய உந்துதல் உண்டானாலும், அது தனக்கு தேவையில்லாதது என்று எண்ணியவன் அமைதியாக இருக்க, கோபிநாத்தே அதை கூற ஆரம்பித்தார்.

 

“துவாவை அவ அம்மா என்கிட்ட விட்டுட்டு போகும் போது அவளுக்கு வயசு அஞ்சு. அதுவரை அம்மாவோட சேலையை பிடிச்சுட்டு சுத்திட்டு இருந்தவ, அவ இல்லன்னு ஆனதும் ரொம்பவே அமைதியாகிட்டா. நானும் காயுவோட நினைப்புல அவளை கவனிக்காம விட்டுட்டேன். கொஞ்ச நாள்லேயே, அது எவ்ளோ பெரிய தப்புன்னு தெரிய வந்துச்சு. அந்த வயசுலேயே, துவா டிப்ரெஷனுக்குள்ள போயிட்டா. அவளை அதுலயிருந்து மீட்டுக் கொண்டு வர அவ்ளோ சிரமப்பட்டோம். அப்போ எல்லாம் பேசவே மாட்டா. கவுன்சிலிங் குடுத்து கொஞ்சம் கொஞ்சமா அவளை பேச வச்சோம். அதுக்கு அப்பறம் கூட, அவளை ஹர்ட் பண்ற மாதிரி ஏதாவது நடந்தா, அதை வெளியே சொல்லாம, உள்ளுக்குள்ளேயே வச்சு மறுகிட்டு இருப்பா. நான் எவ்ளோவோ சொல்லிப் பார்த்தாலும் அது மட்டும் மாறவே இல்ல. போன வாரம் திரும்பவும் அவ அமைதியானதை பார்த்து பயந்து போய் டாக்டர் கிட்ட கவுன்சிலிங் கூட்டிட்டு போய், இப்போ தான் ஓரளவு தெளிவானா. அதான் கையோட அவளை ஃபாரின் அனுப்ப பிளான் பண்ணேன். ஆனா, இப்போ…” என்று கூறி அழுகவே ஆரம்பித்து விட்டார்.

 

ஆக, அவள் உடல்நிலை மீண்டும் மோசமானதற்கு காரணம் தான் தான் என்பதை அறிந்த மயூரனுக்கு சங்கடமாகிப் போனது.

 

எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவருக்கு ஆறுதல் கூறுவது என்று அமைதியாகி விட்டான்.

 

பின், சிறிது நேரத்தில் கோபிநாத்தே நிதானித்து என்ன நடந்ததென்று விசாரிக்க, அப்போது தான் அதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான் மயூரன்.

 

விஷயம் தெரிந்த போது உண்டான அதிர்ச்சி, துவாரகாவை அங்கு கண்டதும் ஏற்பட்ட திகைப்பு, பின்பு அவளையே அதற்கு காரணமாக்கி பேசியது, அதனால் அவளுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்றே நேரம் கழிந்திருக்க, அவனுக்கு உண்மையான காரணத்தை ஆராய எங்கு நேரம் கிடைத்தது?

 

அதை யோசித்தபடி நடந்ததை, அவனுக்கு தெரிந்ததை கூற ஆரம்பித்தான் மயூரன்.

 

துவாரகாவிடம் மன்னிப்பு வேண்ட விமான நிலையம் சென்றதும், அங்கு அவள் தனியே நடப்பதைக் கண்டு, அவளை நோக்கி செல்லும்போது மயக்கமுற்றதையும் கூறியவனுக்கு அப்போது தான் அவளும் கடத்தப்பட்டிருக்கிறாள் என்பது தெளிவானது.

 

“அப்போ ரெண்டு பேரையும் கடத்தியிருக்காங்களா? எதுக்கு?” என்று குழம்பிய கோபிநாத், “அதுக்கு அப்பறம் என்னாச்சு? எப்படி அந்த ஹோட்டல்ல… ஒரே ரூம்ல…” என்னும்போதே குரல் நடுங்க ஆரம்பித்து விட்டது.

 

குரலோடு நடுங்கிய அவரின் கரங்களை பற்றிக் கொண்ட மயூரனோ, “சார்… அங்க எதுவும் நடக்கல. பிளீஸ் என்னை நம்புங்க.” என்று இறைஞ்சினான்.

 

அதில் அவன் மீது நம்பிக்கை வரப்பெற, “உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்ல மயூரன். அங்க என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க தான் கேட்குறேன். கடத்தல்னா, அதுக்கு ஏதாவது காரண காரியம் இருக்கணுமே!” என்றார் கோபிநாத்.

 

அவன் விழித்ததிலிருந்து நடந்ததை சிலவற்றை மட்டும் மறைத்துக் கூறியவன், “இந்த கடத்தல் எதுக்காகன்னு எனக்கும் புரியல சார். இதுவரை எந்த ஃபோன் கால்ஸும் வரல.” என்ற மயூரன் எதையோ யோசிக்க, அந்த யோசனை அவனுக்கு உவப்பானதாக படவில்லை.

 

இதற்கே மறுகி தவிப்பவரிடம், தன் சந்தேகத்தை கூற தோன்றாமல் தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டான்.

 

அவன் தான் இருவரும் எந்நிலையில் அந்த அறையில் இருந்தனர் என்பதை அவரிடம் கூறவில்லையே. அதனால், அவருக்கும் அந்த சந்தேகம் எழவில்லை.

 

அப்போது துவாரகா அனுமதிக்கப்பட்ட அறையிலிருந்து வெளியே வந்த மருத்துவர் கோபிநாத்திடம் தலையசைத்து கூப்பிட, அவர் மருத்துவரின் அறைக்கு சென்றார்.

 

மயூரனோ அங்கிருக்கலாமா சென்று விடலாமா என்ற யோசனையில் இருக்க, அவனை அடுத்தடுத்து திட்டங்கள் தீட்ட உந்தி தள்ளியது அவனுக்கு வந்த அலைபேசி அழைப்பு.

 

விளைவு, சில மணி நேரங்களில், கோபிநாத்தின் முன்னே நின்றிருந்தான், அவரின் மகளை அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய கோரிக்கையுடன்!

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
24
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. மயூரன் சேர்ந்தவங்க கடத்தி இருக்காங்க